Friday, May 08, 2009

நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)


இந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம் விவரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. திருமகளை முதன்மை ஆசாரியராகக் கொண்ட தமிழக வைணவத்தின் தனித்தன்மையைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அப்படிப்பட்ட தனித்தன்மை தான் என்ன என்றால் மற்ற தத்துவங்களில் எல்லாம் அடைய வேண்டிய பேறு (முக்தி) என்பதும் அடையும் வழிகள் என்பவையும் வேறு வேறாகச் சொல்லப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக பேறு என்பது மயக்கத்தைத் தரும் மாயையிலிருந்து விடுபட்டு தன் உண்மை உருவினை உணர்ந்து அடைவது என்றும், அந்தப் பேற்றினை அடையும் வழி முறைகள் செயல் (கருமயோகம்), அன்பு (பக்தியோகம்), நினைவு (தியானயோகம்), அறிவு (ஞானயோகம்) போன்றவற்றில் ஒன்று என்றும் சொல்லப்படும். ஆனால் தமிழக வைணவத்திலோ பேறும் வழியும் ஒரே பொருள் தான். ‘நம்மை உடையவன் நாராயணன்’ என்று உணர்ந்து ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று அவன் அருளே அவனைப் பெறும் வழியாகக் கொண்டு தன் முயற்சியால் அவனை அடைவது இயலாத ஒன்று என்றிருப்பதைச் சொல்லும் இந்தத் தத்துவம்.

மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).

நாராயணனே இன்றும் அன்றும் என்றும் நம்மையுடையவன் என்ற உண்மையை உணர்ந்து அந்த உணர்வுடன் இருப்பது மட்டுமே போதும். அவனே அந்த உண்மை உணர்வினை அவன் அருளாலே நமக்குக் கொடுத்து அந்த உணர்வில் என்றும் நின்று நம் இயற்கை நிலையான தொண்டு நிலையைத் தொடர்ந்து செய்யும் வகை செய்வான். அந்தத் தொண்டு நிலையை அடைவதே பேறு. அவனே பேறு. அந்தப் பேற்றினை அடையும் வழியாகவும் அவனே நின்று அருளுவான். அவனுடைய அருளே அப்பேற்றினை நல்கும். வேறு எந்த வழியும் (உபாயமும்) வேண்டாம்.

வேதங்களும் நாராயணனையே பரதெய்வமாகக் கூறுகின்றது என்று வேதத்தின் அடிப்படையில் எழுந்த எல்லா தத்துவங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அவற்றில் முதன்மையான அல்லிருமை (அத்வைதம்), விதப்பொருமை (விசிஷ்டாத்வைதம்), இருமை (த்வைதம்) போன்ற தத்துவங்கள் மீண்டும் மீண்டும் அதனைப் பறை சாற்றுகின்றன. இம்மூன்றினுள் வடமொழி வேதங்களை மட்டுமில்லாமல் தமிழ் வேதங்களான ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, விதப்பொருமைத் தத்துவத்தின் உருவாக எழுந்த தமிழக வைணவம் உபய வேதாந்தம் (இரு வேதங்களின் முடிவு) என்ற பெயரும் கொண்டு அமைந்திருக்கிறது.

இந்த உபய வேதாந்தத்தின் தனித்தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தத் தத்துவத்திற்கு ஸ்ரீவைஷ்ணவம் என்றே பெயர் அமைந்திருப்பதற்குக் காரணம் இந்தத் தத்துவத்தில் நாராயணனுடன் திருமகளும் சேர்ந்து முதன்மையுடன் போற்றப்படுவதால்.

நாராயணன் மட்டுமே தான் நம்மையுடையவனா? திருமகள்? இந்தக் கேள்விக்கு திருமகளும் நம்மையுடையவள் என்றே தமிழக வைணவம் சொல்கிறது. சரி. பேறு என்ற போது திருமகளும் திருமகள் கேள்வனும் பேறு என்று சொல்லுவோம்; வழி என்ற போதும் அப்படித் தானா என்றால் அதற்கும் பதில் 'ஆமாம்' என்பதே.

