
அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால் - அருணாசலம் என்னும் திருவண்ணாமலை கோபுர வாசலில் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை கை தொழுது கும்பிட்டால்
அல்லல் போம் - எல்லாவிதமான தடங்கல்களும் தொல்லைகளும் போகும்
வல்வினை போம் - என்ன செய்தாலும் பின் தொடர்ந்து தன் பயனைக் கொடுக்கும் நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் அழிந்து போகும்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் - பிறவிகள் எடுக்கக் காரணமான முன்வினைகளின் தொல்லை தீர்ந்து போகும்
போகாத் துயரம் போம் - என்றும் நீங்காமல் மனத்தில் நிற்கும் துயர நினைவுகள் எல்லாம் தெளிந்து போகும்
கெட்டவைகள் போகும். அது மட்டுமா
நல்ல குணம் அதிகமாம் - நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும் பெருகும்.
அதனால் செல்வக் கணபதியை எந்நேரமும் வணங்குங்கள்.
****
விவேக சிந்தாமணி என்னும் இந்த நூல் அருமையாக இருக்கிறது. இதுவரை நான் படித்ததில்லை. ஞானவெட்டியான் ஐயா அவரது வலைப்பூவில் இந்த நூலில் உள்ளப் பாடல்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் பொருள் எழுதி வருகிறார். அவர் வலைப்பூவில் அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் படித்த போது அவற்றை இன்னும் விளக்கமாகப் பொருள் கூறலாமே; சில பாடல்களை விளக்கும் போது கதையாகவும் சொல்லலாமே என்று ஒரு ஆசை எழுந்தது. ஐயாவிடம் அனுமதி கேட்டேன். 'நன்றாய் செய்யுங்கள். இதற்கு அனுமதி எதற்கு. அவற்றை நானும் படித்து அறிந்து கொள்கிறேன்' என்று அவருக்கே உரிய பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார். இதோ செல்வகணபதியைக் கைதொழுது தொடங்குகிறேன். அவன் அருள் முன்னிற்கட்டும்.
***
இந்த இடுகை 'விவேக சிந்தாமணி' என்ற பதிவில் 22 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்புறம் தொடர்ந்து அந்தப் பதிவில் எந்த இடுகையும் இடவில்லை. இந்த ஒரே இடுகையை அங்கிருந்து கூடலுக்கு நகர்த்திவிட்டு அந்தப் பதிவை மூடிவிடுகிறேன்.