Friday, May 21, 2010

செய்யும் தொழில் உன் தொழிலே!


ஏதோ ஒரு காலத்தில் (கற்பத்தில்) விநாயகப் பெருமான் நான்முகப்பிரமனாக இருந்து எல்லா உலகையும் படைத்ததாக வேதங்கள் சொல்லும். கணானாம் த்வா என்று தொடங்கும் வேத மந்திரம் பிரம்ம தேவனே கணபதி என்று சொல்லும். பாரதியாரும் அந்த கருத்துப்படி பல பாடல்களில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் விநாயகரை நான்முகப் பிரம்மனாகவே எண்ணிப் பாடுகிறார். நடுவில் யானை முகனே என்று வரும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துவிட்டால் இது முழுக்க முழுக்க பிரம்ம தேவனைப் போற்றும் பாடலாகவே தோன்றும்.

செய்யும் தொழில் உன் தொழிலே காண்
சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்
வையம் தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானை முகனே வாணிதனை
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே


செய்யும் செயல்களெல்லாம் தெய்வத்தின் செயலே என்று எண்ணிச் செயல்களை நிகழ்த்துபடி கீதையில் கண்ணன் சொல்கிறான். அந்தக் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டு பாரதியார் இங்கே பேசுகிறார். 'செய்யும் தொழில் உன் தொழிலே காண்' என்கிறார். அடுத்து தான் பாரதியின் குறும்பு வருகிறது. நான் செய்பவை எல்லாம் உன் செயல்கள் தான் என்றவர் உன் செயல்கள் சீர் பெற்றிட வேண்டும் அதற்கு நீ அருள் செய்வாய் என்கிறார். என் செயல்கள் சீர் பெற்றிட அருள் செய்வாய் என்றால் வேன்டுதல் ஆகிவிடும். உன் செயல்கள் தான் எல்லாமே; அவை சீர் பெற்றிட நீ அருள் செய்வாய் என்றால் அது ஒரு நினைவூட்டல் மட்டும் தானே. :-)

வாணியைக் கையில் அணைத்துக் காக்கும் ஐயனே; நான்முகப் பிரமனே; யானை முகனே; தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் வேண்டியதை எல்லாம் வழங்கும் கற்பகமே! உலகங்களையும் வானத்தையும் வானவெளியையும் முன்பு படைத்தவனே! உன் செயல்களே ஆன என் செயல்கள் எல்லாம் சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்!


இந்தப் பாடலை நித்யஸ்ரீ பாடி இங்கே கேட்கலாம்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். இரண்டாம் பாடல் செய்குவனே என்று நிறைய இந்த மூன்றாம் பாடல் செய்யும் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் கற்பகமே என்று நிறைய அடுத்தப் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும். இந்தப் பாடல் விருத்தம் என்ற பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: செய்யும், வையம், ஐயா, கையால்

மோனை: செய்யும் - சீர், வையம் - வெளியினையும் - வானத்தையும், ஐயா - ஆனை, கையால் - காப்பவனே - கமலாசனத்து - கற்பகமே.

6 comments:

குமரன் (Kumaran) said...

மதுரையம்பதி said...
அறியாத பாடல், நன்றி குமரன்.
September 15, 2007 11:40 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் மௌலி. பாரதியாரின் அதிகம் தெரியாத பாடல்களைத் தான் இந்தப் பதிவில் இட எண்ணித் தொடங்கினேன். :-)
September 15, 2007 3:00 PM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரா!
இதை நித்தியஸ்ரீ பாடியுள்ளது. இப்போதே தெரியும்.
எல்லாம் அவன் செயல் என்பது இதனாலா??
September 15, 2007 3:43 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. அது மக்கள் நடுவே இருக்கும் பழமொழி தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அது நினைவில் நிற்பதில்லை.

இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் பாடிக் கேட்டிருக்கிறேன். இன்று அந்தப் பாடலைத் தேடிய போது தான் நித்தியஸ்ரீ பாடியது கிடைத்தது.
September 15, 2007 7:14 PM

sury siva said...

பாரதி இயற்றிய இந்தப்பாடலை நித்யஸ்ரீ பாடி க்கேட்பது இதுதான் முதற்தடவை.
நன்றி.

மீனாட்சி பாட்டி.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி மீனாட்சி பாட்டி. நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஐயா நான்முகப் பிரமா//
//யானை முகனே//
//வாணிதனை கையால் அணைத்துக் காப்பவனே//

அது எப்படி பிரம்மாவின் மனைவியான சரஸ்வதியை, விநாயகப் பெருமான் தன் கையால் அணைத்துக் காப்பார்? :)
கொஞ்சம் விளக்கம் தேவை குமரன்!

குமரன் (Kumaran) said...

இடுகையில் இந்தக் கேள்விக்குத் தானே விடை தந்திருக்கிறேன் இரவி? பின் ஏன் இந்தக் கேள்வி மீண்டும்? ஏதேனும் அறிவினாவா?

கேட்டதும் கொடுப்பவன் கண்ணன் என்றால் கேட்காமலேயே கொடுப்பவன் குமரனன்றோ? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இடுகையில் இந்தக் கேள்விக்குத் தானே விடை தந்திருக்கிறேன் இரவி? பின் ஏன் இந்தக் கேள்வி மீண்டும்? ஏதேனும் அறிவினாவா?//

:)
மன்னிக்கவும் குமரன் அண்ணா! நான் தான் சரியாகக் கேள்வியைத் தொடுக்கவில்லை போலும்! முன்பிருந்த சீரோட்டமான ஒழுங்கு என் எழுத்தில் இப்பல்லாம் மிஸ்ஸிங்-ன்னு அறிவன் ஐயா கூடச் சொல்லி இருந்தார்! :)

நீங்க பதிவில் சொன்னது, விநாயகர் ஏதோ ஒரு கற்பத்தில் படைப்புத் தொழிலை மேற்கொண்டு இருந்தார் என்பதே! ஆனால் அதற்காக சரஸ்வதியை அவர் துணையாகக் கொள்ள முடியாது அல்லவா? அதான் கேட்டேன்!

அப்படிப் பார்த்தால் என் முருகனும் தான் பிரம்மனைக் குட்டி, தானே கொஞ்ச நாள் படைப்புத் தொழில் பண்ண ஆரம்பித்தான்! ஆனால் வாணியை அணைத்தான் இல்லையே!

பிரம்ம பதவி வேறு! வாணி வேறு அல்லவா? ஈசனின் மகளாக அல்லவா வாணி கருதப்படுகிறார்! அப்படி இருக்க, சில ஆலயங்களில் விநாயகர் சரஸ்வதியை அணைத்து/மடி மேல் வைத்து இருப்பதின் தாத்பர்யம் என்னவோ?

உச்சிஷ்ட கணபதி என்று இந்த கணபதி வடிவத்தைச் சொல்லவும் கேள்விப்பட்டிருக்கேன்! அதான் அதற்கான மேல் விளக்கத்தை அறியாதவன், அறிந்த கொள்ள தங்களைக் கேட்டேன்!
அது என்ன நான் கேள்வி கேட்டால் மட்டும் அறி-வினா-ன்னு சொடக்கு போட்டுடறீக? இப்படிப் போட்டா, அப்பறம் என் அறியாமையை நான் எப்படிப் போக்கிக் கொள்வதாம்? :)