Wednesday, April 29, 2009

இன்றோ திருவாதிரை! எமக்காகவன்றோ ஆசாரியர் அவதரித்தார்!



வைப்பாய வான்பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே


நமது நற்கதிக்கு இறைவனாலேயே அனுப்பப்பட்ட பெரும் நிதி என்று நல்ல அன்பர்கள் தங்கள் மனத்தகத்தே எப்போதும் சேமித்து வைத்துக் கொள்ளும் எம்பெருமானார் இராமானுசனை, 'இந்த நீண்ட உலகத்தில் எங்குமே இவனைப் போன்ற தீவினைகளைச் செய்தவர் இல்லை' என்று சொல்லலாம் படிக்கு இருக்கும் நான் என்னுடைய வஞ்சகமான நெஞ்சத்திலும் வைத்து மூன்று வேளைகளிலும் வாழ்த்துகின்றேனே; இதனால் எம்பெருமானரது நீண்ட புகழுக்கு என்ன இழுக்கு ஏற்படுகின்றதோ?

(திருவரங்கத்து அமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி)



***

குறை நீக்கும் சாத்திரக் குணக்கடலே
உயர்வளிக்கும் உபநிடதக் கதியே
கதியென்றேன் கமலத் திருவடிகள்
சரணடைந்தேன் சங்கர குரு சரணம்


(தோடகாஷ்டகத்தின் முதல் சுலோகத்திற்கு அடியேன் செய்த மொழிபெயர்ப்பு)



***

இன்றோ திருவாதிரை எமக்காக
அன்றோ ஆசாரியர் அவதரித்தார் - குன்றாத
வான்போகம் தனை விட்டு மண்ணவரைக் கடைத்தேற்ற
சங்கர ராமானுசராய்.


சித்திரைத் திருவாதிரைத் திருநாளாகிய இன்று ஆதிசங்கரரின் திரு அவதாரத் திருநாள்; எம்பெருமானார் இராமானுசரின் திரு அவதாரத் திருநாள். அடியேன் ஆசாரியர் இருவரின் திருவடிகளிலும் தஞ்சம் அடைகிறேன்.

Sunday, April 26, 2009

ஏப்ரல் மே'யிலே பசுமை ஏன் இல்லே காஞ்சுப் போச்சுடா...

ஏப்ரல் மே'யிலே பசுமை ஏன் இல்லே காஞ்சுப் போச்சுடா
அட ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா
இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது

கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகுக் கிளிகள் எனது விழியில் வலம் வருது...

"ரொம்ப நாளாச்சு இந்தப் பாட்டைப் பாடி. கல்லூரியில படிக்கிறப்ப இந்தப் படம் வந்துச்சு. அப்ப மூணு நண்பர்களோட கலசலிங்கத்துல இருந்து சிவகாசிக்குப் போயி இந்தப் படத்தைப் பாத்தேன். இன்னும் அந்த ஒத்தை ரோசாப்பூவு கண்ணுக்கு முன்னாஅல நிக்குது. இப்ப அண்மையில இந்தப் படத்தோட பாட்டுகளை உன்குழல்ல பாத்தப்ப ஐய இந்த மூஞ்சி பாக்க சகிக்கலையேன்னு தோணிச்சு. ஆனா அந்தக் காலத்துல இடம் பொருள் ஏவல் எல்லாம் எங்க தெரிஞ்சது? எங்க பள்ளிக்கூட வாத்தியார் சொல்ற மாதிரி 'வத்தலோ தொத்தலோ **** போதும்'ங்கற மாதிரி தானே கண்ணும் கருத்தும் இருந்துச்சு.

அது ஒரு கனாக்காலம்ன்னு சொல்ல மனசு வரலை. இப்பவும் கனாக்காலத்துல தானே இருக்கோம். அந்தக் காலத்தை நினைச்சுப் பெருசா மூச்சு விடணுமா என்ன?

வெள்ளைவெளேர்ன்னு பெருசா காலணியைப் போட்டுக்கிட்டு பிரபுதேவா ஆடுனது இந்தப் பாட்டுல தானே? இந்த பாட்டு தான் அவருக்கு அறிமுகம்; இல்லை? நல்லா வளைஞ்சு வளைஞ்சு ஆடுவார். கல்லூரி விடுதி தொல்லைக்காட்சியில ஒளியும் ஒலியும் பாக்குறப்ப அந்த வளைஞ்சு நெளிஞ்ச ஆட்டத்தை ஈ உள்ள போறது கூட தெரியாம வாயத் திறந்து வச்சுக்கிட்டு பாத்தது நினைவிருக்கு. இப்பவும் விஜய் டீவியில புத்தம்புது மெட்டுக்கள்ல இளசுங்க வந்து ஆடறதை அப்படித் தானே பாக்குறீங்கன்னு இங்கண இடிக்கிறாங்க. ஒத்தை ரோசாப்பூவைக் கவனத்துல வச்ச காலத்துல இருந்து இப்ப ரொம்ம்ம்ம்ப முன்னேறி இத்தனூண்டு துணி கட்டியிருக்காங்களே அவுந்துருமோன்னு ஒரு கவனத்துல வச்ச கண்ணு வாங்காம பாக்குறோம்னு இவங்களுக்குத் தெரியுமா என்ன? நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைன்னு சிவகுமாரகுமாரன் கிடாரை எடுத்துக்கிட்டு வந்தாலோ எப்படி இருந்த எம்மனசு இப்படி மாறி போகிறதுன்னு வெற்றி ரவி வந்தாலோ இவங்க நல்லா வாய மூடிக்கிட்டு வச்ச கண்ணு வாங்காம பாக்குறது எங்களுக்குத் தெரியாதா என்ன?

