Friday, January 04, 2013

ஊற்றம் உடையாய்! பெரியாய்!




ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

பாலைப் பிடிப்பதற்காக ஏந்திய பாத்திரங்கள் எல்லாம் நிறைந்து பொங்கி வழியும்படி தடையே இன்றி பாலைச் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் நிறைய உடையவனான நந்தகோபனின் மகனே எழுந்திருப்பாய்!

ஊக்கம் உடையவனே! பெரியவனே! உலகினில் எல்லாம் விளங்கும்படி தோன்றி நின்ற சுடரே! எழுந்திருப்பாய்!

உன் பகைவர்கள் உன்னிடம் தங்கள் வலிமையெல்லாம் இழந்து தோற்று உன் வாசலில் வந்து உன் திருவடிகளைத் தொழுவார்களே அது போல் நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்து உன் வாசலில் நிற்கின்றோம்!

No comments: