Friday, January 15, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 8 (எண் திசையும் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமானுசர்)




கூரத்தாழ்வானின் குருபரம்பரை என்ற தலைப்பில் வைணவ குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று ஆசாரிய பரம்பரையில் வந்த ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைத் தொடர் இடுகைகளாக இதுவரை பார்த்தோம்; இப்போது கூரத்தாழ்வானின் ஆசாரியரான எம்பெருமானார், இளையாழ்வார், உடையவர் முதலிய திருப்பெயர்களைக் கொண்ட இராமானுசரின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம். கருணையே வடிவான இராமானுசர் தம் வாழ்நாளில் செய்த திருச்செயல்கள் எல்லாம் ஓர்இடுகையில் சொல்லி நிறைவு செய்ய இயலாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருடைய திவ்ய சரிதத்திலிருந்து பேசிக் கொண்டே இருக்கலாம்; இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சுருக்கமாக 'உடையவர்' என்னும் பதிவில் படிக்கலாம். இந்த இடுகையில் இராமானுசரின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில சித்திரங்களுடன் அவருடைய வாழித் திருநாமங்களைப் பொருளுடன் சொல்லிச் செல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன். அடியேன் இராமானுச தாசன்.

அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே




அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே – காஞ்சிபுரம் அத்திகிரி அருளாளப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க.

அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே - கருணையே வடிவான திருக்கச்சி நம்பிகளிடம் இருந்து அத்திகிரி வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைப் பெற்றவன் வாழ்க.

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே - மிகுந்த பக்தியுடன் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரையான ஸ்ரீபாஷ்யத்தை இயற்றியவன் வாழ்க.

பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே – பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் என்ற பத்து ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருளை மிகவும் உணர்வு கலந்து கற்றவன் வாழ்க.

சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே - இறைவனாலேயே மயக்கம் இல்லாத அறிவு அருளப்பெற்றதால் தாமசம், ராஜசம் முதலிய குணங்கள் இல்லாமல் சுத்த சத்துவ குணமே கொண்டிருந்த மகிழ மாலை அணிந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உய்ந்தவன் வாழ்க.

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே - தொன்மையான அறிவினைத் தந்த பெரிய நம்பிகளின் திருவடிகளைச் சரணடைந்தவன் வாழ்க.

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே - சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க.

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே - எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.



எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே


எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே - எட்டு திசைகளில் உள்ளவர்களும் எண்ணி வணங்கும் இளையாழ்வார் என்ற திருப்பெயர் பெற்ற துறவிகளின் அரசனான எதிராசன் வாழ்க.

எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே - எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் சீடர்களுக்கு எண்ணான்கு முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட ஈரடி மந்திரத்தை (த்வயம்) அதன் பொருளுடன் சொல்லி வைணவ சமயம் நிலை கொள்ளும் படி செய்தவன் வாழ்க.

பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே - கால வெள்ளத்தில் இல்லாத பொருள் எல்லாம் சொல்லப்பட்ட வேதத்தை அந்தக் குறைகள் எல்லாம் நீங்கும் படி உண்மைப் பொருள் அறிந்து அதனைக் கொண்டு பிரம்ம சூத்திர உரையான ஸ்ரீபாஷ்யத்தைச் செய்த பாஷ்யக்காரர் வாழ்க.

பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே - எதிர்த்து வந்தவர்களுக்கு எல்லாம் காலனைப் போன்ற திருமங்கையாழ்வாரின் திருவடிகள் இரண்டினையும் போற்றும் இராமானுசன் வாழ்க.

தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே - எம்பெருமானின் திருவடி நிலைகளான சடாரியான, குளிர்ந்த தமிழ் மறையைத் தந்த வள்ளல் நம்மாழ்வாரின் திருவடி நிலைகள் ஆனவன் வாழ்க.

தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே - மண்ணுலகையும் விண்ணுலகையும் திருவரங்கனும் திருவரங்கநாயகியும் தரப் பெற்று அவர்களின் சொத்துகள் அனைத்தையும் 'உடையவர்' என்ற திருப்பெயர் பெற்றவன் வாழ்க.

தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே - அலைகடல் சூழ்ந்த திருப்பெரும்பூதூரில் பிறந்த, எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து, தன் ஆசாரியன் சொல்லை மீறித் தான் நரகம் புகுந்தாலும் மற்ற எல்லோரும் உய்வடைவார்கள் என்று எண்ணி அனைவருக்கும் மந்திரத்தின் உட்பொருளைச் சொன்ன, எம்பெருமானையும் மிஞ்சும் கருணையே வடிவான எம்பெருமானார் வாழ்க.

சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே - சித்திரையில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவன் வாழ்க வாழ்க.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே



சிறப்புகள் நிறைந்த எதிராசரின் திருவடிகள் வாழ்க. அவர் தனது இடுப்பில் அணிந்திருக்கும் சிவந்த காவி ஆடை வாழ்க. அழகு நிறைந்த சிவந்த உடல் எப்பொழுதும் வாழ்க. மார்பில் விளங்கும் முப்புரிநூல் வாழ்க. இணையாக இருக்கும் தோள்கள் வாழ்க. என்றும் சோர்வு கொள்ளாத தூய்மையான சிவந்த திருமுகச் சோதி வாழ்க. அந்த திருமுகத்தில் விளங்கும் தூய்மையான புன்முறுவல் வாழ்க. ஒன்றுக்கொன்று துணையான அவருடைய தாமரை மலர்க்கண்கள் வாழ்க. ஈராறு பன்னிரண்டு திருநாமம் (திருமண் காப்பு) அணிந்த அவருடைய எழில் மிகுந்த திருமேனி வாழ்க. அவர் இனிதாக அமர்ந்திருக்கும் இருப்போடு அவர் காட்டும் அழகிய ஞான முத்திரை வாழ்க.


அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே


அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே - மாயாவாதம் என்னும் அறுசமயச் செடியை அதன் அடியோடு மறுத்தவன் வாழ்க.

அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே - வேதங்களையும் வேதாந்தங்களையும் தவறாக பொருள் கொள்ளும் குதிருட்டிகள் எல்லா இடங்களிலும் அடர்ந்து வந்த காலத்தில் அவர்கள் அறவே இல்லாத படி செய்தவன் வாழ்க.

செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே - 'கலியும் கெடும் கண்டு கொண்மின்' என்று இவர் வருகையை முன்கூட்டியே நம்மாழ்வார் பாடிய படி வந்து எங்கும் நிறைந்திருந்த கலி புருடனின் கொடுமையைச் சிறிதும் இல்லாமல் தீர்த்துவிட்டவன் வாழ்க.

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே - திருவரங்கநாதனுடைய செல்வம் முழுவதையும் வருங்காலம் முழுவதும் தடையின்றி எல்லா விழாக்களும் முறைப்படி நடக்கும் வகையில் திருத்தி வைத்தவன் வாழ்க.


மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே - வேத வேதாந்தங்கள் அனைத்திற்கும் தகுந்த பொருள் உரைத்தவன் வாழ்க.


மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே - நம்மாழ்வார் உரைத்த தமிழ் மறையாம் திருவாய்மொழி முதலிய பாசுரங்களை வளர்ந்தவன் வாழ்க.


அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே - அறத்தில் சிறந்தவர் வாழும் திருப்பெரும்பூதூரில் அவதரித்தவன் வாழ்க.


அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே - அழகில் சிறந்த துறவிகளின் அரசன் எதிராசர் திருவடி இணைகள் வாழ்க வாழ்க!

சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!


சங்கரர், யாதவபிரகாசர், பாஸ்கரர், பிரபாகரர் முதலியவர்களின் மதங்களான மாயாவாதம் முதலியவை சாய்வுற, வாதம் செய்ய வருபவர்கள் யாரும் இல்லாமல் போவார்கள் என்று நான்கு வேதங்களும் மகிழ்ந்து 'இனி தவறான பொருள்கள் இன்றி வாழ்ந்தோம்' என்று மகிழ்ந்திடும் நாள்; வெம்மை தரும் கலிபுருடன் இனி இங்கே நம் வலிமை இல்லாமல் போய்விடும் என்று மிகவும் தளர்ந்திடும் நாள்; பூவுலகம் இனி தீயவர்களின் கூட்டம் குறைந்து நம் சுமை குறையும் என்று துயரின்றி விளங்கிடும் நாள்; திருமங்கை மன்னன், நம்மாழ்வார் முதலிய முன்னோர்களான ஆழ்வார்களின் பாசுரங்கள் நிலைபெறும் நாள்; என்றும் அழியாத திருவரங்கத் திருநகர், திருமலை திருப்பதி முதலிய திவ்ய தேசங்கள் உவகை கொள்ளும் நாள்; கயல் மீன்கள் நிறைந்த குளங்களும் கிணறுகளும் சூழ்ந்த வயலை உடைய சிறப்புடைய திருப்பெரும்பூதூரில் வந்த திருவுடையோன் இளையாழ்வார் என்னும் இராமானுசர் வந்து உதித்த நாள் (சித்திரை மாதத்) திருவாதிரைத் திருநாளே!

93 comments:

Raghav said...

வாழி எதிராசன் வாழி எதிராசன் !!

நினைத்து நீ வாழ் மனமே நமக்கருள் செய்ய வந்த ராமானுசன் பதத்தை !!

ஜெயசிம்மம் ஸ்ரீராமானுஜம்
ஜெயசிம்மம் ஸ்ரீராமானுஜம் !!

Raghav said...

எனது அலுவலக நண்பர் (அத்வைதி) ஸ்ரீபாஷ்யம் பற்றி சிறப்பாக சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே கூடலுக்கு வந்தால் எம் இராமானுசனை கண்குளிர தரிசிக்கும் பாக்யம்..