என்னத்தையோ சொல்லத் தொடங்கி வேற என்னமோ பேசிகிட்டு இருக்கேன். இப்ப எதுக்கு இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துச்சு? வேற ஒன்னுமில்லைங்க. இந்தப் பட்டாம்பூச்சி வட்டாம்பூச்சின்னு ஒரு விருது வட்டமடிச்சுக்கிட்டு இருக்குல்ல; அதை பட்டர்பிரான் கோதையோட தோழர்பிரான் வன்தொண்டர் கண்ணபிரான் இரவிசங்கர் நமக்கு குடுத்திருக்காரு. இந்த வலைப்பின்னல் பதிவுகளை (நன்றி - பழமையைப் பேசுறவர்) நேரத்தோட எழுதித் தள்ளுறதுங்கறது இந்தத் தள்ளாத காலத்துல முடியுதுங்களா என்ன? தொடக்கக் காலத்துல நாளுக்கு குறைஞ்சது ஒன்னுன்னு இடுகை போட்ட காலம் எல்லாம் போயாச்சு. இப்ப குழந்தை குட்டிங்கன்னு வந்து மூத்தப் பதிவர் ஆகி ஒன்னும் எழுதுறதில்லை. வாரத்துக்கு ஒன்னாவது எழுதணும்ன்னு நினைச்சுக்கிட்டு இன்னைக்கி இதை எழுத ஒக்காந்தாச்சு.

சரி விருது குடுத்தவங்களுக்கு நன்றி சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்க வேண்டியது தான? அப்படியே செஞ்சுறலாம். அடுத்த வேலை அடுத்தவங்களுக்கு விருது குடுக்குறது தானே. இந்தாங்கப்பா... கண்ணபிரான் இரவிசங்கர், இராகவப்பெருமாள் ஜிரா கோரா, இலவசக் கொத்ஸ், எல்லோருக்கும் நல்லவர்/கெட்டவர் கோவிக்கண்ணன்,..."

"நிறுத்து நிறுத்து"

"என்னாத்துக்கு நிறுத்தணும்? இவிங்கள்லாம் யாருன்னு தெரியுமா? இவிங்களுக்கு விருது குடுக்காம வேற யாருக்கு குடுக்குறது?"

"எதுக்கு இவிங்களுக்கு விருது குடுக்கணும்?"

"கண்ணபிரான் இரவிசங்கரைப் பத்தி தனியா வேற சொல்லணுமா? ஒங்களுக்கே தெரியாதா?"

"நல்லா தெரியும். கேஆரெஸ்ஸூ வாரத்துக்கு ஒரு குண்டு போடறாரு. ஆனா இந்த ஜீரா ஒன்னுமே எழுதுறதில்லையே. அவருக்கு எதுக்கு விருது?"

"ஆமாம் தான். அவரு ஒன்னும் எழுதுறதில்லை தான். கள்ளியில பாலு கள்ளியில பாலுன்னு இன்னும் பொலம்பிக்கிட்டு தான் இருக்காரு. ஆனா எப்பவோ அவரு எழுதுனதெல்லாம் இன்னும் கண்ணுலயும் காதுலையும் சுத்துதே. அதுக்குத் தேன் அவருக்கு விருது"

"சரி தான். கொத்தனாருக்கு எதுக்கு விருது?"

"ஏனுங்க அவருக்கு என்ன கொறை? மாசத்துக்கு ஒரு தடவை குறுக்கெழுத்து ரீபஸ்ன்னு ஏதோ ஒரு போட்டி வைக்கிறாரே. அப்ப அப்ப பொதசெவிம்பாரு தேன். ஆனா அதுக்கு யாராச்சும் காப்பி ரைட்டுன்னு சொல்லிக்கிட்டு சண்டைக்கு வந்திருக்காய்ங்களா? இல்லியே. அதுனால அவருக்கு இந்த விருது குடுக்கலாம்"

"கோவி.கண்ணன்?"

"ஆகா. அவரைப் பத்தியும் தனியா சொல்லணுமா? கண்ணபிரான் இரவிசங்கரைப் போல இவரும் மகாஞானியாச்சே."

