Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Monday, November 07, 2011

ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் - தமிழில்...

அருள்தமிழ் அண்ணல், பாவலர் அருட்கவி திரு. ப. ஜானகிநாதன் எம்.ஏ., எம்.எட்., ஐயா அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வடமொழி பாராயண நூல்களான ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் என்ற இரு நூல்களை தமிழ்க்கவிதைகளாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றை அவருடைய மகன் திரு. ஜா. பழனிகுமார் அனுப்பியிருக்கிறார். அதனை இங்கே அன்பர்களுக்காக இணைக்கிறேன்.

ஆதித்ய ஹ்ருதயத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

சுதர்ஸனாஷ்டகத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

Wednesday, February 23, 2011

மொழி எதற்காக? - ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மொழி பற்றி எழுதிய இந்த கட்டுரையை இன்று படித்தேன். அதனைப் படித்ததில் பிடித்தது வகையில் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.jeyamohan.in/?p=11623

என் மக்கள் இருவரும் மிக நன்றாக சௌராஷ்ட்ரம் பேசுவார்கள். எட்டு வயது மகளுக்குத் தமிழ் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம்; என் பணிச்சுமையால் அவளுக்குக் கற்றுக் கொடுக்க இயலவில்லை. விரைவில் அதனையும் வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஜெயமோகன் சொல்லும் நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் தான் என் மக்கள். அவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்காமல் ஒரு இழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற ஊக்கம் இக்கட்டுரையைப் படித்த போது தோன்றுகிறது!

Friday, October 08, 2010

ஓர் உருவம் ஒரு பெயர் இல்லாததற்கு ஆயிரம் உருவங்கள் ஆயிரம் திருப்பெயர்கள்!


உங்கள் ஊர் திருக்கோவிலில் நீங்கள் கண்டு மகிழ்ந்த தெய்வ அலங்காரங்களை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வணங்க முடியாத நிலையா உங்களுக்கு?! அதனால் ஏங்குகின்றீர்களா?

திருவிழாக்கள் நடக்கும் போது நாம் அங்கில்லையே என்று எண்ணி வருந்தியதுண்டா?

இடுகை இடும் போது அலங்காரத்துடன் கூடிய தெய்வத் திருமேனிகளின் படம் வேண்டுமென்று கூகிளாரைக் கேட்டு அவர் நீங்கள் விரும்பும் படங்களைத் தரவில்லையா?

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நமது கைலாஷி ஐயாவின் பதிவுகளுக்கே!

கைலாய யாத்திரையை மேற்கொண்டவர் என்பதால் கைலாஷி! அஹோபில யாத்திரையும் மேற்கொண்டவர்! முருகான (அழகான) தெய்வத் திருமேனிகளை அழகாகப் படம் பிடித்துத் தன் பதிவில் இட்டு அனைவருக்கும் ஆனந்தம் தருகிறார் இந்த கைலாஷி முருகானந்தம்! எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவரது பணிவும் பண்பும். இவருடைய பணிவும் பண்பும் பதிவுகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துலங்கும்!

கொஞ்சமே கொஞ்சம் இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லாம் அனைத்தும் அறிந்தவர் போல் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று யாராவது அழைத்தால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் போது ஆழ்வார் அருளிச்செயல்களும் நாயன்மார் தேவாரமும் நன்கு அறிந்து தகுந்த இடத்தில் தகுந்த வகையில் தகுந்த பாடல்களை இட்டு இவர் எழுதுவதைப் பார்த்தால் இவரே ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்லத் தோன்றும். இவரும் மற்ற ஆன்மீக பதிவர்களும் மலையும் மடுவும் போன்று என்று சொன்னாலும் தகும்!

இறையுருவங்களில் எனக்கு பேதமில்லை பேதமில்லை என்று பறை சாற்றிக் கொண்டே முருகன், கண்ணன், சிவன், அம்மன் என்று நேரடியாகவும் மறைவாகவும் பிற ஆன்மிகப் பதிவர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் பேசாமல் கருமமே கண்ணாய் சேவையே தேவையாய் ஆலய தரிசனங்கள் செய்து, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி தெய்வத் திருப்படங்களைத் தொடர்ந்து இட்டு வரும் கைலாஷி ஐயாவின் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து பார்த்துப் படித்துப் பாராட்டி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் கைலாஷி ஐயாவின் பதிவில் இருந்து சுபவரம் என்ற இதழ் எடுத்து இட்ட படங்களின் தொகுப்பு. ஐயாவைப் பற்றிய சிறு குறிப்பும் அதில் இருக்கிறது.

கைலாஷி முருகானந்தம் ஐயாவின் பதிவுகள்:

அன்னையின் நவராத்திரி: அன்னையின் நவராத்திரி அலங்காரப் படங்கள்

ந்ருஸிம்ஹர்: விண்ணவனின் அலங்காரப் படங்கள்

கைலாய மானசரோவர் யாத்திரை: திருக்கயிலாய தரிசனப் படங்கள்

வைகுந்த ஏகாதசி: தமிழ்ப்பெருவிழாவான ஆழ்வார் அருளிச்செயல் விழா படங்கள்

கயிலையே மயிலை: திருமயிலை திருவிழா படங்கள்

கருடசேவை: புள்ளேறும் பெருமாளின் படங்கள்

அம்பலத்தரசே அருமருந்தே: சிவாலயங்களின் படங்கள்

திருப்பாவை: ஆண்டாளின் திருப்பாவையின் விளக்கங்கள்

திருவெம்பாவை: மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கங்கள்

அன்பன்,
குமரன்.

குறிப்பு: தொடர்ந்து இப்படி என்னைக் கவர்ந்த பதிவுகளை/பதிவர்களைப் பற்றி எழுதலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

Saturday, December 19, 2009

தமிழின் திருநாள்

மார்கழி மாதத்தில் வரும் தமிழின் திருநாளாம் திருவாய்மொழி திருமொழித் திருநாளைப் பற்றி திரு. மோகனரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே 'படித்ததில் பிடித்தது' வகையில் தருகிறேன்.

***

திருமொழித் திருவாய்மொழித் திருநாள்

தமிழின் திருநாள்

சார்! வைகுண்ட ஏகாதசி வரது போல இருக்கே! ஸ்ரீரங்கம் போகப்போறீங்களா? என்றார் நண்பர் தொலைபேசியில். கூப்பிட்டால் போகலாம் என்றேன். 'என்ன சார் இதுக்கெல்லாம் கூப்பிடுவாங்களா? நாமேதான் போகவேண்டும்' என்று உபதேசம் செய்தார். 'ஆமாம் சரிதான்' என்று சொல்லிவைத்தேன். ஆனால் நான் மட்டுமன்று. நெடுங்காலம் ஸ்ரீரங்கத்திலேயே ஊறிப்போனவர்கள் யாரை நீங்கள் கேட்டாலும் இது போன்ற பதில்தான் வரும். இப்பொழுது டி வி சானல்கள் வந்து எல்லாவற்றையும் மழுங்க அடித்திருக்குமோ என்னவோ. உண்மையான ஸ்ரீரங்கத்துக்காரர் என்றால் அப்படித்தான். 'அவனுக்கு என்ன சார் எதைப் பற்றியுமே கவலையில்லாமல் படுத்துண்டு இருக்கான்' என்று சொன்னால் நீங்கள் ஸ்ரீரங்கத்தில் 'யாரு? வீட்டிலயா? பையனா? மாமாவா? தோப்பனாரா? ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வது ஏதோ உபசாரமாக அன்று. ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களில் ஸ்ரீவைகுண்டம் என்பது என்ன விவரணைகளோடு அமைந்திருக்கிறதோ அதனுடைய ஆர்கிடெக்ட் மாடல் போன்றதுதான் ஸ்ரீரங்கம். ஏன் பாரமேஸ்வர சம்ஹிதையில் என்னென்ன திக்பாலர்கள், அதிஷ்டான தேவதைகள், கிரியா பாதத்தின் படி என்னென்ன மூர்த்தி பேதங்கள், உற்சவாதிகளின் தாத்பர்யம் அனைத்தையும் நுணுக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை கோவிந்தாச்சாரியார் ஸ்வாமி ஒரு காலத்தில் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த நுணுக்கங்களை எழுதி வாங்கிப் பாதுகாக்க வேண்டும் என்று பல மகனீயர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அதற்குள் காலங்கள் மாறிவிட்டன.

ஆகமங்களில் ஜீவனின் முக்தி அடைதலைப் பற்றிய விவரணைகள் வரும். அர்ச்சிராதி கதியில் சென்று ஜீவன் முக்தியை அடைகிறான் என்பது செய்தி. அர்ச்சிர் என்றால் ஒளி. ஓளிமயமான வழியில் உயிரின் கடைத்தேற்றத்திற்கான பயணம் என்பது எத்தனை ஆரோக்கியமான ஒரு சித்திரம்.! நாம் தான் எல்லாவற்றையும் 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, 60 வருவதற்கு முன்னரே, சார் கண் பிரச்சனை, ரொம்ப நேரம் படிக்க முடியலை, உட்கார்ந்த முதுகு பிடிக்கறது, நடந்தா உடம்பு கூட வருகிறது, கால் எல்லாம் விண் விண் என்று இழுக்கிறது, அதிக நேரம் உட்கார்ந்து கேட்க முடியலை, சார் ஏதாவது நல்ல ஸத் விஷயமா காதுல விழுந்தா அப்பா என்ன சுகமா தூக்கம் வருதுங்கிறீங்க, ---இப்படித்தான் நமது ததவார்த்த ரீதியான விஷய்ங்களில் அக்கறையும், கொடுப்பினையும் இருந்து கொண்டிருக்கிறது. 'சார் என்ன நினைச்சிண்டு இருக்கீங்க? அதற்கெல்லாம் ஏது சார் நேரம்? வயிற்றுப் பாடே பெரும் பாடு. அது போதாதுன்னு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல், வீட்டில், ஆபீசில். ஆனால் கிரிக்கட் பார்க்க இதெல்லாம் தடையாவதில்லை. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டங்களைப் பார்க்க எதுவும் தடையில்லை. இதில் எதுவும் தப்பில்லை. ஏனெனில் லோகோ பின்ன ருசி: ஆயினும் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளர்விலராகில் சார்வது சதிர்' என்று போய்ப்பார்த்தால், அதுவும் மார்கழி மாதத்தில் விடியற் பொழுதின் பனிப்படலத்தில், அன்றாடம் பொங்கிய பொங்கலும், பொழியும் இசையும், வழியும் கதிரொளியுமாய் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்டமேதான் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஸ்ரீரங்கநாதனோ ஆகமங்களில் சொல்லியபடி ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக்க்கொண்டிருப்பான்.

மார்கழி முதல் தேதி முதல் தொடங்கும் திருப்பாவை நம்மை ஸர்வ அவஸ்தைகளினின்றும் துயிலெழத் தூண்டியபடியே இருக்கும். பகல் பத்து இராப் பத்து என்று 21 நாட்கள் மக்கள எல்லாம் கோவிலை நோக்கிப் போவதும், அர்ஜுன மண்டபத்தில், திருமாமணி மண்டபத்தில் என்று மாறி மாறி அரங்கத்தரவின் அணையான் அக்காவின் தொணப்பல் தாங்காமல் ஒருவழியாய் எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் தமிழை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பான். தமிழை அவனுக்கு எடுத்துச் சொல்லும் அரையர்களோ மகாராஜாக்கள் போல் தலையில் கிரீடம் தரித்து நின்று சொல்வார்கள். இந்த டியூஷன் படிக்கற பிள்ளை சமத்தாகத் தன் கூட்டாளிகளை எல்லாம் செட் சேர்த்துக்கொண்டு உட்கார்ந்து கேட்கும். இந்த ட்யூஷன் வாத்யார்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பு. கொஞ்சம் விட்டால் பிள்ளையாண்டான் தூங்கப் போய்விடும் என்று தெரியும்.

அது சரி. இந்த மாதிரி கோவிலில் தெய்வத்திற்குத் தமிழைச் சொல்வது என்பது நாம் விளையாட்டாகச் சொல்லி விட முடிகிறது. ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது? உலக மதங்களிலேயே இன்றும் பொருள் தெரிகிறதோ இல்லையோ கடவுளுக்கு என்று புராதன மொழியில்தான் சொல்ல வேண்டும் என்பது பெரிதும் மாறாமல் இருக்கும் போது இங்கு மட்டும் சாந்தமாக ஒரு புதுமை. கவிதை சொட்டச் சொட்டப் பைந்தமிழில் கடவுள் காதலைக் கைங்கர்ய பரர்கள் விண்ணப்பம் செய்ய அவன் சற்று அங்கும் இங்கும் திரும்பினாலும் ம்ம்ம்ம் 'மெய் நின்று கேட்டருளாய்' என்று அதட்டி அன்போடு ஸேவிக்கின்றார்கள். யார் இதற்கெல்லாம் அடிப்படை இட்டது தெரியுமா?

வேறு யார் திருமங்கை மன்னன் தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியை துயிலெழுப்பினாள் அக்கா. உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ் பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழிய திருவோலக்கம் இருந்து நனைகின்றான். திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார். தம்முடைய திருவாய்மொழியைக் கேட்டு ஆரார் வானவர்கள் என்று சடகோபன் சொன்னது அவர் மனத்தில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருந்தது. நிதய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டு திருப்தி அடைய மாட்டார்களாம். ஸ்ரீவைகுண்டத்திலேயே இந்த கதி என்றால் பூலோக வைகுண்டத்தில் நிச்சயம் அது நடைமுறைக்கு வரவேண்டுமே என்று நினைத்தவர் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரஙகனின் அருளப்பாடு வந்தது. 'கலியன் என்ன வேண்டும் உமக்கு?' சரியான சமயம். கலியன் விடுவாரா? 'நாயன் தே! வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல் திராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் தேவிமார் பரிஜனங்கள் உடனே திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.' என்றார். வானிளவரசு வைகுந்தக் குட்டன்
வரந்தரும் பெருமாள் ஆனார்.

அன்று தொடங்கி ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து திருவாய்மொழித் திருநாள் நடத்தும் வழக்கம் நடந்தது. அதற்கு நம்மாழ்வாருக்கு அழைப்பு ஓலை பெருமாள் கைப்பட எழுதி அனுப்புவது திருக்கார்த்திகை தீபத்தின் அன்று. பின் காலம் இருட்டாகி திருவாய்மொழி மறைந்து, நாதமுனிகள் 'ஆராவமுதே' பத்துப்பாட்டின் பின் தொடர்ந்து சென்று ,
திருவாய்மொழி, திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்கள் அனைவரது பாடல்களையும் மீட்டது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வரலாறு.

நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி, பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாக தேவ கானம் என்ற புதிய இசை முறையில் ஆழ்வார் பாடல்களை இசையமைத்து உரியவரைப் பயிற்றி பெரும் ஓலக்கமாகச் செய்து திருவிழாவாக ஆக்கிவிட்டார். திருவாய்மொழிக்கு திருநாள் கண்ட கலியனின் திருமொழிகளையும், மற்றுமுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருவாய்மொழி பத்துநாளுக்கு முந்தைய பத்துநாளும் பகலில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து, திருமொழித் திருவாய்மொழித் திருநாளாக வளர்த்தெடுத்த பெருமை நாதமுனிகளைச் சேரும். மங்கை மன்னன் வேற் கலியன் மான வேல் பரகாலன் கண்ட கனா அவர் காலத்திலேயே வேரூன்றி நாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும் கனியும் தட நிழலுமாய் விரிந்து எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய் விச்வரூபம் எடுத்ததுதான் சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித் திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடி
சொல்லிக் கொடுத்த நெறிப்படி
சங்கத் தமிழ்ச் சங்கமத்தில்
சாத்வத நூல் சையோகத்தில்
வேதாந்தம் விளையுதம்மா
விண்ணும் இங்கே தெரியுதம்மா
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ !

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

***

Saturday, June 27, 2009

செல்வத்துப் பயனே ஈதல்!

சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் அரசர்களின்
வீரம்
கொடை
புகழ்
போன்றவைகளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

ஒரு சிலர் அரசர்களையே இடித்துரைக்கும் பாடல்களை யாத்துள்ளனர். சிலரோ, மக்கள் எல்லார்க்கும் பொதுவான நீதிகளை விளக்கியுள்ளனர்.

மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனாரின் பொது நீதி தொடர்பான பாடல் ஒன்றை ஈண்டு காண்போம்.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' (புறம் - 189)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பகுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அனைவருக்கும் பொதுவானது அன்று; என் ஒருவனின் தனி உரிமையாகும் என்று பலர் தவறாக நினைப்பதாகப் புலவர் கூறுகிறார்.

இக்கூற்று, வள்ளுவரின் பின்வரும் குறட்பாவை நினைக்க வைக்கிறது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

பெருநிலத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்யும் அரசர்க்கும், இரவும் பகலும் தூங்காது விலங்குகளை வேட்டையாடக் காத்திருக்கும் கல்லாத ஏழைக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு தானியம்; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே. இவைபோலப் பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றே என்று புலவர் சுட்டிக் காட்டுகிறார்.

பிற்கால ஒளவையாரின் பின்வரும் பாடலையும் ஈண்டு காண்பது நன்று.

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைத்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்'' (நல்வழி - 28)

அதனால், செல்வத்துப் பயனே, செல்வமற்றவர்க்கு உவந்து கொடுத்தல் என்று புறநானூற்றுப் புலவர் கூறுவதையும் காணலாம்.

அப்படி உவந்து அளிக்காதவர்களை வள்ளுவர்,

"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்; தாம் உடைமை
வைத்திழக்கும் வன்கண் அவர்'' (குறள் - 228)

என்று சாடுகிறார்.

மேலும் ஈகையின் புகழை,

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றும் கூறுகிறார்.

செல்வத்தைப் பிறர்க்கு உவந்து கொடுக்காமல் யாமே துய்ப்போம் என்று எண்ணித் தாமும் துய்க்கத் தவறியவர் வாழ்நாளே இவ்வுலகில் பலவாகும் என்கிறார் நக்கீரனார்.

புலவரின் இக்கூற்றுக்குப் பொருந்துவதாய் பின்வரும் குறட்பா அமைகிறது.

"ஒருபொழுதும் வாழ்வது அறியார்; கருதுப
கோடியும் அல்ல பல'' (குறள் - 337)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புறநானூற்றுப் புலவரும், திருவள்ளுவரும் மற்றும் பிற்கால ஒளவையாரும் கூறியுள்ள அறிவுரைகள், இன்றுள்ள மக்களுக்கும் பொருந்துவதாய் உள்ளன. ஆனாலும், பலர் இதுபோன்ற அறிவுரைகளைப் படிக்காததாலும், படித்தவர்களில் பலபேர் அவ்வறிவுரைகளின் படி நடக்காததாலும் இன்று நம் நாட்டில் செல்வம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற பாடல்களைப் படித்து அதன்படி வாழ முன்வந்தால் தாமும் இன்பம் துய்த்து, மற்றவர்களையும் இன்பம் துய்க்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, தாம் எடுத்துள்ள கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.

இரா.பரஞ்சோதி

நன்றி:- தினமணி

நன்றி: மின் தமிழ் குழுமம்; அக்குழுமத்தில் இக்கட்டுரையை இட்ட திரு. கண்ணன் நடராஜன்.

Wednesday, June 17, 2009

திருக்குறளும் ஊழியலும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

கால வரையறை செய்வதிலும் கருத்து வரையறை செய்வதிலும் ஆய்வாளர்களுக்குத் திருக்குறள் ஒரு பெரும் புதிராகவே உள்ளது. திருக்குறளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கோட் பாடுகளோடு அணுகியுள்ள காரணத்தாலும், திருக்குறளின் சமூகப் பின்புலம் பற்றியோ அதன் மெய்யியல் பின்புலம் பற்றியோ கவலைப்படாத நிலையில் அதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந் துள்ளதாலுமே திருக்குறளை முற்றாக அறியவும், அதன் கோட்பாடுகளை வகைப்படுத்தவும் முடியாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் காணப்படும் மெய்யியல் கூறுகள் யாவும் திருக்குறளிலும் அப்படியே அமைந்துள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூலாதலால், அதில் செய்திகள் சுருக்கமாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் திருக்குறளோ செய்திகளை விளக்கமாகவும் செறிவாகவும் தொகுத்தும் வகுத்தும் விளக்கியுள்ளது. மேலும் திருக்குறள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொருள்முதல் கோட்பாடு களுக்கு உரியனவாகவே உள்ளன.
திருக்குறளில் ஆய்வில் விடுவிக்க வேண்டிய பல புதிர்களுள் ஊழியலும் அடங்கும். அறத்துப்பாலை இல்லறவியல், துறவறவியல் எனப் பகுத்த வள்ளுவர் அதன் மூன்றாவது கூறாக ‘ஊழியல்’ என ஒன்றையும் அமைத்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இவ்வியலில் ஓர் அதிகாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவ்வியலின் அமைப்பைக் குறித்துப் பரிமேலழகர்,

“இவ்வாற்றான் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தற் சிறப்புடைத்தாய அறம் கூறினார்; இனிப் பொருளும் இன்பமும் கூறுவார் அவற்றின் முதற் காரணமாகிய ஊழின்வலி கூறு கின்றார்” என்பார்.
பரிமேலழகர் கருத்துப்படி ஊழியல் பொருட்பாலுக்கும், காமத்துப்பாலுக்கும் முன்னுரையாக வைக்கப்பட்டது என்பதாகின்றது. அப்படியாயின் இல்லறத்தானுக்கும் துறவிக்கும் ஊழ் தேவை யில்லையோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

ஆனால் வள்ளுவர் இவ்வியலை மூன்று பால்களுக்கும் பொருந்தும் வண்ணம் ‘மத்திம தீபமாக’ வைத்துள்ளாரா? அல்லது தன் கோட்பாட்டை நிலைநாட்டப் பிறர்மதம் கூறலாக அமைத் துள்ளாரா? என்பதும் ஆய்விற்கு உரியது.

ஊழியல் அதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகளைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆகூழ் : செல்வப் பெருக்கிற்கும் ஆக்கத்திற்கும் காரணமாவது, அறிவு வளர்ச்சிக்கும் இது அடிப்படை.
போகூழ் : இழவூழ் என்றும் குறிக்கப்படும். சோம்பலுக்கும் பொருள் இழப்பிற்கும் காரணமாவது. அறிவையும் பேதமைப் படுத்தும். (குறள் 1-2)

அறிவு மிகுதிக்கு ஊழே காரணம். (3)

செல்வம் உடையராய் இருத்தல், அறிவுடையோராய் இருத்தல் ஆகிய இருவேறு நிலைமைகட்கும் ஊழே அடிப்படை. (4)

நல்லனவெல்லாம் தீயனவாக மாறுவதற்கும், தீயனவெல்லாம் நல்லனவாக மாறுவதற்கும்-மாற்றுவதற்கும் உள்ள ஆற்றல் ஊழிற்கு உண்டு. (5)

பொருள் ஒருவரிடம் நிலைத்துத் தங்குவதற்குக் காரணம் ஊழே. தமக்குரிய ஊழ் அல்லாத போது பொருள்களை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாக்க முற்பட்டாலும் அது தாங்காது. (6)

கோடி கோடியாகப் பொருளைத் திரட்டினாலும் தங்களுக்கென்று ஊழ் வகுத்துள்ளது எதுவோ அதைத் தவிர வேறு எதையும் துய்த்துவிட முடியாது. (7)

எட்டாவது குறள் சற்றுச் சிக்கலானது. உரையாசிரியர்களான பரிமேலழகர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையும் பொருள் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

துறப்பார்மன் துப்புரவு இல்லார்; உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

ஊழினால் வரும் இன்பங்கள் தமக்குக் கிட்டாதபோது துய்ப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களும் துறவை மேற்கொள்வார்கள் என்பது குறளின் பொருள்.
மெய்ப்பொருளை நாடும் பேரறிவாளர்களின் துறவு சமூகப் பயன் கருதியது. உலக நோக்கம் கொண்டது. வரன்முறைகளும், தூய ஒழுக்கங்களும் நிறைந்தது. ஆனால் வறுமையாளர்களின் துறவு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது, வயிற்றுப் பசியை அடிப்படையாகக் கொண்டது. எனவே மேற்காட்டிய குறள் சமூகச் சிக்கலை ஒட்டி அமைந்துள்ளது என்பது புலனாகிறது. ஆனால் பரிமேலழகர்,
‘ஊழ்வினைகள் துன்பங்களைச் சேர்க்காமல் நீக்கினால் வறுமையால் அனுபவிக்கப்படும் பொருள் இல்லாதவர் துறவு கொள்வர்’ என உரை கூறுகின்றார்.

வறுமையால் வரும் துன்பம் கொடியது எனில் ஊழ்வினையினால் வரும் துன்பமும் கூட கொடியதாகத்தான் இருக்க முடியும். ஊழ்வினையின் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள ஒருவனால் முடியுமாயின் வறுமையினால் வரும் துன்பத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, ‘உறற்பால ஊட்டா கழியும்’ என்பதற்கு ஆகூழால் தோன்றும் செல்வ நுகர்ச்சி இல்லாத போது எனப் பொருள் கொள்வது குறளை அறியத் துணை புரிகின்றது. ‘துறவும் கூட ஊழின் பயனே’ எனக் கூறும் காலிங்கரின் கருத்து பொருத்தமாக உள்ளது. (8)

நல்வினை இன்பங்களைக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் நுகர்பவர், தீவினை துன்பந் தரும்போது அதை எதிர்கொள்ளாமல் கலங்குவது ஏன்? (9)

ஊழ் மிகுந்த வலிமையுடையது; அதை விலக்க நினைத்தாலும் முந்திக் கொண்டு வந்து நிற்கும். (10)

இப்பத்துக் குறள்களிலும் அமைந்த கருத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஊழ் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மைக்குக் காரணமாவது; மற்றொன்று தீமைக்குக் காரணமாவது.
2. செல்வத்தின் செழிப்பிற்கு ஆகூழும் செல்வத்தின் தேய்விற்குப் போகூழும் காரணங்களாகின்றன.
3. கற்ற கல்வியும் ஒருவனுக்குத் தன் ஊழின் காரணமாகவே பயன் தரும்.
4. ஊழினால் வரும் நுகர்ச்சி இல்லையெனில் வறுமையால் மனிதர்கள் துறவை நாடலாம். (பஞ்சத்திற்கு ஆண்டி என்ற மக்கள் வழக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.)
5. ஊழ் மிகுந்த வலிமையுடையது.

மேற்காட்டிய வகையில் ஊழின் இயல்புகளைச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரும் கோசாலரும்

வள்ளுவரின் ஊழ் பற்றிய கருத்து, மற்கலி கோசாலர் ஊழ் (நியதி) பற்றிச் சொல்லும் கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டு நிற்பதை இரண்டையும் ஒப்பிட்டுக் காணும்போது உணர முடிகின்றது.

கோசாலரின் கருத்துப்படி ஊழ் அனைத்து ஆற்றலும் கொண்டது. பிறவிக்குக் காரணமாக இருப்பது. பிறவிகள் தோறும் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும் ஊழ்வினையின் துணை இல்லாது போனால் பிறவித் தளையை அறுக்க முடியாது. சுருங்கக் கூறினால், கணியன் பூங்குன்றனார் கூறுவது போல், உயிர் ஊழின் இயக்கத்திற்கு ஏற்பவே இயங்கும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

என்ற குறளிலும் கூட தீயவன் வளத்தோடு வாழ்வதும், நல்லவன் வறுமையோடு உழல்வதும் நினைக்கப்படும் என்றே சொல்லுகின்றார். இக்குறளில் ஊழ்வினையின் தாக்கம் இருப்பதை பரிமேலழகர்,

இம்மை செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து

என்ற சிலப்பதிகார அடிகளை மேற்கோளாகக் காட்டி உணர வைக்கின்றார்.
வள்ளுவர் ஊழ்வினையைப் பற்றித் தனி ஓர் இயல் அமைத்துப் பத்துக் குறட்பாக்களாகத் தொகுத்துக் கூறினாலும் கூட மற்கலி கோசாலர் வரையறுத்த ஊழ்வினை பற்றிய கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

வள்ளுவர் கோசாலருக்குப் பிற்பட்ட காலத்தவராக இருந் திருப்பின், ஊழியலுள் வரும் கருத்துக்கள் ஆசீவகத்தின் தாக்கத்தோடு அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கோப்பெருஞ்சோழன் கணியன் பூங்குன்றனார் இருவரும் கோசாலரின் நியதிக் கோட்பாட்டைப் பின்பற்றியதைப் போல வள்ளுவரும் பின்பற்றி இருக்கலாம். ஆனால் ஊழின் முழு வல்லமையை-அதாவது இன்ப துன்பம், ஆக்கம் இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை வள்ளுவர் குறிக்காததுடன் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்.