'ஈச்வரீம் ஸர்வபூதானாம்' என்கிறது வேதம். அனைத்து உயிர்களையும் உடைமையாகக் கொண்டவள் என்பது இதன் பொருள். அதனால் 'திருமகளும் நம்மையுடையவள்'; அவளும் அவள் மணாளனும் இணைந்ததே பரதெய்வம் என்று விளங்குகிறது. இருவரும் இணைந்தே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய அனைத்து பிரபஞ்ச காரியங்களையும் செய்கிறார்கள்.

'அகலகில்லேன் இறையும்' என்று இவள் கணப்பொழுதும் பிரியாமல் அவனுடன் சேர்ந்தே இருக்கிறாள் என்கிறது தமிழ் மறை. அதனாலும் அவளும் நம்மையுடையவள் என்பது தெரிகிறது.

'அலமேஷா பரித்ராதும் மைதிலீ ஜநகாத்மஜா' - 'நம்மைக் காக்க ஜநகனின் திருமகள் மட்டுமே போதும்' என்று வால்மீகி இராமாயணம் பறை சாற்றுகிறது. 'வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே' என்கிறது தமிழ் மறை. இதனால் பேறாக இருக்கும் அவள் அப்பேற்றினைப் பெற்றுத் தரும் வழியாகவும் இருக்கிறாள் என்பது தெரிகிறது.

இப்படி இவர்கள் இருவருமே பெறும் பேறாகவும் அப்பேற்றினைப் பெறும் வழியாகவும் இருக்கிறார்கள் என்று இருவரையும் ஒரு சேர முதன்மை தந்து போற்றுகிறது உபய வேதாந்தமான தமிழக வைணவம்.

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:


(திருமகளுடன் இணைந்திருக்கும் நாராயணனின் திருவடிகளை அடைக்கலமாகப் பற்றுகிறேன். திருமகளும் நாராயணனும் என்னை உடையவர்கள். நான் என்னை உடையவன் இல்லை)

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல்மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும்
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

(நொடிப்பொழுதும் விலகியிருக்க மாட்டேன் என்று சொல்லி எப்போதும் தாமரையில் வாழும் மங்கையான திருமகள் உறையும் திருமார்பினைக் கொண்டவா. நிகரில்லாத புகழை உடையவா. மூவுலகங்களையும் உடையவா. என்னை ஆள்பவா. நிகரில்லாத நித்யர்களும் முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தானே. உன்னையன்றி வேறு கதி இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் அடைக்கலமாக என்றும் நீங்காமல் அமர்ந்தேன்)

27 comments:

குமரன் (Kumaran) said...

இக்கட்டுரை எழுதுவதற்கு உதவியாக முந்தையப் பதிவொன்றில் பின்னூட்டங்கள் தந்த தேவ் ஐயா அவர்களுக்கு நன்றி.

குறும்பன் said...

\\திருமகளை முதன்மை ஆசாரியராகக் கொண்ட தமிழக வைணவத்தின் தனித்தன்மையைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\\

ஆசாரியராக - எழுத்துப்பிழையா?

sury siva said...

மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).// //


அப்ப‌டியா !!??

சுப்பு ரத்தினம்

குமரன் (Kumaran) said...

ஆசாரியர் என்பதில் எழுத்துப்பிழை இல்லையே குறும்பன். நீங்கள் அச்சொல்லுக்கு என்ன பொருள் கொண்டீர்கள்? நான் கொண்ட பொருள் 'குரு' என்பது. ஆசார்யர் --> ஆசாரியர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பொழிக பொழிக பதிவு!
போயிற்று வல்லுயிர் தாபம்!
மலிக மலிக மறுமொழி!
குமரன் கூடலில் தானே!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்)//

மிகவும் வ"ண்"மையாகக் கண்(ண)டிக்கிறேன்! :))))))

குமரன் (Kumaran) said...

நான் அறிந்த வரை அப்படித் தான் தோன்றுகிறது சுப்பு ரத்தினம் ஐயா. திருவாசகம் மட்டுமே கொஞ்சம் படித்திருக்கிறேன். அதில் முழுக்க முழுக்க 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற கருத்தும் 'அவன் அருள் அன்றி அவனை அடைவதற்கு வேறு வழி இல்லவே இல்லை' என்றாற் போன்ற கருத்தும் முதன்மையாக இருக்கின்றன.

