Wednesday, November 01, 2006

கற்பக மரம் = தமிழ்மணம்

அடர்ந்த காடு. ஒருவன் அந்தக் காட்டு வழியாக நடந்து போகிறான். நடுப்பகல் நேரம் என்பதால் நடந்து நடந்து களைத்துப் போய்விட்டான். சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். அந்த மரம் கேட்பதையெல்லாம் கொடுக்கும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.
'ஆகா. ரொம்பத் தாகமாக இருக்கிறதே. குளிர்ந்த நீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். எண்ணிய மறுவிநாடி ஒரு குடுவையில் குளிர்ந்த நீர் அவன் அருகில் இருந்தது. வியப்புடன் அதைப் பார்த்து குடுவையை எடுத்து குளிர்ந்த நீரை அருந்தி மகிழ்ந்தான்.

தாகம் ஆறியவுடன் 'பசிக்கிறதே. அறுசுவை உணவு இருந்தால் இந்நேரம் மிக நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். உடனே அறுசுவை உணவுகள் அங்கே தோன்றின. உண்டு மகிழ்ந்தான்.

'அப்பாடா. வயிறு நிறைய உண்டு ஆயிற்று. ஜிலு ஜிலு எனக் காற்று வீசுகிறதே. இந்த நேரத்தில் ஒரு கட்டில் இங்கே இருந்தால் உறங்கி ஓய்வெடுக்கலாமே' என்று எண்ணினான். கட்டிலும் வந்தது. கட்டிலில் ஏறிப் படுத்தான்.

'நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றனவே. யாராவது கால் பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்' என்று எண்ணினான். ஒரு அழகிய பெண்ணும் வந்து கால்களை பிடித்துவிடத் தொடங்கினாள்.

சுகமாக உறங்கத் தொடங்கியவனுக்குத் திடீரென ஒரு ஐயம் எழுந்தது. 'நாம் படுத்திருக்கும் நேரம் புலி வந்து நம்மை அடித்துப் போட்டுவிட்டால்?'. ஒரு புலியும் வந்தது. அவனைக் கொன்றும் போட்டது.

தமிழ்மணமும் அப்படித்தான் இருக்கிறது. இங்கே சுகங்களும் கிடைக்கின்றன. மற்றவையும் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கும் இங்கே. சுகங்களை மட்டும் பெற்று வாழவேண்டும்.

35 comments:

குமரன் (Kumaran) said...

கதை பழைய கதை தான். கால் பிடித்து விட அழகிய பெண் தான் வேண்டுமா என்று பெண்ணியலாளர்கள் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். :-) ஒரு வேலைக்காரன் வந்திருக்கலாம். பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் பார்வை என்றும் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். ஏற்கனவே இருக்கும் கதையைத் தான் சொன்னேன். :-)

குமரன் (Kumaran) said...

இந்தக் கற்பக மரத்தை நம் மனம், வீடு, சுற்றுப்புறம், ஊர், உலகம் என்று எந்த நிலையிலும் வைத்துப் பார்க்கலாம்.

நாமக்கல் சிபி said...

எண்ணம்போல வாழ்வு.
என்பதைத்தானே சொல்ல வருகிறீர்கள் குமரன்?

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து!

குமரன் (Kumaran) said...

அப்பாடா. கலாய்த்தல் இல்லாமல் ஒரு பின்னூட்டம் சிபியிடமிருந்து இந்த வாரத்தில். :-)

ஆவி அண்ணாச்சி said...

:))

நல்ல கதை. ஆனால் பழைய கதை!

கொஞ்சம் புதுசாக்கிப் பார்ப்போம்.

நெடிய ஹைவே. ஒருவன் அந்த சாலையில் வெகு தூரம் கார் ஓட்டிக்கொண்டு வந்தான். வெகுதூரம் ஓட்டியதால் அப்படியே களைத்துப் போய்விட்டான். ஒரு ரெஸ்டாரெண்டில் ஓரமாக காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றான்.

வேண்டியதெல்லாம் கிடைக்கும் ரெஸ்டாரெண்ட் அது(கிரெடிட் கார்டு கையில் இருந்தால்).

ரொம்ப தாகமாக இருக்கிறதே என்று ஒரு பீர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க சர்வர் உடனே கொண்டு வந்து வைத்தான். தாகம் நீங்கியவுடன் ஒரு பிட்ஸா இருந்தால் பசியாறலாம் என்று கேட்க உடனே ஒரு லார்ஜ் சைஸ் பிட்ஸா வருகிறது.

உண்டு முடித்தவுடன் உண்ட களைப்பு அவனை உறக்கத்தில் ஆழ்த்துகிறது. உடனே ஒரு ஏ.ஸி அறை இருந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்க உடனே அவன் அந்த ரெஸ்டாரெண்டின் மேல் மாடியில் இருந்த ஏ.ஸி அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

நல்ல அறை. சுகமான படுக்கை. மசாJ செய்துவிட யாரேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க உடனே இரண்டு அழகிய இளம்பெண்கள் அவனுக்கு மஸாஜ் செய்து விடுகின்றனர்.

அப்போது மஸாஜ் எல்லாம் செய்கிறீர்களே போலீஸ் வராதா என்று இவன் கேட்க, உடனே சர்வர் காவல் துறைக்கு ஃபோன் செய்து இங்கு ஒரு ஆள் இரண்டு இளம்பெண்களை அழைத்து மஸாஜ் செய்து கொள்கிறான் என்று புகார் கொடுக்க.....

நாமக்கல் சிபி said...

//அப்பாடா. கலாய்த்தல் இல்லாமல் ஒரு பின்னூட்டம் சிபியிடமிருந்து இந்த வாரத்தில்.//

இரண்டே நாட்களில் அப்பாடாவா!

கலாய்ப்பதற்கு உங்கள் முதல் பின்னூட்டத்திலேயே பாயிண்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

சும்மா விடுவோமா என்ன?

சிறில் அலெக்ஸ் said...

குமரன் கதையை ஆவி அண்ணாச்சி அழகாய் உல்டா செய்துட்டார்..

ஆவின்னா கொக்கா?

Anonymous said...

கேட்டதைக்கொடுப்பது மரத்தின் கடமை, நீங்கள் புலிக்கு பதிலாய் சூடாய் வெண்பொங்கலும் " சாம்பாரும் " கேட்டு இருந்தீர்களானால் அதுவும் கிடைத்திருக்கும். உங்கள் எண்ணம் அதுவாயிருக்கும் போது அதுதானே கிடைக்கும்.

வாய்ப்பிருந்தால் இன்னொரு முறை நம்ம "தினமணி டாக்கீஸ்" பக்கத்தில் கிடைக்கும் சாம்பாருடன் ஒரு பொங்கல் செட் கேட்டுப்பாருங்களேன்.

:))))))


( உள்குத்துக்கு உத்திரவாதமளிக்கிறேன் :)))))) )

Anonymous said...

செந்திலின் பார்வை வித்தியாசனது,
உள்குத்துக்கு தகுந்த உள்குத்துதான். ஒருவன் பார்க்கும் பார்வையில்தான் அதன் பொருள் இருக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக்குமரா!
தமிழ் மணம் சிலசமயம் பலாப்பழம் போல்; சுளை தேடி முள்;தடல்;பிசின் தாண்ட வேண்டியுள்ளது.
யோகன் பாரிஸ்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கதை முன்னாடி எப்பவோ படித்தது. இந்தக் கதை எப்படி தமிழ் மணத்திற்கு அப்படியே ஒத்து வருகிறது என்பதை கண்டு ஆச்சர்யமடைகிறேன். அப்புறம் இன்னும் யோசித்தால் வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் இது ஒத்து வருகிறது. :-))).

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிபி. எண்ணம் போல் வாழ்வு. தகுந்த குறளையும் எடுத்துச் சொன்னீர்கள். :-)

குமரன் (Kumaran) said...

ஆவி அண்ணாச்சி. புதிய கதையும் ரொம்ப நல்லாயிருக்கு. :-) வருகைக்கு நன்றி. ஆனா இது உங்க முதல் வருகை மாதிரி தெரியலையே? :-)

ஒருவர் இந்த வார கலாய்த்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான் என்று சொல்கிறார்.
அவர் இந்தப் பதிவில் என்னை கலாய்க்கவில்லை.
ஆனால் நீங்கள் வந்து கலாய்க்கிறீர்கள். :-)

குமரன் (Kumaran) said...

சிபி. நான் முதல் பின்னூட்டத்தில் கொடுத்திக்கும் பாயிண்டை வைத்துத் தான் ஆவி அண்ணாச்சி வந்து கலாய்த்திருக்கிறாரா? :-)

குமரன் (Kumaran) said...

ஆகா. ஆவி வந்தா தான் சிறிலும் வர்றார். என்ன காரணம்? :-)

குமரன் (Kumaran) said...

வரவணையான் செந்தில். வருகைக்கு ரொம்ப நன்றிங்க. ஊர்க்காரரா இருந்தும் இம்புட்டு நாள் நம்ம பதிவுக்கு வரவே இல்லீங்களே?! ஒரு வேளை நான் உங்க பதிவை எல்லாம் படிக்கிற மாதிரி நீங்களும் என் பதிவுகளைப் படிக்கிறீங்களா? உங்க உ.கு. எல்லாம் புரியுதுங்க. தினமணி டாக்கீஸ் பக்கம் பொங்கல் சாம்பார் சாப்பிட்டதே இல்லீங்க. எங்க வீடு தெற்குவாசல் பக்கம். எனக்கு பொங்கல் சாம்பாரை விட புளியோதரை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்குமா? எங்க வீடு கூட ஒரு கற்பக மரம் தாங்க. நான் கேக்கறப்ப எல்லாம் பொங்கல் சாம்பாரும் புளியோதரையும் கிடைக்குது. :-)

குமரன் (Kumaran) said...

உண்மை தாங்க பெயர் சொல்லாத நண்பரே. ஒருவர் பார்க்கும் பார்வையில் தான் எல்லா பொருளும். இந்த வலைப்பூவுல இருக்குற 'சொல்வது ஒன்று புரிவது ஒன்று' பதிவைப் பார்த்தீங்களா? அதை யாராவது பாக்காம இருந்தா அதைக் கொஞ்சம் பாருங்க. நீங்க சொல்றதைத் தான் அங்கே சொல்லியிருக்கேன்.

குமரன் (Kumaran) said...

ஆகா. இன்னுமொரு பொருத்தமான உவமை. உண்மை தான் யோகன் ஐயா. பலாப்பழம் போல் தான். சுளை தேடி பலவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது.

Anonymous said...

தெற்குவாசலும் தினமணி டாக்கிஸும் என்ன 5 000மைலா? நானெல்லாம் கோச்சடையில இருந்து சௌராஸ்டிரா ஸ்கூலுக்கு சைக்கிள்ல வருவேன்.

ரெகுலர படிக்கிறேன் பிரதர்.

:))

குமரன் (Kumaran) said...

ஆமாம் செந்தில் குமரன். சிந்திச்சா இந்தக் கதை வாழ்க்கையில் எல்லா இடங்களுக்கும் பொருந்துவதைப் பார்க்கலாம். :-)

குமரன் (Kumaran) said...

உண்மை தான் செந்தில். தெற்குவாசலுக்கும் தினமணி டாக்கிசுக்கும் ரொம்ப தூரம் இல்லை தான். ஆனா நம்ம ஊரைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே. ரொம்ப தூரம் எல்லாம் போக மாட்டோம். எந்த ஏரியாவோ அந்த ஏரியாவிலேயே சாப்பிட்டுகிறது. எனக்கு கோச்சடை எந்தப் பக்கம்ன்னு தெரியும். அம்புட்டுத் தான். வந்ததில்லை. :-)

நாகை சிவா said...

நல்ல கதை அதை எடுத்து சரியாக த.ம. பொருத்தி உள்ளீர்கள்.

:-)

rv said...

யோவ் கும்ஸு,
நீரும் என்ன நம்ம ஸ்டைல்ல பதிவு கயமைத்தனம் பண்ண ஆரமிச்சாச்சா?

போன நவம்பர்ல போட்ட பதிவ இப்ப திரும்ப ஓப்பன் பண்ணி மதுரையோட ஜியாகரபி டிஸ்கஷன் நடக்குதா?

அதுவும் எங்க 'கொத்ஸ் மெகா வைரஸ' ஒவர்டேக் பண்ணிட்டு ஓப்பனிங் பேஜ்லியே வச்சு வெளாட்டு காட்டுறீரு?? நல்லா இருக்கு கதை..

rv said...

அய்யோ.. நானே என் மானத்த இப்படி வாங்கிக்கறேனே..

நவம்பர் மாசம் வந்ததே மறந்துபோச்சு. அதான் பதிவையே படிக்காம தலைப்ப மட்டும் பாத்துட்டு போன வருஷப்பதிவுன்னு ஆர்வப்பட்டு அள்ளி விட்டுட்டேன். கண்டுக்காதீங்க கும்ஸு. :((((

enRenRum-anbudan.BALA said...

Good comparison, I guess :)))

குமரன் (Kumaran) said...

நன்றி நாகை கலைப்புலி சிவா. :-)

சிவமுருகன் said...

அண்ணா,
சரியாக சொன்னீர்கள்.

பூமி தொறந்து கெடக்கு அட மனுச பய மனசு பூட்டி கெடக்கு என்ற எழுச்சி வாசகங்கள் எனோ உதித்தது. எல்லாம் கொட்டி கிடக்கிறது அள்ளிகொள்ளுங்கள் தேவையானதை.

கேட்டதை தரும் கல்பதரு இப்பூமி, சிறப்பான எண்ணகளுடன் செய்ய கல்ப-காலம் வாழலாம்.

G.Ragavan said...

:-) என்ன குமரன் யாரையோ தாக்குறாப்புல இருக்கு.

ஜிரா வந்துட்டு தமிழ்ச் செய்யுள் சொல்லலைன்னா எப்படி? "தீதும் நன்றும் பிறர் தர வாரா" நீங்க சொன்ன கதையோட கரு இதுதான? இந்தச் சங்கப் பாட்டுக்கு விளக்கம் கேக்காதீங்க. விளக்கம் வேணும்னா நாமக்கலார் என்று அழைக்கப்படும் புறாக்கறி..சச்ச..புறாவுக்குக் கறி தந்த...இல்ல இல்ல...புறாவைக் காப்பாற்ற கறி தந்த சிபியார் எனும் கேளிரைக் கேளீர்.

(ஆனாலும் இப்படி உள்குத்தோட பதிவு போட என்ன துணிச்சல் உங்களுக்கு!)

கோவி.கண்ணன் [GK] said...

குமரன் !

தமிழ்மனம் கற்பக மரம் என்கிறீர்கள் !
மனக் கசப்பும் அங்கு கிடைக்கிறதா ?

:)

குமரன் (Kumaran) said...

இராமநாதன். தவளை தன் வாயால் கெடும்ங்கறது எடுத்துக்காட்டா ஆயிட்டீங்களே?! :-)

பதிவு கயமைத்தனம் செய்வது உங்கள் ஸ்டைல் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. :-) மதுரையோட ஜியாகரபி டிஸ்கஷன் எல்லாப்பதிவுகள்லயும் நடக்கும் இராமநாதன். ஒரு வருடப் பழசு, புதுசு என்ற வேறுபாடெல்லாம் இல்லை. :-)

கொத்ஸ் மெகா வைரஸை வெல்ல முடியுமா என்ன? பல வைரஸ் உண்டே தமிழ்மணத்தில். அதில் நானும் ஒரு வைரஸ். அம்புட்டுத் தான். :-)

கடைசியில் 'நல்லா இருக்கு கதை' என்று ஒரே வார்த்தையில் சொன்னதற்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

பதிவையே படிக்காம தலைப்பை மட்டும் படிச்சுட்டு எப்படி கதை நல்லா இருக்குன்னு சொன்னீங்க? எப்படி மதுரையோட ஜியாக்ரபி டிஸ்கஷன் நடக்குதுன்னு சொன்னீங்க? முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் எங்கள் 'தெரியல' 'பொதுப்பாட்டு' இராமநாதன் வாழ்க வாழ்க! :-)

குமரன் (Kumaran) said...

அதென்ன ஐ கெஸ்ன்னு சேத்துவிட்டுக்கீங்க சீனியர் சார் (எ.அ.பாலா)? :-) வருகைக்கும் கெஸ்சுக்கும் நன்றிகள். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன். ஒரே சொல் எத்தனை எத்தனை எண்ணங்களைத் தருகிறது என்பதை உங்கள் பின்னூட்டம் கண்டால் புரிந்து கொள்ளலாம். கொட்டியிருக்கிறீர்கள் உங்கள் எண்ணங்களை. :-)

குமரன் (Kumaran) said...

இராகவன். இந்தக் கதையை ரெண்டு மாசத்துக்கு முன்னாலேயே எழுதி சேமிச்சு வச்சாச்சு. இப்பத் தான் பதிய முடிஞ்சது. அதுவும் எந்த உ.கு.வும் இல்லாம எழுதுனது. ஆனா 'சொல்வது ஒன்று. புரிவது ஒன்று' பதிவுல சொன்ன மாதிரி அவங்கவங்களுக்கு புரிஞ்சதை நான் சொன்னதா நினைச்சுக்கிட்டு எதிர்வினை செய்கிறார்கள். :-)

நான் இந்த வார விண்மீன் நாகை புலையையும் தாக்கவில்லை. வேறு யாரையும் தாக்கவில்லை. :-)

ஆமாம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. சரி. ஆனா எல்லா விதமும் இங்கே உண்டு. அதனால் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்ல வந்தேன்.

சிபியார் என்னை இந்த வார கலாய்த்தலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வாரம் முடிந்துவிட்டதா இல்லையா என்று தெரியவில்லை. எந்த விதமான விளக்கமும் அவர் வந்து தந்தால் நன்றாகத் தான் இருக்கும். :-) மேலே ஆவி அண்ணாச்சி சொன்ன கதையைப்ப் படித்தீர்களா? விளக்கம் வேண்டுமென்றால் சிபி தருவார். :-)

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. மனக்கசப்பு மட்டுமா? இன்னும் எத்தனையோ கொடுக்கும் கற்பக மரம் தமிழ்மணம். இங்கே கிடைக்காதது இல்லை. இல்லவே இல்லை. :-)