Wednesday, May 06, 2009

ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்!

தமிழ் மாதங்களில் ஓரெழுத்து ஒருமொழிப் பெயராய் அமைந்த ஒரே மாதம் "தை".

இதன் பெருமை பல மடங்காகும்.

எல்லாவற்றையும் இணைப்பது என்ற நுட்பத்தில் எல்லா நலங்களையும் வளங்களையும் ஒருசேரக் கூட்டும் மாதமானதால் அதன் சிறப்பு கருதி "தை" எனத் தனித்து கூறப்பட்டது.

நாட்டியம் ஆடும் நிலையில் ஓர் ஒழுங்கான தாளப்பிரிவிற்குத் "தை" என்று பெயர். இதனால் வாழ்வியல் முறையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஓர் ஒழுங்கைக் கற்பிக்கும் மாதமாகத் "தை" உள்ளது எனலாம். ஏனைய மாதங்களுக்கும் பெயர்களுக்கும் இல்லாத இந்நுட்பம் "தை" மாதத்திற்கு மட்டுமே அமைந்திருப்பதால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஆன்றோர் இம்மாதத்திற்கான சிறப்பைப் பழமொழியாகக் கூறிக் கொண்டாடினர் போலும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை உலகில் நிகழும் இயற்கை மாறுதல் நிகழ்வைச் சூரியனைக் கொண்டே நம் முன்னோர் உணர்ந்ததால் வான மண்டலத்தில் சூரியன் நிலநடுக் கோட்டுக்குத் தெற்கிலிருந்து வடக்கு போகும் இத் "தை" மாதத் தொடக்கத்தை உத்தராயணம் என்றனர். வடக்கிருந்து சூரியன் தெற்கே பயணமாவதைத் தட்சிணாயணம் என்றனர்.

இந்த வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து வேளாண்மைத் தொழிலைச் செய்யத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் அறுவடை கண்ட பூரிப்பால் தைதை எனக் குதித்தாடிய மகிழ்வைப் புலப்படுத்த வேண்டி அதைத் தைப் பொங்கலாகக் கொண்டாடினர் எனலாம்.
புதுவரவான நெல்லைக் கண்டதும் எல்லாம் புதுமையாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பமான தொடர்ச்சியில் புதுப்பானை, புதுக்கரும்பு, புதுமஞ்சள், புத்தாடை போன்ற பொலிவுகள் பொங்கலைத் தோரணங்கட்டி வரவேற்றன. இயற்கையின் உதவியால் இவையெல்லாம் கிடைத்தன என்ற நன்றிப் பெருக்கோடு புத்தரிசிப் பொங்கலிட்டு அதை இயற்கைக்குப் படைத்துத் தானும் சுற்றமும் சூழ இருந்து உண்டு களித்தனர் மக்கள்.

இப்புதுப் பொங்கலுக்குப் பயன்படும் பொருள்கள் யாவும்

மருதம்
முல்லை
நெய்தல்
குறிஞ்சி

நிலங்களின் பங்களிப்பாகும்.

எல்லாம் கூடினால்தான் சுவை கூடும் என்ற ஒற்றுமை உண்மையின் விளக்கமாகவே, ஆக்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைக்கும் வழிபாட்டில் பகற்பொழுதாயினும் அறியாமை இருளைப் போக்கும் விதமாகவும் விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இதுமுதலாக எல்லாம் மங்கலகரமாகவே நடக்கவேண்டும் என்பதை உணர்த்தவே மஞ்சள் கொத்து வழிபாட்டில் சேர்க்கப்படுகிறது.

பொங்கல் பற்றி ஆண்டாள் நாச்சியார் "பாற்சோறு மூட நெய் பெய்து" என்றும், முழங்கை வழிவாரக் கூடியிருந்து உண்டு மகிழ்வதாகத் திருப்பாவையில் குறிப்பிடுகிறார். தனிமை எப்போதும் சுகம் தராது; கூட்டுறவுதான் எல்லா சுகமும் தரும் என்பதால் அந்த எளிய உண்மையையே "கூடியிருந்து" என்ற சொற்களால் ஆண்டாள் கூறியுள்ளார். ஆக தைப்பொங்கலைப் பெண்கள் கூடியிருந்து கொண்டாடினர் என்பது பெறப்படுகிறது.

