Thursday, December 13, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 5

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.





ஈசான்ய திசைக்கதிபதியான ஈசான்ய லிங்கக் கோவிலுக்கு அருகில் மயானம் இருந்தது. சுடலையில் திரிபவன் சிவன் என்றாலும் ஒரு கோவில் சுடுகாட்டின் நடுவில் இருக்கும் என்று கந்தன் எதிர்பார்க்கவில்லை. கேசவனுக்கு சுடுகாட்டின் நடுவில் கோவில் இருப்பதே பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அவன் வழக்கம் போல் கோவிலுக்குள் சென்று கும்பிடத் தொடங்கினான். சுடுகாட்டில் நுழைந்தால் அப்புறம் அண்ணாமலையார் கோவிலுக்குப் போகும் முன் குளிக்க வேண்டுமே என்று தயங்கினான் கந்தன். அவன் தயங்குவதைப் பார்த்து மணிகண்டன் கேட்க தன் தயக்கத்தைப் பற்றி சொன்னான். குளிக்கத் தேவையில்லை என்று மணிகண்டன் என்ன தான் சொன்னாலும் கந்தனுக்கு மனம் ஒப்பவில்லை. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து ஈசான லிங்க தேவரை வணங்கி வெளியே வந்தான்.

மணி ஏறக்குறைய ஆறுமணி ஆகிவிட்டது. 'இனி நேரா கோவிலுக்குத் தானே?' என்று கந்தன் ஆவலுடன் கேட்க, 'வேணும்னா வீட்டுக்குப் போய் காப்பி குடித்துவிட்டுப் போகலாம்' என்றான் மணிகண்டன். கந்தன் வெறுத்துப் போகும் நிலைக்கு வந்துவிட்டான். அவன் நிலையைக் கண்ட கேசவன் சிரித்துக் கொண்டே 'கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்' என்று சொன்னவுடன் தான் கந்தனிடம் புன்னகை திரும்ப வந்தது.




பேசிக் கொண்டே கோவில் வாசலுக்கு வந்துவிட்டார்கள். இன்று மட்டுமே இரண்டு முறை அந்தக் கோவில் வாசலுக்கு வந்திருந்தாலும் இப்போது தான் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணிக் கொண்டே கந்தன் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய வெட்ட வெளி வந்தது. இருட்டுவதற்குள் பாதாள லிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்று மணிகண்டன் சொன்னதால் வலப்புறம் இருந்த ஆயிரம் கால் மண்டபத்தில் நுழைந்து நாலைந்து படிகள் கீழே இறங்கி பாதாள லிங்கேஸ்வரரை தரிசித்தார்கள்.






'இந்த இடத்துக்கு என்ன விசேஷம் தெரியுமா?' என்று மணிகண்டன் கேட்க இருவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். மதுரையில் இருந்து கிளம்பிய சிறுவன் வெங்கடரமணன் இங்கே தான் முதலில் தவம் செய்ததாகச் சொல்லி வரும் போது கந்தனுக்கு நினைவிற்கு வந்துவிட்டது. அந்தக் காலத்தில் இந்த லிங்கத்தை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாததால் இரமண மகரிஷி (வெங்கடரமணன்) இந்தத் தனிமையை விரும்பி இங்கே தவம் செய்யத் தொடங்கினார். பத்து பன்னிரண்டு வயது சிறுவன். கரையான் புற்று சுற்றிலும் எழுந்து கரையான் உடலை அரிக்கத் தொடங்கியும் அவனுக்குத் தெரியவில்லை. பல நாட்கள் உணவு உண்ணாமல் அங்கேயே கிடந்த இரமணரை சேஷாத்ரி சுவாமிகள் கண்டு வெளியே எடுத்து வந்து குளிப்பாட்டி உணவு அளித்துக் காப்பாற்றினார். இந்த விவரங்களை எல்லாம் கந்தன் சொல்ல மணிகண்டன் சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிச் சொல்லுமாறு கேட்டான். கந்தனுக்கு அப்போது பேச மனமில்லை. அதனால் 'நேரமாச்சு மணிகண்டா. கோவில் பெரிய கோவிலில்லையா? அப்புறமா நிதானமா சொல்றேன்' என்று சொல்லிவிட்டான்.


பாதாள லிங்கேஸ்வரரை வணங்கிவிட்டு ஆயிரம் கால் மண்டபத்திலிருந்து வெளியே வந்தார்கள். எதிரே ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தின் மூலையில் இருந்து இன்னொரு நீள்சதுரமான மண்டபம் இருந்தது பார்க்க வினோதமாக இருந்தது. அதனைப் பார்த்து கந்தன் அது என்ன என்று கேட்க, மணிகண்டன் 'அது கம்பத்திளையனார் சன்னிதி' என்று சொன்னான். எங்கேயோ கேட்ட பெயர் போல் கந்தனுக்குத் தோன்றியது. 'கந்தன் அண்ணா. உங்களுக்குக் கட்டாயம் இந்த சன்னிதியைப் பற்றித் தெரிந்திருக்கும். நான் க்ளூ தர்றேன். பிரபுட தேவ மாராஜன், சம்பந்தாண்டான் - ஏதாவது நினைவுக்கு வருதா?' என்று மணிகண்டன் கேட்டவுடன் ஒரு இளநகை புரிந்து 'ஓ. அந்தக் கம்பத்திளையனாரா?' என்றான் கந்தன்.

இருவரும் பேசுவதைக் கேட்ட கேசவனுக்கு 'இன்னொரு சுவையான கதை வருகிறது' என்று புரிந்து விட்டது. ஆவலுடன் கந்தனைப் பார்க்க அவனும் 'கேசவா. அருணகிரிநாதர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கே தான்னு உனக்குத் தெரியும் தானே. அந்தக் காலத்துல இந்தப் பகுதியை பிரபுட தேவ மாராயன்ங்கற சிற்றரசர் ஆண்டுக்கிட்டு இருந்தார். தேவி உபாசகரான சம்பந்தாண்டான் என்பவருக்கு அரசரிடம் நல்ல மரியாதை' என்று சொல்லிக் கொண்டே வர, 'அருணகிரிநாதர் படத்துல கூட எம்.ஆர். இராதா அந்த வேஷத்துல வருவாரே' என்றான் கேசவன். 'கரெக்ட். அவரே தான். அப்ப கதை உனக்குத் தெரியும் தானே' என்ற கந்தனிடம் 'கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவுல இருக்கு. ஆனாலும் நீ நல்லா சொல்லுவ. இப்ப சொல்லு' என்றான் கேசவன். கந்தனும் 'சரி சொல்றேன். அந்த சம்பந்தாண்டாருக்கு அருணகிரிநாதர் ஃபேமஸாகிக்கிட்டு வர்றது பிடிக்கலை. எங்கே அரசர் தனக்கு மரியாதை குடுக்காம அருணகிரிநாதருக்குக் குடுக்க ஆரம்பிச்சிருவாரோன்னு கவலை. அதனால அரசர் கிட்ட அருணகிரிநாதரைப் பற்றி அடிக்கடி கோள் மூட்டிக்கிட்டு இருந்தாராம். ஒரு தடவை அருணகிரிநாதர் கிட்ட சவால் விட்ட போது அருணகிரிநாதர் பாட்டு பாடி எல்லாரும் பாக்கிற மாதிரி முருகனை இந்த மண்டபத்துல வரவச்சாரு. அந்த இடம் தான் இந்த கம்பத்து இளையனார் சன்னிதி' என்றான். 'அண்ணா. என்ன சுருக்கமா முடிச்சிட்டீங்க?! மயில் விருத்தம் பாடுனது எல்லாம் சொல்லலையே' என்று மணிகண்டன் கேட்க, 'ஆமாம் மணிகண்டா. அதெல்லாம் இன்னொரு நாள் கேசவனுக்குச் சொல்றேன்' என்று சொல்லிவிட்டு கேசவனிடம் 'கேசவா. அப்ப முருகன் எல்லாருக்கும் முன்னால காட்சி தந்தப்ப இந்த மண்டபத்துல இருக்குற தூணுல தான் காட்சி தந்தாராம். அதனால தான் இந்த முருகனுக்கு கம்பத்து இளையனார்ன்னு பேரு' என்று சொன்னான்.

பேசிக் கொண்டே மூவரும் கம்பத்திளையனார் சன்னிதிக்குள் நுழைந்தார்கள். பகுதி பகுதியாக இருந்த சன்னிதியில் நடுவில் ஒரு பகுதியில் திருப்புகழ் எல்லாம் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் இருந்த படத்தில் இருந்தவரைக் காட்டி 'இவர் தான் சேஷாத்ரி சுவாமிகள்' என்று சொன்னான் கந்தன். கம்பத்து இளைய பெருமாள் நல்ல அலங்காரத்தோடு மிக அழகாக இருந்தார். மூவரும் அவரைத் தரிசித்து விட்டு வெளியே வந்தார்கள்.

இருட்டத் தொடங்கிவிட்டதால் சிவகங்கை திருக்குளத்தை எட்டிப் பார்த்துவிட்டு அருகிலிருந்த சிவகங்கை விநாயகரையும் வணங்கிக் கொண்டார்கள்.


பெரிய நந்தியை வணங்கி விட்டு இன்னொரு கோபுர வாசலுக்கு வந்தார்கள். கோபுரத்தின் வலப்பக்கம் ஒரு பெரிய மண்டபம் இருந்தது. 'இது தான் கோபுரத்து இளையனார் சன்னிதி' என்று மணிகண்டன் சொன்னான். 'இங்கே தான் கோபுரத்து மேலே இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தாங்கிப் பிடிச்சு முருகன் காப்பாத்துனார்' என்று கந்தன் சொல்ல மூவரும் மண்டபத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த கோபுரத்து இளைய பெருமாளாகிய முருகனையும் அருகில் கை கூப்பி நிற்கும் அருணகிரிநாதரையும் தரிசித்து வெளியே வந்தார்கள்.


பின்னர் கோபுரத்துக்குள் நுழைந்து அடுத்த உள் பிரகாரத்திற்கு வந்தார்கள். அங்கே இருந்த சின்ன நந்தி தேவரை வணங்கிவிட்டு இன்னொரு கோபுர வாயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். 'இந்த கோபுரத்திற்கு இருக்கும் பெருமையைச் சொல்லுங்கள்' என்று மணிகண்டன் கேட்க கந்தனும் 'இது என்ன கோபுரம்?' திருப்பிக் கேட்டான். மணிகண்டன் சொன்னதைக் கேட்டு கந்தன் முகம் மலர்ந்தது.


அடுத்த அத்தியாயம் இங்கே

25 comments:

இலவசக்கொத்தனார் said...

நிறையா கதை அப்புறம் அப்புறம் எனச் சொல்லிக்கிட்டே போறீங்க. எதுக்கும் ஒரு லிஸ்ட் போட்டு வெச்சுக்குங்க. மறந்துடப் போகுது.

இளையனார் - ரொம்ப அழகா இருக்கு இல்ல??! இப்போ பல இடங்களில் சின்னவர் எனச் சொல்வது போல்!

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். அப்புறம் அப்புறம்ன்னு சொல்றது கந்தன். அப்புறமா கந்தன் கேசவனுக்கு அந்தக் கதையெல்லாம் சொல்லுவார் போலிருக்கு. பட்டியலைக் கந்தன் வச்சிருந்தா போதுமே. நான் எதுக்கு பட்டியல் போட்டு வச்சுக்கணும். :-)

அதே தான். இளையனார் = சின்னவர். ரொம்ப அழகான பெயர் தான்.

RATHNESH said...

சொல்லிட்டே போங்க. திருவன்ணாமலை பார்க்காதவங்களுக்கு நல்ல செய்திகள் நிறைய இருக்கு.

கதைக் கோணத்தில் ஒரே ஒரு SUGGESTION

//'கரெக்ட். அவரே தான். அப்ப கதை உனக்குத் தெரியும் தானே' என்ற கந்தனிடம் 'கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவுல இருக்கு. ஆனாலும் நீ நல்லா சொல்லுவ. இப்ப சொல்லு' என்றான் கேசவன்.//

இப்படி ஒரு பில்டப் கொடுத்தால் தொடர்ந்த கதை சிறப்பாகச் சொல்லப்பட வேண்டும். அவசரமாக சிறு குறிப்பு மட்டுமே (சம்பந்தாண்டான் கதை) தரப் போவதாக இருந்தால் இப்படி பில்டப் வாக்கியங்களைத் தவிர்த்தல் நல்லது.

G.Ragavan said...

சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணியுகளமிர்தப் பிரபாலிங்கன
சந்திரசேகர மூஷிகாரூட வெகுமோக
சத்யப் பிரியாலிங்கன சிந்தாமணிகலச
கரகடகபோலத் த்ரியம்பக விநாயகன் முதல்....
சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரும் சித்ரக் காலாப மயிலாம்

இதாங்க என்னோட பின்னூட்டம். ஆனா கதை ஒன்னும் நகரக்காணமே!!!!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரத்னேஷ். திருவண்ணாமலையைப் பாக்காதவங்களுக்கு நிறைய தகவல்கள் இருக்கு. பாத்தவங்களும் ஒரு தடவை இந்தக் கதையைப் படிக்கிறப்ப கோவிலைச் சுத்தி வரலாம். :-)

Suggestionக்கு நன்றி. நீங்க குறிப்பிட்டு இருக்க பகுதியை பில்டப்புன்னு பாக்காம இரு நண்பர்களின் உரையாடலை மனோதத்துவ ரீதியில பாருங்க. அப்ப என்ன தோணுதுன்னு சொல்லுங்க. உங்களுக்குக் கட்டாயமா அதுல சொல்ல வர்றது புரியும் - கந்தனோட குணத்தைப் பத்தியும் கேசவனோட குணத்தைப் பத்தியும் சொல்ல நினைச்சேன். அது சரியா வந்திருக்கான்னு சொல்லுங்க.

குமரன் (Kumaran) said...

இராகவன்.

முதல் இரண்டு வரி கோபுரத்திளையனாருக்கும் அடுத்த சில வரிகள் கம்பத்திளையனாருக்கும் சொல்லியிருக்கீங்க. சரியா? இப்படித் தாங்க கதையைப் பத்தியும் கதாபாத்திரங்கள் பத்தியும் இந்த கிரிவலம், கோவில் வலம் மூலமா சொல்ல முயற்சி செஞ்சிருக்கேன்.

யாரைப் பாக்க கந்தன் திருவண்ணாமலை வந்தானோ அவர்களைப் பார்த்த பின்னாடி கதை கொஞ்சம் வேகமா நகரும்ன்னு நினைக்கிறேன். இப்ப ஆடி அசைஞ்சு ஆடிப்பூர வில்லிபுத்தூர் தேர் மாதிரி மெதுவா நகர்ற மாதிரி இருக்குல்ல?! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபுரத்து இளைய பெருமாளாகிய முருகனையும்//

ஆகா..
முருகன் இளைய பெருமாள் ஆனாரா? இல்ல ஜிரா இதப் பாத்துட்டும் ஒன்னுமே சொல்லாமப் போனாரா? :-)

பரவாயில்லை! அதான் அருணகிரியே
சூழ வர வரும் "இளையோனே"
வேலை விட வல "பெருமாளே" -ன்னு சொல்லிட்டாருல்ல!
இளைய பெருமாள் தான்! :-)

இளையனார் என்ற பெயர் இனிமையார் என்று இனிமையாவே இருக்கு குமரன்!
கோபுரத்து இளையனார்!
கம்பத்து இளையனார்!
காஞ்சிபுரம் பக்கத்துல இளையனார் வேலூர் ன்னு முருகன் கோவில்! அங்கு வேல் நிறுவி வழிபாடு!

கதைக்கு வேகம் கூட்டுங்கள் குமரன்! கேசவன்-கந்தன் பாத்திரங்கள் பேசட்டும்! மீதிக் கதைகளுக்கு அப்புறம் வரலாம்!

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்,

நீங்கள் சொன்ன மாதிரி அருணகிரியார் வழியில் தான் இளையனார் என்றும் இளைய பெருமாள் என்றும் திருவண்ணாமலையில் முருகனை அழைக்கிறார்கள். அதனையே நானும் எழுதினேன். இராகவனும் அதனால் தான் திருப்புகழை மட்டும் பாடிவிட்டுச் சென்று விட்டார்.

வேகம் கூட்ட வேண்டுமா இரவிசங்கர்? பார்க்கிறேன் முடிகிறதா என்று. அடுத்த இரு அத்தியாயங்களையும் எழுதி முடித்துவிட்டேன். வேண்டுமென்றால் அதற்கடுத்து எழுதும் அத்தியாயங்களை வேண்டுமானால் முடுக்கிவிடலாம். :-)

எல்லோருக்கும்: உங்கள் பொறுமைக்கு நன்றி. மனத்தில் தோன்றுவதைத் தொடர்ந்து சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

கதை வேகமாகப் போக வேண்டுமென்பதால் வாரத்திற்கு மூன்று முறை என்று மாற்றிவிடலாமா என்று நினைக்கிறேன். நண்பர்களின் கருத்து தேவை.

jeevagv said...

ஆக, நாமும் கூடவே கோவிலைச் சுற்றி வந்தாச்சு - மிக்க நன்றி.

கூடவே கேவில் முக்கியமானவற்றை பார்க்கவும், அவற்றைப் பற்றி கேட்கவும் கிடைத்தது. அதுவே முக்கியம். கதைக்கு இந்த வேகம் போதும், அவசரமில்லை. ்

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்

நீங்க ஒன்றும் போட்டிக்(கு)கதை எழுதவில்லையே, திருப்பமும், வேகமும், பாய்ச்சலும் காட்டுவதற்கு. :-)

இதே முறையில் செல்லுங்கள். முடிந்தால் ஒவ்வொரு பதிவிலும் வரும் உபகதைகளை கடைசியில் ஒரு தனி லிஸ்டா வைத்துவிடுங்கள்.
கதைமுடிந்தபின் ஒவ்வொரு பதிவாக அக்கதைகளை நீங்க எங்களுக்கு சொல்ல ஏதுவாக இருக்கும் :-)

cheena (சீனா) said...

குமர, துணைக்கதைகள் பலப்பல - மூலக்கதையோட்டம் தடைப்படுகிறதோ?

திருவண்ணாமலை - கோவிலைப் பற்றிய அருமையான கையேடு. புதிதாக வருபவர்களுக்கும், பலமுறை வந்தவர்களுக்கும் கூட பயன்படும் கையேடு. சுற்றுலாத்துறையினருக்கு பரிந்துரைக்கலாம்.

பொறுமை- உழைப்பு - எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் - அனைத்துமே பாராட்டத் தக்கவை.

நல்வாழ்த்துகள் குமரன்

குமரன் (Kumaran) said...

அடுத்த அத்தியாயத்திலும் கோவிலைச் சுற்றி வருவோம் ஜீவா.

குமரன் (Kumaran) said...

//நீங்க ஒன்றும் போட்டிக்(கு)கதை எழுதவில்லையே, திருப்பமும், வேகமும், பாய்ச்சலும் காட்டுவதற்கு. :-)
//

:-))

தொடர்கதை முடிந்த பின்னர் முடிந்தால் உபகதைகளையும் சொல்கிறேன் மௌலி.

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. மூலக்கதையில் இப்படித் தான் செல்வதாக முன்பே எண்ணம் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு மூலக்கதையில் தடை ஏற்படுவது போல் தோன்றவில்லை. உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா?

எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கத் தான் செய்கிறது. :-)

தங்கள் பாராட்டுகளுக்கு நல்வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.

VSK said...

வெறும் கதை என்ற கோணத்தில் பார்த்தால், பொதுவாகப் படிப்பவர்க்கு கதை மெதுவாக நகர்வது போலவே தோன்றும்.

ஆனால் இது ஒரு ஆன்மீகத் தொடர் என்ன நீங்கள் சொல்லியிருப்பதால், கோவில் பற்றிய தகவல்கள் போரடிக்கவில்லை.

மற்றவர்க்கு எப்படியோ!

தலைப்பை வைத்துப் பார்க்கும் போது, புல்லில் தொடங்கி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைக்கணுமே!:))

உங்க போக்கிலியே எழுதுங்க குமரன்!

வாரம் மூன்று இன்னும் கொஞ்சம் வேகம் காட்டும்!

Geetha Sambasivam said...

திருவண்ணாமலைக்கு முதல் முதல் செல்லும் என் போன்றவர்களுக்குத் தேவையான செய்திகள் பல கொடுத்துள்ளீர்கள். நன்றி, என்றாலும், கதையின் நோக்கம் பற்றி இன்னும் ஒரு சின்னக் கோடி கூடக் காட்டவில்லையே ஏன்?

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே. தலைப்பை ஒட்டிய பகுதிகள் வரும் போதும் மிக மிக மெதுவாகத் தான் போகுமோ என்று நினைக்கிறேன். முழுக்கதையையும் இரண்டு பத்திகளில் சொல்லி முடித்துவிடலாம். கதை அம்புட்டு தான். ஆனால் தொடர்கதையாக எழுதும் போது நிகழ்வுகள், உரையாடல்கள் என்று எழுத நினைத்து அப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன். :-)

இந்திய நேரப்படி திங்கள் காலை, புதன் காலை, வெள்ளி காலை என்று வாரம் மூன்று முறை இடலாம் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

கதையின் நோக்கம் தலைப்பிலேயே இருக்கிறது கீதாம்மா. அந்தச் சின்னக் கோடி காட்டிவிட்டு அதனை இன்னும் தொடாமல் போய் கொண்டிருக்கிறேன். முன்பே ஒரு இடுகையில் எஸ்.கே.க்கு சொன்ன மாதிரி ஏழாவது/எட்டாவது அத்தியாயத்தில் தலைப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும்.

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
என்னைக் கவர்ந்தது அழகான படங்கள் !

Detailed comment later :) In the midst of a migraine now :(

குமரன் (Kumaran) said...

நன்றி பாலா சீனியர்.

Geetha Sambasivam said...

போன முறையே எழுத நினைச்சு மறந்து போனது. நேபாளத்தில் பசுபதிநாதர் கோயிலே மயானம். மயானமே கோயில், அங்கே பசுபதிநாதர் சன்னதிக்குப் பின்புறம்தான் (அப்படியும் சொல்ல முடியாது, 4 பக்கமும் திருமுக தரிசனமும், மேல் நோக்கிய முக தரிசனமும் இருக்கே) ஆகவே இறைவனின் கண்ணெதிரேயே தினமும் பலருக்கு தகனம் நடைபெறும். எங்க கூட கைலை யாத்திரை வந்த ஸ்ரீமதி ஸ்ரீலட்சுமி என்னும் ஆந்திரப் பெண் எழுத்தாளர், கைலையிலேயே இறந்து போக அவர் உடல் பசுபதிநாதர் கோவிலில் தகனம் செய்யப் பட்டது. ஆகவே இது நமக்கு வேணும்னா கொஞ்சம் புதுசாவும், திகைப்பாவும் இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

நேபாளம் பசுபதிநாதர் ஆலயத்தைப் பற்றி சொன்னதற்கு நன்றி கீதாம்மா. பரணிதரன் எழுதிய திருத்தல யாத்திரை தொடரில் படித்தது இப்போது நினைவிற்கு வருகிறது.

Kavinaya said...

படிச்சுக்கிட்டே இருக்கேன். திருவண்ணாமலை போனதே இல்லை :( இப்போ போனாப்ல இருக்கு :) படங்களெல்லாம் கொள்ளை அழகு. நன்றி குமரா...

குமரன் (Kumaran) said...

நானும் ரெண்டே தடவை தான் போயிருக்கேன் அக்கா. சின்ன வயசுல சுற்றுலா போனப்ப ஒரு தடவை. அப்புறம் வேலைக்குச் சேர்ந்தவுடனே நண்பன் கார்த்திகேயனோட, தாத்தாவைப் பார்க்க போனப்ப ஒரு தடவை.