Tuesday, June 04, 2013

திருப்பாவை அறிமுகம் - 6 (கோதையின் கதை)

'ரங்கா. என்ன சற்று நேரமாய் ஏதோ என்னிடம் கேட்க விழைவதாய்த் தெரிகிறது. ஆனால் தயங்குகிறாய். என்ன விஷயம்?'

'ஒன்னுமில்லேங்க ஐயா. கொஞ்ச நாளா ஐயா கொஞ்சம் யோசனையாவே இருக்கீங்களே. என்னன்னு கேக்கலாம்னுதான்'.

'அதுவா ரங்கா. கோதைக்குத் திருமணவயது வந்துவிட்டதல்லவா. உறவினரும் ஊர்மக்களும் அவள் திருமணம் பற்றிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். எனக்குக் கோதையைப் பிரிய மனம் இல்லையென்றாலும், பெண் என்று பிறந்துவிட்டால் என்றோ ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு தானே ஆகவேண்டும்.'

'கோதையம்மாவுக்கு கல்யாணங்களா? அது நல்ல விஷயம் ஆச்சுங்களே. அதுக்கு ஏனய்யா வருத்தப்படுறீங்க?'

'திருமணம் செய்விப்பதில் வருத்தம் இல்லை ரங்கா. நானே கோதையிடம் சென்று, அம்மா. உனக்கு திருமணம் செய்யும் பருவம் வந்துவிட்டது. உனக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று கேட்டேன்'.

'குழந்த என்ன சொல்லிச்சுங்கய்யா?'

'அவள் மாதவனாம் நாரணனையே திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள்'.

ரங்கன் மனதில் 'சரிதான். நாம குழந்தய அன்னைக்கு தொளசி செடிக்கு கீழப் பாத்தப்பவே நெனைச்சோமே இந்த அழகு கண்ணன் சாமிக்கேத்த அழகுன்னு'.

'அப்படிங்களா ஐயா. நம்ம கோதையம்மா அழகுக்கு அந்த கண்ணன் சாமிதான் பொருத்தமய்யா.'

'என்ன ரங்கா. நீயும் இப்படி சொல்கிறாய். இந்தப் ப்ரபஞ்சத்துக்கெல்லாம் முதல்வனும் தலைவனும் ஆன அந்த மாயவன் எங்கே? இந்த ஏழையின் மகள் எங்கே? அது நடக்கும் விஷயமா? கோதை மாதவனை மணப்பது என்பது நடக்காத விஷயம் என்று கோதையிடமும் சொன்னேன்'.

'குழந்த என்ன சொல்லுச்சுங்கய்யா?'

'அவள் தன் மறுமொழியை ஒரு பாடலாகவே பாடிவிட்டாள்.
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

சங்கும் சக்கரமும் ஏந்தும் தடக்கையனுக்காகவே தான் உயிர் வாழ்வதாகவும் தன்னை ஏதாவது மானிடனுக்குத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தால் தான் உயிரோடு இருக்கப்போவதில்லை என்றும் சொல்கிறாள். இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாளே என்று தான் எனக்குக் கவலை.'

'ஐயா. நீங்க கவலப்படுறதுல அர்த்தம் இருக்குங்கய்யா. இன்னொரு தடவ கோதையம்மாகிட்ட பேசிப்பாருங்கய்யா. திரும்பத்திரும்பச் சொன்னா ஒரு வேளை குழந்த ஒத்துக்க வாய்ப்பு இருக்கு'.

'ஆமாம் ரங்கா. அந்த அரங்கனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இன்னொரு முறை கோதையிடம் பேசிப்பார்க்கவேண்டும்'.



(2005ல் எழுதியதன் மறுபதிவு)

6 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

4 comments: G.Ragavan said...
அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல.

இன்றைக்கும் வீட்டில் இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் அடம் பிடிக்கும் பொழுது ஒவ்வொரு தகப்பனும் இப்படித்தான் நினைப்பானோ!

December 07, 2005 5:43 AM
இராமநாதன் said...
//அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல.//

இதை வழிமொழிகிறேன்.

குமரன், மிக அருமை.

December 07, 2005 5:55 AM
G.Ragavan said...
// இதை வழிமொழிகிறேன். //

அதுசரி இராமநாதன். கொஞ்ச நாளா வழிய மட்டும் மொழிஞ்சிக்கிட்டு இருக்கீங்களே. வேலைப் பளுவா?

December 07, 2005 6:25 AM
குமரன் (Kumaran) said...
இராகவன்/இராமநாதன்

இந்தப் பாடல் மட்டும் அல்ல. ஆண்டாளின் பாடல்கள் ஒவ்வொன்றும் இப்படித்தான் இனிமையாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததா?

இராகவன்,

தகுதிக்கு மீறியவரையோ தகுதிக்குக் குறைவானவரையோ தன் பெண் விரும்பினால் ஒவ்வொரு தகப்பனுக்கும் இந்தக் கலக்கம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

December 07, 2005 12:21 PM

SudarsanV said...

Very nice!!!

SudarsanV said...

Very nice one!!!

குமரன் (Kumaran) said...

Thanks dhaa. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல//

நானும் இதை வழிமொழிகிறேன்

//கொஞ்ச நாளா வழிய மட்டும் மொழிஞ்சிக்கிட்டு இருக்கீங்களே. வேலைப் பளுவா?//

இதையும் வழி மொழிகிறேன் - பளு தாங்கும் சக்தி இல்லாததால்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்//

உன்னித்து என்றால் என்ன குமரன்?

ஊன் = உடல் தானே?
முலை-ன்னாலே உடலில் தானே இருக்கும்; அப்பறம் எதுக்கு உடலிலே முலைகள் -ன்னு குறிப்பிட்டுச் சொல்லுறா இவ?

//மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே//

எதுக்கு மன்மதனைப் பார்த்து இதைச் சொல்லுறா குமரன்?
மன்மதனா, இவளை மானிடரிடம் கண்ணாலம் கட்டி வைக்கப் போறான்? ஆழ்வார் தானே கட்டி வைக்க எண்ணுவார்?