Wednesday, September 12, 2007

இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 - 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு - வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த - நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் - என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின - விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் - காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின - காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் - விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின - இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் - கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின - கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் - இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் - மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய, மிக்க சினம் கொண்ட - முன்னர் 'மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)'என்று எழுதியிருந்தேன். இந்த இடுகையை மின் தமிழ் குழுமத்தில் இட்ட போது திரு. வேந்தன் அரசு ஐயாவும் திரு. ஹரிகிருஷ்ணன் ஐயாவும் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது மாற்றிவிட்டேன்.

இராமன்
உடன் புணர் - உடன் வாழும்
சீதையை
வலித்தகை - வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் - இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை - கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி - நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை - கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு - அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை - (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே - இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. 'இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது' என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே 'தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்' சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

உசாத்துணை

86 comments:

MSATHIA said...

அழகான விளக்கங்கள். பழந்தமிழ் வரிகளை வரி வரியாக விளக்கியதற்கு நன்றி.
தொடர்புடைய மற்றொரு சங்கதி.
இன்று வந்த செய்தி
இராம் என்று ஒருவர் இருந்ததற்கு ஆதாரமே இல்லை என்கிறது இந்திய அரசாங்கம். அப்புறம் எப்படி பழந்தமிழ் இலக்கியம் முதல் மற்ற எல்லா இடங்களிலும் இராமன் என்ற ஒரு பெயர் வந்ததோ!! ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியர்களிடம் வரலாறு என்று ஒன்று ஒழுங்காக இல்லை.

சத்தியா

கோவி.கண்ணன் said...

//
அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
//

குமரன்,

இராமயணம் மற்றும் மகாபாரத கதைகள் தமிழில் வாய்வழிக்கதைகளாக இருந்தன என்றும், அவை பழங்காலத்தில் வடமொழியில் கதைகளாக எழுதப்பட்டன என்பது தமிழாய்வளர்கள் வைக்கும் கருத்து, அதற்கு சான்றாக தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டே அந்த கதைகளின் பாத்திரங்கள் கம்பராமயணத்திற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் உண்டு. மகாபரதத்தில் பாண்டிய வம்சமே பாண்டு வம்சாமாக எழுதப்பட்டுள்ளதாக படித்திருக்கிறேன். திரவுபதி, அரவான், தருமர் கோவில்கள் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கும், இராமயண, மகாபாரத கதைகளில் சொல்லப்படும் ஊர்கள் தமிழகத்தில் அதே பெயரில் இருக்கின்றன என்பதை சான்றாகக் கொண்டால் பாண்டியன் > பாண்டு நம்பக் கூடிய அளவில் இருக்கின்றன. இவை நடந்த கதையா ? புனைவு கதையா ? என்ற ஆராய்ச்சியை விட இந்த கதைகளுக்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

ஐம்பெரும் காப்பியங்களுக்கு முன் பெருங்காதை இலக்கியங்களை தமிழ் ஆவணப்படுத்தவில்லையோ, அல்லது அந்த ஆவணங்கள் நமக்கு கிடைக்கும் முன் அழிந்துவிட்டதா என்பது தெரியாது. கம்பருக்கும் இவை கிடைக்கவில்லையோ தெரியவில்லை. கம்பர் அப்படியே மொழிப்பெயர்பாக கம்பராமயணத்தை ஆக்கிவிடவில்லை. இலக்கிய நூலாகவும் ஓரளவுக்கு பொறுப்புடனே படைத்திருக்கிறார் ( இராமன் திருமணம் செய்யும் போது வடமொழி சீதைக்கு 8 வயதாம், கம்பனுடைய சீதைக்கு 12 வயதாம் இன்னும் பல ) முற்காலத்தில் தமிழில் இலக்கியங்கள் வடமொழிக்கு பெயர்க்கப்பட்ட பின்பு தமிழ் மூலம் அழிக்கப்பட்டுவிட்டதாக பரிதிமாற் கலைஞர் (சூரியநாரயண சாஸ்திரி) கூட சொல்லி இருக்கிறார்.

நான் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் காத்தவராயன் கதை நடக்கும் போது நாள்தோறும் அங்கு செல்வேன். 15 நாள் வரை நாள்தோறும் 3 மணிநேரம் தொடராக நடக்கும், ஒருவர் பாட மற்றொருவர் கேள்விகள் போல கேட்டும் 'ஆமாம்' போட்டும், பின்பாட்டு பாட இருவர் நடத்தும் பாடல் , கதைவிளக்கம் என்று செல்லும் கதையாடல் (கதாகலாசேப). இதில் வியக்க வைப்பது என்னவென்றால் இருவருக்குமே எழுத்தறிவு படிப்பறிவு இல்லை. இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மனப்பாடமாக வழிவழியாக இத்தகைய கதைகளை அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக அறிந்தேன். அவர்கள் பாடியது வெறும் கிராமியப் பாடல்கள் அல்ல பொருளும் சந்தமும் இணைந்த இலக்கிய தரம் வாய்ந்த செய்யுள் பாடல்களாகவும், வில்லுப்பாட்டு போலவும் அவைகள் இருந்தன என்பதை அவற்றில் சிலவரிகளை இன்றும் என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது. இதுபோல் இராமயணமும் / மகாபாரதமும் எழுதப்படாத ஆவணமாக சங்ககாலத்தில் வாய்வழி செய்யுளாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வெற்றி said...

குமரன்,
இது பதிவின் தலைப்புக்கான பின்னூட்டம். இன்னும் பதிவை வாசிக்கவில்லை. பதிவை வாசித்த பின்னர் மீண்டும் வருகிறேன்.

இராவண மன்னனை அரக்கன் என்று புறநானூறு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இராவணன் சைவத் தமிழ் மன்னன் என்பதே இலங்கையில் நான் கற்றுக் கொண்டது.

புறநானூறு எழுதியவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் இல்லை. அவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதே என் புரிதல். ஆக இப் புலவர்கள் தாம் செவிவழிக் கதைகளாகக் கேள்விப்பட்ட விடயங்களைப் பாடலாக எழுதியிருப்பர். ஆக வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் தாம் கேள்விப்பட்டவற்றை எழுதியதே இது.

அத்துடன் புறநானூறு படைத்தவர்கள் பண்டைய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அக் காலத்தில் போக்குவரத்து இலகுவானதாக இருந்ததில்லை. எனவே இப் புலவர்கள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள மக்களின் செவிவழிக் கதைகளையெல்லாம் கேட்டு எழுதியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆக இவர்கள் திரித்துச் சொல்லப்பட்ட செவி வழிக் கதைகளை வைத்தே இப் பாடல்களை இயற்றியிருக்கலாம்.

அத்துடன் புறநானூறு எழுதப்பட்ட காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது இராவண மன்னைன் ஆட்சி. ஆக இவர்களுக்கு அவரைப் பற்றிது துல்லியமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படித்தான் சிங்களவர்களின் புனைநூலான மகாவம்சம் எனும் நூலும் வியஜன் என்பவன் வடக்கு இந்தியாவிலிருந்து வந்து இங்குள்ள அரக்கர்களை அழித்து இலங்கையை உருவாக்கினான் என்று சொல்கிறது. இப் புனைகதை நூலை சிங்களவர்கள் பலர் வரலாற்று நூலெனவும், தமிழர்களுக்கு முதல் சிங்களவர்களே இல்ங்கைக்கு வந்தனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் இது தவறு என சிங்கள வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் மென்டிஸ் அவர்கள் Problem with Ceylon History எனும் நூலில் வரலாற்று ஆதாரங்களுடன் சொல்கிறர்.

மகாவம்சம் எனும் புனைநூல் எழுதப்பட்டது கி.பி 5 அல்லது 6 ம் நூற்றாண்டில். எனவே கி.பி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை எப்படித் தாம் கண்டது போல சொல்ல முடியும்?

விஜயன் என்ற கதாபாத்திரமே ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று பேராசிரியர் மென்டிஸ் சொல்லியிருந்தார்.

நான் ஏன் இவற்றைச் சொல்கிறேன் என்றால் புறநானூறும் சும்மா புலவர்களால் எழுதப்பட்டதே ஒழிய வரலாற்று ஆசிரியர்களால் அல்ல.

எடுத்துக்காட்டாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் திருக்குறள் நாற்றம் தரும் நூலென பெரியார் சொன்னதாகப் பதிவு போட்டிருந்தார்.

பெரியார் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது. ஆனால் எதிர்கால்ச் சந்ததியினர் பெரியார் இப்படிச் சொன்னார் எனவே திருக்குறள் துர்நாற்றம் வீசும் நூலென சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதுவும்.

புறநானூறு சொல்கிறது என்பதால் அது உண்மையாகி விடாது. விடக்கூடாது.

இலங்கையை அன்று சிவபூமி என்றும் அழைப்பார்கள். இராவணன் ஒழுக்கத்திலும் பத்தியிலும் சிறந்த தமிழ் மன்னன். குறிப்பாக திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வர ஆலயத்தை அமைத்ததும் இராவண மன்னனே என்பதும் இலங்கையின் வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து. பல ஆதாரங்கள் போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர்களால் அழிக்கப்பட்டதால் இவற்றை நிறுவுவது கடினமான செயல். இருப்பினும் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்ந்த பின் இது பற்றி மேலும் ஆய்வுகள் நடாத்த வேணும்.

இன்னொரு விடயம். இலங்கை முன்னாளில் தட்சன கைலாயம் எனவும் அழைக்கப்பட்டது. அங்கு சைவமே முதன்மை மதமாக தமிழர்கள் மத்தியில் இராவண மன்னன் காலத்திலிருந்த இருந்தது. இருக்கிறது.

சீதை இராவண மன்னைன் மகள் என்பதும் எமது நம்பிக்கை. எமது ஊரில் இக் கதை பல தலைமுறையாகச் செவிவழியாக நிலவி வருகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதா குமரன்? காலம் குறிக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

கவிஞரின் உவமை நயம், நகைச்சுவை உணர்ச்சி நன்கு வெளிப்பட்டுள்ளது.

1. வாய் வழிச் செய்திகளின் அடிப்படையிலோ, இல்லை காவிய அடிப்படையிலோ, எதுவாகிலும் சரி....இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்தில் தமிழ் நிலத்தில் இராமகதை பரவி இருந்ததைக் காட்டுகிறது!

2. இராமன், சீதை என்ற முக்கியப் பாத்திரங்களின் பெயர் நேரடியாகவே சொல்லப்பட்டுள்ளது!

3. அரக்கன் = பழந் தமிழ்ச் சொல்லா?
"வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை" என்ற இந்த அடியில் மற்ற சொற்களோடு அரக்கன் என்னும் சொல்லும் புழங்குவதைப் பார்க்கும் போது...தமிழ்ச் சொல் போலத் தான் தெரிகிறது!

அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமன் பற்றிய குறிப்பு எங்கோ படித்துள்ளேன். ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கட்டுரை என்று நினைக்கிறேன்! தேடிப் பார்த்து, பின்னர் வருகிறேன்!

இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் அகநானூறு புறநானூறு காலத்தில் இருந்தே நம்மாளுங்க ஏமாளியா இருந்து இப்படி கொண்டு வந்த திணிக்கப் பட்ட கடவுள்கள் பத்தியே பாட்டு எழுதிக்கிட்டு இருந்திருக்காங்க. நல்ல வேளை இப்போ நம்ம அரசாங்கம் உச்ச நீதி மன்றத்தில் உண்மையை சொல்லுச்சோ, நாமெல்லாம் தப்பிச்சோம்.

வாழ்க பாரதம். ச்சே அதுவும் தப்பா! :)

Geetha Sambasivam said...

மதுரைத் திட்டத்திலும் இது பற்றியக் கட்டுரை படித்தேன். நன்றி, குமரன், பல விஷயங்களயும் வெவ்வேறு கருத்துக்களுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

குமரன் (Kumaran) said...

நன்றி சத்தியா.

இராமன் என்ற ஒருவர் இருந்ததாகத் தொன்மம் சொல்கிறது. அந்தத் தொன்மம் உலகெங்கிலும் பரவியிருந்தாலும் அறிவியல் முறைப்படி அதனை நிறுவ இன்னும் முடியவில்லை. அதனால் அறிவியல் முறைப்படியான ஆதாரம் இல்லையென்று நடுவண் அரசு சொல்கிறதோ என்னவோ? நீங்கள் தந்த சுட்டியிலிருக்கும் செய்தியை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் படித்ததில் தோன்றிய கருத்து இது.

தொன்மங்களை 100% உண்மையாகவோ 100% பொய்யாகவோ எடுத்துக்கொள்ளமுடியாது என்பது என் எண்ணம். எவ்வளவு தூரம் உண்மை என்றும் எவ்வளவு தூரம் பொய் என்றும் எடுத்துக் கொள்வது அவரவர் புரிதல்களைப் பொறுத்தது.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். நீங்கள் சொல்லும் முன்னீடுகளையும் கருத்துகளையும் நானும் படித்திருக்கிறேன். பாண்டு, பாண்டிய தொடர்புகளும் இராமாயண மகாபாரதங்கள் சொல்லும் ஊர்ப்பெயர்களுக்கும் தமிழக ஊர்ப்பெயர்களுக்கும் இருக்கும் தொடர்புகள் இன்னும் நன்கு ஆராயப்படவேண்டியவை.

கம்பராமாயணத்தை வான்மீகியின் இராமாயண அடிப்படையில் எழுதியதாக கம்பரே சொன்னாலும் பல இடங்களில் வான்மீகி சொன்னதை மாற்றியும் கூட்டியும் குறைத்தும் இலக்கியச் சுவை கூடுதலாக அமையும் படி கம்பர் எழுதியிருக்கிறார். அவர் அப்படி கூட்டியும் குறைத்தும் மாற்றியும் அமைக்க அவருக்கு முன் தமிழகத்தில் வழங்கி வந்த இராம கதைகள் உதவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.

