Sunday, September 23, 2007

கண்ணனுக்குப் பிடித்த பக்தன் - இராமனுக்கும் அதே!


இராமபக்தியில் சிறந்தவர்களாக தங்களை இந்த அரசியல்வாதிகளும் குமுகவிரோதிகளும் காட்டிக்கொண்டு மக்களைத் தூண்டிவிட்டு அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறை நம்பிக்கை இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று எல்லோரும் பொறுப்பின்றிப் பேசியும் அழிவினை ஏற்படுத்தியும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த இடுகை எழுதும் படி அமைந்தது தற்செயலானது இல்லை என்றே நினைக்கிறேன்.

கீதையில் கண்ணன் யார் தனக்குப் பிடித்த பக்தன் என்று சொல்லிக் கொண்டு வரும் போது சொல்லும் இந்த இரு சுலோகங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. அடிக்கடி பொருளுடன் எண்ணிக் கொள்ளும் சுலோகங்கள். இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று இதற்கு நேரம் வந்தது.

அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார சம துக்க சுக: க்ஷமி

சந்துஷ்ட சததம் யோகி யதாத்மா த்ருட நிச்சய:
மய்யர்ப்பித மனோ புத்திர் யோ மத் பக்த ச மே ப்ரிய:

அத்வேஷ்டா - (யாரிடமும்) வெறுப்பு (துவேஷம்) இல்லாமல்

சர்வ பூதானாம் - எல்லா உயிர்களிடமும்

மைத்ர: - நண்பனாகவும்

கருண ஏவ ச - கருணையுடனும்

நிர்மமோ - தன்னுடையது என்ற எண்ணம் இல்லாமலும்

நிரஹங்கார - தான் என்ற கருவம் இல்லாமலும்

சம துக்க சுக: - இன்ப துன்பங்களில் ஒரே மாதிரியாகவும்

க்ஷமி - பொறுமை கொண்டவனாகவும்

சந்துஷ்ட சததம் - எப்போதும் மகிழ்வுடனும்

யோகி - பிறர்க்குதவும் யோகத்தில் ஆழ்ந்தவனும்

யதாத்மா த்ருட நிச்சய: - மனத்தில் திட நம்பிக்கையுடனும்

மய்யர்ப்பித மனோ புத்திர் - என்னிடம் அர்ப்பணிக்கப்பட்ட மனமும் புத்தியும் கொண்டு


யோ மத் பக்த - யார் எனக்கு பக்தனாக இருக்கிறார்களோ

ச மே ப்ரிய: - அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்.

கண்ணன் இங்கே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறான் யார் தனக்குப் பக்தர்கள்; யார் தனக்குப் பிரியமானவர்கள் என்று. எல்லோருக்கும் இந்த சுலோகங்களில் செய்தி இருக்கிறது. எனக்கான செய்தியை இந்த சுலோகங்கள் சொல்லும் போது மனத்தில் இருத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

17 comments:

கோவி.கண்ணன் said...

குமரன் ஒரு கேள்வி,

கடவுள் (உருவங்கள்) கையில் உள்ள ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு, சாதாரண மனிதராக வந்தால் எத்தனை பேருக்கு அதுகடவுள் என்று தெரியும் ? - 'உள்ளுணர்வு' சொல்லும் என்று பல்டி அடிக்கக் கூடாது :-)

சில கோவில்களின் ஒரே சிலைக்கு பல்வேறு உருவ அலங்காரம் பண்ணுவார்கள். பார்த்திருக்கிறேன். அலங்காரங்களை கலைத்துவிட்டால் வெறும் சிலை மட்டுமே இருக்கும், அது எந்த சாமி என்று தெரியாது.

புறத்தோற்றமான நாமம், ஆயுதங்கள், வாகனங்கள் தவிர்த்து இந்த உருவ கடவுளுக்கு இதுதான் உருவம் என்று எதாவது இருக்கிறதா ?

உதாரணத்துக்கு வெங்கடசலபதி அணிகலன்களையும், நாமத்தையும் எடுத்துவிட்டால் என்ன சாமி என்றே தெரியாது என்றே நினைக்கிறேன்.

இந்த முகம் தான் உண்மையானது என்று சொல்வதற்கு அந்தந்த உருவகடவுளுக்கு என்ற உருவம் இருக்கிறதா ?

உங்கள் கருத்து என்ன ?

புத்தரைக் கூட சீனர்கள் சீனரைப் போல் இடுங்கிய கண்ணாகத்தான் புத்தர் கோவிலில் வைத்திருக்கிறார்கள். நம் இந்திய புத்தர் வேறு போல் இருப்பார். ஆனால் ஜீசஸ் ஒன்று போல் தான் எல்லா ஊர்களிலும் தெரிகிறார்.
(ஒரு எடுத்துக்காட்டுதான் . இவர்கள் வாழ்ந்தவர்கள் என்பதால் இதை ஒப்பிட்டுக்காக எடுத்துக் கொள்ள முடியாது)

வெட்டிப்பயல் said...

நல்ல செய்தி...

அப்ப பிடித்த பக்தனாவது ரொம்ப ரொம்ப கஷ்டம் போல...

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

ரொம்ப ரொம்ப ரொம்ப கடினம் பாலாஜி. நாம் பக்தர் என்று என்ன தான் சொல்லிக் கொண்டாலும் இந்தக் குணங்கள் எல்லாம் வரும் வரை இறைவன் அவனது பக்தர் என்று நம்மைச் சொல்ல மாட்டான் போலும். அப்போது நாம் என்ன தான் சொல்லிக் கொண்டாலும் என்ன பயன்?

jeevagv said...

நல்ல சமயத்தில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் குமரன்!. கண்ணனுக்கும், ராமனுக்கும் பிடித்தவரின் பதிவில் இப்போது பின்னூட்டம் இடுவதும் பெருமை எனக் கருதுகிறேன்!

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா. இப்போது தான் வேறு ஒருவரது இடுகையில் பின்னூட்டம் இட்டுவிட்டு வந்தீர்களா? இராமனுக்கும் கண்ணனுக்கும் பிடித்தவர் பதிவில் பின்னூட்டம் இடுவது பெருமை என்று சொல்லியிருக்கிறீர்கள். அது தான் கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,கண்ணனுக்குப் பிடித்த பக்தனாக ஆவதற்கு, முதலில் ஆத்மசுத்தி செய்துவிட்டுத் தான்
முதல்படியில் கால் வைக்கவேண்டும்

என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்லுவார்கள்.
இன்னும் அவனுக்குப் பிடித்த எல்லாம் செய்து,
அவனுக்குப் பக்தனாக
ஆண்டாளையும், கோபிகளையும்தான் பின் பற்றவேண்டும்:))

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

நடப்பிற்கேற்ற பதிவு....

இந்த பக்குவம் வந்துவிட்டால் நாம் ரிஷிகளாகவோ, தேவர்களாகவோ ஆகிவிடுவோம். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்ப பிடித்த பக்தனாவது ரொம்ப ரொம்ப கஷ்டம் போல//

இல்லவே இல்லை பாலாஜி!
பிடித்த பக்தனாவது மிக மிக எளிது!
குமரன் சொன்னது எல்லாம் படிப்படியான அடுத்தடுத்த நிலைகள்!

பிடித்த பக்தன் ஆகணும்னா, ஒன்னே ஒன்னு போதும்! முதல் வரியை மட்டும் கவனியுங்கள்!
அத்வேஷ்டா - (யாரிடமும்) வெறுப்பு (துவேஷம்) இல்லாமல்!

அடுத்தவருக்கு உதவக் கூட வேண்டாம்! வெறுப்பு (துவேஷம்) இல்லாமல் இருந்தாலே அன்பு வந்து விடும்! அவ்வளவு தான்! பிடித்த பக்தன் ஆகிடலாம்!

