Monday, April 07, 2008

கர்வம்: செருக்கு

இதுவும் அர்த்தம் போன்ற சொல் தான். நம்மில் பலர் இந்த கர்வம் என்ற சொல்லை மிகுதியாக மிக இயற்கையாகப் பயன்படுத்துகிறோம். வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்து (இங்கிருந்து அங்கு சென்றதா என்று தெரியாது - இராம.கி. ஐயாவைக் கேட்டால் தெரியும்) தமிழ்படுத்தப்பட்ட பல சொற்களில் இதுவும் ஒன்று. நம் இலக்கியங்கள் பலவற்றில் இது கருவம் என்று பயின்று வருகிறது. இதற்கேற்ற தமிழ்ச்சொல் செருக்கு என்று சொல்லலாம். வேறு ஏதாவது தமிழ்ச்சொல் இருந்தால் அதனையும் சொல்லுங்கள். 'கருவம்', 'கர்வம்' என்று மிகுதியாகப் புழங்குவதைக் குறைத்துக் கொண்டு இனிமேல் செருக்கு என்ற சொல்லையும் புழங்கலாம் என்று இருக்கிறேன். நண்பர்களுக்கு என் வேண்டுகோளும் அதுவே. ஆரணங்கு என்ற சொல் போல் இளம்பெண்களுக்குப் புரியாத சொல் இல்லை செருக்கு என்பது என் கருத்து. செருக்கு என்பது ஆரணங்குகளுக்கு மட்டும் உரியதா? இருபாலருக்கும் உரியது. அதனால் வெயில் மிகுதியாக இருக்கிறது என்னார் (என்று சொல்லமாட்டார்கள்). மற்றவர் என்ன நினைக்கிறார்களோ? :-)

***

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 17 மே 2006 அன்று எழுதப்பட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 17 மே 2006 அன்று எழுதப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

47 கருத்துக்கள்:

செந்தில் குமரன் said...
அகந்தை ஒரே பொருள்தான் அகந்தை வடமொழியா? தமிழ் மொழியா?

May 17, 2006 6:04 AM
--

கோவி.கண்ணன் said...
ஆணவம், திமிர், அடாவடி போன்ற சொற்கள் கூட இடத்திற்கு ஏற்றார் போல பொருத்தமாக இருக்கும். இதில் ஆணவம் வட்சொல் போல தோன்றுகிறது.

May 17, 2006 6:09 AM
--

இலவசக்கொத்தனார் said...
இனி கர்வப்படாமல் இருக்கிறேன்! அப்படியே ஆனாலும் செருக்குதான் தலைக்கேறுமே தவிர கருவப்பட மாட்டேன். சரிதானே!

May 17, 2006 6:13 AM
--

சிவமுருகன் said...
குமரன் அண்ணா,
'கர்வம்' என்ற சொல் வடமொழியில் செருக்கு என்ற பொருளில் பயன் படுவதில்லை, ‘கர்வ்’ என்றால் அது பெருமை என்றே பொருள் படுகிறது(தற்பெருமை அல்ல). ஆனால் கர்வம் என்ற சொல்லில் தமிழில் ‘க’ பயின்று வருவதை பார்த்தால் அது வட மொழி போல் தோன்றினாலும் அது தமிழ் படுத்தப்பட்டு பொருள் மாற்றப்பட்ட சொல்லாக இருக்கலாம்.

May 17, 2006 6:16 AM
--

குமரன் (Kumaran) said...
செந்தில் குமரன் (குமரன் எண்ணம்). அகந்தை வடமொழியா தமிழா என்று தெரியவில்லை. அஹம்காரம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் தான் அகந்தை என்று தோன்றுகிறது. ஆனால் சரியாகத் தெரியவில்லை.

May 17, 2006 6:28 AM
--

குமரன் (Kumaran) said...
கோவிகண்ணன். நீங்கள் கொடுத்துள்ள மூன்று சொல்லும் வடமொழியில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆணவம், திமிர், அடாவடி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் அடாவடி என்பது செருக்கு என்ற பொருளில் மிகுதியாகப் பயன்படுத்தப் படுவதில்லை.