கோசாலர் ஊழின் ஆற்றலை மக்கள் நடுவே பரப்பத் தொடங்கிப் பேரளவில் வெற்றியும் கண்டவர். இந்நிலையில் மகாவீரரும், புத்தரும் ‘இக்கோட்பாடு செல்வாக்குப் பெறுமானால் மனித வாழ்வில் முயற்சிக்கே இடமில்லாது போய்விடும்’ என்று பெரிதும் கவலைப்பட்டனர்.

வள்ளுவர் முயற்சி பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுக்கும் போது, அவர் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமைவது மனித முயற்சிதான் என்ற கோட்பாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம்.

‘ஊக்கமுடைமை’ அதிகாரத்துள்,

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

என்று அசைவிலா ஊக்கத்தை வலியுறுத்துவார். ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்திலோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

என்று இடைவிடா முயற்சியின் ஆற்றலை எடுத்துக் காட்டுவார்.
ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை என்ற இரண்டு அதிகாரங்களிலும் முயற்சியின் வெற்றியை உடன்பாடாகச் சொல்லுவார். ‘மடியின்மை’, ‘இடுக்கண் அழியாமை’ என்ற அதிகாரங்களுள் எதிர்மறையாக மனித முயற்சியைப் போற்றுகின்றார். குடியியலிலும் ‘குடிசெயல்வகை’ என்ற அதிகாரத்துள்,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

என்று முயற்சியையும் அதற்குத் துணையாகிய ஆன்ற அறிவையும் எடுத்துக் காட்டுவார். வள்ளுவரின் கருத்தில் ‘முயற்சியின் இடத்தைக்’ காணும்போது பொருட்பால் முழுமையுமே மனித முயற்சியின் அடித்தளத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இவ்வாறு பொருட்பால் முழுமையிலும் முயற்சியின் ஆற்றலை, அது நல்கும் பயனை விளக்குவதால், ஊழின் ஆற்றலைக் கோசாலரைப் போல வள்ளுவர் பெரிதாகக் கருதவில்லை என்பது தெளிவு.

துறவறவியலிலும் பல குறள்கள் ஊழ்வினைக்கு மாறாக அதாவது நியதிக் கோட்பாட்டிற்கு உடன்பாடில்லாத வகையில் அமைந்துள்ளன.

‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்துள்,

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

என்ற குறள் பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என வற்புறுத்துகின்றது.
துறவு என்ற அதிகாரத்துள்ளும்,

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்

என்ற குறள்வழி பிறப்பினை அறுப்பது பற்றற்ற நிலைதான் என்பதை வற்புறுத்துவார்.

இவ்வாறு அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே, ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ‘ஆசீவகமாக’ உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.

நன்றி: முனைவர் நெடுஞ்செழியன்; தமிழாயம் குழுமம்; முனைவர் இரவா.

Wednesday, May 06, 2009

ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்!

தமிழ் மாதங்களில் ஓரெழுத்து ஒருமொழிப் பெயராய் அமைந்த ஒரே மாதம் "தை".

இதன் பெருமை பல மடங்காகும்.

எல்லாவற்றையும் இணைப்பது என்ற நுட்பத்தில் எல்லா நலங்களையும் வளங்களையும் ஒருசேரக் கூட்டும் மாதமானதால் அதன் சிறப்பு கருதி "தை" எனத் தனித்து கூறப்பட்டது.

நாட்டியம் ஆடும் நிலையில் ஓர் ஒழுங்கான தாளப்பிரிவிற்குத் "தை" என்று பெயர். இதனால் வாழ்வியல் முறையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஓர் ஒழுங்கைக் கற்பிக்கும் மாதமாகத் "தை" உள்ளது எனலாம். ஏனைய மாதங்களுக்கும் பெயர்களுக்கும் இல்லாத இந்நுட்பம் "தை" மாதத்திற்கு மட்டுமே அமைந்திருப்பதால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஆன்றோர் இம்மாதத்திற்கான சிறப்பைப் பழமொழியாகக் கூறிக் கொண்டாடினர் போலும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை உலகில் நிகழும் இயற்கை மாறுதல் நிகழ்வைச் சூரியனைக் கொண்டே நம் முன்னோர் உணர்ந்ததால் வான மண்டலத்தில் சூரியன் நிலநடுக் கோட்டுக்குத் தெற்கிலிருந்து வடக்கு போகும் இத் "தை" மாதத் தொடக்கத்தை உத்தராயணம் என்றனர். வடக்கிருந்து சூரியன் தெற்கே பயணமாவதைத் தட்சிணாயணம் என்றனர்.

இந்த வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து வேளாண்மைத் தொழிலைச் செய்யத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் அறுவடை கண்ட பூரிப்பால் தைதை எனக் குதித்தாடிய மகிழ்வைப் புலப்படுத்த வேண்டி அதைத் தைப் பொங்கலாகக் கொண்டாடினர் எனலாம்.
புதுவரவான நெல்லைக் கண்டதும் எல்லாம் புதுமையாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பமான தொடர்ச்சியில் புதுப்பானை, புதுக்கரும்பு, புதுமஞ்சள், புத்தாடை போன்ற பொலிவுகள் பொங்கலைத் தோரணங்கட்டி வரவேற்றன. இயற்கையின் உதவியால் இவையெல்லாம் கிடைத்தன என்ற நன்றிப் பெருக்கோடு புத்தரிசிப் பொங்கலிட்டு அதை இயற்கைக்குப் படைத்துத் தானும் சுற்றமும் சூழ இருந்து உண்டு களித்தனர் மக்கள்.

இப்புதுப் பொங்கலுக்குப் பயன்படும் பொருள்கள் யாவும்

மருதம்
முல்லை
நெய்தல்
குறிஞ்சி

நிலங்களின் பங்களிப்பாகும்.

எல்லாம் கூடினால்தான் சுவை கூடும் என்ற ஒற்றுமை உண்மையின் விளக்கமாகவே, ஆக்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைக்கும் வழிபாட்டில் பகற்பொழுதாயினும் அறியாமை இருளைப் போக்கும் விதமாகவும் விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இதுமுதலாக எல்லாம் மங்கலகரமாகவே நடக்கவேண்டும் என்பதை உணர்த்தவே மஞ்சள் கொத்து வழிபாட்டில் சேர்க்கப்படுகிறது.

பொங்கல் பற்றி ஆண்டாள் நாச்சியார் "பாற்சோறு மூட நெய் பெய்து" என்றும், முழங்கை வழிவாரக் கூடியிருந்து உண்டு மகிழ்வதாகத் திருப்பாவையில் குறிப்பிடுகிறார். தனிமை எப்போதும் சுகம் தராது; கூட்டுறவுதான் எல்லா சுகமும் தரும் என்பதால் அந்த எளிய உண்மையையே "கூடியிருந்து" என்ற சொற்களால் ஆண்டாள் கூறியுள்ளார். ஆக தைப்பொங்கலைப் பெண்கள் கூடியிருந்து கொண்டாடினர் என்பது பெறப்படுகிறது.

இவ்வாறு கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு வணக்கத்தோடு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உறவுத் தொடர்ச்சியும் இருந்ததாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தால் ஓரளவு உணரமுடிகிறது. இதில் கூறப்படும் வாழ்த்து, அரசனை முன்னிலைப் படுத்தும் வாழ்த்தாகத் தொடங்கிப் பொங்கலுக்குரிய பொருத்தமான சிந்தனையின் வழி சமூகத்தை வாழ்த்தும் வாழ்த்தாக அமைகிறது. நூலின் தொடக்கமாகிய மருதத்திணைப் பாடலை ஓரம்போகியார் என்பவர் பாடியுள்ளார். அகப்பொருள் நிலையில் பெண்கள் பாடுவதாக முதல் பத்துப் பாடல்களும் உள்ளன.

வாழி ஆதன்! வாழி அவினி! என்பதாகவே பத்துப் பாடல்களும் தொடங்குகின்றன. முடிவுடை வேந்தர் மூவேந்தர். மூவரில் சேரமன்னன் ஒருவன் அவினி. அவனது குடிப்பெயர் ஆதன். குடிப்பெயரும் இயற்பெயரும் சேர்ந்த நிலையில் மன்னனை வாழத்திய பிறகு அவனது அரசும், அவனது ஆளுகைக்கு உட்பட்டவையும் வாழ்த்தப்படுகின்றன. இவ்வாழ்த்து யாவும் பெண்களால் பாடப்படுபவை என்பது சிந்திக்கத்தக்கது. நோன்பிருந்து தைந்நீராடி, தக்க கணவரையடைந்து இல்லறத்தை அமைத்துக் கொண்ட தலைமைக்குரிய பெண்கள் தம் அனுபவத்தால் வாழ்த்தும் தகுதிபெற்றவர்கள் என்பதால் ஓரம்போகியார் பெண்கள் வாழ்த்துவதாகப் பாடியது பெண்மையைப் போற்றியதற்கான அடையாளம் எனலாம்.

நல்ல ஆட்சியாளரது ஆளுகைக்குக் கீழேதான் மக்கள் விழாக்கள் கொண்டாடி மகிழ்வோடும் அமைதியோடும் வாழ முடியும் என உணர்ந்த பெண்கள் "வாழி அவினி! வாழி ஆதன்" என முதலில் அரசனை வாழ்த்தினர். பின்னர் வாழ்த்தப்படுபவை யாவும் முன்பின்னாக அமைந்தாலும் அவற்றை ஒருமுகப்படுத்திக் காணும் போதுதான் ஒட்டுமொத்த வீட்டையும் நாட்டையும் ஒழுங்குபடுத்தி அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பத்துப்பாடல்களுக்குள் கிடக்கும் வாழ்த்துகள் வரிசைப் படுத்தும்போது பொங்கல் சிந்தனையின் ஏற்றத்தை உணரலாம்.

அரசுமுறை செய்க(8) என்ற வாழ்த்து, ஒரு நாட்டிற்கான நல்ல தலைமைதான் வாழ்த்து பெறமுடியும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த அரசு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவது கடமையானாலும் அமைதியான வாழ்வைத் தருவதே அதன் முதற்கடமை என்பதை நினைவூட்டும் விதமாக "வேந்து பகை தணிக" (6) என வாழ்த்தப்பட்டது. வேந்தனுக்குப் போரால் வரும் வெற்றிப் புகழைவிட போர் தவிர்த்ததால் அதாவது பகை உணர்ச்சி இல்லாமையால் வரும் சமாதானப் புகழே நிலையானது என்பதால் அவ்வாறு வாழ்த்தப்பட்டது.

அரசனுக்குப் பகை உணர்ச்சி நீங்குவதால் பகைவர்கள் இல்லாமையால் பகைவர்களால் வரும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொல்லைகள் நீக்கும் வகையில் மக்கள் அமைதியாக வாழமுடியும். பகைவர்கள் வாழமுடியாமல் போவதால் அவர்கள் பொலிவிழந்து போவதையும் பெண்கள் "பகைவர் புல் ஆர்க" (4) என்று வாழ்த்துகின்றனர்.
இத்தகு நல்ல அரசால் நாட்டில் களவு போன்ற தீமைகள் நடவா என்ற எதிர்பார்ப்பில் "களவு இல்லாகுக" (8) என்றும் "தீது இல்லாகுக" (9) என்றும், "அல்லது கெடுக" (7) என்றும் பெண்கள் வாழ்த்தினர். ஆக அரசு எவ்வழி அவ்வழி குடிகள் என்றபடி நல்லாட்சியின் கீழ் வாழும் மக்கள் நம்பிக்கையோடு வாழும்போதுதான் நன்மைகளும் அறங்களும் ஓங்கும் என்பதால் "நன்று பெரிது சிறக்க" (9) என்றதோடு "அறம் நனி சிறக்க" (7) என்றும் வாழ்த்தப்பட்டது.

அறங்களும் நன்மைகளும் நாட்டில் ஓங்க வேண்டுமானால் சுற்றுப்புறச் சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக "மாரி வாய்க்க" (10) என மழைபெய்தால்தான் வேளாண் தொழிலும் ஏனையவும் சிறக்கும் என்பதன் காரணத்தால் "விளைகவயலே" (2) என்றும் "நெல் பல பொலிக" (1) என்றும் வாழ்த்தப்பட்டது. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டால் நாட்டில் பசி, பட்டினி இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவே பசி இல்லாகுக (5) எனப்பட்டது.

இவ்வாறாக உழவால், உணவால், அறிவால், செல்வத்தால் நிரம்பிய நாடானாலும் நல்ல ஊட்டச்சத்தால் சுகாதாரக் கேடின்றி வாழமுடியும் என்பதைக் கூறவே "பால்பல ஊறுக, பகடு பல சிறக்க" (3) என்றதோடு "பிணிசேண் நீங்குக" (5) என்றும் வாழ்த்தப்பட்டது. இப்படி எல்லா நன்மைக்கும் அரசனே காரணம் என்பதால் அவனது வாழ்நாள் நீடிப்பதன் மூலம் குடிகள் நல்லாட்சியைப் பெறமுடியும் என்பதால் நிறைவாக அரசன் "யாண்டு பல நந்துக" (6) என அவனது வாழ்நாளை நீட்டிக்க வாழ்த்தினர் பெண்கள்.

பெண்கள், நல்லாட்சி செய்யும் அரசனையும் அவனது வாழ்நாளையும் ஆட்சியையும் வாழ்த்துவதன் மூலம் நாடும் வீடும் அமைதியுறும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ்த்திய ஐங்குறுநூற்றின் வாழ்த்துத் தொடர்கள் யாவும் தைப்பொங்கல் சிந்தனையை எதிரொலிப்பனவாகவே உள்ளன எனலாம்.

தமிழாகரர் தெ.முருகசாமி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: திரு. கண்ணன் நடராஜன் (மின் தமிழ்)

***

'ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்' என்ற தலைப்பில் வந்த இக்கட்டுரையை ஒளவை. நடராஜன் ஐயாவுடைய திருமகனார் கண்ணன் ஐயா அவர்கள் மின் தமிழில் பொங்கலை ஒட்டி இட்டிருந்தார். இக்கட்டுரையின் முதல் பகுதியில் 'தை' மாதத்தைப் பற்றிய சுவையான கருத்துகளும் அடுத்த பகுதியில் ஐங்குறுநூற்றில் இருக்கும் வாழ்த்துப் பாடல்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் தனித்தனியாகச் சுவையாக இருக்கின்றன. ஆனால் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் பொங்கலைப் பற்றித் தான் கூறுகின்றனவா? அன்றி அவைப் பொதுவாகப் பாடப்பெற்ற வாழ்த்துப்பாடல்களா? இந்த ஐயம் இப்போதும் இருக்கிறது. இப்பாடல்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் இந்த ஐயம் தீரலாம். இன்னும் நேரம் அமையவில்லை.