கோபிகைகள் எல்லாம் இந்த சுலோகத்தில் சொன்ன எல்லாத்தையும் செய்யலை!
அவர்கள் செய்தது ஒன்னே ஒன்னு தான்! - அத்வேஷ்டா - (யாரிடமும்) வெறுப்பு (துவேஷம்) இல்லாமல்!

இப்போ சொல்லுங்க! கண்ணனுக்குப் பிடித்தவர்கள் கோபிகைகளா இல்லை "மதம்" பிடித்தவர்களா? :-)

ராமனை நமக்குப் பிடிக்கும்.
ஆனா ராமனுக்கு நம்மைப் பிடிக்குமா?

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன்,

இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் உங்களுக்குத் தான் வரும். எனக்கு இது வரை தோன்றியதில்லை. :-)

கடவுள் சாதாரண மனிதனாக வந்தால் எத்தனை பேருக்கு அது கடவுள் என்று தெரியும்? யாருக்கும் தெரியாது தான். அவர் தானே கடவுள் என்று சொன்னாலும் பித்தலாட்டக்காரன் என்று திட்டுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இறையுணர்வு உள்ளவர்களும் மனித உருவில் வந்த அவனை நம்ப மாட்டார்கள். 'அவஜானந்தி மாம் மூடா மானுசீம் தனும் ஆச்ரிதம் பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஸ்வரம் - மனித உடலை எடுத்திருக்கும் நான் எல்லா உயிர்களுக்கும் இறைவன் என்று அறியாத அறிவிலிகள் என்னுடய ஒப்பற்ற தன்மையை அறியாமல் என்னை அவமதிக்கிறார்கள்' கீதையில் கண்ணன் சொன்னது.

மற்ற கேள்விகள் எல்லாம் கோவிலில் இருப்பது வெறும் கல் (சிலை) என்ற பார்வையில் வருவது. அவை கடவுளின் உருவம் என்று எண்ணுபவர்கள் எல்லாத் திருவுருவங்களும் அவன் திருவுருவங்களே என்று எண்ணுபவர்கள் - இவர்களுக்கு அந்தக் கேள்விகள் வருவதில்லை.

உங்கள் பார்வையில் வந்த கேள்விகளுக்கு உங்கள் பதிலே பதில். :-)

புத்தரும் ஏசுநாதரும் வாழ்ந்தவர்கள் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கே அமெரிக்காவில் ஏசுநாதரின் வரலாற்றுத் தன்மையைக் கேள்வி கேட்டு பல தரவுகள் காட்டுகிறார்கள். :-)

குமரன் (Kumaran) said...

வல்லி அம்மா. இராம பக்திக்கு அனுமனையும் கிருஷ்ண பக்திக்கு ஆண்டாளையும் (ஆழ்வார்களையும்) கோபியர்களையும் பெரியவர்கள் காட்டுவார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் அவர்கள் சொன்னதையும் பார்த்தால் கீதையின் இந்த சுலோகங்களுக்குப் பொருள் புரியும்; வாழும் வழியும் தெரியும் என்று நினைக்கிறேன்.

ஆத்மசுத்திக்குப் படிப்படியாகச் செய்ய வேண்டியதை இந்த சுலோகங்களில் கண்ணன் சொல்லியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை மௌலி. இந்தப் பக்குவம் வந்தவரைத் தான் கண்ணன் இன்னொரு இடத்தில் ஞானி என்று அழைத்து தானும் அந்த ஞானியும் ஒன்றே; வெவ்வேறு இல்லை என்கிறான்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இரவிசங்கர். முதல் படியில் நிலை நின்று விட்டால் மற்றதெல்லாம் மிக எளிதாக வந்துவிடும் தான். ஆனால் அந்த 'அத்வேஷ்டா சர்வபூதானாம்' தானே மிகக் கடினமாக இருக்கிறது. இன்று அரசியல் செய்பவர்கள் தங்கள் நலனுக்காகவும் பதவிக்காகவும் மற்றவர்களைத் தூண்டி அழிவினை உண்டாக்குகிறார்கள். என்னைப் போன்றவர்களோ சின்ன சின்ன விதயத்திற்கெல்லாம் சிலரின் மேல் தேவையில்லாத வெறுப்பு கொண்டு சினந்து கொண்டு சுய நிம்மதியும் இழக்கிறார்கள். இந்த முதல் படியை அடைந்தாலே போதும் தான். அதற்குத் தான் முயன்று கொண்டிருக்கிறேன்.

இராமனை நமக்குப் பிடிக்கும். நம்மை இராமனுக்குப் பிடிக்குமா? நம் செயல்கள் இராமனுக்குப் பிடிக்குமா? இது தான் இராம பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இந்த இடுகை சொல்ல வந்ததை சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி. :-)

G.Ragavan said...

இறைவன் நமக்குப் பிடித்ததைச் செய்கிறோமா என்பதை விட இறைவனுக்குப் பிடித்ததை நாம் செய்கிறோமா என்பதுதான் கேள்வி. அதைத்தான் நீங்கள் குறிப்பிடும் வடமொழிச் செய்யுளும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

// கோவி.கண்ணன் said...
குமரன் ஒரு கேள்வி,

கடவுள் (உருவங்கள்) கையில் உள்ள ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு, சாதாரண மனிதராக வந்தால் எத்தனை பேருக்கு அதுகடவுள் என்று தெரியும் ? - 'உள்ளுணர்வு' சொல்லும் என்று பல்டி அடிக்கக் கூடாது :-)

சில கோவில்களின் ஒரே சிலைக்கு பல்வேறு உருவ அலங்காரம் பண்ணுவார்கள். பார்த்திருக்கிறேன். அலங்காரங்களை கலைத்துவிட்டால் வெறும் சிலை மட்டுமே இருக்கும், அது எந்த சாமி என்று தெரியாது.

புறத்தோற்றமான நாமம், ஆயுதங்கள், வாகனங்கள் தவிர்த்து இந்த உருவ கடவுளுக்கு இதுதான் உருவம் என்று எதாவது இருக்கிறதா ? //

இது குமரனுக்கு மட்டுந்தானா கோவி :)

கோவி, பெரும்பாலன இறையடியவர்கள் கூற்றுப்படியும் நம்பிக்கையின் படியும் இறைவன் அனைத்துமாய் நின்று அனைத்தையும் கடந்தவன். அப்படீன்னா? எல்லாம் அவந்தான். அந்த எல்லாத்தையும் விட அவன் பெரியவன். அப்ப எல்லா உருவமும் அவனுடைய உருவந்தான். அதே நேரத்துல இந்த உருவங்களையெல்லாம் விடவும் அப்பாற்பட்டவன். அதுனாலதான் "நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவன்" அப்படீன்னு சொல்றாங்க. அப்படி நம்புறவங்க வம்புறவங்க இல்ல.

அழகூட்டல், நீராட்டல், சீராட்டல் எல்லாம் குழந்தை விளையாட்டுங்க. குழந்தை பொம்மை வெச்சி விளையாடுற மாதிரி. தப்பில்லை. ஆனா பொம்மையை வெச்சி வியாபாரம் செய்றதுதான் தப்பு.

