Tuesday, May 12, 2009

கவியோகியாரின் தமிழ்த்தாய் வாழ்த்து!


கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய இத்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களை அண்மையில் சுப்புரத்தினம் ஐயா அவர்களுடைய வலைப்பதிவில் படித்தேன். அன்னை தமிழ் பெற்றிருக்கும் பெருமையெல்லாம் அவனியெங்கும் எடுத்துரைக்கும் வகையில் இப்பாடல்கள் அமைந்திருப்பதைப் படித்துப் பாடி மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்னும் ஐம்பெரும் காப்பியங்களும் சூளாம்ணி முதலிய ஐஞ்சிறு காப்பியங்களும் அவனியெல்லாம் புகழும் திருக்குறளும் அன்னைக்கு அணிகலன்களாக அமைந்திருப்பதை முதல் பாடல் சொல்கிறது.

குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும் நூல் அன்னைக்குக் காதணியாக அமைகின்றது. வளையல் என்பது கைகளில் அணியும் அணிகலன் என்பதால் வளையாபதி என்னும் நூல் அன்னைக்குக் கையணியாக அமைகின்றது. மாணிக்க பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்பட வேண்டியவை என்பதால் சீவக சிந்தாமணி என்னும் நூல் அன்னையின் மார்பில் ஒளி வீசி நிற்கின்றது. மேகலை என்பது முத்துகளால் செய்யப்பட்டு இடையில் அணியப்படுவதால் மணிமேகலை இடையணியாக விளங்குகின்றது. சிலம்பு என்பது கால்களில் அணியும் அணிகலன் என்பதால் சிலப்பதிகாரம் அன்னையின் பூந்தாமரைப் பாதங்களில் ஒலி செய்து விளங்குகின்றது.

சூளாமணி என்னும் அணிகலன் தலையணியாக அமைவதால் சூளாமணி முதலிய ஐஞ்சிறுகாப்பியங்கள் அன்னையின் தலையில் அணிந்த அணிகலன்களாக அமைகின்றன. இப்படி மேனியெங்கும் ஒளி வீசும் பெருமை கொண்ட அணிகளை அணிந்த பேரரசியாம் தமிழன்னை திருக்குறள் என்னும் செங்கோலினைத் தாங்கி சீராட்சி செய்கின்றாள்.

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!

காது ஒளிரும் குண்டலமும்
கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீது ஒளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும்
சிலம்பு ஆர் இன்பப் போது ஒளிர் பூந்தாமரையும்
பொன்முடிச் சூளாமணியும்
பொலியச் சூடி
நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத்
தாங்கும் தமிழ் நீடு வாழ்க!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்னும் சைவ சமயக் குரவர்கள் நால்வர் இயற்றிய இசை அமுதம் இருக்கின்றது. வைணவ குரவராம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் அவரே வெளிப்படுத்திய மற்ற ஆழ்வார்களின் நாலாயிர பாசுரங்களும் இருக்கின்றன. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதால் திருத்தொண்டர் புராணம் என்றும் பெரிய புராணம் என்றும் சொல்லப்படும் சேக்கிழார் பெருமான் இயற்றிய பால் வடி செந்தமிழ் நூலும் இருக்கின்றது. கல்வியில் சிறந்த கம்பன் இயற்றிய இராமவதாரச் சித்திரமும் இருக்கின்றது. இந்நூல் இல்லாத இடம் எல்லாம் இருள் சூழ்ந்து இரவு போல் இருக்க இங்கு மட்டும் பகல் என்று சொல்லலாம் படி செய்திருக்கும் நாயனாராம் திருவள்ளுவரின் திருக்குறளும் இருக்கின்றது. இப்பெரும் நூல்கள் எல்லாம் இருக்கும் போது நமது தமிழன்னை காலத்தை வென்று ஓங்கும் கற்பக மரத்தைப் போல் வேண்டியவற்றை எல்லாம் அருளி என்றும் நிலைத்திருப்பதில் ஏதேனும் ஐயம் உண்டா?

நால்வர் இசை அமுதிருக்க நம்மாழ்வார் மொழியிருக்கச் சேக்கிழாரின்
பால்வடி செந்தமிழ் இருக்கக் கம்பச்சித்திரம் இருக்கப் பகலே போன்று
ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறளிருக்க நமது நற்றாய்
காலத்தை வென்றோங்கும் கற்பகம் போல் கனி பெருகக் கண்டிலோமோ


நால்வர் இசை அமுது இருக்க
நம்மாழ்வார் மொழி இருக்க
சேக்கிழாரின் பால் வடி செந்தமிழ் இருக்க
கம்பச் சித்திரம் இருக்க
பகலே போன்று ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறள் இருக்க
நமது நற்றாய்
காலத்தை வென்று
ஓங்கும் கற்பகம் போல்
கனி பெருகக் கண்டிலோமோ?!

10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ்த்தாய் வாழ்த்து நன்றாகவுள்ளது
பயனுள்ள பதிவு...

குமரன் (Kumaran) said...

நன்றி முனைவரே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான கவிதை!
அதை விட அழகு, படம்!

யார் சொன்னா அவள் தமிழ்த் தாய் என்று! தமிழ்க் கன்னி போல் அல்லவா இருக்கின்றாள் படத்தில்?
சீர் இளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!

குமரன் (Kumaran) said...

கோடிக்கணக்கான குழந்தைகளைப் பெற்ற பின்னரும் அவள் கன்னி என்னும் படியாகத் தானே இருக்கிறாள். அதனால் தான் படத்தில் அப்படி இருக்கிறாள் போலும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆமாம் குமரன்...பார்த்தீர்களா, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களும் ஏதோ ஒரு அணி (நகையின்) பெயரில் தான் அமைந்துள்ளன...

சிலப்பதிகாரம் = காலில் அணி
மணிமேகலை = இடையில் அணி
சீவக சிந்தாமணி = தலையில்/மார்பில் அணி
வளையாபதி = கையில் அணி
குண்டல கேசி = காதில் அணி

இப்படி அமைந்தது வியப்பிலும் வியப்பே!

கவியோகி சுத்தானந்த பாரதியார் நூற்றாண்டு அண்மையில் தான் கொண்டாடப்பட்டது! இசை இன்பத்தில் ஜீவா பதிவிட்டு இருந்தார்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கவியோகி சுத்தானந்த பாரதியாரின் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் உள்ள சுத்தானந்த நகரில் 1997-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொண்டாடப்பெற்றது.

குமரன் (Kumaran) said...

தகவலுக்கு நன்றி ஐயா.

Unknown said...

இத்தகைய மதிப்பிற்குரிய பாடல்
தமிழ் பாடல் நூலிலிருந்து நீக்கப்பட்டது மனதில் பெரும் பாரமாக உள்ளது. இதனைத் தனிப்பட்ட முறையில் நமது குழந்தைகளிடம்
திருக்குறள் மற்றும் நீதிநெறி நூல்களுடன் எடுத்ததுச் செல்ல
வேண்டும் என்பது தலையாய விருப்பம். தேர்வு ,மதிப்பெண்
என்றில்லாமல் நமது தாய் மொழியை நமது குழந்தைகள்
அறிய வேண்டும் , அவர்களது வாழ்க்கையில் பயன்பட வேண்டும் என்ற நிலையில் இருத்தல் நலம்.
ஆசிரியரின் பதிப்பு அருமையிலும் அருமை.அன்னாரது தமிழ்த் தொண்டு தொடர எல்லாம் வல்ல
ஆண்டவர் நல் அருள் புரிவாராக.
வணக்கம் நன்றி

Unknown said...


இப்பாடல் காட்டும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துவீர்களா