Wednesday, January 28, 2009

பழந்தமிழ் இலக்கியத்தில் வடநாடு

வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள். இமயமலையையும் கங்கையாற்றையும் தமிழர்கள் பார்த்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.பழந்தமிழர் வடநாட்டைப் புண்ணிய நாடாகவும், வட திசையைப் புண்ணிய திசையாகவும் கங்கையாற்றைக் கடவுள் மாநதியாகவும் இமயம் முதல் குமரி வரை ஒருநாடாகவும் கண்டனர். இதற்குக் காரணமாய் இருந்தவை வடநாட்டுச் சமயங்களே எனலாம்.

சங்ககாலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய இவை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன. கிமு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இச்சமயங்கள் தமிழ்நாட்டில் நன்கு தழைத்து சங்க இலக்கியங்களில் நன்கு புகுந்து விட்டன. சைவம் தமிழ்நாட்டுச் சமயமே என்று கூறினும் அது வடநாட்டுச் சமயமாகவே காட்சி அளிக்கிறது. இமயமே சிவனுறையும் கைலாயம் என்று குறிப்பதொன்றே இதற்குப் போதிய சான்றாகும். சைவம் தமிழர் சமயம் என்று போற்றுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

சைவ வைணவ சமண பௌத்த சமயங்கள் வடநாட்டைப் புண்ணிய நாடாகக் கருதுமாறு செய்து விட்டன. திருநாவுக்கரசர் கைலாயம் செல்லக் கருதி இமயம் நோக்கியே சென்றார். தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், வடவேங்கடம் என்கிற சொற்றொடரை எடுத்துக் காட்டி, ‘வடதிசை புண்ணிய திசை ஆகலான் அதனை முதற்கூறினார்’ என்றார். ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்கிற வள்ளலைக் குறித்துப் பாடிய 132-ஆம் செய்யுளுக்கு உரை கூறிய உரையாசிரியர், ‘வடதிசை தேவருலகோடு ஒத்தலான்’ என்று குறிப்பெழுதி உள்ளார். அவரே, 229-ஆம் புறப்பாட்டில் விண்மீன் வீழ்ச்சியைக் குறிப்பிடுகையில் “தீத்திசையாகிய தெற்கும் மேற்குமான இரண்டனுள் ஒரு திசைக்கண் வீழ்ந்ததென்றுமாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வடதிசையைப் புண்ணிய திசையாகவும், தென்திசையைத் தீய யம திசையாகவும் கருதினார்கள்.

கீழ்வரும் நாலடியார்ச் செய்யுளைக் காண்க:

‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்’

“தென்னாட்டவர் கூட முயற்சி செய்தால் சுவர்க்கம் போக முடிகிறது; வடநாட்டவராயிருந்தும் முயற்சி செய்யாமல் அதனை இழப்பவரும் இருக்கிறார்களே” என்கிற பொருளின் அடிப்படை அளவுகோலைப் பாருங்கள்.

இமய உச்சியில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாகவும் இமயத்தை ஈர்ஞ்சடை அந்தணன் (சிவ பெருமான்) வில்லாகக் கொண்டதாகவும் இமயத்து உச்சியில் இருந்து கங்கைப் பேரியாறு இழிந்து வருவதாகவும் இமயமலையில் முனிவர்கள் தவம் செய்வதாகவும் சங்ககாலத்து இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன.

வடதிசையில் இமயம் இருப்பதாலும் தென்திசையில் ஆய் வள்ளல் இருப்பதாலும் இப்பெருநாடு கவிழாமல் சமநிலையில் இருக்கிறது என்று பாடுகிறார் முடமோசியார். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை “வட இமயமும் தென் பொதியமும் போன்று நீடு வாழ” வாழ்த்துகிறது புறநானூற்றின் இரண்டாம் பாடல். “இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறமாதல் போல்” என்கிறது யாப்பெருங்கலக் காரிகைச் செய்யுள்.

கங்கையாற்றை “வளமழை மாறிய என்றூழ்க்காலை மன்பதையெல்லாம் சென்றுணக் கங்கை” என்று புறநானூறும், “பொன்கொழித்து இழிதரும் போக்கருங் கங்கை” என்று பெரும்பாணாற்றுப் படையும் “கங்கையும் பேரியாறு கடர்படர்ந்து” என்று மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு இமயத்தையும் கங்கையையும் வர்ணிப்பதோடு நில்லாமல் வடநாட்டில் நிகழ்ந்த செய்திகளையும் கூறுகின்றன சங்க இலக்கியங்கள். மகாபாரதப் போர் பற்றிய குறிப்பு முன்சொன்ன புறநானூற்றுப் பாடலில் இருக்கிறது. அகநானூறு வடநாட்டில் கிமு நான்காம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆட்சி புரிந்த நந்தர்களுடைய பெருஞ்செல்வத்தைக் குறிப்பிடுகிறது. *நந்தர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததற்கு ஒரு குறிப்பும் இல்லை; ஆனால் அகநானூற்றின் 251, 265 ஆகிய பாடல்களில் அவர்களுடைய ஆட்சியின் பெருஞ் செல்வச் சிறப்பை மட்டும் காண்கிறோம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் வடநாட்டைச் சமய நிலையில் உயர்வாக குறிப்பிடினும் அரசியல் நிலையிலும் வீரச் சிறப்பைக் கூறும் முறையிலும் வடநாட்டை மதித்துக் கூறவில்லை. வடநாட்டினர் மேல் தமிழர்க்ள் பகை கொண்டிருந்தது போலவே தோன்றுகிறது. தமிழ் மன்னர்கள் வடநாடு சென்று இமயத்தில் தங்கள் இலச்சினைகளைப் பொறித்ததும் இமயம் முதல் குமரி வரை தமிழ் மன்னர்கள் ஆண்டதும் வடநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு அடி பணிந்ததும் திறை கொடுத்ததும் வடபுல மன்னர்களான கனக விசயர்கள் தலையில் கண்ணகி படிவக் கற்களைச் சுமக்க வைத்ததும் வடநாட்டுக்குப் படையெடுத்ததுமான செய்திகளைப் பழந்தமிழ்ச் சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து அகநானூறு சிலப்பதிகாரம் போன்றவை கூறுகின்றன.

பெருவீரனான அசோகனும் தமிழ்நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.கலிங்கத்தை வென்றதோடு நின்றான். அவன் தன் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர்களை நேச மன்னர்களாகவே குறிப்பிட்டான். புறநானூறு அசோகருக்குப் பின் வந்த மோரியர் படையெடுப்பை ‘வம்ப மோரியர் படையெடுப்’பாகவே கூறுகிறது. அப்படி வந்தவர் வெற்றி பெற்றதாகக் குறிப்பைக் காணோம்.

ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் பலர் தமிழ் மன்னர்களின் வீரச் செயல்களையும் படையெடுப்புகளையும் கற்பனைத் திறன் மிகுந்த காப்பியக் கதைகளாகத் தான் கருதுகின்றனர். பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் தவிர்த்த அனைவரும் செங்குட்டுவன் உள்ளிட்ட தமிழ் வேந்தர்களின் படையெடுப்புகள் அனைத்தையுமே கட்டுக்கதைகளாகப் புறக்கணிக்கின்றனர்.

வடவர்கள் காஞ்சியைத் தவிர பிற பழந்தமிழ் நகரங்களைப் புண்ணிய நகரங்களாகக் கருதவில்லை. தமிழ்ப் புலவர்களோ வட நாட்டைப் புண்ணிய நாடாகவும் வட மொழியைத் தெய்வ மொழியாகவும் மதித்தார்கள்; வடநாட்டுக் கதைகளைக் காப்பியங்களாகப் பாடினார்கள். இது பழந்தமிழர் பண்பாடு மட்டுமன்று; இன்றையத் தமிழர் பண்பாடும் ஆகும்.

- பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

***

வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் இரத்னேஷின் பதிவில் இப்பகுதியைப் படித்தேன். அப்போதே 'படித்ததில் பிடித்தது' வகையில் இடவேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இட முடிந்தது. இக்கட்டுரையைத் தட்டச்சிய இரத்னேஷுக்கு நன்றிகள்.

Friday, January 09, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

உலகில் அறிவுக் குறையின்றி வளர்ந்து நிறைவு பெற்று வாழ விரும்புவோர் எந்த ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும், யார் எழுதக் கண்ணுற்றாலும் அந்தப் பொருளின்கண் உண்மையுள்ளதா என்று ஆராய்ந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆய்வதன் மூலமே செம்பொருள் - மெய்ப்பொருள் கிடைக்கும்.
நூல்வல்லார் எழுதிய அகராதி, நிகண்டுகளாயினும் அவை கூறும் சொற்பொருள் சரிதானா என்று சிந்தித்தல் நலம் பயக்கும். ஆராயாது ஏற்றுக் கொள்வது அறிவுடைமைக்கு அழகன்று. ஏனெனில் இயற்கை அறிவும் நூலறிவும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர்களும் சிலபோது முறை மறந்து எழுதுதல் - பேசுதல் உண்டு என்பதனை மறத்தல் கூடாது.

நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொராசிரியர்
ஒவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
யவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத் தறியாது அவரவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை பேதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே.


என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் பாயிரத்துள் கூறிய கருத்துப் புறக்கணிக்கக் கூடியதன்று.

நிகண்டு இயற்றிய பெருமக்கள் இலக்கிய, இலக்கணப் பயிற்சிமிக்குடையர் என்பதை அறிவோம். அதனால் அவர்களின் நூல்களில் குறைகள் இருக்க இடமில்லை என்று துணிதல் கூடாது. அவர்கள் தவறு செய்த இடங்களும் உண்டு.

யானைக் கன்றின் பெயர்களைக் கூறும்போது "கயந்தலை போதகங்கள் துடியடி களபமோடு கயமுனி யானைக் கன்றாம்," என்கிறது சூடாமணி நிகண்டு.

பிங்கல நிகண்டும் (2416),

"கயந்தலை போதகம் துடியடி களபம்
கயமுனி யானைக் கன்றா கும்மே."


என்று கூறுகிறது. திவாகர நிகண்டும் இவ்வாறே கூறுகிறது.

இவை யானைக் கன்றின் வேறு பெயர்களைக்

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி


என்று ஐந்தனையும் குறிப்பிடுகின்றன.

கயந்தலை - யானைக்கன்றைக் குறிக்குமா?

இலக்கிய இலக்கணச் சான்று உண்டா?

என்ற வினாக்களை எழுப்பிச் செம்பொருள் காணல் வேண்டும்.

"தடவும் கயவும் நளியும் பெருமை." - தொல்.உரி: 24
"கயவென் கிளவி மென்மையும் ஆகும்." - தொல்.உரி: 26

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரே கூறுவதால் "கய" என்ற சொல்லானது பெருமை, மென்மை என்ற பொருள்களையே தரும். சங்கப் புலவர்களும் இவ்விரு பொருள்களிலேயே "கய" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

பரிபாடலில் (8:15) வருகின்ற "கயமுகை" என்பதற்குப் பரிமேலழகர் "பெரியமுகை" என்றே பொருள் எழுதுகிறார்.

கயம்பட்ட உருவின்மேல் - கலித் 72:19, கயம் - மென்மை என்றார் நச்சினார்க்கினியர். இவ்வாறு உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பிய நெறி நின்றே "கய" என்பதற்கு மென்மை, பெருமை என்று பொருள் கொண்டனர்.

ஆகையால் "கயந்தலை" என்று செய்யுட்களில் வருமிடந்தோறும் பெருமை பொருந்திய தலை, அல்லது மென்மையான தலை என்றுதான் பொருள் கொளல் வேண்டும். முன்னொட்டு எதுவுமின்றிக் "கயந்தலை" என்று மட்டும் வந்தால் யானைக்கன்று எனப்பொருள் கொள்ளல் பொருந்தாது.

"கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி."
- அகநா.165:1 - 3

"மெல்லிய தலையினை உடைய மடப்பத்தினையுடைய பெண் யானை, படுகுழியில் வீழ்ந்து அகப்பட்டதென்று களிற்றி யானை விளித்தல் பொருந்திய முழக்கத்தினை யஞ்சி மெல்லென எழுந்த செய்ய வாயையுடைய யானைக்கன்று," என்பது பொருள். ஈண்டு "கயந்தலை மடப்பிடி" என்று பெண் யானை குறிப்பிடப்படுவதையும், இம்மடப்பிடியின் கன்று "செவ்வாய்க் குழவி" எனக் குறிப்பிடப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

"கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி." - மலைபடு - 307

இங்கே கன்று வேறாகவும் "கயந்தலை மடப்பிடி" வேறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினை உடைய மடப்பிடி," என்பது நச்சினார்க்கினியர் உரை. மடப்பிடி - இளம் பெண்யானை.

பிடிக்குக் "கயந்தலை" அடைமொழியாக வந்தாற்போல, களிற்றுக்கும் "கயந்தலை" அடைமொழியாக வருவதுண்டு. "கயந்தலைக் களிற்றின்" - சூளாமணி -106. ஆண் யானையின் தலை "கயந்தலை" எனப்பட்டது. கயந்தலை -பெரியதலை என்ற பொருளில் இங்கு வந்துள்ளது. இவை போல் யானைக்கன்றின் தலையும் கயந்தலை எனக்குறிப்பிடப்படும் பாடலும் உண்டு. "கயந்தலைக் குழவி கவியுகிர் மடப்பிடி" - அகநா.229:4. மடப்பிடிக்கு முன் குழவியும் சேர்ந்து "கயந்தலைக் குழவி" என வந்ததால் யானைக் கன்றினைக் குறித்தது.

கயந்தலை உயர்திணையிலும் அடைமொழியாய் வருவதுண்டு.

புதல்வருடைய மென்மையான தலையைப் "புதல்வர் கயந்தலை" என்று பரிபாடல் (16:8) குறிப்பிடக் காணலாம். இப்பரிபாடலிலேயே வேறொரு இடத்தில் (5:10) "மூவிரு கயந்தலை" என வருகிறது. இங்கு பரிமேலழகர் "ஆறுதிருமுடிகளை உடையோய்" எனப்பொருள் எழுதியதுடன், "கயந்தலை என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய் அண்மை விளியேற்றது" என்று எழுதினார். முருகன் தலைகள் ஆறும் "மூவிரு கயந்தலை" எனப்பட்டன.