இவ்வாறு கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு வணக்கத்தோடு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உறவுத் தொடர்ச்சியும் இருந்ததாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தால் ஓரளவு உணரமுடிகிறது. இதில் கூறப்படும் வாழ்த்து, அரசனை முன்னிலைப் படுத்தும் வாழ்த்தாகத் தொடங்கிப் பொங்கலுக்குரிய பொருத்தமான சிந்தனையின் வழி சமூகத்தை வாழ்த்தும் வாழ்த்தாக அமைகிறது. நூலின் தொடக்கமாகிய மருதத்திணைப் பாடலை ஓரம்போகியார் என்பவர் பாடியுள்ளார். அகப்பொருள் நிலையில் பெண்கள் பாடுவதாக முதல் பத்துப் பாடல்களும் உள்ளன.

வாழி ஆதன்! வாழி அவினி! என்பதாகவே பத்துப் பாடல்களும் தொடங்குகின்றன. முடிவுடை வேந்தர் மூவேந்தர். மூவரில் சேரமன்னன் ஒருவன் அவினி. அவனது குடிப்பெயர் ஆதன். குடிப்பெயரும் இயற்பெயரும் சேர்ந்த நிலையில் மன்னனை வாழத்திய பிறகு அவனது அரசும், அவனது ஆளுகைக்கு உட்பட்டவையும் வாழ்த்தப்படுகின்றன. இவ்வாழ்த்து யாவும் பெண்களால் பாடப்படுபவை என்பது சிந்திக்கத்தக்கது. நோன்பிருந்து தைந்நீராடி, தக்க கணவரையடைந்து இல்லறத்தை அமைத்துக் கொண்ட தலைமைக்குரிய பெண்கள் தம் அனுபவத்தால் வாழ்த்தும் தகுதிபெற்றவர்கள் என்பதால் ஓரம்போகியார் பெண்கள் வாழ்த்துவதாகப் பாடியது பெண்மையைப் போற்றியதற்கான அடையாளம் எனலாம்.

நல்ல ஆட்சியாளரது ஆளுகைக்குக் கீழேதான் மக்கள் விழாக்கள் கொண்டாடி மகிழ்வோடும் அமைதியோடும் வாழ முடியும் என உணர்ந்த பெண்கள் "வாழி அவினி! வாழி ஆதன்" என முதலில் அரசனை வாழ்த்தினர். பின்னர் வாழ்த்தப்படுபவை யாவும் முன்பின்னாக அமைந்தாலும் அவற்றை ஒருமுகப்படுத்திக் காணும் போதுதான் ஒட்டுமொத்த வீட்டையும் நாட்டையும் ஒழுங்குபடுத்தி அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பத்துப்பாடல்களுக்குள் கிடக்கும் வாழ்த்துகள் வரிசைப் படுத்தும்போது பொங்கல் சிந்தனையின் ஏற்றத்தை உணரலாம்.

அரசுமுறை செய்க(8) என்ற வாழ்த்து, ஒரு நாட்டிற்கான நல்ல தலைமைதான் வாழ்த்து பெறமுடியும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த அரசு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவது கடமையானாலும் அமைதியான வாழ்வைத் தருவதே அதன் முதற்கடமை என்பதை நினைவூட்டும் விதமாக "வேந்து பகை தணிக" (6) என வாழ்த்தப்பட்டது. வேந்தனுக்குப் போரால் வரும் வெற்றிப் புகழைவிட போர் தவிர்த்ததால் அதாவது பகை உணர்ச்சி இல்லாமையால் வரும் சமாதானப் புகழே நிலையானது என்பதால் அவ்வாறு வாழ்த்தப்பட்டது.

அரசனுக்குப் பகை உணர்ச்சி நீங்குவதால் பகைவர்கள் இல்லாமையால் பகைவர்களால் வரும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொல்லைகள் நீக்கும் வகையில் மக்கள் அமைதியாக வாழமுடியும். பகைவர்கள் வாழமுடியாமல் போவதால் அவர்கள் பொலிவிழந்து போவதையும் பெண்கள் "பகைவர் புல் ஆர்க" (4) என்று வாழ்த்துகின்றனர்.
இத்தகு நல்ல அரசால் நாட்டில் களவு போன்ற தீமைகள் நடவா என்ற எதிர்பார்ப்பில் "களவு இல்லாகுக" (8) என்றும் "தீது இல்லாகுக" (9) என்றும், "அல்லது கெடுக" (7) என்றும் பெண்கள் வாழ்த்தினர். ஆக அரசு எவ்வழி அவ்வழி குடிகள் என்றபடி நல்லாட்சியின் கீழ் வாழும் மக்கள் நம்பிக்கையோடு வாழும்போதுதான் நன்மைகளும் அறங்களும் ஓங்கும் என்பதால் "நன்று பெரிது சிறக்க" (9) என்றதோடு "அறம் நனி சிறக்க" (7) என்றும் வாழ்த்தப்பட்டது.

அறங்களும் நன்மைகளும் நாட்டில் ஓங்க வேண்டுமானால் சுற்றுப்புறச் சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக "மாரி வாய்க்க" (10) என மழைபெய்தால்தான் வேளாண் தொழிலும் ஏனையவும் சிறக்கும் என்பதன் காரணத்தால் "விளைகவயலே" (2) என்றும் "நெல் பல பொலிக" (1) என்றும் வாழ்த்தப்பட்டது. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டால் நாட்டில் பசி, பட்டினி இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவே பசி இல்லாகுக (5) எனப்பட்டது.

இவ்வாறாக உழவால், உணவால், அறிவால், செல்வத்தால் நிரம்பிய நாடானாலும் நல்ல ஊட்டச்சத்தால் சுகாதாரக் கேடின்றி வாழமுடியும் என்பதைக் கூறவே "பால்பல ஊறுக, பகடு பல சிறக்க" (3) என்றதோடு "பிணிசேண் நீங்குக" (5) என்றும் வாழ்த்தப்பட்டது. இப்படி எல்லா நன்மைக்கும் அரசனே காரணம் என்பதால் அவனது வாழ்நாள் நீடிப்பதன் மூலம் குடிகள் நல்லாட்சியைப் பெறமுடியும் என்பதால் நிறைவாக அரசன் "யாண்டு பல நந்துக" (6) என அவனது வாழ்நாளை நீட்டிக்க வாழ்த்தினர் பெண்கள்.

பெண்கள், நல்லாட்சி செய்யும் அரசனையும் அவனது வாழ்நாளையும் ஆட்சியையும் வாழ்த்துவதன் மூலம் நாடும் வீடும் அமைதியுறும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ்த்திய ஐங்குறுநூற்றின் வாழ்த்துத் தொடர்கள் யாவும் தைப்பொங்கல் சிந்தனையை எதிரொலிப்பனவாகவே உள்ளன எனலாம்.

தமிழாகரர் தெ.முருகசாமி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: திரு. கண்ணன் நடராஜன் (மின் தமிழ்)

***

'ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்' என்ற தலைப்பில் வந்த இக்கட்டுரையை ஒளவை. நடராஜன் ஐயாவுடைய திருமகனார் கண்ணன் ஐயா அவர்கள் மின் தமிழில் பொங்கலை ஒட்டி இட்டிருந்தார். இக்கட்டுரையின் முதல் பகுதியில் 'தை' மாதத்தைப் பற்றிய சுவையான கருத்துகளும் அடுத்த பகுதியில் ஐங்குறுநூற்றில் இருக்கும் வாழ்த்துப் பாடல்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் தனித்தனியாகச் சுவையாக இருக்கின்றன. ஆனால் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் பொங்கலைப் பற்றித் தான் கூறுகின்றனவா? அன்றி அவைப் பொதுவாகப் பாடப்பெற்ற வாழ்த்துப்பாடல்களா? இந்த ஐயம் இப்போதும் இருக்கிறது. இப்பாடல்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் இந்த ஐயம் தீரலாம். இன்னும் நேரம் அமையவில்லை.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன குமரன்? வைகாசி பொறந்தாச்சு-ன்னு சொல்ல நாள் நெருங்குது...நீங்க தை பொறந்தச்சி-ன்னு ப்ளாஷ்பேக் ஓட்டறீங்க? மாமா அத்தை தை வரிசை ஏதாச்சும் கொண்டாந்து இருக்காங்களா? :)

//பொங்கல் பற்றி ஆண்டாள் நாச்சியார் "பாற்சோறு மூட நெய் பெய்து" என்றும்//

"தையொரு திங்களும் தரை விளக்கி" - நாச்சியார் திருமொழியே "தை"யில் தான் தொடங்குகின்றது!

குமரன் (Kumaran) said...

எப்பவோ எடுத்து வைச்சதை எடுத்துப் போட இப்பத் தான் நேரம் கிடைச்சது இரவி. அதனால தான் சித்திரையில தையைப் பத்தின இடுகை. :-)

தையொரு திங்கள் தரைவிளக்கின்னும் பாற்சோறு மூட நெய் பெய்துன்னும் நாச்சியார் பாடியிருக்காங்க தான். ஆனா அந்த ரெண்டும் எந்த வகையில தைப்பொங்கலைப் பத்தி பேசுதுன்னு தான் எனக்குப் புரியலை. :-)