May 17, 2006 6:29 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இனி நான் நல்லவன் என்று சொன்னால் இத்தனை நாள் நான் நல்லவனாயில்லை என்று பொருள் தரும். :-) இனி கர்வப்படாமல் இருக்கிறேன் என்கிறீர்கள். அப்படியென்றால் இத்தனை நாள் செருக்கு தலைக்கேறித் திரிந்தீர்களா? :-) அப்படித் தெரியவில்லையே. அடக்கமே உருவானவர் அல்லவா நீங்கள்? :-)

May 17, 2006 6:30 AM
--

johan -paris said...
தலைக்கனம்-அகங்காரம் - அகம்பாவம் மமதை -எனவும் கூறுவார்கள்; கிராமப் புறங்களில் அவனுக்கு சரியான தடிப்பு! எனும் புழக்கமும் ஈழத்தில் உண்டு.
யோகன்
பாரிஸ்

May 17, 2006 6:30 AM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன்,

நீங்கள் வடமொழி என்று எண்ணுவது ஹிந்தி என்று நினைக்கிறேன். பொன்ஸும் அப்படி எண்ணி ஒரு முறை பின்னூட்டம் இட்டார். வடமொழி என்று தமிழர்கள் சொல்வது (தமிழ் இலக்கியங்கள் சொல்வது) ஆரியமாகிய சமஸ்கிருதத்தை. அதன் வழிவந்த ஹிந்தியை அல்ல.

வடமொழியில் கர்வ: என்ற சொல் பெருமிதம், ஆணவம் என்ற இரு பொருளிலும் பயில்கிறது. தமிழிலும் அந்த சொல்லின் பொருள் மாறவில்லை. மிகுதியாக ஆணவம் என்ற பொருளில் வழங்கினாலும் பெருமிதம் என்ற பொருளிலும் அது இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது.

செருக்கு என்னும் சொல்லும் பெருமிதம், ஆணவம் என்ற இரு பொருளிலும் பயின்று வந்துள்ளது.
அதனால் தான் இது அர்த்தம் போன்ற சொல் என்றேன்.

May 17, 2006 6:37 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நீங்கள் சொல்வது போல் தலைக்கனம் இந்தப் பொருளில் புழக்கத்தில் உண்டு. அகங்காரம், அகம்பாவம், மமதை இந்த மூன்றும் வடசொற்கள். நான் என்ற எண்ணத்தை அஹங்காரம், அஹம்பாவம் என்று சொல்வார்கள். என்னுடையது என்ற எண்ணத்தை மமதை என்று சொல்வார்கள். அஹங்கார மமகாரங்கள் என்று 'யான், எனது' என்னும் எண்ணங்களைச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

தடிப்பு என்பது எனக்கு புதிய சொல். நல்ல சொல். தலை தடிச்சுத் (தலை வீங்கித்) திரிகிறான் என்று சொல்லலாம். :-)

May 17, 2006 6:44 AM
--

Merkondar said...
அகந்தை, இறுமாப்பு இவைகள் தமிழ் என கருதுகிறேன். கர்வம் என்னும் சொல் வடசொல் அதை உச்சரிக்கையிலே கடிமாக(இச்செல்லும் வட சொல்) உள்ளது. மறைமலையடிகள் உச்சரிப்பில் கடினமாக உள்ள சொல் என்றால் அது வட சொல்லாகத்தான் பெரும்பாலும் இருக்கும் என சொல்லியிருக்கிறார்.

May 17, 2006 10:47 AM
--

பினாத்தல் சுரேஷ் said...
எனக்கென்னவோ கர்வம் என்பது பெருமிதத்துக்கும், இறுமாப்புக்கும் நடுவில் உள்ள சொல் என்றும், இடத்துக்கேற்றபடி இரு புறமும் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

நல்ல பதிவுகள், இவ்வளவு நாள் பார்க்காமலிருந்தது வருத்தமே.

May 17, 2006 1:01 PM
--

வெற்றி said...
குமரன்,
நான் இவ்வளவு நாளும் கர்வம் தமிழ்ச் சொல் என்று தான் நினத்திருந்தேன்.
உங்கள் தகவலுக்கு நன்றிகள்.

அதிகமான நேரங்களில் எனது நண்பர்கள் தலைக்கனம் என்ற சொல்லைப் புழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

May 17, 2006 1:16 PM
--

SK said...
இரண்டு இடங்களில் இந்த 'செருக்கு' எனும் சொல்லை கையாண்டிருக்கும் வள்ளுவர், 'அகந்தை' என்னும் பொருளிலேயே பயன்படுத்தி உள்ளார்!

[பார்க்க தி.கு. 346, 431]

அதே சமயம், 'பெருமை' என்று தனியே ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்!

[அதி: 98 கு. 971 - 980]

May 17, 2006 3:36 PM
--

குறும்பன் said...
தலைக்கனம் என்ற சொல்லை அதிகம் எங்கள் பகுதியில் புழங்குவார்கள்.

தமிழா வடமொழியா என்று ஐயமாக இருக்கிற சொற்களை இரா.கி ஐயாவிடம் கேட்டு தெரிந்து கொண்டோமானால் தமிழை வடமொழியென்று ஒதுக்காமல் இருக்கலாம். குமரன் & இராகவன் ஆவண செய்வீர்களா?

May 17, 2006 5:59 PM
--

சிவமுருகன் said...
//நீங்கள் வடமொழி என்று எண்ணுவது ஹிந்தி என்று நினைக்கிறேன்//

ஆம் நான் ஹிந்தியை தான் எண்ணி விட்டேன்.

சரி சமஸ்கிருதத்தில் என்ன என்று என்னிடமுள்ள வதது சமஸ்க்ருதம்(சமஸ்கிருதத்தில் பேசுங்கள்) என்ற ஒரு புத்தகத்தில் தேடினேன்.
கர்வ: மா பவந்து என்ற சொற்றொடரும் - அதன் தமிழ் மொழிபெயர்ப்பாக 'கர்வம் கூடாது என்றிருந்தது'. எனில் கர்வம் - என்றால் செருக்கையே குறிக்கிறது. தாங்கள் கூறியது சரியே.

May 19, 2006 2:37 AM
--

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. மறைமலையடிகள் சொன்னதாய் நீங்கள் சொல்வதை நானும் படித்திருக்கிறேன். தமிழ் என்பது எப்படி இனிமை என்று நாம் சொல்கிறோமோ, சுந்தரத் தெலுங்கு என்று எப்படி வடுகர்கள் சொல்கிறார்களோ, மலையாளம் இனிமை என்று எப்படி கேரளத்தவர் சொல்கிறார்களோ அது போல் வடமொழி கம்பீரமானது என்று வடமொழியாளர்கள் சொல்வார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. நாம் வடமொழி கடினம் என்போம்; அவர்கள் அதனை கம்பீரம் என்பார்கள். ஒலியை நன்கு பலுக்க ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு சொல் எங்களிடம் உண்டு என்பார்கள் வடமொழியாளர்கள்; தமிழில் இல்லை என்று அவர்கள் குறை கூறுவார்கள். நாம் சொல்வதைச் சுருங்கச் சொல்லுதல் நம் மரபு. அதனால் எங்களுக்கு அதிக எழுத்துக்கள் தேவையில்லை என்போம். இப்படி ஒருத்தருக்கு பெருமையானது மற்றவரைத் தாழ்த்தித் தான் வருகிறது போலும். :-) சுருக்கமாகச் சொன்னால் தமிழ் வல்லின எழுத்துக்களை விட கடினமான உச்சரிப்பு உள்ளவைகள் இல்லை வடமொழிச் சொற்கள் என்பது என் துணிபு.

இறுமாப்பு தமிழ் என்பதில் எந்த ஐயமும் இல்லை; ஆனால் அகந்தை அஹம்காரத்தில் இருந்து வந்திருக்குமோ என்ற ஐயம் உண்டு.

May 19, 2006 6:21 AM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெனாத்தல் சுரேஷ். மேலே சொன்ன மாதிரி கர்வம் என்ற சொல் பெருமிதம், இறுமாப்பு இரண்டுக்குமே பயன்படுகிறது - செருக்கு என்னும் சொல்லினைப் போல. ஆனால் கர்வம் என்பது வடமொழிச் சொல் என்பதை மட்டுமே வலியுறுத்துகிறேன். தொடர்ந்து வந்து படித்து உங்கள் கருத்தினைச் சொல்லுங்கள்.

May 19, 2006 6:23 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் வெற்றி. தலைக்கனம் என்ற சொல் தான் உடனே வருவது. நானும் என் நண்பர்களும் மிகுதியாகப் பயன்படுத்துவதும் அது தான். கர்வம் என்று எழுதும் போது வருகிறது. அதற்கு செருக்கைப் புழங்கலாம் என்று எண்ணுகிறேன்.

May 19, 2006 10:50 AM
--

குமரன் (Kumaran) said...
திருக்குறள் குறட்பாக்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி எஸ்.கே. ஐயா. நீங்கள் சொன்ன குறள்களைச் சென்று பார்த்தேன். அகந்தை என்னும் பொருளிலே செருக்கு என்ற சொல் உள்ளது.

May 19, 2006 10:51 AM
--

குமரன் (Kumaran) said...
குறும்பன். நீங்கள் சொல்வது சரிதான். அடிக்கடி இராம.கி. ஐயாவைத் தொந்தரவு செய்யாமல் ஒரு பத்து பதினைந்து பதிவுகள் முடிந்த பின் அவற்றுள் வந்த சொற்களைத் (பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் பேசப்பட்ட சொற்களைத்) தொகுத்து ஐயாவிடம் கேட்கிறேன். அவருக்கு பொழுது இருக்குமோ என்ற தயக்கமே இதுவரை ஐயத்திற்குரிய சொற்களைப் பற்றி கேட்காதது.

May 19, 2006 10:53 AM
--

குமரன் (Kumaran) said...
வடமொழி நூலில் சரிபார்த்து சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.

May 19, 2006 10:54 AM
--

இராம.கி said...
அன்பிற்குரிய குமரன்,

உங்கள் வலைப்பதிவில் என்னை கருவம் பற்றிக் கருத்துச் சொல்ல அழைத்திருந்தீர்கள். உடன் சொல்ல முடியாது, லேலை அழுத்தத்தில் இருந்தேன். (இன்னும் ஓர் ஏழெட்டு நாட்களுக்கு முடியாது இருக்கிறது.) தருமியும் கூட பேச்சுத்தமிழ் பற்றிய அவருடைய பதிவில் என்னைக் கலந்து கொள்ள ஒரு குறிப்புக் காட்டியிருந்தார். உடன் செய்யமுடியவில்லை. பேச்சுத்தமிழ் புலனத்திற்கு இன்னொரு நாள் வருவேன். இப்பொழுது உங்கள் கேள்விக்கான மறுமொழி. இதை என் தனிப் பதிவாகவும் போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.
------------------------------------------------
அன்பிற்குரிய குமரன்,

உருப்படியான செயலைச் செய்கிறீர்கள். வேற்றுமொழிச் சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பது தேவையானது. கூடிய மட்டும் தமிழ்ச்சொல்லைப் பழகுவது நல்லது. தமிழ்ச் சொற்களைப் பழகச் சொல்லி உங்களைப் போன்றவர்கள் பரிந்துரைத்தால், அதற்குப் பிறமொழிச் சொற்களை வெறுத்து ஒதுக்குவது என்று பொருளில்லை. அப்படிச் சிலர் நினைத்தால் நினைத்துவிட்டுப் போகிறார்கள். கருமமே கண்ணாக இருங்கள்.

பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாம் புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்துதான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.) நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் இந்த ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.

நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்கள்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தங்களின் அறியாமைப் போக்கால், தங்கள் மொழியைக் காப்பாற்றாது போனார்கள். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. தமிழனுக்குத் தமிழே முகவரி.

உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்கள் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.) பெருமிதத்தையும் சேர்த்துத்தான் 400 ஆண்டுகளில் தொலைத்தார்கள். இன்றைக்கும் அவர்கள் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர்கள் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் பெருமிதம் (நீங்கள் சொல்லியிருந்த செருக்கு, கருவம்) இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.

இனி கருவம் என்ற உங்கள் சொல்லிற்கு வருகிறேன்.

கல் என்னும் வேரில் இருந்து எழுந்த இந்தச் சொல்லுக்கு எத்தனையோ பொருள்களில் (கருமை, கூட்டம், செறிவு, திண்மை, கனம், வெப்பம், கூர்மை, அசைவு எனப்) பலப் பலவாய்ச் சொற்கள் கிளைத்துள்ளன. அந்த விதத்தில், உயரம், பெருமை, பழைமை, செருக்கு, அகங்காரம் போன்ற பொருள்களும் கொண்ட கருவம் என்ற சொல்லும் தமிழ்தான். அது தமிழ் இலக்கியங்களில் அத்துணை புழக்கம் இல்லாத சொல். இருந்தாலும் அது தமிழில் தோன்றியிருப்பதற்கே வாய்ப்புக்கள் மிகுதி. தவிர, வடமொழி அகரமுதலியிலும் அவ்வளவு அகண்டு இல்லாமல் வெறும் ஒற்றைப் பொருளிலேயே அது பழகியுள்ளது. வடமொழியில் பாணினி, மோனியர் வில்லியம்சு ஆகியோர் சொல்லுவதற்கு இறுதியில் வருகிறேன்.

முதலில் தமிழ்ப் புழக்கத்தைப் பார்ப்போம்.