உரல் போன்ற அடியினை உடையது பெரிய யானை. அதனால் "கறையடியானை" - (அகநா - 142:9) எனப்பட்டது. யானைக் கன்றின் கால்கள் துடிபோன்று இருப்பதால் "துடியடிக் கயந்தலை" (கலித் -10:8) என்றார் பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோன் (துடி - உடுக்கையென்னும் பறைவகை). இவ்விடத்தில் "துடியடி"யின்றி, "கயந்தலை" மட்டும் வந்திருந்தால் யானைக் கன்றைக் குறிக்காது. கயந்தலை என்று மட்டும் வந்து யானைக் கன்றைக் குறித்த இடம் பழந்தமிழ்ச் செய்யுட்களில் யாண்டும் இல்லை. அதனால்தான் 1936ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் தொகுக்கப்பட்டு வெளிவந்த தமிழ் லெக்சிகனில், எங்கும் கயந்தலை -யானைக்கன்று என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிகண்டுகளைப் பின்பற்றிப் பல அகராதிகளில் கயந்தலை -யானைக்கன்று என்று எழுதிவிட்டனர். இது முன்னோர் கொள்கைக்கு முரணாகும்.

மா.சின்னு

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. ஒளவை. ந. கண்ணன்.

***

இந்தக் கட்டுரை மிக நல்ல கட்டுரை. ஒரு அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் புலமைத்தமிழில் அமைந்திருக்கிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இன்னும் எளிமையாக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்; இக்கட்டுரைக் கருத்தைத் தழுவி இன்னொரு கட்டுரை எழுதி இடுகிறேன். நன்றி.

Friday, November 21, 2008

'ஐ'யும் 'அய்'யும்..... - திரு. நாக. இளங்கோவன்

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பதே அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று
எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்
எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்
தோன்றியது. "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு "ஐ"யெனக் கழிய......
...................அகநானூறு:305


இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர் பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:
http://koodal1.blogspot.com/2008/05/blog-post.html )

அன்புடன்
நாக.இளங்கோவன்

***

இங்கும் சேமித்து வைக்க அனுமதி தந்த திரு. இளங்கோவன் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Thursday, November 20, 2008

புன்கவிஞர் பலவகை (இலக்கிய மரபு) - பசவய்யா

நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்
பசுவய்யா

"பிளேஜியரிஸம்' என்பதைத் தமிழில் இலக்கியத் திருட்டு என்று சொல்வர். பிறர் ஒருவரின் கருத்தையோ சிந்தனையையோ அவர் பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, பிறருடைய சிந்தனைகளைத் தன்னுடையதேபோலக் கையாள்வது முதலிய நடவடிக்கைகள் "பிளேஜியரிஸம்' ஆகும் என்பது ஆங்கில நூல் வரையறை.2

தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர் மு. அருணாசலம், "பிளேஜியரிசம்' பற்றிக் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

""ஒருவர் உழைத்துச் செய்த காரியத்தை மற்றொருவர் அப்படியே பயன்படுத்திக் கொண்டால், அதைக் கருத்துலகில் திருட்டு என்று சொல்வோம். இலக்கியத் துறையில் ஒருவர் கூறியதை மற்றொருவர் இடம் குறிப்பிடாமலும் நன்றி தெரிவிக்காமலும் அப்படியே எடுத்து ஒரு பக்கமோ ஒரு பத்தியோ வைத்துக்கொண்டாலும்கூட ஆங்கிலத்தில் அதைப் "பிளேஜியரிசம்'(இலக்கியத் திருட்டு) என்று சொல்வார்கள்.''3

இந்தப் பிளேஜியரிசம் எனப்படும் "இலக்கியத் திருட்டு' தமிழில் இருக்கிறதா? தமிழில் எல்லாம் இருக்கிறது; தமிழில் இல்லாததே இல்லை என்னும் கருத்தில் தீவிரப் பற்றுடையோர் தமிழர். அப்படியெனில் இலக்கியத் திருட்டு சமாச்சாரம் மட்டும் தமிழில் இல்லாமல் போகுமா?

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றி' வருவது தமிழர்தம் மரபாகும். மரபிலே தமிழருக்கு உள்ள ஈடுபாடு அளவிடற்கரியது. தமிழ் மரபுகளுக்கு உரிய தனித் தன்மைகளைப் பேணிக் காக்கிறோமோ இல்லையோ சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவற்றை எடுத்து மொழிந்து பெருமை பேசிக்கொள்வது நமக்குக் கைவந்த கலையாகும். இலக்கியத்தை அகம், புறம் என்று பகுத்துக் காணும் மரபு தமிழைத் தவிர உலக மொழிகள் எவற்றிலும் கிடையாது. அகப் பொருள் மரபு, புறப்பொருள் மரபு ஆகியவை சார்ந்த விசயங்கள் தனித்தனி நூல்களாக எழுதப்பட்டுத் தொடர்ந்துவருகின்றன. நவீன விமர்சகர்கள் பலரும் இக்கோட்பாட்டை விரிவாகப் பயன்படுத்த முயல்கின்றனர் என்பனவெல்லாம் நாம் பேசும் பெருமைகள்.

பலராலும் விதந்தோதிக் குறிப்பிடப்படும் அகம், புறம் என்னும் மரபுகள் மட்டுமல்ல, இன்னும் பெருமை மிகு மரபுகள் பலவும் நம்மிடம் உள்ளன. அவற்றுள் சில:

க. மிகவும் பிரபலமான இலக்கியம் ஒன்றின் இடையிடையே பொருத்தமான இடங்களில் அந்த இலக்கிய நடையிலேயே சில பாடல்களை எழுதிச் சேர்த்துவிடும் மரபு. இதனை இடைச் செருகல் என்பர். ஓரிலக்கியத்தைப் பயின்றுவரும் போது உணர்ச்சிவசப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். கவிஞன் இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் விரித்துப் பாடியிருக்கலாம் என்னும் கருத்துத் தோன்றியதால் தன் சரக்கை உள்ளே நுழைத்திருக்கலாம். தன் பயிற்சிக்காகக்கூட இத்தகைய வேலையைச் செய்திருக்கலாம்.

நீண்ட கதையாகப் போகும் காப்பிய இலக்கியத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். தசரதன் இறந்த செய்தி கேட்டதும் இராமன் புலம்புகிறான். அப்புலம்பலைப் பத்துப் பாடல்களில் கம்பர் பாடுவதாகக் கொள்வோம். படிக்கும் புலவர், " அடடா இராமனை இன்னும் கொஞ்சம் புலம்ப விட்டிருக்கலாமே' என்று நினைக்கிறார். உடனே தன் விருப்பத்தைத் தானே செயல்படுத்தி விடுகிறார். இப்படி ஏராளமான இடைச்செருகல் வேலை தமிழில் நடந்திருக்கிறது.

வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் புலவர், பல பாடல்களை எழுதிப் பெரியபுராணத்தில் செருகியிருக்கிறார். அப்பாடல்களை இனம் கண்டு பிரித்து "வெள்ளி பாடல்கள்' என்று தனிப்படுத்திக் காட்டு வதுண்டு. அதேபோல, சீவக சிந்தாமணி காப்பியத்துள் கந்தியார் என்னும் புலவர் எழுதிச் சேர்த்த பல பாடல்கள் இருப்பதாகக் கூறுவர்.

உ. புலவர் ஒருவர் தான் எழுதிய நூல் ஒன்றைத் தன் பெயரில் வெளியிடாமல், ஏற்கெனவே பெரும் புகழ் பெற்று நிலைகொண்டுவிட்ட புலவர் ஒருவரின் பெயரில் வெளியிடும் மரபு. தான் எழுதியதிலேயே தன் பெயரைப் போட்டுக்கொள்ளாத இச்செயல் "தியாகம்' என்று தோன்றும். உண்மை அதுவல்ல. தன் பெயரைப் போட்டுக்கொண்டால் "போணி'யாகாது என்பதால் இந்த வேலை. தான் எழுதிய நூலின் தரத்தில் நம்பிக்கையில்லாத புலவர் அந்த நூலை ஏதாவதொரு விதத்தில் அடையாளப்படுத்த விரும்பியதின் விளைவு இது.

"ஞான வெட்டியான்' என்னும் நூல் திருவள்ளுவர் பெயரில் இருக்கிறது. காலத்தால் மிகவும் பிற்பட்ட இந்த நூலை எழுதியவர் யாரோ தெரியவில்லை. புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள நூல்கள் பல. குறிப்பாக நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் எழுதப்பட்ட அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு போன்ற புராணக் கதைகள் பல அவருடைய பெயரில் உலவுகின்றன.

ங. பழங்காலத்தில் வழங்கியதாகத் தகவல் மட்டும் தெரியும் நூலின் பெயரில் புதிய நூல் எழுதிப் பரப்பிவிடும் போலிநூல் மரபு. பொருளீட்டுவதற்காக அல்லது பழைய நூலைக் கண்டு பதிப்பித்தவர் என்னும் புகழைப் பெறுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம். தனிமனிதர் மட்டுமல்ல; சிலபேர் சேர்ந்து குழுவாகக்கூட இத்தகைய வேலைகளைச் செய்திருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் செங்கோன் தரைச்செலவு, மூவடி முப்பது ஆகிய பழைய நூல்களைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புலவர் ஒருவர் அச்சிட்டுள்ளார். " ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் தொடர் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. "ஐந்திரம்' என்பது வடமொழி இலக்கண நூல் என்பர் சிலர். அது தமிழ் இலக்கண நூல்தான் என்பவரும் உண்டு. ஐந்திரம் என்பது நூலே அல்ல; அது ஒரு சிந்தனைக் குழு என்ற கருத்துக் கொண்டோரும் உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு ஒன்றின்போது "ஐந்திரம்' என்னும் பெயரில் தமிழ் இலக்கண நூல் ஒன்று வெளியிடப்பட்டது. பின்பு அது போலிநூல் என்று புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய "வளமான' மரபுகளைக் கொண்ட நம்மிடம் இலக்கியத் திருட்டு மரபு மட்டும் எப்படி இல்லாமல் போகும்? அதற்கு நேர் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்மறையான சான்று ஒன்றுண்டு. பிரபலமான திருவிளையாடல் கதையில் தருமி என்னும் புலவரின் செயலை நாம் அறிவோம். பிறிதொருவரின் பாடலைத் தன் பாடல் என்று சொல்லிப் பரிசில் பெறச் செல்கிறார் அவர். பாடியவரே கொடுத்தார் என்பது இங்கு விசயமல்ல. பிறர் பாடலைத் தன் பாடல் என்று சொல்வது இலக்கியத் திருட்டு அல்லாமல் வேறென்ன?

இலக்கியத் திருட்டு பற்றிய கருத்துகள் நம் மரபில் உள்ளன. "வச்சணந்தி மாலை' என்னும் இலக்கண நூல் புன்கவிஞர் நான்கு வகை என்று கூறுகிறது.

ஆரொருவன் பாக் களை ஆங்கொருவனுக்களிப்போன்
சோரகவி, சார்த் தொலியிற் சொல்லு மவன் - சீரிலாப்
பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக் காம், புன்மொழிக் காம்
வெள்ளைக் கவிய தனின் வேறு.4
இதில் கூறப்படும் கவிஞர் வகையும் விளக்கமும் வருமாறு:

அ. சோரகவி: ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆவான். யாரோ ஒருவன் பாடிய பாடல்களைத் தன் பாடல்கள் எனக் கூறி (புரவலன்) ஒருவனிடம் வழங்குவோன் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆ. சார்த்துகவி: ஏற்கெனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் சார்த்துகவியாவான். இது "இடைச் செருகல்' புலவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இ. பிள்ளைக்கவி: சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றுபவன் பிள்ளைக்கவி ஆவான்.

ஈ. வெள்ளைக்கவி: பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோன் வெள்ளைக்கவி ஆவான்.

சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இங்கு வேண்டாம். சோரகவி எனப்படும் கள்ளக்கவி மரபை மட்டும் எடுத்துக்கொள்வோம். கள்ளக்கவி, சோரகவி ஆகிய சொற்களுக்குப் பிறர் பாடிய பாடல்களைத் தனதென்று கூறுபவன், ஒருவனுக்குப் பாடியுள்ளதை வேறொருவனுக்குக் கொடுப்போன், திருட்டுப் பாடல் என அகராதிகள் பொருள் தருகின்றன.5

பிறிதொருவன் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவனுக்குத் தருமி உதாரணம் என்றால், தான் பாடிய பாடலைப் பிறிதொருவன் பெயரில் வழங்க அனுமதித்ததற்கு இறையனார் (சிவபெருமான்) உதாரணமாகிறார். தமிழ் மரபிலக்கண வரையறைப்படி தருமி, சிவன் ஆகிய இருவருமே கள்ளக்கவிகள் தான். தமிழ் நெடுமரபில் வேறு சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சம்பவங்கள் சிலவற்றை இம்மரபில் பொருத்திப் பார்க்கலாம்.

உ. வே. சாமிநாதையர் எழுதிய "என் சரித்திரம்', "ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' ஆகிய நூல்களைப் படித்தவர்களுக்கு அவற்றில் வரும் சில சம்பவங்கள் நினைவிருக்கலாம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாடல்கள் எழுதிப் பிறருக்குக் கொடுத்துவிடும் தாராள மனம் கொண்டவர். திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்ரமணிய தேசிகரிடம் பரிசில் பெறவேண்டி வருவோர் பலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம்தான் முதலில் வருவர். அவர் சுப்ரமணிய தேசிகரைப் புகழ்ந்து பாடல் இயற்றித் தருவார். வருவோர் அப்பாடலைத் தம் பாடலாகக்கொண்டுசென்று தேசிகர்முன் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வர்.

அவருடைய மாணவனாக இருந்தபோது சாமிநாதையருக்கே நெருக்கடியான நேரங்களில் இவ்விதமாக அவர் உதவிய சம்பவங்களும் உண்டு. இவை மட்டுமல்ல, தாம் இயற்றிய "குசேலோபாக்கியானம்' என்னும் நயம் மிகுந்த நூல் ஒன்றையே தம் மாணவரும் செல்வருமான "தேவராசப் பிள்ளை' பெயரில் போட்டுக்கொள்ளக் கொடுத்துள்ளார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

அதைப் பற்றி அவர் கூறும்போது, "தமிழ் சமஸ் கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளில் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலேயே வெளியிடுவது பழைய வழக்கந்தான்' என்கிறார்.6 இன்றும் "குசேலோபாக்கியானம்' தேவராசப் பிள்ளை பெயரில்தான் வழங்கி வருகிறது.

