Tuesday, January 01, 2013

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!



உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

வலிமையான மதங்கொண்ட யானைகளை உடையவனும் தோற்காத தோள் வலிமையை உடையவனும் ஆன நந்தகோபாலனின் மருமகளே நப்பின்னைப் பிராட்டியே! மணம் கமழும் தலைமுடியை உடையவளே! கதவைத் திறப்பாய்!

ஆண்கோழிகள் (சேவல்கள்) எல்லாப் பக்கங்களிலும் கூவுகின்றன பார்! மாதவிப் பந்தல் மேல் பல விதமான குயில் இனங்கள் கூவுகின்றன பார்!

பந்து விளையாடும் விரல்களை உடையவளே! உன் கணவனது திருப்பெயர்களை நாங்கள் பாட, உன் கைகளில் இருக்கும் பெருமை மிக்க வளையல்கள் ஒலி எழுப்ப, உன் செந்தாமரை போன்ற திருக்கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவை திறப்பாய்!

***


இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினை இந்தப் படத்தில் சித்தரித்திருக்கிறார்கள். இராமானுஜர் ஒரு முறை பிக்ஷைக்குச் செல்லும் போது தனது வழக்கம் போல் திருப்பாவை பாசுரங்களைப் பாடிக் கொண்டு சென்றார். பெரிய நம்பிகளின் திருமாளிகைக்கு முன் வரும் போது 'உந்து மத களிற்றன்' என்று தொடங்கும் இந்த பாசுரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை அளிப்பதற்காக வெளியே வந்த பெரிய நம்பிகளின் திருமகள் அத்துழாய் வெளியே வந்தார். அந்த பெண்ணைப் பார்த்தவுடன் நந்தகோபனின் மருமகள் நப்பின்னைப் பிராட்டி தனது சீர் ஆர் வளையல்கள் ஒலிக்க செந்தாமரைக் கையால் கதவைத் திறந்து வந்தாள் என்று எண்ணி அவளது கால்களில் விழுந்து வணங்கினார் எம்பெருமானார். 

No comments: