Monday, January 07, 2013

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!



அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!

திருவிக்கிரம அவதாரம் எடுத்த போது இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்தவனே! உன் திருவடிகள் போற்றி!

கடல் கடந்து சென்று அங்கே தென்னிலங்கையில் இருந்த பகையை அழித்தவனே! உன் திறமை போற்றி!

தூள் தூள் ஆகும்படி வண்டிச்சக்கரமாக வந்த சகடாசுரனை உதைத்தவனே! உன் புகழ் போற்றி!

கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை மரத்தில் எறிந்து கொன்றவனே! உன் வீரக்கழல்கள் போற்றி!

பெருமழை பெய்து ஆயர்பாடி வெள்ளத்தில் தவித்த போது கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்தவனே! உன் குணம் போற்றி!

பகையை வென்று இல்லாமல் செய்யும் உனது திருக்கையில் இருக்கும் வேல் போற்றி!

என்றென்றும் உன் பெருமைகளையே போற்றி எங்களுக்கு வேண்டியதெல்லாம் பெறுவதற்காக இன்று நாங்கள் வந்தோம்! எங்கள் மேல் இரக்கம் கொள்வாய்!




3 comments:

R.DEVARAJAN said...

உங்கள் பதிவுகளும், பாடல்களும்
மிக அருமை, குமரன்
வாழ்க !

தேவ்

R.DEVARAJAN said...

உங்கள் பதிவுகளும், பாடல்களும்
மிக அருமை, குமரன்
வாழ்க !

தேவ்

குமரன் (Kumaran) said...

நன்றி தேவ் ஐயா.