Monday, August 01, 2011

Friday, July 29, 2011

பகிர்தல் - 2

பத்து நாளைக்கு முன்னாடி திடீர்ன்னு ஒரு நாள் நம்ம இரவி நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன இடுகைகளை (இடுகை 1) (இடுகை 2) படிச்சுட்டு 'நீங்க இன்னொரு ஜெயமோகன்'னு சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்புனார். 'என்னடா இவரு இந்த மாதிரி கேலி பண்றாரே'ன்னு நெனச்சுக்கிட்டு 'எதுக்கு அப்புடி சொல்றீங்க'ன்னு கேட்டா 'அவரு தான் இப்புடி டெக்னிகல் டெர்ம்ஸ் நெறைய போட்டு எழுதியிருப்பாரு. நீங்களும் அப்படி எழுதியிருக்கீங்க'ங்கறார். 'சரி. நாம எழுதுனதை முக்குனாலும் சரி மொனகுனாலும் சரி புரிஞ்சிக்க முடியாதுங்கறதைத் தான் நாசூக்கா இப்படி சொல்றாரு'ன்னு நெனைச்சுக்கிட்டேன்.

இன்னைக்கி வேணுவனத்துல சுகா எப்பவோ எழுதியிருந்த ஒரு இடுகையைப் படிக்கிறப்ப தான் எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமையும் தெரிஞ்சிச்சு. (அப்பாடா! இரவி கிண்டலா சொன்னதையும் 'இன்னொரு'ன்னு இங்கே ஒரு சொல்லைப் போட்டு பெருமையா ஏத்துகிட்டாச்சு!). அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்! ஹேஹே ஓஹோ லாலலான்னு பாடாத கொறைதான்! (அந்தப் பாட்டுல சைக்கிள்லெயே ஊரைச் சுத்துவாங்க. அதுவும் இப்ப நினைவுக்கு வந்து படுத்துதே!)

இந்த வேனற்காலத்துல தோப்புக்கும் ஏரிக்கரைக்கும் நண்பர்கள் அவங்க குடும்பங்கள்ன்னு போறப்ப எல்லாம் அவங்கவங்க இந்த மிதிவண்டியைக் கொண்டு வர்றாங்க. எனக்கு ஓட்டத் தெரியாதுன்னு ஒவ்வொரு தடவையும் வெக்கத்தோட சொல்ல வேண்டியிருக்கு. அதெப்படிங்க எத்தனை தடவை சொன்னாலும் மறந்து போகுது. அதுல இன்னும் பாவம் என்னான்னா எனக்கு ஓட்டத் தெரியாததால என் முகத்தைப் பாத்துட்டு தங்கமணியும் ஒதுங்கிக்கிறாங்க. பாவம்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பொண்ணு முந்நிலைப் போட்டியில (triathlon) கலந்துக்கிட்டான்னு சொன்னேன்ல. அப்ப எடுத்த படங்களை எல்லாம் எங்க அணியில இருக்குறவங்களுக்கு அனுப்பியிருந்தேன். எங்க துறைத் தலைவர் (VP) அன்னைக்கு காலையில தான் அவரும் முந்நிலைப் போட்டிகள்ல கலந்துக்குவார்ன்னு சொல்லியிருந்தாரு. உடனே ஆகா நம்ம பொண்ணும் கலந்துகிட்டான்னு சொல்லலாமேன்னு படங்களை அனுப்புனேன். படங்களைப் பாத்துட்டு மொதோ ஆளா பதில் மின்னஞ்சல் அனுப்புனார் 'அவங்கப்பாவையும் சீக்கிரம் இந்த மாதிரி போட்டிகள்ல கலந்துக்கச் சொல்லுன்னு உன் பொண்ணுக்கிட்ட சொல்லு'ன்னு எழுதியிருந்தார். அடப்பாவமே. முந்நிலை என்ன ஒரு நிலை போட்டியில கூட அவங்கப்பாவால கலந்துக்க முடியாதுன்னு தெரியாம எழுதுறாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்ன? மிதிவண்டி ஓட்டவும் தெரியாது; நீச்சலும் தெரியாது; ஓட மட்டும் முடியும்; அதுவும் இந்த பெரிய உடம்பை வச்சுக்கிட்டு ஓடுனா கொஞ்ச தூரத்திலேயே இளைப்பு வந்திரும்! நம்மளைப் பத்தி ஒன்னுமே இவருக்குத் தெரியலையேன்னு நெனைச்சுக்கிட்டேன்.