"மகாஞானியா? என்னப்பூ சொல்றீங்க?"

"ஆமாமுங்க. அவரைப் பின்பத்துறவங்க பட்டியலைப் பாத்தாலே தெரியலையா? அவரு ஒரு மகாஞானின்னு"

"ஏனுங்க அவரை திரும்பத் திரும்ப மகாஞானின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க? அவரு மேல பொறாமையா?"

"இப்புடி வெளிப்படையா சொல்லுவாய்ங்க. அதெல்லாம் இல்லீங்க. அவரு ஒரு பேரறிஞர் தானுங்க. அதைத் தேன் மகாஞானின்னு சொல்றேன்"

"அட விடுங்கப்பா. இதெல்லாம் பேசிக்கிட்டு. இவங்களுக்கு எல்லாம் ஏற்கனவே விருது குடுத்தாச்சு. அதனால தான் வேணாம்ன்னு சொல்றோம்ன்னு சொல்லுங்க"

"என்ன இவங்கள்லாம் ஏற்கனவே விருது வாங்கிட்டாங்களா? சொல்லவே இல்லை? நல்ல வேளை இப்பவாச்சும் சொன்னீங்க. அதுவும் இந்த கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே அவருக்கு ஒன்னுக்கு ரெண்டா விருது குடுக்கவே கூடாது; ரொம்பவே ஆடுவார். கேட்டா எங்க அக்கா ஆடச்சொன்னாங்கன்னு பழிய மதுரைக்குத் தெக்கால தள்ளிவிட்டிருவாரு. ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும் அவருக்கிட்ட.




இவிங்களை எல்லாம் விட்டுறலாம். இவிங்களை விட சிறப்பா இன்னும் நாலு பேரு இருக்காங்க. அவிங்களுக்கு இந்த விருதைக் குடுக்கலாம்.

1. கௌசிகர் தி.ரா.ச.

2. பெண்களூரு மதுரையம்பதி மௌலி

3. எழுத்தாளர் ஏகாம்பரியின் தோழி உஷார் ராமசந்திரன்உஷா

4. வண்ணப்படங்கள் கைலாஷி முருகானந்தம் ஐயா

***

பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

அட பாட்டைப் பத்தி ஒன்னும் சொல்லாம விட்டேனே. எங்க ஊருல அக்டோபர்ல இருந்து ஏப்ரல் வரைக்கும் பசுமை இல்லீங்கோ; மேயில இருந்து பசுமை வந்துரும். ஜூன் ஜூலையில ஊரெல்லாம் பச்சைபசேல்ன்னு இருக்கும்; கண்கொள்ளா காச்சிங்கோ. அதுவும் இந்த தீம் பார்க், வாட்டர் பார்க்கெல்லாம் போனீங்கன்னா இன்னும் அம்சமா இருக்கும்.

Wednesday, April 15, 2009

தமிழக வரலாற்றுக் குறிப்புகள்

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.

***

அரசர்கள்/அரசகுலங்கள்:

இரண்டாம் நூற்றாண்டு வரை: சேர சோழ பாண்டியர்களும் வேளிர்களும்.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை: களப்பிரர்கள்
ஏழாம்/எட்டாம் நூற்றாண்டு: பல்லவர்களும் பாண்டியர்களும்
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து: சோழர்கள்
1300 முதல் 1650: விஜயநகரப் பேரரசு/ நாயக்கர்
சிறிது காலம்: மராத்தியர்கள்
பதினேழாம் நூற்றாண்டிலிருந்து: ஐரோப்பியர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து: ஆங்கிலேயர்கள்

காலங்கள்:

சிந்து வெளி நாகரிகம்: 3300 பி.சி. முதல் 1300 பி.சி. வரை
இரும்பு காலம்: 1200 பி.சி. முதல் 300 பி.சி. வரை (அப்படியென்றால் சிந்து வெளி நாகரிகத்தினர் இரும்பினை அறியவில்லை என்று பொருளா?)

சேரப் பேரரசு: 300 பி.சி. முதல் 200 ஏ.டி.
சோழப் பேரரசு: 300 பி.சி. முதல் 1070 ஏ.டி.
பாண்டியப் பேரரசு: 250 பி.சி. முதல் 1345 ஏ.டி.

சாதவகனர்: 230 பி.சி. முதல் 220 ஏ.டி. (சிலம்பில் இவர்கள் நூற்றுவர் கன்னர் எனப்படுகின்றனர்)

குப்தர்: 280 ஏ.டி. முதல் 550 ஏ.டி.
விஜயநகரம்: 1336 முதல் 1646 வரை
கும்பனி அரசு: 1757 முதல் 1858 வரை
ஆங்கில முடியரசு: 1858 முதல் 1947 வரை

மற்றவை:

இறையனார் அகப்பொருள்: 10/11ம் நூற்றாண்டு; நக்கீரரால் இயற்றப்பட்டது. முத்தமிழ்ச் சங்கங்களைப் பற்றி பேசும் ஒரே இலக்கியம்/நூல்.