"அவர் சுத்தக் கருநாடகம் அப்பா! இந்தக் காலப் பாட்டெல்லாம் புடிக்காது" என்று சொல்லுகிறோமே? அது எதைக் குறிக்கிறது? சொல்லப் படுபவர் பழைமைப் போக்கு உள்ளவர் என்று குறிக்கிறது. "இந்தச் சரக்கு வெறுஞ்சரக்கு இல்லைங்க, கருஞ்சரக்கு" என்னும் போது கரு என்பது கருமை என்ற பொருளைக் குறிக்கவில்லை, "மேன்மையான சரக்கு" என்றே குறிக்கிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக் குளத்தின் கரையில் மூன்று நிலையுள்ள மாடக் கோயில் ஒன்று உண்டு; மூன்று மாடங்களில் "நின்றான், இருந்தான், கிடந்தான்" என்னும் மூன்று தோற்றத்தில் திருமால் படிமங்கள் இருக்கின்றன. [அந்தக் காலத்தில்னைந்த மாடங்களி மூன்று புத்த உருவங்கள் இருந்தன. காமாட்சி அம்மன் கோயிலே ஒரு புத்த யக்கினி கோயில் தான். இன்று இவையெல்லாம் மாறிக் கிடக்கின்றன. தமிழர் வரலாறு தோண்டத் தோண்ட வித விதமாக உருக் கொள்ளும். மயிலை சீனி வேங்கடசாமியாரின் "தமிழுக்கு வழங்கிய கொடை" என்ற பொத்தகத்தின் மூன்றாவது பகுதியை (வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண்: 9, கதவு எண் - 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை 600 088, தொலைபேசி: 22455954) பக்கம் 96-100 வரை படியுங்கள், விளங்கும்.] திருவிழாக் காலங்களில் குளக்கரை மாடக் கோயிலின் ஆக மேல்தளத்தில் இருந்து தாவிக் குதிப்பது ஒரு காட்சியாய் நடை பெற்றது. இதற்குக் கருமாடிப் பாய்ச்சல் என்று பெயர். மக்கள் வழக்கில் கருமாடிப் பாய்ச்சல் கருமாறிப் பாய்ச்சல் என்று சொல்லப் படும். காஞ்சிபுரத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று. காளமேகப் புலவர் தனிப்பாடல் ஒன்று இதைக் குறிக்கும்.

"அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட்
டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் - செப்புவா
சற் காற்று, கம்பத் தடியில் தவம்,கருமா
றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது."

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானமும் கூறுவதாய் மயிலையார் கூறுவார். கருமாடி பற்றி நான் அறிந்தது மயிலையார் மூலமே.

கருமாடி என்றால் உயந்த மாடி (topmost floor); மாடியிலே உயர்ந்தது கருமாடி; கருமாடக் கோயில் என்றால் உயந்த மாடங்கள் கொண்ட மாளிகை என்று பொருள் உண்டு. (மாடம் உள்ளது தான் மாளிகை; மாள் என்பது சொல்லடி.) கருமாளிகை = உயர்ந்த கட்டடம். கருமை என்ற சொல்லுக்கே பெருமை என்ற பொருளை (excellence, greatness) திவாகர நிகண்டு (நூற்பா 1363) சொல்லும். கருடன் என்னும் பெயர் பெரிய பறவை என்ற பொருளில் கழுகுக்கு உள்ள பெயர். கருந் திடர் என்றால் பெரிய மேடு என்ற பொருள் உண்டு. கரு மாயம் என்றால் அதிக விலை என்று பொருள்.

இன்னும் இந்தக் கருத்தை ஏற்க மறுத்தால், கருவிற்கு முந்திய சொல்வடிவிற்குப் போகலாம். குல்>குரு>கரு = உயரம். குரு என்பவர் நம்மிலும் அறிவில், பட்டறிவில், இன்னும் பலவற்றில் பெரியவர். நம் ஆசான். குருவம் என்பது ஆசானின் பண்பு, நிலை. குருவர்>குரவர் = ஆசான் நிலையில் உள்ள தலைவர்; தேவார மூவரும், மாணிக்க வாசகரும் சமயக் குரவர்கள். குரவரின் பெண்பாலாகிய குரத்தியர் என்பது பெண் சமணத் துறவிகளைக் குறிக்கும் சொல். குரவம் வடமொழியில் ஒலிப்பு மாறிக் கௌரவம் (= honour) என்று நிற்கும். குருசில்>குரிசில் என்று திரிந்து தலைவனைக் குறிக்க கம்பனில் பயிலும்.

கருவம் என்ற சொல்லிற்குச் செருக்கு, ஆணவம் (= haughtiness, arrogance, pride) என்ற பொருள்கள் உண்டு. அது கன்னடத்தில் க(g)ர்வ என்றும், தெலுங்கில் க(g)ர்வமு என்றும் சொல்லப் படும்.

கரு வலி = மிகுந்த வலி என்ற பொருளில் "கருவலி ......காளையை" என்று சீவக சிந்தாமணி 2269 ல் பயிலும். பருமைப் பொருளில் குரு என்ற சொல் "குரூஉக் களிற்றுக் குறும்புடைத்தலின்" என்று புறம் 97ல் பயிலும். கனம் என்ற பொருளில், "பசுமட் குரூஉத் திரள்" என்று புறம்.32 ல் பயிலும். (ஆங்கிலத்தில் gravity என்ற சொல்லும் இந்தக் குருவித்த நிலையைக் - கனத்த நிலையைக் - குறிக்கும் சொல் தான். புறம் 32 இல்லாவிட்டால் இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று கூட நாம் அறியாமற் போயிருப்போம். கூட்டப் பொருளில் குரல் (= கொத்து, கற்றை குரல் கூந்தல் கலித் தொகை. 72:20) என்பதும் குரவை என்பதும் (= chorus; குன்றக் குரவை -சிலப்பதிகாரம்) பயிலும்.

தலைக்கனம் என்று சொல்லுவது கருவம் தானே? கருவம் பிடித்தவர் என்பதும் தலைக்கனம் பிடித்தவர் என்பதும் ஒரே ஆட்சிப் பொருள் தான். கரு என்ற சொல்லடி கூட்டம்>செறிவு>திண்மை>கனம் என்ற பொருள் வளர்ச்சியில் பெருமிதம், ஆணவம், செருக்கு என்ற பொருள் கொள்ளும். ஆண் என்பது ஆளுகின்ற தன்மை; ஆணவம் என்ற சொல் எழுந்தது அப்படித்தான். செருக்கு என்பதும் தலை என்பதை ஒட்டியது தான் (சென்னி = தலை; செல் என்பது வேர்.). பெருமிதம் = பெருமித்து இருத்தல். பெருமித்தல் என்பது முன்னிலையில் இருப்பது. பெருமித்து இருந்தவர்கள் பெருமானர் = பிராமணர். பெருமானர் தமிழ்ச் சொல்லே. பெருவுடையார் = ப்ரகதீசர்.

இவ்வளவு ஒப்புமைகளையும், பொருள் வளர்ச்சியும் மோனியர் வில்லியம்சோ, பாணினியின் அஷ்டாத்யாயியோ காட்டாது. தமிழ் இலக்கிய, இலக்கண, நடைமுறை வழக்குகள் அறியாமல் கருவத்தின் உட்பொருளை அறிய முடியாது. பாணினியின் தாது பாடத்தில் 2000 க்கும் மேற்பட்ட வேர்களைப் பாணினி காட்டுவார். அவற்றில் ஒன்று garv = to be proud என்று பட்டியலிடப் படும். அது எப்படி பெருமிதம் என்ற கருத்துமுதற் பொருள் (idealistic meaning) இந்தச் சொல்லிற்கு வந்தது? இயல்மொழியில் (natural language) ஐம்புலனால் உணரக்கூடிய பொருள்முதல் வாதப் பொருள் (materialistic meaning) அல்லவா முதலில் ஏற்படமுடியும் என்று நமக்குக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சங்கத சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் garbe (=honour, glory) என்ற Lithuanian சொல்லையும், gelban, gelf என்ற old German சொற்களையும் இணையாகக் குறித்திருப்பார்கள். garva = pride என்ற பெயர்ச் சொல்லையும், garvaya = to make any one proud, garvaaya = to show pride என்ற துணை வினை சேர்த்த சொற்களையும், garvara = hautiness என்ற இன்னொரு பெயர்ச் சொல்லையும், garvita = proud of என்ற பெயரெச்சத்தையும், garvishta = extremely proud என்ற இன்னொரு பெயரையும் மட்டுமே மோனியர் வில்லியம்சு காட்டும். ஆக பாணினி, மோனியர் வில்லியம்சைப் பார்த்து, garv என்பதின் ஆணி வேர் என்ன என்று வடமொழியின் வழியாக நமக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழில் கூட்டப் பொருளில் இருந்து செறிவு, செறிவிலிருந்து திண்மை, திண்மையில் இருந்து கனம், கனத்தில் இருந்து பருமை, பருமையில் இருந்து எடை என்ற பொருள்முதற் சொற்களும், பிறகு எடையில் இருந்து வலிமை, அதே போலப் பருமையில் இருந்து பெருமை போன்ற கருத்துமுதற் சொற்களும் கிளைக்கும்.

தமிழ்ச் சொற்பிறப்புக்கள் எல்லாமே, ஐம்புலனால் உணரத்தக்க இயற்பொதுக்கை (natural bodies) களில் இருந்து உருவாகி பொருள்முதல் நிலையை வலியுறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியடைந்த நிலையில் கருத்துமுதற் சொற்களை உருவாகும். (எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா 640. - பெயரியல், சொல்லதிகாரம்.)

த. கருவம்>skt. garva என்பதில் அய்யப்பாடு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியக் காத்திருக்கிறேன். (ருகரப் பலுக்கம் சங்கதம் போகும் போது உகரம் தவிர்த்து மெய்யாகவே போவது இயற்கை. காட்டு. கருப்பம்>கர்ப்பம்; பூருவம் = பூர்வம்)

அன்புடன்,
இராம.கி.

May 20, 2006 1:49 AM
--

குமரன் (Kumaran) said...
நண்பர்களே. இராம.கி. ஐயாவின் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அவருடைய பதிவிலேயே பின்னூட்டமாக இடும்படி கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

May 20, 2006 6:37 AM
--

குமரன் (Kumaran) said...
தெளிவான பதிலைத் தந்ததற்கு மிக்க நன்றி இராம.கி. ஐயா. என்னுடைய பின்னூட்டங்களை உங்கள் பதிவில் இட்டிருக்கிறேன்.

May 21, 2006 5:09 AM
--

கைப்புள்ள said...
நல்ல பதிவு. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். எவ்வளவு யோசித்தும், "யோசித்தும்" மற்றும் "விஷயம்" ஆகியவற்றிற்கு உரிய சரியான தமிழ் சொல் நினைவிற்கு வரவில்லை. தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

May 21, 2006 6:24 AM
--

SK said...
எனக்குத் தெரிந்த மட்டில்,

யோசித்து== நினைவுகூர்ந்து
விஷயம்== செய்தி

என்பது சரியென எண்ணுகிறேன்.

May 21, 2006 8:23 AM

--
கைப்புள்ள said...
நன்றி SK. செய்தி என்பதனை அத்தொடரில் எடுத்தாள நானும் நினைத்தேன். ஆயினும் செய்தி என்றால் "News" என்னும் பொருள் அல்லவா தருகிறது என்று தவிர்த்தேன். இவ்விடத்தில் "தகவல்" என்பது சரியாகுமா?

"நினைவு கூர்ந்து" சரியாகப் பொருந்துகிறது என்றே நினைக்கிறேன்.

May 21, 2006 8:45 AM
--

FloraiPuyal said...
விஷயம் = விதயம்
http://valavu.blogspot.com/2005/05/blog-post.html

May 22, 2006 7:15 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கைப்புள்ள. யோசித்தும் என்பதற்கு சிந்தித்தும் என்று நான் புழங்குவதுண்டு. எஸ்.கே. ஐயா சொன்ன மாதிரி நினைவுகூர்ந்து என்பதனையும் இடத்திற்குத் தக்கபடி புழங்கலாம்.

May 22, 2006 7:33 PM
--

குமரன் (Kumaran) said...
கைப்புள்ள, செய்தி, தகவல், விடயம், விதயம், சங்கதி என்பனவற்றை இடத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தலாம்.

May 22, 2006 7:34 PM
--

குமரன் (Kumaran) said...
எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி எஸ்.கே (ஐயா வேணாம்ன்னு இந்த வார விண்மீன் சொல்கிறேன். உங்களுக்கு ஒப்புதலா? :-) ) & Floraipuyal.

May 22, 2006 7:37 PM
--

SK said...
ஐயா, சார், திரு, திருமதி, அக்கா, சகோதரி
இப்படி அத்துணை ஒட்டுதல் மொழியையும் தவிர்த்து
அப்படியே விளித்தல்
அனைவர்க்கும் நலமே!

மற்றவரைப் பற்றிக் கூற
எனக்கென்ன அதிகாரம்?
என்னை 'எஸ்கேவென விளிப்பதற்கு
என்றுமே சம்மதமே!

ஆமாம்! யாரந்த இவ்வார விண்மீன்?
வாழ்த்துகள் குமரன்!

May 22, 2006 7:47 PM
--

SK said...
தகவல் என்பது தமிழா என எனக்கொரு ஐயம், கைப்புள்ள!

செய்தி என்பதனை news என மட்டும் ஏன் பார்க்க வேண்டும்?

'விஷயம்' என்றும் பார்க்கக் கூடுமே!

May 22, 2006 7:49 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. அனுமதியளித்ததற்கு நன்றி. இந்த வார விண்மீன் மணியன். அவருடைய பதிவுகளை பாருங்கள்.

May 23, 2006 1:09 PM
--

குமரன் (Kumaran) said...
தகவல் என்பது தமிழில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள் எஸ்.கே?

May 23, 2006 1:10 PM
--

பொன்ஸ்~~Poorna said...
தகவல் தாக்கல் எல்லாம் தமிழ் தானே?!! கருவமும் தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்ற சொல்லாகத் தான் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

அப்புறம், குமரன், நீங்கள் அழைப்பதைப் பார்த்து எஸ் கேவை நானும் ஐயா என்று அழைத்துக் கொண்டிருந்தேன்,, ஆனால் கேப்டனைக் (அணித் தலைவன்னு சொன்னா விகேன்னு புரியாதுங்களே) கிண்டல் செய்து அவரை நண்பராக்கி, ஐயாவை விட்டு விட்டேன்.. :)

May 23, 2006 1:27 PM
--

SK said...
தாக்கலில் தாக்கம் இல்லஈ!
தகவல் எனும் சொல்லைக் கேட்கும்போது, ஒரு இனமறியா அந்நிய உணர்வு வருதலை என்னால் தவிர்க்க முடியவில்லை.

தவிரவும் 'ஐயம்' என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போ புதரகம் வந்திருக்கும் 'பி**' பொன் ஸே சொல்லியபின், ஐயம் தீர்ந்தது!

அது சரி, புதரகம் எப்படி இருக்கிறது?

எந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள்?

:)))

May 23, 2006 3:24 PM
--

குமரன் (Kumaran) said...
புதரகம் வந்தாச்சா? சொல்லவேயில்லை?

May 23, 2006 3:31 PM
--

பொன்ஸ்~~Poorna said...
என்னங்க சும்மா, உண்மையான தமிழ்வார்த்தை மாதிரி புதரகம், பொந்தகம்னுகிட்டு; அப்புறம் இவங்க நம்ம ஊரை மன்னகம், சர்தாரகம்னு சொல்லப் போறாங்க!!! :)

அமெரிக்க ஐக்கிய மாநிலங்களுக்கு (United States of America) வந்தாச்சு.. மிஸோரி பக்கம் இருக்கேன் :). குமரனுக்கு நிச்சயம் தூரம்தான்.. எஸ்.கே உங்களுக்கு எப்படி?

May 23, 2006 3:38 PM
--

SK said...
//பிகுலு அயல்நாட்டுப் பயணம்

வரு.வா.சங்கத்தின் கொ.ப.செ நேற்று இரவு சங்கத்தின் அயல் நாட்டு வளர்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்காக புதரகம் (நன்றி: முகமூடி) புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புதரகம்(அமெரிக்கா) கிளம்பிய அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவ்வளவாகப் பதில் அளித்தார்.//
நீங்க சொன்னதைத்தான் குறிப்பிட்டேன்!

[நாங்கதான் எல்லாத்தையும் படிப்போமில்ல!]

நெறைய புதரெல்லாம் பாத்திருப்பீங்களே!

இயற்கை அழகை அப்படியே வெச்சுருப்பாங்கன்னு சொன்னேன்!

நான் இருப்பது வட கரோலினா மாநிலம்.

கொஞ்ச தூரம்தான்.

எத்தனை நாள் இருப்பீர்கள்?

May 23, 2006 3:52 PM
--

பொன்ஸ்~~Poorna said...
எஸ்.கே, இதுக்கு மேல சொந்தக் கதைய இங்க பேசினா, "செருக்கு" விளக்கும் பதிவு செருக்களப் பதிவா ஆகிடப் போகுது.. முருகனுக்கு மயில் அனுப்பி இருக்கேன், தனி மடல் பாருங்க :)

May 23, 2006 4:48 PM
--

`மழை` ஷ்ரேயா(Shreya) said...
சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

அதிர்ஷ்டம் என்பதற்கு இணையாகத் தமிழில் என்ன?
செல்வத்தைக் குறிக்கும் சம்பத்(து) என்பது தமிழல்லத்தானே?

May 25, 2006 7:29 PM
--

குமரன் (Kumaran) said...
மழை ஷ்ரேயா. உங்கள் கேள்விகளுக்கு இவ்வளவு நாள் கழித்து விடை சொல்வதற்கு மன்னிக்கவும். கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

அதிர்ஷ்டத்திற்குத் தமிழில் என்ன? உடனே நினைவிற்கு வரவில்லை. பொன்ஸ், எஸ்.கே. இராகவன், வெற்றி, யோகன் ஐயா, இன்னும் யாருக்குத் தெரிகிறதோ அவர்கள் சொல்லுங்கள்.

சம்பத் என்பது தமிழில்லை. வடமொழி தான். செல்வம் என்பதே தமிழ். செல்வன் என்று ஒருவர் தமிழில் வலைப்பதித்துக் கொண்டிருக்கிறாரே.

July 06, 2006 3:27 PM
--

SK said...
எதிர்பாராப் பேறு பொருத்தமாய் வரும் என நினைக்கிறேன்

அ+த்ருஷ்டம்
த்ருஷ்டம் என்றால் கண்ணால் காணமுடியாதது

July 06, 2006 4:12 PM
--

குமரன் (Kumaran) said...
ரொம்ப சரி எஸ்.கே. பேறு என்பதே ஏற்றச் சொல். ஆனால் அதிருஷ்டம் என்ற வடமொழிச் சொல்லின் பொருளை நீங்கள் சொன்னது போல் பகுத்துப் பார்த்தால் எதிர்பாராத பேறு என்று சொல்லலாம்.

கூவியழைத்தால் வருவான் குமரன் (முருகன்) என்னுமாப்போலே அழைத்தவுடன் வந்து விடை சொன்னதற்கு நன்றி.

July 06, 2006 4:22 PM
--

SK said...
:((((((((

மன்னிக்கவும்.
ஒரு சிறு தவறு!
த்ருஷ்டம் என்றால் காண முடிவது
அ+த்ருஷ்டம் என்றால் காண முடியாதது

:((((((((

July 06, 2006 4:37 PM