Saturday, March 24, 2007

தனித்துவமானவன்...உங்களைப் போலவே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு


என்னங்க திருக்குறள் சொல்லித் தொடங்கறேனேன்னு பாக்கறீங்களா? இந்த மாதிரி திருக்குறளுக்கும் மத்த இலக்கியங்களுக்கும் பொருள் சொல்லி சொல்லித் தானே ஒரு இமேஜ் (??!!) இந்த வலைப்பதிவு மன்றத்துல எனக்கு (அடியேனுக்கு?!! - ஆமாம் எழுதுறப்ப மட்டும் பணிவு வந்துடும்) வந்திருக்கு. அதுக்கு வேட்டு வைக்கணும்ன்னே ரெண்டு மருத்துவர்கள் பேசி வைத்துக் கொண்டு சதி செய்கிறார்களோ என்ற ஐயம் இருந்தது. ஏன்னா மருத்துவர்கள் கொஞ்சம் மனோதத்துவமும் படிச்சிருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இவங்க ரெண்டு பேரும் வலைப்பதிவுகளைத் தாண்டியும் நம்மளைப் படிச்சிட்டாங்களோன்னு தோணிச்சு. நல்ல வேளையா சந்தோஷ் தம்பியும் நம்மளை விநோதமான ஆளுன்னு தெரிஞ்சி வச்சிக்கிட்ட மாதிரி கூப்பிட்டாரு. அப்பாடா. ஊரு உலகம் எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு நம்மளைப்பத்தின்னு ஒரு ஆறுதல்!






அன்புடையார் எலும்பையும் மற்றவர்களுக்குக் கொடுப்பார்களாம். அது போல தங்களை உரித்து தங்கள் எலும்பையும் எல்லாருக்கும் காட்டுகிறார்கள் நம் மக்கள். வலைப்பதிவுகள் எல்லாம் எலும்புக்கூடுகளாய் தொங்குவதைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. பயந்தது போல் என் தோலையும் உரிக்க மூவர் சதி செய்துவிட்டார்கள். அவர்களைத் திட்டிக் கொண்டே நீங்கள் இதனைப் படித்துவிடுங்கள். அன்பு உள்ளவர்களை எப்படி திட்டுறதுன்னா கேக்கறீங்க? நான் திட்டுவேனுங்க. ஏன்னா நான் Weird Fellow!!!

இதுவரை எழுதுன எந்த இடுகைக்கும் வீட்டுல ஐடியா கேட்டதில்லை. இந்த இடுகைக்குக் கேக்க வச்சிட்டாய்ங்க. நானும் வழிஞ்சுக்கிட்டே கேட்டேனே. ஆகா இது தான் சான்ஸுன்னு அவங்களும் ரெண்டு மூணு சொன்னாங்க. அவங்க சொன்னதை மொதோ சொல்லிடறேன்.





1. கோவிலுக்குப் போனா எல்லாரும் என்ன செய்வாங்க? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேந்து நின்னு சாமி கும்பிடுவாங்க தானே. தங்கமணி சொல்றாங்க நான் கோவிலுக்குப் போனா அவங்க இருக்கிறதையே மறந்துடறேனாம்.

ஒரு தடவை அவங்களோட சாமி கும்பிட்டு இந்தப் பக்கம் வந்ததும் அவங்களையும் கோவிலுக்கு எங்களோட வந்த மத்தவங்களையும் உக்கார வச்சுட்டு இன்னொரு தடவை போயி சாமி கும்பிட்டுட்டு வருவேன். திருப்பதியில மட்டும் அதை செய்ய முடியறதில்லை. அதனால சாமி பக்கத்துல போறப்போ காணாமப் போயிடுவேன். எல்லாரும் தீர்த்தம் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க. நான் சாமி பாத்துட்டு மெதுவா வருவேன். மொதோ தடவை அவங்க குடும்பம், எங்க குடும்பம் எல்லாரும் சேர்ந்து போயிருந்தப்ப நான் வெளிய வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. தங்கமணி அலட்டிக்காம நின்னாங்களாம். அவங்க அம்மா அப்பா தான் மாப்பிள்ளை கூட்டத்துல தொலைஞ்சிட்டாருன்னு பதறிப் போயிட்டாங்களாம். நான் வெளியே வந்த பிறகு வழிஞ்சேன்.

