Tuesday, April 29, 2008

உயிரெழுத்துகள் எத்தனை?

அண்மையில் என் மகளுக்குத் தமிழ் எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் போது இந்த கேள்வி வந்தது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தமிழில் உயிரெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' வலைப்பதிவில் 4 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

101 கருத்துக்கள்:

பொன்ஸ்~~Poorna said...
குமரன், இது என்ன ஏதாச்சும் விளையாட்டா?? 11 உயிரெழுத்துகள், 18 மெய், 1 ஆய்த எழுத்து.. இது தானே கணக்கு? - மொத்தம் முதலெழுத்து - 30

June 04, 2006 1:54 PM
--

மகேஸ் said...
ஆகா. என்ன கருத்தாழமிக்க பதிவு.

June 04, 2006 1:57 PM
--

குமரன் (Kumaran) said...
மகேஸ். :) இது கருத்தாழமுள்ள பதிவா இல்லையா என்பது நீங்கள் இங்கே கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னால் தான் தெரியும். கொஞ்சம் முயன்று பாருங்களேன். :-)

June 04, 2006 2:02 PM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். நீங்கள் சொன்னது சரியா என்று நீங்களே ஒருமுறை சரி பாருங்கள். அதே போல் உயிரெழுத்துகள் யாவை என்பதையும் சொல்லுங்கள்.

June 04, 2006 2:04 PM
--

அழகு said...
உயிரெழுத்துகள் 12:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.

June 04, 2006 2:22 PM
--

நாமக்கல் சிபி said...
உயிரெழுத்துக்கள் மொத்தம் 12

அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

மெய்யெழுத்துக்கள் 18

ஆய்த எழுத்து ஒன்று ஃ

மீதம் உள்ளவை உயிர்மெய்யெழுத்துக்கள். 216

June 04, 2006 2:25 PM
--

குமரன் (Kumaran) said...
அழகு. நீங்கள் சொன்னது சரி. உங்கள் பின்னூட்டத்தை மற்றவரும் முயன்ற பின் வெளியிடுகிறேன்.

June 04, 2006 2:26 PM
--

குமரன் (Kumaran) said...
சிபி. நீங்கள் சொன்னதும் சரி.

பொன்ஸின் பதிலை வெளியிட்டதால் நீங்கள் ஒரு நொடி சிந்தித்துச் சொன்னீர்களா? இல்லை இது தான் கேள்விகளைப் பார்த்தவுடன் தோன்றிய விடைகளா?

June 04, 2006 2:28 PM
--

நாமக்கல் சிபி said...
//ஒரு நொடி சிந்தித்துச் சொன்னீர்களா? இல்லை இது தான் கேள்விகளைப் பார்த்தவுடன் தோன்றிய விடைகளா?
//

அட! என்ன இது என் தமிழுக்கு வந்த சோதனை!

உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் உயிரிலும் உணர்விலும் ஊறிப் போன விஷயம்.

அதை வேறு சிந்திக்கணுமா என்ன?
கேள்வியைப் பார்த்தவுடன் வந்து சொன்ன பதில். அடடா யாருக்கோ இப்படி வந்து விட்டதே என்று!

:-))))

June 04, 2006 2:32 PM
--

குமரன் (Kumaran) said...
:-) சிபி. ஏன் இந்தக் கேள்விகளுடன் பதிவைப் போட்டேன் என்பதனை இறுதியில் சொல்கிறேன். :-)

June 04, 2006 2:35 PM
--

பொன்ஸ்~~Poorna said...
//நீங்கள் சொன்னது சரியா என்று நீங்களே ஒருமுறை சரி பாருங்கள். அதே போல் உயிரெழுத்துகள் யாவை என்பதையும் சொல்லுங்கள். //
ஆக மொத்தம் பதில் தெரிஞ்சுகிட்டே கேட்கறீங்க?!! ம்ம்ம்.. என்னவோ போங்க..
நான் உயிரெழுத்து படிச்சு ஒரு பதினைஞ்சு பதினாறு வருசம் ஆச்சு.. உங்களை மாதிரி பிள்ளைகளுக்குச் சொல்லித் தரும் பெற்றோருக்குத் தான் இதில் எல்லாம் அதிகம் பரிச்சயம் இருக்கும்..
வேற யாராச்சும் பெற்றோர் வந்து சொல்லட்டும்.. இப்போ எல்லாம் பசங்களைப் பள்ளியில் சேர்க்க அப்பா அம்மாவிற்கும் நேர்முகத் தேர்வெல்லாம் உண்டாமே!! அதுக்கெல்லாம் பயனுள்ளதா இருக்கும்:)

June 04, 2006 2:43 PM
--

மகேஸ் said...
என்ன இது சின்னப் புள்ளத்தனமாவுள்ள இருக்கு. நானெல்லாம் ஒன்னாம் வகுப்புத் தமிழ் புத்தகத்த மூனு வருசம் படிச்சவன்.

இது நேரடியான கேள்வி எனில்

உயிரெழுத்துக்கள் 12
மெய்யெழுத்துக்கள் 18
உயிர்மெய்யெழுத்துக்கள் 12*18 = 216
ஆய்த எழுத்து 1

ஏதாவது உள்குத்து இருக்கிறதான்னு தெரியலேயே

June 04, 2006 2:48 PM
--

மகேஸ் said...
//11 உயிரெழுத்துகள்//
யக்கா புதரரசி, உயிரெழுத்துக்கள் 12.

June 04, 2006 2:51 PM
--

குமரன் (Kumaran) said...
பதில் தெரியும் பொன்ஸ். ஆனால் அண்மையில் தான் a = b, b = c அதனால் a = b என்பதைப் போல் சிலவற்றை தொடர்புறுத்தாமல் படித்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னவென்று இறுதியில் சொல்கிறேன். மற்றவர்களும் சிறிது முயலட்டும். உங்கள் பதிலை உடனே வெளியிட்டதற்கு மன்னிக்கவும். பதிலை வெளியிட்டபின் தான் பதிலை வெளியிடாமல் இருந்தால் மற்றவர்கள் முயல்வதற்கு உதவியாக இருக்குமே என்று தோன்றியது. :-)

June 04, 2006 2:52 PM
--

குமரன் (Kumaran) said...
மகேஸ். உங்கள் பதில் சரி. இந்தப் பதிவில் எந்த உள்குத்தும் இல்லை. நேரடியான கேள்விகள் தான்.

உங்களின் விடைகள் உள்ள பின்னூட்டத்தையும் புதரரசிக்கு எழுதிய பின்னூட்டத்தையும் (அதிலும் நீங்கள் விடையைச் சொல்லியிருப்பதால்) பின்னர் வெளியிடுகிறேன். முயன்றதற்கு நன்றி.

June 04, 2006 2:55 PM
--

மகேஸ் said...
சரி யாராவது மெய்யெழுத்துக்களை வரிசையாக எழுதுங்களேன்.

க் ங் ச் ஞ் ட் ந் ..

சக்கரம், சங்கு, ஈச்சமரம், மஞ்சள் நிறம், கட்டில், பந்து ஆகா இதுக்கு மேலே மறந்து போச்சே.

June 04, 2006 2:56 PM
--

புகழேந்தி said...
குமரன்,

என்னங்க கேள்வி இது?

உயிர் = 12
மெய் = 18
உயிர்மெய் = 12 x 18 = 216
ஆய்தம் =1

மொத்தம் = 247

இது கூடவா தெரியாமல் இருப்பார்கள்?

June 04, 2006 3:01 PM
--

குமரன் (Kumaran) said...
புகழேந்தி. தமிழெழுத்துகளைப் பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் எண்ணிக்கை சரி. உயிரெழுத்துகள் யாவை என்பதையும் கொஞ்சம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நீங்கள் சொன்ன எண்ணிக்கைகள் எனக்கும் தெரிந்திருந்தது. ஆனால் என்ன குறை இருந்தது என்று இறுதியில் சொல்கிறேன். அப்போது உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிடுகிறேன்.

June 04, 2006 3:04 PM
--

புகழேந்தி said...
கும்ஸ்

என்ன வெள்ளாட்டு இது

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

இவை தானே உயிரெழுத்துக்கள்?

நமக்கும் மதுரை தான் அய்யா

June 04, 2006 3:23 PM
--

குமரன் (Kumaran) said...
புகழ்ஸ். :-) (கும்ஸுக்கு பதிலாக) . உங்கள் பதில் சரி. ஆக மதுரைக்காரர்களில் நான் மட்டும் தான் தவறாக இருந்திருக்கிறேனா? :-) மதுரையிலே எந்த இடம் ஐயா நீங்கள்?

June 04, 2006 3:26 PM
--

Vajra said...
சீரியஸாத்தான் கேக்குறீங்களா...?

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே (நன்னூல்).

12 உயிர், 18 மெய் மொத்தம் 30 (ஃ உயிரெழுத்து லிஸ்டில் இருக்கும்).

June 04, 2006 3:40 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர் (வஜ்ரா). உங்கள் பதிலில் பாதி சரி. பாதி தவறு.

June 04, 2006 3:43 PM
--

புகழேந்தி said...
கும்ஸ்

நமக்கு சுப்பிரமணியபுரம் ஐயா

சங்கம் வளர்த்த எம் கூடலுக்கு வந்த சோதனையா இது?

ஐயகோ!

June 04, 2006 3:45 PM
--

Vajra said...
நன்னூல் சூத்திரம் எப்படி பாதி சரி பாதி தவறு ஆகும்...!!

June 04, 2006 3:45 PM
--

Vajra said...
கேள்வி நேராக இல்லை,

//
பதில் தெரியும் பொன்ஸ். ஆனால் அண்மையில் தான் a = b, b = c அதனால் a = b என்பதைப் போல் சிலவற்றை தொடர்புறுத்தாமல் படித்திருக்கிறேன் என்று புரிந்தது.
//


இதிலிருந்தே எதோ உள்குத்து இருப்பது புலப்படுகிறது!!

a=b, b=c, so, a=c என்றிருக்கவேண்டும்..(analogy!!)

June 04, 2006 3:51 PM
--

குமரன் (Kumaran) said...
புகழேந்தி. கூடலில் சங்கம் வளர்த்தார்களா இல்லை சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்களா? :-) சும்மா. கோவிச்சுக்காதீங்க. சங்கம் வளர்த்தார்கள்ன்னவுடனே இப்ப கைப்புள்ள, தேவ், பொன்ஸ், சிபி போன்றவர்கள் எல்லாம் சங்கம் வைத்து வளர்க்கிறார்களே அது நினைவிற்கு வந்தது. :-)

June 04, 2006 4:05 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர். நன்னூல் சூத்திரம் சரி தான். ஆனால் அதற்கு நீங்கள் தந்த விளக்கத்தில் ஒரு குறை இருக்கிறது. பின்னர் சொல்கிறேன்.

June 04, 2006 4:06 PM
--

செல்வன் said...
எல்.கே.ஜி மாணவர்களின் உயிரை எடுக்கும் அனைத்து எழுத்துக்களும் உயிரெழுத்துக்களே என்பது என் துணிவு

June 04, 2006 4:06 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர். நீங்கள் சொன்னது சரி. ஒப்பீட்டிற்காகச் சொன்ன எடுத்துக்காட்டில் தட்டச்சுப் பிழை வந்துவிட்டது.

June 04, 2006 4:06 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர். ஒத்துக் கொள்கிறேன். கேள்விகள் நேரடியாகக் கேட்கப்படவில்லை. என் அனுபவத்தை ஒரு நிகழ்ச்சியாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அதனை இப்படி கேள்விகளாய்க் கேட்டால் எத்தனை பேர் என்னைப் போல் தவறு செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று நினைத்தேன். இது வரை பலர் சரியாகச் சொல்லிவிட்டார்கள். நான் (முன்னர்), நீங்கள், பொன்ஸ் - நாம் மூவரும் ஒரே இடத்தில் குழம்புகிறோம் என்று எண்ணுகிறேன். :-)

மற்றபடி இதில் வேறு எந்த உள்குத்தும் இல்லை.

June 04, 2006 4:10 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர். உங்கள் விடையை இன்னொரு முறை படித்தேன். நீங்கள் சரியாகத் தான் எழுதியிருக்கிறீர்கள்; ஆனால் சொன்ன முறை அதில் தவறு இருப்பதாகத் தோன்றும் படி இருக்கிறதோ என்று தோன்றுகிறது. உங்கள் விடையை நான் புரிந்துகொண்டதில் தவறு இருக்கலாம். அப்படி என்றால் நீங்கள் சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். என் புரிதல் தவறா என்று பின்னர் பார்க்கலாம் (உங்கள் பதிலை வெளியிட்டபிறகு).

June 04, 2006 4:14 PM
--

குமரன் (Kumaran) said...
என்ன செல்வன்? உங்கள் பெயரில் ஒரு $ தொக்கி நிற்கிறதே? ஏன்? :-)

எல்.கே.ஜி. மாணவர்களின் உயிர்களை மட்டுமா? இப்போது என்னைக் கொண்டு வலைப்பதிவர்களின் உயிர்களையும் தானே. :-)

என்ன இப்படி சொல்லிவிட்டு பதில் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாதா என்ன?

June 04, 2006 4:17 PM
--

துளசி கோபால் said...
ஏம்ப்பா,இந்தக் கணக்கெல்லாம் இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு ரொம்ப நாளா.

அதைக் கொஞ்சம் தீர்க்க உதவி செய்யுங்களேன்.

இந்த 'ங்' இருக்கே இதோட உயிர்மெய் எழுத்துக்கள் வேணுமுன்னா

கலப்பையிலே எப்படி உழுவறதுன்னு சொல்லுங்களேன்.

June 04, 2006 4:26 PM
--

குமரன் (Kumaran) said...
துளசி அக்கா, புதிவை யுனிகோடு எழுத்தரில் இப்படி எழுதினால் ஙவின் உயிர்மெய் எழுத்துகள் வருகின்றன. கலப்பையிலும் போட்டுப்பாருங்கள்.

ng, nga, ngaa, ngi, ngii, ngu, nguu, nge, ngee, ngai, ngo, ngoo, ngau

June 04, 2006 4:29 PM
--

இலவசக்கொத்தனார் said...
என்னங்கண்ணா இப்படி எல்லாம் கேள்வி கேட்டு பயமுறுத்தறீரே.

உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்

அப்புறம் ஆய்த எழுத்து.

உயிர்மெய் எழுத்துக்கள் 216 (18*12)

ஆக மொத்தம் 247. சரிதானே. மத்தபடி உள்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லையே.

June 04, 2006 4:55 PM
--

துளசி கோபால் said...
குமரன்,

//ng, nga, ngaa, ngi, ngii, ngu, nguu, nge, ngee, ngai, ngo, ngoo, ngau//

போட்டுப் பார்த்தேன். இப்படி:-))))


ங் ங்அ ங்ஆ ங்இ ங்ஈ ங்உ ங்ஊ ங்எ ங்ஏ ங்ஐ ங்ஒ ங்ஓ ங்ஔ

June 04, 2006 4:57 PM
--

செல்வன் said...
என் பெயரில் இன்னொரு வலைபதிவர் இருப்பதால் ஏகப்பட்ட குழப்பங்கள் குமரன்.அதனால் தான் டாலரை பெயரின் பின் சேர்த்துக்கொண்டேன்.

எனக்கு இலக்கணம் சுட்டு போட்டாலும் வராது.என் பதிவுகளில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்த சொல்லி சொல்லி பொன்ஸ் ஓய்ந்தே போய் விட்டார்.

June 04, 2006 5:17 PM
--

குமரன் (Kumaran) said...
துளசி அக்கா. நான் கலப்பையில் உழுவதில்லை. அதனால தெரியலை. கலப்பையில் உழுபவர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

June 04, 2006 5:25 PM
--

குமரன் (Kumaran) said...
என்ன செல்வன்? இலக்கணத்துக்கும் உயிரெழுத்துகளுக்கும் வேறுபாடு இல்லையா? Alphabet சொல்லுங்கன்னா I dont know Grammer அப்படின்னு சொல்லிட்டுப் போறீங்களே? :-)

June 04, 2006 5:27 PM
--

குமரன் (Kumaran) said...
கொத்தனார். நீங்க தப்பா எதாவது சொல்லுவீங்களா? ரொம்ப சரியாத் தான் சொல்லியிருக்கீக.

June 04, 2006 5:28 PM
--

SK said...
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ,ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ

June 04, 2006 5:56 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உயிரெழுத்துகள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறீர்கள். அதில் கடைசி எழுத்து சரியாகத் தெரியவில்லை. அதனால் உங்கள் பட்டியல் சரியா இல்லையா என்று தெரியவில்லை.

June 04, 2006 6:46 PM
--

வல்லிசிம்ஹன் said...
குமரன் நான் படிக்கும்போது உயிர் 12ம் மெய் 18ம் சொல்லிக் கொடுத்தார்கள்.12 X 18=216. என்றும் கணக்கு. நீங்கள் சொன்னால் தான் மேற்கொண்டு புரியும்.

June 04, 2006 6:56 PM
--

குமரன் (Kumaran) said...
வல்லி அம்மா. நீங்கள் சொன்ன பதில் சரி.

June 04, 2006 7:00 PM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஓ, ஔ.

ஆக, 12 உயிர்.

இதிலென்ன மர்மம் என்று அரிய ஆவலாய் உள்ளேன்!

June 04, 2006 7:18 PM
--

குமரன் (Kumaran) said...
ஜீவா. நீங்கள் சொன்னது சரி. இத்துடன் இந்த விளையாட்டை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். எல்லோருடைய பின்னூட்டங்களையும் பதித்துவிட்டு ஏன் இந்தப் பதிவை எழுதினேன் என்று சொல்கிறேன்.

June 04, 2006 7:26 PM
--

குமரன் (Kumaran) said...
மகேஸ். நம் நண்பர் கொத்ஸ் உங்கள் கேள்வியைப் பார்க்காமலேயே மெய்யெழுத்துகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் பாருங்கள். :-)

June 04, 2006 7:42 PM
--

குமரன் (Kumaran) said...
ஷங்கர். ஃ உயிரெழுத்து லிஸ்டில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது உயிரெழுத்துகள் 12ல் அடங்குமா என்று சொல்லவில்லை. அதனால் நீங்கள் என்ன சொல்லவந்தீர்கள் என்று புரியவில்லை. ஃ என்பது ஆய்த எழுத்து; அது 12 உயிரெழுத்துகளில் அடங்காது; ஆனால் உயிரெழுத்துகள் எழுதும் போது அந்தப் பட்டியலில் கடைசியாக இதனையும் எழுதுவார்கள் என்பதைத் தான் அப்படி சொல்லியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியான பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

June 04, 2006 7:44 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உங்கள் பட்டியலில் 13 எழுத்துகள் இருக்கின்றன. சரியாகத் தெரியாத கடைசி எழுத்து ஃ என்று நினைக்கிறேன். அது ஆய்த எழுத்து. அது உயிரெழுத்துகளுக்குள் சேராது. இல்லையா?

June 04, 2006 7:47 PM
--

குமரன் (Kumaran) said...
அண்மையில் நானும் என் மனைவியும் எங்கள் மகளுக்குத் தமிழ் எழுத்துகள் சொல்லிக் கொடுக்கலாம் என்று உயிரெழுத்துகளிலிருந்து தொடங்கினோம். அ, ஆ, ... என்று சொல்லிக் கொண்டு ஃ வரை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தோம். என் மனதில் அ முதல் ஃ வரை உயிரெழுத்துகள் என்ற புரிதல் தான் அப்போது இருந்தது. பல முறை அ முதல் ஃ வரை சொல்லிய பிறகு என் மனைவி க, கா, கி, கீ, என்று சொல்லத் தொடங்கினாள். கௌ வரை சொல்லிவிட்டு அவள் நிறுத்திவிட்டாள். அப்போது தான் எனக்கு ஃ உயிரெழுத்து இல்லையே; அதனை ஏன் உயிரெழுத்து கணக்கில் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்தேன். :-) உயிரெழுத்துகள் 12 என்பது நன்றாகத் தெரிந்ததே. ஆனால் ஃ என்பது அந்த 12ல் சேருமா என்று எண்ணியே பார்க்காமல் விட்டிருக்கிறேன். என் மனைவியிடம் உயிரெழுத்துகள் எத்தனை என்று கேட்டவுடன் அவள் தயக்கமே இல்லாமல் 12 என்று சொன்னாள்; ஃ உயிரெழுத்தா என்று கேட்டதற்கு ஆமாம் என்றாள்; பின்னர் உயிரெழுத்துகளை எண்ணிப் பார் என்ற போது ஃ சேர்த்து எண்ணினால் 13 வந்தது.

அப்போது தான் நம்மைப் போல் எத்தனை பேர் இந்த குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பெரும்பாலானோர் தெளிவாகத் தான் இருக்கிறீர்கள். :-) மிக்க மகிழ்ச்சி.

ஏன் இந்த குழப்பம் வந்தது என்று எண்ணிப் பார்த்ததில் சில காரணங்கள் தோன்றின.

1. பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் போது உயிரெழுத்துகளுடன் ஃ என்ற ஆயுத எழுத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பதால் அவை என்றும் சேர்ந்தே மனதில் பதிந்துவிடுகிறது. என்னைப் போன்றவர்கள் ஃ எழுத்து உயிரெழுத்து என்ற புரிதல் இல்லாமலேயே ஆனால் அது ஆயுத எழுத்து என்பதையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம். :-)

2. வடமொழியும் ஹிந்தியும் தெரிந்திருந்தால் அவர்கள் அந்த மொழிகளில் ஏ, ஓ இல்லாததால் அதனை உயிரெழுத்துக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஃ என்பதனை உயிரெழுத்தில் ஒன்றாகக் கொண்டு 12 உயிரெழுத்துகள் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றது.

இனிமேல் இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் உங்களுக்கு கேள்விகளைப் படித்தவுடன் தோன்றிய விடைகள் என்ன என்பதனையும், இந்தக் குழப்பம் தோன்றுவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று தோன்றினால் அதனையும் சொல்லுங்கள்.

ஆழமில்லாத இந்தப் பதிவையும் :-) (நன்றி மகேஸ்) படித்து பதில் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

June 04, 2006 7:58 PM
--

ஞானவெட்டியான் said...
அன்புத் தங்கை துளசி,
//இந்த 'ங்' இருக்கே இதோட உயிர்மெய் எழுத்துக்கள் வேணுமுன்னா

கலப்பையிலே எப்படி உழுவறதுன்னு சொல்லுங்களேன்.//

மிகவும் எளிது. ng கொத்தினால் "ங்". அதன் பிறகு backspace <-பொத்தானைக் கொத்த "ங" கிடைக்கும்.

June 04, 2006 8:05 PM
--

வவ்வால் said...
வணக்கம் குமரன்!

இப்பொழுதுதான் இந்த உயிர் எழுத்து பதிவைப் பார்த்தேன் நான் எப்போதும் வெளியே நிற்கும் மாணவன் என்பதால் பார்க்காமல் போய்விட்டேன்! இங்கே பின்னூட்டங்களில் கூறியது ஒருவகையில் சரி எனினும் இன்னும் ஒரு விளக்கம் இருக்கிறது அது மேலும் தெளிவாக்கும் ஃ இன் சிறப்பை எனக்கு தெரிந்த சிறு விளக்கம்.
இந்த ஃ குழப்பம் வரக்காரணம் அவ்வெழுத்து உயிர் எழுத்தும் அல்ல மெய் எழுத்தும் அல்ல ஆனால் சார்பெழுத்து வகைப்படும் ஆனால் தனி எழுத்து எந்த எழுத்தும் சேர்ந்து அதன் விளைவாக உருவானது அல்ல எனவே தனியிடம் கொடுத்து எங்கே வைப்பது என தெரியாமால் உயிர் எழுத்து பக்கம் இடம் அளித்து விட்டார்கள்.

தமிழ் எழுத்துகளின் செயல்படும் விதம் வைத்து ,முதல் எழுத்து ,சார்பெழுத்து என இருவகைப்படும்,

முதல் எழுத்துகள்: உயிர் எழுத்து(12) + மெய் எழுத்து(18)= 30

இந்த 30 எழுத்துகளை வைத்து தான் ஆய்த எழுத்து நீங்கலாக பிற எழுத்துகள் உருவாகின்றன எனவே முதல் எழுத்து எனப்படும்

சார்பெழுத்துகள்:உயிர்மெய்,ஆயுதம்,உயிரளமெடை,ஒற்றளபெடை,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,ஐகார குறுக்கம்,ஒளகாரகுறுக்கம்,மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம் என பத்து வகையான எழுத்துகளும் சார்பெழுத்துகள்.

உயிர்,மெய் எழுத்துகளிடம் இருந்து தோன்றி அவற்றை சார்ந்து இயங்குவதால் சார்பெழுத்துகள் எனப்படும்.

June 04, 2006 8:40 PM
--

துளசி கோபால் said...
ஞானவெட்டி அண்ணா,

நீங்க சொன்னது என்னவோ சரி. ஆனாஅது ' ங' வுக்கு மட்டும்தான். அப்ப மீதிக்கு என்ன செய்யறது?(-:

June 04, 2006 9:22 PM
--

இலவசக்கொத்தனார் said...
கும்ஸ்,

//ஃ என்ற ஆயுத எழுத்தையும் //

ஃ ஆய்த எழுத்து. அது ஆயுதமும் கிடையாது ஒண்ணும் கிடையாது.

ஆயுத எழுத்து மணிரத்தினம் படம். குழம்பாதீங்க. குழப்பாதீங்க.

June 04, 2006 9:24 PM
--

வவ்வால் said...
//ஃ ஆய்த எழுத்து. அது ஆயுதமும் கிடையாது ஒண்ணும் கிடையாது.

ஆயுத எழுத்து மணிரத்தினம் படம். குழம்பாதீங்க. குழப்பாதீங்க. //

வாங்க இ.கொ.,இதை சொல்லி தான் நான் தமிழ் தெரியாத தமிழ் பொண்ணுங்களை கலாய்ப்பேன், மணிரத்னம் படம் எடுக்கலைனா ஆயுத எழுத்துனா என்னவென்றே உங்களுக்குலாம் தெரிஞ்சு இருக்காதுனு :-))

ஆய்தம் ,ஆயுதம் இரண்டும் ஒன்று தான்,கேடயத்தில் உள்ள மூன்று குமிழ்களை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாலே ஆயுத எழுத்து என்று பெயர்பெற்றது!

June 04, 2006 9:42 PM
--

வவ்வால் said...
//ஃ ஆய்த எழுத்து. அது ஆயுதமும் கிடையாது ஒண்ணும் கிடையாது.

ஆயுத எழுத்து மணிரத்தினம் படம். குழம்பாதீங்க. குழப்பாதீங்க. //

வாங்க இ.கொ.,இதை சொல்லி தான் நான் தமிழ் தெரியாத தமிழ் பொண்ணுங்களை கலாய்ப்பேன், மணிரத்னம் படம் எடுக்கலைனா ஆயுத எழுத்துனா என்னவென்றே உங்களுக்குலாம் தெரிஞ்சு இருக்காதுனு :-))

ஆய்தம் ,ஆயுதம் இரண்டும் ஒன்று தான்,கேடயத்தில் உள்ள மூன்று குமிழ்களை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாலே ஆயுத எழுத்து என்று பெயர்பெற்றது!

June 04, 2006 9:47 PM
--

ஓகை said...
குமரன்,

வவ்வால் அழகாகச் சொல்லியிருக்கிறார். ஆயுதம் முதலெழுத்துக்களில் ஒன்று இல்லை. முப்பது முதலெழுத்துக்களும் தனித்த ஒலிகளை உடையன. இவற்றால் மட்டுமே தனித்து ஒலிக்க முடியும். முதலெழுத்துக்களுக்குக் குறித்த ஒலிகளை சற்றே மாற்றும் வேலையைச் செய்வது சார்பெழுத்துக்கள். இவற்றில் ஆயுதம் தவிர மற்ற சார்பெழுத்துக்களைப் பற்றி உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கண வகுப்பில்தால் சொல்லிக் கொடுப்பார்கள். ஏனெனில் இவை பெரும்பாலும் செய்யுள்களிலேயே வரும். செய்யுள்கள் அலகிடப் படும்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் உரைநடைகளிலேயே ஆயுதம் கலந்த சொற்கள் வருவதால் முதலெழுத்துக்கள் கூடவே சொல்லிக் கொடுக்கப் படுகிறது. என் ஆரம்ப வகுப்புகளில் உயிர், உயிர்மெய் மற்றும் ஆயுதம் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தக் குழப்பம் வருவதுபோல் இப்போது பாடத் திட்டம் இருந்தால் அது கண்டிப்பாக சரி செய்யப்பட வேண்டும்.

மற்ற சில இந்திய மொழிகளில் அம், அஹ மற்றும் க்ரு என்பவை உயிரெழுத்துக்களுடன் சேர்த்துச் சொல்லப் படுகிறது. உண்மையில் இவற்றுக்கு உயிரொலிகள் இல்லை. இதுகூட குழப்பத்திற்கு காரணமாக இருக்கலாம்.

நீங்கள் போட்ட போடில் நான் என்னவெல்லாமோ யோசிக்கவேண்டி வந்தது. சிலர் ஐ யை அய் என்று எழுதுவதால் அதைச் சொல்லுகிறீர்களோ என்று கூட ஐயம் வந்துவிட்டது.

June 04, 2006 9:53 PM
--

வவ்வால் said...
நன்றி ஓகை, எனக்கு பின்னுட்டமெழுதும் போது சந்தேகமாவே இருந்தது நாம வேற எதையோ நினைச்சுட்டு சொல்றோமானு,நீங்களும் உறுதி செய்து இருக்கிங்க அப்போ சரியா தான் சொல்லி இருக்கேன்!

//இந்தக் குழப்பம் வருவதுபோல் இப்போது பாடத் திட்டம் இருந்தால் அது கண்டிப்பாக சரி செய்யப்பட வேண்டும்.//

பாடத்திட்டம் எல்லாம் குழப்பாம தெளிவா தான் இருக்கு நாம தான் முழுதும் உள்வாங்காம மனசுல அப்படி தான் என்ற முன் முடிவோட வேகமா படிச்சிட்டு போய்டோம்!

( குமரன் நாலு வரி எழுதி 40 பின்னூட்டம் வாங்கும் கலையை எனக்கும் சொல்லி தந்தா நன்றி உடையவனாயிருப்பேன்! :-)))

June 04, 2006 10:22 PM
--

செந்தழல் ரவி said...
இங்க என்ன நடக்குது....யாருக்காவது எதாவது பிரச்சினையா ?

குமரன் நாலாப்பு பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்களே...

மொக்க போட வேண்டியது தான்...அதுக்காக இப்படியா...

என்ன கொடுமை சரவணன்...(சந்திரமுகி டயலாக்)

June 04, 2006 11:09 PM
--

சிவமுருகன் said...
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
என்பனவாம்

June 04, 2006 11:19 PM
--

வவ்வால் said...
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு உள்ள சிறப்பிடத்தை போற்றும் வண்ணம் ஃ என்ற பெயரில் ஒரு தமிழ் சிற்றிலக்கிய இதழ் வருகிறது. அதன் ஆசிரியர் கடந்த மாத குமுதம் தீராநதியில் பேட்டியளித்துள்ளார்

June 04, 2006 11:40 PM
--

paarvai said...
குமரா!
மதுரைக்கு வந்த சோதனை போல்; இணைய வாசகர்களுக்கு;தாங்கள் சோதனை வைத்துள்ளீர்கள்!!
நிச்சயம்;ஏதோ சங்கதி சொல்லப் போறீங்க!!!: ஆனா; என்னனுதான் தலையக் குடையுது!!
எனக்கு தமிழ் உயிர் என- அ;ஆ;இ;ஈ;உ;ஊ;எ;ஏ;ஐ;ஒ;ஓ;ஔ" - சொல்லித்தந்தார்கள்.தங்கள் மகள்;ஆங்கிலப் பள்ளியில்; ஆறு -உயிர்- என்பதால் குழம்பிவிட்டாங்களா,,,,!!!
யோகன் -பாரிஸ்

June 05, 2006 5:36 AM
--

ALIF AHAMED said...
where is ur answer?

June 05, 2006 5:45 AM
--

குமரன் (Kumaran) said...
விரிவான விளக்கத்திற்கு நன்றி வவ்வால். சார்பெழுத்துகளைப் பற்றி படித்திருந்தாலும் அவற்றைப் பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் பட்டியல் இட்டுள்ளவற்றைப் பார்த்தால் இதைத் தான் சொல்கிறீர்கள் போல என்று நினைக்கத் தோன்றுகிறதே ஒழிய இதைத் தான் சொல்கிறீர்கள் என்று அறுதியாக நினைக்கத் தெரியவில்லை. பள்ளியில் சரியாக தமிழ் இலக்கணத்தைப் படிக்காததால் இந்தக் குறை என்று நினைக்கிறேன். நல்ல வேளை தமிழ் இணையம் இருக்கிறது. எந்த வயதிலும் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

சார்பெழுத்துகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் சொல்லுங்களேன்.

June 05, 2006 5:56 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். ஃ என்பது ஆய்த எழுத்து தான், ஆயுத எழுத்து இல்லை என்பதற்கான உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். எங்கோ ஓரிடத்தில் ஆயுத எழுத்து என்று இதனைச் சொல்லக் கூடாது என்று படித்தாக நினைவு. ஆனால் ஏன் என்பது மறந்துவிட்டது.

மணிரத்தினம் படம் 'ஆயுத எழுத்து' சிலேடையில் அமைந்தது என்று எண்ணுகிறேன். ஆயுதத்தையும் சொல்ல நினைத்தார்; மூன்று கதாநாயகர்களைக் (தமிழில் என்ன?) குறிக்க மூன்று புள்ளிகள் உள்ள ஆய்த எழுத்தையும் சொல்ல நினைத்தார். சரியா?

June 05, 2006 5:59 AM
--

குமரன் (Kumaran) said...
வவ்வால். நீங்கள் சொல்வது போல் கேடயத்தில் இருக்கும் மூன்று குமிழ்களை நினைவு படுத்தும் வகையில் இருப்பதால் ஃ ஆய்த எழுத்து எனப்படுகிறது என்ற வாதத்தையும் கேட்டிருக்கிறேன். ஆனால் ஆய்தம் என்பதே சரி; ஆயுதம் என்பது சரியில்லை என்றும் படித்திருக்கிறேன். மேலே சொன்னது போல் ஏன் என்பது தான் மறந்துவிட்டது.

June 05, 2006 6:02 AM
--

குமரன் (Kumaran) said...
// இந்தக் குழப்பம் வருவதுபோல் இப்போது பாடத் திட்டம் இருந்தால் அது கண்டிப்பாக சரி செய்யப்பட வேண்டும்.
//

ஓகை நடராஜன். பாடத் திட்டம் சரியாகத் தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். ஆனால் ஃ என்பதனையும் உயிரெழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் போதே கடைசி எழுத்தாக வைத்துச் சொல்லிக் கொடுப்பதால் வந்த குழப்பம் இது என்று நினைக்கிறேன். அப்படிச் சொல்லிக் கொடுக்கும் போது கூட ஃ என்பது உயிரெழுத்து என்று சொல்லிக் கொடுக்கவில்லை; ஆய்தம் என்று தெளிவாகத் தான் சொல்கிறார்கள். ஆனால் உயிரெழுத்துப் பட்டியலிலேயே அதனையும் வைத்தது தான் தவறு.

அம், அஹ தமிழில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதனால் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் அவை உயிரொலிகள் இல்லை; அதனால் உயிரெழுத்துகளில் சேர்க்கக் கூடாது என்று சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.

ஆமாம். ஏன் சிலர் ஐ யை அய் என்று எழுதுகிறார்கள்? உயிரெழுத்தில் ஒன்றைக் குறைக்கும் ஆவலா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா?

June 05, 2006 6:07 AM
--

குமரன் (Kumaran) said...
//பாடத்திட்டம் எல்லாம் குழப்பாம தெளிவா தான் இருக்கு நாம தான் முழுதும் உள்வாங்காம மனசுல அப்படி தான் என்ற முன் முடிவோட வேகமா படிச்சிட்டு போய்டோம்!
//

உண்மை தான் வவ்வால். :-)

//குமரன் நாலு வரி எழுதி 40 பின்னூட்டம் வாங்கும் கலையை எனக்கும் சொல்லி தந்தா நன்றி உடையவனாயிருப்பேன்! :-)))//

என்னங்க இது? வகுப்புக்கு தாமதமா வந்துட்டு இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேக்கறீங்க? கூடல் வலைப்பூவுல தான் இதுக்குன்னே ஒரு தனிப் பதிவே போட்டிருக்கேனே (அந்தப் பதிவில் இருக்கும் கருத்துப்பொருளுக்கு உரிமையாளர்கள் இராமநாதன் & இலவசக் கொத்தனார்). பதிவின் சுட்டி

http://koodal1.blogspot.com/2006/02/140.html

என்ன இந்தப் பதிவில் சொன்ன முறைகளில் ஒன்றோ இரண்டோ தான் இங்கு பயன்படுத்தியுள்ளேன். மற்றவற்றைப் பயன்படுத்தத் தேவையில்லாமல் ஆகிவிட்டது. :-)

June 05, 2006 6:11 AM
--

குமரன் (Kumaran) said...
செந்தழல் ரவி. நான் பாடம் எடுக்கலைங்க. பாடம் கேட்டுக்கிட்டு இருக்கேன். நாலாப்புல படிச்சதை மறந்ததால கேட்டுக்கிட்டு இருக்கேன். :-)

மொக்க போடுறதுன்னா என்னங்க?

June 05, 2006 6:13 AM
--

குமரன் (Kumaran) said...
உங்கள் பதில் சரி தான் சிவமுருகன்.

June 05, 2006 6:13 AM
--

குமரன் (Kumaran) said...
வவ்வால். நீங்கள் சொல்லும் சிற்றிலக்கிய இதழைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். :-)

June 05, 2006 6:14 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நான் சொல்லவந்ததை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பின்னூட்டங்களில் பாருங்கள். என் மகள் இப்போது தான் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு Vowels இன்னும் பற்றி சொல்லிக் கொடுக்கவில்லை. இது எனக்கு வந்த குழப்பம் மற்றும் தெளிவு.

June 05, 2006 6:17 AM
--

குமரன் (Kumaran) said...
ALIF AHAMED,

ஞானவெட்டியான் ஐயாவின் பின்னூட்டத்திற்கு முன் உள்ள என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன் என் பதிலை.

June 05, 2006 6:18 AM
--

Merkondar said...
என்ன சந்தேகம் உயிர் எழுத்து உயிர் இல்லாத எழுத்தா? சரி மருத்துவரை அழைத்து வந்து பார்ப்போம் அல்லது கேட்போம்

June 05, 2006 7:42 AM
--

G.Ragavan said...
குமரன் கொஞ்சம் காலந்தாழ்ந்து வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

உயிரெழுத்துப் பன்னிரண்டு. மெய்யெழுத்துப் பதினெட்டு.

ஆய்த எழுத்து உயிரெழுத்து ஆகாது.

ஆனால் நீங்கள் இவ்வளவு விளக்கிய பிறகு இதை நான் சொல்வது பெரிய விவரமாக இராது.

June 06, 2006 5:47 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. மருத்துவரை அழைத்துத் தான் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. :-)

June 06, 2006 5:57 AM
--

குமரன் (Kumaran) said...
அமாம் இராகவன். கொஞ்சம் நேரம் சென்று தான் வந்திருக்கிறீர்கள். :-)

June 06, 2006 5:58 AM
--

அழகு said...
*மொக்க போடுறதுன்னா என்னங்க?*

குமரன் 'மொக்கயாயிட்டு வர்ரார்'னா 'குண்டாயிட்டே போறார்'ன்னு மருதக்காரத் தோழர் ஒருவர் வெளக்கம் சொன்னார்.

June 06, 2006 2:45 PM
--

குமரன் (Kumaran) said...
அட. நான் குண்டாயிகிட்டே போறது அந்த மதுரக்காரத் தோழருக்கு எப்படி தெரிஞ்சது அழகு? அம்புட்டு சரியாச் சொல்றாரு? :-)

June 06, 2006 3:05 PM
--

வெளிகண்ட நாதர் said...
தமிழ் பதிவுகள் தான் எழுதுறோம், அதுக்குன்னு ஆதியிலருந்து உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துன்னு ஆரம்பிச்சிட்டீங்க. இன்னொரு பதிவு வல்லினம் மெல்லினம், இடையினம் பத்தி போட்டுருங்க கண்டிப்பா-:)

June 06, 2006 8:14 PM
--

குமரன் (Kumaran) said...
வெளிகண்ட நாதர். வல்லினம், மெல்லினம், இடையினம் பத்தின பதிவு நிச்சயமா உண்டு. ஆனா இந்த வலைப்பூவுல இல்லை. கேட்டதில் பிடித்தது வலைப்பூவில் வரும். போட்டவுடனே சொல்றேன். தவறாம வந்து படிச்சுடுங்க. :-)

June 06, 2006 10:11 PM
--

கோவி.கண்ணன் said...
உயிரெழுத்துக்கள் 12 ஆக இருந்தாலும், ஒள அதிகமாக பயன்படுத்தப்படாமல் வழக்கிழந்து வருகிறது. உதராணம் ஒளவை சண்முகி மாறி அவ்வை சண்முகி என்று எழுதினார்கள். மேலும் ஒள வுடன் இணைந்த உயிரெழுத்துக்களும் வழக்கிழந்து வருகிறது. க்வுதமி, கவுரி, கவுதாரி, மவுனம், பவுத்தம் என்றே எழுதுகிறார்கள். இதில் தவறு இருப்பதாகவும் உச்சரிப்பு மாறுவதாகவும் தெரியவில்லை. மாறக ஒளவையாரை ஒ ள வி யா ர் என்று படிக்காமல் இருக்கும் படி நன்மை பயக்கிறது. என் ஓட்டு உயிரெழுத்து 11க்கே.

ஐயரை அய்யர் என்று எழுதலாம், ஆனால் ஐந்து என்பதை அய்ந்து என்று எழுதினால் நன்றாக இருக்காது என்பது என்கருத்து

June 08, 2006 6:35 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. சரியாகச் சொன்னீர்கள். சௌராஷ்ட்ரர்கள் என்பதையும் பலர் சவுராச்ட்ரர்கள் என்றும் சவராச்ட்ரர்கள் என்றும் எழுதியும் சொல்லியும் பார்த்திருக்கிறேன். முதலில் சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் இரண்டாவதாகச் சொல்வதை என்னவோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அமங்கலமாகத் தோன்றுகிறது. மொழியின் பெயர் இப்படிச் சிதைவதை மனம் பொறுப்பதில்லை.

ஒள என்ற எழுத்திற்குப் பதிலாக அவ் என்றும் அவு என்றும் எழுதுவதும் ஐ என்பதற்குப் பதிலாக அய் என்றும் அயி என்றும் எழுதுவதும் ஏதாவது அரசியல் காரணங்களுக்காகவா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு கருத்தியலைச் சார்ந்தவர்கள் இப்படி எழுதத் தொடங்கி அதனைப் படிப்பவர்களும் அதுவே சரியான முறை என்று நம்பித் தாமும் அப்படியே பாவிக்கத் தொடங்குவதால் இது நேர்கிறது என்று எண்ணுகிறேன். அன்புள்ள இராகவன், அன்பு இராகவன் என்று சொல்லிப் படித்திருக்கிறேன். ஆனால் அன்பின் இராகவன் என்ற பயன்பாடு எப்போது தொடங்கியது? ஏன் அப்படிப் பாவிக்கத் தொடங்கினார்கள்? எந்த இடங்களில் அதனைப் பாவிக்கவேண்டும்? அதன் பொருள் என்ன? என்பதனைத் தெரிந்தவர்கள் சொன்னால் மிக்க மகிழ்வேன். நானும் இடம் பார்த்து அதனைப் புழங்க வழி பிறக்கும்.

June 08, 2006 6:45 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. அய்ந்து என்றும் அயிந்து என்றும் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். விரைவில் உயிரெழுத்துக்கள் பத்து என்ற திருத்தத்தையும் கொண்டுவந்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். :-)

June 08, 2006 6:46 AM
--

இலவசக்கொத்தனார் said...
ஐயா என்பதை இன்று பெரும்பாலானவர்கள் அய்யா என்றே எழுதப் பழகிவிட்டார்களே. அதுக்கு ஒரு பதிவு போடுங்கள்.

June 08, 2006 7:33 AM
--

வசந்தன்(Vasanthan) said...
உயிரெழுத்துக்களின் இறுதியில் ஆய்த எழுத்தைச் சொல்லிக்கொடுக்கிறார்களா?
எனக்கு அப்படிப் படித்த ஞாபகமில்லை.

குழந்தைகள் குழம்பக்கூடிய ஓரிடம் தமிழ்நெடுங்கணக்கு அட்டவணைதான்.
அதில் ஆய்த எழுத்து உயிரெழுத்துக்களின் தொடக்கத்தில்தான் வருகிறது.
ஏனென்றால் பன்னிரெண்டு நிரல்களில் உயிர்களும் பதினெட்டு நிரைகளில் மெய்களும் வந்தால் இடப்பக்க மேல் மூலையில் ஒரிடம் வெறுமையாக இருக்கும். ஆய்த எழுத்துக்க தனியே ஒரு நிரலையோ நிரையையோ கொடுக்காமல் அந்த வெற்றிடத்தில் அவ்வெழுத்தைப் போட்டிருப்பார்கள்.
(மொத்தம் 19 நிரைகள், 13 நிரல்கள். 19x13=247)

இடமிருந்து வலமாகப்பார்த்தால் ஆய்தம் உயிரெழுத்துக்களின் தொடக்கமாக வரும். மேலிருந்து கீழாகப்பார்த்தால் ஆய்தம் மெய்யெழுத்துக்களின் தொடக்கமாக வரும்.

இந்த அட்டவணையின்படி ஆய்தத்தை உயிரெழுத்து வரிசையிற் சிநதிப்பவர்களுக்கு ஏன் அதை மெய்யெழுத்து வரிசையில் வைக்கப் பிடிக்கவில்லையென்பது எனக்கு ஆச்சரியம்தான்.

June 08, 2006 9:04 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். அய்யா என்று எழுதுகிறார்கள்; அதற்குத் தனிப் பதிவு போடுங்கள் என்பது நக்கல் தானே. :-) இந்தப் பதிவின் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். என்னைத் தவிர்த்து ஓரிருவருக்காவது இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் உதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆய்தம் vs. ஆயுதம் பற்றிக் கேட்டிருந்தேனே. ஒன்றும் சொல்லவில்லை அதைப்பற்றி?

June 08, 2006 10:31 AM
--

குமரன் (Kumaran) said...
வசந்தன். எனக்கும் என் மனைவிக்கும் (முறையே மதுரையிலும் தூத்துகுடியிலும்) அப்படித் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆய்தத்தை உயிர் எழுத்து என்று சொல்லவில்லை. ஆனால் உயிரெழுத்துகளுடன் சேர்த்தே சொல்லிக் கொடுத்தார்கள். இந்தப் பதிவிலும் இருவர் இட்ட பின்னூட்டத்தில் அப்படிச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

June 08, 2006 10:33 AM
--

குமரன் (Kumaran) said...
வசந்தன். நீங்கள் சொல்லும் அட்டவணையை நான் இதுவரைப் பார்த்ததில்லை. அதனால் முதலில் நீங்கள் சொல்வது சட்டென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை படித்த போது தெளிவாகப் புரிந்தது. இணையத்தில் அந்த அட்டவணை கிடைக்குமா? இல்லையெனில் வீட்டில் அதனைத் தயாரித்துப் பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன். தமிழ் எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல கருவி அது.

June 08, 2006 10:35 AM
--

இலவசக்கொத்தனார் said...
//கொத்ஸ். அய்யா என்று எழுதுகிறார்கள்; அதற்குத் தனிப் பதிவு போடுங்கள் என்பது நக்கல் தானே//

நக்கல் எல்லாம் இல்லை சாமி. உண்மையிலேயே அந்த தப்பு நிறையா பேரு பண்ணறாங்க. அதான் சொன்னேன். ஐகாரத்தைப் பத்தி போடுங்க.

//
ஆய்தம் vs. ஆயுதம் பற்றிக் கேட்டிருந்தேனே. ஒன்றும் சொல்லவில்லை அதைப்பற்றி?//

எனக்கு தமிழ் கத்துக் குடுத்தவங்க அப்படித்தான் சொல்லிக் குடுத்தாங்க. கேடயத்தில் இருக்கும் மூணு புள்ளிங்களுக்கும் ஆய்த எழுதுக்கும் சம்பந்தமில்ல. பின்னாடி கட்டி விட்ட கதைதான்னு சொன்னாங்க.

நமக்கு அப்போவெல்லாம் ப்ரூஃப் கேட்கத் தெரியாதே. சொன்னதை சரின்னு எடுத்துக்கிட்டோம்.

June 08, 2006 10:45 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். ஐகாரத்தைப் பத்தியும் ஒளகாரத்தைப் பத்தியும் பதிவு போடலாம். கொஞ்ச நாள் போகட்டும்.

ஆய்த எழுத்துக்கும் கேடயத்திற்கும் தொடர்பில்லைன்னு நானும் படிச்சிருக்கேன் கொத்ஸ். ஆனா என்ன காரணம் ஆய்தம் என்ற பெயருக்குன்னு படிச்சது மறந்து போச்சு. நீங்களும் சான்று கேட்க மறந்துட்டீங்களா? ஹும். யாராவது சொல்றாங்களா பாப்போம்.

June 09, 2006 10:24 PM
--

வவ்வால் said...
அய்யா,அவ்வை,அய்யப்பன் ,மேலும் "லை","ளை" போன்ற எழுத்துகளின் மீது முளைத்த கொம்பினை உடைத்து எழுத்து சீர்திருத்தங்களை முன் வைத்தது பெரியார் அவர்கள்,எனவே ஐயா விற்கு பதில் அய்யா என எழுதுவது தவறல்ல.வெளவால் என்பதை நான் அப்படி தான் வவ்வால் என வைத்துள்ளேன்.அய்யா என்பது தவறெனில் மீண்டும் கொம்பு வைத்து எழுதும் பழக்கம் கையால வேண்டும் யுனிகோடில் கொம்பு இல்லாத எழுத்துரு தன் உள்ளது எனவே பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்றே ஆகிறது அப்புறம் எப்படி அய்யா என்பது தவறாகும் இ.கொ விளக்குவாரா?

ஆய்த எழுத்தினை கேடயத்தின் மூன்று குமிழ்களை நினைவூட்டும் வண்ணம் இருப்பதால் ஆயுத எழுத்து என்பார்கள் என தமிழ் நாடு 10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கண துணைப்பாட நூலில் சொல்லியுள்ளார்கள். அது தவறான தகவல் எனில் நமது தமிழக அரசின் கல்வி துறை தான் விளக்க வேண்டும்.

June 09, 2006 10:41 PM
--

குமரன் (Kumaran) said...
வவ்வால். அட ஆமாம். நீங்கள் வௌவும் வால் இல்லை; வவ்வும் வால் தான். இப்போது தான் கவனிக்கிறேன். நீங்கள் சொன்னமாதிரி இப்படி நிறைய பேர் புழங்கத் தொடங்கிவிட்டதால் இது சரியானதாகத் தோன்றத் தொடங்கிவிட்டது போலும்.

அப்படியென்றால் ஏற்கனவே பெரியாராலோ இல்லை அவர் இயக்கத்தினராலோ உயிரெழுத்துகள் 10 தான் என்று சொல்லப்பட்டுவிட்டதா? பின் ஏன் அப்படி பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பதில்லை.

விரைவில் உயிரெழுத்துகள் பத்தா பன்னிரண்டா என்று பதிவு போட்டு மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் போல் இருக்கிறதே. முதலில் தமிழறிஞர் இராம.கி. ஐயா என்ன சொல்கிறார் என்று கேட்டுப் பார்க்கிறேன்.

June 10, 2006 7:24 AM
--

வவ்வால் said...
//அப்படியென்றால் ஏற்கனவே பெரியாராலோ இல்லை அவர் இயக்கத்தினராலோ உயிரெழுத்துகள் 10 தான் என்று சொல்லப்பட்டுவிட்டதா? பின் ஏன் அப்படி பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பதில்லை. //

அய்யயோ என்னங்க குமரன் இப்படி இடமா போனா வலமா போறிங்க வலமா போன இடமாக போறிங்க. எழுதும் முறையில் தான் மாற்றமே அன்றி எழுத்துகளின் எண்ணிக்கையை யாரும் குறைக்கவும் இல்லை ,குறைக்கவும் முடியாது 12 உயிர் எழுத்து,18 மெய் எழுத்து ,1 ஆய்த்த எழுத்து என்ற எண்ணிக்கை மாறாமல் தான் உள்ளது.

அதே போன்று நிறைய பேர் புழங்க துவங்கி விட்டதால் இது சரியான முறை என்றெல்லாம் ஆகவில்லை இந்த பெரியார் சீர் திருத்த எழுத்து முறை அரசால் அங்கிகரிக்கப்பட்ட எழுத்துமுறை,தமிழக அரசாணை கூட உள்ளது. ளை ,லை போன்ற எழுத்துக்கள் முன்பெல்லாம் யானை தும்பிக்கை போன்று ள,ல எழுத்துக்களின் மீது போட்டு எழுதப்படும் அதனை மாற்றியது பெரியார் தான் அதை நீங்கள் உட்பட அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் உங்களைப்போலவெ பலரும் யார் அந்த மாற்றத்திற்கு காரணம் என தெரியமலே பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பலரும் இந்த அய்யா , அவ்வை என எழுதுவதற்கு இன்னும் உடன் படவில்லை எனத்தெரிகிறது.

இதனை முந்தைய பின்னூட்டத்திலேயே சுறுக்கமாக சொன்னே ஆனால் ஏனோ நீங்கள் கவனத்தில் கொள்ள மறந்து விட்டீர்கள்(மறுத்து விட்டீர்களா?) இல்லை எனில் இவ்வாறு கேட்க தோன்றாது

//நீங்கள் சொன்னமாதிரி இப்படி நிறைய பேர் புழங்கத் தொடங்கிவிட்டதால் இது சரியானதாகத் தோன்றத் தொடங்கிவிட்டது போலும். //

இந்த மாற்றம் அரசால் பரிந்துரைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம் எனவே சில பலரால் கொண்டுவரப்பட்ட மாற்றம் அல்ல ,இப்பொழதும் 1967 க்கு முன்பு படித்தோர் எல்லாம் பழைய முறைபடியே எழுதி வருகிறார்கள் அரசாணை வெளியிட்ட கருணாநிதி உட்பட :-))

June 10, 2006 8:13 AM
--

குமரன் (Kumaran) said...
வவ்வால் அவர்களே. எனக்குத் தெரிந்த வரை பெரியாரின் சீர்திருத்தம் வந்ததன் காரணம் அச்சகங்களில் 'யானைத் தும்பிக்கை' எழுத்துகளின் அச்சுருக்களை எடுத்துவிட்டு ளை, ழை, என்று எழுதினால் அச்சுருக்களின் எண்ணிக்கை குறையும் என்பதே. அதனால் அரசாணை வந்த பிறகு தும்பிக்கை எழுத்துகள் வழக்கிழந்து போயின. நாங்கள் பள்ளியில் படித்த போதே தும்பிக்கை எழுத்துகள் இல்லாமல் தான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் என்னைப் போன்றவர்கள் கையால் எழுதும் போதும் தும்பிக்கை எழுத்துகள் இல்லாமல் தான் எழுதுகிறோம். ஆனால் முந்தையத் தலைமுறையினர் இன்னும் தும்பிக்கை எழுத்துகளைப் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். எது சரி, தவறு என்று சொல்லவில்லை. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமும் தும்பிக்கை எழுத்துகள் தவறு என்று சொல்லவில்லை என்று தான் நினைக்கிறேன்; அந்த சீர்திருத்தம் செய்ய விழைந்தது அச்செழுத்துகளைக் குறைப்பதற்கே. அப்படியானால் ஐ, ஒள போன்றவற்றையும் எடுத்துவிட்டு அய், அவ், என்று புழங்கத் தொடங்கலாமே. அரசாணை அப்படி சொல்லவில்லையா என்ன? ஏன் இன்னும் ஐ, ஒள இவற்றை அச்சு ஊடங்கள் பயன்படுத்துகின்றன? இல்லை அரசாணை அரைகுறையாய் தும்பிக்கை எழுத்துகளை மட்டும் நீக்கிவிட்டு, ஐ, ஒள ஆகிவற்றை விட்டுவிட்டதா? இல்லை பெரியாரின் சீர்திருத்ததிலேயே அது இல்லாமல் போய்விட்டதா?

அரசாணையால் தானே தும்பிக்கை எழுத்துகள் இல்லாமல் போய் எல்லா அச்சு ஊடங்களும் அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டன. அரசாணையாலேயே ஐ, ஒள போன்றவற்றையும் அதே காரணத்திற்காக நீக்கிவிட்டால் அச்சு ஊடகங்களும் அவற்றைப் பயன்படுத்தா. அதனால் என்னைப் போன்றவர்களும் அய்யா, அவ்வை என்று புழங்குவதில் தடையிருக்காது. அரசாணையை மிஞ்ச முடியுமா? :-)

//இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பலரும் இந்த அய்யா , அவ்வை என எழுதுவதற்கு இன்னும் உடன் படவில்லை எனத்தெரிகிறது.
//

இந்த மாற்றத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்களா? அரசாணையின் மூலமும் எல்லா அச்சு ஊடகங்களின் மூலமும் நம் மேல் திணிக்கப்பட்டதல்லவா இந்த மாற்றம்? :-) இதில் தவறு எதுவும் இல்லை என்பதால் பெரிதாக எந்த எதிர்ப்பும் தோன்றவில்லை போலும். அதே மாதிரி அரசாணையின் வழியாக உயிர் எழுத்துகளும் இனிமேல் 10 தான். ஐ, ஒள என்பவை இல்லை என்று சொல்லிவிட்டால் அதனையும் நாம் புழங்கத் தொடங்கிவிடுவோம். அது ரொம்பப் பெரிய வேலை அல்லவா? தொல்காப்பியத்திலிருந்து பல இலக்கண நூற்களை மாற்ற வேண்டுமே? அதனால் அரசு தயங்குகிறதோ? :-)

நீங்கள் சுருக்கமாக முதல் பின்னூட்டத்தில் சொன்னதை நான் மறக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. ஆனால் எல்லோரும் அய், அவ் என்று புழங்கத் தொடங்கினால் (தும்பிக்கை எழுத்துகள் இல்லாமல் எழுதுவதைப் போல்) ஐ, ஒள வழக்கிழந்து போகுமே; அதனால் உயிரெழுத்துகள் பத்து போதுமே என்று தான் கேட்டேன். இடம் சென்றால் வலமும் வலம் சென்றால் இடமும் செல்லவில்லை.

எனக்குத் தெரிந்து அரசாணை மூலம் பெரியார் சீர்திருத்தத்தை நடைமுறையில் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர் தானே? கலைஞர் இல்லையே? அதனால் தான் அவரும் சோவின் துக்ளக் போல பெரியார் சீர்திருத்தத்தைக் கண்டு கொள்ளவில்லையோ?

இந்தப் பின்னூட்டத்தில் பேசுவது வவ்வால் அவர்களுக்கு மட்டும் இல்லை. இதில் கருத்து சொல்ல விரும்பும் எவரும் பேசலாம். இருவர் மட்டுமே விவாதிக்கும் ஒன்றாக இது மாறவேண்டாம்.

June 10, 2006 5:35 PM
--

வவ்வால் said...
குமரன்,

தங்கள் புரிதலுக்கு நன்றி குமரன் ,தாங்கள் உயிர் எழுத்துகள் 10 அல்லது 11 என பதிவு போட்டுக்கேட்க வேண்டும் என சொன்னதால் அவ்வாறு கேட்க வேண்டியதாயிற்று,எழுத்துகளின் எண்ணிக்கையில் யாரும் கைவைக்க மாட்டார்கள்.மேலும் இலவச கொத்தனார்...

//நக்கல் எல்லாம் இல்லை சாமி. உண்மையிலேயே அந்த தப்பு நிறையா பேரு பண்ணறாங்க. அதான் சொன்னேன். ஐகாரத்தைப் பத்தி போடுங்க. //

நீங்களும் அது ஏற்புடையது என்பது போல் கூறுவதாக தோன்றவே அப்படி சொன்னேன். ஐயா,அல்லது அய்யா என்பதால் ஏதும் தீங்கு இல்லாததால் வசதி மற்றும் விருப்பம் போல் பயன்படுத்துகிறார்கள்,பல மாற்றங்கள் சொன்னாலும் மக்கள் மனது வைத்து பின்பற்றுவது தான் வழக்கில் இருக்கும் எனவே ஐ,ஒள எல்லாம் அழிந்து விடாது.

அனைவரும் பங்கு கொண்டால் நன்றாகத்தான் இருக்கும். தமிழ் என்றால் ஏன் வம்பு என எல்லாம் ஒதுங்குகிறார்ப் போல் தெரிகிறது :-))

June 10, 2006 6:15 PM
--

ராபின் ஹூட் said...
பதிவை விட பின்னூட்டத்தின் அளவு பெருசா இருக்கே.

June 10, 2006 6:18 PM
--

ராபின் ஹூட் said...
ரெண்டு வரி பதிவுக்கு ரெண்டாயிரம் வரி அளவுக்குப் பின்னூட்டம் :)

நல்லா அடிச்சு ஆடுறீங்க. :)))

June 10, 2006 6:20 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் ராபின் ஹுட். பதிவை விட பின்னூட்டங்களின் அளவு பெரியதாகத் தான் இருக்கின்றது. பேசப்படுவது அப்படிப்பட்டது இல்லையா? :-)

ரெண்டு வரிப் பதிவுக்கு ரெண்டாயிரம் வரிப் பின்னூட்டம் வந்தாலோ போட்டாலோ அடிச்சு ஆடுறதில்லைங்க. அந்த ரெண்டாயிரம் வரிப் பின்னூட்டத்தைப் பிரிச்சுப் பிரிச்சுப் பல பின்னூட்டங்களாப் போட்டாத்தான் அடிச்சு ஆடுறது. :-) அந்த மாதிரி இந்தப் பதிவுல பண்ணலையே. அப்படிச் செஞ்சிருந்தா எப்பவோ இது 150, 200 பின்னூட்டங்கள் ஆகியிருக்கும். :-)

June 11, 2006 8:07 PM
--

இலவசக்கொத்தனார் said...
சரி. நானே 100ஆவது போடறேன். வாழ்த்துக்கள் கும்ஸ்.

June 11, 2006 8:27 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கொத்ஸ் :-)

June 11, 2006 9:09 PM