தொல்பொருள் ஆய்வுகள் தமிழகத்தில் மனிதர்களுக்கு மூத்த இனம் (ப்ரோடோ மனிதன்) 500,000 பி.சி.யிலிருந்து வாழ்ந்ததாகச் சொல்கின்றன. மனிதர்கள் 50,000 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆதிச்சநல்லூரில் 1000 பி.சியிலிருந்து தொடக்கக் கால தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் அரசர்களின் வரிசை: வேந்தர் --> அவர்களுக்குக் கீழே --> வேள்/வேளிர் --> அவர்களுக்குக் கீழே --> கிழார் --> அவர்களுக்குக் கீழே --> மன்னர்.

தக்காணம் மூன்றாம் நூற்றாண்டு பி.சியில் மௌரியப் பேரரசின் கீழ் இருந்தது; முதல் நூற்றாண்டு பி.சி. முதல் இரண்டாம் நூற்றாண்டு ஏ.டி வரை நூற்றுவர் கன்னர் (சாதவ கன்னர் - சாதவகனர்) தக்காணத்தை ஆண்டார்கள்.

அசோகரால் வைக்கப்பட்ட தூண்களில் (273 பி.சி. முதல் 232 பி.சி. வரை) சோழ, பாண்டிய, கேரளபுத்திரர்களின் பெயர்கள் இருக்கின்றன. அவர்கள் மூவரும் அசோகருடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார்கள்.

கேரளபுத்திரர்கள் என்று அசோகரின் தூண்கள் சொல்வதால் கேரளம் என்ற பெயர் தொன்மையானது என்று தோன்றுகிறது. சேரலம் என்ற பெயர் வடக்கே கேரளம் என்று திரிந்து தற்போது சேரலத்திற்கு உரிய பெயராக நிலை நின்றிருக்கலாம்.

கலிங்க அரசன் கரவேலனின் ஹதிகம்பா கல்வெட்டுகளில் 250 பி.சி முதல் 150 பி.சி. வரையில் இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணி பேசப்பட்டிருக்கிறது.

மலையாள மொழி தனது தனித்தன்மையை 9/10ம் நூற்றாண்டில் பெறத்தொடங்கியது.

பாண்டிய அரசன் ச்ரிமாறன் ச்ரிவல்லபன் 840ம் வருடம் ஆண்டிருக்கிறான். பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஆண்ட அரசன் இவன்.

இராஜராஜ சோழனின் ஆட்சி 985ல் தொடங்கியது.

ஹொய்சல மன்னன் விஷ்ணுவர்த்தனனின் காலம் 1118.

மாலிக் காபூர் மதுரைக்கு 1311ல் படையெடுத்து வந்தான்.

மதுரை சுல்தான் அரசு: 1311 முதல் 1371 வரை

விஜயநகர அழிவு: 1564 (சௌராஷ்ட்ரர்கள் மதுரைக்கு வந்த காலம். அப்படியென்றால் மதுரையில் சௌராஷ்ட்ரர்கள் ஏறக்குறைய 450 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்).

திருமலை நாயக்கர் 1659ல் இறந்தார்.

***

இக்குறிப்புகளில் ஏதேனும் தவறிருந்தால் சொல்லுங்கள்.

Wednesday, April 08, 2009

பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம் - கலியன் மிரட்டிய திருவிந்தளூர் பரிமளரங்கன்

“குமுதவல்லி. நண்பகல் பொழுது ஆகிவிட்டது. விரைந்து செல்லவேண்டும். திருவாராதனமும் பெற்று திருவமுதைக் கண்டருளி பரிமளரங்கன் திருக்கண் வளரத் தொடங்குவதற்கு முன் அவன் திருமுன் நிற்க வேண்டும். திருத்தலத்தார் நண்பகல் திருவாராதனத்திற்குப் பின் திருக்கோவிலுக்குத் திருக்காப்பிடுவார்களோ இல்லையோ தெரியவில்லை. நம்மைக் கட்டாயம் கண் குளிர நோக்கி வாரியணைத்து நலம் வினவி அத்தாணிச்சேவகத்தில் ஏவுவான் பரிமளரங்கன். ஆனாலும் அவனை நெடுநேரம் காக்க வைக்காமல் விரைந்து செல்லவேண்டும்”

வாள்வலியால் மாயோனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தைக் கொண்ட கலியன் பரகாலன் கலிகன்றி திருமங்கை மன்னனும், அரட்டமுக்கியை அறவழியில் திருப்பிய குமுதவல்லி நாச்சியாரும் மருவினிய மைந்தன் பரிமளரங்கனைக் காணும் பேராவலோடு விரைந்து திருவிந்தளூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


***

"என் அடியவர்கள் இருவர் என்னைக் காண இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நான் இருக்கும் ஊருக்கெல்லாம் சென்று என்னை இனிய தமிழால் பாடுபவன். அவனிடம் கொஞ்சம் விளையாட நினைக்கிறேன். பரகால நாயகியாய் உருமாறி என் பிரிவைத் தாங்காமல் அவன் நீர்ப்பாண்டமாய் உருகியதுண்டு. ஆனால் இப்போது தன் மனைவியுடன் இங்கே வருகிறான். அப்போது அவனால் என் நாயகியாய் உருமாற இயலாது. அவன் தானாக - தன் ஆண் உருவுடனேயே நின்று என் பிரிவைத் தாங்காமல் உருகி இனிய தமிழால் என்னைப் பாடிக் கேட்கும் ஆவல் கொண்டுள்ளேன். அதனால் பட்டரே, திருவாராதனத்தை விரைவில் நடத்தி திருக்காப்பிட்டுவிட்டு வாசலில் நில்லுங்கள்".

நண்பகல் பூசை செய்ய பூசைத் திரவியங்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த அருச்சகர் அசரீரியாய் ஒலித்த அக்குரல் எம்பெருமானின் திருக்கட்டளையே என்று உணர்ந்து அதற்கேற்ப பூசையை விரைவில் முடித்துக் கொண்டு திருக்கோவில் கதவைத் தாளிட்டுவிட்டு அங்கேயே நின்று கொண்டார்.

***

"அடடா. இதென்ன கொடுமை. திருக்காப்பிட்டு விட்டார்களே. பரிமளரங்கன் நம்மை புறந்தள்ளான் என்றல்லவோ நினைத்தோம் குமுதா. நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு இவன் கண்வளர்ந்துவிட்டானே.

திருத்தலத்தாரே. திருவாராதனத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதே. இவ்வளவு விரைவில் திருக்காப்பிட்ட காரணம் என்ன? தேவரீர் அருள் கூர்ந்து திருக்காப்பினை நீக்கிப் பரிமளரங்கனைக் காட்டியருள வேண்டும்"

"ஆழ்வாரே. எம்பெருமானின் திருக்கட்டளையின் படியே திருக்காப்பு இடப்பட்டிருக்கிறது. எங்களால் ஆவதொன்றில்லை. மன்னிக்க வேண்டும்"

"என்ன எம்பெருமான் திருக்கட்டளையா?

திருவிந்தளூர்த் திருமாலே. இது உமக்கே அழகாக இருக்கிறதா?

உம்மையே தொழுது உமது அடிமைத் தொழிலே உயிருக்கு ஆதாரமாய் உடைய உமது அடியார்கள் நாங்கள். பேரின்பம் பெற வானுலகம் செல்ல வேண்டும் என்ற நிலையின்றி எல்லா இன்பங்களையும் இங்கேயே உமக்கடிமைத் தொழில் செய்து பெற்றோம் என்று எண்ணியிருந்தோம். அப்படிப்பட்ட எங்களின் இரங்கத்தக்க நிலை கண்டு ஆ ஆ என்று இரங்கி உமது திருமுகத்தை ஒரு முறையேனும் காட்டி விரைவாக உமது திருப்பணியில் நியமித்து அருளினால் ஆகாதா? நாங்கள் உய்ந்து போவோமே.

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்திருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே.


உமது இரக்கத்தால் அன்றி எங்கள் முயற்சியால் உமது திருமுகம் காணக் கிடைக்குமோ? கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உமது திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? எங்களை ஏன் இப்படி நோக வைக்கிறீர்?

திருவிற்கும் திருவான செல்வனே. உம்முடைய காரணமில்லாத கருணையினால் நீரே வந்து எங்கள் சிந்தையில் நீங்காது அமர்ந்து கொண்டீரே. எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போல் எங்கள் சிந்தைக்கும் தெரியாமல் இருந்தால் இந்த நோவு எங்களுக்குக் கிடையாதே. எப்படி எங்கள் சிந்தையில் புகுந்தீரோ அப்படியே உமது திருவடிவையும் காட்டித் தர வேண்டும்.

உம்மை நினைக்கும் தோறும் இனியவனாக இருக்கிறீரே. காணும் போது இன்னும் இனிமையாக இருப்பீரே என்றும் இளைய மருவினிய மைந்தா. அழகிய குளிர்ந்த திருவாலி நகர்த் திருமாலே. திருமாலிருஞ்சோலையில் வாழ் யானைக்கன்றே. என்றும் அணையாத விளக்கின் சுடரே. திருநறையூரில் நின்ற அழகிய நம்பி. திருவிந்தளூர் எந்தாய். அடியோங்கள் எங்களுக்கு சிறிதும் இரங்க மாட்டேன் என்கிறீரே.

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே! மருவினிய
மைந்தா! அம் தண் ஆலி மாலே! சோலை மழகளிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே.