**

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் போரடிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கிறப்ப ஏதாவது படம் பாக்கலாம்ன்னு குறுந்தட்டுகளைப் புரட்டுனா குசேலன் தட்டு சிக்கிச்சு. படத்தைப் போட்டு எழுத்துங்க ஓடறப்ப 'ஐ. சிவாஜி படமா!'ன்னு பொண்ணுக்கு ஒரே சந்தோசம். எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவாஜின்னு தான் சொல்றா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திருவிளையாடல் பாக்குறப்ப 'இது சிவாஜி படம்'ன்னு சொன்னேன்; அவ ரஜினி படம்ன்னு நெனைச்சுக்கிட்டு எங்கே இன்னும் சிவாஜி வரலை சிவாஜி வரலைன்னு கேட்டுக்கிட்டு இருந்தா. பையன் தான் சிவபெருமானா வந்த சிவாஜியை காமிச்சு 'இதோ சிவா'ன்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. 'இது லார்ட் சிவா. ஆனா சிவாஜி இல்லை'ங்கறா பொண்ணு. 'இது தான் சிவா'ங்கறான் பையன். நாங்க சிரிச்சுக்கிட்டே அவங்க சண்டையப் பாத்துக்கிட்டு இருந்தோம்.

குசேலன் படத்தைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சு திருவிளையாடலுக்குப் போயிட்டேன். குசேலன் படம் போட்டவுடனே பையன் 'இது என்ன படம்'ன்னு கேட்டான். ரஜினி படம்ன்னா அவனுக்கு புரியாதுன்னு வேணாம்ன்னு அழுவான்; அதனால 'இது குசேலன் கதை; கிருஷ்ணன் வருவான்'னு சொல்லிட்டேன். அவனும் கடைசி வரைக்கும் பொறுமையா உக்காந்து 'எப்ப பாலகிருஷ்ணன் வருவான்'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தான். பார்பர் பாலுவைக் காமிச்சு 'இவர் தான் பாலகிருஷ்ணன்'ன்னு சொன்னா 'இல்லை. இது பாலகிருஷ்ணன் இல்லை. பாலகிருஷ்ணன் சட்டை போட்டிருக்க மாட்டான்'ன்னு சொல்றான்.

எப்படியோ ரெண்டு பேரையும் அழுத்தி உக்கார வச்சு படம் பார்த்தேன். படம் கொஞ்சம் போர் தான். ரஜினி பள்ளிக்கூட கூட்டத்துல பேசுற காட்சிக்காக உக்காந்து பாத்துக்கிட்டிருந்தேன். அந்தக் காட்சி வந்தப்ப தங்கமணியும் வந்து குழந்தைகளுக்கு அந்தப்பக்கமா உக்காந்துக்கிட்டாங்க. காட்சி முடியற நேரம் ஒருத்தரை ஒருத்தர் திரும்பி பாத்துக்கிட்டா ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்கலை. ஏன்னா ரெண்டு பேரு கண்ணுலயும் தாரை தாரையா தண்ணி! ரஜினி என்ன சொன்னாரு; ஏன் அழறீங்க நீங்க ரெண்டு பேரும்ன்னு பொண்ணு கேட்டு படுத்தி எடுத்துட்டா.

இந்த மாதிரி படத்தைப் பாத்து கண்ணீர் விடறவங்க நெறைய பேரு இருங்காங்கன்னு தான் நினைக்கிறேன். நீங்க எப்படி?

**

கேட்டதில் பிடித்தது:



இந்தப் பாட்டைக் கேக்க பிடிக்கும். பாக்கப் பிடிக்காது. என்னமோ தெரியலை.

Tuesday, July 19, 2011

Monday, July 18, 2011

பகிர்தல் - 1

அலுவலகத்தில் வேலை அதிகம். தற்போது இருக்கும் target.com அமேசான் நிறுவனத்தின் இணைய வழங்கியில் அவர்களது மென்பொருளால் நடந்து கொண்டிருக்கிறது. நான் வேலை செய்யும் டார்கெட் நிறுவனமே சொந்தமாக மின்வணிக மென்பொருளையும் புதிய தளத்தையும் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறது. 2009ல் தொடங்கிய இந்த வேலை இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும். இந்த திட்டப்பணிக் குழுவில் ஒரு உறுப்பினனாக நான் இருப்பதால் நிறைய வேலை. அதிகம் எழுத இயலவில்லை.

சுருக்கமாக சில பகிர்தல்களை இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணுவதால் இதோ முதல் பகிர்தல். இரவிசங்கர் சிரிக்கப் போகிறார். இப்படி எத்தனை தொடர்களைத் தொடங்கிவிட்டு அம்போ என்று விட்டுவிட்டீர்கள். இன்னும் ஒரு தொடர் அந்த பட்டியலில் சேர்கிறதா என்று. :-)

**

வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாக குளிராகவும், டிசம்பர் ஜனவரி மாதங்களில் கடுங்குளிராகவும் இருக்கும் எங்கள் ஊரில் சென்ற ஜூலையிலிருந்து நல்ல வெயில். அதனால் வாராவாரம் வார இறுதிகளில் முடிந்தவரை இங்கிருக்கும் பல இடங்களுக்கு மகிழுலா சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் ஊருக்கு 'ஆயிரம் ஏரிகளின் ஊர்' என்று பெயர். தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் குளம், குட்டை, ஏரிகள் தான். ஏரிக்கரைகளும், நீர்ப்பூங்காகளும் (Water Park) இங்கே நிறைய இருக்கின்றன. அது போக மிஸ்ஸிசிப்பி ஆற்றங்கரையும் உண்டு.

சில நாட்கள் வெயில் மிகவும் அதிகமாகப் போய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் உண்டு. இந்த ஞாயிறு அப்படி அமைந்துவிட்டது. வீட்டிற்குள்ளேயே நிறைய வேலை இருக்கிறதே - நால்வரும் அவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். நால்வரும் என்றா சொன்னேன்?! பெரியவர்கள் வேலை செய்ய சிறியவர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நல்லதிற்குத் தான். எங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற மன நிறைவும் அவர்களுக்குக் கிடைக்கிறது. எங்கள் வேலைகளைச் செய்யமுடியாமல் அவர்கள் தொந்தரவு கொடுப்பதும் குறைகிறது. :-)

**

ஜூன் ஒன்றாம் நாள் நான் அமெரிக்க குடியுரிமையை பெற்றேன். ஜூலை ஆறாம் நாள் என் மனைவி பெற்றார். சென்ற வியாழக்கிழமை அவரது பணியிடத்தில் அவரது குழுவினர் ஆலிக்குழைவினால் (Ice Cream) செய்யப்பட்ட இன்னப்பத்தைக் (cake) கொண்டு வந்து அவருக்கு எதிர்பாரா குறுவிருந்து தந்தனர். எனது குழுவினர் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. புதிய தளம் அமைப்பதில் இரவு பகலாக எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பதால் இதெல்லாம் கொண்டாட யாருக்கும் நேரம் இல்லை. கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது. :-)

**
சனிக்கிழமை மகள் மூன்று நிலை போட்டி (Triathlon) ஒன்றில் கலந்து கொண்டாள். புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு நிறுவனம் வருடந்தோறும் இதனை நடத்துகிறது. அவளது பள்ளித் தோழி ஒருத்தி சிறுவயதில் புற்றுநோயிலிருந்து தேறியவள். தோழியின் பெயரில் ஒரு அணி அமைத்து அவளது பள்ளியிலிருந்து இருபது மாணவ மாணவியர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அங்கே செல்லும் வரை அவளுக்கு கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது என்று நினைக்கிறேன்; ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நோகோமிஸ் ஏரியில் நான்கு நீச்சல் குள நீளத்திற்கு முதலில் நீச்சல்; அதைத் தொடர்ந்து மிதிவண்டியில் மூன்று மைல் ஏரிக்கரைச் சுற்று; அதைத் தொடர்ந்து ஒரு மைல் ஓட்டம். ஜூனில் ஒரே ஒரு முறை பயிற்சி செய்தாள். அப்புறம் பயிற்சியே செய்யவில்லை. ஆனால் எப்படியோ மூன்றையும் நிறைவு செய்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்தாள்.

**

சென்ற வியாழன் குருபூர்ணிமா தினம். இரு வருடங்களுக்கு முன்பு குருபூர்ணிமா நாள் மாலை என் தந்தையார் இயற்கை எய்தினார். திதியின் படி அப்போது பூர்ணிமை முடிந்து பிரதமை வந்துவிட்டது. அதனால் இந்த வருடம் வெள்ளிக்கிழமை தான் சிரார்த்தம் செய்வதற்கான திதி நாள் என்று தம்பி சொல்லியிருந்தார்.

மதுரையில் தம்பி அந்த சடங்குகளை எல்லாம் என் சார்பிலும் முறையாகச் செய்ய, நான் இங்கு கோவிலுக்காவது சென்று வரலாம் என்று வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு விடுப்பு இட்டுவிட்டேன். மனைவியாரும் விடுப்பு எடுத்துக் கொண்டார். குழந்தைகள் இருவரையும் அவர்களின் வேனிற்பள்ளியில் விட்டுவிட்டுப் பின்னர் கோவிலுக்குச் செல்லலாம் என்று திட்டம். அவர்கள் இருவரையும் விடச் சென்ற போது அவர்களது ஆசிரியர் 'இருவர் தலையிலும் பேனும் ஈரும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இங்கே பல சிறுவர்களுக்கு பேன் இருப்பதால் அவர்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னார். சரி பாருங்கள் என்று சொன்ன பின்னர், அவர் இருவர் முடியையும் சோதித்துவிட்டு இருவருக்கும் ஈர் இருக்கிறது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார். எனக்கோ திட்டப்படி நடந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம். அது சினமாக மாறி அந்த ஆசிரியையிடம் 'இவர்களுக்கு பேன் தான் இல்லையே! ஒன்றிரண்டு ஈர்கள் தான் கண்களுக்குப் படுகின்றன. அவற்றையும் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏன் தேவையில்லாமல் இருவரையும் திருப்பி அனுப்புகிறீர்கள்' என்று சண்டை இடத்தொடங்கிவிட்டேன். மகள் ஓடிப்போய் மகிழுந்தில் அமர்ந்திருந்த என் மனைவியை 'அப்பா டீச்சரிடம் சண்டை போடுகிறார்' என்று கூறி அழைத்து வந்துவிட்டார். அவர் வந்து 'ஏன் தேவையில்லாமல் ஆசிரியரிடமெல்லாம் சண்டை போடுகிறீர்கள். நாளெல்லாம் அவர்கள் தானே நம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்' என்று கூறி இழுத்துவந்துவிட்டார்.

சரி எல்லோரும் சேர்ந்தே கோவிலுக்குச் செல்வோம் என்று கிளம்பினால் சரியான மழை. கோவில் வீட்டிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில். நெடுஞ்சாலையில் செல்லும் போது மழையால் முன்னால் செல்லும் உந்தும் தெரிய மாட்டேன் என்கிறது. பின்னிருக்கையில் இருவரும் விளையாட்டுச் சண்டை போடுகிறார்கள். 'சரி இந்த மழையில் இவர்களைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குப் போய் வர இயலாது. காலையில் வீட்டில் வழக்கம் போல் சாமி கும்பிட்டோமே அதுவே போதும்' என்று சொல்லி உந்தை வீட்டிற்கே திருப்பிவிட்டேன்.

அப்பாவிற்கு ஊனுணவு பிடிக்கும். ஆனால் திதி அன்று அவற்றை நாங்களும் உண்ண முடியாது. அவருக்கும் படைக்க முடியாது. அதனால் அவருக்குப் பிடித்த உளுந்து வடை, பருப்பு வடை செய்து படைப்போம் என்று வடைகளைச் சுட்டு அவர் படத்திற்கு முன் வைத்து வணங்கினோம். மழை நேரத்தில் சூடான வடைகள் சுவையாக இருந்தன; அவருக்கும் அப்படியே இருந்திருக்கும்.

வார இறுதியில் இரண்டு நாட்களும் பேன்கொல்லி மருந்தைக் குழந்தைகள் தலையில் தடவி முழுக்காட்டி, செத்த பேன்களையும் ஈருகளையும் வாரி எடுப்பதிலேயே நிறைய நேரம் செலவழித்தார் மனைவியார். பெண் தலையில் கொஞ்சம் ஈர் இருந்தது. பையன் தலையில் சுத்தம். ஒன்று கூட இல்லை. 'நீங்க சண்டை போட்டது சரி தான். இவன் தலையில தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது. இவனையும் திருப்பி அனுப்புனது தப்பு தான்'னு மனைவியார் பலமுறை சொல்லிவிட்டார். தேவையில்லாத இந்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று கடுப்பும் அலுப்பும் அவருக்கு.

இன்று காலை எழுந்தவுடன் பையன் 'எனக்கு தலையில் பேன் இருக்கிறது' என்று சொல்லத் தொடங்கிவிட்டான். இன்னொரு நாள் விடுப்பு கிடைக்கும் என்று நினைக்கிறானோ என்னவோ. வழக்கமாக நான் தான் இருவரையும் அவர்கள் பள்ளியில் விடுவேன். 'இன்றைக்கும் நீங்கள் போனால் சண்டை போடுவீர்கள். நான் போய் விடுகிறேன்' என்று மனைவி குழந்தைகளை அழைத்துப் போயிருக்கிறார். திருப்பி அனுப்பாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி அனுப்பினால் வேறு பள்ளி பார்க்க வேண்டியது தான். என்ன வேனிலுக்காகக் கட்டிய சிறப்புக் கட்டணத்தைத் திருப்பித் தரமாட்டார்கள்.

**

ஒரு கொட்டகையில் ஐம்பது மாடுகளும் இரு மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். இரு மேய்ப்பர்களும் கடிகாரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மொத்தம் எத்தனை கால்கள் எத்தனை கைகள் இருக்கின்றன.

இந்தக் கேள்வியை மகளிடம் இன்று காலை கேட்டிருக்கிறேன். நான் வீட்டை விட்டு கிளம்பும் வரை யோசித்துக் கொண்டிருந்தாள். மாலையில் பதிலைச் சொல் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

பையன் சட்டென்று 'One thousand legs'ன்னு சொல்லிவிட்டான். :-)

**

"பாபா. Did you get a call?" என்று கேட்டாள் மகள் நேற்று.

"No. Did you grill it or fry it?" என்றேன் நான். அவளுக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்ததா?

Thursday, June 23, 2011

குலமகளும் அறம் தாங்கு மக்களும்...



ஒரு கல்லை எறிந்தால் மரத்தில் இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறப்பதைப் போல், ஏதோ ஒன்றினால் சிறு சலனம் ஏற்பட்ட போது எல்லா திசைகளிலும் பரந்து செல்லும் குளத்து நீர் வட்டங்களைப் போல், பாரதியார் இயற்றிய இந்த விநாயகர் நான்மணிமாலைப் பாடலைப் படித்த போதும் பல எண்ணங்கள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன.

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்கு
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என அண்டம் எல்லாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவமே

எளிமையான பாடல் தான்.

துறந்தார் திறமை பெரிது!

அதனினும் பெரிது உண்டு!

அது குறைந்தாரைக் காத்து, எளியார்க்கு உணவு ஈந்து, குலமகளும் அறம் தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என, அண்டம் எல்லாம் சிறந்து ஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவம்!

தவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது துறவு தான். துறவிகள் தான் தவம் செய்வார்கள் என்பதே நம் மனத்தில் பதிந்திருக்கும் ஒரு ஆழமான புரிதல்!

அந்தக் காலத்தில் முனிவர்கள் தங்கள் மனைவியருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டே தவங்களையும் செய்தார்கள் என்று மரபு வழி நூல்களில் படிக்கும் போது, துறவிகள் மட்டுமே தவம் செய்வார்கள் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு சிறிது குழப்பம் அடைபவர்களும் உண்டு; உள்ளூர நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்பவர்களும் உண்டு.

முனிவர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர்கள் பலர் துறவியராகவும் இருந்திருக்கிறார்கள்; குருகுலம் அமைத்துக் கொண்டு தேடிவந்த மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அரசுக்கு அறவுரை சொல்லும் குலகுருக்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இப்படி பலவகைப்பட்டத் தொண்டுகள் செய்தவர்களை எல்லாம் முனிவர்கள் என்று சொல்வதைப் பார்க்கும் போது துறவிகள் என்பவர் முனிவர்களில் ஒரு பகுதியினர் ஒரு வகையினர் என்று மட்டுமே சொல்லலாமே ஒழிய முனிவர்கள் எல்லோரும் துறவிகள் இல்லை என்ற புரிதல் கிடைக்கிறது.

அந்தப் புரிதல் கிடைத்தால் குழப்பமும் வராது; நமுட்டுச் சிரிப்பும் வராது.

இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறவிகளாக வெளிவேடம் போட்டுவிட்டு மாட்டிக் கொள்ளும் போது ‘முனிவர்கள் தத்தமது மனைவியருடன் வாழ்ந்தனர்’ என்று கூறி தப்பிக்க முயல்பவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை; பேசத் தொடங்கினால் முடியாததொன்று அது!

தவம் செய்யும் முனிவர்களின் பெருமையை நம் மரபான நூல்கள் பரக்கப் பேசும். அவர்களால் ஆகாததொன்றும் இல்லை என்ற அளவிற்கு அப்பெருமைகள் பேசப்பட்டிருக்கும். அதெல்லாம் அங்கே விரிவாக ஏற்கனவே பேசப்பட்டுவிட்டதால் அவற்றையெல்லாம் இந்தப் பாடலில் விரிக்காமல் பாடலின் அரை அடியில் அதனை ‘துறந்தார் பெருமை பெரிது’ என்று சொல்லி அனைத்தையும் குறிப்பாக உணர்த்திவிட்டார் பாரதியார்.

துறந்தார் செய்யும் தவத்தை விட பெருமை வாய்ந்த தவம் வேறு ஒன்றுண்டு! இல்லறமல்லது நல்லறமன்று என்ற மூத்தோர் சொல் வழி வாழும் மனிதர் செய்யும் தவமே அது!

அப்படியென்றால் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள நான் செய்வது தவமா? அது துறந்தார் பெருமையை விட பெரியதா? நினைத்தால் உள்ளூர ஏளனச் சிரிப்பு தான் தோன்றுகிறது!

துறந்தார் பெருமையை விட சிறந்தது எது என்பதை மிகவும் விரிவாகச் சொல்கிறார் இந்தப் பாடலில்.

குறைந்தாரைக் காக்க வேண்டும்!

எந்த வகையில் குறைந்தவர்கள் என்று சொல்லாமல் எந்த வகையிலோ குறையை உடையவர்களை எல்லாம் காக்க வேண்டும். உடலில் குறை இருக்கலாம்; மனதில் குறை இருக்கலாம்; அறிவில் குறை இருக்கலாம்; எந்த வகையிலும் குறை இருக்கலாம்.

'இறைவன் தான் எக்குறையும் அற்றோன்! இங்கு எவருக்கு குறையில்லை? யார் முற்றும் கற்றோன்?' என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளும் இங்கே பொருந்தும்!

ஆக, குறை உள்ளவர் நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுமே! ஒவ்வொன்றையுமே இயன்ற அளவில் காப்பதே பெருந்தவமாகும்! அது துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

எளியார்க்கு உணவு ஈய வேண்டும்!

உற்றார் உறவினர் நண்பர்கள் என்று வீட்டிற்கு அழைத்து உணவு இடும் போது அது நமக்கு பெரிதாகத் தோன்றுவதில்லை. வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் ஒரு செயலாக அது இருக்கிறது.

நமக்கு உறவாகவோ நண்பராகவோ இல்லாமல் இருக்கும் ஒருவர் ஏழ்மையிலோ துன்பத்திலோ இருந்தால் அது நமக்கு உறைப்பதில்லை!

நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் ஏழ்மையில் வாடினாலும் அது நம் கண்களுக்குத் தென்படுவதில்லை!

அதனால் தான் எளியார்க்கு உணவு ஈவதைத் தவம் என்று தனித்துச் சொன்னார்கள் போலும். அந்தத் தவம் துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

மனைவி குலமகளாக பண்பாடு காக்க வேண்டும்!

பண்பாடு என்றால் என்ன என்று விளக்கிச் சொல்லத் தேவையில்லை; அனைவருக்கும் அதில் ஒரு புரிதல் உண்டு.

விளக்கிச் சொல்வதும் எளிதான செயல் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்துச் செல்லும் சங்கிலித் தொடராக அது நீளும்.

பண்பாடு காத்தல் என்பது இங்கே ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்பு நெறி காப்பது மட்டும் இல்லை.

பெற்றோரிடமும் மூத்தோர்களிடமும் கற்றதை எல்லாம் வாழ்க்கையில் நடத்திக் கொண்டு தன் பிள்ளைகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுப்பதே பண்பாடு என்றும் கற்பு வாழ்க்கை என்றும் முன்னோர் வகுத்தனர்.

கற்றது என்ற சொல்லின் அடிப்படையில் அமையும் சொல் கற்பு. அந்தக் கற்பெனும் பண்பாட்டைக் காப்பவள் குலமகள்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!

பெண்டிரை இப்பாடல் குறித்தால் இங்கே குலமகள் என்னாது குலமகன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்!

மக்கள் அறம் தாங்குபவர்களாக இருக்க வேண்டும்!

அறம் என்பதும் விளக்கத் தொடங்கினால் நீளும்.

முன்னோர் வகுத்ததில் அறிவிற்கு முரணில்லாதவற்றை நடத்துவதும், அப்படி நடத்துவதுல் எந்த விதத் தடை வந்தாலும் தயங்காமல் ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும், தன்னலத்திற்கு எதிராக இருந்தாலும் பொது நலம் பேணினால் அதனை ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும் என்று பலவகையாக அறம் தாங்குதல் என்பதை விளக்கிச் செல்லலாம்.

தம் மக்கள் அப்படி அறந்தாங்குபவர்களாக இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும்! அது தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

குலமகளான மனைவியும் அறம் தாங்கும் மக்களும் நீடுழி வாழ்ந்து பண்பாட்டையும் அறனையும் காக்க வேண்டும் என்று விரும்பித் தொழ வேண்டும்!

யாரைத் தொழுவது?

தனக்கொரு நாதன் நாயகன் இல்லாமல் தானே அனைத்திற்கும் நாயகனாய் இருக்கும் நாதனைத் தொழவேண்டும்!

அண்டம் எல்லாம் சிறந்தாளும் அந்த நாதன் அந்த நாயகன் விநாயகன்!

அப்படித் தொழுதல் தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

தொண்டு செய்ய வேண்டும்!

இறைவனைத் தொழுபவர் மட்டுமே தொண்டர் இல்லை! என்பும் உரியர் பிறர்க்கு என்ற வகையில் அன்புடையார் எல்லோரும் தொண்டரே! தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிது! அப்படியெனில் அவர் செய்யும் தவம் துறந்தவர் பெருமையை விடப் பெரியது தானே?!

இப்பாட்டைப் படிக்கும் போதும் பின்னர் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றிய எண்ணங்கள் என்ன?

Wednesday, June 22, 2011

It Gets Better: Target Team Members



இதில் வரும் சிலர் நாள்தோறும் நான் சந்திப்பவர்கள்; கூட வேலை செய்பவர்கள். அவர்கள் கதையை அறிந்ததில் மகிழ்ந்தேன். அதனைப் பகிர்ந்தும் கொள்கிறேன்.

Friday, June 10, 2011

A radical experiment in empathy