Saturday, April 13, 2013

பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் - 1




ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவானின் வாகனமாகிய கருடாழ்வாரின் அம்சமாய் ச்ரிவில்லிபுத்தூரில் அவதரித்து பெருமாளுக்கே மாமனார் ஆன விஷ்ணு சித்தராம் பெரியாழ்வாரின் திருவடிகளை சரணடைகிறேன்.

***

தென்பாண்டி நாடாம் மல்லி வள நாட்டில் ச்ரிவில்லிபுத்தூர் என்னும் அழகிய ஊரில் முகுந்த பட்டர் பத்மவல்லி என்ற தெய்வ பக்தி மிகுந்த ஓர் தம்பதி இருந்தனர். அவர்களுக்கு ஓரு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு 'விஷ்ணுவை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பவன்' என்னும் பொருள் படும் 'விஷ்ணு சித்தன்' என்ற பெயரை வைத்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த அந்த சிறுவன் பெயருக்கேற்ப இறையுணர்வில் சிறந்து விளங்கினான். இளைஞனாய் வளர்ந்த பிறகு வேறு எந்த வேலையிலும் மனதை ஈடுபடுத்தாமல் இறைதொண்டிலேயே ஈடுபாடு கொண்டு ஒரு நந்தவனம் அமைத்து இறைவனுக்கு நித்தமும் பூமாலை தொடுத்துக்கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டார். பூமாலையோடு அவ்வப்போது பாமாலையும் இறைவனுக்கு சூடி மகிழ்ந்தார்.

***


மாலையும் இரவும் சந்திந்கும் நேரம். மதுரையில் வல்லபதேவ பாண்டியன் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பொருள்களை வாங்க கடைதெருவில் குழுமி இருக்கின்றனர். 'பாண்டிய நாடு முத்துடைத்து' என்னும் முதுமொழிக்கேற்ப முத்து வாணிகம் மிக நன்றாய் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அங்காடிகளில் நிறைந்து இருக்கும் கூட்டத்தை பார்த்தால் தமிழர் மட்டுமின்றி வடநாட்டார், சீனர், யவனர் எல்லோரும் இருப்பதை பார்க்கலாம். யாரும் எந்த பயமுமின்றி தாம் கொண்டு வந்ததை விற்பதும், மற்ற பொருட்களை வாங்குவதுமாய் இருக்கின்றனர்.

அன்று இரவு வல்லப பாண்டியன் வழக்கம் போல் ராத்திரி உலாவிற்காக மாறுவேடத்தில் நகரை வலம் வந்து கொண்டிருந்தான். மன்னனின் மனம் சஞ்சலத்தில் இருந்தது. கல்விச் செல்வம், பொருட் செல்வம், மக்கட் செல்வம், வீரம் எதிலும் எந்த குறையும் இல்லை. பாண்டிய நாட்டு மக்களுக்கும் எந்த குறையும் இல்லை. ஆனாலும் எதோ ஒன்று இல்லாதது போல் மனம் குழப்பம் கொண்டு அலைகிறது.

இரவு நேரம் என்பதால் மக்கள் எல்லோரும் உறங்க ஆரம்பித்துவிட்டனர். மன்னன் நடந்து வந்த வீதியில் ஒரு திண்ணையில் ஒரு பெரியவர் உறங்குவதற்கு முன் இறைவனை வழிபட்டுக்கொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்தால் நன்கு படித்தவர் போல் இருக்கிறார். பாண்டிய மன்னன் அவர் அருகில் சென்று அவர் தன் வழிபாட்டை முடிக்கும் வரை காத்திருந்தான்.

அந்த பெரியவர் தன் வழிபாட்டை முடித்துவிட்டு பாண்டியனை நிமிர்ந்து பார்த்தார். நிற்பது பாண்டியன் என்பது மாறுவேடத்தை தாண்டியும் அவருக்கு தெரிந்து விட்டது. உடனே எழுந்து மன்னனுக்கு உரிய மரியாதையை கொடுத்தார்.

வல்லப தேவன் அந்த பெரியவரை வணங்கி 'ஸ்வாமி. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்' என்று கேட்டவுடன், அந்த பெரியவர் மன்னனைப் பார்த்து 'மன்னா. நான் காசி தேசத்திலிருந்து தீர்த்த யாத்திரையாக இங்கு வந்துள்ளேன்' என்றார். சிறிது நேரம் இப்படி உரையாடிய பின் பாண்டியன் அந்த பெரியவரைப் பார்த்து 'ஐயா. தாங்கள் மெத்தப் படித்தவராய் தெரிகிறது. எனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்லுங்கள்' என்று கேட்டான். 'மன்னா. இரவுக்கு வேண்டியதை பகலிலும், மழை காலத்துக்கு வேண்டியதை கோடையிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே நான் உனக்கு தரும் அறிவுரை' என்று அந்த பெரியவர் சொன்னபிறகு மன்னன் அவரை வணங்கி அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.


அரண்மனை வந்து சேர்ந்த பின்பும் வல்லப தேவன் மனம் குழப்பமுற்றுத் தான் இருந்தது. பெரியவர் சொன்ன கருத்து உண்மைதான். எல்லா செல்வமும் பாண்டியனுக்கு இருந்தது. இரவுக்கும், கார்காலத்திற்கும், முதுமைக்கும் வேண்டியதெல்லாம் இருக்கிறது. ஆனால், மறுமைக்கு என்ன வேண்டும் என்பதும் அதை எப்படி இம்மையிலேயே சேர்ப்பது என்பதும் கேள்வியாக இருந்தது.

முதல் மந்திரியை அழைத்துக் கேட்டால் அவருக்கு தெரிந்திருக்கும் என்று தோன்றியது. முதல் மந்திரி செல்வ நம்பி நல்ல தெய்வ பக்தி மிக்கவர். பல கலைகள் கற்றுத் தேர்ந்தவர். மூத்த வயதினர். நூல் அறிவு மட்டும் இன்றி அனுபவ அறிவும் மிக்கவர். அவரிடம் கேட்டால் நிச்சயமாய் பதில் தெரியும் போல் தோன்றியது. அது இரவு நேரம் என்பதையும் பாராமல் முதல் மந்திரியை அழைத்து வரக் கட்டளையிட்டான்.

செல்வ நம்பி வந்து சேர்ந்தவுடன் தன் சந்தேகத்தைக் சொல்லி விளக்கம் கேட்டான். அவர் சொன்ன விளக்கம் எதுவும் பாண்டியனுக்குத் திருப்தி அளிப்பதாய் இல்லை. அதைப் பார்த்த முதல் மந்திரி, சபையில் ஒரு பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களையும் அழைத்து இந்த கேள்வியைக் கேட்கலாம் என்று கருத்து சொன்னார். அதன் படி பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களும் அழைக்கப் பட்டனர்.

வந்தவர்கள் ஒவ்வொருவரும் பல விதமாக மன்னனின் கேள்விக்குப் பதில் சொன்னார்கள். ஆனால் மன்னன் மனம் திருப்தி அடைய வில்லை. வந்தவர்கள் மனம் எல்லாம் மன்னன் அமைத்துள்ள பொற்கிழியை அடைவதிலேயே இருந்ததால் அவர்கள் தாம் கற்ற நூல்களில் இருந்து என்னவிதமாய் எடுத்து சொன்னாலும் அது சரியான பதிலாய் அமையவில்லை. பொருளாசை மெய்ப்பொருளை விளக்கும் திறனை அவர்களிடம் இருந்து விலக்கி விட்டது. அவர்கள் அந்த பொருளாசையால் பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் வீணராய்ப் போய்விட்டனர்.


சபையில் கட்டிய அந்த பொற்கிழி அப்படியே இருந்தது. மன்னனின் சந்தேகத்தைத் தீர்த்து அந்தப் பொற்கிழியைப் பெற ஏராளமான பண்டிதர்கள் வந்தனர். தானம், தவம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஹத யோகம், மாயா வாதம், சூன்ய வாதம் என்று பலவற்றைப் பற்றி அந்த அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் சொன்னதை முழுவதும் புரிந்து கொள்வதற்காக அரசனும் அவையோரும் பல கேள்விகள் கேட்டனர். படிப்பறிவு மட்டும் கொண்டு பட்டறிவு இல்லாமல் இருந்ததால் அந்த பண்டிதர்களால் எல்லா கேள்விகளுக்கும் தகுந்த பதில் சொல்ல முடியவில்லை.
எங்கே தன் சந்தேகம் தீராமலேயே போய்விடுமோ என்ற கவலை பாண்டியனுக்கு வந்துவிட்டது. தன் கேள்விக்கு தகுந்த பதில் கூறி தன்னை நல்வழியில் அழைத்துச் செல்லும் ஒரு அறிஞரை அனுப்புமாறு இறைவனை இறைஞ்சுவதே நல்லது என்று எண்ணி நகரின் தென்மேற்கில் இருக்கும் கூடல் அழகனின் ஆலயத்தை அடைந்து இறைவனை திருமாலழகனை வணங்கி நின்றான்.
கருணைக்கடலல்லவா மணிவண்ணன்? நான்மாடக் கூடலாம் மாமதுரை வாழும் அந்த அழகன் ச்ரீ வில்லிபுத்தூரில் பூமாலையும் பாமாலையும் சூட்டி திருமாலை வணங்கி வாழ்ந்து வரும் விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றினான்.


இந்த ப்ரபஞ்சத்திற்கோர் தனி முதல் அரசு என்பதைக் காட்டும் நீண்டு உயர்ந்த மணிமுடி; கேஸவன் என்னும் பெயருக்கேற்ப கறுத்து சுருண்ட அழகிய கூந்தல்; ஓங்காரத்தை ஒத்த காதுகள்; அதில் ஒளி வீசும் மகர குண்டலங்கள்; கருணையுடன் அடியார்களை நோக்கியதால் செவ்வரியோடிய தாமரை போன்ற கண்கள்; கூர்த்த நாசி; பவளம் போல் சிவந்து கனிந்த வாய்; அழகிய நீண்ட கழுத்து; உயர்ந்த தோள்கள்; பச்சைமாமலை போல் மேனி; கறுத்த மேகங்களின் நடுவில் வீசும் மின்னலை ஒத்து விளங்கும் தாமரையாள் அன்னை லக்ஷ்மியின் இருப்பிடம்; அவன் பாதுகாப்பில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளின் குறியீடாய் விளங்கும் கௌஸ்துப மணி; வண்ண வண்ண மலர்களால் செய்யப்பட்ட வனமாலை; அழகுக்கு அழகு சேர்க்கும் ச்ரீ வத்ஸம் என்னும் மரு; குழிந்த வயிறு; உலகெல்லாம் படைக்கும் நான்முகனைப் படைத்த பத்மநாபனின் நீரில் தோன்றும் சுழி போன்ற அழகிய தொப்புள்; நீண்ட தடக்கைகள்; அடியார்களைக் காப்பதற்கு என்றும் முன்னிற்கும் செஞ்சுடராழி; கண்ணன் வாய்ச்சுவையை என்றும் அனுபவிக்கும் பேறு பெற்ற வெண்சங்கம்; திரண்டு நீண்ட கதாயுதம்; ஞானத்தைக் குறிக்கும் அழகிய தாமரை; இடையில் சுடர் வீசும் பீதாம்பரமாம் மஞ்சள் பட்டாடை; கலீர் கலீரெனும் சிலம்பு; அடியார்களுக்கு ஒரே கதியாகும் திருவடிகள்; என்று இவ்வண்ணமாய் தோன்றினான் பரமன் விஷ்ணு சித்தரின் கனவில்.

'விஷ்ணு சித்தரே. என் பக்தனான பாண்டியன் உண்மைப் பொருளை அறிய வேண்டி ஒரு பொற்கிழி அமைத்து எல்லா அறிஞர்களையும் அழைத்துள்ளான். நீர் மதுரைக்குச் சென்று வேண்டிய வேதங்கள் ஓதி உண்மைப் பொருளைப் பற்றி தெளிவுறுத்தும்' என்று கண்ணன் கட்டளையிட்டான்.

விஷ்ணு சித்தரோ 'எம்பெருமானே. அடியேன் ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்றது இல்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் பூமாலை கட்டி உன்னைத் தொழுவது மட்டும் தான். எப்படி நான் உண்மைப் பொருளை வரையறுத்துக் கூறமுடியும்?' என்றார்.

இறைவன் அதற்கு 'நீர் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். என் அடியாராகிய உமக்கு ஓதாதுணரும் தன்மையை அளித்துள்ளேன். அதனால் நீர் எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவராய் இருக்கிறீர். எல்லா சாஸ்திரங்களையும் அறிந்திருப்பது மட்டுமே மெய்ப்பொருளை அறுதியிட்டுக் கூற உதவி புரியாது. அது கர்வத்திற்கு மட்டுமே வழி வகுக்கும். உம்மைப் போல் பணிவுடன் தொண்டு செய்யும் போது தான் அந்த மறைநூல்களில் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை உணர்ந்து மற்றவர்களுக்கும் அறுதியிட்டுக் கூறமுடியும். உமக்கு அந்த தகுதி இருப்பதால் கவலையின்றி என் அருளைப் முதலாய்க் கொண்டு பாண்டியன் சபைக்குச் செல்லும்' என்றான்.

விஷ்ணு சித்தரும் மகிழ்ந்து வணங்கி நின்றார்.

தொடரும்...

(2005ல் எழுதியதன் மறு பதிவு)




2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விட்டு சித்தன் - தமிழ் உண்ணப்
புட்டு சித்தன் - மனக் கோயில்
கட்டு சித்தன் - மால் எழுத்து
எட்டு சித்தன்!
-----

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு - ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல - மாய மணாள நம்பீ!

வேயர் தங்கள் குலத்து உதித்த
விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனை...
-----

அந்நாளில் குமரன் எழுதிய எழுத்தெல்லாம்,
இந்நாளில் ஏதேதோ எண்ணம் எழுப்பிடுதே...


குமரன் (Kumaran) said...

அவ்வண்ணமே தொடர்ந்து எழுத விரும்பினாலும் ஏதோ ஒன்று தடுக்கிறதே!