நீர் உமது குணத்திற்கு எதிராக இப்படி சிறிதும் எங்கள் மேல் இரக்கமின்றி இருக்கலாமா? உமது இயற்கைக் குணமான இரக்கம் இப்போது என்ன ஆயிற்று? போனால் போகட்டும். நாங்கள் உம்மை உமது அருளால் சேவிக்க இயன்றால் சேவிக்கிறோம்; இல்லாமல் போய் இழந்தாலும் இழக்கிறோம். அது பெரிதில்லை. ஆனால் குணம் கெட்டவன் நீர் என்று மற்றவர் பேசுகிறார்களே.

அண்டகுலத்திற்கெல்லாம் அதிபதியாக நீர் இருக்கச் செய்தேயும் உமது அடியவர் பெருமை துலங்க வேண்டும் என்பதற்காக குறளுருவாகி ஈரடியால் வையமெல்லாம் அளந்து கொண்டீரே. அதுவன்றோ உம்முடைய திருக்குணம். அப்படி பெருமை பெற்ற உம் திருக்குணம் இன்று ஏசப்படும் படி நீர் வைத்துக் கொள்ளலாமா?

வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் வையம் அளந்த போது அனைவரது தலையிலும் தன் திருவடியை வைத்து அருளினானாமே இவன்; இன்று வாசலில் நின்று இவர்கள் இப்படி ஏங்கி உயிர்தரிக்க முடியாதிருக்க தாளிட்டுக் கொண்டு உள்ளே நின்றானே. இவனா எல்லோரையும் காப்பவன் என்ற பெயருடையவன் - என்று அயலார் ஏசுகின்றார்கள். இந்த ஏச்சு உமக்குக் கிடைக்கக் கூடாது என்றே நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்தளூரீரே. வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த திருமுடியையுடையவரே. உம்மைக் காண வேண்டும் என்ற ஆசைக்கடலில் வீழ்ந்து தத்தளிக்கின்றோம். உம்மைக் காட்டியருள வேண்டும்.

பேசுகின்றது இதுவே வையம் மூவடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசையென்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே.


ஒருவரை மற்றொருவர் அலட்சியம் செய்தால் அவர்களிடையே ஆன அன்பு குறைவதை உலகத்தில் கண்டிருக்கிறோம். இப்போது நீர் எங்களை அலட்சியம் செய்கிறீர். ஆனால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு குறையவில்லை. ஆசையும் குறையவில்லை. அப்படி ஆசை குறையாமல் உம்மைப் போற்றித் துதிக்கும் எங்களைக் கண்டு 'தலைவனை அடிமைகள் போற்றுவது இயல்பே' என்று எண்ணாமல் 'கதறி அழும் இவர்களுக்குக் காட்சி தராத இவனுக்கெல்லாம் அனைத்துலகுக்கும் கதி என்ற பெயர் அழகாகத் தான் இருக்கிறது' என்று உம்மையும் 'பல்லைக் காட்டி பலவாறு வேண்டிய பிறகும் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் என்றாற் போல் இருக்கின்றவனை இன்னும் போற்றுகின்றாரே இவர்கள்' என்று எங்களையும் ஏளனமாகப் பேசுகிறார்கள் அயலார்கள். உம் மேல் மாறாத எங்கள் ஆசை இப்படி உமக்கும் எமக்கும் இழுக்காக வந்து நின்றது.

இப்படி ஊரறிய உலகறிய உமக்கே ஆளாகித் திரிகின்ற அடியோமுக்கு 'சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது' என்றாற் போல் இருக்கும் ஒளி மிகுந்த உம் திருவடிவைக் காட்ட மாட்டேன் என்கிறீரே. எம்பெருமானே. பரமபதத்தில் இருப்பார்க்கு அன்றி ஈனரான இவருக்கா என் திருவடிவைக் காட்டுவேன் என்று உயர்வு தாழ்வு பார்க்கிறீரே. இந்தளூரீர். உம் திருவடிவை நீரே பார்த்துக் கொண்டும் தொட்டுக் கொண்டும் மோந்து கொண்டும் கட்டிக் கொண்டும் நீரே வாழ்ந்து போம்.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்குத்
தேசமறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியின் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்!
வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


