Friday, January 11, 2013

சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!





கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் எமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!

பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதற்காக மேய்ச்சல் காட்டிற்குக் கூட்டிச் சென்று, அவை பின்னே நாங்களும் சென்று அங்கே எல்லோரும் சேர்ந்து அமர்ந்து இருப்பதைப் பகிர்ந்து உண்போம்! அதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது!

ஆனால் எப்படியோ அறிவில் குறைந்தவர்களான எங்கள் ஆயர் குலத்தில் உனது பிறப்பு ஏற்படும்படி புண்ணியம் செய்திருக்கிறோம்!

எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா (பசுக்களைக் காப்பவனே)! உன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவு நீ நினைத்தாலும் ஒழிக்க இயலாது!

அறியாத பிள்ளைகள் நாங்கள்! அன்பினால் உன்னை 'அடே கிருஷ்ணா! அடே நண்பா! இங்கே வாடா!' என்றெல்லாம் உனது பெருமைக்கு ஒவ்வாதவாறு உன்னை அழைத்திருப்போம்! அதனால் எங்கள் மேல் கோவித்துக் கொள்ளாதே!

எங்களுக்கு எல்லாம் தலைவனே! நீ வேண்டுவதை எல்லாம் தருவாய்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...


நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.