தேவாரத்தில் கொஞ்சமே கொஞ்சம் தான் பயிற்சி உண்டு. ஆனால் சைவசிந்தாந்த நூற்களைக் கொஞ்சம் படித்திருக்கிறேன். அதிலும் பதியின் அருளாலேயே பசுவிற்கு பாசத்திலிருந்து விடுதலை கிட்டுகிறது என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பதியின் அருளை மட்டுமே பாசத்திலிருந்து விடுதலை பெறும் வழியாகச் சொல்லாமல் பதியின் அருளைப் பெற வேறு வழிகள் (பக்தி, யோகம் போன்றவை) இருக்கின்றன என்றும் பரக்கப் பேசுகின்றன.

தத்துவங்கள் என்ற அடிப்படையில் வேறு தத்துவங்களான அத்வைதம் ஞானவழியை முதன்மையாகப் பேச, த்வைதம் பக்திவழியை முதன்மையாகப் பேச, மற்ற தத்துவங்களும் அப்படியே. கற்றது கைம்மண் அளவு தானே. சைவ சமய நூற்கள் இன்னும் விரிவாகப் படிக்காமல் இந்தக் கருத்தை நான் அறுதியிட்டுக் கூற இயலாது. அதனால் தான் அடைப்பில் 'என்று நினைக்கிறேன்' என்று சொன்னேன்.

தவறென்றால் எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக் காட்டுங்கள்.

குமரன் (Kumaran) said...

உங்கள் வண்மையான கண்டனங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி இரவி. கூடலில் அடுத்த இரு இடுகைகளும் எழுதி ஆகிவிட்டது. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).
//

இதற்கு காரணம் உண்டு!

இறைவனின் மேல் மாறாத காதலால் நாயன்மார்கள் தங்கள் பதிகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சமயத்தில் நடைமுறைப்படுத்த, ஆச்சார்ய பரம்பரை என்று இதில் உருவாகவில்லை!

தனி மடங்கள், அதன் பீடாதிபதிகள் என்று தோன்றினாலும், யோகம், கிரியை, சரியை, ஞானம் என்று தான் போந்தார்களே அன்றி, நாயன்மார்களின் தத்துவத்தைத் தத்துவமாக நாட்டி வைக்க எவரும் அமையவில்லை!

திருமூலப் பெருமான் நுணித்துச் சொன்ன சைவ சித்தாந்தம் ஆராய்ச்சி அளவிலே மட்டும் நின்று விட, சைவ ஆகமங்களே மொத்தம் 28 என்று அவரவருக்கு ஏற்றவாறு பல்கிப் பெருகி விட்டன!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது பக்தி இலக்கியப் பாடல், மணிவாசகப் பெருமானின் ஆரா அமுதம் என்ற அளவிலே மட்டும் நின்று விட்டது!

sury siva said...

பதிவாசிரியர் என்னை அருள் கூர்ந்து க்ஷ‌மிக்க‌வேண்டும்.

த்வைத‌ம், வைண‌வ‌ம் ஆகிய‌ த‌த்துவ‌ங்க‌ளிலிரு ந்து த‌னிப்ப‌ட்ட‌தாக‌ த‌மிழ் வைண‌வ‌ ச‌ம்பிர‌தாய‌த்தை
சொல்லி இருப்ப‌தாக‌ நினைத்து என‌து ஆச்ச‌ரிய‌த்தையும் இன்னும் எத்துணை அள‌வு நான் க‌ற்க‌
இருக்கிற‌து என‌ ஒரு கேள்வியும் என‌து ம‌ன‌தில் தோன்றிய‌தின் கார‌ண‌மே என‌து முத‌ற்க‌ண் முன்மொழியாகும். (initial response from my end)

தாங்க‌ள் த‌வ‌று என‌ச் சொல்வ‌து என‌ நான் சொல்ல‌வில்லை. அதைச் சொல்வ‌த‌ற்கு என‌க்குத்
த‌குதியுமில்லை. என‌க்குத் தெரி ந்த‌தெல்லாம், எனக்குத்தெரியாதவை, தெரிய‌வேண்டிய‌வை ப‌ல‌வுள்ள‌ன‌ இன்ன‌மும் என்னும் உண‌ர்வுதான்.

