Thursday, December 21, 2023

பகல் பத்து உற்சவத்துல என்ன செய்வாங்க?

 'குமரா, பகல் பத்து இராப்பத்துன்னு 20 நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள், மொத்தம் 21 நாள் திருவிழா சரியா?' 


'மாதவா. ஒரு சிறு திருத்தம் மட்டும் சொல்றேன். பகல்பத்து நீ சொன்னது போல வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் வரும் பத்து நாட்கள். இராப்பத்து பத்து இரவும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கி தொடங்கிறும்'


'ஓ அப்படியா. அப்படின்னா 21 நாள் கணக்கு எப்படி?'


'இராப்பத்து பத்து நாளும் முடிஞ்ச பிறகு 21ம் நாள் பகல் முழுக்க இயற்பா, சாற்றுமுறைன்னு கடைசி நாள் திருவிழா நடக்கும்'


'ஓகே சரி தான். ஏன் இவ்வளவு விரிவா 21 நாள் உற்சவம் நடத்துறாங்க?'


'வேதத்துக்கு சமமான நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும் கேட்டு ரசிக்கணும்னு பெருமாளுக்கு ஆசை. அதனால இந்த 21 நாள் திருவிழா. திருவத்யயன உற்சவம்ன்னு சொல்லுவாங்க. அத்யயனம்னா என்னன்னு தெரியும்ல?'


'வேதம் படிக்கிறது தானே?'


'ஆமா. அதை வேத அத்யயனம்ன்னு சொல்லுவாங்க. வேதத்துக்கு சமமான ஆழ்வார் பாசுரங்களையும் திராவிட வேதம்னு சொல்லுவாங்க. இந்த திராவிட வேதத்தை உட்கார்ந்து ஆனந்தமா ரசிக்கணும்னு விதி'


'ஆமாம்பா. நானும் பாத்துருக்கிறேன். வேதம் சொல்றப்ப நின்னுக்கிட்டு சொல்றவங்க, பாசுரம் சொல்றப்ப உக்காந்துருவாங்க'


'ஆமா. பெருமாளும் உக்காந்து தான் பாசுரம் எல்லாம் கேப்பாரு. ஏன்னா பாசுரங்களோட இனிமை அப்படி'


'ஆமாம் குமரா. இனிமையான தமிழ் தான் பாசுரங்கள் எல்லாம். 


சரி. 21 நாள்ல நாலாயிரம் பாசுரங்கள் பாடுவாங்கன்னு சொன்னியே. அதைப் பத்தி சொல்லு'


'சொல்றேன். பகல்பத்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 200 பாசுரம்ங்கற கணக்குல முதல் இரண்டாயிரம் பாசுரங்களைப் பாடுவாங்க. 


பெரியாழ்வார் பாடுன திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

கோதை நாச்சியார் பாடுன திருப்பாவை, நாச்சியார் திருமொழி 

குலசேகர ஆழ்வார் பாடுன பெருமாள் திருமொழி 

திருமழிசை ஆழ்வார் பாடுன திருச்சந்த விருத்தம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடுன திருப்பள்ளியெழுச்சி, திருமாலை 

திருப்பாணாழ்வார் பாடுன அமலனாதிபிரான் 

மதுரகவி ஆழ்வார் பாடுன கண்ணிநுண்சிறுத்தாம்பு 

திருமங்கையாழ்வார் பாடுன பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் 


இந்த எல்லா பிரபந்த பாசுரங்களையும் பாடுவாங்க. இதெல்லாம் சேர்த்து முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம்ன்னு சொல்லுவாங்க.'


'திருப்பல்லாண்டு, திருப்பாவை கேட்டிருக்கேன் குமரா. இவ்வளவு பாசுரங்களைப் பத்தி இன்னைக்கு தான் கேள்விப்படறேன்'


'ஒன்னு கவனிச்சியா? நிறைய பிரபந்தங்களுக்கு திருமொழின்னு பேரு இருக்கு. அதனால இந்த பகல் பத்து உற்சவத்துக்கு திருமொழித் திருநாள்ன்னும் ஒரு பேரு இருக்கு'


'பொருத்தமான பேரு தான். அப்படின்னா இராப்பத்து உற்சவத்துக்கும் இன்னொரு பேரு இருக்கணுமே'


'இருக்கே!'


