Friday, November 09, 2007

உதயசூரியனின் ஒளி எத்திசையும் பரவும்!!!


'எங்கும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் உலகத்தோர் எல்லோரும் மகிழும்படி மெதுவாகக் கதிரவன் கடலின் மேல் தோன்றினாற் போல' என்று ஒரு அருமையான உவமையை முருகப்பெருமானின் திருவுருவத் தோற்றத்திற்குத் தந்து தன் அழகு மிகு நூலைத் தொடங்கினார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். அப்படித் தோன்றிய கதிரவன் எந்த எந்த வகையில் முருகனுக்கு உவமையாக அமைகின்றது என்பதை சென்ற இடுகையில் கண்டோம். அப்படி கந்தக்கடவுளின் தோற்றத்தைப் பற்றி சொன்ன திருமுருகாற்றுப்படை அந்தப் பெருமானின் திருமேனி ஒளியையும் அதே உவமை கொண்டு விளக்கிச் செல்கிறது.

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி

பகலவன் தோன்றியவுடன் ஒளி வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தோன்றி விளங்குகிறது. எங்கும் ஒழிவற கண் காணும் தூரம் வரை எங்குமே ஒளி வீசி நிற்பதைப் போல விளங்குகிறது பகலொளி. அந்தப் பகலொளியைப் போலவே காண்போர் கண் செல்லும் அளவிற்கும் (சேண் - சேய்மை - தூரம்) விளங்கி எங்கும் ஒழிவற (ஓவற) விளங்கி நிற்கின்ற ஒளியை உடையவன் திருமுருகன்.

இருள் சூழ்ந்து இருந்த காலத்திலிருந்து சிறிதே நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்த காலம் வந்ததால் கண்களால் அந்த ஒளியை உடனே நோக்க இயலவில்லை. அதனால் பல முறை இமைத்து இமைத்து நோக்குகின்றன அந்தக் கண்கள். அப்படி ஓவற இமைக்கும் படி அமைந்திருக்கிறது எங்கும் வீசும் பெரும் ஒளி (அவரொளி). கட்புலனுக்கு மட்டுமே இந்த உவமையைக் கூறவில்லை ஆசிரியர். கதிரவன் தோன்றும் போது கட்புலன் மட்டுமே இமைக்கின்றது. ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.

சங்கப் புலவர்களின் அணி நயத்தைப் பற்றி ஒரு கருத்து உண்டு. முடிந்த வரை இயல்பாக நடப்பதை உவமையாகக் கூறுவதை அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்றும் உயர்வுநவிற்சி அணியை சுவை கூட்டல் பொருட்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. பிற்கால இலக்கியங்களில் இறைவனைப் போற்றும் போது பல நூறு, பல்லாயிரம், பல கோடி சூரியன்கள் எழுந்தாற்போன்ற ஒளியுடையவன் இறைவன் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இன்றி ஒரு சூரியன் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உதித்தான் முருகன் என்று இயல்பாக உள்ளதை உவமையாக இங்கே கூறுகிறார் நக்கீரனார். அப்படி உயர்வு நவிற்சி இன்றிக் கூறும் இடத்தும் பல அழகிய பொருட்களை ஒவ்வொரு சொல்லிலும் சொல்லி அழகு பெற திருமுருகன் தோற்றத்தை வருணித்திருக்கிறார். மூன்றே வரிகளில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்?

***

இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் எப்போதும் தன்முனைப்பு நீங்கிய உயிர்களின் திருவுள்ளத்தில் விளங்குவதையும் அவர்களாலும் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தூரத்தில் விளங்குவதையும் காட்டுகிறது என்றார். இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள் - பத்தியுடைய அடியவர்களுக்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்று வேறோரிடத்தில் படித்திருப்பதால் இந்த விளக்கம் என் மனத்திற்குவந்த முதல் விளக்கமாக இல்லை. ஆயினும் இந்த அடியைப் படிக்கும் இடத்தே அந்த விளக்கத்தையும் தருவது பொருத்தமுடையது என்பதால் அவர் எழுதிய விளக்கத்தை அப்படியே எடுத்து இங்கே இடுகிறேன்.

