Monday, February 22, 2010

புறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்!


அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான அகநானூறு என்ற சங்க கால தொகை நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற புலவர் பெருமான் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு என்ற தொகை நூலிற்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். அங்கு போலவே இங்கும் சிவபெருமானின் திருவுருவ சிந்தனை ஓங்கும் வண்ணம் இப்பாடலும் இயற்றப்பட்டிருக்கிறது.

கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே.

மஞ்சள், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களை சிவபெருமானின் திருவுருவத்தில் கண்டு அக்காட்சியை ஒரு வண்ணக்காட்சியாகத் தருகிறது இந்த கடவுள் வாழ்த்து.

மழைக்காலத்தில் மலர்வது மஞ்சள் நிறம் உடைய மணம் வீசும் கொன்றைப்பூ. அப்பூவினால் ஆன கண்ணியைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான். அழகிய வண்ண மார்பின் மீது அணிந்த தாராகவும் அக்கொன்றைப்பூவே இருக்கின்றது. கண்ணி என்பதற்கு தார் என்பதற்கும் பொருளை, அகநானூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பார்க்கும் போது பார்த்தோம். மாதொருபாகனாக விளங்கும் திருவடிவைப் போற்றும் வகையில் அங்கே கார்விரிக் கொன்றை பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன் என்று மாலை அணிந்ததையும் பாடினார் புலவர். இங்கே பெண் உருவை மறைத்துத் தோன்றும் திருவடிவைப் போற்றுகிறார் போலும். அதனால் தான் மாலையைப் பாடாமல் கண்ணியையும் தாரையும் மட்டும் பாடினார். கண்ணி கார் நறுங்கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை!

சிவபெருமானது ஊர்தி (வாகனம்) ஒளிவீசும் வெண்ணிறம் கொண்ட விடை, இடபம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆனேறு. அவனுடைய சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் சீர் மிக்க கொடியும் அந்த ஏற்றை உடையதே. ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!

இப்படி மஞ்சளும் வெண்மையும் அழகு செய்தது போதாதென்று நஞ்சையுண்டு உலகைக் காத்ததால் பெற்ற தொண்டையின் கருநிறம் சிவபெருமானின் திருவுருவத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கறை கொண்ட திருமிடறு (தொண்டை) அழகு செய்தலும் செய்தது; கறை மிடறு அணியலும் அணிந்தன்று!

அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால் மறைகளைச் சொல்லும் அந்தணர்களால் போற்றப்படும். அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே!

பெண் என்ற சொல்லுக்கே இலக்கணமான உமையன்னையை தன் உடலில் ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் சிவபெருமான். சில நேரங்களில் அந்தப் பெண் உருவைத் தன்னுள் அடக்கி மறைத்தாலும் மறைப்பான். பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்!

பிறையைப் போல் வளைந்த நெற்றி அழகுடையதாக இருக்கிறது; பிறை நிலவு நெற்றியின் மேல் நின்று அழகு பெற்றது; பிறை நுதல் வண்ணம் ஆகின்று!

இறைவன் சூடியதால் அப்பிறை நிலவு பதினெட்டு வகைக் கூட்டத்தாரால் போற்றப்படும். அப்பதினெட்டு வகையினர் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம் (விண்மீன் கூட்டம்), ஆகாசவாசிகள், பூலோகவாசிகள். (இப்படி ஒரு பட்டியலைத் தந்துவிட்டு 'பிறவாறும் உரைப்பர்' என்றும் சொல்கிறது உரை. பிறவாறு எப்படி பொருள் உரைக்கப்பட்டது என்பதைத் தேடிக் காணவேண்டும்). அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!

எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்கும், நீர் வற்றியறியாத கங்கையைத் தலையில் சூடிய, நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய, தாழ்ந்த திருச்சடையை உடைய, சிறந்த செய்தற்கு அரிய தவத்தை உடைய சிவபெருமானுக்கு இத்திருவுருவம் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்து தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே!

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால்//

அக் கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்ட அக்கறை!

சிவபிரானின் கழுத்துக் கருநீலமும், மேனி வெண்மையும், மஞ்சள் பூக்களும் செம கலர் காம்பினேஷன்! ரொம்ப அழகா இருக்கு அருந் தவத்தோன் வர்ணனை!

//நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய//

இந்தக் குண்டிகை எதற்கு? சிவபெருமானின் குண்டிகைக்கு ஏதாச்சும் சிறப்புப் பேர் இருக்கா குமரன்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஊர்தி வால் வெள் ஏறே;
சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!//

உம்...
அப்ப என் முருகன் தான் ஸ்பெஷலா?

பெருமாளுக்கு ஊர்தியும் கருடன்! கொடியும் கருடன்!
ஈசனுக்கு ஊர்தியும் காளை! கொடியும் காளை!

என் முருகனுக்கு மட்டும் தான் ஊர்தி மயில்! கொடி கோழி!
வாவ்! சூப்பரு! :)

Unknown said...

கொன்றை மலரும் செண்பக மலரும் அம்மை அப்பருக்கவே விரிந்த மலர்கள் .
..இம் மலர்களை வண்டினம் வந்து அமராது .
..இம் மலர்களை சொக்கர் புஷ்பம் சொவர்ண புஷ்பம் என்பர் ..
.சித்திரை கனி அன்று இவ் விரு புஷ்பங்களை யும் படைத்து வணங்குதல் மிகவும் நன்று ....சித்ர்ம்..//

குமரன் (Kumaran) said...

குண்டிகை சிவபெருமானிடம் எதற்கு இருக்கிறது என்றும் அதன் சிறப்புப் பெயர் என்ன என்றும் தெரியாது இரவி.

குமரன் (Kumaran) said...

அருமையான தகவல்கள். நன்றி சித்ரம்.