Saturday, November 20, 2010

கார்த்திகையில் கார்த்திகை நாள்

முழு நிலவு நாளில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் அடிப்படையில் மாதங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சித்திரை நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் (சித்திரா பௌர்ணமி) அமைந்தால் அந்த மாதம் [மதி (நிலவு) --> மாதம்] சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் அமைந்தால் அந்த மாதம் வைகாசி (வைசாகி --> வைகாசி). அப்படியே ஒவ்வொரு மாதத்திற்கும் பார்த்துக் கொண்டு வந்தால் கார்த்திகை நட்சத்திரத்தில் முழு நிலவு அமையும் மாதம் கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் தீபத்திருநாள் என்றும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விளக்கீடு என்னும் இந்தத் தீபத்திருநாள் பெரும் கொண்டாட்டமாக இருந்தது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன.

திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும் இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.


பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?

ஏது பெருமை? இன்றைக்கு என்ன?

சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும் பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் இந்த நாள்.



மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை! அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.

நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார் நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார் திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!

அப்படியே செய்கிறேன்! இதோ வாழ்த்துகிறேன்!



வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்.



எதிரிகளுக்கு காலன் ஆகிய பரகாலன் வாழ்க! கலியின் கொடுமையைக் குறைக்கும் கலிகன்றி வாழ்க! திருக்குறையலூரில் வாழும் தலைவன் வாழ்க! மாயோனை தனது வாளால் மிரட்டி அவனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்ற திருமங்கை மன்னனின் தூய்மையான சுடர் விடும் வேல் வாழ்க வாழ்க!

நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமய
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே


அது மட்டுமா?! பரகாலன் பாடிய செந்தமிழ்ப் பனுவல்கள் நெஞ்சில் இருக்கும் அறியாமை என்னும் இருளைக் கடிந்து நீக்கும் தீபம்! எது செய்தாலும் எளிதில் அடங்காத, என்றைக்குத் தொடங்கியது என்று அறியாத பிறப்பு இறப்புச் சுழல் என்னும் கொடிய நஞ்சினை நீக்கும் நல்லதொரு அமுதம்! பழந்தமிழ் இலக்கணம் பேசும் ஐந்து துறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்த இலக்கியம்! வேதங்களில் சாரம்! வேற்று சமயங்கள் என்னும் பஞ்சுக்குவியல்களை அழிக்கும் அனலின் பொறி!


எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!


இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கையாழ்வாரின் பனுவல்கள் என் நெஞ்சத்தில் எப்படி தங்கும்? எங்கள் கதியான இராமானுசமுனியே! எங்களது ஐயங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்ட தவத்தோர் தலைவனே! புகழ் பொங்கும் திருமங்கைமன்னன் தந்த ஆயிரம் மறைகளும் தங்கும் மனத்தை நீயே எனக்குத் தரவேண்டும்!

**

திருமங்கை ஆழ்வாருக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு. எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த ஆழ்வாருக்கு உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்). முருகனுக்கும் இவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்).

Tuesday, November 09, 2010

முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது


சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.

இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.

கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.

தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.

மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.

இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.

அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.

தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.

துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.

பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.

முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.

சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, November 02, 2010

இன்னுமா சீருடை கொடுக்கிறீர்கள்?

இந்த வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது இயன்ற வரையில் ஏழை மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வந்தோம். அந்த உதவிகளைப் பற்றி 'மதுரைக்குப் போகலாமா', 'பாட்டி படித்த பள்ளி', 'கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு' என்ற தலைப்புகளில் எழுதியிருந்தேன்.

அந்த உதவிகள் செய்வதற்கு சீனா ஐயா பெரும் துணை புரிந்தார். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், நான் கேட்ட ஒரே மாதத்தில், உதவி பெறத் தகுதியான பள்ளிகளையும் மாணவர்களையும் கண்டறிந்து நாங்கள் மதுரை சென்று சேருவதற்கு முன்னரே ஒரு பட்டியல் தந்தார். மதுரையில் இருக்கும் போது சீனா ஐயா தந்த பட்டியலில் உள்ள பலருக்கும் நேரில் சென்று உதவிகள் செய்ய முடிந்தது. வேறு பயணத்திட்டங்கள் இருந்ததாலும் பெங்களூருவில் இரு வாரம் பணிக்காகச் செல்ல வேண்டி இருந்ததாலும் பட்டியலில் இருந்த அனைவருக்கும் நேரில் சென்று உதவ முடியவில்லை. அதனால் எங்கள் சார்பாக சீனா ஐயா நேரம் கிடைக்கும் போது பட்டியலில் மீதமிருந்த பள்ளிகளுக்குச் சென்று உதவி புரிய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு பணத்தை அவரிடம் தந்தேன். பிறருக்கு உதவி செய்வதில் முன் நிற்கும் ஐயாவும் அப்படியே செய்தார்.

சென்ற செப்டம்பர் மாதம் ஐயாவின் திருமண நாளன்று உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்பட்டி, நடுமுதலைக்குளம் ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகளும், இன்னொரு பள்ளிக்கு ஒலிப்பெருக்கி மின்னணுக்கருவிகளும் எங்கள் சார்பில் வழங்கியிருக்கிறார். ஐயாவிடம் இருந்து இந்தத் தகவல் எனக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. பதிவில் இடாமல் காலம் தாழ்த்தியது நான் தான். ஐயா சரியான காலத்திற்குள்ளாகவே சீருடை வழங்கிவிட்டார் - அதனால் இந்த இடுகையின் தலைப்பு தவறு! :-)

பதிவர் நண்பர் ஜெரி ஈசானந்தன் ஐயாவையும் அம்மாவையும் அழைத்துச் சென்று இந்தப் பணியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர் எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம். சில படங்கள் இங்கே இடுகையிலேயே உங்கள் பார்வைக்காக.









ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நண்பர் ஜெரிக்கும் மிக்க நன்றி.