Monday, October 31, 2005

உலகமெல்லாம் அன்பு நெறி ஓங்க வேண்டும்

உலகமெல்லாம் அன்பு நெறி ஓங்க வேண்டும்
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேன்டும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Monday, October 24, 2005

தீபாவளியை முன்னிட்டு...

இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.

அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.

நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.

என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?

உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.

ரொம்ப நன்றிங்க.

Saturday, October 15, 2005

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு. மூதறிஞர் இராஜாஜி எழுதினது.

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....

Friday, October 14, 2005

சத்தியமாய் வாழ்ந்திடு நீ எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!


அக்டோபர் 15, நம் குடியரசுத் தலைவரின் பிறந்த நாள். அதை முன்னிட்டு நம் தலைவருக்கு ஒரு சிறு வாழ்த்துக் கவிதை.

பார்க்கலாம் பார்க்கலாம் என்பவர்கள் நடுவே
'பார்த்தோம்' என்னும் கலாம்!

பகற்கனவு காண்பவர்கள் நிகழ்கனவு காண்பதற்கே
பாரினிலே வந்த கலாம்!

எத்தனையோ இளைஞர்களை இத்தரணி மீதினிலே
எழுச்சியுறச் செய்யும் கலாம்!

நித்தியமாய் இப்புவியில் சத்தியமாய் வாழ்ந்திடு நீ
எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!

Wednesday, October 12, 2005

சகலகலா வல்லி ஸரஸ்வதி - 2

நண்பர்களின் வேண்டிகோளின் படி, ஸரஸ்வதி பூஜையன்று எழுதிய சகலகலா வல்லி மாலையின் முதல் பாட்டிற்கு முறையான பொருள்:

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே!

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து) தண்டாமரைக்குத் தகாது கொலோ - தாயே! நீ வெண்தாமரை மலரில் உன் பாதம் வைத்து நின்றுள்ளாய். உன் அருள் இருந்தால் என் உள்ளம் கூட எந்த குறைகளும் இன்றி வெள்ளை உள்ளம் ஆகி குளிர்ந்த தாமரை மலர் போல் உன் பாதம் தாங்கும் தகுதி அடையும்.

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகும் காக்கும் இறைவனாம் திருமால் எல்லா உலகையும் உண்டு பாற்கடலில் உறங்க சென்று விட்டார்.

ஒழித்தான் பித்தாக - எல்லா உலகையும் அழிக்கும் சிவனாரோ 'பித்தன்' என்று பெயர் கொண்டு சுடலையில் நடனமாட சென்று விட்டார்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே! - உன் கணவரான பிரம்ம தேவர் மட்டும் உலகைப் படைக்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர் நாவில் நீ சுவை கொள் கரும்பாய் அமர்ந்திருப்பதுதான்.

ஸரஸ்வதி தேவியின் துணை இல்லாததால் தான் திருமால் உறக்கம் கொண்டார்; சிவனார் பித்தானார் என்ற பொருளில் குமரகுருபரர் இந்த பாடலை சகல கலா வல்லியாம் ஸரஸ்வதி தேவியின் புகழாகப் பாடியுள்ளார்.

இந்த பாட்டிற்கு கொஞ்சம் நக்கலாக எழுதப்பட்ட பொருளை யாராவது படிக்க விரும்பினால், இங்கே படிக்கலாம்.

இந்தியக் கனவு 2020

நம்ம பசங்க சில பேரு சேந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. அந்த இயக்கத்தைப் பத்தி தெருஞ்சிக்க இங்கே சொடுக்குங்கள்.

நண்பர் நடராஜன் நம்ம நாட்டை முன்னேற்றுவது பத்தி ரெண்டு பேப்பர் கட்டிங்ஸ் இங்கே போட்டிருக்காரு. படிச்சுப் பாருங்க.

Tuesday, October 11, 2005

சகல கலா வல்லி ஸரஸ்வதி

இன்னைக்கு ஸரஸ்வதி பூஜைன்னு சொன்னாங்க. அதான் ஸரஸ்வதி தேவியைப் பத்தி நம்ம தமிழ் புலவர் ஒருத்தர் பாடின பாட்டை இங்க பார்க்கலாம்ன்னு. பாட்டு கஷ்டமா இருக்குமோன்னு பாக்குறீங்களா? அர்த்தம் சொல்லிடுவோம்ல.