***

முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?

"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"

என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)

"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!

மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!

1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்

கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!

10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
கந்த சஸ்டி ,விசேசமா??
நல்லாப் பொருள் பிரித்துள்ளீர்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா. கந்தர் சஷ்டிக்கு என்று எழுதவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன்.

G.Ragavan said...

குமரன், நல்ல விளக்கம். நீங்கள் சொல்வது சரிதான். நக்கீரர் உயர்வு நவிற்சிக்கெல்லாம் போகவில்லை. தன்மையிலேயே நன்மையைச் சொல்லிவுடும் வன்மை அவருக்குத் திண்மை என்பது நமக்குப் புரிகிறது.

கணக்காயர் மகனா நக்கீரர். அவர் வலைஞர் என்று படித்த நினைவு.

சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேது குலம்

அப்படிப் பார்த்தால் வலைஞராக இருந்திருப்பார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

குமரன் (Kumaran) said...

அப்பாடா. வெகு நாட்களுக்குப் பின் நான் சொன்ன விளக்கம் சரி என்று நீங்கள் ஒத்துக் கொண்டது போல் தோன்றுகிறது இராகவன். :-) இது வெறும் தோற்றமாகக் கூட இருக்கலாம். :-)

மதுரைக் கணக்காயனார் மகனார் என்று தான் மதுரைத் திட்டத்திலும் தமிழ் இணையப் பல்கலைகழகத்திலும் போட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் சங்கறுப்பதெங்கள் குலம் ஒரு செய்யுளாகப் படித்திருக்கிறேன். எங்கு என்று நினைவில்லை. அதனை வைத்து வலைஞர் என்று சொல்லப்படுகிறார். வலைஞர் குலமாக இருந்து கணக்காயனார் ஆகியிருக்கலாம் அல்லவா? பழந்தமிழர் குலங்கள் தொழில் அடிப்படையிலா பிறப்பின் அடிப்படையிலா என்ற கேள்வி இருக்கிறது. பலரும் பழந்தமிழர் குலங்கள் தொழில் அடிப்படையில் தான் என்று உறுதியாக எண்ணுகின்றார்கள். அது சரி என்றால் வலைஞர் கணக்காயனார் ஆனதில் என்ன முரண்?

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்கள் சொல்லும் சங்கறுப்பதெங்கள் குலம் ஒரு செய்யுளாகப் படித்திருக்கிறேன். எங்கு என்று நினைவில்லை//

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் ஆனால் உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!

நக்கீரா.....
ஆளு அவுட்டு.....:-))))
திருவிளையாடல் டயலாக் குமரன்! நினைவில்லையா?
இந்த வரிகள் அப்படியே வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான்//

//இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன்//

குமரன்
நண்பர் ரத்னேஷ் சொல்லும் கருத்தும் அழகு மட்டுமில்லாமல் ஏற்புடைத்தும் கூட!
அகலில் அகலும் அணுகில் அணுகும்
என்பதும் வாசகம் அல்லவா?
அது போல் தான் ஓவற-சேண் விளங்கு! அருகிலும் இருக்கு! தொலைவிலும் இருக்கு!

உங்கள் கூட்டுப் பொருள் உவமையும் அழகு தான்!
//இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று//
ஆணவ இருள் அகன்றதால் தோன்றும் அவிரொளி அல்லவா!

அது சேணில் விளங்கினாலும் கூட,
ஆணவ இருளில் இருந்து அவிர் ஒளிக்கு வரும் போது கண் தானாகவே இமைக்கிறது! :-)

குமரன் (Kumaran) said...

திருவிளையாடல் பட உரையாடல்கள் நினைவில் இருக்கின்றன இரவிசங்கர். அந்த உரையாடல்கள்/செய்யுள் நடையில் படத்திற்காக எழுதப்படவில்லை; அவை ஏற்கனவே இருந்தன என்று தான் நினைக்கிறேன். அவற்றைத் தான் எங்கே எப்போது படித்தேன் என்று நினைவில்லை.

Kavinaya said...

//ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.//

அருமை!

குமார் said...

மிக்க நன்றி....