Wednesday, February 22, 2006

150: இரண்டுவித இந்தியா...

எல்லோருக்கும் தெரியும் இரண்டுவித இந்தியா இருக்கின்றதென்று. அந்த இரண்டு இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு இந்தியாவில் நல்ல கல்வி கிடைக்கிறது; எல்லா வித வசதிகளும் கிடைக்கின்றன; வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும் சமுதாய வாழ்வு ரீதியாகவும் நன்றாய் அமையும் என்ற நம்பிககை எளிதில் கிடைக்கிறது. மற்ற இந்தியாவிலோ இதற்கு எதிர்ப் பதமாக இருக்கும் நிலையே உள்ளது. இந்த மாதிரி சமுதாய ஏற்றத்தாழ்வு நம் நாட்டில் மட்டுமன்றி உலகில் எங்கு நோக்கினும் இருக்கிறது. ஒரே வித்தியாசம். நம் நாட்டில் இந்த இரண்டு இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக மிக அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.

இந்த இடைவெளி குறைவாய் இருக்கும் நாடுகளே உலகில் வளர்ந்த நாடுகளாய் இருக்கின்றன. வளர்ந்த நாடுகள் என்றவுடனே நினைவிற்கு வரும் அமெரிக்காவிலும் நம் நாட்டில் இருக்கும் எல்லாவித தீமைகளும் இருக்கின்றன. ஆனால் கஷ்டப்படும் அமெரிக்காவிற்கும் வாழ்வாங்கு வாழும் அமெரிக்காவிற்கும் இருக்கும் இடைவெளி நம் நாட்டளவு இல்லை. அதனால் சிறிது முயற்சி செய்தாலே போதும் கஷ்டப்படும் அமெரிக்காவில் வாழும் ஒருவன் நன்றாய் வாழும் அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பெற்று முன்னேறிவிட முடியும். நம் நாட்டிலோ அப்படி இல்லை. வாய்ப்புகள் எல்லாமே வாழும் இந்தியாவின் குடிமகனுக்குத் தான் கிடைக்கின்றன. தாழும் இந்தியாவின் குடிமகனுக்கு அவ்வித வாய்ப்புகள் இருப்பதே தெரியாத அறியாமை நிலை தான் இருக்கிறது. அப்படியே அவனுக்கு இந்த வாய்ப்புக்களைப் பற்றித் தெரிந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவனால் அந்த வாய்ப்புகளை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பலவித காரணங்கள் - அவர்கள் வாழும் சமுதாயச் சூழல் அதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது ஒரு சிறையில் அடைபட்ட உணர்வினையும் நம்பிக்கை இழப்பையும் அந்த தனி மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. சமுதாயச் சூழலினால் அடிப்படைக் கல்வியும் பெற முடியாது தன் சமுதாயச் சூழலைப் போலவே அன்றாடங்காய்ச்சியாகவோ அடிமைத் தொழில் செய்பவனாகவோ அவன் மாற வேண்டியிருக்கிறது.

கல்வியும் நிலையானப் பொருளாதாரச் சூழ்நிலையும் ஒருவனை இந்தச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடும். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? சமுதாயச் சூழலினால் அவனுக்குத் தேவையான கல்வி கிடைப்பதில்லை. கல்வி கிடைக்காததால் அவனால் அந்தச் சமுதாயச் சூழலில் இருந்து விடுபட முடிவதில்லை. இது ஒரு சக்கரச் சுழற்சியைப் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி முடிவே இல்லாமல் செல்கின்றது.

பரம்பரை பரம்பரையாய் தான் இப்படிக் கஷ்டப்படும் போது இன்னொரு இந்தியாவில் வாழுபவர்கள் பரம்பரை பரம்பரையாய் நன்றாய் வாழ்வதைக் கண்டு அவனுடைய நம்பிக்கை நசுக்கப்படுகிறது. உரிமை கிடைக்காத போது அதனைத் தட்டிப் பறிக்கத் தொடங்குகிறான். அந்த உரிமைகளைக் கொடுக்க இன்னும் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளாத இந்தியா தட்டிப் பறிக்கும் அவன் செயலைக் குற்றம் என்று சொல்லி சட்டரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் தண்டிக்கிறது.

எதிர்மறையான இந்த வழிமுறையை விட்டால் வேறு வழியில்லையா நம் நாட்டை முன்னேற்ற?

உண்டு. நிச்சயம் உண்டு. இந்த இந்தியச் தேசம் தந்த வசதிகளை எல்லாம் பெற்று அதனால் ஒரு நல்ல நிலைக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயம் நினைத்தால் இது நிகழும். அவர்கள் மனது வைத்து 'நாம் பெற்ற இந்த வசதிகள் ஒரு ஏழைச் சிறுவனும் பெற வேண்டும்' என்று எண்ணி அதற்குரிய வழிகளில் ஈடுபடத் தொடங்கினால் இது நிகழும். ஏன் இளைஞர் சமுதாயம் என்கிறேன் என்று கேட்டீர்களானால், வயது ஏற ஏற எதிர்மறையான அனுபவங்களைப் பெற்று, இது நடக்காது என்ற ஒரு அவநம்பிக்கையும், அவன் என்னை அன்று அப்படிச் செய்தான், அவனுக்கு நான் ஏன் உதவவேண்டும் என்ற அடாவடி எண்ணங்களும் நிரம்பி விடுகின்றன. இளைய சமுதாயத்திடம் அந்த விதமான கசப்பு எண்ணங்கள் இல்லை. அதனால் அவர்களை சிறிது தூண்டிவிட்டால் இத்தகைய நல்ல செயல்களில் எளிதாக ஈடுபடுத்த முடியும்.

அதனால் தானோ என்னவோ நம் குடியரசுத் தலைவரும் பெரியவர்களிடம் அதிகம் பேசாமல் பள்ளிக் குழந்தைகளிடமும் இளைய சமுதாயத்திடமும் அதிகம் பேசுகிறார். அவர்களிடம் நம்பிக்கை எனும் நெருப்பை மூட்டுகிறார். எல்லோருக்கும் அக்கினிச் சிறகுகள் தந்து உதவுகிறார். இந்த எதிர்மறையில்லாத நேர்மறையான செயல்பாட்டில் ஈடுபட நினைக்கும் மூத்தவர்களும் இதனையே செய்ய வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறைக்கு பொழுது போக்குகள் என்ற பெயரில் நஞ்சினை ஊட்டும் திசைத் திருப்பல்கள் மிக அதிகமாகிவிட்டன. மற்றவர்க்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை நல்ல முறையாகச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையாய் இருக்கிறது. நல்லவை செய்யும் வாய்ப்புகள் இல்லாத வெற்றிடத்தில் இந்த திசைத் திருப்பும் தீய பொழுது போக்குகள் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன.

இந்த இளையத் தலைமுறைக்கு அவர்களுக்குள்ளே இருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நன்றாக ஊக்கப்படுத்தும்போது அவர்களும் வேறு சிலரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முயலுவான். அப்படிக் கைத்தூக்கி விடப்பட்டவர்களும் தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் தான் இருந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அப்படி ஒவ்வொருவராக நடக்கும் செயல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என்று தொற்றி ஒரு பெரும் இயக்கமாய் வளர்ந்து நம் நாடு முன்னேற்றப் பாதையில் விரைவில் நடக்க வழிவகுக்கும்.

என்ன, இதெல்லாம் எழுதுவதற்கும் கேட்பதற்கும் பேசுவதற்கும் நன்றாய் இருக்கிறது; நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறதா? இருக்கலாம். நடைமுறையில் சாத்தியமின்றி இருக்கலாம். இந்தத் திசையில் எந்த வித முயற்சியும் எடுக்காமல் தொடக்கத்திலேயே நடைமுறைச் சாத்தியமில்லை என்று சொல்லாமல் சற்றே முயன்று பார்ப்போம் என்று சில இளைஞர்களால் தொடங்கப்பட்டதே 'இந்தியக் கனவு 2020' http://www.dreamindia2020.org/ என்ற இயக்கம்.

ஆமாம். அது தொடங்கும் போது சின்னதாகத் தான் இருந்தது. தொடங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் அது ஆங்கொரு பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு போல் காட்டினை வெந்து தணிக்க ஒரு இயக்கமாய்ப் புறப்பட்டு விட்டது. மும்பையில் மூன்று தமிழ் இளைஞர்களால் தொடங்கப் பட்ட இந்த இயக்கம் இன்று இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் இயங்குகிறது. ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனிடம் சொல்லி, அவன் மற்றொருவனிடம் சொல்லி இப்படியே இது இளைய சமுதாயத்தில் ஒரு நல்ல இயக்கமாய் மாறி வருகிறது. இன்னும் அதிக இளைஞர்கள் இதனால் உந்துதல் பெற்றுத் தங்களால் இயன்ற அளவு மற்றவர்க்கு உதவி செய்யத் தொடங்கிவிடுவார்கள். அது மட்டும் நடந்தால் மேலே சொன்ன மாதிரி நம் நாடு முன்னேற்றப் பாதையில் விரைந்து வீர நடை போடும். வாய்ச்சொல்லில் மட்டும் வீரராய் இல்லாமல் செயல்வீரர்களாய் இருக்கும் இந்த இளைஞர்கள் அதனை நடத்திக் காட்டுவார்கள். இரண்டுவித இந்தியாவிற்கும் நடுவில் இருக்கும் இடைவெளி வெகு வேகமாய் மறையத் தொடங்கும். நம்பிக்கை என்னும் ஒளி வீசும்.

--------------------------

என்னுடைய இந்தக் கட்டுரை 'திசைகள்' மின்னிதழின் பிப்ரவரி மாத இதழில் வெளிவந்தது. அதனையே எனது 150வது பதிவாக இங்கு இடுகிறேன்.

72 comments:

Unknown said...

வெற்றி,வெற்றி
அண்ணன் குமரனின் 150வது பதிவு வந்தாச்சு.
வாழ்க குமரனின் தமிழ்ப்பணி

Unknown said...

இது வாழ்த்து பின்னூட்டம் தான்.

பதிவை படித்துவிட்டு விரிவான பின்னூட்டம் விரைவில்.

இலவசக்கொத்தனார் said...

150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்களது 2020-ஆவது பதிவு வரும் பொழுது, டிரீம் இந்தியாவின் முயற்சியால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடைவெளி குறைந்திருக்கும் என்று நம்புவோம்.

Ram.K said...

குமரன்,

உங்கள் பார்வை நன்றாக உள்ளது,
தங்களைன் 150 வது பதிவாக இப்பதிவு வந்துள்ளது அருமை. நல்ல சிந்தனை. அனைவரையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள்.

Simulation said...

இந்த இடைவெளியின் காரணத்தால்தான், நாட்டில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்படித்தியும், பாரதீய ஜனதா கட்சியால், "இந்தியா ஒளிர்கிறது" கோஷத்தை வைத்து வெற்றி பெற முடியவில்லை என்று நினைக்கிறேன்

வெளிகண்ட நாதர் said...

தொடர்ந்து பதிப்புகள் இட்டு இருநூறு சதத்தை சீக்கிரம் அடிங்க குமரன்!

Anonymous said...

அன்புள்ள குமரன்,
மேலும் மேலும் நிறைய எழுதுங்கள்.
மனமார்ந்த
வாழ்த்துக்கள்
சாம்

சிவமுருகன் said...

100 இளைஞர்களை அன்று விவேகானந்தர் கேட்டார் மாறுபட்ட இந்தியாவை உருவாக்க, மாசுபட்ட இந்தியாவை சீராக்க. 'Later is better than never' என்பது போல், பல சமுக, சமுதாய, இளைஞர்கள் தயாராகி விட்டனர். 2020 குள்ளாகவே இந்திய கனவு நிறைவேறிவிடும். வாழ்க பாரதம்.

NONO said...

ஏழையாய் ஒரு எழைநாட்டில் இருப்பதைக் காட்டிலும், ஏழ்ழையாய் ஒரு பணக்கரார நாட்டுடில் இருப்பது நன்று என்று செல்வது இதைத்தானா???

150 வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

Muthal valththukal 150 kku!!
Ilaijarkalaka irukkum pothu ulla VEECHSU, Ivrkalee Thalaivarakavoo,nirvakiyakavoo varum poluthu kuraikirato,allathu itha machukkul marinthu vidukirarkaloo theriyavillai, eninum Nam Barathath thai Peedunadai podathodankividal, Ullaka thalaivareellam oruvar pin oruvaraka varathodankividdarkal.Ivarkal enkal Illanjarkali theedi varukirarkal.Inth verri thodaraddum
Ungal agkam ugam aga amaiyaddum
Nanri Johan-paris

ENNAR said...

எதிலும் இருவகையுண்டு
நன்றாக உள்ளது

Amar said...

150 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடிகொண்டு இருக்கும் குமரனுக்கு வாழ்த்துக்கள்!


இரண்டுவித இந்தியா உண்டுதான்.

இது பற்றி எனக்கு நிறைய தோன்றுவதால தனியாக எனது மெய்கீர்த்தியில் ஒரு பதிவு போட்டுவிடுகிறேன் குமரன்...

எனது பார்வையில் இன்று நாம் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாவற்க்கும் தீர்வு மிக சுலபமாக கிடைக்கும் - Dedication இருந்தால்.

நான் எதில் எங்கு தவறை கண்டுபிடித்தாலும் அங்கே யாராவது பொறுப்பு இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அன்னியன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்!

:(

பூங்குழலி said...

வாழ்த்துக்கள் குமரன்.

சமுதாயத்தினைப் பற்றிய உங்களின் பார்வை நன்றாக உள்ளது.
இதுபோல் பற்பல சமுதாய நோக்கு கொண்ட பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

எதிர்கால இந்தியா இளஞர்களின் கையில்.

பொருளாதாரச் சமமின்மை பற்றியும், income inequality & GINI index பற்றியும், எந்த அளவுக்கு வேறுபாடு இருக்கலாம் அல்லது எல்லோரும் ஒரே அளவு சம்பாதித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்றும் தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன்.
முடிந்தால் நீங்களே ஆரம்பித்து வைக்கவும்.
நன்றி

குமரன் (Kumaran) said...

முதல் வாழ்த்துக்கு நன்றி செல்வன். மெதுவா வந்து படிச்சு விரிவான பின்னூட்டம் போடுங்க.

குமரன் (Kumaran) said...

நன்றி இலவசக் கொத்தனார்? என்ன நீங்களும் இராமபிரசாத் (பச்சோந்தி) மாதிரி நட்சத்திர வாரத்துல தான் உங்க உண்மைப் பெயரைச் சொல்லப் போறீங்களா? சீக்கிரம் உங்களை நட்சத்திரமா தேர்ந்தெடுக்க வாழ்த்துக்கள்.

ஆமாம் இலவசம். நீங்க சொன்ன மாதிரி நான் 2020வது போடறப்ப நமது இந்தியக் கனவு நனவாகி இருக்கவேண்டும். அதுவே நம் ஆசை.

குமரன் (Kumaran) said...

வாங்க இந்த வார நட்சத்திரம் இராமபிரசாத். பாராட்டுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிமுலேசன் அண்ணாச்சி. இல்லையா பின்ன? தாழும் இந்தியா இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறப்ப 'இந்தியா ஒளிர்கிறது'ன்னு கோஷம் போட்டா வெறி வராதா? நானும் பாரதீய ஜனதா அந்த கோஷத்தைப் போடறப்ப வாழும் இந்தியாவுல இருக்கிற என்னை மாதிரி ஆளுங்களையே பாத்துப் பாத்து அது உண்மைன்னு நம்புனேன். அப்புறம் தேர்தல்ல பாரதீய ஜனதா மண்ணைக் கவ்வுன பின்னாடி யோசிச்சுப் பார்த்தா அந்த கோஷத்தோட அபத்தம் புரிஞ்சது.

மதுமிதா said...

வாழ்த்துகள் குமரன் 150 ஆவது பதிவுக்கு.
இன்னும் பல பதிவுகள் போடுங்க.

aathirai said...

i agree.
indhiyavil idaiveli miga adhigam.
சோசலிசம் பேசுபவர்கள்கூட இந்த
சுரண்டல் வழிகளைள அடைக்காமல் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள்.

குமரன் (Kumaran) said...

வெளிகண்ட நாதர். நான் பழைய வேகத்துல பதிவுகள் போட்டுக்கிட்டிருந்தா இன்னேரம் 200 பக்கத்துல வந்திருப்பேன். நட்சத்திர வாரத்துல தமிழ்மணமே குடும்பமா, வாழ்க்கையா இருந்ததால இயல்பு வாழ்க்கை பயங்கரமா பாதிச்சது. :-) அப்புறம் நண்பர்கள் சிலரும் 'நீங்க இந்த வேகத்துல பதிவுகள் போட்டா எல்லாத்தையும் எங்களால படிக்க முடியலை'ன்னு சொன்னதால வேகத்தைப் பாதியா கொறைச்சுக்கிட்டேன். :-) இந்த வேகத்துல 200 வர்றது இன்னும் ரொம்ப நாளாகும். :-(

6வது வாரத்துல 50வது பதிவு.
12வது வாரத்துல 100வது பதிவு.
22வது வாரதுல 150வது பதிவு.

:-(

மதுமிதா said...

அப்ப இந்த பதிவு தான் 2020 ன்னு சொன்னீங்களே அதுவா?

இரண்டு வித இந்தியா இல்லைங்க குமரன்.
பலவிதமான இந்தியாவா இருக்கு.

இளைய தலைமுறையினர் விழிப்புணர்ச்சியோட தலையெடுத்தால் நல்லாதான் இருக்கும்.
அவங்களையும் வழிநடத்த நல்ல தலைமை உருவாகணும்.

க்ளோபலைசேஷன் வந்து அடிச்சுட்டு போற போக்கில வாழும் வழி இல்லாது தத்தளிக்கறவங்க எத்தனை பேரு.

கணினியும்,செல்லும் கோலோச்சுது.
கஞ்சிக்கு வழியில்லை.

கொகொகோலா,பெப்சி கிராமத்துக் கடையில தொங்குது.
குடிக்கிற தண்ணீர் பிரச்சினை.

நல்ல வளர்ச்சிப் பாதையில் தேசம் போகும் போது,இதை சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு.

போதும் தனி பதிவா போடறேன்.

குமரன் (Kumaran) said...

வெளிகண்ட நாதர். தப்பாப் படிச்சுட்டேன். நீங்க இருநூறு சதம்ன்னு சொல்லியிருக்கீங்க. நான் இரண்டாவது சதம்ன்னு படிச்சிட்டேன். இருநூறாவது சதம் போடற வரைக்கும் இருந்தாப் பார்க்கலாம்... :-) அட வலைப்பூக்கள்ல எழுதிக்கிட்டு இருந்தாப் பார்க்கலாம்ன்னு சொன்னேன்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சதயம்.

ஆன்மீக மாயையா? :-) ஒன்னும் சொல்லலை. உலகே மாயம்ன்னு சில பேரு சொல்றாங்க. நீங்க ஆன்மிகம் மாயைன்னு சொல்றீங்க. நான் ஒன்னும் சொல்லலை. :-)

ஆன்மிகம் மட்டும் இல்லாம எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் பத்தி எழுதிக்கிட்டே தான் இருக்கேன் சதயம். என் வலைப்பூக்களைப் பாருங்கள்.

இடைவெளி இளைஞர்களால் மட்டுமே துடைத்தெறியப்படக் கூடிய விஷயமா இல்லையா என்று தெரியாது. ஆனால் வாய்ச் சொல்லில் வீரராய் மட்டும் இல்லாமல் 'Do Something' அப்படின்னு ஆரம்பிச்சது இந்த இளைஞர்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சாம்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன். நிச்சயம் 2020க்குள் இந்தியக் கனவு நனவாகிவிடும்.

குமரன் (Kumaran) said...

ஏழ்மை எங்கேயிருந்தாலும் ஏழ்மை தான் ஒலியினிலே. அது ஏழை நாடானாலும் பணக்கார நாடானாலும் சரி. கொடிது கொடிது இளமையில் வறுமைன்னு ஒளவைப் பாட்டி கூட சொல்லியிருக்காங்களே. இளமையில் வறுமை இருந்தா நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி. அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருங்க.

உங்கள் பதிவில் புகைப்படங்களைப் பார்த்தேன். 'உருளைக் கிழங்கு குழம்புடன் சோறு' நல்லா இருந்தது. :-)

Santhosh said...

நல்ல பதிவு குமரன், உங்களுடைய 150 பதிவிற்கு வாழ்த்துக்கள்.


சந்தோஷத்துடன்,
சந்தோஷ்.

குமரன் (Kumaran) said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜோகன். உண்மைதான். கொஞ்சம் வயதானால் (தலைவர்களாகவோ நிர்வாகிகளாகவோ ஆகும்போது) சிறு வயதில் இருக்கும் துடிப்பு இருப்பதில்லை. ஆனால் அற்றலுடன் அறிவும் சேரும் போது தானே வெற்றிக் கனி கிடைக்கும். அதனால் கனவுகள் காண்பதற்கு இளைஞர்களைத் தூண்டிவிட்டுவிட்டால் அந்தக் கனவுகளை நனவாக்குதல் அவர்களுக்கு இயல்பாகும் தக்க வயது வரும்போது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் என்னார் ஐயா. பலவிஷயங்களில் எதிரும் புதிருமான இருவகை உண்டு.

குமரன் (Kumaran) said...

150 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகலியா....ஹும்...கிரிக்கெட் உதாரணம் எப்பவுமே உடனே வந்துடுது... இல்லையா சமுத்ரா? :-) மிக்க நன்றி.

உங்கள் மெய்கீர்த்தியில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதனால் இதன் தொடர்பாக நீங்கள் எழுதப் போவதையும் அங்கு வந்து படிக்கிறேன். அதென்ன மெய்கீர்த்தின்னு வலைப்பூவுக்குப் பெயர்? எப்படியோ போங்க...இப்ப எல்லாம் தற்பெருமை ரொம்ப அதிகமாச்சுது...ஒருத்தர் 'தனக்குவமை இல்லாதவன்'ன்னு பேரு வச்சுருக்காரு. இப்படி எத்தனையோ சொல்லிக்கிட்டுப் போகலாம்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பூங்குழலி. என்னுடைய மற்ற வலைப்பூக்களையும் பாருங்கள். இந்தியக் கனவு 2020 இயக்கத்தைப் பற்றி எழுதுவதற்கே ஒரு தனி வலைப்பூ தொடங்கியிருக்கிறேன். அதில் சமுதாய நோக்கு கொண்ட பதிவுகள் நிறைய வரும்.

தொடரை நீங்களே தொடங்குங்கள் பூங்குழலி. நாங்கள் வந்து படித்துக் கருத்துக்கள் சொல்கிறோம்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுமிதா அக்கா. பல வலைப்பூக்களை வைத்துக் கொண்டு பதிவு போடாமல் எப்படி. இன்னும் நிறைய வலைப்பூக்களைத் தொடங்குவதற்கும் திட்டம் இருக்கிறது. இறையருளாலும் நண்பர்கள் ஊக்கத்தாலும் தொடர்ந்து எழுதுவேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஆதிரை. சோஷலிசம் பேசுபவர்களும் இன்னும் பல தத்துவங்கள் பேசுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு அறியாமையை நீக்குவதற்கு பயன்படும். ஆனால் பேச்சோடு நின்று விட்டால் எதுவும் நடக்காது. செயலும் வேண்டும்.

மலம் அள்ளும் மக்களைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் அவர்களுக்காக நம்மால் என்ன முடிகிறது என்று சிந்தித்து செயலும் செய்ய வேண்டும். மீண்டும் சொல்கிறேன். பேசுதல் முக்கியம். அது அறியாமையை நீக்கும். ஆனால் பேச்சுடன் செயலும் இருக்க வேண்டும். அது மிக மிக முக்கியம்.

குமரன் (Kumaran) said...

இல்லை மதுமிதா அக்கா. இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லவில்லை. இந்தியக் கனவு 2020 என்று ஒரு தனி வலைப்பூ இருக்கிறது. என் வலைப்பூ பட்டியலில் பாருங்கள். அதனைப் பற்றித் தான் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட போது சொன்னேன்.

குமரன் (Kumaran) said...

உங்கள் தனிப்பதிவைப் படிப்பதற்குக் காத்திருக்கிறேன் மதுமிதா அக்கா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தோஷ்.

நீங்க திரையிடும் படங்கள் எல்லாம் எப்படிப் போகின்றன? நானும் தவறாம எல்லாப் படமும் ஓசியில பார்க்கிறேன் (பின்னூட்டம் என்கிறடிக்கெட் வாங்காமல்.) :-)

கால்கரி சிவா said...

குமரன்,

150க்கு வாழ்த்துக்கள். இரண்டு இந்தியாவும் இணைந்தால் இவ்வுலகை நாம் ஆளலாம்.

கால்கரி சிவா

குமரன் (Kumaran) said...

உண்மை சிவா அண்ணா. இரண்டுவித இந்தியா இணைந்தால் இவ்வுலகை ஆளலாம் நாம்.

மோனைச் சுவையும் நன்றாய் வருகிறது. உங்களுக்கு கவிதை எழுத வருமா?

இலவசக்கொத்தனார் said...

குமரரே,

//நன்றி இலவசக் கொத்தனார்? என்ன நீங்களும் இராமபிரசாத் (பச்சோந்தி) மாதிரி நட்சத்திர வாரத்துல தான் உங்க உண்மைப் பெயரைச் சொல்லப் போறீங்களா?//

நிறையா விஷயம் சொல்லியாச்சு. பாருங்க.
http://elavasam.blogspot.com/2006/02/blog-post_23.html
இனி வெறூம் பேருதானே. What is in a name. a rose is a rose is arose. :)

Maraboor J Chandrasekaran said...

சந்தோஷம் குமரன்! நானும் மதுரக்காரன் தான்! வழக்கமா உங்க இடுகைகள் படிப்பேன்; மறுமொழியூட்ட நேரம் கிடைக்காது. ஆனால், இந்த இடுகை காலத்துக்கு ஏற்ற ஒன்று. எனது இடுகையான "மூளை வரட்சி" யிலும் இந்த செய்தியைத்தான் அடிகோடிட்டிருக்கிறேன். என்னால் முயன்ற பல பொதுத் தொண்டில் ஈடுபட்டுவருகிறேன்; வீட்டில் டி.வி.யை ban செய்துவிட்டோம்; சனி, ஞாயிறு என்றால் போது சேவை என்றாகிவிட்டது! மனசுக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது! ஏறத்தாழ 15 ஆண்டுகள் வெளிமாநிலங்களில் வேலை செய்துவிட்டு,ஓரளவு ஆண்டவன் நன்றாய் வைக்கிறான் என்றதும்,நீங்க சொன்னமாதிரி மற்ற பணத்தை இம்மாதிரி வேலைகளுக்கு செலவு செய்வதில் கிடைக்கும் ஆத்ம சந்தோஷமே அலாதி!
நல்ல பதிவு.
"மரபூர்" சந்திரசேகரன்.

rnatesan said...

ரெண்டு வரி அடிக்கவே நேரம் போதவில்லை!!நீங்கள் எப்படி 150 க்கு வந்தீர்கள்!!இரவு தூங்குவதில்லையா?

குமரன் (Kumaran) said...

இலவசக் கொத்தனார். ஊரச் சொன்னாலும் பேரச் சொல்லக் கூடாதுங்கறது உங்கக் கொள்கை போல இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். :-)

குமரன் (Kumaran) said...

வாங்க 'மரபூர்' சந்திரசேகரன். தொடர் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நீங்களூம் மதுரக் காரரா? தருமி ஐயாவுக்குத் தெரியுமா? அவரோட தல புராணப் பதிவுகளையும் என்னோட மதுரை தொடர் பதிவுகளையும் படிக்கிறீங்களா?

உங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்ததில்லை. இனிப் படிக்க முயல்கிறேன்.

நீங்கள் சொல்வது மெத்தச் சரி. மேன்மேலும் பல தொண்டுகள் செய்யுங்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நடேசன் ஐயா. நட்சத்திர வாரத்துக்கு முன்பு தினமும் குறைந்தது ஒரு பதிவு என்ற கணக்கில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதால் இப்போது தினம் ஒரு பதிவு என்று இல்லாமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். அதிகாலையிலும் எழுவதில்லை. நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகிறேன்.
:-)

G.Ragavan said...

குமரன்...முதலில் வாழ்த்துகளைப் பிடியுங்கள். நூற்றைம்பது ஆகிவிட்டதே...வலைப்பூச் சூறாவளியென்று பட்டம் கொடுக்கிறேன். அதையும் பிடித்துக் கொள்ளுங்கள். :-) இனிமேல் இந்த அடைமொழியோடுதான் உங்களை அழைக்க வேண்டும்.

இந்தப் பதிவில் உங்களது நல்ல எண்ணம் உள்ளது. இது நிச்சயமாக நல்ல விளைவுகளைத் தரும். ஆனால் என்னால் இதில் பங்கெடுக்க முடியாது....ஏனென்றால் என்னுடைய மனதில் ஒரு பெரிய கனவு உள்ளது. மிகப்பெரிய கனவுதான். அகலக்கால்தான். அதை எப்பொழுது எப்படித் தொடங்க வேண்டுமென்றே இன்னும் தெளிவு கிடைக்காத அளவிற்குப் பெரிய கனவு. அதைப் பற்றிச் சொல்ல இது நேரமும் அல்ல. பிறகு சொல்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் நிச்சயமாக வேண்டும். கண்டிப்பாக வேண்டும். அப்பொழுது கையேந்தி வருவேன்.

மணியன் said...

முதலில் 150வது பதிவிற்கு பாராட்டுக்கள்.
உங்களைப் போன்ற இளைஞர்கள்் கையில் இந்தியா நிச்சயம் ஒளிரும்.
கென்னடி சொன்னதுபோல (நம்நாடு படத்தில் தலைவர் கூறியது)"நாடென்ன செய்தது உனக்கென்ற கேள்விகள் எதற்கு, நீ என்ன செய்தாய் அதற்கு" என்கிறீர்கள். செய்தும் காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராகவன். வலைப்பூச் சூறாவளி என்ற புதிய பட்டமா? மிக்க மகிழ்ச்சி. தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். சுஜாதாவுக்கு ஒரு தேசிகன் கிடைத்த மாதிரி எனக்கும் யாராவது கிடைக்காமலா போய்விடுவார்கள்? அவர்கள் அடியேனுக்குக் கிடைக்கும் பட்டங்களையும் என் பதிவுகளையும் பட்டியல் எடுத்து வைக்க மாட்டார்களா என்ன? :-) Just Kidding.

உங்களின் மிகப் பெரிய கனவு என்னவென்று ஒரு முறை லேசாகச் சொல்லியிருக்கிறீர்கள். சீக்கிரம் தொடங்குங்கள். எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். நன்றே செய்மின் அதை இன்றே செய்மின். எங்களின் உதவி நிச்சயமாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி மணியன் சார். நீங்கள் சொன்னதைத் தான் தலைப்பாய் வைத்து இந்தியக் கனவு 2020 பற்றி என் நட்சத்திர வாரத்தில் எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது தேவையில்லாத சர்ச்சையை உண்டு பண்ணலாம் என்பதால் 'நாடென்ன செய்தது உனக்கு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை பதிக்கவில்லை.

இலவசக்கொத்தனார் said...

நீங்க 150 பதிவு போட்டு இருக்கீங்க. நான், என்னால முடிஞ்சது 50-வது பின்னூட்டத்தையாவது போடறேனே. :)

Unknown said...

நல்ல பதிவு குமரன்,

சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒரு அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்பதை வைத்துத்தான் அது எப்படிப்பட்ட நாடு என்பதை சொல்ல முடியும்.அமெரிக்காவில் அரசு அடித்தட்டு மக்களையும் அன்போடு அரவணைக்கிறது.1000$ மாத வருமானம் இருந்தால் கூட இங்கு ஒருவர் வாழ முடியும்.

Consumption based economyயாக இருப்பதன் அனுகூலம் இது.அமெரிக்க சந்தைப்பொருளாதாரத்தின் வெற்றியாகத் தான் இதை கருத வேண்டும்.

பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவில் மேலும் வலுப்பெற்றால் இந்தியாவும் வளமை மிகுந்த நாடாகும்.மன்மோகன்,சிதம்பரம் ஆகியோர் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கின்றனர்.பழமை ஒழித்து புதுமை படைத்து இந்தியா வல்லரசாய் நிமிரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Unknown said...

There once was an old man who was walking along a seashore filled with starfish which had been washed ashore. Thousands and thousands of them lined the shore, struggling to make it back to the water. A small boy was throwing the starfish one by one back into the water.

In amazement the old man approached the boy and said to him: "My dear boy, there are thousands and thousands of starfish on this seashore! Do you think that you could possibly make a difference? It seems rather hopeless and most of them will surely die!"

The boy looked up as he threw another one back into the sea and said to the man, "I made a difference to this one."

I just remembered this story!

Well written.

குமரன் (Kumaran) said...

50வது பின்னூட்டத்தைப் போட்டதற்கு நன்றி இலவசக் கொத்தனார். 150வது பதிவு போட்டிருக்கோம்; இதுக்கு 50 பின்னூட்டங்களாவது வருமா என்று பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது திருப்தியாய் இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

அமெரிக்காவில் தானே வசிக்கிறீர்கள் செல்வன். அப்படி இருக்க அமெரிக்க அரசு அடித்தட்டு மக்களை அன்போடு அரவணைத்துச் செல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? :-) இன்னும் நன்றாய் உங்களைச் சுற்றிப் பாருங்கள் செல்வன். வீடில்லாதவர்களும் நோய் நொடியால் அவதிப்படும் ஏழைகளும் இந்த சொர்க்க பூமியில் படும் அவதிகள் தெளிவாய்த் தெரியும். அவை நம் நாட்டு அடித்தட்டு மக்கள் படும் துயரங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. நம் நாட்டில் இருக்கும் எல்லாத் துயரங்களும் துன்பங்களும் இங்கும் இருக்கின்றன.

Consumption based economy பற்றி எனக்கு ஒரு தெளிவான கருத்து கிடையாது. எந்த விஷயத்திலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. அது போல் இதிலும் தீமைகள் இருப்பதாய் எண்ணுகிறேன். உலகத்தில் உற்பத்தியாகும் பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தான் பயன்கொள்ளப் படுகிறது. அது மற்ற நாட்டு மக்களைப் படுத்தும் பாடு உங்களுக்குத் தெரியாதா? குறை சொல்லத் தொடங்கினால் எதனைப் பற்றியும் சொல்லலாம் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :-)

இரண்டு இந்தியாவை இணைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தம் உதவலாம். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடக்கும் சீர்திருத்தங்கள் தாழும் இந்தியாவுக்கு அதிக உதவி செய்ததாகத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

துபாய் வாசி. இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் இளைஞர்கள் இந்தக் கதையை ஒருவருக்கொருவர் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இது அருமையான கதை. நம் சமூகக் கடமையை (தொண்டை என்று சொல்லவில்லை) நாம் நன்கு உணர்ந்து தேவையான ஊக்கத்தைப் பெற இந்தக் கதையை விட அருமையான ஒன்றை இதுவரை நான் பார்த்ததும் கேட்டதும் இல்லை. இந்தக் கதையை இங்கு சொன்னதற்கு மிக்க நன்றி.

Unknown said...

அன்பு குமரன்,

அமெரிக்காவில் food security இருப்பது 89% பேருக்கு.மற்ற 11% பேர் கூட எப்போதாவது தான் புட் இன்செக்யூரிடியில் தவிக்கிறார்கள் தவிர எப்போதும் அல்ல.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போர் என சொல்லப்படுவோரின் சராசரி குடும்ப வருமானம் $17,020.

அமெரிக்கா அதிக பொருட்களை பயன்படுத்துவது உண்மைதான்.காசு கொடுத்து தானே வாங்குகிறார்கள்?:-))

அமெரிக்கர்கள் திருப்பூர் டீஷர்ட்டை வாங்குவதை நிறுத்தினால் திருப்பூருக்கு நன்மையா கெடுதலா??

அமெரிக்கா பொருட்களை பயன்படுத்துவதால் தான் உலக பொருளாதாரம் செழிக்கிறது.உலக பொருளாதாரத்தின் முதல்வன் அமெரிக்கா தான்.

Anonymous said...

150-vathu pathivu vazhthukkal Kumaran.

Kumaresh

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் படிக்கும் படிப்பு புள்ளிவிவரத்துடன் விஷயங்களைப் பற்றிச் சொல்ல உதவுகிறது என்று எண்ணுகிறேன். :-) நான் சொன்ன மாதிரி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் நல்லதும் உண்டு; தீமையும் உண்டு. பணம் கொடுக்கிறார்கள் என்பதால் உலக் ரிசோர்ஸ் எல்லாம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டால் மற்ற நாடுகளில் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் திருப்பூரைப் பற்றியும் நினைக்கத் தான் வேண்டியுள்ளது.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குமரேஷ்.

Unknown said...

உங்க 150வது பதிவுக்கு 60வது பின்னூட்டம் என்னுது தானுங்கோ ....
சொன்ன மாதிரி வந்து வாழ்த்து மடலை பிரிச்சு ஒட்டிக் கலக்கிட்டோம் இல்ல...
என்ன கொஞ்சம் லேட்டாயிடுச்சு.....

150 பதிஞ்சுப் பட்டயக் கிளப்பும் பதிவுலக கலைமாமணி அண்ணன் குமரன் அவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Amar said...

//Consumption based economy பற்றி எனக்கு ஒரு தெளிவான கருத்து கிடையாது. எந்த விஷயத்திலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. //

குமரன் சார்,

எதில் நன்மை அதிகமாக இருக்கிறதோ அதை எடுத்துகொள்ள வேண்டியது தான். :)

இல்லாவிட்டால் நாம் வேறு ஒரு proven alternative to consumption based market economic modelஐ தேர்ந்து எடுக்க வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால் எந்த alternativeவும் இதுவரை இந்த அளவுக்கு வெற்றி அடையவில்லை என்பது தான். :))

Unknown said...

பணம் கொடுக்கிறார்கள் என்பதால் உலக் ரிசோர்ஸ் எல்லாம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டால் மற்ற நாடுகளில் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் திருப்பூரைப் பற்றியும் நினைக்கத் தான் வேண்டியுள்ளது. //

அன்பு குமரன்,

உலக பொருளெல்லாம் அமெரிக்காவுக்கு வரவேண்டுமென்றால்,அமெரிக்க பணம் முழுக்க முழுவதும் உலகத்துக்கு போக வேண்டும்.
அந்த பணத்தை வைத்து அவர்கள் வேண்டியதை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

உதாரணத்துக்கு அமெரிகாவுக்கு டீஷர்ட் விற்பதால் கிடைக்கும் டாலரை இந்தியா குவைத்தில் பெட்ரோல் வாங்க பயன்படுத்திக் கொள்கிறது.டீஷர்ட்டை விற்று பெட்ரோல் வாங்குவது போல் தான் இது.

விற்பவனுக்கு பணம் கிடைக்கிறது.வாங்குபவனுக்கு பொருள் கிடைக்கிறது.இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இப்படி இருந்தால் தான் உலக பொருளாதாரம் ஓடும்.

Anonymous said...

Sir.

I am a new face namely semparithi 32 years od frm Coimbatore.

Your "இரண்டுவித இந்தியா..." is simply truth.

This is my first welcome- comment.

best regards,

K(uppusamy).semparithi

குமரன் (Kumaran) said...

60வது பின்னூட்டம் போட்டு கலக்கியதற்கு மிக்க நன்றி தேவ். 150 பதிவுகள் தான் நான் போட்டிருக்கிறேன். ஞானவெட்டியான் ஐயா 275க்கும் மேல போட்டுட்டார். பார்த்தீங்களா? அதனால பதிவுலக கலைமாமணி பட்டம் அவருக்கே உரியது. :-)

வாழ்த்துகளுக்கு நன்றி தேவ்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் சமுத்ரா. எந்த மாறுபட்ட தத்துவமும் consumption based market economic model அளவு வெற்றி பெறவில்லை தான்.

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் சொல்லவந்தது வேறு. இருக்கும் ரிசோர்ஸை உலக மக்கள் எல்லோரும் அனுபவிக்க வேண்டி இருக்க, பணம் அதிகம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அளவுக்கு அதிகமாகப் பெற்று விரயம் செய்கிறார்கள் அமெரிக்க மக்கள்; அதனால் மற்றவர்களிடம் இவர்கள் கொடுக்கும் பணம் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு பொருள் கிடைப்பதில்லை.

நம் நாட்டில் அரிசியை விளைவித்து அதிக பணம் தருகிறார்கள் என்று நம் மக்களைப் பட்டினி போட்டுவிட்டு அந்த அரிசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? முதலாளித்துவம் அதனை நியாயப் படுத்தும் அல்லவா? பொருளுக்கு எங்கே எனக்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு நான் கொண்டு போகிறேன். மற்றவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற விளக்கம் எத்தனை முறை நேராகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறோம்?

இன்னொரு உதாரணம். நீங்களும் அமெரிக்காவில் இப்போது இருப்பதால் இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் பேப்பரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. எத்தனை முறை தேவையில்லாமல் டாக்குமெண்டுகளை பிரதியெடுத்தும் ஹார்ட் காஃபி எடுத்தும் பின்னர் எவ்வளவு அலட்சியமாக அதனைத் தூக்கியெறிகிறார்கள்? ரீசைக்கிள் செய்கிறார்கள் தான். ஆனால் முதலிலேயே தேவையான அளவுக்கு பயன்படுத்தினால் ரீசைக்கிளின் அளவு குறையுமே. அப்படி பேப்பரை விரயம் செய்து விட்டு பின்னர் தென்னமெரிக்காவில் மரங்களை அறுக்கிறார்கள் என்று புகார் சொல்லுவார்கள். அதற்கும் இதற்கும் உள்ள தொடர்பை புரிந்தும் புரியாதவர்களைப் போல.

குமரன் (Kumaran) said...

வாங்க செம்பரிதி. உங்கள் வரவு நல்வரவாகுக. கோவையில் இருந்து நாமக்கல் சிபி என்று ஒரு வலைப்பதிவர் நண்பர் இருக்கிறாரே. தெரியுமா? உங்களின் முதல் (கன்னிப்) பின்னூட்டத்தை எனக்கு அளித்து என்னை மிகவும் கௌரவித்துவிட்டீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து என் மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

கைப்புள்ள said...

