Thursday, July 15, 2010

வரமா? சாபமா?

அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:! சொன்னானே ஒரு வார்த்தை! இவன் பெயர் தருமபுத்திரனாம்! பொய்யே சொல்லத் தெரியாதவனாம்! இவன் சொன்னது பொய் என்பதால் தானே எப்போதும் தரையிலிருந்து ஓர் அடி உயரே ஓடிய அவனது இரதம் அப்போது முதல் தரையில் ஓடத் தொடங்கியது! இவன் சொன்ன அந்த ஒரு பொய்யால் இதோ நான் நீங்காத துன்பத்தோடு பல்லாயிரம் வருடங்களாக இந்த பூமியில் அலைந்து கொண்டிருக்கிறேன்!

தந்தையே! என்றும் அழியாதவன் இந்த அசுவத்தாமன் என்பது உங்களுக்கு மறந்து போனதா? நான் ஒரு சிரஞ்சீவி என்பது மறந்து போனதா? எப்படி நீங்கள் அந்த பாண்டவனிடம் போய் நான் இறந்தேனா என்று கேட்டீர்கள்? அப்படி நீங்கள் கேட்ட ஒரு வார்த்தையால் தானே இன்று நான் இப்படி தாங்காத வலியுடன் இந்தத் தரணியில் அலைந்து கொண்டிருக்கிறேன்!

'என் மகன் அசுவத்தாமன் இறந்தானா?' என்று கேட்காமல் நீங்கள் தான் மொட்டையாக 'அசுவத்தாமன் இறந்தானா?' என்று கேட்டீர்களாம். அப்படி என்றாலும் நீங்கள் கேட்பது என்னைத் தான் என்று அந்த யுதிட்டிரனுக்குத் தெரியாதா என்ன? அதென்ன அந்த நேரத்தில் மொழி விளையாட்டு விளையாடுவது? மொழியின் இலக்கணத்தைக் காரணமாக வைத்து யானை என்பதை வார்த்தையின் பின்னால் சொன்னால் அவன் பொய்யன் இல்லை என்றாகிவிடுமா? குரு பிதாமஹர் வியாசர் முதற்கொண்டு அவன் பொய்யனே இல்லை என்று சாதிக்கிறார்கள்! பெயரால் மட்டும் பெரியவர்களான இவர்களின் இந்த ஓரவஞ்சனையால் தானே நான் நாற்றமெடுத்தப் புண்ணுடன் இப்படி நானிலம் எங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன்!



கௌரவர் பக்கம் தானே நீங்கள் நின்று போராடினீர்கள்? கௌரவர்கள் பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரிடம் போய் நான் இறந்தேனா என்று கேட்டிருக்கலாமே தந்தையே! மாமா கிருபரிடம் கேட்டிருக்கலாம்! கிருதவர்மனிடம் கேட்டிருக்கலாம்! ராதேயனிடம் கேட்டிருக்கலாம்! காந்தார இளவரசரிடம் கேட்டிருக்கலாம்! ஏன் ராஜா சுயோதனனிடமே கேட்டிருக்கலாமே தந்தையே! போயும் போயும் எதிரியைப் போய் நம்பி கேட்டீர்களே?! நம்ப வைத்துக் கழுத்தறுத்தார்கள் என்ற சொல்லுக்கு நீங்களே ஒரு உதாரணமாகிவிட்டீர்களே! உங்கள் சீடர்களில் ஒருவன் பொய் சொன்னான்; இன்னொருவன் உங்கள் கழுத்தை வெட்டினான்! அவர்கள் உங்கள் மேல் வைக்காத விசுவாசத்தை நீங்கள் அவர்கள் மேல் வைத்தீர்களே! அதனால் தானே நான் இன்று இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன்!

தந்தையே! நான் இப்படி ஆனதற்கு முதற்காரணம் உங்கள் சீடன் அருச்சுனன் மேல் நீங்கள் வைத்த பெரும்பாசம் தான்! அவனுக்கு எதிராக வரக்கூடாது என்று அந்த அப்பாவி ஏகலவ்யனின் கட்டை விரலைப் பறித்தீர்கள்! பிறப்பைக் காரணம் சொல்லி அந்த தானசூரன் கர்ணனை பரசுராமரிடம் விரட்டி அவன் உயிரைப் பறித்தீர்கள்! அதே காரணத்தால் தானோ என்னவோ அருச்சுனனுக்கு சொல்லித் தந்ததை எல்லாம் இந்த அசுவத்தாமனுக்குச் சொல்லித் தராமல் விட்டீர்கள்! அதனால் தானே தந்தையே நான் இப்போது இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன்!

அன்று அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை விடவும் சொல்லித் தந்தீர்கள்! திருப்பிக் கொள்ளவும் சொல்லித் தந்தீர்கள்! ஆனால் எனக்கோ விட மட்டுமே சொல்லித் தந்தீர்கள்! நீங்கள் மட்டும் அப்போது ஓரவஞ்சனையின்றி உங்கள் சீடன் மேல் உங்களுக்கு இருக்கும் பெரும்பாசத்தை மீறி உங்கள் அன்புப் புதல்வனான எனக்கும் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறச் சொல்லிக் கொடுத்திருந்தால் பரந்தாமனின் சாபம் எனக்கு ஏற்பட்டிருக்குமா? பெரும் வரமாக இருந்திருக்க வேண்டிய சிரஞ்சீவித்தன்மை தான் எனக்கு பெரும் சாபமாக மாறியிருக்குமா? இன்று இப்படி நான் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாற்றமெடுத்து காட்டிலும் மேட்டிலும் குகையிலும் மரத்திலும் மறைந்து மறைந்து உறைந்து துன்பப்படவும் தான் வேண்டியிருக்குமா?

தந்தையே! உங்கள் அருச்சுன பாசம் உங்களை மட்டும் இல்லாது உங்கள் வமிசத்தையே அழித்தது என்பது உங்களுக்குப் புரிந்ததா?! என் புலம்பல் உங்கள் காதுகளில் விழுந்ததா? என் அழுகிய உடற்புண்களின் நாற்றம் உங்கள் மூக்கைத் துளைத்ததா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?! என்னை மீளா நரகத்தில் தள்ளி விட்டு நீங்கள் மட்டும் வீர சுவர்க்கம் சென்று விட்டீர்களா? ஐயோ!

Picture Courtesy: http://netra-creative-vision.blogspot.com/