Thursday, July 01, 2010

இன்பத்துப் பால் : காதற் சிறப்பு உரைத்தல் - 2

காதலன் தன் காதலின் சிறப்பை உரைத்த குறட்பாக்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். காதலி தன் காதலின் சிறப்பைக் கூறும் குறட்பாக்களை இங்கே பார்க்கப் போகிறோம்.
***

கண் உள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர்.

எனது கண்களில் இருந்து போகமாட்டார். நான் இமைத்தாலும் வருந்தமாட்டார். அவ்வளவு நுண்ணியவர் எனது காதலர்.

கண் உள்ளின் போகார் - எனது கண்களிலிருந்து நீங்க மாட்டார்

இமைப்பின் பருவரார் - நான் எப்போதாவது இமைத்தேன் என்றாலும் கண்ணில் இருக்கும் அவர் எந்த வருத்தமும்/துன்பமும் அடைய மாட்டார்.

நுண்ணியர் எம் காதலவர் - அப்படிப்பட்ட என்னைத் தவிர மற்றவர் கண்களுக்குப் புலப்படாத நுண்ணியவர் எம் காதலர்.

அலர் எழுந்ததை ஒட்டி அது தணியும் வரை தலைவியைப் பார்க்கத் தலைவன் வரவில்லை. அதனால் தலைவி தன் இயல்பு நிலை மாறி வருந்துவாளோ என்று தோழி நினைத்தாள். அதனை உணர்ந்து தலைவி சொல்வது இந்தக் குறள்.

உங்கள் கண்களுக்கு எல்லாம் அவர் தெரியாத நுண்மையுடையவராக இருப்பதால் அவர் இங்கே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர் என்றும் என் கண்ணை விட்டு நீங்காதவர். என்றுமே இங்கேயே என் கண்ணிலேயே இருப்பவர். நான் எப்போதாவது இமைத்தாலும் அவர் நீங்குவதில்லை.

உங்களுக்கெல்லாம் அவர் இங்கே இருப்பதே தெரியாமல் அவர் இங்கே இருப்பதைப் பார்த்தால் என் காதலர் மிகவும் நுண்ணிய அறிவினை உடையவர் என்றும் தெரிகிறது!

***

கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கறிந்து.

எனது கண்களிலேயே என் காதலர் இருப்பதால் தான் நான் கண்ணில் மை தீட்டி அழகுபடுத்துவதும் இல்லை. அப்படியிருக்க அவர் இங்கே வராமல் மறைந்தார் என்பது எப்படி?

கண்ணுள்ளார் காதலவராக - என் காதலர் என் கண்ணில் இருக்க

கண்ணும் எழுதேம் - கண்களுக்கு மையிடவும் மாட்டேன்

கரப்பாக்கறிந்து - அதனால் அவர் மறைதலும் இல்லை என்று அறிவேன்

அவர் மறைந்துவிடுவாரோ என்று கண்ணெழுதவில்லை என்றும் சொல்லலாம்.

காதலர் கண்களுக்குள்ளேயே இருப்பதால் எனக்கு மையிடவும் நேரமில்லை என்றும் சொல்லலாம்.

***

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கறிந்து.

என் காதலர் எனது நெஞ்சில் இருப்பதால் அவருக்குச் சுடும் என்று சூடான உணவுகளை நான் உண்பதில்லை.

நெஞ்சத்தார் காதலவராக - என் காதலர் என் நெஞ்சில் இருக்க

வெய்துண்டல் - சூடான உணவு உண்பதை

அஞ்சுதும் - அஞ்சுவேன்

வேபாக்கறிந்து - அவரை வெந்துவிடுமோ என்று.

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவரை அலரால் பிரிந்து சென்றார் என்று சொல்வது எப்படி என்று கேட்கிறாள் காதலி.

காதலனின் பிரிவால் காதலி உணவுண்ணவில்லை என்று எண்ணிய தோழிக்கு மறுத்துக் கூறி அவர் எப்போதும் என் நெஞ்சில் இருக்கிறார்; அதனால் சூடான உணவை உண்ணவில்லை என்று கூறினாள் காதலி.

***

இமைப்பில் கரப்பாக்கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்.

இமைத்தால் மறைந்துவிடுவார் என் காதலர் என்றெண்ணி நான் இமைக்காமல் இருக்கிறேன்; ஆனால் அவர் பிரிவினால் எனக்கு தூங்காநோய் தந்தார் அன்பில்லாதவர் என்று அவரைக் குறை கூறுகிறார்கள் ஊரார்.

இமைப்பில் கரப்பாக்கறிவல் - இமைத்தால் மறைவார் என்று அறிந்து (இமைக்கமாட்டேன்)

அனைத்திற்கே - அதற்கே

ஏதிலர் என்னும் இவ்வூர் - (அவர் என் மேல்) அன்பில்லாதவர் என்று சொல்கிறது இவ்வூர்.

எப்போதும் தலைவனைக் கண்ணிலும் நெஞ்சிலும் தாங்கும் தன் உணர்வினைப் புரிந்து கொள்ளாமல் அவன் அலரினால் வரவில்லை என்று சொல்லும் தோழியையும் பிறராக எண்ணி 'இவ்வூர்' என்று அவளையும் சேர்த்துச் சொல்கிறார் தலைவி.

***

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இவ்வூர்.

என் காதலர் என்றும் என் உள்ளத்துள்ளே மகிழ்ந்து நிலையாக வாழ்வார். அதனை உணராது இவ்வூரார்கள் அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார் என்றும் என் மேல் அன்பில்லாதவர் என்றும் சொல்கின்றனர்.

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் - எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கிறார்

இகந்து உறைவர் - பிரிந்து வாழ்கிறார்

ஏதிலர் - எந்தவித அன்பும் (என் மேல்) இல்லாதவர்

என்னும் இவ்வூர் - என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.


***

இத்துடன் இந்த அதிகாரம் நிறைவு பெற்றது.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ தான் எனக்கு கூடல் என்கிற வலைப்பூ பிடிக்க ஆரம்பிச்சி இருக்கு! :) மொத படம் சூப்பர் :)