// புத்தரைக் கூட சீனர்கள் சீனரைப் போல் இடுங்கிய கண்ணாகத்தான் புத்தர் கோவிலில் வைத்திருக்கிறார்கள். நம் இந்திய புத்தர் வேறு போல் இருப்பார். ஆனால் ஜீசஸ் ஒன்று போல் தான் எல்லா ஊர்களிலும் தெரிகிறார்.
(ஒரு எடுத்துக்காட்டுதான் . இவர்கள் வாழ்ந்தவர்கள் என்பதால் இதை ஒப்பிட்டுக்காக எடுத்துக் கொள்ள முடியாது) //

இல்ல கோவி. ஏசுவிலும் சப்பான் ஏசு, இந்திய ஏசுன்னு பார்க்கலாம். தோல் வெளுப்பாயிருக்குமே தவிர, முகத்துல அந்த ஊர்த்தன்மை வந்திரும். இங்க ஐரோப்பாவுல இருக்குற சர்ச்சுகள்ள இருக்குற ஏசுநாதர் முகமும் நம்மூர்கள்ள பாத்த முகமும் வேற மாதிரிதான் இருக்கு. றோர்மண்டுல சிலுவைல பாத்த ஏசுநாதர் ரொம்பவே வேற மாதிரி இருந்தாங்க. அதுவும் Y வடிவச் சிலுவை வேற.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். இறைவன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு வரையறை வைத்திருக்கிறோம். அப்படி இல்லாவிட்டால் 'இப்படிப்பட்டவன் எல்லாம் இறைவனா?' என்று கேட்கிறோம். :-) அதே போல் நாம் விரும்பியதை எல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி நடக்காவிட்டால் இறைவனைக் கேள்வி கேட்கிறோம். ஆனால் அவன் விரும்பும் படி நாம் இருக்கிறோமா என்பது கேள்வியே. இரவிசங்கர் சொன்னது போல் 'இராமனின் பக்தர்கள் என்று நாம் சொல்லிக்கொள்ளலாம். அது முக்கியமில்லை. இராமன் நம்மைத் தன் பக்தன் என்று சொல்லிக் கொள்வானா?'

கோவி.கண்ணன் said...

//G.Ragavan said...
இது குமரனுக்கு மட்டுந்தானா கோவி :)...

அழகூட்டல், நீராட்டல், சீராட்டல் எல்லாம் குழந்தை விளையாட்டுங்க. குழந்தை பொம்மை வெச்சி விளையாடுற மாதிரி. தப்பில்லை. ஆனா பொம்மையை வெச்சி வியாபாரம் செய்றதுதான் தப்பு.//

ரிப்பீட்டே......

ஜிரா,
அவருக்காக மட்டும் கேட்கவில்லை. ஆனால் இந்த கேள்விக்கு கண்ணபிரான் ரவிசங்கரும் வந்து பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தேன் :)

உருவ வழிபாடு என்பது முழுக்க முழுக்க வெளி அடையாளம் (வேல், வாகனம்) சார்ந்ததாக இருக்கிறது என்பதாக எனக்குப் பட்டதால் மேற்கண்டவற்றை ஐயம் (சந்தேகமாக) கேட்டேன்.

முருகனை நினைத்தால்... குறைந்தது வேல் இல்லாமல் எவராலும் நினைக்க முடியாது, ஆனால் முகம் இதுதான் என்று கருதுவதற்கு இடமே இல்லை. அப்படி இருந்தாலும் ஏதாவது படத்தைப் பார்த்து ஏற்கனவே பதிய வைத்துக்கொண்டதாக அவை இருக்கும்.

மற்ற உருவங்களைவிட, ஒன்று போலவே, மாறாதுமாக இருக்கும் பிள்ளையாரை பிடித்துவைப்பதும், நினைக்க முடிவது எளிதாக இருப்பதால் பிள்ளையார் வழிபாடு விரைவாக பரவி இருக்கக் கூடும் என்றும் நினைக்கிறேன்.

குமரன்...! இதற்கு மேல் இது பற்றி இந்த இடுகையில் எதுவும் கேட்கமாட்டேன்.
:))

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். இந்த இடுகையில் இனி மேல் எதுவும் கேட்கமாட்டீர்களா? OK. No Problem. திருக்குறள், திருவள்ளுவர்ன்னு ஒரு இடுகை போட்டிருக்கேனே. அங்கே வந்து எதுவும் சொல்லலை?