மிகவும் நல்ல கட்டுரை குமரன். நல்ல ஆய்வு செய்திருக்கிறீர்கள். ஆனால் நம்மால் ஆகாது என்ற Cynical feelingஇனால் கட்டுண்டு கிடப்பதால் தான் நம்முடைய பல சறுக்கல்களுக்கு மூலக்காரணம். தமிழன் என்றொரு குலம் உண்டு தனியே அவர்க்கு ஓர் குணமுண்டுன்னு நாமக்கல் கவிஞர் பாடுனதப் போல இந்தியர் என்றவருக்குள்ள தனித்துவமான குணம் என்னன்னு IIM-A பேராசிரியர்கள் ஆய்வு செய்து "Crossroads of Culture" என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள். நம்முடைய வரலாறு, வர்ணாசிரம முறை, ஆங்கிலேயர் ஆட்சி, Industrial revolution இன் தாக்கம் முதலிய அனைத்தையும் ஆய்வு செய்து இந்தியன் என்பவனுடைய 'social fabric' எதனால் நெய்யப் பட்டிருக்கிறது என்றும், இந்தியனுடைய ethos(நம்பிக்கைகள்) குறித்தும் அழகாக அலசியிருக்கிறது இந்நூல்.

இப்புத்தகம் குறித்து கூகிளில் கிடைத்த சுட்டி.
www.sagepub.com/book.aspx?pid=7516

குமரன் (Kumaran) said...

நன்றி கைப்புள்ள. நீங்கள் சொன்ன புத்தகத்தைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் படிக்கிறேன்.

Unknown said...

இப்போதுதான் நீங்கள் தந்த இந்த பதிலை பார்க்கிறேன்.

குமரன் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் பொருளாதார கோட்பாடுகளுக்கு எதிரானது.சோவியத் யூனியன் அழிந்தது இதுபோன்ற பொருளாதார கொள்கைகளால் தான்.நீங்கள் சொன்ன அரிசி கதையையே எடுத்துக்கொள்வோம்.அரிசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தால் அரிசி விலை குறையும்,வாஸ்தவம் தான்.ஆனால் அரிசி பயிரிடும் விவசாயி நஷ்டம் அல்லவா அடைவான்?அவனுக்கு வரும் லாபம் பறிபோகிறது அல்லவா?

இது தொடர்ந்து நடந்தால் கடைசியில் அவன் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு போய் விடுவான்.பிறகு அரிசியை நாம் அமெரிக்காவில் இருந்து தான் வாங்க வேண்டும்.

பேப்பரை இவர்கள் அலட்சியப்படுத்துவது உண்மைதான்.ஆனால் மரத்துக்கு தேவை அதிகமாக அதிகமாக அதிக அளவில் மரங்களும் நடப்படும்.பொருளாதாரம் சொல்லும் Law of Demand and supply அதை கவனித்துக்கொள்ளும்.குறுகிய கால அளவில் Demand, supplyயை தாண்டினாலும்(Demand >supply) நீண்ட கால அளவில் (Demand=supply) என ஆகிவிடும் என பொருளாதாரம் சொல்கிறது.

குமரன் (Kumaran) said...

செல்வன். எனக்குப் பொருளாதாரம் புரியாததால் நான் சொல்வது சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வலியுறுத்த நினைப்பது ரிசோர்ஸசை விரயம் செய்யக் கூடாது என்பது தான். அண்மையில் எங்கள் நகராட்சியிலிருந்து ஒரு சர்க்குலர் வந்தது. அதில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்; ஏன் சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லியிருந்தது. பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அமெரிக்காவில் நீரின் அளவு எப்படி என்பதையும் நீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் எங்கள் நகராட்சி நீரைச் சேமிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது வருமுன் காப்போம் என்பதனைச் சொல்கிறது என்று புரிந்தது. அதனைப் போல் மற்ற விஷயங்களிலும் விரயம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இவர்களுக்கு அதிகம் வேண்டும்.

குமரன் (Kumaran) said...

Selvan,

நீங்கள் சொன்ன அரிசியின் விலையைப் பற்றி இன்னொரு விதமாகவும் சொல்லலாம். Inflation பற்றி உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். உள் நாட்டிற்குத் தேவையான அரிசியை அதிக விலை கிடைக்கிறது என்பதால் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் மற்ற பொருள்களின் விலையும் ஏறுகிறதல்லவா? அரிசியின் விலை குறையும் போது மற்ற பொருள்களின் விலையும் குறைந்து ஒரு சீராக இருந்தால் அதனால் விவசாயிக்கு நஷ்டமில்லை - ஏனெனில் Inflation theoryபடி எல்லாம் தம்மை சீர் செய்து கொள்கிறது. Inflation அதிகமாய் இருந்தால் அல்லது விலைகள் ஒரு பொருளுக்கும் மற்ற பொருளுக்கு ஏற்றத் தாழ்வாய் இருந்தால் அது அடிமட்ட மனிதனை அதிகம் பாதிக்கிறதல்லவா? நம் நாட்டில் வாழும் இந்தியாவிற்கும் தாழும் இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி இதனால் அதிகம் ஆகிறது அல்லவா? Globalisation நம் நாட்டையும் மற்ற நாட்டின் பொருளாதாரத்தையும் இணைத்து வைத்திருப்பதாலும் அமெரிக்க பொருளாதாரம் தற்பொழுது உலக பொருளாதாரத்தை நடத்திச் செல்வதாலும் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் அமெரிக்கா பற்றிப் பேச நேர்ந்தது.

Unknown said...

உபயோகிப்பாளர் கோணத்தில் நீங்கள் சொல்வது சரி குமரன்.ஆனால் விற்பனையாளர் கோணத்தில் பார்த்தால் உபயோகிப்பாளர் சிக்கனமாக இருக்க கூடாது அல்லவா?இந்த விவாதம் துவங்கியதே அமெரிக்கா அதிகமாக பொருள் வாங்கினால் உலகத்துக்கு நல்லதா கெட்டதா என்பதைப்பற்றி தானே?