'ஐம்பூதங்களின் வடிவாய் அகிலமெங்கும் நான் நிற்கின்றேனே; அங்கெல்லாம் என்னைக் காணக்கூடாதா' என்று எண்ணிக் கொண்டு உமது திருவடிவைக் காட்டாமல் நிற்கின்றீர் போலும். 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்' என்றாற் போல் நீர் நிற்பதை நாங்கள் அறிவோம். தீயாய் நிற்பதும் எம்பெருமான், நீராய் நிற்பதும் எம்பெருமான், திசையும் பரந்த இவ்வுலகமுமாய் நிற்பதும் எம்பெருமான் என்பதை அறியும் அறிவு அருளியிருக்கிறீர். பரவாசுதேவனாக இருப்பது நித்யர்களும் முக்தர்களும் தொழுது அனுபவிப்பதற்காக. பிரமன் முதலான தேவர்களின் கூக்குரல் கேட்டு இரங்குவதற்காக இருப்பது திருப்பாற்கடலில். இராமனாகவும் கண்ணனாகவும் வந்த அவதாரங்கள் அந்த அந்தக் காலத்தில் இருந்தவர்கள் பணிவதற்காக. நீர், நிலன், காற்று, தீ, வான் இவற்றின் அந்தரியாமியாய் நிற்பது பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) போன்றோருக்குப் பயனளிக்கும். இங்கே அருச்சாவதாரமாக நிற்பது ஒன்று தானே அடியோங்களுக்கு உயிராக இருப்பது. ஆதலால் நீர், தீ முதலிய வடிவில் நீரே நிற்கிறீர் என்ற அறிவு இருந்தாலும் ஐயோ நாங்கள் உம்மை அங்கே எல்லாம் காண இயலாதவர்களாக இருக்கிறோமே. தாயாகவும் தந்தையாகவும் தந்தைக்கும் தந்தையாகவும் எங்களை ஆளும் தலைவனாகவும் இங்கே சிலை வடிவில் நிற்கும் நீரே அல்லவோ இருக்கிறீர்? உம்மைக் காட்டி அருளக் கூடாதா?

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இருநிலனும்
ஆய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோம் ஆல்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்
கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே.


'நீர் அடிமை; நான் உடையவன். அப்படியிருக்க என் வடிவை உனக்குக் காட்டவேண்டும் என்று என்னை வற்புறுத்துவது தகுமா? என் எண்ணப்படி நான் நடந்து கொள்ளும் வலிமை கொண்டவன் நான் என்பதை அறிந்து எனது மற்ற அடியவர்கள் எல்லாம் நான் இட்டபடி இருக்க நீர் மட்டும் என்னை வற்புறுத்துவது ஏன்?' என்று தேவரீர் திருவுள்ளம் பற்றி இருக்கிறீர் போலும் இந்தளூரீரே. அப்படியென்றால் எல்லாம் அறிந்த சர்வஜ்ஞனான உமக்கு அடியேனின் நிலை தெரியவில்லை என்றே சொல்லவேண்டும். அதனைப் பற்றிப் பேசாமல் விடலாம் என்றால் என்னால் இயலவில்லை. நான் அறிந்தவற்றைச் சொல்லுகிறேன் கேட்பீர். 'அவன் உடையவன்; நாம் உடைமை' என்று நீர் இட்ட வழக்காக இருக்கும் உம் அடியார்கள் அனைவரோடும் ஒக்க அடியேனையும் என்ணியிருந்தீர். உம்மை விட்டுப் பிரிந்தால் உயிர்தரிக்க இயலாத நல்லவர்களையும் நீர் அறிவீர். உம்மை விட்டுப் பிரிந்தாலும் உயிர் தரிக்க இயலும் தீயார்களையும் நீர் அறிவீர். அவ்வளவு ஏன் - இவ்வுலகில் நீர் எல்லாம் அறிவீர். ஆனால் ஒன்றை மட்டும் நீர் அறியவில்லை. 'ஒரு மாதம் வரையில் உயிர் தரித்திருப்பேன்' என்று சொன்ன அசோகவனத்தில் இருந்த பிராட்டியைப் போன்ற வலிமை அடியோமுக்கு இல்லை. ஒரு நொடிப்பொழுதும் உம் பிரிவைப் பொறுக்க ஒண்ணாதவர் நாங்கள் என்பதை மட்டும் அறியாதவாக இருக்கிறீர்.

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே


நீர் எல்லா வலிமையும் மிக்கவர் தானே. ஆனால் எம்மிடம் பணி கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட்டதா? ஏழை ஏதலன் கீழ்மகன் இவன்; இவனிடம் பணி கொள்ளலாகாது என்று நினைத்து பணி கொள்ளாமல் விட்டீர்கள் போலும். நிறை ஒன்றுமில்லாத நீசன் ஆனாலும் திருப்பணிக்கு ஆளாகும் படி எம்மைத் திருத்திப் பணி கொள்ள உம்மால் இயலவில்லையா? பின் எப்படி சர்வசக்தன்; எல்லா வலிமையும் உள்ளவன் என்ற திருநாமத்தை உகந்திருக்கிறீர்?

