Saturday, November 20, 2010

கார்த்திகையில் கார்த்திகை நாள்

முழு நிலவு நாளில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் அடிப்படையில் மாதங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சித்திரை நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் (சித்திரா பௌர்ணமி) அமைந்தால் அந்த மாதம் [மதி (நிலவு) --> மாதம்] சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் அமைந்தால் அந்த மாதம் வைகாசி (வைசாகி --> வைகாசி). அப்படியே ஒவ்வொரு மாதத்திற்கும் பார்த்துக் கொண்டு வந்தால் கார்த்திகை நட்சத்திரத்தில் முழு நிலவு அமையும் மாதம் கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் தீபத்திருநாள் என்றும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விளக்கீடு என்னும் இந்தத் தீபத்திருநாள் பெரும் கொண்டாட்டமாக இருந்தது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன.

திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும் இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.


பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?

ஏது பெருமை? இன்றைக்கு என்ன?

சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும் பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் இந்த நாள்.



மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை! அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.

நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார் நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார் திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!

அப்படியே செய்கிறேன்! இதோ வாழ்த்துகிறேன்!



வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்.



எதிரிகளுக்கு காலன் ஆகிய பரகாலன் வாழ்க! கலியின் கொடுமையைக் குறைக்கும் கலிகன்றி வாழ்க! திருக்குறையலூரில் வாழும் தலைவன் வாழ்க! மாயோனை தனது வாளால் மிரட்டி அவனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்ற திருமங்கை மன்னனின் தூய்மையான சுடர் விடும் வேல் வாழ்க வாழ்க!

நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமய
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே


அது மட்டுமா?! பரகாலன் பாடிய செந்தமிழ்ப் பனுவல்கள் நெஞ்சில் இருக்கும் அறியாமை என்னும் இருளைக் கடிந்து நீக்கும் தீபம்! எது செய்தாலும் எளிதில் அடங்காத, என்றைக்குத் தொடங்கியது என்று அறியாத பிறப்பு இறப்புச் சுழல் என்னும் கொடிய நஞ்சினை நீக்கும் நல்லதொரு அமுதம்! பழந்தமிழ் இலக்கணம் பேசும் ஐந்து துறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்த இலக்கியம்! வேதங்களில் சாரம்! வேற்று சமயங்கள் என்னும் பஞ்சுக்குவியல்களை அழிக்கும் அனலின் பொறி!


எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!


இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கையாழ்வாரின் பனுவல்கள் என் நெஞ்சத்தில் எப்படி தங்கும்? எங்கள் கதியான இராமானுசமுனியே! எங்களது ஐயங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்ட தவத்தோர் தலைவனே! புகழ் பொங்கும் திருமங்கைமன்னன் தந்த ஆயிரம் மறைகளும் தங்கும் மனத்தை நீயே எனக்குத் தரவேண்டும்!

**

திருமங்கை ஆழ்வாருக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு. எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த ஆழ்வாருக்கு உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்). முருகனுக்கும் இவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்).

14 comments:

pathykv said...

'kattir' dinnu serkohoye viShayam.
K.V.Pathy

மார்கண்டேயன் said...

ꢒꢸꢪꢬꢥ꣄ ꢡꢸꢪꢶ ꢂꢪ꣄ꢬꢥ꣄
குமரன் துமி அமரன்
ꢂꢪ꣄ꢬꢾ ꢡꢾꢪꣁ ꢱꢿꢡ꣄ꢡꢾ ꢒꢮꢶꢡꢥ꣄
அம்ரே தெமோ சேத்தே கவிதன்
ꢂꢪ꣄ꢒꣁ ꢒꢾꢬꢸꢮꣁ ꢦꢸꢥꢶꢡꢥ꣄
அம்கோ கேருவோ புனிதன்

மேலே ஸௌராஷ்டிரா மொழியிலும் அதற்கிணையான தமிழ் மொழிமாறிலியும் (trans-literation) கொடுத்துள்ளேன்,

