Thursday, September 15, 2022

அலர்மேல் மங்கை உறை மார்பா!

 அகலகில்லேன் இறையும் என்று 

அலர்மேல் மங்கை உறை மார்பா! 

நிகர் இல் புகழாய்! உலகம் மூன்று 

உடையாய்! என்னை ஆள்வானே! 

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் 

விரும்பும் திருவேங்கடத்தானே!

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் 

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!


- நம்மாழ்வார், திருவாய்மொழி 


'ஒரு நொடியும் பிரிய மாட்டேன்' என்று அலர்மேல்மங்கை தாயார் என்றும் உறையும் திருமார்பா! 


நிகரில்லாத புகழை உடையவனே! 


மூன்று உலகங்களையும் உடையவனே! 


என்னை ஆளும் இறைவனே! 


நிகர் இல்லாத தேவர்கள் கூட்டங்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழும் திருவேங்கடத்தானே!


வேறு கதி இல்லாத (வேறு புகலிடம் இல்லாத) அடியேன் உன் திருவடிகளின் கீழே என்றென்றும் சரணடைந்தேனே!