Saturday, June 01, 2013

திருப்பாவை அறிமுகம் - 4 (கோதையின் கதை)

'ஏனடி கோமளவல்லி. அங்கே போவது கோதை தானே.'

'ஆமாம் கமலவல்லி. அது கோதை தான். எவ்வளவு அழகு அவள்'

'உண்மைதான் கோமளவல்லி. இதுவரை இப்படிப்பட்ட அழகை நம் வில்லிபுத்தூரில் பார்த்ததில்லை'

'கோமளவல்லி. வில்லிபுத்தூரில் என்ன. நான் பாண்டிய தேசம் முழுவதிலுமே இப்படிப்பட்ட அழகைக் கண்டதில்லை. இந்த அழகு நிச்சயம் ஒரு மானிடப்பெண்ணுக்கான அழகு கிடையாது. இவள் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையோ?'

'ரங்கநாயகி. நீ ஒரு வார்த்தை சொன்னாலும் அதற்கு மறுவார்த்தை கொடுக்க முடியாததைப் போல் சொல்கிறாய். மிக்க நன்று'

'கமலவல்லி. கோதை அழகில் மட்டுமா சிறந்து இருக்கிறாள். அவள் நற்குணங்கள் நம் குழந்தைகள் யாருக்கும் கிடையாது. அன்று நான் கஷ்டப்பட்டு கிணற்றங்கரையிலிருந்து ஒரு பெரிய குடத்தில் நீர் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அன்று பார்த்து என் மணவாளர் எங்கோ வேலையாகச் சென்றுவிட்டார். நான் கஷ்டப்பட்டு அந்த நீர்குடத்தைக் கொண்டுவருவதைப் பார்த்து கோதை "அத்தை. நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள். நான் அந்த நீர்க்குடத்தைக் கொண்டுவருகிறேன். தாருங்கள்" என்று என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி வீடு வரை கொண்டுவந்து கொடுத்துச் சென்றாள். இதில் என்னை மிகவும் நெகிழச்செய்தது என்னவென்றால் என் சொந்த மகள் அப்போது திண்ணையில் தான் விளையாடிக்கொண்டிருந்தாள். உனக்குத்தான் தெரியுமே அவளும் கோதை வயதினள் தான் என்று. தாய் கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணமே இல்லாமல் அவள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் கோதையோ என் கஷ்டத்தைக் கண்டு சகிக்கமுடியாமல் எனக்கு உதவி செய்கிறாள்'

'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள். தாய்மார்கள் எளிதாக தன் பிள்ளைகளைத் தாழ்த்தி மற்றவர் பிள்ளைகளை உயர்த்த மாட்டார்கள். நாம் எல்லாரும் மாறி மாறி கோதையைப் புகழ்வதிலேயே தெரிகிறது அவள் குணங்கள் எவ்வளவு சிறந்ததென்று. முக்கிய காரணம் வளர்ப்பு அப்படி'.

'ஆமாம் ரங்கநாயகி. நீ சொன்னது மெத்தவும் சரி. பெரியாழ்வார் அவளுக்கு நல்ல குணங்களை மட்டும் அல்ல; இறைபக்தியையும், கவியியற்றும் திறமையையும், நல்ல தமிழறிவும் ஊட்டியிருக்கிறார். அன்று என் மகள் விளையாடச் சென்றவள் வெகு நேரம் வரை திரும்பவில்லை. அவளைத் தேடி நான் சென்றபோது கோதை என் மகளை ஒத்த வயதுடைய பெண்குழந்தைகளைச் சேர்த்துக்கொண்டு கண்ணனின் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணனின் கதைகள் இயற்கையிலேயே அமுதம் போன்றவை. அவற்றை கோதை சொல்லிக்கொண்டிருந்தது இன்னும் இனிமையாக இருந்தது. நானும் உட்கார்ந்து இரு கதைகள் கேட்டேன். நேரம் போவதே தெரியவில்லை. வளர்ந்த நாமே இப்படி அவள் சொல்லும் கதைகளை மயங்கி நின்று கேட்டால் நம் குழந்தைகளைச் சொல்லவேண்டுமா. அசையாமல் கோதை சொல்லும் மாயவன் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். '

'நானும் கோதை கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கதையும் இனிமை; அதை கோதை சொல்லும் முறையும் இனிமை; அது மட்டுமா - அவள் குரலும் இனிமை. அன்று கதைக்கு நடுவில் பெரியாழ்வார் பாடிய சில பாடல்களைப் பாடினாள். என்ன இனிமை தெரியுமா? அது தமிழின் இனிமையா? இல்லை பாடல்களின் இனிமையா? இல்லை கோதையின் குரலினிமையா? என்று திகைத்துப் போய்விட்டேன். எங்கே அம்மா இந்த கதைகளை அறிந்தாய் என்றால் தன் தந்தையார் சொன்ன கதைகள் என்றாள்.'

'என்ன பெண்களே. மூவரும் கூடி அமர்ந்து யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.'

'வா சீதாலக்ஷ்மி. வேறு யாரைப்பற்றிப் பேசப் போகிறோம். எல்லாம் உங்கள் அண்ணன் மகள் கோதையைப் பற்றித்தான்.'

'என் அண்ணன் மகளா. ஆமாம். அப்படியும் சொல்லலாம். விஷ்ணுசித்தர் என் கூடப்பிறந்த அண்ணன் இல்லாவிடினும் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறைதான். கோதையைப் பற்றி என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்'

'எல்லாம் அவள் நல்ல குணங்களைப் பற்றியும், அவளின் அழகும், குரலினிமையும், கண்ணன் கதை சொல்லும் திறனும் தமிழறிவும் எவ்வளவு நன்றாய் இருக்கிறது என்றும் பேசிக்கொண்டிருந்தோம்'.

'எல்லாம் இருந்து என்ன செய்ய? அவள் திருமண வயது அடைந்து நெடுநாள் ஆகிறது. இந்த விஷ்ணுசித்தரோ மகளைப் பிரிய வேண்டுமே என்று அவளின் திருமணத்தைப் பற்றியே சிந்தனை செய்யாமல் இருக்கிறாள். அப்படி எவ்வளவு நாள் தான் இருக்க முடியும். சீக்கிரம் பெண் குழந்தைக்குத் திருமணம் செய்தால் தானே அவளுக்கும் நல்லது; அவளைப் பெற்றவர்க்கும் நல்லது; நமக்கும் நல்லது. சொன்னால் அவர் காதில் கூட வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்'.

'நீ சொல்வது மிக்க சரி சீதாலக்ஷ்மி. என் கணவர் பெரியாழ்வாரின் தோழர். அவரைச் சென்று பெரியாழ்வாரிடம் பேசச் சொல்கிறேன். நம் வீட்டுக்குழந்தை கோதை. அவளுக்கு ஒரு நல்லது கெட்டது நாம் தானே பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டும். '

'மகிழ்ச்சி கமலவல்லி. உன் கணவரும் சொல்லட்டும். நானும் வற்புறுத்துகிறேன். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். சீக்கிரம் கோதையின் திருமணத்திற்கு அவர் ஆவன செய்வார். நீங்கள் உங்கள் உரையாடலைத் தொடருங்கள். எனக்கு வேலை இருக்கிறது. நான் வருகிறேன்'.

'பார்த்தாயா கோமளவல்லி சீதாலக்ஷ்மி பேசிவிட்டுச் செல்வதை. என்னமோ நமக்கெல்லாம் வேலையே இல்லாத மாதிரியும் அவளுக்கு மட்டும் வேலை இருப்பதைப் போலவும் அல்லவா பேசிவிட்டுச் செல்கிறாள்'.

'நீ வருத்தப்படாதே கமலவல்லி. அவள் தான் எப்போதுமே அப்படிப் பேசுபவள் தானே. நமக்கும் நேரம் ஆகிவிட்டது. நாளை நம் உரையாடலைத் தொடரலாம். இப்போது அவரவர் வீட்டிற்குச் செல்வோம்'.

'ததாஸ்து'.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

4 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

21 comments: G.Ragavan said...
சொல்ல வந்ததைச் சொல்லப் பட வேண்டியவர் இல்லாமலே சொல்வது ஒரு வகை. இந்தப் பதிவும் அவ்வகை. நல்ல நடை. முக்கியமாக காக்கைக்கும் தன் குஞ்சு பாகத்தை மிகவும் ரசித்தேன்.

ரங்கநாயகி என்ற பெயரைத் தவிர மற்ற இரண்டு பெயர்களும் காலத்தோடு பொருந்தவில்லையே.

December 01, 2005 6:06 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
dear kumaran,
katha nayakiyay arimuga pduthuvatharku munbu ooru periya image erpaduthuvathu ooru uthi.padipavargal manathil ooru peria ethirparpayum yerpaduthum.nandraka kayandu irukkereerkal. peyargalum pazhaya peyar than. koncham Srirangam vaday avalvuthan Anban. Matrapadi kathi peramatham Anban TRC

December 01, 2005 9:44 AM
Anonymous said...
Can you please explain the name 'kotai'?
K.V.Pathy.

December 01, 2005 11:11 AM
Anonymous said...
I got it in your earlier posting.
Sorry for the trouble.
K.V.Pathy.

December 01, 2005 11:14 AM
குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்கள் ரசிக்கும்படி இந்தப்பதிவும் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

//சொல்ல வந்ததைச் சொல்லப் பட வேண்டியவர் இல்லாமலே சொல்வது ஒரு வகை. இந்தப் பதிவும் அவ்வகை.//

இப்போதெல்லாம் கொஞ்சம் அறிவுஜீவித்தனமாய் பின்னோட்டம் இட ஆரம்பித்துவிட்டீர்களே...ஏன்?

:-) Just kidding...

December 01, 2005 12:43 PM
குமரன் (Kumaran) said...
TRC சார். நீங்க சொல்ற மாதிரி கதாநாயகியைப் பற்றி ஒரு இமேஜ் ஏற்படுத்த முயலவில்லை. கதையை எப்படி நகர்த்திக்கொண்டு போவது என்று சிந்தித்தப் போது வெவ்வேறு முறைகளில் எழுதிப்பார்க்கலாமே என்று தோன்றியது. அது தான் முதலில் வைகுண்டத்தில் நடந்த உரையாடல். பின்பு ஆடியோ வீடியோவுடன் :-) வந்த கோதையின் அவதாரப் பதிவு, பின்னர் இன்று நான்கு பெண்களின் உரையாடல். நாளை வேறு முறையில் கதையைச் சொல்லலாம் என்று இருக்கிறேன். இறுதியில் எந்த முறை நன்றாய் இருந்தது என்று சொல்லுங்கள்.

எல்லாம் ஒரு Experiment thaan.

ஆஹா. நான் இப்படி சொன்னால் சிவா உடனே 'என்ன குமரன். நாங்க எல்லாம் என்ன சோதனைச் சாலை எலிகளா? நீங்க எங்களை வச்சு சோதனை பண்ண'ன்னு கோவிச்சுக்கபோறார். :-)

December 01, 2005 12:49 PM
குமரன் (Kumaran) said...
//ரங்கநாயகி என்ற பெயரைத் தவிர மற்ற இரண்டு பெயர்களும் காலத்தோடு பொருந்தவில்லையே. //

இராகவன், நான்கு பெயர்களும் காலத்துக்குப் பொருத்தமானவை தான்னு நினைக்கிறேன். கோமளா என்பது கோமளவல்லியின் சுருக்கம்; கமலா என்பது கமலவல்லியின் சுருக்கம்; ரங்கநாயகியை ரங்குன்னு சுருக்குனா நல்லா வரலை; அதனால அப்படியே விட்டுட்டேன். சீதாலக்ஷ்மியும் பழைய பெயர்தான். எல்லாமே மகாலக்ஷ்மியின் பெயர்கள். கோதையின் கதையில் திருமகள் பெயர் வருவது தானே முறை.

December 01, 2005 12:53 PM
குமரன் (Kumaran) said...
//koncham Srirangam vaday avalvuthan //

உண்மை. That was intentional.

December 01, 2005 12:55 PM
குமரன் (Kumaran) said...
தொடர்ந்து என் வலைப்பதிவுகளைப் படிப்பதற்கு மிக்க நன்றி K.V. பதி ஐயா. உங்கள் கருத்துகளையும் கொஞ்சம் சொல்லுங்கள்.

December 01, 2005 12:57 PM

குமரன் (Kumaran) said...

இராமநாதன் said...
குமரன்,
ஆண்டாள் மட்டும் இப்ப இருந்திருந்தாங்கன்னா ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம் போலிருக்கே. பின்ன, தாய்க்குலங்களையெல்லாம் கைக்குள்ள வச்சுருக்காங்க. :)

கதை சொன்ன முறை நல்லாருக்கு.

December 01, 2005 4:42 PM
G.Ragavan said...
// இப்போதெல்லாம் கொஞ்சம் அறிவுஜீவித்தனமாய் பின்னோட்டம் இட ஆரம்பித்துவிட்டீர்களே...ஏன்?

:-) Just kidding... //

அட kidding தானா!!!!!! நீங்க அறிவுஜீவவித்தனமா எழுதும் போது நான் பின்னூட்டம் போடுறதா பெரிய விஷயம்!

December 02, 2005 2:39 AM
G.Ragavan said...
// இராகவன், நான்கு பெயர்களும் காலத்துக்குப் பொருத்தமானவை தான்னு நினைக்கிறேன். கோமளா என்பது கோமளவல்லியின் சுருக்கம்; கமலா என்பது கமலவல்லியின் சுருக்கம்; ரங்கநாயகியை ரங்குன்னு சுருக்குனா நல்லா வரலை; அதனால அப்படியே விட்டுட்டேன். சீதாலக்ஷ்மியும் பழைய பெயர்தான். எல்லாமே மகாலக்ஷ்மியின் பெயர்கள். கோதையின் கதையில் திருமகள் பெயர் வருவது தானே முறை. //

அதைத்தான் நான் சொல்லவருகிறேன். கோமளவல்லி என்றும் கமலவல்லி என்றும் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே. :-)

December 02, 2005 2:41 AM
குமரன் (Kumaran) said...
//ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம் போலிருக்கே//

இராமநாதன் உங்களுக்கு தாமரைக்கனி குடும்பத்து மேல அப்படி என்ன கோபம்? அவங்க பிறப்புரிமையை ஆண்டாளுக்குக் கொடுக்கிறீங்களே? :-)

December 02, 2005 4:43 AM
குமரன் (Kumaran) said...
//அட kidding தானா!!!!!! நீங்க அறிவுஜீவவித்தனமா எழுதும் போது நான் பின்னூட்டம் போடுறதா பெரிய விஷயம்!
//

இராகவன். நெனைச்சேன் இதுதான் பதிலா வரப்போகுதுன்னு. நீங்களும் kidding தானே. கோவிச்சுக்கலையே :-) உங்கள் முதல் வட்ட ரசிகனின் comment என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

என்னடா உங்கள் அடுத்த பதிவு மகரந்தத்திலும் காணோம்; இனியது கேட்கினிலும் காணோம்ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீரென்று 'சுவைக்கச் சுவைக்க'ன்னு ஒரு வலைப்பக்கம் (வலைப்பூ?) ஆரம்பிச்சு கலக்கிக்கிட்டு இருக்கீங்க. இன்னும் அந்த பதிவுகளைப் படிக்கலை. படிச்சுட்டு comments போடறேன். அதுவும் அறிவுஜீவித்தனமா இருக்கான்னு சொல்லுங்க. :-)

December 02, 2005 4:49 AM
குமரன் (Kumaran) said...
//அதைத்தான் நான் சொல்லவருகிறேன். கோமளவல்லி என்றும் கமலவல்லி என்றும் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே. :-)//

இராகவன். சுருக்கங்களை எல்லாம் சரி செய்துவிட்டேன். நீங்கள் சொன்னபடி பெயர்களைச் சுருக்காமல் எழுதுவது நன்றாகத் தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றி.

December 02, 2005 4:59 AM
சிங். செயகுமார். said...
மன்னிக்கனும் நண்பரே! ரொம்ப நாளா உங்க பிலாக்க சுத்தி பாக்கனும்னு ஆசை.இன்றுதான் முடிந்தது விஷ்னு சித்தர் புராணா கதையா! இல்ல குமரன் கதையா!

December 02, 2005 6:52 PM
குமரன் (Kumaran) said...
வருகைக்கு நன்றி சிங்.செயகுமார் (சிங்காரகுமரன்). விஷ்ணு சித்தர் புராணக்கதைதான். உங்களுக்கு புராணக்கதை படிப்பதில் அவ்வளவு ஈடுபாடு இல்லையெனில் என் கூடல் என்னும் வலைப்பதிவைப் பாருங்கள். அதிலும் கொஞ்சம் புராணம் பாடியிருப்பேன். ஆனால் மற்றவையும் இருக்கும். கதை, கவிதை என்று. உங்களுக்கு புராணக்கதையும் பிடிக்கும் என்றால் என் எல்லா வலைப்பதிவையும் படிக்கலாம்.

மற்ற வலைப்பதிவுகளைப் பார்க்க என் profile பாருங்கள்.

December 02, 2005 7:04 PM
சிவா said...
குமரன்! கதை சொன்ன விதம் நல்லா இருக்கு. ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு கோணத்தில் சொல்றீங்க. பிற்க்காலத்தில் படம் இயக்க எண்ணமோ?. நீங்களே தயாரித்து இயக்கினால் சரி :-)

December 05, 2005 5:57 AM
குமரன் (Kumaran) said...
ரொம்ப சரியா சொன்னீங்க சிவா. நானே தயாரித்து நானே இயக்குனா தான் நல்லா இருக்கும். இன்னொருத்தர் நஷ்டம் அடையுறதுக்கு நாம காரணமா இருக்க வேணாம். :-)

December 05, 2005 12:48 PM
Anonymous said...
I don't know how to express my feelings. Only one word I have. "Awesome!".

June 15, 2009 10:20 AM
குமரன் (Kumaran) said...
Thank you. Please let me know your name.

June 15, 2009 10:28 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது தமிழின் இனிமையா? இல்லை பாடல்களின் இனிமையா? இல்லை கோதையின் குரலினிமையா? என்று திகைத்துப் போய்விட்டேன்//

இனியது கேட்கின் கனிதவழ் கோதை

இனிது இனிது உன் குரல் இனிது;
அதனினும் இனிது, உன்னுடை எழுத்து;
அதனினும் இனிது, உன் மெய்ப் பாவை
அதனினும் இனிதே, தமிழ்ச் சுவை இதழே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னடீ தோழி, எல்லாரும் ஒன்னைய ரொம்பத் தான் புகழுறாங்க?:)

//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள். தாய்மார்கள் எளிதாக தன் பிள்ளைகளைத் தாழ்த்தி மற்றவர் பிள்ளைகளை உயர்த்த மாட்டார்கள். நாம் எல்லாரும் மாறி மாறி கோதையைப் புகழ்வதிலேயே தெரிகிறது அவள் குணங்கள்//

how true!

even i have so much poRaamai on u dee...
but still i praise u, bcoz, bcoz...

u are my inspiration on "how to live",
... even an imaginary life, truthfully!
... even people understand you or not, still your life, truthfully!