2. பணியிடத்துல என்னை வந்து பாத்தா எல்லாரோடயும் நல்லா பேசுவேன்; பழகுவேன். ஆனா ஏதாவது வார இறுதி கூடலுக்குப் (பார்ட்டி) போனா பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு சின்னப் பசங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். பெரியவங்களோட பேசறதுக்கு என்ன தான் உங்களுக்குப் பயமோ; தயக்கமோன்னு வீட்டுல கேப்பாங்க. கூச்ச சுபாவம்ன்னு இல்லை. ஆனால் நிறைய பேரோட பழகுறதில்லை. நண்பர்களும் அவர்களா மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசியோ விசாரித்தால் தான் பதில் சொல்வேன். நானாக விசாரிப்பதில்லை. அதனால் நண்பர்கள் அதிகமாக இல்லை. வலைப்பதிவு நண்பர்கள் கூட அவர்களாக என் தொலைபேசி எண்களைப் பெற்று அழைத்துப் பேசியவர்கள் தான்; வருடக் கணக்கில் வலைப்பதிவுகளில் தெரிந்திருந்தாலும் பேசியதில்லை. கூச்சம் என்றில்லை; வேலை பாக்குற இடத்துல கூச்சப்படலையே. யாரைப்பத்தியும் உங்களுக்குக் கவலையில்லை என்பார்கள் வீட்டில் - அதுவும் இல்லை. பின்ன? ஏன்னு தெரியலைங்க. அம்புட்டுத் தான்.



3. முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு வேற சொன்னாங்க. பொண்ணுகிட்ட சாப்பிடறப்ப ஒன்னும் படிக்கக்கூடாது; எழுதக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இந்தப் பக்கம் நான் படிச்சுக்கிட்டே சாப்புடுவேன். மழையில நனையக்கூடாதுன்னு மொதொ நாள் சொல்லிட்டு மறு நாள் வா மழையில நனையலாம்ன்னு பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போவேன். கறி சாப்புட்டுக்கிட்டே சக்தி விகடன் படிப்பேன். இப்படி நெறைய சொல்லலாம். எது எது எதிர்மறைன்னு மக்கள் நினைக்கிறாங்களோ அதெல்லாம் ஒரே நேரத்துல செய்யறேன் (நல்ல வேளையா இன்னும் பாத்ரூமுல போய் சாப்புடலை - விட்டா அதையும் செய்வீங்கன்றாங்க இங்க).

4. பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல வயசானவங்க யாரைப் பாத்தாலும் எங்க வீட்டம்மாவுக்கு கடுப்பாகும் - ஐயோ ரெண்டு பேரும் சேர்ந்து காலுல விழலாம்ன்னு சொல்வானேன்னு. அதே நேரத்துல வயசுல எவ்வளவு பெரியவரா இருந்தாலும் எதாவது பிடிக்கலைன்னா சண்டை போடுவேன். +2 படிக்கும் போது அம்மாவைப் பெத்த பாட்டிக்கிட்ட சண்டை (ஒரு ரெண்டு மணி நேரம் போட்டோம் - எனக்குச் சளைக்காம அவங்களும் கத்துனாங்க) போட்டது இன்னும் நல்லா நினைவிருக்கு. 5 - 7 மணி வரை சண்டை போட்டுட்டு 7.30 மணிக்கு அவங்க சாப்பாடு போட உக்காந்து சாப்பிட்டேன். இன்னும் எனக்கு இந்தக் கேள்வி இருக்கு - அவங்க weirdஆ நான் weirdஆ?

5. பத்தாவது படிக்கிறப்ப அம்மா இறந்து போனாங்க. இந்த பகவத் கீதை எல்லாம் படிச்சு ரொம்ப கெட்டுப் போயிருந்தேன் அப்ப. ஒரு சொட்டுக் கண்ணீர் விடலை. அழுதவங்களைத் தேத்திக்கிட்டு இருந்தேன். காரியத்துக்கு மத்தவங்க எல்லாம் தயாராகிகிட்டு இருக்கிறப்ப தம்பியும் நானும் ஒருத்தனை ஒருத்தன் சீண்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். அதுக்கப்புறம் பல முறை கண்ணீர் விட்டிருக்கேன். இப்ப குழந்தைங்க பிறக்குறப்ப குழந்தைங்க செய்றதைப் பாத்துட்டு மாமியார் என் மனைவிகிட்ட நீ இப்படி தான் செஞ்சன்னு சொல்றப்ப நான் என்ன செஞ்சேன்னு சொல்ல அம்மா இல்லையேன்னு கண்ணீர் வரும். மாமியாருக்குத் தெரியாம முகத்தை திருப்பிக்கிட்டு வந்துடுவேன்.

சரி. ஈகோ டிரிப்புக்கு அஞ்சு விஷயம் போதும். அடுத்து அஞ்சு பேரைக் கூப்புடணுமே. இதோ அந்தப் பட்டியல்.

1. யோகன் ஐயா
2. மலைநாடான்
3. வெற்றி
4. இரவிசங்கர் கண்ணபிரான்
5. இளவஞ்சி (தலைப்புக்கு நன்றி தீவட்டித் தடியா)






40 comments:

VSK said...

அடிக்கறது காப்பி;

இதுல உங்களைப் போலவேன்னு செட்டு சேர்த்துக்க வேண்டியது!

இதெல்லாம் வியர்டுல சேர்த்தி இல்லேன்னா வேறே எது?

வீட்டுல சரியாத்தான் சொல்லியிருக்காஹ!!

இன்று போல் என்றும் வாழ்க!

:))

துளசி கோபால் said...

வலைப்பதிவுலேயும் பெரியவுங்க இருக்கோமுன்னு
நினைவு படுத்துகின்றேன்:-))))

கோவி.கண்ணன் said...

//தங்கமணி சொல்றாங்க நான் கோவிலுக்குப் போனா அவங்க இருக்கிறதையே மறந்துடறேனாம்.
//

மெய்மறந்து நின்றிருக்கிறீர்கள்.

தலைப்பே சொல்லுது... படித்ததும் தெரிந்தது... பெருவாரியாக எல்லோருக்கும் இருக்கும் இயல்பான இயல்புகள். ஊரோடு ஒட்டி வாழுறிங்க.
:)

குமரன் (Kumaran) said...

இன்று போல் என்றும் வியர்டாக வாழ்க என்று வாழ்த்தியதற்கு நன்றி எஸ்.கே. எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம். :-)

குமரன் (Kumaran) said...

ஆகா. வரிசையா வலையுலகப் பெரியவர்களா வர்றீங்களே. துளசியக்கா. எப்படி மறப்பேன் வலைப்பதிவு பெரியவர்களை?! எஸ்.கே. ஐயா, அப்புறம் அக்கா நீங்க, அப்புறம் கண்ணன் அண்ணான்னு பெரியவங்களா வந்து வாழ்த்துறீங்களே! :)

குமரன் (Kumaran) said...

என்ன கண்ணன் அண்ணா. இப்படி சொல்லிட்டீங்க? எல்லோருக்கும் இருக்கும் இயல்பான இயல்புகளா? இல்லைன்னு சொல்றாங்களே எங்க வீட்டுல. பாருங்க உங்க நண்பர் எஸ்.கே. கூட இவை வியர்டுன்னு சொல்றார்.

Santhosh said...

ஒரு மாதிரி matured weired ஆக தான் இருக்கிங்க குமரன். :))

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said... பாருங்க உங்க நண்பர் எஸ்.கே. கூட இவை வியர்டுன்னு சொல்றார். //

ம்.. வி.எஸ்.கே சித்தாந்தமெல்லாம் நான் கணக்குல எடுத்துகிறது இல்லை !
:)))

குமரன் (Kumaran) said...

ஆமாம் சந்தோஷ். சில விஷயங்கள்ல மெசூர்ட். பல விஷயங்கள்ல வியர்ட் & அமெச்சூர். :-)

சிவமுருகன் said...

அண்ணா,

எங்க ஆளையே காணோம் ஒருவேளை பிறந்தநாள் கொண்டாட போயிட்டீங்களோன்னு நினைத்தேன்.

பதிவின் ஆரம்பம், வியார்டு தம்மேல் சொல்லி செய்து பெரியவர்களை அழைப்பது எல்லாம் எப்படி கோர்வையா எழுதுறீங்க?

விரைவில் இப்பதிவிலும், பிற பதிவிலும் நிறைய எழுதுங்க.

தருமி said...

//நான் என்ன செஞ்சேன்னு சொல்ல அம்மா இல்லையேன்னு ...//

டச்சிங் ...

நாமக்கல் சிபி said...

விந்தையான மனிதர்தான் என்பதை நம்புகிறேன்.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

:))

(ம்ம் துளசியக்கா வேற சண்டைக்குக் கூப்பிடுறாங்க போல!)

வெற்றி said...

குமரன்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள [கீழே] தகவல்களைப் பார்க்கும் போது , நீங்கள் ஒரு தனித்துவமானவர் என்பது தெரிகிறது. குறிப்பாகத் தாயாரின் மரணச் சடங்கில் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தது உண்மையிலேயே வியர்டு தான். :))

/* ஆனா ஏதாவது வார இறுதி கூடலுக்குப் (பார்ட்டி) போனா பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு சின்னப் பசங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். */


/* கல்யாணம் ஆன புதுசுல வயசானவங்க யாரைப் பாத்தாலும் எங்க வீட்டம்மாவுக்கு கடுப்பாகும் - ஐயோ ரெண்டு பேரும் சேர்ந்து காலுல விழலாம்ன்னு சொல்வானேன்னு.*/


/* பத்தாவது படிக்கிறப்ப அம்மா இறந்து போனாங்க... ஒரு சொட்டுக் கண்ணீர் விடலை. அழுதவங்களைத் தேத்திக்கிட்டு இருந்தேன். காரியத்துக்கு மத்தவங்க எல்லாம் தயாராகிகிட்டு இருக்கிறப்ப தம்பியும் நானும் ஒருத்தனை ஒருத்தன் சீண்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். */

உண்மையில் இச் சம்பவங்கள் நீங்கள் தனித்துவமானவர் என்பதைக் காட்டுகிறது. :))

பி.கு:- குமரன், அழைப்புக்கு மிக்க நன்றி. தற்சமயம் கொஞ்சம் busy. தயவு செய்து கொஞ்ச நாள் அவகாசம் தாருங்கள். மிக்க நன்றி.

╬அதி. அழகு╬ said...

வக்கீல் நோட்டீசையும் வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கவும்.

விளைவு கடுமையாக இருக்கும்.

"தனித்துவமானவன் ... உங்களைப் போலவே" என்பது தல இளவஞ்சியின் காப்பி ரைட்டு ஸ்லோகன்.

Geetha Sambasivam said...

சின்னவயசிலே, அதுவும் படிக்கும்போது அம்மா இல்லைன்னா அந்தத் துக்கம் ரொம்பவே பெரியது தான். ஆனால் அது கூட உங்களை அப்போப் பாதிக்கலைன்னு சொல்றீங்க. எனக்கு என்னமோ மனசிலே போட்டு மூடி வச்சுட்டு இருந்துட்டீங்கன்னு தோணுது. மற்றபடி நண்பர்கள் வட்டத்தைப் பற்றி நீங்க எழுதி இருக்கிற மாதிரி தான் நானும். அதிகம் தொலைபேசித் தொந்திரவு செய்துடுவோமோன்னு பயந்து ரொம்ப அவசியம்னா மட்டும் தான் பேசுவேன். இன்னும் சொல்லப் போனா உறவினர்கள் கூடவும் இதே கதைதான். இதனாலே எனக்கு நீ என்ன பேசவே மாட்டேங்கறேன்னு கெட்ட பெயர் கூட வந்தாச்சு. ஆனாலும் மாத்திக்க முடியலை.

ramachandranusha(உஷா) said...

குமரன், இரண்டொருவர் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன். அதில் நீங்களும் ஒருவர். ஏமாற்றவில்லை பதிவு :-)
பி.கு யோகன் எழுதிட்டாரா?

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், கூடலில் எழுதுவது குறைந்தாலும் மற்ற பதிவுகளில் எழுதிக் கொண்டு தானே இருக்கிறேன். கோதை தமிழும் கண்ணன் பாட்டும் முருகனருளும் பார்க்கிறீர்களா? அபிராமி அந்தாதியில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். இப்போதைக்கு கோதை தமிழிலும் அபிராமி அந்தாதியிலும் பாடல்கள் குழுப்பதிவுகளிலும் கவனம் செலுத்துகிறேன். அதனால் கூடலில் இடுகைகள் குறைவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

அப்பாடா! நானும்தான் நானும்தான் அப்படின்னு சொல்ல முடியாத ஒரு வியர்டு பதிவு வந்திருச்சுப்பா!! அதுக்கே ஒரு தனி நன்றி. முன்ன எல்லாம் நானும் பையன் கிட்ட புத்தகம் வெச்சுக்கிட்டு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவேன். இப்போ எல்லாம் ரெண்டு வேலையும் செய்யணும் வெறும் புத்தகம் மட்டும் படிக்கக்கூடாதுன்னு ஆகிப் போச்சு. :))

நீங்க கால்கரி அண்ணாவைக் கூப்பிடுவீங்கன்னு சொல்லி வெச்சேன். இப்படி ஏமாத்திட்டீங்களே!! :)

வல்லிசிம்ஹன் said...

யாருக்குமே துக்கம் உடனே பாதிக்காது குமரன்.
நாட்கள் கழித்து தான் உரைக்கும்.
அதுவும் நீங்க சொல்கிற மாதிரி சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது அம்மாவை நினைத்து அழுவது வழக்கமே.
நாங்கள் எல்லோரும் இருக்கோமே உங்களுக்கு.
வாழ்க வியர்டு கூட்டம்.:-0)

குமரன் (Kumaran) said...

உண்மை தருமி ஐயா. தங்கமணி கூட இதைப் பத்தி இந்த இடுகையைப் படிச்சு தான் தெரிஞ்சுக்கிட்டாங்க. அவங்களும் கவனிக்காம எழுந்து வந்திருக்கேன்.

குமரன் (Kumaran) said...

இவ்வளவு சொல்லியும் 'நம்புகிறேன்' தானா சிபி? :-)

rv said...

அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி கும்ஸு!

தெளிவா கிறுக்குத்தனங்களப் பத்தி எழுதிருக்கீங்க.

//அவங்க weirdஆ நான் weirdஆ?//
The One Question???

//தங்கமணி அலட்டிக்காம நின்னாங்களாம்.//
சரி எப்படியாவது இந்த கிறுக்க கோயில்ல தொலச்சிரலாம்னு ப்ளான் பண்ணிகிட்டிருந்திருப்பாங்க... ஜஸ்ட் மிஸ்னு அப்புறம் பீல் ஆகிருப்பாங்க. :)))

//யாரைப்பத்தியும் உங்களுக்குக் கவலையில்லை என்பார்கள் வீட்டில்//

எனக்கு அப்படியே எக்கோல கேட்குது. ஏன்னா நான் அடிக்கடி கேக்குறது இது.

குமரன் (Kumaran) said...

வெற்றி,

நேரம் கிடைக்கும் போது நீங்களும் எந்த வகையில் தனித்துவமானவர் என்பதைப் பற்றி எழுதுங்கள். :-)

குமரன் (Kumaran) said...

அழகு,

நீங்க இப்படி மிரட்டுறீங்க. உங்க தல என்னடான்னா ஆளையே காணோம். சரியான வியர்டுப்பா உங்க தல. :-)

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. அந்த வயசுல வேதாந்தம் பேசிக்கிட்டுத் திரிஞ்சேங்கறது நல்லா நினைவிருக்கு. அதனால மனசுல வச்சு மூடிக்கிட்டேனான்னு தெரியலை.

எனக்கும் இந்தக் கெட்ட பேர் சொந்தக்காரங்க மத்தியில இருக்கு. நல்லதுக்குத் தான் பேசமாட்டேங்கற; கெட்டதுக்காவது தொலைபேசலாம்ல என்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

உஷா. இது தானே வேணாங்கறது. அவ்வளவு நம்பிக்கையா நான் வினோதப் பேர்வழின்னு? :-) எப்படியோ தனிப்பெரும் எழுத்தாளினிக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் என் தனித்துவத்தை (பேக்குத் தனத்தை, வியர்டுத் தனத்தை - எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) காட்டிவிட்டேனே. அது வரை மகிழ்ச்சி. :-)

யோகன் விரைவில் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். எழுதியவுடன் உங்களுக்குச் சொல்லச் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். நல்ல வேளை நான் உங்களை மாதிரி இல்லை. :-) ரொம்ப மகிழ்ச்சி. :-)

கால்கரி அண்ணா ஒரு மகாவியர்டு என்ற நம்பிக்கை இருந்தா நீங்க கூப்பிடுங்க. என்னை ஏன் மாட்டி விடறீங்க? :-)

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா. துக்கம் உடனே தாக்காது என்பது அண்மையில் கற்றுக் கொண்டது. அது உண்மை.

குமரன் (Kumaran) said...

இராம்ஸ், தப்பைத் தப்பில்லாம செய்றது மாதிரி 'தெளிவா' 'கிறுக்கு'த்தனத்தைப் பத்தி எழுதியிருக்கேனா? :-) நல்லா ஆளாத் தான் பிடிச்சீங்க போங்க.

ilavanji said...

ஹிஹி...

எனக்கு இன்னைக்குத்தான் என் தலைப்புக்கே அர்த்தம் புரிஞ்சதுங்க குமரன்! :)))

G.Ragavan said...

குமரன், உங்களையும் இதுல இழுத்தாச்சு. ம்ம்ம்...நல்லாத்தான் இருக்குது உங்க தனித்துவங்கள். வீட்டுல சரியாத்தான் சொல்லியிருப்பாங்க.

உங்ககிட்ட ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சது. இன்னைக்குச் சொல்லீர்ரேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல இருக்குற திருப்புகழ் மண்டபத்தைப் பாக்கும் போதெல்லாம் ஒங்க நெனைவுதான் வரும். அங்கதான வாரியார் கிட்ட நீங்க பரிசு வாங்குனீங்க. :-) பல முறை அந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன். அந்த நினைவு தவிர்க்க முடியாதது.

G.Ragavan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குமரன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

இலவசக்கொத்தனார் said...

குமரன், சொன்ன வாக்கை மறந்துட்டீங்களே. ஒரு வாரம் முன்னாடியே சொல்லறேன்னு சொன்னீங்களே!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்!

குமரன் (Kumaran) said...

இளவஞ்சி,

இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே. அதுவரைக்கும் மகிழ்ச்சி. :-)

நாம எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய ஆனா தனித்துவமிக்க மட்டைகள். ;-)

குமரன் (Kumaran) said...

வீட்டுல சரியாத் தான் சொல்லியிருக்காங்க இராகவன். :-)

'எங்க' மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் என்னை நினைப்பதற்கு நன்றி இராகவன். வாரியார் சுவாமிகளின் ஆசிகளை என் பிறந்த நாளன்று நினைவு கூர்ந்ததற்கு நன்றி. பெரியவர்கள் ஆசிர்வாதமே ஒருவருக்கு மேனிலையைத் தருகின்றது என்று இராமன் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டது நினைவிற்கு வருகிறது.

குமரன் (Kumaran) said...

வாக்கு கொடுத்தேனா? நினைவே இல்லையே கொத்ஸ். எப்படியோ இராகவன் புண்ணியத்தால் உங்கள் வாழ்த்தும் கிடைத்ததே. மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் said...

போன வருடம் உங்கள் பதிவிலிருந்து

//க�மரன� (Kumaran) said...

அப்படியே ஆகட்டும் கொத்ஸ். ஒரு வாரம் முன்னாடியே தகவல் சொல்றேன். தவறாம ஒவ்வொரு பிறந்த நாளும் கவிதை அனுப்பிடுங்க. :-)
//

ஞாபகப் படுத்த மட்டுமே!!

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். நேத்து சொன்னதே எனக்கு மறந்து போகுது. இராமனைப் பற்றி பேசுவதால் நானும் இராமனைப் போல் சொன்ன சொல் தவறாதவன் என்று நினைத்துவிட்டீர்களா? :-) படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில் என்று கேள்விபட்டதில்லையா? :-)

வடுவூர் குமார் said...

நான் வர கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது.அதுகுள்ளே மக்களே பிரிச்சு ஆராந்துவிட்டார்கள்.
எங்கள் வியர்ட் தனத்தை உங்கள் பெயரில் காட்டிவிட்டீர்கள்.
நன்றாக இருந்தது.

குமரன் (Kumaran) said...

நன்றி குமார். :-)