(தொடரும்)

Monday, December 18, 2023

21 நாள் வைகுண்ட வாசல் தொறப்பாங்களா?

 'குமரா. சொர்க்க வாசலுக்கும் பரமபத வாசலுக்கும் வித்தியாசம் சொன்னே. ஆனா இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி இல்லையே. அதைப் பத்தி சொல்லு'


'மாதவா. வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு வைகுண்ட வாசல் தொறப்பாங்கங்கறது சரி தான். ஆனா அன்னைக்கு மட்டும் இல்லை, இருபத்திவொரு நாள் தொறப்பாங்கன்னு தெரியமா?'


'அப்படியா?! தெரியாம போச்சே. வைகுண்ட ஏகாதசிக்கு கோவில்ல கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். 21 நாள் தொறப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டம் இல்லாத நேரம் கோவிலுக்கு போயிருப்பேனே'


'இப்ப என்ன. இனிமே கூட்டம் இல்லாத நேரம் போயி வைகுண்ட வாசல் தொறக்குறத தரிசனம் பண்ணு'


'சரி தான். இன்னும் விவரம் சொல்லு. அப்பத்தானே அத செய்ய முடியும்'


'சொல்றேன் சொல்றேன். வைகுண்ட ஏகாதசிக்கு பத்து நாள் முன்னாடி இருந்து, அதாவது அமாவாசைக்கு மறு நாள்ல இருந்து, ஒவ்வொரு நாளும் காலையில வைகுண்ட வாசல் தொறப்பாங்க. வைகுண்ட வாசல் வழியா பெருமாள் வெளியே வந்து, கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற பந்தல்லயோ மண்டபத்திலேயோ உக்காந்து, எதிர்ல ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எல்லாரும் உக்காந்திருக்க, பாசுரம் கேப்பாரு. இந்த பத்து நாளை என்ன சொல்லுவாங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்'


'நீ சொல்றது பகல் பத்து உற்சவமா?'


'ஆமா. பகல் பத்து உற்சவம் தான். 


ஆழ்வார்கள் பாடுன நாலாயிர திவ்ய பிரபந்தந்துல இருந்து பாசுரம் எல்லாம் பாடுவாங்க'


'நாலாயிரம் பாட்டும் ஒவ்வொரு நாளும் பாடுவாங்களா என்ன?'


'இல்லை. மொத்தமா 21 நாளுக்கும் சேர்த்து நாலாயிரம் பாடுவாங்க'


'ஓ சரி சரி. நீ பகல் பத்து உற்சவம் பத்தி சொன்னே. அதே மாதிரி இராப்பத்து உற்சவமும் இருக்கு. சரிதானே'


'ஆமா. உற்சவத்தோட பேரு சொல்ற மாதிரி பத்து நாள் இரவு பெருமாள் பரமபத வாசல் வழியா வந்து, ஆழ்வார்கள் ஆசார்யர்களோட உட்கார்ந்து பாசுரம் கேப்பார்'. 


'சரி தான். வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி பத்து நாள், பின்னாடி பத்து நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள். ஆக மொத்தம் 21 நாள். சரியா?'


'அது தான் இல்லை'


(தொடரும்) 

Thursday, December 14, 2023

சொர்க்க வாசலா? வைகுண்ட வாசலா?

 'வா குமரா! என்ன இந்த பக்கம்?'

'கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னைப் பாத்துட்டு போலாம்னு'
'என்ன விஷேசம்?'
'ஒண்ணுமில்ல. வைகுண்ட வாசல் திருவிழா நடக்குதுல்ல. அதான்'
'வைகுண்ட ஏகாதசிக்குத் தானே சொர்க்கவாசல் தொறப்பாங்க?'
'மாதவா. அது சொர்க்க வாசல் இல்ல. வைகுண்ட வாசல்'
'ரெண்டும் ஒண்ணு தானேப்பா?!'
'இல்லை. புண்ணியம் செஞ்சவங்க போறது சொர்க்கம். பாவம் செஞ்சவங்க போறது நரகம்'
'அதான் தெரியுமே?! வைகுண்டம்ங்கறதும் புண்ணியம் செஞ்சவங்க போறது தானே? அப்ப அத சொர்க்கம்ன்னு சொன்னா தப்பா?'
'ஒரு வகையில சரி தான். ஆனா, இன்னொரு விதத்துல சொன்னா வித்தியாசம் புரியும்'
'அப்ப சொல்லு!'
'இந்திரனும் தேவர்களும் இருக்கிறது சொர்க்கம். நாம செஞ்ச புண்ணியம் தீர்ந்தவுடனே நாம சொர்க்கத்துல இருந்து திரும்பவும் பூமியில அடுத்த பிறவி எடுப்போம்'
'சரி'
'வைகுண்டம் போறதுன்னா திரும்பி வந்து இன்னொரு பிறவி எடுக்கிறது இல்லை.
அங்கே தான் பெருமாளும், ஆதி சேஷன், கருடன், சேனைமுதலியார், ஆழ்வார் ஆசாரியர்கள் எல்லாரும் இருக்காங்க.
மோக்ஷம், முக்தின்னு சொல்றது இந்த வைகுண்டம் போறதத்தான்.
அங்கே போனா திரும்பி வர்ற கதை இல்லை.
ந புனர் ஆவர்த்ததே ந புனராவர்த்ததே ன்னு வேதம் பாடும். அப்படின்னா வைகுண்டம் போனவங்க திரும்பி வருவதில்லை; திரும்பி வருவதில்லைன்னு அர்த்தம்'
'அப்படியா?
அப்ப யாராவது காலம் ஆனா இப்படியாப்பட்ட இந்த பிரமுகர் வைகுண்ட பதவி அடைந்தார்னு போஸ்டர் அடிக்கிறாங்கள்ல. அந்த வைகுண்ட பதவின்னா என்ன?'
'அவர் காலம் ஆனதும் சொர்க்கம், நரகம் ரெண்டுக்கும் போகாம வைகுண்டத்துக்கு போகணும்ங்கறது இவங்க விருப்பம். அதத்தான் அப்படி சொல்றாங்க.
ஓம் சாந்தின்னு சொல்றதும் அது தான். சும்மா போறது வர்றதுன்னு இல்லாம இந்த ஆத்மா வைகுண்டம் போயி நிம்மதியா இருக்கட்டும்னு வேண்டிக்கிறது'
'சரிப்பா. இப்ப புரியுது.
ஆனா வைகுண்ட ஏகாதசி இன்னைக்கு இல்லையே? அன்னைக்குத் தானே வைகுண்ட வாசல் தொறப்பாங்க?!'
(தொடரும்)
- அன்பன் குமரன் மல்லி

கீதையும் அருச்சுனனும்

 'சுவாமி. அடியேன். தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்!'