நிற்க‌. நாராய‌ண‌ ஸூக்த‌த்தின் சில‌ அடிக‌ளைத் த‌ந்துள்ளேன். உங்க‌ளுக்குத் தெரியாத‌த‌ல்ல‌.
ஸ்ரீம‌ன் நாராய‌ண‌னே எல்லாம் என‌ப் புக‌ழும், துதிபாடும் ஸூக்த‌ங்க‌ள். இவ‌ற்றில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌
க‌ருத்துக்க‌ளுக்கும் த‌மிழ் வைண‌வ‌ ச‌ம்பிர‌தாய‌ க‌ருத்துக்க‌ள் அப்பாற்ப‌ட்ட‌வையா (exclusive )அல்ல‌து
உள்ள‌ட‌ங்கிய‌வையா (உள்ளடக்கியவையா )(complementing ) என‌ தேவ‌ரீர் ம‌ன‌முவ‌ ந்து சொல்ல‌வேண்டும்.

Narayana Suktham
Sahasra seersham devam viswaksham viswa sambhuvam.

Viswam narayanam devam aksharam paramam padam. 1

I meditate on god Narayana,Who has thousands of heads,Who sees everywhere,Who does good to all the world,Who is the world,Who is indestructible,And who is the greatest destination.

Viswatha paramanithyam viswam narayanam harim,
Viswamevedam purusha stadvischa mupajeevathi. 2

I meditate on God Narayana,
Who is much greater than this world,
Who is forever,
Who is the world,
Who destroys sins and suffering,
And say, that this world is Purusha,
And is alive because he is inside it.



Pathim viswasyatmeshwara, saswatha shivamachyutham,
Narayanam mahagneyam viswathmanam parayanam. 3

I meditate on Narayana,
Who owns this world,
Who is the god of all souls,
Who is forever,
Who is personification of gooட்,ந்ho never slips,
Who needs to be known with great effoர்ட்,ho is the soul of everything,
And who is the great destination.

Narayana paro jyothirathma narayana para,
Narayana para brahma tatwam narayana para.
Narayana paro dyatha , dyanam Narayana para. 4

Narayana is the great light,
Narayana is the great soul,
Narayana is the ultimate Brahmam,
Narayana is the great principle,

arayana is the greatest among those who meditate on him,

And Narayana is the great meditation.

Yachcha kinchid jagat sarvam drusyathe sruyathe bhi vaa,
Antharbahischa tatsarva vyapya narayana sthitha. 5

Narayana is spread,
All over the world.
In everything that we see and hear,
And in its inside and outside.


Anantham avyayam kavi samudrentham viswasambhuvam,
Padmakosa pratheekasa hrudhyam chapyadho mukham. 6

I meditate on God Narayana,
Who is endless,
Who is indestructible,
Who is all knowing,
Who is inside the sea,
And who does good to all world.
I also state that the heart hangs like an inverted lotus bud.


Adho nishtaaya vithasthyaanthe nabhyam upari thishtathi,
Jwalamalaakulam bhathi viswasya yatanam mahat. 7
Inside the heart,
Which is Just below the collarbone,
And one hand above the belly button,
Shines .as if it is surrounded by a flame,
The greatest habitat of the universe


Santhatha shilabhisthu lambatya kosa sannibham,
Tasyanthe sushira sookshmam tasmin sarve prathishtitham. 8

The lotus like heart hangs,
Attached to the bones on all four sides,
And inside the heart is a very tiny hole,
And inside that hole everything exists.
Tasya madhye mahan agni viswa archir viswatho mukha,

Sograbuk vibhajan thishtaa annahara majara kavi. 9

Inside the center of the heart,
There is an ever-shining fire,
Which is spread in all directions,
And that fire which burns stable,
Sees everywhere,
Never gets old,
And divides and supplies the food.


Tirya goordhwa madhasa sayee rasmayas tasya santhatha,

Santhapayathi swam deha mapada thala masthaka,

Tasya madhye vahni shika aneeryordhwa vyavasthitha. 10

The rays of that fire is always spread,
All over from one end to other,
And throughout the length,
And from head to foot,
And the body of that fire,
Heats our body allover,
And its one thin flame,
Shines erect in the center of the heart.

Neela thoyadha madhyastha dwidyullekheva bhaswaraa,
Neevara sooka vathanvee peetha bhaswat yanoopama. 11

Like the sparkle of lightning,
From within a black dark cloud,
Like the sprout of a red paddy,
Thin and golden,
And as tiny as an atom,
That flame continues burning.


Tasya shikhaya madhye paramathma vyavasthitha,
Sa brahma sa shiva sa hari sendra sokshara parama swaraat. 12

In the center of the flame lives the all-pervasive God.
Who is Brahma,
Who is Shiva,
Who is Vishnu,
Who is Indra,
Who is perennial and ever living,
And He is the greatest emperor.


Rhutha sathyam param brahma purusham Krishna pingalam,
Oordhwaretham viroopaksham viswa roopaya vai namo nama. 13

Salutations and salutations,
To Him who is the beauty of everything,

To Him who is ever lasting truth,
To Him who exists as Para Brahmam in all bodies,
To Him who is the black Vishnu and reddish Shiva rolled into one,
To Him who looks after the progeny,
To Him who is three eyed,
And to Him who assumes the form of all beings of the universe.


Narayanaya vidmahe vasudevaya deemahi,
Thanno Vishnu prachodayath. 14
Let us try to know that Lord Narayana,
Let us try to meditate on that Vasudeva,
And let that Vishnu employ us to do good deeds.

Courtesy: Sri P.R.Ramachandran
for translation

வாச‌க‌ தோஷ‌ஹ‌ க்ஷ‌ந்த‌வ்ய‌ஹ‌.

சுப்பு ர‌த்தின‌ம்.
Stamford,CT

மெளலி (மதுரையம்பதி) said...

ஆளவந்தார் என்றழைக்கப்படும் ஸ்ரீ யாமுந முனிகள் எழுதிய ஸ்தோத்ர ரத்னத்தின் முதல் நான்கு ஸ்லோகங்கள் மஹாலக்ஷ்மியைச் சரணடைவதாக அமைத்திருக்கிறார். இதன் பெயரே "ஸ்ரீ சதுஸ்லோகீ" என்பது.

இதற்கு ஸ்ரீதேசிகர் பாஷ்யம் செய்திருக்கிறார். அதில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

ச்ரியம் தத்ஸத்ருசியம் ததுபஸ்தந த்ராஸ சமநீம்
அபிஷ்டெளதி ஸ்துத்யாம் அவிததமதிர் யாமுநமுநி

பொருள் நீங்களே சொல்லிடுங்க குமரன் :)

இதே போல சரணாகதி கத்யத்தில் வரும் பின்வரும் வரியையும் நினைவுபடுத்திக் கொள்ளவும்.

"அகில ஜகந்மாதரம், அஸ்மந் மாதரம்,
அசரண்ய சரண்யாம், அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆளவந்தார் என்றழைக்கப்படும் ஸ்ரீ யாமுந முனிகள் எழுதிய ஸ்தோத்ர ரத்னத்தின் முதல் நான்கு ஸ்லோகங்கள் மஹாலக்ஷ்மியைச் சரணடைவதாக அமைத்திருக்கிறார். இதன் பெயரே "ஸ்ரீ சதுஸ்லோகீ" என்பது.//

//இதே போல சரணாகதி கத்யத்தில் வரும் பின்வரும் வரியையும் நினைவுபடுத்திக் கொள்ளவும்.

"அகில ஜகந்மாதரம், அஸ்மந் மாதரம்,
அசரண்ய சரண்யாம், அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே://

மெளலி அண்ணா
தக்க சமயத்தில் தாங்கள் தந்துதவிய சுலோகங்களுக்கு மிக்க நன்றி!
இது குறித்து இன்னும் சற்று விரிவாகப் பேசுகிறேன்!

மேற்கண்ட சுலோகங்கள் எல்லாம் வடமொழியில் தான் உள்ளன. மறுக்கவில்லை! அப்புறம் எப்படி இது தமிழ் வைணவம் ஆகும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழலாம்!

ஆனால் இந்த சுலோகங்களின் மூலம் எது-ன்னு பார்த்தா அப்போது அது தமிழக வைணவத்தில் இருந்து வந்தவை-ன்னு தானாத் தெரிஞ்சிடும்! :))

ஆளவந்தார், தேசிகர் இன்னும் பல ஆச்சார்யர்கள் இவ்வாறு சுலோகங்கள் இயற்றிய காரணம் என்னவென்றால்:
உபய வேதாந்தமான திராவிட/தமிழ் வேதக் கருத்துக்களில் சில, வடமொழியில் இல்லை! அந்தப் பக்கத்திலும் போய்ச் சேர வேண்டும் என்ற காரணத்தால் தான் இவ்வாறு சுலோகங்கள் செய்து அருளினார்கள்!

அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே: ன்னு மெளலி அண்ணன் எடுத்துக் காட்டிய சரணாகதி கத்ய சுலோகம்...

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல்மங்கை உறை மார்பா
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே...
என்ற பாசுரத்தின் நேரடி பொருள் பெயர்ப்பே!

சூரி சார் கொடுத்த நாராயண சூக்தத்தைக் கவனித்துப் பாருங்கள்! அதில் அன்னையோடு கூடிய அப்பனைச் சரணாகதி செய்வதாக நேரடியாக வருகிறதா? வராது! அன்னை சேர்த்து பேசப்படுகிறாளா? இல்லை!

அதனால் தான் வடமொழி பனுவல்கள் கூடவே, தமிழையும் உபய வேதாந்தமாய் ஆக்கி அருளினார்கள் ஆச்சார்யர்கள்!

பிரம்ம சூத்திரங்களுக்கு இராமானுசர் ஸ்ரீபாஷ்யம் செய்த போது...கூரத்தாழ்வார் சொல்லும் ஒரு கருத்தை இங்கு அனைவரும் ஆழ்ந்து நோக்க வேண்டும்! இதோ:

"இதர பாஷ்யாதிகளுக்கு எல்லாம் இல்லாத ஒரு பெருஞ் சீர்மை ஸ்ரீ பாஷ்யத்துக்கு மட்டும் உண்டே ஆகில் ஏன் என்றால்.....
உடையவர் பாஷ்யம் செய்யும் போதே, தைல தாரையைப் போன்று, ஆழ்வார் அருளிச் செயல்களை, சூத்திர வாக்கியங்களோடு ஒருங்க விடுவர்!"

அதாச்சும் பிரம்ம சூத்திர விளக்கம் வெறுமனே வேதாந்தாமாக வறண்டு போய் விடாமல், அதற்கு ஈரம் சேர்க்க,
தைலத்தை ஒருங்க விடுவது போல், ஈரத் தமிழ் அருளிச் செயல்களை, வேதாந்தத்தோடு ஒருங்க விடுவர் என்று சாதிக்கிறார்!

அதனால் தான் மற்ற பாஷ்யங்களுக்கு எல்லாம் இல்லாத பெருமை ஸ்ரீ பாஷ்யத்துக்கு மட்டும் உண்டு என்றும் கூறுகிறார்!

இது புரிந்தால், குமரன் சொன்ன தமிழக வைணவ தத்துவம் நம் அனைவர்க்கும் எளிதில் புரிந்து விடும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னும் பலவும் சொல்லலாம்!

சரணாகதி என்ற தத்துவம் வேதங்களின் உத்தர பாகமான ஞான காண்டத்தில் எங்கு வருகிறது-ன்னும் எடுத்துக் காட்டி, ஞான/கர்ம/பக்தி யோகாதிகளைக் காட்டிலும், சரணாகதியே வேதம் போற்றும் நெறி என்று எடுத்துக்காட்டுவார்!

உடலில் சங்கு சக்கர சின்னங்கள் என்பது சூடு வைத்துக் கொள்வது! அது வேதத்துக்கு எதிரானது என்று சிலர் சாதித்த போது,
அதை மறுத்து, அதற்கும் வேதத்தில் இருந்தே மேற்கோள் காட்டினார்! இதற்கு அவருக்கு பிரமாணமாய், பேருதவியாய் அமைந்தது, தமிழ்ப் பாசுரங்களே!

என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே? - என்பது தான் முத்திரைப் பொறித்தலுக்கான பிரமாண வாசகம்!

இப்படி மிகவும் நுட்பமான, புரிந்து கொள்ளக் கடினமான, வேதக் கருத்துக்களை நிலைநாட்டக் கூட, ஆச்சார்யர்களுக்கு தமிழ் வேதாந்தம் தான் உதவி செய்தது!

அதனால் தான் ஆனானப்பட்ட சம்ஸ்கிருத சிகாமணியான வேதாந்த தேசிகப் பெருமானே...

செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே
என்று பாடினார்.
அது வரிக்கு வரி உண்மை! தெளிவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வரையறுத்த ஆச்சார்ய சாஸனமும் கூட!

குமரன் (Kumaran) said...

// இதற்கு காரணம் உண்டு!

இறைவனின் மேல் மாறாத காதலால் நாயன்மார்கள் தங்கள் பதிகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சமயத்தில் நடைமுறைப்படுத்த, ஆச்சார்ய பரம்பரை என்று இதில் உருவாகவில்லை!

//
நீங்க சொல்ற மாதிரி சைவ சிந்தாந்தத்தில நடந்திருக்கலாம் இரவி. தெளிவா எனக்குத் தெரியாது. வைணவத்துல ஆழ்வார்கள் அருளிச்செயல்களை தத்துவத்தோடு இணைச்சதும் தத்துவத்தை அருளிச்செயல்களின் அடிப்படையில் அமைச்சதும் மிக நன்றாக நடந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட முயற்சி சைவத்தில் நடக்கவில்லையா? ஏன் இல்லை? தேவை ஏற்படவில்லையா? ஏன் தேவை ஏற்படவில்லை? போன்றவை கேள்விகளாகவே உள்ளன - இன்னும் படித்துப் பார்த்தால் / மற்றவர் சொல்லிக் கேட்டால் புரியலாம்.

குமரன் (Kumaran) said...

சுப்புரத்தினம் ஐயா.

தங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலை ஒரு தனி இடுகையாகவே இட வேண்டும் என்று எண்ணுகிறேன். கால தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் எழுதுகிறேன்.

நாராயண சூக்தம் சொல்லும் கருத்துகள் தமிழக வைணவம் என்று நான் சொல்லும் ச்ரிவைணவத்திற்கும்/விசிஷ்டாத்வைதத்திற்கும்/உபய வேதாந்தத்திற்கும் புறம்பானதல்ல; அவற்றையும் உள்ளடக்கியதே தமிழக வைணவம். அப்படி ஆழ்வார்கள் அருளிச்செயல்களையும் இந்த சூக்தங்களையும் உபநிடதங்களையும் பகுதிகளாகக் கொண்ட வடமொழி வேதங்களையும் அடிப்படையாகக் கொள்வதாலேயே தமிழக வைணவத்திற்கு உபயவேதாந்தம் என்று பெயர். இன்னும் விவரமாக இரவிசங்கர் சொல்லியிருக்கிறார். அதற்கும் மேலே சொல்ல விரும்புவதைத் தனி இடுகையாக எழுதுகிறேன்.

குறும்பன் said...

ஆசிரியர் என்பதையே தட்டச்சுப்பிழையாக ஆசாரியர் என எழுதினிர்கள் என்று நினைத்தேன். ஆசாரியர் என்பதற்கு குரு என்ற பொருள் உள்ளது தெரியாது. எனக்கு ஆசாரி யார் என தெரியும் :-))

R.DEVARAJAN said...

மகிழ்ச்சி குமரன்.
தெரிந்த தத்துவங்களாயினும் அவை புத்திளம் பொலிவோடு, அப்போதைக்கப்போது ஆராவமுதமாக
இனிக்கின்றன.
’ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம்
அஹம் ப்ரபத்யே’ என்பது சரியான வடிவம்.

தேவ்

குமரன் (Kumaran) said...

அம்மையைப் பற்றிப் பேசுவது என்றவுடன் இன்னும் நிறைய ஆதாரங்களுடன் வந்துவிட்டீர்களே மௌலி; சக்தி உபாசகர் என்பதை காட்டிவிட்டீர்கள். மிக்க நன்றி. :-)

நீங்கள் சொன்னவை எல்லாம் சரி தான். இப்படி ஆயிரம் எடுத்துக்காட்டுகள் தமிழக வைணவ ஆசாரியர்களின் அருளுரைகளிலிருந்து எடுத்துத் தரலாம் என்று நினைக்கிறேன். தாயாரும் பெருமாளும் சேர்ந்த சேர்த்தியே பரத்வம் என்று மீண்டும் மீண்டும் ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அன்னையிடம் சரணாகதியும் செய்திருக்கிறார்கள். யமுனைத்துறைவர் (ஆளவந்தார்), எம்பெருமானார், வேதாந்த தேசிகன், அழகிய மணவாள மாமுனிகள் என்று எல்லா வைணவ ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களிலும் இதனைக் காணலாம்.

இவர்களுடைய அருளுரைகளை இங்கே காட்டாமல் இவர்கள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் & வேத உபநிடத இதிகாசங்களில் வரும் வாக்கியங்களை மட்டுமே இந்தக் கட்டுரையில் சொன்னேன்; இவர்களுடைய அருளிச்செயல்களை ஆதாரமாக தமிழக வைணவ மரபினர் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்; மற்ற மரபினர் (சம்ப்ரதாயத்தினர்) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் முதல் மூன்று நூற்களையும் (பிரஸ்தான திரயம் - உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை) இதிகாசங்களையும் விஷ்ணு புராணம் முதலிய பதினெட்டு புராணங்களையும் தானே ஆதாரமாகக் காட்ட வேண்டும்?! எம்பெருமானாரும் பிரம்ம சூத்திர விளக்கவுரையில் (பாஷ்யத்தில்) அப்படித் தானே செய்தார்.

சரணாகதி கத்யத்தை அடியேன் படித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொன்ன இருவரிகள் புரிகின்றன. சதுஸ்லோகீ படித்திருக்கலாம்; ஆனால் நினைவில்லை. தேடிப் படிக்கிறேன். சதுஸ்லோகீக்கு தேசிகன் செய்திருக்கும் விளக்கவுரையைப் படித்ததில்லை. அதனால் நீங்கள் தந்திருக்கும் சுலோகத்திற்குப் பொருள் புரியவில்லை. என்ன பொருள் என்று சொல்லுங்கள் மௌலி.

குமரன் (Kumaran) said...

அப்படித் தான் நினைத்தேன் குறும்பன். ஆசிரியர் என்றும் சொல்லியிருக்கலாம்; அதே பொருள் தான். குரு என்பதும் ஆசிரியர் என்பதும் ஏதோ ஒன்றுக்கொன்று மொழிபெயர்ப்புச் சொற்கள் போல் இருக்கின்றன; குரு என்றால் இருள்/குற்றம் இல்லாதவர்/நீக்குபவர் என்று பொருள். ஆசிரியர் என்றால் ஆசு+இரியர் குற்றம் நீக்குபவர்/இல்லாதவர் என்று பொருள்.

குமரன் (Kumaran) said...

மேல் விளக்கங்களுக்கு மிக்க நன்றி இரவிசங்கர். மிகப் பொருத்தமான விளக்கங்கள்.

sury siva said...

//குரு என்றால் இருள்/குற்றம் இல்லாதவர்/நீக்குபவர் என்று பொருள். //


गु श्ब्द्: अन्धकारक्:
रु श्ब्द: तन्निरोदक:

subburathinam

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி தேவ் ஐயா. துவய மந்திரத்தைச் சரியான வடிவில் இப்போது எழுதியிருக்கிறேன். சொன்னதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சுப்புரத்தினம் ஐயா. கு சப்த: அந்தகாரக: (கு என்றால் இருள்); ரு சப்த: தந் நிரோதக: (ரு என்றால் அதனை நீக்குதல்). இந்த அடிப்படையில் தான் பொருளைச் சொன்னேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பதிவு,பதிவுக்கப்புறம் பின்னூட்டங்க்கள் எல்லாமே அருமை. படிக்கக் கொடுத்ததற்கு வன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா.

Kavinaya said...

தெ/பு/ரியாத விஷயத்துலல்லாம் மூக்கை நுழைக்க வேணாம்னு அம்மா சொல்றா :) அதனால உள்ளேன் ஐயா மட்டும்...

குமரன் (Kumaran) said...

உங்களுக்கு நல்லா தெரிஞ்சது புரிஞ்சது தான் அக்கா. :-)