மாதை திருவேங்கடநாதர் என்னும் பார்ப்பன அமைச்சர் ஒருவர் பெயரில் "பிரபோத சந்திரோதயம்' என்றொரு நூல் உள்ளது. இந்நூல், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் ("இலக் கண விளக்கம்' இயற்றிய ஆசிரியர்) இயற்றிக் கொடுத்தது என்றொரு செய்தியும் கூறப்படுவதுண்டு.

எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகிறது. இவையே திருட்டு என்றால், எழுதியவருக்கே தெரியாமல் அவருடைய உழைப்பை, சிந்தனையைத் தம்முடையதாக்கிக் கொள்ளுவதை என்னவென்று கூறுவது? "திருட்டு' என்பதற்கும் மேலான சொல் ஒன்றைத்தான் தேடவேண்டும். இவ்வழக்கத்திற்குப் பழைய சான்றுகள் எதுவுமில்லை. எனினும் இம்மரபின் தொடர்ச்சி என்று கருதத்தக்க வகையில் இருபதாம் நூற்றாண்டுச் சான்றுகள் ஏராளமாய் உள்ளன.

குறிப்புகள்:
1. பசுவய்யா, 107 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 1996, ப. 28.

2. ஏஹய்க்க்ஷர்ர்ந் ஊர்ழ் ரழ்ண்ற்ங்ழ்ள் ர்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் டஹல்ங்ழ்ள்ம் ஙகஅ, 1998, ட. 21

3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11ஆம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1971, ப. 401.

4. மேற்கோள்: மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1970, ப. 217.

5. காண்க:
அ. எஸ். வையாபுரிப் பிள்ளை(ப.ஆ), தமிழ் லெக்சிகன், தொகுதி ஐஐ, சென்னைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு, 1982, ப.806 மற்றும் தொகுதி ஐஐஐ, ப. 1674.

ஆ. மு.சண்முகப் பிள்ளை (தொ. ஆ), தமிழ் - தமிழ், அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1985, ப. 292 மற்றும் ப. 521.

6. உ. வே. சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு, 1986, ப. 129.
***

மின் தமிழ் குழுமத்தில் இந்தக் கட்டுரையை அனுப்பிய அன்பருக்கு நன்றி.

Thursday, September 11, 2008

விவேகானந்தரின் சிகாகோ பேச்சின் ஆண்டு விழா!


1893ம் வருடம் இதே நாளில் தான் (செப்டம்பர் 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் அனைத்துலக சமய மாநாட்டில் தன்னுடைய அருமையான உரையை நிகழ்த்தினாராம். இன்று தான் அதனை அறிந்தேன். மின் தமிழ் குழுமத்தில் 'கண்ணன் நடராஜன்' ஐயா அனுப்பியிருந்த மின்னஞ்சலின் மூலம். அவர் தினமணியிலிருந்து எடுத்து இட்டிருந்த கட்டுரை இன்றைக்குப் பொருத்தமான கட்டுரையாகத் தோன்றியது. அதனை இங்கே இடுகிறேன். நன்றிகள்.

***

சகோதர, சகோதரிகளே, (1893)

இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை.
சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல் வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதே நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது.

அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார்.

மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம்மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது.

அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.

மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.

சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார்.

இன்றுவரை அந்த மடத்தின் மூலம் அவரது சீடர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். அதோடுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கீழ் பல ஆயிரம் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.


115 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கே. வாசுதேவன்

நன்றி: தினமணி

Wednesday, September 03, 2008

சங்ககால மக்கள் வாழ்க்கை - மயிலை சீனி.வேங்கடசாமி

சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும் போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும்.
சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக் காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.

இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்டமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிகமும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன.

அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது.

அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தது.

குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது.

மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச்சாரல்களி லும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன.

இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர் பெற்றன.

சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையையடுத்திருந்த சேரநாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ் நாடாக இருந்த படியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது.

கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள் தோறும் கடலில் வெகு தூரம் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்.

இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வரண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது.

இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தது. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாக கூறுவோம்.

குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை

மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.

இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.

இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டு விடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப்பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.

குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.

மலைகளிலும் மலைச் சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும் பயிர் செய்தார்கள்; மரம் செடி கொடி களை வெட்டி அப்புறப் படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்படுத்தினார்கள்.

பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.

தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கினார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில் களைக் கட்டி அதன் மேல் தினைத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று, பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில், கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது. இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.


முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.
இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்), இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.

வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களிலிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், மழையை, எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.

இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர் கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களி னால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள்.

காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகம் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.

ஆகவே மருத நிலத்திலே தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகை களையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை.
ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்துவந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்துவந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.

சில இடங்களில் கடற்கரை யோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடினமான வாழ்க்கையே. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை ஒரு வகையில் கடினமானது என்றால் நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை வேறு வகையில் கடினமானது.

கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறை முகங்கள் இருந்தன. துறை முகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின.

ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின. பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை என்று கூறினோம். வாழ்வதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லாத பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை. வாழ்ந்தவர்களும் மனிதராக வாழவில்லை. மாக்களைப் போல வாழ்ந்தார்கள்.

இவ்வாறு வெவ்வேறு இயற்கையான சூழ்நிலைகள் அமைந்த இடங்களில் வசித்த அக்காலத்துத் தமிழர் வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

விரைவான போக்கு வரத்துச் சாதனங்களும் தந்தி தபால் வசதிகளும், மற்றும் இக்காலத்து வசதிகள் பலவும் அக்காலத்தில் இல்லாத படியால் கல்வி, பொரு ளாதாரம், நாகரிகம் முதலியவை வளர்ச்சியடைய இயலாமற் போயின. இக் காலத்தில் மிக எளிய மக்கள் பெறுகிற வசதியைக்கூடச் செல்வம் பெற்றவர் பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் இருந்தது. இத்தகைய சூழ்நிலை தமிழருக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா நாட்டிலும் இப்படிப் பட்ட நிலைதான் இருந்தது.

அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரிகம் மருத நிலத்திலும் துறைமுகப்பட்டினங்களிலும் வளர்ந்தன என்று கூறினோம். ஆம், பட்டணங்களிலும் பட்டி னங்களிலும் தான் அக்காலத்து தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலைகள் எல்லாம் வளர்ந்தன.

தமிழரின் வாணிகம் அக் காலத்தில் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிறு விலையுள்ள பொருளுக்கும் அதிக விலையுள்ள பொருளுக்கும் காசு பயன்படுகிறது.

ஆனால் காசு (நாணயம்) ஆதிகாலத்தில் ஏற்படவில்லை. ஆதிகாலத்தில் பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பெறுவது - நடந்தது. பிறகு பையப்பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்ட மாற்றும் நாணயச் செலாவணியும் நடைபெற்றன.

கட்டுரை: கீற்று வலைத்தளம்

Tuesday, August 19, 2008

*நட்சத்திரம்* - நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!!

எத்தனை பேர் என் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த இந்த அற்புதமான ஆய்வினைப் பற்றி படித்தீர்களோ தெரியாது. நட்சத்திர இடுகையாக இதனை இட்டால் இன்னும் நிறைய பேரின் அறிவுக்கண்ணைத் திறக்குமே என்று இங்கே இடுகிறேன்.

மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'யைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.

முதல் வகை முழுமுதல் உண்மை:

வேத உபநிடத பிரம்மசூத்திர கீதைகளிலேயே உலகத்தின் எல்லா அறிவும் அடங்கியிருக்கிறது. வேறு எந்த மொழியிலும் மதத்திலும் இருக்கும் எல்லா அறிவிற்கும் அடிப்படை இந்த நூற்களில் தான் இருக்கிறது. இப்படி ஒரு 'உண்மை' மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டாம் வகை முழுமுதல் உண்மை:

உலகத்தில் இருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் வடமொழி நூற்கள் தான்; எல்லா தீமைகளும் ஆரியர்களிடமிருந்தே வந்தன. உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டையும் மிஞ்சும் விதமாக 'உண்மையிலும் உண்மையாக' ஒரு 'உண்மை'யை அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவில் படித்தேன். அவர் எழுதியதை அவருடைய பதிவிற்கே சென்று படிப்பது தான் சரி என்பதால் அந்த நீண்ட கட்டுரைக்கு சுட்டியை மட்டும் இங்கே தருகிறேன். அதனைப் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் - நான் தோமா கிறித்தவனாக மாறிவிடவா? அப்படி மாறும் போது நீங்களும் என்னுடன் சேர்ந்து தோமா கிறித்தவனாக மாறிவிடுகிறீர்களா?

இந்த மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'களில் எந்த உண்மையை நீங்கள் 'மனதார நம்புகிறீர்கள்' என்பதை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். :-)

Monday, March 31, 2008

முல்லைத் திணையின் மரபு மீறல்கள்...

வரலாறு.காம் மின்னிதழில் வரும் கட்டுரைகள் மிகச்சுவையானவை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன். நேற்று முல்லைத் திணையின் மக்கள் வாழ்க்கையைப் பற்றி ரிஷியா எழுதிய கட்டுரை/கதை ஒன்றைப் படித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அதனையும் ரிஷியா திருச்சதய விழாவைப் பற்றி எழுதிய கட்டுரையையும் இங்கே தருகிறேன். முழுக்கட்டுரைகளையும் எடுத்து இங்கே இடலாமா? சுட்டிகளை மட்டும் தந்தால் போதுமா? எது சரி என்ற குழப்பம் இருக்கிறது. முழுக்கட்டுரைகளையும் சுட்டிகளுடன் தருகிறேன். அது முறை இல்லை என்றால் தெரியப்படுத்துங்கள். சுட்டிகளுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

***

முல்லை மகளே!! வாள் மங்கையே!!
ரிஷியா



மழை மேகப்புறாக்கள் வானவெளியில் குப்பலாய் ஓன்று கூடின. மெல்ல மெல்ல வானம் வெண்மழை பொழிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆவணித் திங்களின் கார்காலை அது. வைகறை எழுந்து நீராடிய ஆயர்பாடி மங்கையர், தம் இல்லத்துக் கொட்டிலில் மூங்கில்கழியோடு பிணைக்கப்பட்டிருந்த ஆநிரைகளுக்கு நறுமண தூபப்புகை காட்டினர். குளிருக்கு ஓடுங்கிய இளங்கன்றுகளுக்கு இதமாய் இருக்கட்டுமென்று பெரிய மண்சட்டிகளில் காய்ந்த வரட்டிகளோடு, உலர்ந்த சருகுகளைப் போட்டு எரியூட்டினர். ஆயர்குலச் சிறுவர்கள் தம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழலை எடுத்துக் காற்றை உள்ளிழுத்துப் பண் இசைக்கத் தொடங்கினர். காலையை வந்தனம் கூறி வரவேற்பதாய் இருந்தது அவர்கள் இசைத்த பூபாளம். சிறுமியர்கள் கொல்லையில் வளர்ந்து நிலம்நோக்கிய வரகுக் கதிர்களைத் தூறல் நனைக்கும் முன் மூங்கில் கூடைகளில் சேமித்தனர். வரகுக் கொல்லையினுடே ஆண்முயல் தன் செவிகளை உயர்த்திக் கொண்டு ஓட, அதன் பின்னே பெண் முயல் ஓட, இதைக் கண்ட சிறுமி ஓருத்தி தன்னிடமிருந்த கூடையைக் கீழே கிடத்திவிட்டு அவைகளைத் துரத்த ஆரம்பித்தாள். சிறுமியர் கூட்டம் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தது.

அங்கே, அடர்ந்த கானகத்தின் வழியே புறப்பாடியிலிருந்து அந்தணன் ஸ்ரீமன் மாயோன் கோவிலை நோக்கி நடந்தான். ஓங்கி நெடிதுயர்ந்த கொன்றை மரங்கள் பொற்சரங்களெனக் கொன்றைப் பூக்களைச் சூடி ஈரக்காற்றில் களிநடனம் புரிந்தன. தாழ்ந்திருந்த ஓரு மரக்கிளையைப் பிடித்து உலுக்கித் தன் மேல்துண்டால் கொன்றைப் பூக்களைச் சேகரித்துக்கொண்டு மேலே நடந்தான். ஒரு கையில் கிண்டி, மற்றொரு கையில் பூக்குடலை நிறையக் குல்லை (துளசி) மாலைகள். கொன்றையிலை ஒன்றைக் குழல் போலச் சுருட்டி வாயில் வைத்துச் சீழ்க்கையடித்தான். அவன் சீழ்க்கைக்கு எதிர்ச்சீழ்க்கை ஒன்று சற்றுத் தொலைவில் குறுஞ்சுனைக்கு அருகிலிருந்து பறந்து வந்தது. வியந்து ஆவல் மேலிடப் பசும் புதர்களிடையே சென்று ஒரு மரத்தின் பின்நின்று கவனித்தான். சுனையில் எழிலி நீராடிக் கொண்டே இவன் குழல் பாட்டுக்கு எதிர்க்கச்சேரி நடத்தினாள். ஒ! இவளா! கானநாடனின் பெண்.. ம்.. ம்ம்.. , இன்னும் சற்றுநேரம் நின்றால் என்ன என்று தோன்றியது. ம்ஹூம், அது நாகரிகமல்ல என்று எண்ணியபடியே நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான். அவள் விடவில்லை. இழுத்து நீண்ட ஒசையாக ஒரு சீழ்க்கையடித்தாள், அவனை நோக்கியபடியே. திமிர்.. திமிர்.. மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடந்தான்.