'சொல்லும் பிள்ளாய்!'
'கீதையை எம்பெருமானிடம் நேரே கேட்ட அருச்சுனன் எம்பெருமானைப் பெற்றானா இல்லையா?'
'அருச்சுனன் பெருமாள் திருவடியை அடைந்தானா இல்லையா என்பதால் உமக்கு என்ன வந்தது?
கீதையைச் சொன்னவன் எல்லாருக்கும் பொதுவானவன். கீதையும் பகவானின் திருவாக்கு. இது இரண்டும் நிச்சயம்.
அவரவர் தமதமது அறிவு அறி வகை, அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு இருக்கும் ருசிக்கு ஏற்ப, கீதையிலிருந்து வெவ்வேறு பயன்களைப் பெறுகிறார்கள்.
கீதையிலிருந்து நன்மை பெற்றவர்களைப் பார்த்து நாமும் அதன் படி கீதையிலிருந்து நன்மை அடைய பார்ப்பதன்றோ நமக்கு ஏற்றது?
குளிர்ந்த தண்ணீர் எங்காவது இருந்தால், அதோ அந்த குளத்துக்கு உரியவன் அதில் நீர் குடித்தானா என்று கேட்காமல், நீர் குடித்துத் தாகம் தீர்ந்தவர்களைப் பார்த்து, அது போலே நாமும் தாகம் தீர்ப்பதன்றோ நல்லது?'
- ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களான நம்பிள்ளைக்கும் நஞ்சீயருக்கும் நடந்த உரையாடல் என்று திருவாய்மொழி விளக்கவுரையில் வரும் ஒரு நிகழ்ச்சி இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்

கீதையும் திருவாய்மொழியும்

 'ஸ்வாமி. அடியேன். ஒரு விண்ணப்பம்!'

'சொல்லவேண்டும்!'
'கீதையை அறிந்த ஒருவருக்கும் திருவாய்மொழி அறிந்த ஒருவருக்கும் என்ன வேறுபாடு?'
'இதனை அடியேன் சொல்லவும் வேண்டுமோ?
கீதையை அறிந்த ஒருவர் ஒரு அறிஞர் கூட்டத்தில் வந்து கீதையில் இருந்து ஒரு வார்த்தை சொன்னால், அவருக்கு என்ன பரிசாகக் கொடுக்கிறார்கள் என்று பார்த்துள்ளீரா?'
'உண்டு ஸ்வாமி. ஓர் உழக்கு அரிசி சன்மானமாகக் கொடுப்பார்கள்'
'அவர்கள் நிரந்தரமாக இருக்க ஓர் இடம் தருவார்களா?'
'இல்லை ஸ்வாமி'
'திருவாய்மொழி கற்றவர் அதில் ஒரு பாசுரம் விண்ணப்பம் செய்தால், ஸர்வேச்வரனுக்கு உகந்தவர் ஆன தேவர் முனிவர் எல்லாரும் புறப்பட்டு வந்து, தங்கள் தங்கள் இருப்பிடங்களை ஒழித்துக் கொடுத்து அவரை ஆதரித்து நிற்பார்கள்'
'எங்கு அதனைக் காணலாம் ஸ்வாமி'
'சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரங்களைப் பார்த்தாலே தெரியுமே!'
'அடியேன் தாசன்'
- திருவாய்மொழியின் விளக்கவுரையான ஈடு வியாக்யானத்தில் சொல்லப்பட்ட, 'நம்பி திருவழுதி நாடு தாசர்' என்ற ஆசார்யாருக்கும் ஒரு அன்பருக்கும் நடந்த உரையாடல் இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்.

Monday, April 03, 2023

எழுதாக் கற்பு

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!

- குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பார்ப்பன மகனே! இளைய பார்ப்பனனே!
செந்நிறமான பூக்களை உடைய முருக்க மரத்தின் வலிமையான நாரை (பட்டையை) களைந்து மென்மையாக்கிய தண்டு (கைக்கோல்) பிடித்த
தாழ்வாகக் கமண்டலத்தை பிடித்த
படிவர்கள் (முனிவர்கள்) உணவை உண்ணும்
பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பு எனப்படும் வேதத்தைக் (எழுதப்படாமல் ஆனால் கற்கப்படும்; கற்பு = கல்வி) கற்ற
உன் சொல்லில்
பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் திறமை உடைய மருந்து உள்ளதா? (இல்லையல்லவா?!)
(எனக்கு அறிவுரை கூறினால் அவள் மேல் நான் கொண்ட காதல் தீரும் என்று நீ நினைத்தது) ஒரு மயக்கமே! (மயலோ!)

பொருள் உரை: அன்பன் குமரன் மல்லி (ம. ந. குமரன்)