Wednesday, September 03, 2008

சங்ககால மக்கள் வாழ்க்கை - மயிலை சீனி.வேங்கடசாமி

சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும் போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும்.
சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக் காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.

இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்டமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிகமும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன.

அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது.

அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தது.

குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது.

மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச்சாரல்களி லும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன.

இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர் பெற்றன.

சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையையடுத்திருந்த சேரநாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ் நாடாக இருந்த படியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது.

கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள் தோறும் கடலில் வெகு தூரம் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்.

இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வரண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது.

இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தது. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாக கூறுவோம்.

குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை

மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.

இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.

இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டு விடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப்பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.

குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.

மலைகளிலும் மலைச் சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும் பயிர் செய்தார்கள்; மரம் செடி கொடி களை வெட்டி அப்புறப் படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்படுத்தினார்கள்.

பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.

தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கினார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில் களைக் கட்டி அதன் மேல் தினைத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று, பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில், கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது. இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.


முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.
இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்), இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.

வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களிலிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், மழையை, எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.

இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர் கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களி னால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள்.

காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகம் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.

ஆகவே மருத நிலத்திலே தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகை களையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை.
ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்துவந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்துவந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.

சில இடங்களில் கடற்கரை யோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடினமான வாழ்க்கையே. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை ஒரு வகையில் கடினமானது என்றால் நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை வேறு வகையில் கடினமானது.

கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறை முகங்கள் இருந்தன. துறை முகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின.

ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின. பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை என்று கூறினோம். வாழ்வதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லாத பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை. வாழ்ந்தவர்களும் மனிதராக வாழவில்லை. மாக்களைப் போல வாழ்ந்தார்கள்.

இவ்வாறு வெவ்வேறு இயற்கையான சூழ்நிலைகள் அமைந்த இடங்களில் வசித்த அக்காலத்துத் தமிழர் வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

விரைவான போக்கு வரத்துச் சாதனங்களும் தந்தி தபால் வசதிகளும், மற்றும் இக்காலத்து வசதிகள் பலவும் அக்காலத்தில் இல்லாத படியால் கல்வி, பொரு ளாதாரம், நாகரிகம் முதலியவை வளர்ச்சியடைய இயலாமற் போயின. இக் காலத்தில் மிக எளிய மக்கள் பெறுகிற வசதியைக்கூடச் செல்வம் பெற்றவர் பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் இருந்தது. இத்தகைய சூழ்நிலை தமிழருக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா நாட்டிலும் இப்படிப் பட்ட நிலைதான் இருந்தது.

அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரிகம் மருத நிலத்திலும் துறைமுகப்பட்டினங்களிலும் வளர்ந்தன என்று கூறினோம். ஆம், பட்டணங்களிலும் பட்டி னங்களிலும் தான் அக்காலத்து தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலைகள் எல்லாம் வளர்ந்தன.

தமிழரின் வாணிகம் அக் காலத்தில் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிறு விலையுள்ள பொருளுக்கும் அதிக விலையுள்ள பொருளுக்கும் காசு பயன்படுகிறது.

ஆனால் காசு (நாணயம்) ஆதிகாலத்தில் ஏற்படவில்லை. ஆதிகாலத்தில் பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பெறுவது - நடந்தது. பிறகு பையப்பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்ட மாற்றும் நாணயச் செலாவணியும் நடைபெற்றன.

கட்டுரை: கீற்று வலைத்தளம்

13 comments:

ஜீவி said...

//பிறகு பையப்பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்ட மாற்றும் நாணயச் செலாவணியும் நடைபெற்றன.//

நாணயப் புழக்க செலாவணி முறை எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தது என்பதை அறிந்து கொள்ள ஆவல்.
அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இந்த வகைத்தான நூலொன்றை நானும் தேடிக்கொண்டிருந்தேன். அவர் எழுதிய புத்தகத்தின் குறிப்புகளைத் தான் எடுத்தாண்டிருக்கிறீர்களா?..
இந்தப் புத்தகம் வெளியிட்ட பிரசுரத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

குமரன் (Kumaran) said...

ஜீவி ஐயா. இந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. கீற்று வலைத்தளத்தில் கிடைத்த கட்டுரையை இங்கே இட்டிருக்கிறேன். அதனால் எந்த நூலில் இருந்து இந்தப் பகுதி இடப்பட்டது, பதிப்பாளர் யார் என்ற விவரங்கள் தெரியாது. மன்னிக்கவும்.

நன்றி.

ஜீவி said...

உடனடியான தகவல்களுக்கு நன்றி.
மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

குமரன் (Kumaran) said...

செய்கிறேன் ஐயா.

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா சொல்லிக்கறேன் :)

குமரன் (Kumaran) said...

நானும் உள்ளேன் ஐயா சொல்லிக்கிறேன் மௌலி. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

நான் வந்தேன், படித்துவிட்டேன் அப்படிங்கறதுக்காக சொன்னேன் குமரன். :)

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. நானும் உங்க பின்னூட்டத்தைப் படிச்சுட்டேன் அப்படிங்கறதுக்காக சொன்னேன். :-)

சிவமுருகன் said...

இப்போ புதுஸ்ஸா ஒரு மக்கள் வாழ்க்கை வந்துள்ளது, அவர்கள் இணைவலையும், இணையம் சார்ந்த இடங்களில் வாழ்கின்றனர் :-). அதைபற்றி ஏதேனும் குறிப்புள்ளதா? சொல்வீர்களா? :-).

குமரன் (Kumaran) said...

உண்டே. நா. கண்ணன் ஐயா அந்த திணைக்கும் ஒரு பெயர் வச்சிருக்காரே. டக்குன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது. குறிஞ்சித்திணை, நெய்தல் திணை,... மாதிரி இணையத்திற்கும் அங்கே வசிக்கும் மக்களுக்கும் ஒரு திணைப்பெயரை அவர் சொல்லியிருக்கிறார் சிவமுருகன். :-)

சிவமுருகன் said...

//உண்டே. நா. கண்ணன் ஐயா அந்த திணைக்கும் ஒரு பெயர் வச்சிருக்காரே. டக்குன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது. குறிஞ்சித்திணை, நெய்தல் திணை,... மாதிரி இணையத்திற்கும் அங்கே வசிக்கும் மக்களுக்கும் ஒரு திணைப்பெயரை அவர் சொல்லியிருக்கிறார் சிவமுருகன். :-)//

இயற்தமிழ், இசைதமிழ் நாடக தமிழை தொடர்ந்து நான்காம் தமிழாக கணித்தமிழும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெயதல், பாலை, என ஐவகை திணைகளை தொடர்ந்து ஆறாம் திணையாக இணையம் என்று தான் கேள்வி பட்டுள்ளேன் அதற்க்கு என்ன பெயர் வைத்தனர் சற்று ஞாபகபடுத்தி சொல்லுங்களேன். சின்ன ஆர்வம் தான் அவ்வளவே!

குமரன் (Kumaran) said...

அது தான் அந்த பெயர் சிவமுருகன் - ஆறாம் திணை. அந்தப் பெயரில் ஒரு இணைய இதழும் இருப்பது இப்போது நினைவிற்கு வருகிறது. :-)

சிவமுருகன் said...

//அது தான் அந்த பெயர் சிவமுருகன் - ஆறாம் திணை. அந்தப் பெயரில் ஒரு இணைய இதழும் இருப்பது இப்போது நினைவிற்கு வருகிறது. :-)//

நான் அந்த ஆறாம் திணைக்கு ஏதோ பெயர் இருக்கும் என்று எண்ணிவிட்டேன். நன்றி.