திடீரென்று மா.. மா.. என்று பெரும் சப்தமும், இரைச்சலும் சுனையருகே கேட்டது. திரும்பி நோக்கினான். காட்டெருமைக் கூட்டம் ஒன்று சுனையில் இறங்கி நீரைக்கலக்கி அதம் செய்தன. ஐயோ!! அவளுக்கு என்ன ஆயிற்று? மனம் பதறினான். அவளோ, காட்டெருமைக் கூட்டத்தை மூங்கில் கழியால் விரட்டிவிட்டாள். ஒரு கணம் திகைத்தான். எத்தனை வீரம்!! துணிவு, பயம் என்பதையே இந்தப் பக்கத்துப் பெண்கள் அறியார். அந்தோ பாவம்! மேட்டில் எழிலி வைத்திருந்த ஆடைகளைக் காலில் இழுத்துக்கொண்டு காட்டெருமைகள் ஒடிவிட்டன. ஈர ஆடையுடன் அவன் நின்றாள்; என்ன செய்வது என்று புரியாமல். ஸ்ரீமன் அவளை நோக்கி விரைந்தான். இவனைக் கண்டவுடன் அவள் மறுபடியும் சுனைக்குள் இறங்கிவிட்டாள். அவளருகே சென்றவன் தான் போர்த்தியிருந்த மேல் துண்டையும், மாயோனுக்கு அணிவிக்கயிருந்த பட்டுத்துகிலையும் அவள்மேல் எறிந்துவிட்டு விடுவிடுவென்று நடந்தான். சற்றுத் தொலைவு சென்றபின் சற்றே நின்று நிதானித்து அவளைத் திரும்பி நோக்கினான். நன்றியும், அன்பும் ததும்பிய பார்வையுடன் இவனை நோக்கினாள். சிநேகத்தின் பூக்காலம் விழிவழியே மலரத் தொடங்கியது.

வெண்மழைத் தூறல் செந்நிலமாம், முல்லை நிலத்துடன் இரண்டறக்கலந்தது அந்த கார்காலை வேளையில். கார்கால மழை சற்றே ஓய்ந்திருந்த உச்சிப்பொழுது, கான்யாறு கோவில் புறத்தே சுழித்துக் கொண்டு பிரவாகமெடுத்தது. கோவில் முன்றில் விட்டுக் கீழே இறங்கினான், ஸ்ரீமன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் கொஞ்சமாய் வெளுத்திருந்தது. மெல்லத் தன் வீடுநோக்கி நடக்கத் தொடங்கியபோது அவளின் நினைவு மயிற்பீலியின் மென்மையான தொடுதலாய் வருடியது. என்ன துணிச்சலான பெண்! தூரத்தேயிருந்த ஆயர்பாடியின் ஏறுகோட்பறை ஒலி அந்தக் கானகம் முழுவதும் ஊடுருவி எங்கும் பூம்பூம்.. பூம்பூம்பூம் ஒலியால் அதிரவைத்தது. வீரவிளையாட்டைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளையும்தான். பல கல் தொலைவிலும் மணம்வீசி மயக்கும் பிடவ நறுமலர்கள் நிறைந்த ஆயர்பாடியின் காட்டுவழி. அங்கொன்றும், இங்கொன்றுமாய்க் குருந்தமரங்கள். ஒரு மரத்தடியில் ஆவுரிஞ்சி கல்தூண். ஒரு இளங்கன்று ஆனந்தமாய்த் தன்முதுகை அதில் உரசிக்கொண்டிருந்தது. ஏறுகோட்பறையின் தாளத்திற்கு ஏற்பச் சன்னமாய் ஒரு பாடல் காற்றில் கரைந்து கானகத்தை மதுரமாய் நிறைத்தது.

குடக் கூத்தாடும் கண்ணனே! காயாம்பூ வண்ணனே!
குழல்கான கந்தர்வனே! என்னை ஆளும் என்னவனே!


அவளேதான்! அவளெதிரே சென்று நின்றான். கல்தூணை விடுத்துக் கன்று துள்ளி ஒடிவந்து அவன் முழங்காலில் முகம் வைத்துத் தேய்த்தது. இவள்வீட்டுக் கன்றும் நம்மோடு நட்பு பாராட்டுகிறதே! கிண்டியை நீட்டினான். வாங்கி பாலைப்பருகினாள். துளசி மாலை ஒன்றையும் கொடுத்தான். வாங்கித் தோளில் சாற்றிக் கொண்டாள்.

காலையில் அவன் கொடுத்த வெண்துகில்கள் ஒன்றில் குருந்தம் (எலுமிச்சை) பழங்களைக் கட்டியிருந்தாள். மற்றொன்றில் முதிரை தான்யங்களை முடிந்திருந்தாள். இரண்டையும் அவனிடம் நீட்டினாள். தலையசைத்து மறுத்தான். 'பெற்றுக்கொள்' என்று விழியாலேயே மிரட்டினாள். வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டான். அவள் ஆயர்பாடி நோக்கி நடந்தாள். அவனும் பின்தொடர்ந்தான். அவனைத் தொடர்ந்து இளங்கன்றும் ஒடியது. அங்கே, ஆயர்பாடியின் வெளிமுற்றத்தில், போருக்குச் செல்லாத இளம் பிள்ளைகள் ஏறுதழுவுதலில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீமன் நின்று ரசித்தான்.

அவ்வழியே, யானைப்பாகர்கள் இருவர், கொம்பன்களை வடமொழிச்சொற்களால் விரட்டிக்கொண்டு சென்றவர்கள், எழிலியும், மூமனும் நிற்பதைக் கண்டு பரிகாசப்பார்வை ஒன்றை வீசினர். ஒரு முரட்டு இளைஞன் பரிக்கோலை மூமனைநோக்கி எறிந்தான். இதைக்கண்ட எழிலி, மூமனை மராமரத்துப் பின்தள்ளிவிட்டுத் தன் இடையில் செருகியிருந்த குறுவாளை வீசிப் பரிக்கோலைத் தட்டிவிட்டாள். கீழே விழுந்த பரிக்கோலைப் பாய்ந்து எடுத்துக் குறி தவறாமல் கொம்பனை நோக்கி எறிய, அவ்யானை பிளிறிக்கொண்டு ஓடியது. பாகர்களும் அதன்பின்னே ஒடினார்கள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்தவற்றைக் கண்டு திகைத்து உறைந்துப் போனான், ஸ்ரீமன். இந்தப் பெண்ணுக்குள் இத்தனை வீரமா!! மெய்சிலிர்த்தான். அவனை அழைத்துக் கொண்டு தன் இல்லம் நோக்கி நடந்தாள். செஞ்சுடரெனச் செங்காந்தள் மலர்க்கூட்டம் ஒன்றைக் கடந்து செல்லும்போது காலையில் அடித்தச் சீழ்க்கையை அவள் மறுபடியும் எழுப்ப, கீழ் உதட்டைக் கடித்துத் தன் புன்முறுவலை அடக்கிக் கொண்டான்.

அவள் வீட்டுத் திண்ணையில் சிறுமியர் கூடி கண்ணனைப்பாடி, குரவைக் கூத்தாடினர். வீட்டின் உள்ளே பெண்டுகள் தயிர் கடையும் மத்தின் ஒசை ஆய்ச்சியர் குரவைக்குத் தாளமாய் அமைந்தது. அப்போது மெல்லிய சிறு தூறலாய்ப் பெயல் பொழிய, தன் வீட்டு மரக்குடையை அவனிடம் நீட்டினாள். மரக்குடையைப் பிடித்துக் கொண்டு தன் புறப்பாடி நோக்கி நடந்தான். மழை அடர்த்தியாய்ப் பொழிய, பெரும் காற்று மழைத்துளிகளைப் பூத்தூவலாய்ச் சிதறடிக்க, கார்கால உச்சிப்பொழுது அழகாய்க் கடந்தது முல்லை நிலத்தில்.

பெரும்மழைக் காலத்தின் அந்திமாலைப் பொழுது, ஆவணித் திங்கள் மாயோன் திருவோண நன்னாள் அந்திவிழா அன்றைக்கு. மின்னலை எள்ளி நகையாடின நெய்விளக்குகளின் கண்சிமிட்டல்கள். நெல்லும், முல்லையும் தூவி, தெய்வமடை (படையல்) படைத்து வழிபட்டனர், ஆயர்பாடி மக்கள். பெருமுது பெண்டிர் விரிச்சி (நற்சொல்) கேட்கச் சென்றனர். இடிமுழக்கத்துடன் பெயல் பொழிய, அதற்கு இசைந்து மகிழ்ந்தபடியே முல்லைக்கொடிகள் மென்காற்றில் மழைச்சாரலின் தாளகதிக்கு ஏற்ப ஆனந்த நர்த்தனமாடின. நெருங்கிப் பூத்த காயாம்பூக்கள் மழைத்துளிகளைத் தம் இதழ்களில் ஏந்தின. நட்சத்திரப் பூக்கள் மண்ணில் மலர்ந்தாற் போல் வெண்காந்தள்கள் மலர்ந்திருந்தன. மழை வில்லின் அழகை, வாத்சல்யத்தை மண்ணில் கொண்ட அந்த முல்லை கானகம் முழுவதும் எங்கு நோக்கினும் மனோகரமாய் இருந்தது. முறுக்குண்ட கொம்பினை உடைய கலைமான் தன் மடமானுடன் கானகத்தினுடே ஒடி விளையாடியது. தன்னோடு அணைத்தபடியே முல்லையாழில் சாதாரிபண் வாசித்த எழிலி, மாயோன் கோவில் மணியொலி கேட்டு எழுந்தாள். அவள் கோவிலை அடைந்தபொழுது திருஅந்திவிழா நடந்து முடிந்துவிட்டிருந்தது. நெல்லையும், முல்லை பூக்களையும் தூவி வழிப்பட்டாள்.

மரத்தூண் மறைவில் நின்று இவளை கவனித்த ஸ்ரீமன் “முகில் மகளே” என்றழைத்தான். தெய்வமடையை வாழையிலையில் வைத்து அவளிடம் கொடுத்தான். பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள். அவனும் வெளியே வந்தான். கோவிலை அடுத்த பசும்புதரில் மின்மினிப் பூச்சிகள் வட்டமடித்துப் பறந்தன. அவற்றை வாயில் கவ்விய கன்னல் குருவிகள் அருகே மரக்கிளையில் சுரைக்குடுவை போன்று தொங்கிய கூடுகளின் உள்ளிருந்த மண்கட்டியின் மீது மின்மினிகளை ஒட்டவைத்து இருளை விரட்ட விளக்கேற்றின. அவனும், அவளும் அங்கு தொங்கிய கூடு விளக்குகளை ரசித்தபடியே நின்றனர். மின்னல் ஒளியில் பொன்தூவலாய்ப் பெருமழை பொழிய, சிறுபொழுது மிக ரம்மியமாய்க் கடந்தது.

மேற்கண்டவை, காலை, உச்சி, மாலை மூன்று வேளைகளில் முல்லை நில வாழ்க்கையின் சுகமான கற்பனை. தலைவன் போருக்குச் சென்றுள்ளான். தலைவி அவனை நினைத்து வருந்துகிறாள். இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இதுவே முல்லைத் திணை ஒழுக்கம். இதை மீறியுள்ளேன். போருக்குச் செல்லாதவர்களின் முல்லை வாழ்க்கையைக் கற்பனையில் கண்டேன். காதலும், வீரமும் தலைவன் தலைவிக்கு மட்டுந்தானா? மற்றவர் வாழ்வில் காதலும், வீரமும் இல்லையா? காடுசார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் வீரமிக்கவர்களாய்த்தான் இருந்திருப்பார்கள். இங்கே காதலர்களுக்குப் பெயர் சூட்டி உள்ளேன். அடுத்த மரபுமீறல் இது. எழிலியும், மூமனும் சாதாரண முல்லைநில மக்கள். இவர்களைச் சார்ந்தே முல்லைத்திணையை வர்ணித்துள்ளேன்.

இத்தகைய மரபுமீறலுக்குக் காரணமாய் அமைந்தது நப்பூதனார் பாடல். இதுகாறும் வாளேந்திப் போருக்குச் சென்ற மகளிர் பற்றி நான் படித்ததில்லை. முல்லைப்பாட்டு போர்க்களம் சென்ற வீரமகளிரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது ஒரு வரலாற்றுச் செய்தியே! என்ன, நப்பூதனார் அப்பெண்கள் பெயரை குறிப்பிடவில்லை. அதனாலென்ன? முகமும், முகவரியும், பெயரும் இல்லாவிட்டால் என்ன? எழிலி, முகிலி, ராதை, நப்பின்னை என்று நாம் பெயர் வைத்தால் என்ன? மரியாதை செய்தால் என்ன? போருக்குச் சென்ற வீரமகளிரில் மேற்கண்ட எழிலியும் ஒருவராக இருக்கலாம். இனி முல்லைபாட்டு.


வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட


முல்லைப்பாட்டு(43 - 49)


படைவீரர்களின் பாடிக்கு நடுவே நெடிய கோல்களை நட்டு, வண்ணத்திரையால் அரசனுக்குரிய தனிப்பாசறை அமைந்திருந்தனர். அப்பாசறையின்கண் குறுகிய கையணிகள் (வளையல்கள்) அணிந்த முன்கையினையும், சிறுமுதுகில் புரளும் கூந்தலையும் உடைய முல்லைநில மங்கையர் தம் இடையில் இரவைப் பகலெனச் செய்யும் ஒளிபொருந்திய உறுதியான பிடியுடைய வாளினைத் தம் இடைக்கச்சில் பூண்டிருந்தனர். அம்மங்கையர் விளக்கிற்கு நெய் ஊற்றப் பயன்படும் குழலால் நெய் ஊற்றி, நெடுந்திரியைத் தூண்டி விளக்கினை ஏற்றினர். (அவியும் தோறும்).

இந்த மங்கையர் யார்? மருத்துவம் பார்க்கவும், விளக்கேற்றவும், வீரர்களுக்குச் சமைத்துப் போட மட்டும் போர்க்களத்திற்குச் செல்லவில்லை என்பது திண்ணம். வாளை வீசவும், சுழற்றவும் போதிய பயிற்சி இல்லாமலா வாளை இடையில் பூண்டிருந்தனர்?

போர் முனையில் போராடவும், வாள்முனையில் வீரம் நிலைநாட்டவும் சங்ககாலப் பெண்டிர் பழகியிருந்தனர். முல்லைநிலத்து வீரமகளிர் ஆண்களுக்கு இணையாகப் போர்க்களம் சென்றனர் என்ற செய்தியைப் பறைசாற்றுகிறது, மேற்கண்ட முல்லை வரிகள். வீரச்சமர் புரிந்து, வரலாற்றில் தடம் பதித்து, வீரத்தின் விளைநிலமாய் வாழ்ந்திருக்கிறார்கள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமறக்குலத்தின் பரம்பரை இவர்கள்.