சில நூல்கள் காலவெள்ளத்தில் தானே அழிவு பட்டுப் போவதும், சில நூல்கள் அழிக்கப்படுவதும் நடந்திருக்கின்றன.

காத்தவராயன் கதையைப் போல் பல நாட்டார் இலக்கியங்கள் இருக்கின்றன. அவை போல் இராமாயணமும் மகாபாரதமும் சங்க காலத்திற்கும் அதற்கும் முன்பும் தமிழகத்தில் புழங்கி வந்திருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது. எழுத்து வடிவிலும் இருந்து அழிவுபட்டுப் போனது என்று எழுத்து வடிவில் இருந்த சில பகுதிகளைக் காட்டுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். உசாத்துணையாக இடுகையில் இப்போது நான் சேர்த்த சுட்டியைப் பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

வெற்றி,

இடுகையையும் படித்துப் பாருங்கள். சிந்திப்பதற்கு ஒரு நல்ல கருத்து சொல்லப்பட்டிருக்கிறது இந்தப் பாடலில்.

உங்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பவை எதுவும் நான் மறுக்கும் படி இல்லை. அரக்கன் என்ற சொல் இந்தப் புறநானூற்றுப் பாடலில் இருப்பதையும் குரங்கு என்ற சொல் இருப்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதனை வரலாறாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இடுகையைப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் சொல்லும் செவிவழிக்கதைகள் தமிழகத்திலும் தற்போது புழங்குகின்றன. சங்கப்பாடல்களைப் பார்த்தால் அவை சங்ககாலத்திலேயே புழங்கிய கதைகள் என்று தோன்றுகிறது.

இராவணனின் கல்வியையும் ஒழுக்கத்தையும் பெருமைகளையும் வான்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் மிகவும் பெருமையாகப் பேசுகின்றன.

வரலாற்று ஆசிரியர்கள் எழுதியதே அவர்களின் அரசியல்களை அடிப்படையாகக் கொண்டு தான் என்று கட்டுடைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் புலவர்கள் எழுதியது முழுக்க முழுக்க உண்மையானது என்று அறுதியிட்டுச் சொல்வது இயலாது.

நாம் நம்புவதும் நம்ப விரும்புவதும் மட்டுமே சரி. அதற்கு மாறாக எத்தனைத் தரவுகள் கிடைத்தாலும் அவற்றை மறுப்பேன் என்று சொல்வது அறிவிற்கு இயைந்ததாகாது. அப்படிச் செய்யாமல் மாற்றுக் கருத்துகளை மட்டும் வைப்பது இந்த இடுகையின் நோக்கம். உங்கள் பின்னூட்டத்தின் நோக்கமாகவும் அதனைக் காண்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

நான் உசாத்துணையாகக் கொண்ட கட்டுரையில் இந்தப் பாடலைப் பாடிய புலவரின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. புலவரின் பெயர் ஊன்பொதி பசுங்குடையார். காலம் சொல்லப்படவில்லை.

உசாத்துணையாகக் கொண்ட கட்டுரையில் அகநானூறு பாடல் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் பாடல் அது தானா பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ்.

நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம். அல்லது இங்கிருந்த தொன்மங்களையே வடமொழியினர் எடுத்துக் கொண்டு தமதாக்கிவிட்டனர். நாம் இப்போது அவை அவர்கள் நம்மீது திணித்த கடவுள்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவை நம் கடவுள்களே. இப்படியும் சொல்லலாம்.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. நீங்கள் சொன்ன அதே கட்டுரையைத் தான் நானும் படித்து இந்த இடுகையை இட்டிருக்கிறேன். அந்தக் கட்டுரையில் பாடலையும் தொகுப்புரையையும் கொடுத்திருந்தார்கள். அதனைப் படித்த போது தோன்றிய எண்ணங்களையும் ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் கூடுதலாக இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன். அவ்வளவு தான். இந்தப் பாடலை எடுத்துத் தந்தவர்கள் மயிலையாரும் மதுரைத்திட்டத்தாரும் தான்.

rv said...

கும்ஸு,
நீங்கள் ஆயிரம் விளக்கங்கள் சொல்லலாம்.

மற்ற விடயங்களில் மத்திய அரசை ஏற்காத நாம்... ஏன் மத்திய அரசுக்கு இந்தியா என்று செயற்கையாக கட்டமைக்கப்பட்டு மக்களின் வாழ்வியலை நசுக்கும் இந்தியா எனப்படும் ஒரு பிம்பமே கிடையாது எனும்போது... அதற்கு ஒரு சின்னமாக இருக்கும் மத்திய அரசை வெறுப்பவர்கள் நாம்.

ஆனால் இவ்விஷயத்தில் மட்டும் நடுவண் அரசின் எண்ணங்கள் எங்கள் ஹார்ட்க்குள் புகுந்து மஞ்சாவை எடுத்து அதனையே ஜெராக்ஸ் எடுத்து அறிக்கைவிட்டது போல் இருப்பதால் 'இந்திய தேசிய அரசை' சப்போர்ட் செய்வது எங்களின் தார்மீக கடமையாக கொள்கிறோம்.

அப்படிங்கறததான் கொத்ஸு சூசகமா சொல்றாரு. நானும் அதை வழிமொழிகிறேன்.

ஸ்மைலிகள் தேவைப்படுகிற இடத்தில் போட்டுக்கொள்ளலாமே..

குமரன் (Kumaran) said...

இராம்ஸ்.

நடுவண் அரசு சொன்ன கருத்துகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த இடுகையும் அந்த அறிவிப்பும் ஒரே நேரத்தில் வந்தது தற்செயலானதே. நான் அந்த அறிவிப்புக்குப் பதிலாக இதனை இடவில்லை. சத்தியா சுட்டியைத் தரும் வரை எனக்கு அந்த அறிவிப்பு பற்றி ஒன்றும் தெரியாது.

இதோ நடுவண் அரசு பின்வாங்கிவிட்டது என்று ஒரு இடுகை பார்த்தேன். இப்படி மாற்றி மாற்றி அரசியலுக்காகப் பேசுவது ஒன்றும் பெரிய பற்றியமில்லை அவர்களுக்கு. :-)

Unknown said...

குமரன்

அருமையான தகவல்களை தந்திருக்கும் இடுகை.

ராமாயணமும், பாரதமும் செவி வழிக்கதைகளாக பாரதம் முழுக்க புழங்கி வந்தவை.வால்மிகி முனிவருக்கு முன்பே பிறந்தவர் ராமன்.அவரது வரலாறே ராமாயணமாக விளங்கியது.அதை பின்னாளில் வால்மிகி இறைவன் அருள் பெற்று காப்பியமாக வடித்தார்.

பாண்டே,பாண்டவ் என்று வடநாட்டில் பெயர்கள் உண்டு.வடக்கே மதுரா, தெற்கே மதுரை.வடக்கே காசி, தெற்கே தென்காசி.பாரதம் முழுக்க நிலவிய பொதுபண்பாட்டில் தமிழகம் தனக்கான சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்கான சான்றுகளே இவை எல்லாம்.தமிழக மன்னர்கள் ராமாயணத்திலும், பாரதத்திலும் சிறப்பாக குறிப்பிடப்படுகின்றனர். சீதையின் சுயம்வரத்தில் பாண்டிய மன்னன் ராமனுக்கு சமமான அந்தஸ்துடன் கலந்து கொண்டிருக்கிறான்.பிறகெப்படி அவன் மக்களை குரங்குகள் என எழுதியிருப்பார்கள்?

வெற்றி said...

நல்ல பதிவு குமரன். இப்பதான் முழுப் பதிவையும் வாசித்தேன். நல்ல விளக்கம்.

இலம் - வறுமை

ஆகா! இன்றொரு அழகான பழந்தமிழ்ச் சொல் உங்களின் பதிவு மூலம் கற்றுக் கொண்டேன்.

/* தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது.*/

எனக்கு வட இந்திய நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் கி.பி 5 ம் நூற்றாண்டிற்குப் பின் எழுதப்பட்ட சில பாளி, சிங்கள புனைகதை நூல்களில் இலங்கையில் விஜயன் கலிங்க தேசத்தில் இருந்து வர முன்னர் அரக்க இனத்தவர்களே வாழ்ந்தார்கள் எனச் சொல்கிறது.

ஆனால் சிங்கள, தமிழ் வரலாற்று ஆசிரியர்களின் கருத்தின் படி இவர்கள் பழங்குடிகளான திராவிட மக்கள் என்று சொல்கிறார்கள்.

இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த எனது ஊர்ப் புலவரான 'மாதகல்' மயில்வாகனப் புலவர் :-) ஒல்லாந்த அதிகாரி கேட்டுக் கொண்டதற்காக யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலை இயற்றினார். இது வரலாற்று நூலில்லை. அவர் தான் கேள்விப்பட்ட செவிவழிக் கதைகளை வைத்தே அந் நூலை எழுதினார். அந் நூலில் அவரும் இலங்கையில் முந்தி அரக்க இனத்தவர் வாழ்திருக்கின்றனர் என்கிறார்.

நல்ல பதிவு குமரன். உங்களின் இப் பதிவின் மூலமும் இப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களின் மூலமும் நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்.

இந்த புறநானுறுப் பாடல்கள் எக் காலப் பகுதியில் எழுதப்பட்டவை?

/* இராவணனின் கல்வியையும் ஒழுக்கத்தையும் பெருமைகளையும் வான்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் மிகவும் பெருமையாகப் பேசுகின்றன. */

உண்மையாகவா குமரன்? இது புதிய செய்தி எனக்கு! எனது தமிழ்/இலக்கிய அறிவு பற்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும்தானே!

இன்னும் நீங்கள் மேலே சொல்லியுள்ள நூல்களைப் படிக்கவில்லை. படிக்க வேணும் எனும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். வாசகசாலைக்குச் சென்று புத்தகங்கள் எடுத்துப் படிக்க வேணும்.:-))

வெற்றி said...

குமரன்,
இன்னுமொரு சுவாரச்சியமான சங்கதி.

இராவண மன்னன் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என சில தாய்லாந்து மக்கள் நம்புவதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார். இது எவ்வளவு உண்மை என எனக்குத் தெரியாது.

இப்படி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வன்.

பாண்டே என்பது பண்டிதர் என்பதன் திரிபு என்று எண்ணுகிறேன்.

சீதா சுயம்வரத்தில் பாண்டியன் கலந்து கொண்டது எனக்குப் புதிய தகவல். இதற்கான குறிப்பை எங்கே படிக்கலாம்?

குமரன் (Kumaran) said...

வெற்றி, புறநானூறு சங்க இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஒரு தொகுப்பு நூல். பலர் பாடிய பாடல்களை யாரோ தொகுத்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று பொதுவாகக் கருதப் படுகிறது. இந்தக் குறிப்பிட்ட பாடல் இந்த நான்கு நூற்றாண்டுகளில் எந்த ஆண்டிலும் இயற்றப்பட்டிருக்கலாம்.

இராவணனின் கல்வி, பத்தி, ஒழுக்கம் போன்றவற்றை எல்லாம் புகழ்ந்துவிட்டே வள்ளுவர் சொல்லும் 'பிறன்மனை கவராமை' என்ற பெருங்குணம் மட்டுமின்றித் தவறியதால் கெட்டான் இராவணன் என்றே வடமொழி இராமாயணமும் தமிழ் இராமாயணமும் கூறுகின்றன. இசையிலும் வல்லவனாக இராவணன் இருந்து யாழினைத் தன் கொடியாகக் கொண்டிருந்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன. வீணைக்கொடி உடைய வேந்தன் இராவணன்.

தாய்லாந்திலும் இராமாயணக்கதை மிகப்பிரபலமாக இருக்கிறது. தாய்லாந்து மன்னர்கள் தங்கள் பெயரில் இராமன் என்ற பெயரை ஒரு பகுதியாக வைத்துக் கொள்வது வழக்கம் என்று படித்திருக்கிறேன். அதனால் இராவணன் தாய்லாந்தைச் சேர்ந்த மன்னன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதில் வியப்பில்லை. :-)

மாலன் said...

திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களை (கள்ளுண்ணாமை, பிறன்மனை நோக்காப் பேராண்மை) மக்கள் ஏற்றுக் கொள்ள அல்லது மறந்துவிட்டதால், நாட்டார் வழக்கில் பிரபலமாக இருந்த ராமன் கதையை எடுத்துக் கொண்டு புனைகதை மூலம் அவற்றை வலியுறுத்த கம்பன் தனது காவியத்தை எழுதினான் என்னும் பொருள்பட பேராசிரியர்.அ.ச.ஞா ஒரு நூல் எழுதிய ஞாபகம் இருக்கிறது. வான்மீகத்திலிருந்து மாறுபடும் இடங்களுக்கு நாட்டார் வழ்க்கிலிருந்த செய்திகள் உதவியிருக்கலாம் என்பது அவரது வாதம்.கிடைத்தால் படித்துப்பாருங்கள்

G.Ragavan said...

குமரன் இந்தச் செய்தி எனக்கு வியப்பானதுதான். மத்திய அரசின் அறிக்கையும்தான். மிகுந்த துணிச்சல் மிகுந்த அறிக்கைதான் அது.

இந்தப் புறனாநூறு எழுதப் பட்டது யாரால்? எப்பொழுது? எந்த மன்னனைப் பற்றி என்ற தகவல்களையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பிறன்மனை கவர்வது பேராண்மை இல்லைதான். தவறுதான். எல்லாம் சரியாக இருக்கும் ஒருவன் மற்றொருவனின் மனைவியைக் கவர்ந்ததால் போர் புரியப்பட்டு மாண்டான் என்ற வகையில் சரியாகத்தான் இருக்கிறது.

ஆனால் அவன் நல்லவனாக இருக்கையில் அவதாரம் நிகழாமல் இருந்திருந்தால் அவன் நல்லவனாகவே இருந்திருப்பான் அல்லவா. இது இயல்பாக எழும் கேள்வி. இதற்காக விடை சொல்ல சில பல கதைகள். அப்படி அப்படி என்று சேர்த்து எழுதப்பட்டதுதான் வால்மீகியின் கதையோ என்ற ஐயம் எனக்கு எப்பொழுதும் உண்டு. இப்பொழுதும் உண்டு.

