Friday, March 18, 2011

பங்குனி உத்திரத் திருநாள்!

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.


(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***


தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

19 comments:

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

சண்டிகர் ஐயப்பன் கோவிலில் மூணு நாளாக உற்சவம். தில்லியில் இருந்து கச்சேரிக்குப் பாடகர்கள் வந்துருக்காங்க. கேரளத்தில் இருந்து செண்டை வாத்திய கோஷ்டி.நேத்து யானைமேல் எழுந்தருளி நம்ம சண்டிகர் முருகனைச் சந்திக்க வத்தார் ஐயப்ஸ்.

இங்கே அவருக்கு ஆராதனைகள் செஞ்சோம். செண்டை வாசிப்பு அமர்க்களம். பிரசாதம் விநியோகிச்சோம்.

தாலப்பொலி ஏந்திய மங்கையருடன் வீதிவலம் வந்து ஐயப்பன் தன் கோவிலுக்குத் திரும்பின்னார்.

இன்னிக்கு நம்ம முருகன் கோவிலில் பாற்குடம். பஜனை, சனிக்கிழமையாக இருக்குன்னு விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிப்பு, அன்னதானம் எல்லாம் உண்டு.

இதோ கிளம்பிக்கிட்டு இருக்கேன்.

சின்னப் பையன் said...

ஆஹா. அற்புதம். பங்குனி உத்திரத்தின் சிறப்புகளை தொகுத்தளித்தது நன்று.

சின்னப் பையன் said...

//முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

//

இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

தனிமரம் said...

அருமையான விசயங்களை பகிர்ந்தீர்கள்.இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(எனதுபார்வையில் பங்குனி உத்தரம்) 

மதுரை சரவணன் said...

அருமையான பதிவு... பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.. அனைவ்ருரின் நலம் அறிய ஆவல். எல்லா செல்வமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். என் ஆசிரியர்கள் மற்றும் மாணவ்ர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

Kavinaya said...

பங்குனி உத்திர தினம் பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

முருகன் இந்த நாளில்தான் தெய்வானையை மணந்து கொண்டதாகப் படித்தேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும் :)

குமரன் (Kumaran) said...

நன்றி துளசி அக்கா. இப்பத் தான் உங்க கூடவே வந்து ரிஷிகேஷ் மாயாபுரி தரிசனமெல்லாம் பெற்றேன். நன்றிகள் அதற்கும். :-)

சண்டிகர் கோவில்களில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவைப் பற்றி தானே அடுத்து எழுதப் போறீங்க. அப்ப வந்து நானும் கலந்துக்கறேன். ;-)

குமரன் (Kumaran) said...

நன்றி ச்சின்னப்பையன். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி நேசன். :-)

குமரன் (Kumaran) said...

மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் சரவணன். உங்களைப் போன்ற நல்லாசிரியரின் தொடர்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா. அடுத்த வருடம் இதே பதிவை மீள்பதிவு செய்யும் போது தெய்வயானை திருமணம் பற்றியும் சேர்த்து எழுத வேண்டும்; அது நினைவில் இருக்க வேண்டும். :-)

நாடி நாடி நரசிங்கா! said...

அடடே பாற்கடல் கடஞ்சடுக்கு இதுதான் காரணமா
நான் வேற ல நினைச்சிட்டிருந்தேன்
ரொம்ப நன்றிங்கண்ணா!

நாடி நாடி நரசிங்கா! said...

:)

குமரன் (Kumaran) said...

பாற்கடல் கடைஞ்சதுக்கு நீங்க நினைச்ச வேறு காரணம் என்ன இராஜேஷ்?

நாடி நாடி நரசிங்கா! said...

என்றுமே இறவாதா பேரின்ப நிலையை தருவதற்காக தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்தார் என்று நினைத்தேன் !

குமரன் (Kumaran) said...

ஓஒ. அந்த உப்புச்சாறும் அந்தப் பாற்கடலைக் கடைந்த போது தான் வந்தது. அது மரணமில்லா நிலையை மட்டுமே தேவர்களுக்குத் தந்தது. அழிவில்லாப் பேரின்பம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் தானே பின்னரும் அவர்கள் மற்றவர் கைகளில் சிறைகளில் எல்லாம் மிகவும் துன்பம் அடைந்து வருந்தினார்கள். அந்த உப்புச்சாறு ஒரு வகையில் அவர்களுக்குத் துன்பத்தையே தந்தது. யாராவது நம்மைத் துன்புறுத்தினால் அதனைத் தாங்க முடியாமல் மரணமடைந்தாவது அந்தத் துன்பத்திலிருந்துத் தப்பிக்கலாம்; ஆனால் இந்த உப்புச்சாற்றை உண்ட தேவர்களால் அப்படி மரணமும் அடைய முடியாமல் அழிவில்லாத துன்பத்தை அல்லவா அடைந்தார்கள். அதனால் தானே வேலனும் மாமனும் வந்து வந்து இவர்களைக் காக்க வேண்டி வந்தது. :-)

S.Muruganandam said...

சென்னையில் திருமயிலையில் ஆடும் மயிலாய் ஐயனை அர்சித்த நாயகி அன்னை கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம், திருவான்மியூரில் தியாகராஜர் திருமண்ம், பார்த்தசாரதி வேதவல்லித் தாயார் திருக்கல்யாணம் என்று சிவபெருமானுக்குரிய கல்யாண விரத நாளாகவும் பங்குனி உத்திரம் விளங்குகின்றது.

திருவாரூரில் தியாகராஜசுவாமி இன்று இடதுபாத தரிசனம் தந்தருளுகின்றார்.

திருநகரியில் திருமங்கையாழ்வரின் வேடுபறி உற்சவம், திருநரையூரில் தேரோட்டம், என்று பல்வேறு ஆலயங்களில் திருக்கல்யாணம் மற்றும் பிரம்மோற்சவம் பங்குனி உத்திரத்தன்று ந்தௌபெறுகின்றது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் ஐயா.

குமரன் (Kumaran) said...

பங்குனி உத்திரத்தின் பெருமைகளில் இன்னும் சிலவற்றைச் சொன்னதற்கு நன்றி கைலாஷி ஐயா.

வாழ்த்துகளுக்கும் நன்றி. :-)

Rajewh said...

Hi,
Thanks:)