Sunday, April 14, 2013

பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் - 2


இறைவன் மனிதருடன் பேச நினைக்கும் போது கனவில் வருவதைத்தான் நாம் பல வரலாறுகளில் காண்கிறோம். விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றி அவரை மன்னன் அவைக்குச் சென்று பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்கக் கட்டளையிட்ட பின் மாயவன் முதல் மந்திரியின் கனவிலும் தோன்றி விஷ்ணு சித்தரை அழைத்து வருவதற்காக பல்லக்கு அனுப்பும்படி கட்டளையிட்டான்.

நவீன நிர்வாகத்துறையில் ஒரு விஷயத்தில் யார் யாருக்குப் பங்கு உண்டோ அவர்கள் எல்லோருக்கும் அந்த விஷயத்தில் செய்ய வேண்டியதை ஒரு சிறந்த நிர்வாகி தெளிவாகச் சொல்லிவிடுவான் என்பர். தூயவன் மாயவனோ இந்த ப்ரபஞ்சத்தையே நிர்வாகம் செய்பவன் அல்லவா? அது மட்டும் இன்றி கீதையில் 'வேறு எந்த கவலையும் இன்றி யாரொருவன் என்னையே அடைக்கலமாக அடைந்து என்னையே வணங்கி வருகிறானோ அவனுக்குத் தேவையானவற்றை கொடுத்தும், அவனிடம் ஏற்கனவே இருப்பவற்றைக் காத்தும் நான் அவனைப் பார்த்து கொள்வேன்' என்று உறுதிமொழி கொடுத்துள்ளான் அல்லவா? அது தான் விஷ்ணு சித்தரின் பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் குறைவறச் செய்து விட்டான்.

முதல் மந்திரி அனுப்பிய பல்லக்கு ச்ரீவில்லிபுத்தூரை அடைந்தது. விஷ்ணு சித்தர் எம்பெருமானின் கருணையை மெச்சிக்கொண்டே மதுரைக்கு வந்து சேர்ந்தார். அடியாரை எந்த நிலையிலும் கைவிட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் அல்லவா அந்த அச்யுதன்.

முதல் மந்திரி தான் கண்ட கனவினைப் பற்றியும், விஷ்ணு சித்தர் மதுரையை அடைந்த செய்தியையும் மன்னனுக்கு அறிவித்தார். பாண்டியனும் விஷ்ணு சித்தர் இறைவனாலேயே அனுப்பப்பட்டவர் என்பதால் அவர் சொல்லும் கருத்துகளைக் கேட்க மிக்க ஆவலுடன் அரசவைக்கு வந்தான்.

அரசவைக்கு வந்த விஷ்ணு சித்தரை தகுந்த மரியாதைகளைக் கொடுத்து ஆசனமளித்து வணங்கி நின்றான் மன்னவன். இறையடியாரும் இறைவனின் திருவடிகளை சிந்தித்து மன்னவனின் கேள்விக்குப் விடை சொல்லத் தொடங்கினார்.

மன்னனின் கேள்வி 'மறுமைக்கு வேண்டியது என்ன? அதை இம்மையில் எப்படி சேர்ப்பது' என்பது தான். அந்த கேள்வியை மனதில் நன்கு வாங்கிக் கொண்ட விஷ்ணு சித்தர் தன் விளக்கத்தைத் தொடங்கினார்.

'மன்னா. நாம் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் புண்ணிய பாவங்களாய் நம்மிடமே திரும்பி வருகிறது. அதையே நாம் விதி என்கிறோம். நாம் இந்தப் பிறவியிலும் இனி மேல் வரும் பிறவிகளிலும் அடையும் இன்ப துன்பங்கள் நாம் முற்பிறவிகளிலும் இப்பிறவியில் இது வரையிலும் செய்த வினைப் பயன்களாலேயே வருகிறது. எது வரை புண்ணிய பாவங்கள் நம் கணக்கில் இருக்கிறதோ அது வரை நமக்கு பிறவி வந்து கொண்டே தான் இருக்கும். பாவங்கள் துன்பத்தைத் தரும் இரும்பால் செய்த விலங்கு என்றால், புண்ணியங்கள் பொன்னால் செய்த விலங்கு. இரண்டுமே மனிதனை பந்தப் படுத்துகிறது.

உடம்போடு உள்ள யாருமே செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. அந்த செயல்கள் நற்செயல்களாய்ச் செய்தால் இப்பிறவியிலும் மறுபிறவிகளிலும் இன்பத்தை அனுபவிப்பர். ஆனால் பிறப்பிறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட முடியாது. அந்த சுழற்சியிலிருந்து விடுபட ஒரே வழி நான் செய்கிறேன் என்ற எண்ணம் இன்றி, இறையருளாலேயே இறைவனுக்காகவே எல்லா செயல்களையும் அவனே செய்து கொள்கிறான் என்று வாக்கு, உடல், மனம், புத்தி, உணர்வு எல்லாவகையிலும் அவன் அருளையே முன்னிட்டுக் கொண்டு செய்தால் அந்த நல்வினைப் பயன்களும் ஒருவனை வந்தடையாது. இதுவே ஒருவன் மறுமைக்காக இம்மையில் செய்ய வேண்டியது' என்று விஷ்ணு சித்தர் விளக்கமாய்க் கூறினார்.


இப்படி விஷ்ணு சித்தர் கூறிய விளக்கம் மிக எளிமையாய் எல்லோரும் கடைபிடிக்கும் வண்ணம் இருந்ததுடன் பாண்டியன் கேள்விக்கும் தகுந்த பதிலாய் அமைந்தது. மன்னவன் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே தாழ்ந்து வந்து அடியாரின் மடியில் விழுந்தது.

பொற்கிழி தானே அறுந்து விஷ்ணு சித்தரின் மடியில் விழுத்ததும் மன்னன் அவையெங்கும் ஆஹாகாரம் எழுந்தது. இவ்வளவு தெளிவாக மறுமைக்காக இம்மைக்குச் செய்ய வேண்டியதை சொன்னதால் பாண்டியன் அவருக்கு 'பட்டர் பிரான்' என்ற பட்டம் கொடுத்து மிகவும் கொண்டாடினான்.

அவருக்கு மேலும் சிறப்பு செய்ய எண்ணி பட்டத்து யானையின் மேல் அவரை அமரவைத்து ஒரு அரச ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தான். தானும் பின்னால் அமர்ந்து சாமரம் வீசிக்கொண்டே சென்றான்.

ஊர்வலம் மதுரை மாநகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மன்னனே சாமரம் வீசி செல்வதைக் கண்டு மக்கள் எல்லோரும் மன்னன் போற்றிக் கொண்டாடும் மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் அலை மோதுகிறார்கள். அரசவையில் இருந்து அவர் சொன்ன அமுத மொழிகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்த புலவர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு விஷ்ணு சித்தரைப் பற்றியும் மன்னனின் சந்தேகத்திற்கு அவர் கொடுத்த எளிமையான பதிலைப் பற்றியும் விவரித்து கூறிக்கொண்டிருந்தனர்.

பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று


என்று பாடினார் ஒரு புலவர்.

மின்னார் தட மதில் சூழ் வில்லிபுத்தூர் என்றொரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து


என்று பாடினார் இன்னொரு புலவர்.

இப்படியே மக்களும் அரசு அதிகாரிகளும் பண்டிதர்களும் புலவர்களும் அரசனும் விஷ்ணு சித்தரை ஊர்வலமாய் அழைத்துவரும் போது, மெய் காட்டும் பொட்டல் என்னும் இடத்திற்கு வரும் போது, திடீரென்று கோடி சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது போன்ற ஒளிவெள்ளம் சூழ்ந்தது. அவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் கண் கூசவில்லை. ஒரு சூரியனே கோடைகாலத்தில் எப்படி சுடுகிறான்? இங்கே அப்படி எரிச்சல் தரும் வெப்பம் இல்லை. மாறாக ஒரு மிகப்பெரிய விசிறியை வைத்து விசிறுவது போல் நன்றால் குளிர் காற்று வந்தது. இதுவரை யாருமே அனுபவித்திராத நறுமணம் கமழ்ந்தது. மக்கள் எல்லோரும் என்றுமே இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தனர். அப்படி அங்கு தோன்றிய காட்சியை கண்டு மீண்டும் ஆஹாகாரம் எங்கும் எழுந்து வான் வரை உயர்ந்து சூழ்ந்தது.


அந்த மாதவன் கருணைக்கடல். பக்த வத்ஸலன். பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்யாய் நின்ற சுடர்சோதியான இறைவன் தோன்றியதால் அந்த இடம் 'மெய் காட்டும் பொட்டல்' என்ற பெயர் விளங்க நின்றது. கோடி சூரிய வெளிச்சத்துடன் தோன்றியவன் அந்த பெருஞ்சோதி தான். தன் பக்தர்களுக்கு அருள் புரிய என்றும் தயாராய் இருப்பதால் அவன் அருட்பெருஞ்சோதியும் ஆகிறான். அவனுடைய கருணையோ பெரும்கருணை. அந்த கருணை அவனுக்கு மட்டுமே உரியது. வேறு யாருக்கும் கிடையாது. அவனே அப்படிப்பட்ட கருணை உருவாய் தனிப்பெரும்கருணையாய் விளங்குபவன்.



தன் பக்தனான பட்டர்பிரானை மதுரை மன்னனும் மக்களும் கொண்டாடும் அந்த இனிய காட்சியை காண்பதற்காக கருடனின் மேல் ஏறி காட்சி தந்தான் கார்முகில் வண்ணன். கருடாழ்வாரின் சிறகிலிருந்து வீசிய காற்று தான் அங்கு நறுமணம் மிகுந்த தென்றலாய் வீசியது. அந்த ஆனந்தமயமான இறைவனைக் கண்குளிர கண்ட மதுரை மக்கள் பலவாறாக அந்த சுந்தரத்தோளுடையானை போற்றத்தொடங்கினர். தோள் கண்டார் தோளே கண்டார்; கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் என்றதற்கேற்ப இறைவனின் இணையற்ற அங்கங்களின் அழகைக் கண்டு ஒருவருக்கு ஒருவர் அன்புடன் காட்டிக்கொண்டனர். அவன் அழகையும் அடியாரை கொண்டாடியதால் தங்களுக்கு அருளப்பெற்றப் பேற்றினையும் பலவாறாக பேசித் திரிந்தனர்.

ஒரு அழகான குழந்தையை ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய். அங்கு வந்த உறவினர் கூட்டம் அந்தக் குழந்தையின் அழகைக் கண்டு வாரியணைத்துப் பலவாறாக போற்றுகிறது. அந்தப் போற்றுதல் எல்லாம் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் எங்கே குழந்தைக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்ற பதறுகிறாள் அந்தத் தாய்.

அது போல தனக்கருள் செய்த இறைவன் எல்லோருக்கும் காட்சி தந்ததும் அவன் காட்சியை கண்ட மக்கள் அவன் அழகைப் போற்றி புகழ்வதைக் கண்டதும் பட்டர் பிரான் மனம் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டு விடுமோ என்று பதறுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லவரும் இருப்பர்; கெட்டவரும் இருப்பர். எல்லார் கண்ணும் ஒன்று போல் இல்லை. எல்லாருமே அவனை இப்போது பார்க்கிறார்கள்; போற்றுகிறார்கள். நல்லவர் கண்டது போல் கெட்டவரும் காண்கிறார்கள்; அதனால் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று அஞ்சி அதற்குப் பரிகாரமாய் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப் பாட ஆரம்பித்துவிட்டார் பட்டர் பிரான்.



இறைவன் எல்லாவிதமான மங்களங்களுக்கும் மங்களமானவன். அவனுக்கு கண்ணேறு படாது. அது மட்டும் அல்லாமல் அவன் என்றும் நிலையாய் இருப்பவன். கல்லும் தோன்றா மண்ணும் தோன்றா காலத்திற்கு முன்னரே இருந்தவன். தொடக்கமற்றவன். அநாதி. அதே போல் இங்குள்ளன யாவையும் அழிந்து போகும் காலத்திலும் அழியாமல் இருக்கப் போகிறவன். முடிவில்லாதவன். அநந்தன். அப்படிப் பட்டவனைப் போய் 'பல்லாண்டு பல்லாண்டு' என்று வாழ்த்துகிறார் என்றால் பட்டர் பிரானின் தாயன்பை என்னவென்று சொல்வது.

அவரின் இந்தப் பதட்டத்தையும் தாயன்பையும் கண்ட அச்யுதன் புன்முறுவல் பூத்து 'விஷ்ணுசித்தரே. மற்றவர் எல்லாம் தங்கள் நலனை என்னிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வார்கள். நீங்களோ அப்படியின்றி என் நலனை வேண்டிப் பாடுவதால் மிக உயர்ந்துவிட்டீர்கள். இன்று முதல் நீர் பெரியாழ்வார் என்று அழைக்கப்படுவீர்' என்று அருளிவிட்டு தன் பக்தனைக் கண்ட மகிழ்ச்சியுடன் பரந்தாமன் பரமபதத்திற்கு எழுந்தருளினான்.


(2005ல் எழுதியதன் மறு பதிவு)

2 comments:

வவ்வால் said...

குமரன்,

சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மீள்ப்பதிவுனு சொல்லிட்டிங்க,ஆனாலும் நம்ம கடமைய செய்யனும்ல!

இப்படியான கெனவுலாம் நமக்கு வரவே மாட்டேங்குது :-))

//நான் செய்கிறேன் என்ற எண்ணம் இன்றி, இறையருளாலேயே இறைவனுக்காகவே எல்லா செயல்களையும் அவனே செய்து கொள்கிறான் என்று வாக்கு, உடல், மனம், புத்தி, உணர்வு எல்லாவகையிலும் அவன் அருளையே முன்னிட்டுக் கொண்டு செய்தால் அந்த நல்வினைப் பயன்களும் ஒருவனை வந்தடையாது. //

பகவான் மேல பாரத்தை போட்டு செய்தால் ,புண்ணியம் நம்ம அக்கவுண்டில் ஏறாது ,அதே போல பகவான் மேல பாரத்தை போட்டு ,கொலை,கொள்ளை செய்தாலும் பாவம் சேராது தானே :-))

பகவத் கீதையில ,அர்ச்சுனன் போரில் கொலை செய்தால் பாவம் வராதுனு உபதேசம் செய்ததும் சாட்சாத் அந்த கண்ணனே தான்!

எப்படி பார்த்தாலும் ,பாவம் ,புண்ணியம் யாருக்கும் வராது,பகவானை நினைச்சா போதும் :-))

இப்ப பாண்டிய மன்னர்கள் இல்லாம போயிட்டாங்க, இருந்திருந்தா நமக்கும் பொற்லிழி கிடைச்சிருக்கும் , வட போச்சே அவ்வ்!

குமரன் (Kumaran) said...

பின்னூட்டத்திற்கு நன்றி வவ்வால்.

நன்கு சிந்திக்கும் நீங்கள் இன்னும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வளவு தானா கண்ணன் சொன்ன தத்துவம்? கட்டுடைப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை. அதற்கும் மேலே சென்று சிந்தித்துப் பார்ப்பது தான்.

கீதையில் 'கொலை செய் பாவம் வராது' என்று மட்டும் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றுவிடவில்லை கண்ணன். முன்னும் பின்னும் நிறைய சொல்லியிருக்கிறான். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வேண்டுமானால் படித்துச் சிந்திக்கப் பொறுமையும் கூர்மதியும் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் அப்படி இல்லையே?! :)