செய்யுளின் கவிதை நயம் மிகவும் அருமை. ரசிக்காமல் இருக்க என்னுடைய தமிழாசை விடவில்லை. எப்படிப்பட்ட செய்யுள்.

G.Ragavan said...

குமரன், இந்தச் செய்யுளைத் திரும்பவும் படித்தேன். உங்கள் பதிவையும் படித்தேன். திரும்பத் திரும்பச் சிந்திக்கை வைத்த செய்யுள். எனக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்லி விடுகிறேன்.

1. முதற்கண் செய்யுளில் இராவணன் என்ற பெயர் இல்லை. இராமனின் மனைவி சீதையை ஒருவன் கவர்ந்தான். அவன் அரக்கன் என்று தூற்றப் படுகிறான். மாற்றான் மனைவியைக் கவர்ந்தவனைத் தூற்றுதல் சரியே.

2. இராமனைக் கடவுள் என்றும் இந்தச் செய்யுள் சொல்லவில்லை. கடுந்தெறல் இராமன் என்பதற்கு இனிய இராமன் என்ற வகையில் பொருள் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்று பொருள் சொல்ல முடியாது. ஏனென்றால் "பாரி பாரி என்று பலவேந்தி ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்...பாரியொருவனும் அல்லன் மாரியும் உண்டீங்கு உலகுபுரப்பதுவே" என்று எக்கச்சக்கமாக உணர்ச்சிவசப்படும் புலவர்கள் நம்மவர்கள். கவர்ந்தனை அரக்கன் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் அல்லவா இந்தப் பாட்டிலும். முருகன் மாதிரி இருக்கான் மாப்பிளைன்னு சொல்லனும். அதச் சொல்றதுக்கு நாம கண்ணால கண்டு வணங்கத்தக்க செவ்வேளை ஒத்த மாப்பிள்ளைன்னு இளங்கோ சொல்றாருல்ல. அட...வெறெந்த நூலையும் எடுத்துக்கோங்க. கடவுள்னு வந்துட்டா அதீத உணர்ச்சிவசப்படல் உண்டு. ஆனா இங்க சும்மா கடுந்தெறல் இராமன்.

அதாவது இது ஒரு இயல்பான குறிப்பு என்ற அளவிலேயே உள்ளது. இராமனின் மனைவி சீதை கவரப்பட்டாள். அத்தோட நிறுத்திக்கிறாரு புலவர். "அரும் பெறல் மரபின் பெரும்பெயர்"ங்குற மாதிரி உணர்ச்சி பொங்கிச் சொல்லலை. இதுவும் சிந்திக்கத்தக்கது. இந்தச் செய்திக்குக் கண்காது மூக்குகள் பின்னாடி முளைச்சிருக்கலாம்.

3. மேல சொன்ன ரெண்டு கருத்துப்படியும்...பதிவோட தலைப்பு தவறுங்குறது என்னோட கருத்து. சீதையைக் கவர்ந்தவனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு என்பதே சரியான தலைப்பு.

வவ்வால் said...

குமரன்,

இது வெகு காலமாக பேசப்பட்டு வரும் ஒரு தீராத பிரச்சினை , இது குறித்தெல்லாம் பேச எனக்கு அறிவு போதாது ,ஆனால் இடுக்கைக்கு சம்பந்தமாக ஒரு சில வார்த்தைகள் மட்டும்,

அரக்கர்கள் என்பது ஒரு கொடுரமான ஒரு உயிரினம் பற்றி சொல்லப்பட்டது அல்ல,
அது ஒரு மனித குணம் குறித்த சொல். இரக்கமற்ற குணம் கொண்டவன் என்று பொருள் வரும்.
இராக்ஷ்சன் என்றால் அடுத்தவர் மனைவியை கவர்பவன் , ஆசைப்படுபவன் என்று தான் சமச்கிருத அர்த்தம்.
அதற்கு இணையாக அரக்கர் என்று தமிழில் சொல்லி இருக்கலாம், எனவே இராவணன் என்பவன் மனிதனே!

உதாரணமாக சண்டாளன் என்று சொல்வது ஏதோ பழிச்சொல் என்றே பலரும் நினைப்பர், உண்மையில் , உயர்குல பெண்ணுக்கும் , தாழ்ந்த குலத்தை சேர்ந்த ஆணுக்கும் கலப்புமணம்
நடந்து பிறக்கும் மகனுக்கு சண்டாளன் என்று பெயர்(ஆதிக்க சாதியினரின் சதி).சமூக புரட்சியின் வாரிசுக்கு இழிவான பெயர் சூட்டியுள்ளார்கள்.
பழைய தமிழ் சினிமாவில் கூட வில்லன் ,கதாநாயகியை பலாத்காரம் செய்ய முயல்கையில் , அடே சண்டாளா என்னை பெண்டாள நினைத்தால் நீ நாசமாய் போவாய் என சாபம் இடுவாள்.
அதைப்பார்த்த மக்களும் அது ஏதோ கெட்டவர்கள் குறித்தான வசைச்சொல் என நினைத்துக்கொண்டார்கள்.
அது போல் தான் அரக்கன் என்ற சொல்லும் ஆகிவிட்டது.

கொடுரமான குணம் கொண்ட மனிதன் என்பதை சொல்லவே அரக்கன் என்று சொல்லி இருப்பார்கள்.மற்றபடி இராவணன் அரக்கன் அல்ல மனிதனே!

குமரன் (Kumaran) said...

பேராசிரியர். அ.ச.ஞா. அவர்களின் நூல் பற்றி சொன்னதற்கு நன்றி திரு.மாலன். இந்த நூல் கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Unknown said...

ஜி.ரா

புலவர்கள் பாடும்போது குறிப்பால் பெயர்களை உணர்த்துவது தான் வழக்கம். வள்ளுவர் வைகுந்தத்தை குறிப்பிடுகையில் வைகுந்தம் எனாமல் "தாமரைக்கண்ணான் உலகு" என்கிறார்.இறைவனை "எண்குணத்தான் தாளை வணங்கா தலை" என்கிறார்.இந்த வரிகள் குறிப்பிடுபவை யாவை என குழந்தைக்கும் தெரியும்.

சீதையை கவர்ந்த அரக்கன் என்றால் அது ராவணன் தான் என்பது தெளிவு.ராமனை இந்த செய்யுள் கடவுள் என்று சொல்ல்வைல்லையே என்கிறீர்கள்.சீதை தனது அணிகலனை நிலத்தில் வீசியதாக இந்த செய்யுள் கூறுகிறது.அவற்றை வானரப்படை கண்டதையும் இந்த செய்யுள் உரைக்கிறது.கடும்தெறல் ராமன் என்றால் நிலையான இன்பத்தை (சச்சிதானந்தத்தை) அளிக்கும் ராமன் என்று ஏன் பொருள் கொள்ள கூடாது?அடுத்தவன் மனைவியை கவர்கிறவன் அரக்கன் என்பதால் அவன் அரக்கன் எனப்பட்டான் என்பது நீங்களாக சொல்லும் காரணமாக தெரிகிறதே தவிர கவி சொல்லும் காரணமாக தெரியவில்லை.அரக்கனுக்கு ஒரு விளக்கம் கொடுத்தது போல் ஆபறணத்தை கண்ட வானரம் என்பதற்கு என்ன விளக்கம் கொடுக்க போகிறீர்கள்?:-)

அரக்கன்,வானரர்,விண்ணில் இருந்து மண்ணில் வீசப்பட்ட அணிகலன் அதை கண்ட வானரம்- என முழுக்க முழுக்க ராமாயணத்தை அப்படியே உரைக்கும் இந்த செய்யுளை இதுபோல் செக்யூலரைஸ் செய்வது சரியல்ல என்பது என் கருத்து.

Unknown said...

குமரன்

ஆலு குரும்பர் ராமாயணம் என்ற தொன்மையான நூல் நீலகிரி மாவட்ட மலை குரும்பர் இன மக்களிடையே புழங்கி வருகிறது.ஆலு குரும்பர் ராமாயணம் காலத்தால் கம்பராமாயணத்துக்கும் முற்பட்ட ராமாயணமாகும்.ஆலு குரும்ப ராமாய்ணத்தில் மூன்று ராவண சகோதரர்கள் குறிப்பிடப்படுகின்றனர் (அய் ராவணன், மயில் ராவணன், ராவணன்). மற்றபடி ராமாயணத்தில் பெரிதாக எந்த மாற்ரமும் இல்லை.


இது பற்றி ஜெர்மானிய ஆய்வாளர் ஆய்வு நடத்தி ஆசியன் ஜர்னல் ஆஃப் போல்க்லோர் ஸ்டடிஸ் என்ற ஜர்னலில் கட்டுரை எழுதியுள்ளார். அதை தான் இப்போது படித்து கொண்டிருக்கிறேன்.முடிந்தால் பதிவாக எழுதுகிறேன்.

வெற்றி said...

ஆகா! வவ்வால்!
தகவற் களஞ்சியமே!

"தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத சிக்கலைத் தனியொரு மனிதனாக வந்து தீர்த்து வைத்த நீர் வாழ்க" [திருவிளையாடல் படத்தில் பாண்டிய மன்னன் பேசும் பாணியில் படிக்கவும்]

குமரன்,
எனக்கு வவ்வால் சொன்ன விளக்கம் சரியெனப் படுகிறது. முந்தி ஈழத்தில் எனது தமிழாசிரியரும் உண்மையில் இராவணனுக்கு 10 தலைகள் இல்லையெனவும் அவர் 10 ஆட்களின் பலத்தைக் கொண்டவர் என்பதால் அப்படிச் சொல்லியிருப்பர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

இராமயணம் பல இடங்களில் முரன்படுகிறது போலத் தெரிகிறது.[நான் இன்னும் இராமாயணம் படிக்கவில்லை. மேலுள்ள பின்னூட்டங்களையும் பதிவையும் வைத்துச் சொல்கிறேன்]

இராவண மன்னன் நல்ல குணசீலன், சிவ பத்தன் என்கிறது. அதேநேரம் இன்னொருவன் மனைவியைக் கவர்ந்தான் எனவும் சொல்கிறது.

ஈழத்தில் நான் அறிந்த இராவண மன்னனின் கதைக்கு முற்றாக மாறுபடுகிறது நீங்கள் குறிப்பிட்ட இராமாயணங்கள். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது பல விதமான [versions] கதைகள் இது பற்றி வருவது.

ஈழத்தில் நான் கேள்விப்பட்ட இராவண மன்னனின் கதை இதுதான்:-

இலங்கையை ஆண்டு வந்த சைவத் தமிழ் மன்னனான இராவணன் மனைவி மண்டோதரிக்குப் பெண்பிள்ளை பிறக்கிறது. இக் குழந்தை இலங்கையில் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் இக் குழந்தை இங்கிருந்தால் நாடு தீப்பற்றி எரியும் எனவும் இராவண மன்னனின் மத ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

இதனால் மிகவும் துன்பத்துடன் மண்டோதரி பிரசவ மயக்கத்திலிருந்து கண்விழிக்க முன்னர் குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடுகிறார் இராவண மன்னன்.

இராவண மன்னனுக்கு குழந்தையைப் பற்றிய கவலை. தனது ஒற்றர்களை அனுப்பி இக் குழந்தையைக் கண்காணிக்கச் சொல்கிறார். இப்படி சீதை எடுத்து வளர்க்கப்பட்ட நாள்முதல் ஒற்றர்கள் அவருக்குச் சீதையைப் பற்றித் தகவல்கள் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

ஒரு நாள் அவருக்கு ஒற்றர்கள் துக்கமான செய்தியைச் சொன்னார்கள்.
அதாவது சீதையின் கணவர் வீட்டில் கணவரின் உறவினர்களுக்குள் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டு கணவருடன் சீதை காட்டிற்குச் செல்கிறார் என்று.

தன் மகள் காட்டில் வாழ்வது கண்டு மனம் தாங்க முடியாமல் அவர் சீதையை கடத்தி வந்தார் எனச் சொல்லப்படுகிறது.

இப்படிப் போகிறது நான் அறிந்த இராவண மன்னனின் கதை.

இக் கதை தமிழகத்தில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது.

இன்னொரு விடயம், இராவண மன்னனின் கதையில் வரும் இராமர் பாத்திரம் அவதாரம் என வர்னிக்கப்பட்ட போதிலும் இராமரை வணங்கும் முறை ஈழத்தில் இருந்ததில்லை.

இன்றும் கூட இராமரை ஈழத்தில் வழிபடுவது மிகவும் அரிது. நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணத்தில் ஆக இரண்டு கிருஸ்ணர் ஆலயங்கள் இருக்கிறது.

இவை அக் காலத்தில்[கி.பி] ஈழத்தில் வந்து குடியேறிய தெலுங்கு மக்களால் கட்டப்பட்டவை. இத் தெலுங்கு மக்கள் தமிழ்மக்களுக்குள் உள்வாங்கப்பட்டு விட்டனர். எனினும் அவர்கள் இன்றும் வடுகர் என ஒரு சாதிப் பிரிவு போல அழைக்கப்படுகின்றனர். அச் சாதிப் பிரிவும் யாழ்ப்பாண ஆதிக்க சாதியான வெள்ளாளர்[வேளாளர்] சாதிக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டனர்.

பார்த்தீர்களா குமரன், இப்படியான விடயங்களைப் பற்றி அலசும் போது பல சுவாரசியமான[சரியோ, தவறோ, உண்மையோ கற்பனனையோ] தகவல்கள் கிடைக்கிறது.

Unknown said...

குமரன்

பாண்டிய மன்னன் ராமாயணத்தில் கலந்து கொண்ட செய்தியை சில பக்தி நூல்களில் படித்துள்ளேன்.(பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை).திரவுபதியின் சுயம்வரத்திலும் பாண்டிய மன்னன் கலந்து கொண்டிருக்கிறான்.நீண்ட காலத்துக்கு முன்பு படித்த நூல்கள் என்பதால் உடனே பெயரை எழுத முடியவில்லை.மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் எழுதுகிறேன்

வவ்வால் said...

சத்+சித்+ஆனந்தம்= சச்சிதானந்தம்

சத் =உண்மை
சித் =அறிவு
ஆனந்தம் = மகிழ்ச்சி

எனவே நிலையான இன்பம் பெறுவதல்ல , enlighten அல்லது ஞானம் பெறுவது தான் சச்சிதானந்தம்!ராமன் என்ன அறிவுக்கண்ணை திறப்பவரா?

ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன்!

வானரர் என்றால் தேவர்கள் என்று கூட அர்த்தம் வரும் ஏன் எல்லாம் குரங்கு என்ற ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்கிறீர்கள்!

G.Ragavan said...

// அரக்கன்,வானரர்,விண்ணில் இருந்து மண்ணில் வீசப்பட்ட அணிகலன் அதை கண்ட வானரம்- என முழுக்க முழுக்க ராமாயணத்தை அப்படியே உரைக்கும் இந்த செய்யுளை இதுபோல் செக்யூலரைஸ் செய்வது சரியல்ல என்பது என் கருத்து. //

குமரன், இதில் செக்யூலரைஸ் செய்வதற்கு எதுவுமில்லை. இராமனுடைய மனைவி சீதை. அவனைக் கவர்ந்தவன் அரக்கன். அவளது அணிகலன்களைக் குரங்குகள் அணிந்தன. அவ்வளவுதான் செய்தி. இதில் கடுந்தெறல் என்பதற்குச் சச்சிதானந்தம் என்ற பொருள்.....மன்னிக்கவும்...பொருந்தி வரவேயில்லை.

அத்தோடு இலைமறை காய்மறையாகச் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் அது சொல்வது இராவணன் என்பதற்கு எவ்வளவு பொருத்தம் சொல்லலாமோ..அவ்வளவு பொருத்தம் இல்லை என்பதற்கும் சொல்லலாம்.

முன்பே நான் சொன்னது போல, இராமன் மனைவி சீதையை ஒருவன் கடத்திச் சென்றான் என்ற செய்திக்கு ஒட்டுதல் வேலை நிறைய நடந்திருக்கலாம் என்பதே நான் சொல்ல வரும் கருத்து. பழைய நூலும் கிடைக்குமாயின் நமக்கு விவரங்கள் இன்னமும் தெரியலாம். இந்தச் செய்யுள் சொல்வதை மறுக்கவில்லை. ஆனால் இதை வைத்து வால்மீகி சொன்னதைத்தான் முன்பும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது.

இராமாயணத்தில் மட்டுமல்ல கந்தபுராணத்திலும் இதுதான் நிலை. சூர் தடித்ததும் மா அறுத்ததும் மட்டுமே பழைய நூல்களில் காணலாம். ஆனால் கந்தபுராணத்தில் எக்கச்சக்கமாக இருக்கும். இதுதான் நான் சொல்ல வருவது. திருமுருகாற்றுப்படையில் சூர் கொன்றது வருவதால் கந்தபுராணம் சொல்வதைத்தான் திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது என்பதாகாது.

குமரன் (Kumaran) said...

இராகவன். உங்கள் பின்னூட்டங்களுக்கு நான் இன்னும் பதில் சொல்லவில்லை. நீங்கள் செல்வன் சொன்னதை நான் சொன்னதாக எடுத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இராகவன்.

இந்தப் பாடலை யார் எழுதியது என்று இரவிசங்கருக்குச் சொன்ன பதிலில் சொல்லியிருக்கிறேன். எப்போது என்ற தகவல் எனக்குத் தெரியவில்லை. எந்த மன்னன் கொடுத்த பரிசில் என்பதைப் பற்றிய தகவல் உசாத்துணையாகக் கொடுத்துள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரையில் இருக்கிறது. பாருங்கள்.

இந்தக் கட்டுரையை இரண்டு வருடங்களுக்கு முன்னரே படித்திருக்கிறேன் இராகவன். அப்போது என் கண்களுக்கு இந்தச் செய்யுளின் கவிதை நயம் மட்டுமே தெரிந்தது. உவமைச்சுவையை மிக இரசித்துச் சுவைத்தேன். அப்போது இராம கதையைச் சொல்லியிருப்பது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை.

இந்த இரு வருடங்களில் படித்த பல கருத்துகள் இந்த முறை இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது இராம கதை பகுதியின் முக்கியத்துவத்தைக் காட்டியது. :-) ஆனாலும் முன்பு சுவைத்த செய்யுளின் நயங்களை இடுகையில் சொல்லாமல் விடவில்லை. :-)

எல்லோரும் அறிந்த இராவணன் என்ற பெயர் இந்த செய்யுளில் சொல்லப்படவில்லை என்பதை இடுகையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இராமன், சீதை, குரங்குகள் என்று எல்லாவற்றையும் சொன்ன புலவர் இராவணன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று மட்டுமே சொல்லியிருக்கும் காரணத்தைச் சிந்திக்க வேண்டினேன். என் எண்ணத்திற்கு அது அந்த கொடுஞ்செயலைச் செய்தவன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று சொன்னார் என்று தோன்றியது. உங்களுக்கு 'இராவணன் என்று பாடலில் சொல்லவில்லை. அரக்கன் என்று தான் சொல்லியிருக்கிறார். அதனால் இராவணனை அரக்கன் என்று சொன்னது புறநானூறு என்ற தலைப்பு தவறு. சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்று தான் சொன்னது புறநானூறு என்று சொல்வதே சரி' என்று தோன்றுகிறது. இராவணனை குறிப்பால் உணர்த்தியது இந்தச் செய்யுள் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பால் கூட இராவணன் பெயர் சொல்லப்படவில்லை என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். :-)

இராமனைக் கடவுள் என்று இந்தச் செய்யுள் சொல்லவில்லை. சொன்னதாகவும் நான் சொல்லவில்லை. கடுந்தெறல் இராமன் என்பதற்கு இனிய இராமன் என்றும் பொருள் கொள்ளலாம்; இனிய தேனை உடைய இராமன் என்று பொருள் கொள்ளலாம்; இனிய தேனை வழங்கும் இராமன் என்றும் பொருள் கொள்ளலாம். கடுந்தெறல் என்பதற்கு தெளிந்த கள் என்றும் பொருள் உண்டு. அதனையும் சொல்லலாம் தான். ஆனால் கடவுள் என்று நேரடியாகவோ குறிப்பாகவோ சொல்லப்படவில்லை இந்தச் செய்யுளில்.

உயர்வு நவிற்சியைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். இந்தச் செய்யுளில் இராமகதையைச் சொல்ல வரவில்லை புலவர். 'எல்லோருக்கும் தெரிந்த அந்தக் கதையில்' வரும் ஒரு நிகழ்ச்சியை உவமையாகக் கூறுகிறார். அவ்வளவு தான். அதனால் இராமனையோ சீதையையோ உயர்வு நவிற்சியுடன் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. சொல்லவும் இல்லை.

இராமன் கடவுளின் அவதாரம் ஆனது பிற்காலத்தில் தான். இந்தப் பாடல் இயற்றப்பட்டக் காலத்தில் அப்படி இருந்ததாக இந்தப் பாடல் சொல்லவில்லை. இது தான் நீங்கள் சொல்லவரும் கருத்து என்று எண்ணுகிறேன். அது சரியாகவே இருக்கலாம். இந்தப் பாடலைப் பொறுத்தவரை இராமனைக் கடவுள் என்று சொல்லவில்லை.

வான்மீகி இராமாயணத்திலும் பல இடங்களிலும் இராமன் மனிதனாகவும் சக்ரவர்த்தி திருமகனாகவும் தான் சொல்லப்படுகிறான்; சொல்லிக் கொள்கிறான். அங்கும் காவியத்தின் முதற் பகுதியிலும் கடைசி பகுதிகளிலும் தான் இராமனைக் கடவுள் என்ற கருத்துகள் வருகின்றன. கம்பராமாயணத்தில் முழுவதும் இறைவனாகவே பேசப்படுகிறான். அதனால் உங்கள் கருத்து இந்தச் செய்யுளைப் பொறுத்த வரை சரி தான். வேறு சங்ககால செய்யுள்களில் இராமன் கடவுள் என்று சொல்லப்பட்டிருந்தால் அவற்றை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சொல்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால். நீங்கள் சொல்வது சரி தான். இது பல காலங்களாகப் பேசப்பட்டு வரும் தீராத பிரச்சனை தான். ஆனால் பிரச்சனையின் ஒரு பக்கத்தையே அதிகம் படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியங்களில் இந்தப் பிரச்சனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று அவ்வளவாக யாரும் பேசி படிக்க வில்லை. அப்படி சொல்லப்பட்டவையும் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்கின்றன. அதனால் தான் மறு பக்கத்திற்குத் தரவுகள் கிடைக்கும் போது அவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

நீங்கள் போன இடுகையிலும் ஒரு சொல்லுக்கு வடமொழியில் இது தான் பொருள் என்று அறுதியிட்டுக் கூறுகிறீர்கள். ஆனால் தரவெதுவும் தருவதில்லை. இங்கும் இராக்ஷசன் என்பதற்குப் பிறன்மனை கவர்பவன் என்பதே வடமொழியில் பொருள் என்று சொல்லியிருக்கிறீர்கள். வடமொழியில் கொஞ்சம் பழக்கம் இருக்கும் நான் இதுவரை இந்தப் பொருளைப் படித்ததில்லை. அதனால் ஏதாவது ஒரு இடத்தில் இந்தப் பொருளில் இராக்ஷசன் என்ற சொல் புழங்கியுள்ளதா காட்டுங்கள்.

இராவணன் என்பவன் மனிதனே என்பதிலும் அரக்கன் என்ற சொல் மனித குணம் குறித்த சொல் என்ற கருத்திலும் மறுப்பு இல்லை.

குமரன் (Kumaran) said...

செல்வன். இந்தச் செய்யுளில் இராவணன் என்ற பெயர் குறிப்பால் உணர்த்தப்பட்டது என்றே நானும் நினைக்கிறேன். அதனாலேயே இப்படி ஒரு தலைப்பு வைத்தேன்.

கடுந்தெறல் இராமனுக்கு நிலையான இன்பத்தை, சச்சிதானந்தத்தைத் தரும் இராமன் என்று பொருள் கொள்வது உங்கள் உரிமை. அது பக்தியுடன் இராமனை நோக்கும் போது வரும் பொருள். ஆனால் இந்தச் செய்யுளில் அதற்கு இடம் மிகக்குறைவாகவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

இராமகதையில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி தெளிவாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்ற வரையில் எனக்கு ஒப்புதல் உண்டு. ஆனால் அதனை செக்யூலரைஸ் செய்வதோ பக்திப்பாடலாக செய்வதோ இந்தச் செய்யுளுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

செல்வன். குரும்பர் இராமாயணத்தைப் பற்றிய ஆய்வினைப் படித்துவிட்டு விரைவில் எழுதுங்கள். மயில் இராவணன் என்பவரைப் பற்றி படித்திருக்கிறேன். மற்றவர் பெயர் புதிது.

வவ்வால் said...

குமரன்,
//வடமொழியில் கொஞ்சம் பழக்கம் இருக்கும் நான் இதுவரை இந்தப் பொருளைப் படித்ததில்லை. அதனால் ஏதாவது ஒரு இடத்தில் இந்தப் பொருளில் இராக்ஷசன் என்ற சொல் புழங்கியுள்ளதா காட்டுங்கள்.//

நீங்களும் படித்து இருப்பீர்கள் மறந்துவிட்டிருக்கும். நான் எப்பொழுதோ படித்தது ,கேட்டது வைத்து சொல்கிறேன். இணையத்தில் தரவு கிடைத்தால் கொடுக்கிறேன்.

திராவிடம் என்பதே சமஸ்கிருதம் அப்படி இருக்கையில் அதனை கட்சிப்பெயரில் வைத்துக்கொண்டு தமிழ்.. தமிழ் எனப்பேசுகிறார்கள் என பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆசிரியர் சொன்னது எனக்கு இன்னும் நினைவு இருக்கு.

நீங்கள் கூட ஏன் திராவிடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படவில்லை எனகேட்டிருந்தீர்கள், உங்களுக்கும் அது வட மொழி என்பது மறந்துவிட்டதால் தானே!

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அறிய செய்தி, தந்தமைக்கு நன்றி குமரன்....மற்றபடி இதில் உள்ள தகவல்கள் எல்லாம் புதிதே....ஆனால் நானும் இ.கொவின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

//இங்கும் இராக்ஷசன் என்பதற்குப் பிறன்மனை கவர்பவன் என்பதே வடமொழியில் பொருள் என்று சொல்லியிருக்கிறீர்கள்// அதே, அதே.

இலவசக்கொத்தனார் said...

மதுரையம்பதி,

அறிய அரிய - கொஞ்சம் குழம்பிட்டீங்களோ.

அரிய செய்தியை அறியத் தந்த குமரனுக்கு நன்றி.

இப்போ புரியுதா?

அரிய - அபூர்வமான, எளிதில் கிடைக்காத

அறிய - தெரிந்து புரிந்து கொள்ள

நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற தைரியத்தில்...

ச.சங்கர் said...

குமரன்

பாடலும் தகவலும் அருமை

வெத்து வேட்டு said...

so what is the problem now?
shouldn't we be proud that almost all Indian literatures originated from tamil?

வெத்து வேட்டு said...

why everyone is plugging hair from egg?

athuthaanga muddaiyile mayir pudungurathu...Ravanan may be a demon in human form...so what?
is Ramayanam's origin is tamil then all characters are going to be tamils....

bala said...

குமரன் அய்யா,

என்ன சொல்றீங்க?வஞ்சக ஆரியம் எப்படி ஏமாளி திராவிடத்திலிருந்து அறிவு,நாகரிகம்,இசை,நாடகம் எல்லாவற்றையும் கவர்ந்து போனதோ அப்படியே ராமாயணத்தையும் கவர்ந்து போய் மறுபடி திராவிடத்துக்கே விற்று விட்டதா?வஞ்சக ஆரியம் பலே கில்லாடி தான்.

பாலா

G.Ragavan said...

// எல்லோரும் அறிந்த இராவணன் என்ற பெயர் இந்த செய்யுளில் சொல்லப்படவில்லை என்பதை இடுகையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இராமன், சீதை, குரங்குகள் என்று எல்லாவற்றையும் சொன்ன புலவர் இராவணன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று மட்டுமே சொல்லியிருக்கும் காரணத்தைச் சிந்திக்க வேண்டினேன். என் எண்ணத்திற்கு அது அந்த கொடுஞ்செயலைச் செய்தவன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று சொன்னார் என்று தோன்றியது. உங்களுக்கு 'இராவணன் என்று பாடலில் சொல்லவில்லை. அரக்கன் என்று தான் சொல்லியிருக்கிறார். அதனால் இராவணனை அரக்கன் என்று சொன்னது புறநானூறு என்ற தலைப்பு தவறு. சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்று தான் சொன்னது புறநானூறு என்று சொல்வதே சரி' என்று தோன்றுகிறது. இராவணனை குறிப்பால் உணர்த்தியது இந்தச் செய்யுள் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பால் கூட இராவணன் பெயர் சொல்லப்படவில்லை என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். :-) //

குமரன், நான் இந்த ஒரு பாடலை மட்டும் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இந்தச் செய்யுளில் இராவணன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது நீங்களும் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் தலைப்பில் செருகியிருக்கின்றீர்கள். அதற்குக் காரணம்...இராமன், அவன் மனைவி சீதை. அவளைக் கடத்தியவன் அரக்கன், சிந்திய நகைகளைக் குரங்குகள் அள்ளின. இந்தத் தகவல்கள் வால்மீகியின் நூலிலும் பின்னரெழுந்த நூல்களிலும் வருவதால் அதுதான் இது. இதுதான் அது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விட்டீர்கள்.

அப்படி வரமுடிவதற்கு ஐம்பது சதவீதம் வாய்ப்புதான் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே கந்தபுராணத்தையும் வம்பிற்கிழுத்தேன். சூர்தடித்ததும் மா அறுத்ததும் வள்ளியைப் புணர்ந்ததும் பழந்தமிழ் நூல்களிலும் வரும். கந்தபுராணத்திலும் வரும். ஆகையால் அதுதான் இது. இதுதான் அது என்று முடிவிற்கு வரமுடியாது. அது இங்கும் பொருந்தும். ஆகையால்தான் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்குச் சாதமாகப் பயன்படுத்துகிறேன்.

இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ரகுமனும் ராஜியும் தமில்மனத்தில் பேசிக்கொள்வார்கள். பழைய தமிழ் நூலான கந்தரலங்காரத்தில் "வெய்ய வாரணம் போல் கைதான் இருபதும் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்" என்று வந்திருப்பதிலிருந்து வள்ளியோ தெய்வயானையோ இராமனுக்கும் சீதைக்கும் பிறந்த மகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். அதற்கு ராஜி "ரகுமன், வாரணம் போல் என்று இங்கு வந்திருப்பதைக் கவனிக்கவும். வாரணம் என்றால் ஆனை. ஆனையைப் போலப் பலம் பொருந்திய கைகள் இருபது என்று சொல்லியிருக்கிறது. ஆகையால் அது கஜமுகனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் சூரனின் தம்பிதானே. எய்தான் முருகன் என்பது படியெடுக்கப்படும் பொழுது மருகன் என்று மாறியிருக்கலாம்" என்று வாதிடலாம். :))))))))))))))))) அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழில் என்பதால் செய்வது இனிமையாக இருக்கிறது.

// இராமனைக் கடவுள் என்று இந்தச் செய்யுள் சொல்லவில்லை. சொன்னதாகவும் நான் சொல்லவில்லை. கடுந்தெறல் இராமன் என்பதற்கு இனிய இராமன் என்றும் பொருள் கொள்ளலாம்; இனிய தேனை உடைய இராமன் என்று பொருள் கொள்ளலாம்; இனிய தேனை வழங்கும் இராமன் என்றும் பொருள் கொள்ளலாம். கடுந்தெறல் என்பதற்கு தெளிந்த கள் என்றும் பொருள் உண்டு. அதனையும் சொல்லலாம் தான். ஆனால் கடவுள் என்று நேரடியாகவோ குறிப்பாகவோ சொல்லப்படவில்லை இந்தச் செய்யுளில். //

உண்மைதான். இராமன் கடவுள் என்று செய்யுள் சொல்லவில்லை. இராவணன் அரக்கன் என்றும் செய்யுள் சொல்லவில்லை. இதுதான் நான் சொல்ல வருவது.

// உயர்வு நவிற்சியைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். இந்தச் செய்யுளில் இராமகதையைச் சொல்ல வரவில்லை புலவர். 'எல்லோருக்கும் தெரிந்த அந்தக் கதையில்' வரும் ஒரு நிகழ்ச்சியை உவமையாகக் கூறுகிறார். அவ்வளவு தான். அதனால் இராமனையோ சீதையையோ உயர்வு நவிற்சியுடன் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. சொல்லவும் இல்லை. //

:) பொதுவாவே நம்மாளுங்க அளவுக்கு அதிகமா உணர்ச்சிவசப்படுவாங்க. பெரும்பாலான நூல்கள்ள பாருங்க. அதுனாலதான் சொன்னேன்.

வவ்வால் said...

குமரன் ,

இராட்சசன் என்பது பெண்களை கவரும் குண இயல்பு என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

மீட்கப்பெட்ட பெண் , அல்லது ஆசிப்பெற்ற பெண் என்பதற்கு வட மொழியில் ரக்ஷிதா என்ற சொல் உண்டு. அதே போல மீட்பவர் என்பதற்கு இரக்ஷகன் என்றும் சொல் உண்டு, இவை எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக கிளைத்த சொற்களாக இருக்க வேண்டும்.

மேலும் அசுரன் என்று சொல்கிறோம் அதுவும் வட மொழி தான் , அது எப்படி வந்தது, "sur" என்றால் மனிதன் அதற்கு எதிர்மறையாக "asur" என்றால் மனிதத்தன்மையற்றவன் என்று வார்த்தை உருவாக்கினார்கள், பின்னாலில் அசுரன் என்பதும் ஒரு கொடுமையான மாறுபட்ட பிறவி , அரக்கன் என்ற பொருளில் புழங்க ஆரம்பித்து விட்டது.

ஏன் இராவணனை தமிழ் மன்னன் என்று சொன்னார்கள் என்பது குறித்து எதுவும் நீங்கள் சொல்லவில்லையே.

இராவண்ணன் என்பது தான் அவன் பெயர், இரா என்றால் கறுப்பு என்று அர்த்தமாம், கறுமை நிறத்தவன் எனக்காரணப்பெயர் வைத்து சுட்டுவதால் திராவிடன் என்று சொல்கிறார்கள். மேலும் தெற்கில் வசிப்பவன் என்பது எல்லாம் சேர்ந்து திராவிடன் என்பதை மெய்பிக்கிறது.

வேறு ஏதோ ஒரு பதிவில் கூட சொல்லி இருக்கிறேன்.

ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கும் பரவியதை மறைமுகமாக சுட்டும் இலக்கியம் , புராணக்கதைகள் தான் இராமாயணம் , அகத்தியர் கைலாயத்திலிருந்து பொதிகைக்கு வருவது,அகத்தியர் தமிழ் முனிவர் என்பதே ஒரு கட்டுக்கதை என்றும் பல ஆதாரங்கள் உள்ளது.மேலும் பரசுராமர் கேரளாவிற்கு வந்தது என்று சொல்வதெல்லாம்.இந்த கருத்து பல்வேறு ஆங்கில கட்டுரைகளிலும் வந்துள்ளது அதனை வைத்து தான் சொல்கிறேன்.

ஓகை said...

இராகவனின் வாதம் எனக்குப் புரியவில்லை. உண்மையிலேயே அவருக்குப் புரியவில்லையா அல்லது வெறும் வாதம் புரிகிறாரா?

சீதையைக் கவர்ந்து சென்றது இராவணன் என்பதை எல்லா இராமயணங்களும் சொல்லுகின்றன. சீதையைக் கவர்ந்து சென்றது ஒரு அரக்கன் என்று சொல்லுகிறது இந்த புறநானூற்றுப் பாடல். இருவரும் ஒன்றல்ல என்ற வாதத்தைப் புரிவதனால் சீதையை இரண்டு பேர் கவர்ந்து சென்றிருக்கிறார்கள் என்று வாதம் புரிகிறாரா இராகவன்?

புறப்பாடல் பெயரைக் குறிப்பிடாததால் அவன் இராவனன் என்பதில் 50 விழுக்காடே உண்மை என்றால் மீதி 50 விழுக்காடு சீதையை இருவர் கவர்ந்து சென்றதாக ஐயத்துக்கிடமின்றி சொல்லுகிறது. ஒப்புக்கொள்ள முடியுமா இதை?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
வாசித்தேன்.
இரக்கமின்றி மாற்றான் மனைவி கவர்ந்தவன்...அரக்கன் ஆனானா??
பின்னூட்டங்கள் சுவையாக உள்ளன.

மெளலி (மதுரையம்பதி) said...

//அறிய அரிய - கொஞ்சம் குழம்பிட்டீங்களோ//

நன்றி இ.கொ. கண்டிப்பாக தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்..

வெட்டிப்பயல் said...

இந்த வரலாற்று புகழ் மிக்க பதிவை சேமித்து வையுங்கள் குமரன்...

//ஆகையால்தான் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்குச் சாதமாகப் பயன்படுத்துகிறேன்.
//
இதை தானே ரொம்ப நாளா பண்ணிட்டு இருக்கீங்க... குற்றவாளினு மனசுக்கு தெரிஞ்சாலும் சந்தேகத்தின் பலனை அவனுக்கு அளிக்கறீங்க பாருங்க. அங்க தான் நீங்க நிக்கறீங்க ;) (இல்லை நல்லா சேர் போட்டு உட்கார்ந்திருக்கீங்க ;))

குமரன் (Kumaran) said...

வெற்றி,

உங்கள் ஆசிரியர் சொன்ன விளக்கத்தைப் போல் இன்னொரு விளக்கத்தையும் இராவணனின் பத்து தலைகளுக்குக் கேட்டிருக்கிறேன். இராவணனுடைய நாடு தென்னகம் முழுதும் பரவியிருந்ததால் பத்து தலைநகரங்களைக் கொண்டு நாட்டை ஆண்டார் என்றும் அதனால் அவருக்குப் பத்துத்தலை நகர் கொண்ட இராவணன் என்ற பெயர் வந்து அது பின்னால் திரிந்து பத்துத்தலை இராவணனாகி வடக்கில் தசமுக ராவணன் ஆகிவிட்டது என்று. இலங்கை வேந்தன் என்றே எல்லா இலக்கியங்களும் சொல்கின்றன. இலங்கை போக தென்னகமும் இராவணனுடைய ஆட்சியில் இருந்ததற்கான தரவுகள் எவையும் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை. அதனால் பத்துத் தலை நகர் விளக்கத்தைத் தரவுகளுடன் உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் இராவணன் தங்கை சூர்ப்பனகை தென்னகத்தில் இருந்ததையும் கர தூஷணர்கள், மாரீசன் போன்றவர்கள் இந்திய நாட்டில் இருந்ததாகவும் அவர்கள் இராவணனின் ஆளுகைக்குக் கீழ் இருந்ததாகவும் இராமாயணம் சொல்வதால் இராவணனுடைய நேரடி ஆளுகை தென்னகத்தில் இல்லாவிடிலும் அவருடைய ஆளுகை இங்கேயும் இருந்தது என்று ஊகிக்கலாம்.

நல்ல குணசீலனாகவும் சிவபக்தனாகவும் இருப்பவர் மாற்றான் மனைவியின் மேல் காதல் கொள்ள மாட்டார்கள்; கவர மாட்டார்கள் என்று ஏதேனும் இருக்கிறதா வெற்றி? முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே மனிதன்? அப்படி இருக்க இராமாயணம் முரண்பாடுகள் நிறைந்ததாக ஏன் காண்கிறீர்கள் இந்த பற்றியத்தில்?

நீங்கள் சொன்ன இராவண மன்னரின் கதை தென்னகத்திலும் வழக்கில் உண்டு. நீங்கள் சொன்னது போல் திரைப்படத்திலும் காண்பிக்கப்படுகிறது.

இராம கிருஷ்ண வழிபாடு ஈழத்தில் எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது வெற்றி. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இவர்களும் கண்ணனின் அண்ணன் பலராமனின் வழிபாடும் பண்டைய தமிழகத்தில் இருந்ததாக சிலப்பதிகாரமும் பரிபாடலும் (சங்க காலத்திற்கு சற்றே பிந்திய கால இலக்கியங்கள்) கூறுகின்றன. தொல்காப்பியமும் மாயோனைப் பற்றி கூறுகிறது. இன்னும் கொஞ்சம் தேடினால் இங்கே காட்டப்பட்ட புற நானூறு பாடலைப் போல் பல சங்க இலக்கியப் பாடல்களில் (சிலப்பதிகாரத்தை முந்திய கால இலக்கியங்கள்) இராம கிருஷ்ணர்களைக் காணலாம் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் சொல்லும் இரண்டு தகவல்களும் (பாண்டிய மன்னனைப் பற்றி இராமாயணம் சொல்வது, பாண்டிய மன்னன் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டது) எனக்குப் புதியவை. மேல் தகவல்கள் கிடைத்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

இராமனைக் கடவுளின் அவதாரம் என்று எண்ணுபவர்களுக்கு அவன் அறிவுக்கண்களையும் திறப்பவன்; சச்சிதானந்த உருவாகவும் இருப்பவன்; ஞானத்தையும் தருபவன். சரியா? :-)

வானர: என்ற வடமொழிச் சொல்லுக்கு எப்படி தேவர்கள் என்ற பொருள் வரும் என்று கொஞ்சம் விளக்குங்கள். இது வரை மூன்று வடமொழிச் சொற்களுக்கு இது தான் பொருள் என்று அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் தரவுகள் இல்லை. வானர என்ற வடசொல்லுக்கு எனக்குத் தெரிந்த வரை குரங்கு என்றொரு பொருள் மட்டுமே உண்டு.

வானரர் என்று தமிழில் சொல்லப்படும் ஒரு சொல்லை அது முழுக்க முழுக்கத் தமிழ்ச் சொல் என்றே கொண்டால் வான் + நரர் என்று பொருள் சொல்லலாம். அப்போதும் நர: என்ற வடசொல்லை அங்கே காட்ட வேண்டியிருக்கிறது. வான் என்பது தமிழ்ச் சொல். அது வடமொழியில் இல்லை; அதனால் வானர என்ற வடமொழிச் சொல்லை வான் + நர என்று பிரித்தும் பொருள் சொல்ல இயலாது.

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

திராவிடம் என்பது வடசொல் என்பதில் எனக்கு ஐயமும் இல்லை. வடமொழியை நான் மறக்கவும் இல்லை. திராவிடம் என்று ஏன் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படவில்லை என்று கேட்டிருந்தால் அங்கே அந்தப் பொருளில் ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டிருப்பேன். நான் சொன்னதை/கேட்டதை மீண்டும் தேடிப் படிக்க சோம்பலாக இருக்கிறது. :-)

மற்றபடி இன்னும் நீங்கள் திராவிட = தெற்கு; இராக்ஷச = மாற்றான் மனைவியைக் கவர்ந்தவன்; வானர = தேவர்கள் என்ற சொற்களுக்குத் தரவுகள் தரவேண்டும். அதுவரை இந்த பொருளை (அர்த்தத்தை) நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. :-) தேடிக் கிடைத்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

மௌலி. புதிய செய்திகளைத் தந்ததில் மகிழ்ச்சி.

நீங்கள் 'அதே அதே' என்று சொல்வது வவ்வால் சொன்னது சரி என்று சொல்லும் ஒப்புதலா, நான் இல்லை என்று மறுத்ததற்கான ஒப்புதலா என்று புரியவில்லை. வடமொழி வல்லுனரான நீங்கள் விளக்குங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி சங்கர்.

குமரன் (Kumaran) said...

வெத்துவேட்டு ஐயா. ஒரு ப்ராப்ளமும் இல்லை. வருகைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

பாலா, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு மறுப்பில்லை. வருகைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

இராகவன்.

அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இராவணன் என்ற சொல்லோ இலங்கை வேந்தன் என்ற சொல்லோ சீதையைக் கவர்ந்தவனுக்கு இருந்தால் நான் தலைப்பில் செருகவில்லை; உள்ளதைத் தான் சொன்னேன் என்று ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் வெள்ளிமலையை நகர்த்தியவனைப் பற்றிப் பேசும் பழைய இராமாயணத்தை உசாத்துணையாக நான் கொண்ட கட்டுரையில் காட்டியிருக்கிறார்கள். பாருங்கள்.

பழந்தமிழ் நூல்களில் கார்த்திகைப் பெண்களும் மற்ற கந்தபுராண தகவல்களும் வருகின்றன. நீங்கள் அறுதியிட்டுச் சொல்வதுபோல் சூர் தடிந்ததும் மா அறுத்ததும் வள்ளியை மணந்ததும் மட்டுமே வரவில்லை. முன்பே சொன்னது போல் இலக்கியங்களில் இறை கட்டுரைகளை எழுதும் போது அவற்றையும் எழுதுகிறேன். அது வரை சிலப்பதிகாரத்தைப் பாருங்கள்.

நீங்கள் சொல்லும் வெய்ய வாரணம் எடுத்துக்காட்டு பொருந்தா எடுத்துக்காட்டு என்பது என் எண்ணம். வாதத்திற்காக நீங்கள் எடுத்து வைப்பவை சுவையாக இருக்கின்றன என்பது மட்டுமே இப்போது சொல்லலாம். :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

ரக்ஷ - காப்பாற்று; ரக்ஷக: - காப்பாற்றுபவன்/ள்; ரக்ஷித: - காப்பாற்றும். தர்மோ ரக்ஷித ரக்ஷக: - தர்மம் காப்பாற்றுபவனை/ளை காப்பாற்றும். ரக்ஷிதா என்பது பெண்ணைக் குறிப்பது அதுவும் மீட்கப்பட்டப் பெண்ணைக் குறிப்பது என்பது வருவித்துக் கொண்ட பொருளாக இருக்கலாம். ஆனால் நேரடிப் பொருள் இல்லை.

சுர என்பதற்கு மனிதன் என்ற பொருள் உண்டு என்பதையும் முதன்முறையாகக் கேள்விபடுகிறேன். :-) அசுர = மனிதத்தன்மையற்றவன் என்று சொல்ல வேண்டி சுர = மனிதன் என்ற பொருள் சொல்லப்படுகிறதோ இங்கே? :-)

அசுரன் எப்படி அரக்கன் ஆனது என்றும் கொஞ்சம் விளக்குங்கள்.

ராவண என்ற வடசொல்லை ராவணன் என்றும் பின்னர் இராவணன் என்றும் சொன்னோம் என்று அந்தப் பெயருக்கு விளக்கம் தந்தால் இரா + வண்ணன் என்ற பொருள் பொருந்தாது. இராவணன் என்பது தமிழ்ப்பெயரே; அது இரவின் வண்ணம் கொண்டவன் என்று பொருள் படும்; அது வடமொழிக்குப் போகும் போது ராவண என்று ஆனது என்று விளக்கம் தந்தால் பொருந்தும்.

நீங்கள் சொல்லும் ஆரியர்கள் தென்னாட்டில் பரவிய நிகழ்வுகளைச் சுட்டுவது தான் இலக்கிய புராணக்கதைகள் என்னும் விளக்கத்தை நானும் படித்திருக்கிறேன். ஆனால் திராவிட என்ற சொல்லுக்குத் தெற்கு என்ற பொருள் அங்கே வருவதாக எனக்குத் தோன்றவில்லை. திராவிட என்ற சொல்லுக்குத் தமிழ் என்ற பொருள் மட்டுமே வருகிறது.

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. என்னைக் கேட்டால் இராகவன் வெறும் வாதம் மட்டுமே புரிகிறார். :-) அவருடைய வாதம் சீதையை யாரோ கவர்ந்து சென்றார்கள் என்று இந்தப் பாடல் கூறுகிறது; எல்லா இராமாயணங்களும் சீதையைக் கவர்ந்தவன் இராவணன் என்று சொன்னாலும் இந்தப் பாடலில் சொல்லாததால் நான் தலைப்பில் இராவணனைச் சொன்னது தவறு என்பது அவர் வாதம்.

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் நன்றி ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா. ஆமாம். பின்னூட்டங்கள் சுவையாகத் தான் இருக்கின்றன. அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. வரலாற்றுப் புகழ் மிக்கப் பதிவா? அப்படிப் போடுங்க. :-) உங்க கொல்ட்டி இடுகையைப் போல இது என்று சொல்லலாமா? :-)

இராகவனார் எங்கே நிக்கிறார்ன்னு தெள்ளத் தெளிவா சொன்னீங்க. :-)

வவ்வால் said...

குமரன்,

நீங்கள் இப்பதிவுக்கு தரவு என காட்டிய மதுரை திட்ட மேற்கோளில் இருந்து பாடலை மட்டும் எடுத்துக்கொண்டு சொன்ன கருத்து அனைத்தும் உங்கள் கைவண்ணமே அதற்கு என தனித்தரவுகள் இருக்கா?

நான் சொன்னதில்

இராக்ஷன் என்பதற்கு பொருள் , சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் - தமிழ் அகராதி அல்லது லிப்கோவின் தமிழ்-தமிழ் அகராதி பார்த்தாலே தெரியும்.

தமிழ் - தமிழ் அகராதியில் எப்படி இதைப்போடுவான் எனக்கேட்காதிர்கள் அவர்கள் கொடுத்துள்ளார்கள்!

அசுர என்பதற்கும் இணையத்திலேயே asur என்று போட்டு பார்த்தால் கிடைக்கும்.

வானரர்கள் என்பதற்கு குரங்குகள் தான் என எப்படி சொல்கிறீர்கள் சமஸ்கிருத பொருள் வன+ நரர்கள் என தான் சொல்கிறது அப்படி எனில் காட்டு மனிதர்கள் எனத்தான் வரும்! குரங்கு என எப்படி வரும்.(சமஸ்கிருதத்தில் அப்படி தான் இருக்கிறது) ஆனால் சொல்லும் போது குரங்கு என்று சொல்லிவிடுகிறார்கள்.

மேலும் அசுரர்கள் என்பவர்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்று விளக்கம் போட்டுள்ளார்கள். சூத்திரர்கள் என்பவர்களும் காலில் இருந்து பிறந்தவர்கள் எனவும் மனு நீதி சொல்லி வைக்கிறதே!

அதை விட , ராக்ஷத குணம் , தமோ குணம் என அது எல்லாம் மனிதனின் குணமாக தான் சாத்திரங்கள் சொல்கிறதே அது ஏன்?(பகவத்கீதையில் கூட அப்படி இருக்கிறது எங்கே என சுட்டி காட்ட இயலவில்லை)

அப்படி எனில் அது தனிப்பிறவி அல்ல குணம் என்பது தானே உண்மை!

திராவிடம் என்றால் தமிழ் என உங்களுக்கு எந்த தரவு காட்டுகிறது, அடுத்தவர்கள் சொல்வதை வைத்து மட்டும் சொல்லாமல் கூறுங்கள் , அதனுடன் திராவிடம் என்றால் தெற்கு என்று விளக்கம் இருப்பதை நான் காட்டுகிறேன்!

நான் சொன்னது,

//இராவண்ணன் என்பது தான் அவன் பெயர், இரா என்றால் கறுப்பு என்று அர்த்தமாம், கறுமை நிறத்தவன் எனக்காரணப்பெயர் வைத்து சுட்டுவதால் திராவிடன் என்று சொல்கிறார்கள். மேலும் தெற்கில் வசிப்பவன் என்பது எல்லாம் சேர்ந்து திராவிடன் என்பதை மெய்பிக்கிறது.//

நீங்கள் சொல்வது,

//இராவணன் என்பது தமிழ்ப்பெயரே; அது இரவின் வண்ணம் கொண்டவன் என்று பொருள் படும்; அது வடமொழிக்குப் போகும் போது ராவண என்று ஆனது என்று விளக்கம் தந்தால் பொருந்தும்.//



இராவணன்= இரா+வண்ணன் என்பது கருமை நிறத்தவன் என்று பொருளில் வருகிறது என்று நான் சொன்னேன் , அதனை பிரித்து சொல்வதில் தவறாக கூட இருக்கலாம் , ஆனால் நீங்களும் இரவின் வண்ணம் கொண்டவன் என்று தான் இப்போது சொல்லியுள்ளீர்கள்,இரவு என்ன வெள்ளையாகவா இருக்கும்? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டீர்கள்!

மேலும் நான் எந்த இடத்திலும் இராவணன் என்பது வட மொழி என சொல்லவில்லையே!மேலும் இராவணன் என்பவன் திராவிடன் , தமிழன் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை அல்லவா?

அரக்கன், அசுரன் , இராக்ஷன் என்பது எல்லாம் மனிதர்களின் துர் குணங்கள் என்று தான் பல இடத்திலும் சொல்லப்பட்டுள்ளது, பிற்காலத்தில் அவை எல்லாம் தனி கொடுரப்பிறவிகள் என்று கருத்தாக்கம் செய்யப்பட்டு விட்டது.

குமரன் (Kumaran) said...

வவ்வால். ரொம்ப இடைவெளி விட்டுப் பின்னர் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்கிறோமே; படிப்பார்களோ இல்லையோ என்று நினைத்திருந்தேன். உடனே படித்துவிட்டீர்களே?! :-)

பாடல் மட்டுமே அங்கிருந்து எடுத்துப் பொருளும் அதற்கான விளக்கங்களும் என் கைவண்ணமாகத் தான் சொன்னேன். அதில் ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள். தேவை எனில் தரவுகளும் எடுத்துத் தருகிறேன். :-) சில முன்னீடுகள் வைத்திருக்கிறேன். அவை முன்னீடுகள் (Proposals) என்பதாலேயே தரவுகள் அவ்வளவாக இல்லை என்பது கண்கூடு. நீங்கள் சொன்ன பொருள்களும் (அருத்தங்களும்) முன்னீடுகள் தான்; உறுதியானவை இல்லை என்றால் நான் தரவுகள் கேட்கவில்லை. சரியா? :-)

சரி. உங்களுக்காக எனக்குத் தெரிந்த இணைய அகராதிகளில் தேடலாம் என்று மூன்று அகராதிகளில் தேடினேன். இராக்ஷச என்று தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. இராட்சச என்று தேடியதில் கீழே உள்ளவை கிடைத்தது.

Searching the entire dictionary for இராட்சச. Your search located 1 occurrences.
Click here for a key-word-in-context display.



--------------------------------------------------------------------------------
1. இராட்சச irāṭcaca : (page 322)

*இராசோபசாரம் irācōpacāram
, n. < id. + upa-cāra. Royal entertainment; அரச னுக்குரிய உபசாரம்.

*இராட்சச irāṭcaca
, n. < rākṣasa. Name of the forty-ninth year of the Jupiter cycle; ஒரு வருஷம். (சோதிட. சிந்



--------------------------------------------------------------------------------

இராக்கத என்று தேடியதில் கிடைத்தவை.

A search found 18 entries with இராக்கத in the entry word or full text. The results are displayed using roman characters without diacritics and South Asian scripts.
acurar (p. ) [ acurar ] avunar, இராக்கதர்.

arakkan (p. ) [ arakkaṉ ] acuran, இராக்கதன்.

arakki (p. ) [ arakki ] irakkatastiri.

arakkiyar (p. ) [ arakkiyar ] irakkatap பெண்கள்.

intirari (p. ) [ intirāri ] irakkatan.

irakkatar (p. ) [ irākkatar ] iratcatar.

irakkatir (p. ) [ irākkatir ] cantiran.

iratcakan (p. ) [ irāṭcakaṉ ] irakkatan.

kunapavunar (p. ) [ kuṇapavūṇar ] irakkatar.

kaikkilaimanam (p. ) [ kaikkiḷaimaṇam ] acuram இராக்கதம்பைசாச மூன்றும்.

calakatangkatar (p. ) [ cālakaṭangkaṭar ] irakkatar.

curaralar (p. ) [ curāralar ] irakkatar.

taiteyar (p. ) [ taitēyar ] irakkatar.

nirutar (p. ) [ nirutar ] irakkatar.

picitacanar (p. ) [ picitācaṉar ] irakkatar.

mukalan (p. ) [ mūkalaṉ ] irakkatan.

yatutanavar (p. ) [ yātutāṉavar ] irakkatar.

nirutar (p. ) [ nirutar ] irakkatar.

இங்கு எங்காவது இராக்ஷசர், இராச்சசர், இராக்கதர் - மாற்றான் மனைவியைக் கவர்ந்தவர் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். என் நிலை நான் அறிந்தவரை இராக்ஷசன் என்பதற்கு மாற்றான் மனைவியைக் கவர்பவன் என்று பொருள் இல்லை; அதனால் தரவுகள் கேட்கிறேன்; அகராதி பாருங்கள் என்பதே உங்கள் பதில் என்றால் சரி என்று விட்டுவிடுகிறேன்.

அதே போல் அசுர என்பதற்கு மனிதத்தன்மை இல்லாதவர் என்ற பொருள் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப் பார்க்கிறேன்.

:-)

குமரன் (Kumaran) said...

வானர என்பதற்கு வடமொழிப் பொருளை வடமொழி அகராதியிலிருந்து தருகிறேன்.

Cologne Digital Sanskrit Lexicon: Search Results
1 vanara m.= %{vAnara} , an ape L.
2 vAnara m. (prob. fr. %{vanar} , p. 918) `" forest-animal "' , a monkey , ape (ifc. f. %{A}) Mn. MBh. &c. ; a kind of incense , Olibanum L. ; (with %{AcArya}) N. of a writer on medicine Cat. ; (%{I}) f. a female ape MBh. R. Katha1s. ; Carpopogon Pruriens L. ; mf(%{I})n. belonging to an ape or monkey , m񭯮key-like &c. MBh. R.

வானர என்பது வன + நர என்று தான் சமஸ்கிருதம் பொருள் சொல்கிறது என்று சொல்கிறீர்கள். அது சிலருடைய விளக்கம் தான்; அதுவும் காட்டு மனிதர்களைக் குரங்குகள் என்று சொல்லிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் போது தான் அப்படி பிரித்துப் பொருள் சொல்கிறார்கள். அது சந்தர்ப்ப வாதம் என்பது என் எண்ணம். நான் அறிந்தவரை வானர என்பதை வன + நர என்று பிரிக்க முடியாது. வன + நர என்பது வனனர என்று தான் வருமே ஒழிய வானர என்று வராது (வடமொழி இலக்கணப்படித் தான் கூறுகிறேன்).

நீங்கள் சொன்னதற்கு நேர் மாறாகத் தான் இருக்கிறது என்கிறேன் - வானர என்பது குரங்கு என்று தான் வடமொழியில் இருக்கிறது; அதற்குச் சிலர் வன நர என்று பொருள் கொண்டு மனிதர்களைக் குரங்குகள் என்று இகழ்ச்சியாகச் சொல்கிறது இராமாயணம் என்று சொல்கிறார்கள். இதனையே என் இடுகையில் தொட்டிருந்தேன்.

குமரன் (Kumaran) said...

அசுரர்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தார்களா? இது என்ன புதிய கதை. இதுவரை நான் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இப்படித் தான் புதிய தரவுகள் தோன்றுகின்றன போலும். :-) அசுரர்களும் சுரர்களும் காச்யபரின் பிள்ளைகள்; மாற்றாந்தாய் மக்கள் என்று புராணங்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். ஆனால் பிரம்மனின் எந்த உறுப்பிலிருந்து சுரர்கள் பிறந்தார்கள்; எந்த உறுப்பிலிருந்து அசுரர்கள் பிறந்தார்கள் என்று படித்தும் அறியேன்; கேட்டும் அறியேன்.

சூத்திரர்கள் பிரம்மனின் காலிலிருந்து பிறந்தவர்கள் என்று புருஷசூக்தம் சொல்கிறது; மனு தர்ம சாஸ்திரம் அதனை எடுத்துக்காட்டாக வைக்கிறது - இது படித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ராக்ஷத வேறு ராஜச வேறு. முக்குணங்கள் சத்வ, ரஜஸ், தமஸ் என்பவை; குணம் என்ற சொல்லோடு இணைத்துச் சொல்லும் போது சாத்வீக குணம், ராஜச குணம், தாமஸ குணம் என்று சொல்வார்கள். நீங்கள் ராஜத குணத்தை ராக்ஷத குணம் என்று எடுத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். பகவத் கீதையிலோ வேறெங்குமோ ராக்ஷத குணம் என்று முக்குணங்களின் வகைகளில் சொல்லப்படவில்லை; ராஜச குணம் சொல்லப்படுகின்றது.

குமரன் (Kumaran) said...

Cologne Digital Sanskrit Lexicon: Search Results

1 draviDa m. N. of a people (regarded as degraded Kshatriyas and said to be "' descendants of Dravid2a , sons of Vr2ishabha-sva1min S3atr.) and of a district on the east coast of the Deccan Mn. Var. MBh. &c. ; collect. N. for 5 peoples , viz. the A1ndhras , Karn2a1t2akas , Gurjaras , Tailan3gas , and Maha1ra1sht2ras (cf. %{dAviDa} below) ; N. of a son of Krishn2a BhP. ; of an author Cat. ; pl. of a school of grammarians ib. ; (%{I}) f. (with %{strI}) a Dravidian female Cat. ; (in music) N. of a Ra1gin2i1.

2 drAviDa mf(%{I})n. Dra1vidian , a Dra1vida MBh. Ra1jat. &c. ; m. pl. the D񄲡1vida people MBh. R. Pur. ; also collect. N. for the above 5 peoples , and of the 5 chief D񄲡1vida languages , Tamil , Telugu , Kanarese , Malaya1lam and Tulu ; m. sg. a patr. fr. Dravid2a S3atr. ; N. of a Sch. on the Amara-kos3a Col. ; a partic. number L. ; Curcunia Zedoaria or a kindred plant Bhpr. ; (%{I}) f. a Dravidian woman Vcar. ; small cardamoms Bhpr.

திரவிட என்பதற்கு வடமொழி அகராதி சொல்லும் பொருட்கள்: (1) க்ஷத்திரியர்களில் ஒரு வகை மக்களுக்கு உரிய பெயர்; (2) தக்காணத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஒரு பகுதியில் வாழும் மக்களின் பெயர், (3) ஆந்திரர், கருநாடகர், கூர்ஜரர், தைலங்கர் (தமிழர், கேரளர்), மஹாராட்டிரர் என்னும் ஐவகை மக்களின் பெயர் (சென்ற இடுகையின் பேசுபொருள்) (4) கிருஷ்ணனின் மகன் பெயர் (5) ஒரு இலக்கண முறையின் ஆசிரியர் பெயர் (6) இசையில் வல்ல திராவிடப் பெண் (7) ஒரு இராகத்தின் பெயர்

திராவிட என்பதற்கு அதே அகராதி சொல்லும் பொருட்கள்: (1) திராவிட மக்கள் (2) ஐவகை மக்களின் கூட்டுப் பெயர் (3) ஐவகை மொழிகளைப் பேசும் மக்களின் கூட்டுப் பெயர் (4) அமரகோசத்தில் ஒரு பகுதியின் பெயர் (5) ஒரு வகை எண் (6) சிறிய வாசனைத் திரவியத்தின் பெயர்

நீங்கள் கேட்ட தரவான திராவிடம் = தமிழ் என்பதனைத் தேடித் தருகிறேன்.

குமரன் (Kumaran) said...

இராவணன் என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கத்தை நான் மறுக்கவில்லை. அதனைத் தெளிவாகச் சொல்லததற்கு மன்னிக்கவும். நீங்கள் எங்கும் இராவணன் என்பது வடமொழி என்று சொல்லவில்லை. ஆனால் அது வடமொழிப்பெயர் என்ற கருத்தும் இருக்கிறது. அதனால் இரண்டு வகை கருத்துகளையும் சொன்னேன்.

அரக்கன், அசுரன், இராக்ஷன் என்பவை எல்லாம் மனிதர்களின் துர்குணங்கள் என்ற விளக்கத்தில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் இராக்ஷசன் என்பதற்குக் கொடுக்கப்பட்ட நேரடிப் பொருளில் தான் எனக்கு மறுப்பு இருந்தது; இருக்கிறது.

மற்றபடி உங்களின் பொதுக் கருத்தான அரக்கன் என்பது தனி வகைப்பிறவி இல்லை; அது மனிதர்களில் துர்க்குணத்தைக் குறிப்பது தான் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை.

வவ்வால் said...

குமரன் ,

அசுரன் ,அரக்கன், இராக்ஷ்ன் எல்லாம் குணம் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் ஆனால் , பாடலில் அரக்கன் என சொல்லிவிட்டாரே எனவே இராவணன் மனிதன் அல்ல என்பது போலவும் சொல்கிற்றீர்கள் அதான் குழப்பம்.

அசுரன் , இராக்ஷன் என்பதற்கு நான் சொன்னதன் பொருள் எங்கும் கிடைக்கவில்லையே என சொல்லி இருந்தீர்கள் ஆனால் நான் தட்டியதும் கூகிள் கொட்டுதே எப்படி!

இணையத்தில் இருப்பதாலே எதுவும் உண்மை என சொல்ல முடியாது அதனால் தான் இதுவரை இணைய தரவு எதுவும் சொல்லவில்லை. நீங்கள் விரும்பி கேட்டதால் சில,

1) http://www.themystica.org/mystica/articles/a/asura.html
2)http://www.bhavsarsamaj.com/weddingtype.asp

கோவி.கண்ணன் said...

வானரம் - இதற்கு தமிழ் பகுப்பும் இருக்கிறது. அதுதான் குரங்கைக் குறிக்க சரியான பகுப்பு.

வால் + நரன் = வானரன்... அதாவது வாலை உடைய மனிதன்.

வன + நரன் குரங்கு அல்ல காட்டு மனிதன் / காட்டு வாசி. வடமொழி பகுப்பு பிழையானது. எல்லாமும் வடமொழிச் சொல் என்று காட்ட வடமொழியார் திணறுவது எப்போதும் உள்ளவைதான்.
:)))

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. வரலாற்றுப் புகழ் மிக்கப் பதிவா? அப்படிப் போடுங்க. :-) உங்க கொல்ட்டி இடுகையைப் போல இது என்று சொல்லலாமா? :-)
//
கொல்ட்டி கதையெல்லாம் சும்மா... இது பல வருட விவாதமாச்சே ;)

// இராகவனார் எங்கே நிக்கிறார்ன்னு தெள்ளத் தெளிவா சொன்னீங்க. :-)//
நான் எங்க சொன்னேன்? அவரே தான் வாக்குமூலம் கொடுத்திருக்காரு ;)

வானரம்னு இராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பது நியண்டர்தார் மனிதர்(?)கள்னும் கேள்வி பட்டிருக்கிறேன்...

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

பாலாஜி. வரலாற்றுப் புகழ் மிக்கப் பதிவா? அப்படிப் போடுங்க. :-) உங்க கொல்ட்டி இடுகையைப் போல இது என்று சொல்லலாமா? :-)
//
கொல்ட்டி கதையெல்லாம் சும்மா... இது பல வருட விவாதமாச்சே ;)

// இராகவனார் எங்கே நிக்கிறார்ன்னு தெள்ளத் தெளிவா சொன்னீங்க. :-)//
நான் எங்க சொன்னேன்? அவரே தான் வாக்குமூலம் கொடுத்திருக்காரு ;) //

பெரியவங்க மன்னிக்கனும். குற்றம் சாட்டப்பட்டவர்னு நான் சொல்லீருக்கனும். குற்றவாளின்னு தப்பாச் சொல்லீட்டேன். இப்ப அத நீங்க நம்பனும்னு தேவையில்லை. உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள்.

Kasi Arumugam said...

குமரன்,

//செல்வன். நீங்கள் சொல்லும் இரண்டு தகவல்களும் (பாண்டிய மன்னனைப் பற்றி இராமாயணம் சொல்வது, பாண்டிய மன்னன் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டது) எனக்குப் புதியவை. மேல் தகவல்கள் கிடைத்தால் சொல்லுங்கள்.//

இதில் எதாவது தேறுமா பாருங்க.

சும்மா அதிருதுல said...

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆன, ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. சேதுசமுத்திர திட்டத்துக்கு, மாற்றுப்பாதை பற்றி பரிசீலிக்கவும் தயார் என்றும் அறிவித்து உள்ளது. இது பத்திரிக்கைச் செய்தி.
கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை முடக்குவது உண்மையான வந்தேறிகளா? இல்லை இந்திய நாட்டின் குடிமகன்களா? என்பதில் சந்தேகம் எழுகிறது. 850 ஆண்டுகாலம் இந்திய நாட்டை ஆண்டதற்கான ஆதாரங்கள் இன்றும் பசுமை மாறாமல் வானளாவி நிற்கின்றது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கூட இதே ஆரிய ராமரின் பெயரால் ஓர் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றினார்கள். 15 ஆண்டுகள் கழித்து இவர்களின் கற்பனை கதைகளை கலாச்சாரமாக்க மீண்டும் ஒரு நாடகத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு. இதில் இந்து மதத்தின் மீது மட்டும் கரிசனம் காட்டுவது ஏன். வந்தேறிகளால் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பகரமாக ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். கொளுத்தப்பட்ட கிறுத்துவப் பாதிரியாருக்கு பகரமாகவும் ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். 100 சதவீதம் வந்தேறிகளால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி. காவி பயங்கரவாதிகளால் சாம்பலாக்கப்பட்ட பாதிரியார். அதற்கு பதிலாக 3.5 + 3.5 எங்களுக்குள்ள பங்கில் பாலத்தை இடித்து கொள்கிறோம். இன்னும் அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தோமானால், இன்று ராமர் பாலம் என்று வந்தேறிகளால் கூறப்படும் அந்த இடம் 1,40,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே சமதளமாக குறுக்கே கடல் நீர் புகாமல் விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தது. இந்திய வம்ச வழி வந்த எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் இலங்கையில் திருமணம் முடித்தார். அப்போது அவருக்கு சீதனமாக வழங்கப்பட்டதே அந்த இடம். அப்போது இலங்கையை ஆண்டு வந்த இவர்களால் இராவணன் என அழைக்கப்படும் மன்னர் நிலவழங்கி பாண்டியன் என்பவரின் பண்ணை நிலத்திற்கு அடுத்ததாக எங்கள் முப்பாட்டனாரின் நிலம் இருந்தது. சீதையின் அழகில் மயங்கிய மன்னன் நிலவழங்கி பாண்டியன் சீதையை திருமணம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்படுகிறான். வழியில் எங்கள் முப்பாட்டனார் நிலத்தை கடந்து செல்ல அனுமதிக்காக காத்திருக்கும் போது மன்னருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் விருந்து தருவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது எங்களது முப்பாட்டனாரும், மன்னர் நிலவழங்கி பாண்டியனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எங்கள் முப்பாட்டனார் மன்னரிடம், "மன்னா சீதைக்கு சிவபெருமான் ஒரு வரம் தந்துள்ளார் அது பற்றி தாங்களுக்கு ஏதும் விபரம் தெரியுமா?", என்று கேட்டார். அதற்கு மன்னரோ, "அப்படியா அது பற்றி எனக்கேதும் தெரியாது நண்பா..! கொஞ்சம் விளக்குங்களேன்", என மன்னர் கேட்டதற்கு முப்பாட்டனாரோ, "அதாவது சீதையின் விருப்பமில்லாமல் யாரேனும் அவரை தீண்டினால் தீண்டியவர் தலை வெடித்து சிதறிவிடும் என்பதே அந்த வரம்", என்று முப்பாட்டனார் விளக்கினார். விருந்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மன்னர் காட்டுக்கு வந்து சீதையை எந்த வித வற்புறுத்தலும் இன்றி சீதையின் எதிர்ப்பும் இன்றி மன்னரின் தலையும் வெடிக்காமல், அவரது தொடையின் மீதமர்ந்து மகிழ்ச்சியோடு இலங்கை வந்து சேர்ந்தார். (அப்படியென்றால் சிவன் கொடுத்த வரம் பொய்யா) மீண்டும் மூன்று மாத இடைவெளியில் ராமர் அங்கு வருகிறார். இல்லாத கடல் மீது பாலம் கட்ட வானர சேனைகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு உதவிய அணிலின் முதுகில் ராமரால் கோடு போடப்படவும் இல்லை. சமதளப்பரப்பில் நடந்தே ராமர் வந்தார் எங்கள் முப்பாட்டனார் வசம் அனுமதி பெற்று நிலத்தை கடந்து இலங்கைக்குள் சென்றார்கள். மன்னரைக்கொன்று சீதையை திரும்ப அழைத்துச் சென்றார்கள். கட்டிய மனைவியை அத்துவானக்காட்டில் கோடு போட்டு வைத்து விட்டு கணவன் சென்றுவிட்டான். அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து தன் தாயின் அரவணைப்பில் வைத்தான் மன்னன் நிலவழங்கி பாண்டியன். மொத்தம் நான்கு முறை இந்தியா – இலங்கை தரைப்பகுதியை கடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை கூட பாலம் தேவைப்படவில்லை. இவர்களின் முதல் இராமாயணத்தில் இந்த நிகழ்வுகளெல்லாம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள். நாசாவிலிருந்து எடுத்த புகைப்படம் என்னவென்றால் எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தரின் மகனார் மஸ்தான் எள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் காலத்தில் இந்த ராமர்-ராவணர் சண்டையெல்லாம் முடிந்து விட்டதால் போரடிக்கும் நேரத்தில் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றை உறுவாக்கினார். பல அடி உயரத்தில் பல கிலோ மீட்டர்கள் நீளத்தில் ராட்சத மைதானம் அது. அதுதான் பாலம் போல் தெரிந்திருக்கிறது. பிறகு 40,000 வருடங்களுக்கு முன் நம் நெஞ்சை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் ஆம், கடல் கொந்தளிப்பு, இலங்கைக்கும்-இந்தியாவிற்கும் இடையே இறைவனால் பேடப்பட்ட பெருந்திரை. அந்த கொந்தளிப்பின் போது முப்பாட்டனாரின் நிலப்பத்திரம், மூலப்பத்திரம், அவரின் மாமனாரின் உயில், முதல் இராமாயணத்தின் நகல் எல்லாமே அடித்துச் சென்று விட்டது. இன்றும் கூட இந்திய-இலங்கை வான் எல்லையில் பறக்கும் போது கடல் பகுதியை பார்த்தால் ஆங்காங்கே கோல்ப் விளையாட்டு மைதானங்கள் இருப்பது தெரியவரும். வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்களான இவர்களின் இந்த இராமாயணம் இரண்டாவதாக 25,000 ஆண்டுக்கு முன்பு வால்மீகி அவர்களால் எழுதப்பட்டது. வால்மீகி காலத்திலெல்லாம் இந்தியாவும்-இலங்கையும் பிரிந்து 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. வால்மீகி காலத்தில் இந்தியா-இலங்கை நடுவே கடல்நீர் இருந்ததால் லாஜிக் இடிக்கக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு பாலம் கட்டி போனதாக கதையில் எழுதி விட்டார். ஒரு பேச்சுக்கு பாலம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் காவிகளின் சுயலாபத்திற்காக நாங்கள் பாபர் மஸ்ஜிதை இழந்தோமல்லவா அதுபோல மக்களின் பொதுலாபத்திற்காக இவர்கள் பாலத்தை இழக்கட்டுமே. அதுவன்றி பாலம் தான் முக்கியமெனக் கருதினால் முதலில் பாபர் மஸ்ஜிதை கட்டி கொடுத்துவிட்டு பிறகு பாலத்தை பாதுகாக்கட்டும். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்காக யார் எங்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்?. இனி இவர்கள் மன்னிப்பு கேட்டால் நாங்களும் கேட்போம் இல்லாத பாலத்தை இடித்துவிட்டு.
நன்றி.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

குழப்பத்திற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டேன். சொல்ல வந்ததை இடுகையில் சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

இராவணனை அரக்கன் என்று சொல்லி வடமொழியாளர் கேவலப்படுத்திவிட்டார்கள் என்று நேற்று கூட சில இடுகைகள் வந்தன. வடமொழியாளர் மட்டும் இல்லை; பழந்தமிழ் பாடலும் அப்படித் தான் சொல்கிறது என்று சொல்ல வந்தேன். அதனைச் சரியாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

அசுரர் என்பதற்கும் இராக்ஷசன் என்பதற்கும் சுட்டி தந்ததற்கு நன்றி. அசுரரைப் பற்றிய சுட்டியில் அசுரர் என்றால் மனிதத் தன்மையற்றவர் என்று சொல்லியதாகத் தெரியவில்லை. நான் வேகமாகப் படித்தேன். சரியாகப் படிக்காமல் விட்டிருக்கலாம்.

ராக்ஷச குணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் ராக்ஷச மணத்தைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். மண வகைகளைப் பேசும் போது ராக்ஷச என்ற மண வகையில் பெண்ணைத் (மாற்றான் மனைவியை இல்லை) தூக்கிக் கொண்டு வந்து திருமணம் செய்வது ராக்ஷச வகைத் திருமணம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இராவணன் இராக்ஷசன் இல்லை; பெண்ணைத் திருமணத்திற்காகச் சிறையெடுத்த பீஷ்மர் ராக்ஷசன். சரியா? :-) ஆனால் பீஷ்மரை இராக்ஷசன் என்று சொல்வதில்லை. ஏனெனில் அவர் செய்தது இராக்ஷச மண வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அவர் இராக்ஷச குணத்தைக் கொண்டவரில்லை.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

வால் + நரன் = வானரன் = குரங்கு - சரி. புரிகிறது. ஆனால் நரன் என்பது வடமொழி வழி வந்த வடசொல்லா? தமிழ்ச்சொல்லா? விளக்குங்கள்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி.

வால் உள்ள மனிதன் தான் வானரன் என்று கோவி.கண்ணன் மேலே சொல்லியிருக்கார். நீங்க நியாண்டர்தால் மனிதர்கள் என்று கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். நியாண்டர்தால் மனிதர்களுக்கு வால் இல்லை என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இராகவன்,

இதில் வெற்றியாவது தோல்வியாவது. நீங்கள் வெற்றி தோல்விக்காக இங்கே வந்து தங்கள் கருத்துகளை (வாதங்களை) வைத்திருந்தால் வெற்றி ஒருவருக்கும் தோல்வி ஒருவருக்கும் வந்ததாகத் தோன்றலாம். ஆனால் நாம் தான் கருத்துகளை மட்டும் தானே பரிமாறிக் கொள்கிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர், குற்றவாளி என்றெல்லாம் பிரித்து விளக்கம் சொல்ல இப்போது இராவணன் மேல் நீதி மன்றத்தில் வழக்கா நடந்து கொண்டிருக்கிறது? வாரியார் சுவாமிகள் முதல் பலரும் இராவணப் பெருந்தகையை இதில் மட்டும் குற்றம் சாட்டி குற்றவாளி என்று தீர்ப்பும் கொடுத்துவிட்டார்களே.

குமரன் (Kumaran) said...

வால்மீகி இராமாயண சுலோகங்களுக்கான சுட்டிக்கு நன்றி காசி. வால்மீகி இராமாயணம் முழுக்க பாண்டிய என்ற சொல்லை வைத்துத் தேடிப் பார்க்கும் ஆவலைக் கொடுத்துவிட்டீர்கள். தேடிப் பார்த்து ஏதாவது நல்ல செய்தி கிடைத்தால் இன்னொரு இடுகையாக இடுகிறேன். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

சும்மா அதிருதுல. உங்கள் பின்னூட்டம் சுவையாக இருக்கிறது. ஏன் நீங்கள் ஒரு 'சும்மா அதிருதுல இராமாயணம்' எழுதிப் பதிக்கக் கூடாது. சுருக்கமாக இங்கே எழுதியிருப்பதை விரிவாக எழுதினால் பலர் பயன்பெறுவார்களே.

ramachandranusha(உஷா) said...

சதம் அடிக்க வாழ்த்துக்கள் :-)

வவ்வால் said...

குமரன் ,

பெண்ணை தூக்கி செல்வதை வைத்து தான் இராக்ஷ்சன் என வந்தது என்று சொன்னேன். தரவும் காட்டினேன், இப்போது அது மண வகையில் என சொல்கிறீர்கள்.

உண்மையில் ராவணன் தூக்கி சென்று தன்னை மணம் புரிந்து கொள் என்று தான் கேட்பான் , அவள் அனுமதி இன்றி அவனால் தொட முடியாது , தொடவும் மாட்டான். அது மணமான பெண் அல்லது எப்பெண்ணோ , கவர்ந்து சென்றதன் அடிப்படையில் தான் இராக்ஷ்சன் ஆனான். அதுவே பின்னாளில் நிலைத்து விட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்ச்சில் மோதும் போது "clash of titans" என தலைப்பிட்டு சில சமயம் பத்திரிக்கையில் போடுவாங்க உடனே அவர்கள் எல்லாம் அரக்கர்கள் ஆகிடுவாங்களா?

நீங்கள் இராக்ஷ்ஷன் என்பது ஒரு குறியீடு தான் என்று ஏற்றுக்கொள்வது போலவும் சொல்கிறீர்கள் , இல்லை என்பது போலவும் சொல்கிறீர்கள்! :-))

குமரன் (Kumaran) said...

உஷா. வாழ்த்துகள் சொல்லிட்டீங்க இல்லியா? 98ல போயி நின்னுடும் பாருங்க. :-)

நீங்க இந்தப் பதிவைப் படிக்கிறீங்களா இல்லையான்னு ஒரு கேள்வி இருந்தது. சொ.செ.சூ. வேணாம்ன்னு வாய் மூடி இருந்தீங்க போல. :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால். காலையில பின்னூட்டம் இடும் போது மீசையில மண்ணு ஒட்டியிருககான்னு தடவிப் பாத்துக்கிட்டே தான் எழுதினேன். உங்களுக்குத் தெரியலையா? :-)

Balaji Chitra Ganesan said...

எப்போதோ எழுதிய பதிவுக்கு இப்போது பின்னூட்டமிடுகிறேன்!!

இப்புறநானூற்றுப் பாடலில் இராவணன் என்று பெயர் குறிப்பிடப்படாதது குறித்து பின்னூட்டங்களில் விவாதிக்கப் பட்டது தெரிகிறது. சமீபத்தில் நான் படித்த பழந்தமிழர் வரலாறு பற்றிய புத்தகத்தில் (ஆசிரியர் ஞாபகமில்லை) இராவணன் என்பது பெயராகயில்லாமல் இறைவன் (அரனைக் குறிக்க, கடவுளை அல்ல) என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம் என்று குறிப்பிடப் பட்டிருந்ததது.

இராவணன் என்பது பெயர் இல்லையென்றால், இந்தப் புறநாணூற்றுப் பாடல் அதை பயன்படுத்தாதது வியப்பில்லை என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி.

நீங்கள் சொல்லும் இறைவன் --> இராவணன் என்ற சொற்பிறப்பு புரியவில்லை. அடியேன் அறிந்தவரையில் இராவணன் என்பதற்கு இரா+வண்ணன் என்றோ ராவண: என்பதற்கு பெருங்குரலில் கர்ஜிப்பவன் என்றோ தான் பொருள் வருகிறது.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.