மொத்தமாக அறிவே இல்லாத மண்ணாங்கட்டியாக எம்மை படைத்திருந்தாலாவது இத்துன்பங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் அன்பும் அறிவும் உடைய பிறவியாக்கி உனக்காளாக இருப்பதே எம் இயல்பு என்ற அறிவையும் தந்தீர். இந்த அறிவையும் தந்துவிட்டு இப்போது முகம் காட்டாமல் தள்ளி வைத்திருக்கிறீர். பணி கொள்ளாவிடிலும் திருவடிகளையாவது தரலாமே. பிறர்களுக்கே அமுதம் ஆன திருவடிகளையும் 'ஆலிலை மேல் ஒரு பாலகனாய்' சுவைத்துக் கொள்ள நீரே வைத்துக் கொள்ள நினைத்தீர் போலும். நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணா என்று உம் தொண்டரான நாங்கள் உம்முடைய திருவடிகளைத் தந்தால் உய்ந்து போக மாட்டோமா?

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே!
காட்டீர் ஆனீர் நும் தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே.


முதன்முதலில் நீர் பாலின் வண்ணம் காட்டினீராம். உமக்கே இயற்கையான நிறம் மாயோன் என்ற திருப்பெயருக்கு ஏற்ற கருமுகில் வண்ணத்தைப் பிற்காலத்தில் வெளிப்படுத்தினீராம். இது போக வேறு வண்ணங்களும் உமக்கு உண்டோ என்று எண்ணிப் பார்த்தால் நடுவில் சில நாட்கள் பொன்னின் வண்ணத்தையும் நீலமணியின் வண்ணத்தையும் காட்டினீராம். இப்படி ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வண்ணம் காட்டும் உமது அழகு மிக்கத் திருமேனி இந்த ஊரில் என்ன வண்ணம் காட்டுகிறது நாங்கள் அறிந்து இன்புறும் வண்ணம் உம் திருவுருவத்தைக் காட்டுவீர் திருவிந்தளூர் திருமாலே.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே


எளிவந்த தன்மை கொண்டவன் என்று உம்மை எல்லோரும் போற்றுகின்றோம். ஆனால் நீரோ 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்' என்றாற் போலே ஏழேழு தலைமுறையாக வந்து அடிமை செய்யும் குடியிலே பிறந்த அடியோமுக்கு அருள் செய்யவே உயர்வு தாழ்வு பார்க்கிறீர். இந்தத் தகுதியும் இல்லாமல் இந்தத் தலைமுறையில் உமக்கு அடிமை செய்யும் எண்ணம் கொண்டவருக்கு நீர் எளிவந்த தன்மையுடனும் நீர்மையுடனும் இருப்பது எங்ஙனம்?

எங்கள் சிந்தை தன்னில் முந்தி வந்து நிற்கிறீர். நீரே அப்படி சிந்தையில் வந்து நிற்பது போல் உமது திருமேனியின் வண்ணம் இதென்று சிறிதளவும் காட்டாமல் இருக்கிறீரே இந்தளூரீரே.

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே”


இப்படி மாறி மாறிப் பல முறை வேண்டி அயர்ந்து மூர்ச்சையுற்றார்கள் திருமங்கையாழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும். இனிமேலும் சோதிக்க வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட பரிமளரங்கன் அருச்சகர் மூலமாக திருக்கதவம் திறப்பித்து தன் திருமேனி அழகைக் காண்பித்தான். வீர சயனத்தில் பரந்து கிடந்த மரகதத் திருமேனி அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்றாற் போல் பரகாலனும் நாச்சியாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றனர்.

***

அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை எம்பெருமானை மேகங்கள் வந்து அணவும் சோலைகளை உடைய திருமங்கை நகருக்கு வேந்தனான கலியன் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறப்பும் இனிமையுமான இந்த சொல்மாலையை ஓதித் திரிபவர்கள் இவ்வுலகத்தில் யாராக எத்தன்மையுடையவராக இருந்தாலும் அவர்கள் எக்காலத்திலும் அமரர்கள் தொழுதேத்தும் அமரர்களாக இருப்பார்கள்.

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன்சொல்மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே


***

இப்போது எதற்கு திடீரென்று திருவிந்தளூர் எம்பெருமானைப் பற்றிய கலியன் பனுவல்களைப் பாடிப் பரவுகிறேன் என்று தெரிய வேண்டுமென்றால் இங்கே பாருங்கள். இத்திருக்கோவில் புனிதநீர்தெளிப்பினை முன்னிட்டு நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் நியமித்தபடி காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன் கலியன் பரகாலன் பைந்தமிழையும் பருகித் திளைத்தேன். அடியார் நியமனம் அரங்கன் நியமனமே.

Tuesday, April 07, 2009

நீயே சரண். நினதருளே சரண்.

அன்னையே மீனாட்சி. உன் திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு நடக்கிறது. நீ மகிழ்ந்திருப்பதைப் போலவே உன் பிள்ளைகளும் மகிழ்ந்திருக்க வேண்டாமா? உன் கடைக்கண் அருட்பார்வையை தென் திசை நோக்கித் திருப்பு. நச்சுக்குண்டுகளாலும் தீக்குண்டுகளாலும் மரித்து விழும் உன் மக்களின் துயர் தீர். நீயே சரண். நினதருளே சரண்.