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே

குமரகுருபரர் எழுதுனதுங்க இது. அவசரப்படாதீங்க...அர்த்தமும் சொல்லிட்றேன்.

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)தண்டாமரைக்குத் தகாது கொலோ - அம்மா சகல கலா வல்லியே! என்னம்மா நீ வெள்ள தாமரைபூ மேல மட்டும் தான் உன்னோட காலை வைப்பியா? என் மனசும் வெள்ளை உள்ளம் தாம்மா. கொஞ்சம் அதிலெயும் உன் காலை வைக்கக் கூடாதா?

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - நாராயணன் இந்த ஏழு உலகத்தையும் காத்து, எங்கே என்னைப் போல உள்ளவங்க இந்த உலகத்தை கெடுத்திடுவாங்களோன்னு பயந்து எல்லா உலகத்தையும் முழுங்கிட்டு உண்ட களைப்பு தீர பாற்கடலுக்கு தூங்க போயிட்டாரு.

ஒழித்தான் பித்தாக - யப்பா நாராயணா...உம்ம தொழில் உலகத்த காப்பாத்துறது மட்டும் தான்...அழிக்கிறது என் வேலை..இப்படி நீர் உலகத்த முழுங்கிட்டு போய் தூங்கலாமான்னு கவலப்பட்டு கவலப்பட்டு சிவனாருக்கு பைத்தியமே புடிச்சுருச்சு.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே - இதையெல்லாம் பார்த்துட்டு உங்க புருஷன் பிரம்ம தேவர், நாம இந்த உலகத்தை எல்லாம் திரும்பவும் படைச்சுடலாம்ன்னு ஆரம்பிக்கிறப்ப அவரோட வாயில தித்திக்கும் கரும்பா இனிக்கிறியாமே

சகல கலா வல்லியே - அம்மா சகல கலா வல்லி...ஏன் நீ கரும்பா தித்திக்கிறேன்னு எனக்கு தெரியும். நீ தான் எல்லா கலைகளும் அறிந்தவள் ஆச்சே...உன் துணை இருந்தாத் தானே உங்க புருஷன் உலகத்தை படைக்கும் கலைய தெரிஞ்சிக்க முடியும். அதான் உங்களைப் போட்டு மென்னுக்கிட்டு இருக்கிறாரு.

பின்குறிப்பு: புராணம் சொல்லும் செய்திகள் இவை. ஸரஸ்வதி தேவி பிரம்ம தேவரின் நாக்கில் நிலையாக இருக்கிறாள். சிவபெருமானுக்கு 'பித்தன்'ன்னு ஒரு பெயர் உண்டு. பெருமாள் உலகம் அழியும் காலத்துல எல்லாத்தையும் உண்டு சிறுபிள்ளை வடிவத்தில ஆலிலையில தூங்குவார். அவர் பாற்கடல்ல தூங்குறது தான் உங்களுக்கு தெரியுமே. இந்த எல்லா செய்திகளையும் வச்சிக்கிட்டுத் தான் நம்ம குமரகுருபரர் இந்த பாட்டை எழுதியிருக்கிறார் போல.

Monday, October 10, 2005

கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?

சின்ன வயசிலெ இந்த மகாபாரதம் படிக்க ஆரம்பிச்சிட்டா போதும், சோறு தண்ணி வேணாம் எனக்கு. அவ்வளவு சுவாரசியமா போய்க்கிட்டு இருக்கும். நல்லவனா எப்படி வாழ்றதுன்னு கத்துக்கற அதே நேரத்துல ஊர எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தலாம்ங்கறதையும் அதுல கத்துக்கலாம். அப்பப்ப விடுகதை, கேள்வி பதில், துணுக்குகள், புதிர்கள், கதைக்குள் கதை அப்படின்னு வந்துக்கிட்டே இருக்கும். அதுல இருக்கிற எல்லா புதிர்களிலும் நான் இப்பொ எழுதப்போற புதிருக்குத் தான் எனக்கு இன்னும் பதில் தெரியல.

உங்ககிட்ட யாராவது வந்து 'கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?'ன்னு கேட்டா என்ன சொல்வீங்க? டக்குன்னு 'அண்ணன் தம்பி'ன்னு தானே? நானும் அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் எங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'யமன் சூரியனோட மகன்'ன்னு சொன்னாங்க. உடனே எனக்கு கர்ணனும் தருமனும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.