ஸௌராஷ்டிரா எழுத்துக்களைக் காண http://www.sourashtra.info/daar.htm இக்குச் சென்று Sourashtra Unicode Font எனும் ஸௌராஷ்டிரா ஒருங்குறி எழுத்துருவை தரவிறக்கம் (Download) செய்து தங்கள் கணினியில் நிர்மாணித்து (Install), பின் இதே வலைப் பக்கத்தை நெருப்பு ஓநாய் (Fire Fox) இணைய திறப்பான் (Internet Explorer) மூலம் திறக்கவும்,

அதன் தமிழாக்கம்:

குமரன் நீர் அமரன்,
எம்மில் ஓர் கவிதன்,
செய்வீர் எம்மை புனிதன்

பதிவைச் சொல்வதா, பதிவில் உள்ள பாசுரத்தை சொல்வதை,

நீர்தானைய்யா சொல்லவேண்டும்

வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்

நட்புடன், மார்கண்டேயன்.

Kavinaya said...

திருக்கார்த்திர்கைத் திருநாள் வாழ்த்துகள் குமரன். மாதங்கள் பெயர்கள் பற்றி இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன். மற்ற கேள்விக்கெல்லாம் நீங்களே பதில் சொன்னப்புறம் நான் வந்து சரியான்னு பாத்துக்கறேன் :)

குமரன் (Kumaran) said...

Pathy aiyaanu,

'kattir' dinnu! tiso menanyaa? mii aththOs mudhullo aigini podariyO. 'mhodo karkEl' menuvE ami.

குமரன் (Kumaran) said...

Suresh,

tumi jukku mogo pugaznjaraas meni lagaras.

குமரன் (Kumaran) said...

திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள் அக்கா.

படங்களைப் பார்த்தீங்கன்னா உடனே சொல்லிடுவீங்க அக்கா.

Radha said...

அக்கா, கேள்விகளுக்கு clue:
தம்பதி சமேதராய், கையில் வேலுடன் இருக்கும் கடைசி இரண்டு படங்களைப் பார்த்தாலே போதும். :-)

Kavinaya said...

பாத்துட்டேனே. அவர் கையில் இருக்கறது வேலா, ஈட்டியா? ரெண்டும் ஒண்ணுதானா? அப்புறம்... ஒரே ஒரு மனைவிதானே இருக்காங்க?

குமரன் (Kumaran) said...

அக்கா. ரெண்டாவது கேள்விக்குப் பதில் ரெண்டு பேருமே வேல் வச்சிருக்காங்கங்கறது. முதல் கேள்வியில முருகனுக்கும் ஆழ்வாருக்கும் இருக்கிற ஒத்துமை பத்தி கேக்கலை. மத்த ஆழ்வார்களுக்கு இல்லாத சிறப்பு இந்த ஆழ்வாருக்கு - அது என்னன்னு கேட்டிருக்கேன். தம்பதி சமேதராக நிறைய கோவில்களில் காட்சியளிக்கும் ஒரே ஆழ்வார் இவர் மட்டும் தான்.

Kavinaya said...

ஓ. சரி. அப்ப நான் பாசாகலையா :(

நாடி நாடி நரசிங்கா! said...

திருமங்கை ஆழ்வார் பற்றிய பதிவு அற்புதம் .
ஆழ்வார் பாடலுக்கு பரிசாக வேல் கிடைத்தது என்று கேள்விபட்டேன் . உண்மையா.

குமரன் (Kumaran) said...

திருமங்கையாழ்வாரும் திருஞானசம்பந்தரும் சந்தித்தபோது ஆழ்வாரின் தமிழ் பாசுரங்களின் அழகைப் பாராட்டி முருகனின் அம்சமான திருஞானசம்பந்தர் தனது வேலினைப் பரிசாகத் தந்ததாகச் சொல்லுவார்கள். ஆனால் கால ஆராய்ச்சியின் படி இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்வதைப் படித்திருக்கிறேன்.

சிற்றரசராக இருந்த திருமங்கையாழ்வார் வேலை ஏந்தி இருப்பது இயல்பே.

thiyagarajan.s said...

அதென்ன முருகன் கையில இருக்கவேண்டிய வேல், நாமம் போட்டு இருக்கிற இவர் கையில வச்சுருக்காரு

குமரன் (Kumaran) said...

இடுகையைப் படிச்சீங்களா இல்லை படத்தை மட்டும் பாத்துட்டு கேக்கிறீங்களா? :-)