பரிசில் பெறும் பாணர்குலமல்ல நப்பூதனார். ஏனெனில், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் ஆவார். நப்பூதனார் கள் பருகிவிட்டு மேற்கண்ட வரிகளை எழுதவில்லை என்பதும் தேற்றம். மேற்கண்ட பாடலைப்போலத் தமிழரின் வீரவரலாறு நிறையச் சங்கப்பாடல்களில் பேசப்படுகிறது. கூர்ந்து அவதானிப்பது நம்கையில் உள்ளது. தமிழனுக்கா வரலாறு இல்லை? (வளையோசை குலுங்கக் குலுங்க, வாள் ஓசை டண், டண் என்று அதிர, வாட்போரிடும் வீரமங்கையரின் காட்சி மனத்திரையில் ஒடி என்னைக் களிவெறி கொள்ளச்செய்கிறது).

முல்லையே நீ பாடு
வீரத்திருமகளை!
வெற்றித்திருவை!


***

அன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதயவிழா
ரிஷியா



வாசகர் அறிமுகம்

வரலாறு.காம் மின்னிதழின் நெடுநாளைய வாசகியான திருச்சியைச் சேர்ந்த ரிஷியா அவர்கள் மாமன்னர் இராஜராஜர் மீது தீராக்காதல் கொண்டவர். இராஜராஜரைப் பற்றி ஒரு சிறு குறை சொன்னாலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பற்று வரக்காரணம், இராஜராஜரின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறமைகள் பற்றிச் செய்த ஆய்வின்போது கிடைத்த தகவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு. இயற்பியலில் முதுகலை, வாணிப நிர்வாகத்தில் முதுகலை (MBA), கணிணிப் பயன்பாட்டியலில் பட்டயப்படிப்பு எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டாலும், வரலாற்றின் மீது கொண்ட காதலால் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் பயின்று வருகிறார். பாரதிதாசன் பல்கலை வழங்கும் திருக்குறள் பட்டயப்படிப்பிலும் சேர்ந்திருக்கிறார். இராஜராஜரைப் பற்றி இவர் மேற்கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வுகள் மேலும் பற்பல புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்து அவரது பிரம்மாண்டத்தை உலகுக்கு அறிவிக்க வரலாறு.காம் மனதார வாழ்த்துகிறது.


--------------------------------------------------------------------------------


இனிக்கட்டுரை...

இராஜராஜீசுவரம். நினைத்தாலே தமிழ்மனம் பூரிக்கும், தலை நிமிரும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் சரி, இன்று ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் சரி, இனிவரும் ஆயிராமாயிரம் வருடங்களுக்குப் பிறகும் சரி, எத்திசையும் புகழ்மணக்க விளங்கும் தமிழ் அணங்கின் வெற்றித் திருமகுடமாய் விளங்கும் கற்கோயில். காலத்தின் பக்கங்களில் தினம்தினம் ஓரு புதுக்கவிதையை வாரி வழங்கும் நித்யவினோதத் திருக்கோயில். (நித்யவினோதத் திருக்கோயில், ஏனென்றால் ஒவ்வொரு முறை காணும்போதும் விழியில் நுழைந்து, நெஞ்சில் நிறைந்து, கருத்தில் பதிந்து, மனதில் உறைந்து ஓரு புதுக்கவிதையைத் தருகிறது). எடுப்பித்தவர் நம் நித்யவினோதரான மாமன்னர் இராஜராஜசோழர்.

அன்று அவர் காலத்தில் சதயவிழா இராஜராஜீஸ்வரத்தில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கும்? சதயவிழா மட்டும்தான் கொண்டாடப்பட்டதா? மற்ற திருவிழாக்கள் என்ன என்ன கொண்டாடப்பட்டன? மகாரசிகரான அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எப்படி விழா எடுத்தார்கள்? என்மனம் பின்னோக்கிச் செல்ல விழைந்தது, இன்று நடக்கும் வைபவங்களை எல்லா கண்டபின்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்...

இராஜராஜீஸ்வரத்தில் நடைபெற்ற திருவிழாக்கள்:-

1. திருச்சதயத்திருநாள் : ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரம் அன்று விழா நடைபெற்றது. ஆக, வருடத்தின் 12 சதய நாட்களிலும் இராஜராஜீஸ்வரம் புதுமணம் காணும் மங்கையெனத் திருவிழாக்கோலம் பூண்டது.

2. ஸ்ரீஇராஜஜேஸ்வரமுடையார் ஆட்டை பெரிய திருவிழா : இது வருடம் ஓரு முறை நடக்கும் உற்சவம். (ஆட்டை - ஆண்டு). கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது.

3. சங்கிரமம் அல்லது சங்கிராந்தி : சூரியன் ஓரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதே சங்கிராந்தி (மாதப்பிறப்பு) எனப்பட்டது. ஆக, 12 மாதப்பிறப்பும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.

4. கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரம் அன்று, ஓரு நாள் உற்சவமாக இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாக்கள் நடக்கும் நாட்களில் உற்சவத் திருமேனிகளுக்கு, ஒரு நாளில் மூன்றுமுறை திருமஞ்சனம் பாங்குடன் நடைபெற்றது. பெரிய செண்பக மொட்டுக்கள், ஏலவரிசிகள் (ஏலக்காய்) மற்றும் இலாமிச்சை (ஓரு வகையான வாசனை வேர்) வேர்கள் ஆக மூன்று வாசனையூட்டும் பொருட்களால் திருமஞ்சன நீர் சுகந்த மணமூட்டபட்டது. இந்நீர் கொண்டு உற்சவத் திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை வேதிக்கூறுகளைக் கொண்ட பொருட்கள். இவை மிகுந்த சுகந்த நறுமணம் தரக்கூடியவை. இன்றோ, 47 வகையான பொருட்கள் கொண்ட பேரபிஷேகப்பட்டியலால் நம் இராஜராஜீஸ்வரமுடையார் மூச்சுத்திணறிப்போய் விடுகிறார். பின்னர், அபிஷேகப் பொருட்களெல்லாம் பெரிய பெரிய அண்டாக்களில் கொண்டுவரப்பட்டு, சண்டேஸ்வரர் திருமுன் முன்பாக வைக்கப்பட்டுத் தரையில் கால்பதிக்க இயலாதவாறு இரண்டாம் முறை அபிஷேகிக்கப்பட்டு நம்மைத் தலைதெறிக்க ஓடவைப்பது தனிக்கதை.

திருமஞ்சனநீரை வாசனையூட்ட வேண்டிய மூன்று பொருட்களையும் பெறுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. சிறுதனத்துப் பணிமகன் அருமொழிதேவவளநாட்டுப் புலியூர்நாட்டு முருகநல்லூருடையான் காடன்கணவதி உடையார் 56 காசு பொலிசையூட்டாகத் (வைப்புநிதி போன்றது) தஞ்சாவூர்க் கூற்றத்துப் புறம்படி திரிபுவனமாதேவி பேரங்காடி வணிகர்கள் சமூகத்திடம் வழங்கியுள்ளார். அவ்வணிகர்கள் 7 காசை வட்டியாகத் தரவேண்டும். வருடந்தோறும் இந்த 7 காசைக் கொண்டு செண்பகமொட்டுக்கள், ஏலவரிசிகள் திருமஞ்சனநீருக்குப் பெறப்பட்டன. மேலும், வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு மிறைக்கூற்றத்துப் பிரம்மதேய இராமனூர் சபையார் 29வது ஆட்சியாண்டு முதல் 30 காசைப் பொலிசையூட்டாகப் பெற்றுக்கொண்டு, வட்டியாகத் தரும் மூணேமுக்கால் காசிற்கு இலாமிச்சைவேருக்கு ஆன செலவுகளைச் செய்யவேண்டும் என்று நிவந்தம் அளிக்கப்பட்டது.

திருவிழா என்றால் மேளதாளம் இல்லாமலா? அதற்கும் நிவந்தம் அளிக்கப்பட்டது. இராஜேந்திரசிங்கவளநாட்டு மண்ணிநாட்டு நாட்டார்மங்கலத்துக் கடிகையான், உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர உடையார்க்குத் திருவாய்க்கேள்வி செய்யும் ராஜகேசரி கோதண்டராமனான ஜெயங்கொண்ட சோழகடிகைமாராயன் 29வது ஆண்டுவரை பொலிசையூட்டுக்காக 40 காசு வழங்கியுள்ளார். ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 40 காசினை வருடந்தோறும் செலுத்தவேண்டும். அதில் அரைக்காசு வீதம், திருப்பறை அடிக்கும் கடிகையார் ஐவர் ஆட்டைதிருவிழா கொடியேற்று நாளில் பறை கொட்டுவதற்கு கூலியாகப் பெற்றுக்கொண்டனர். மேலும், ஆடவல்லான் திருச்சுற்று வைபவத்தின் போதும் பறைகொட்டுவதற்கு அரைக்காசு வீதம் 5 மேளக்காரர்களும் பெற்றுக்கொண்டனர். ஒருவேளை, முந்தைய ஆட்டைத் திருவிழாவின்போது பறைகொட்டியவர் கிடைக்கவில்லை என்றால், வேறு ஒருவர் இரு உற்சவங்களின்போதும் பறைகொட்டி ஒருகாசு வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிவந்தமளிக்கப்பட்டது.

அன்னமிடல் என்பது அந்நாளில் இயல்பாய் நடைபெற்ற ஒரு தர்மவழக்கமாக இருந்துள்ளது. (இன்று போல் புகைப்படம் எடுத்து கொள்வதற்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட சடங்கல்ல). இராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர சதயவிழாவின் போதும், வருடாந்திர ஆட்டைத் திருவிழாவின் போதும், சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர் என்று பெயர் குறிப்பிடயியலாத (கல்வெட்டு வரிகள் சிதைந்துள்ளன) ஒரு பெருமகனார் நிவந்தமளித்துள்ளார். 25 கலம் நெல் ஒரு வருடத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு குறுணியும், 2 நாழி நெல்லும், ஆடவல்லான் என்னும் அளவையால் அளந்து சிவயோகிகளுக்கு ஒரு வேளை உணவிற்காகக் கொடுக்கப்பட்டது. திருவிழா நடந்த அத்தனை நாட்களிலும் 240 சிவயோகிகள் வயிறார உண்ண உணவளிக்கப்பட்டது.

பொலிசையூட்டாக 100 காசுகள் இதற்காகப் பெற்றுகொண்டவர்கள் நித்தவினோத வளநாட்டு வெண்ணிக்கூற்றத்துப் பிரம்மதேயத்துப் பெருநங்கைமங்கலத்துச் சபையார். பெற்றுக்கொண்ட பொலிசையூட்டுப் பணத்திற்கு அவர்கள் வட்டிவிகிதமாய் ஒரு காசிற்கு மூன்று குறுணி நெல் வருடந்தோறும் அளிக்க கட்டளையானது.

சூரியன் இருக்கும் திசைநோக்கி முகம் திருப்பும் சூரியகாந்தி மலரெனப் பல பெருந்தனத்து அதிகாரிகள் அன்று செயல்பட்டுள்ளனர். யதா ராஜக: ததா சேவக: என அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையாருக்கு ஸ்ரீகாரியம் செய்த பொய்கை நாடுகிழவன் ஆதித்தன்சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். இவர் திருவிழாக்களின்போது இறைத்திருமேனிகளுக்குத் திருவமுது படைப்பதற்கான நிவந்தம் அளித்துள்ளார். பொலிசையூட்டாக 78 காசுகள் கொடுத்துள்ளார். இக்காசு ஒன்றுக்கு வட்டியாக மூன்று குறுணி நெல் வருடந்தோறும் தஞ்சைப் பெரிய பண்டாரத்தில் சேர்க்க வேண்டும்.

என்னென்ன திருவமுது படைத்தார்கள் என்றால், அப்பக்காய்க் கறியமுது, கைக்கறியமுது (பழங்களால் ஆனது), பொரிக்கறியமுது, புளியங்கறியமுது ஆகியன. இவற்றைச் சமைக்கத் தேவையான போனகபழவரிசி, பூரிநெல்லு, பருப்பு, மிளகு, கடுகு, சர்க்கரை, ஜீரகம், கொள்ளு, நெய், தயிர், உப்பு, புளியங்காய்கள், பழம் எனப் பலதும் வட்டி நெல்லிற்கு இணையாகப் பெறப்பட்டன. அமுதைப் படைப்பதற்கான வாழைக்குருத்து இலைகள், அடையக்காய் (பாக்கு), வெள்ளியிலை (வெற்றிலை) எல்லாம் பெறப்பட்டன. திருவமுது சமைப்பதற்கான விறகுக்கட்டைகள் பெறவும் வட்டிநெல் நிவந்தமளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டின்போது தூபமேற்ற உரியுஞ்சிதாரி எனப்பட்ட தோலுடைய தூபப்பண்டம் உபயோகிக்கப்பட்டது. அதைப் பெறுவதற்கும் ஒரு நாழிநெல் ஒரு காசிற்கு வட்டியாகப் பண்டாரத்தில் வைக்கப்பட்டது.

திருவிழாக்களின்போது ஸ்ரீஇராஜராஜீஸ்வரமுடையாருக்கும், தட்சிணமேரு விடங்கருக்கும் விளக்கேற்றவும், தூபமிடவும் வேண்டுமல்லவா? தீபமேற்றக் கற்பூரங்களே உபயோகிக்கப்பட்டன. தீபம், தூபம் ஏற்றவும், திருவமுது படைக்கவும் மொத்தம் 94 காசுகள் தஞ்சைப் பண்டாரத்தில் பெருமகனார் ஆதித்தசூரியனால் பொலிசையூட்டாக வைக்கப்பட்டன. இப்பொலிசையூட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்துப் பிரம்மதேயப் பெருநங்கைமங்கலத்துச் சபையார், வட்டியாக நெல்லும் காசும் வருடந்தோறும் கொடுக்கக் கட்டளையானது.

இவ்வாறாக, அன்று ஸ்ரீஇராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்கள் களைகட்டின. அன்றுமுதல், இன்றுவரை திருச்சதயவிழா தவறாமல் நடைபெற்று வருகிறது. (என்ன, பல வேறுபாடுகள் உள்ளன.) சந்திர ஆதித்தவர் உள்ளவரை இந்தத் தர்மம் நடக்கக்கடவது என்று கல்லில் வெட்டிச் சென்றுள்ளர்கள். ஆதலால், சந்திர ஆதித்தவர் உள்ளவரை திருசதயத் திருநாள் இன்றும், என்றென்றும் கொண்டாடப்படும்.

பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரத்தாண்டு இராஜராஜ சோழனின் புகழ் நிலைக்க வேண்டும்.

தமிழ் உள்ளவரை, தமிழ்மண் உள்ளவரை.

நிலவு உள்ளவரை, பிரபஞ்சம் உள்ளவரை.

ஆதித்தன் உள்ளவரை, பொதிகைத் தென்றல் உள்ளவரை.