மகாபாரத்தின் படி, கர்ணன் சூரிய தேவனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன்; தருமன் யம தரும ராஜனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன். அப்படின்னா கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? அண்ணன் தம்பியா? இல்லியே...கர்ணனும் யமனும் சூரிய தேவனின் மக்கள். அப்படின்னா, கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே தருமன்...தம்பி இல்லியே? சரியா?

இந்த கேள்விக்கும இன்னும் எனக்கு யாரும் சரியா பதிலே சொல்லல...உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே!!!!

Saturday, October 08, 2005

மைத்ரீம் பஜத

நீங்கள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இந்த பாடலை கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் 'பெரியவா' என்றும் 'பரமாசாரியர்' என்றும் அறியப்படும் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியார் ச்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் 50ம் ஆண்டு (அப்படித் தான் நினைவு) நிறைவு விழாவில் பாட எம்.எஸ்ஸிற்கு அழைப்பு வந்தது. எம்.எஸ் இந்த அழைப்பைப் பற்றி ஆசாரியரிடம் சொன்ன போது ஆசாரியர் இந்த பாடலை எழுதிக் கொடுத்தார்.

இந்த பாடலை எழுதி ஏறக்குறைய 40 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் இந்த பாடலின் கருத்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வகையில் உள்ளது.

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - பணிவுடனும் நட்புடனும் உலக மக்கள் எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். அது எல்லோர் இதயத்தையும் வெல்ல உதவும்.

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத - பிறரையும் உங்களைப் போலவே எண்ணிப் பாருங்கள்.

யுத்தம் த்யஜத - போரினை விடுங்கள்.

ஸ்பர்தாம் த்யஜத - தேவையற்ற அதிகாரப் போட்டியினை விடுங்கள்.

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமனம் - பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்ரமிக்கும் அக்கிரம செயலை விடுங்கள்.

ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே - பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள்.

ஜனகோ தேவ: சகல தயாளு: - நம் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிக்கக் கருணை கொண்டவன்.

தாம்யத - ஆதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள்.

தத்த - ஆதலால் எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள்.

தயத்வம் - ஆதலால் எல்லோரிடமும் கருணையோடு இருங்கள்.

ஜனதா - உலக மக்களே!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

இந்தப் பாடலின் பொருள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். தமிழ் அறியாத உங்கள் நண்பர் யாருக்காவது நீங்கள் இந்த பாடலின் பொருளை அனுப்ப விரும்பினால் இங்கே சொடுக்கி அனுப்பவும்.

நம் நண்பர் சிவராஜா இந்த பாடலை தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார். கேட்டுப் பாருங்கள்.

திருவாசகம்

நண்பர் சிவராஜா திருவாசகம் பாடல்களுக்கு நான் எழுதிய உரைகளை தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்துள்ளார். படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

Friday, October 07, 2005

மதுரை

நம்ம ஊரு பத்தி ரமணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள் - ஆனால் அது ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழில் நாம கூடிய சீக்கிரம் எழுதணும்.

Wednesday, October 05, 2005

வாங்கண்ணே! வணக்கம்!

நம்ம ஊரு மருதைங்கண்ணே! படிச்ச பசங்க எல்லாம் 'மதுரை'ன்னு சொல்லுவாங்கண்ணே. எங்க ஊருக்கு இன்னொரு பேரும் இருக்குதுண்ணே - 'கூடல் கூடல்'ன்னு சொல்லுவாங்கண்ணே. அதான் நம்ம ஊரு பேரை இந்த இணையப்பதிவேட்டுக்கு வச்சுட்டேண்ணே.

கூடல்ன்னா கலவைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்குதாம்ண்ணே. கலவையா எதைஎதையோ பத்தி இங்க பேசலாம்ன்னுதான் இந்த பேரை தெரிவு செஞ்சாச்சுண்ணே.

எல்லோரும் கூடும் இடத்துக்கும் கூடல்ன்னு பெயர் சொன்னாங்க - நாமளும் நம்ம கூட்டாளிகளும் கூடி குலாவலாம்ன்னுதான் இந்த பேரை வச்சாச்சுண்ணே.

நீங்க அடிக்கடி இங்க வந்து போய்க்கிட்டு இருங்கண்ணே.