Wednesday, January 09, 2013

கோல விளக்கே! கொடியே! விதானமே!



மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே! பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! பறையேலோர் எம்பாவாய்!

திருமாலே! கருமாணிக்கத்தின் நிறம் கொண்டவனே! மார்கழி நீராடுவதற்காக பெரியவர்கள் சொன்னபடி நாங்கள் என்ன வேண்டுகிறோம் என்று கேட்பாயானால் சொல்கிறோம்.

உலகத்தை எல்லாம் நடுங்கும்படி ஒலி எழுப்பும் பால் போன்ற நிறம் கொண்ட உனது பாஞ்சஜன்யத்தை ஒத்த சங்குகள் வேண்டும்!

மிகப் பெரிய பறை (பேரிகை) வேண்டும்!

பல்லாண்டு பாடும் அடியவர்கள் வேண்டும்!

அழகான குத்துவிளக்குகள் வேண்டும்!

கொடி வேண்டும்!

பந்தல் வேண்டும்!

ஆலிலையில் துயில்பவனே! வடபத்ரசாயியே! இவையே நாங்கள் இந்த மார்கழி நோன்பிற்காக வேண்டுபவை!

No comments: