Sunday, January 06, 2013

மாரி மலை முழைஞ்சில் ...




மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

மழை எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மலையில் இருக்கும் குகை. அதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம். அது தனது உறக்கத்தை விட்டு எழுந்து தீ போல் விழித்து, பிடரி மயிர் பொங்க, எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும்.

அந்த சிங்கத்தைப் போலே பூவைப்பூவண்ணக் கண்ணா, நீயும் நின் அரண்மனையை (அந்தப்புரத்தை) விட்டு எழுந்து இங்கே வந்து அழகானதும் பெருமை வாய்ந்ததும் ஆன உனது சிங்காசனத்தில் அமர்ந்து கொண்டு, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு அறிந்து எங்களுக்கு அருள் செய்யவேண்டும்!


1 comment:

Unknown said...

அருமை சகோதரா