எப்போதும் எதிராசன் வடிவழகு என் மனத்திலிருக்கவே விரும்புகிறேன்...

Raghav said...

அருமையாக பதிஞ்சுருக்கீங்க குமரன்.. அது என்னமோ மற்ற ஆசார்யர் வாழி திருநாமங்களை விட இராமானுசரின் வாழி திருநாமம் எளிதில் புரிகிறது..

Raghav said...

இடுப்பில் ஆடை இல்லாமல் ராமானுச விக்ரஹம் எந்த ஊரில் குமரன்?? தெரிந்தால் அங்கு சென்று என்னால் ஆன கைங்கர்யமாக அவருக்கு காவி ஆடை சமர்ப்பிக்க எண்ணம்.

Raghav said...

//அடியேன் இராமானுச தாசன்.//

முதல் முதலா சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.. சரியா :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் "கருணை" எம்பெருமானார்....
எங்கள் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

பகவதோஸ்ய "தயைக" சிந்தோ...
ராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே! சரணம் ப்ரபத்யே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வணங்குதல் அல்லது வாழ்த்துதல் என் நாவிற்கு அடங்காது!

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பற்பம் எனத் திகழ் பைங்கழலும், உந்தன் பல்லவமே விரலும்...

பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும், பதிந்த நல் மருங்கு அழகும்...

முப்புரி நூலோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்...

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்...

கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்...

காரி சுதன் கழல் சூடிய முடியும், ககனச் சிகை முடியும்...

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு, என் இதயத்து உளதால்,

இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!இல்லை எனக்கெதிரே!

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு, என் இதயத்து உளதால்,
இல்லை எனக்கெதிர்!
இல்லை எனக்கெதிர்!
இல்லை எனக்கெதிரே!

தமிழ் வேதம், தமிழ்த் தரணியில், ஆலயம் தோறும் தழைக்கச் செய்த...
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவில் படங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை!
இயற்கையான நீர் கலப்பு வர்ணங்கள் கொண்டு வரையப்பட்டு, தஞ்சை ஓவியங்கள் போலவே காட்சி அளிக்கின்றன!

இராமானுசன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எண் திசையும் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமானுசர்//

இன்னருளால்...
பாருலகில்...
ஆசை உடையோர்க்கு எல்லாம்...
பேசி...
வரம்பு அறுத்தார் பின்!

இராமானுசன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே//

இதை ஆறு வார்த்தைகள் பெற்றோன் என்றும் கொள்ளலாம்!
நமக்கான ஆறை (வழியை) கேட்டுப் பெற்றோன் என்றும் கொள்ளலாம்!

இப்படித் தனக்கு மட்டும் மோட்சம் என்றெண்ணாது,
சிறு வயதிலேயே, அனைவருக்கும், ஆறு என்ன? என்று கேட்டுப் பெற்ற...

நம் இராமானுசன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே//

மகிழம் பூ நம்மாழ்வாருக்கு எப்படி சிறப்பாக உரித்தானது குமரன்?
பலரும் மகிழம் பூவை நம்மாழ்வாருக்குச் சிறப்பாக்கிச் சொல்கிறார்கள்! வகுளாபரணன் என்று கொண்டாடுகிறார்கள் அல்லவா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே//

சித்திரைத் திருவாதிரையில் இராமானுசர் பிறந்தது ஓர் சிறப்பு என்றால்...
அவருக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே,
அதே சித்திரைத் திருவாதிரையில், சங்கரர் பிறந்தது இன்னொரு சிறப்பு!

இரு பெரும் ஆசார்யார்கள், சமயத்தில் சமயம் காக்க வந்தவர்கள், ஒரே நாளில் உதித்தது, வியப்பிலும் வியப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பொதுவாக...பலருமே...பிறவிக் கஷ்டம் போதும்..."எனக்கு" மோட்சம் கொடு, "எனக்கு" மோட்சம் கொடு என்றே கேட்பார்கள்!

ஆனால் இராமானுசரோ, அரங்கனிடம் கேட்ட முதல் விண்ணப்பமே,

"சரணம் என வந்த ’எல்லார்க்குமே’ மோட்சம் என்று நீயும்,
பின்னர் மாறனும் சொன்னதை,
ஊரறிய உறுதிப்படுத்த வேண்டும்" - என்பது தான்!

இப்படித் தனக்குக் கேட்காமல், அடியார்க்கு கேட்டவரிடம் தான்...

இராமானுச சம்பந்தா சம்பந்தம் உடையவர்க்கு எல்லாம் தந்தோம் என்று சொல்லி,
நித்ய விபூதி, லீலா விபூதி - என இரண்டுக்குமே "உடையவர்" என்று பேரிட்டு அழைத்தான் அரங்கன்!

மேலும் ஒட்டுமொத்த சமயத்தையே "எம்பெருமானார் தரிசனம்" என்றும் பேரிட்டு வைத்தான்!

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் - அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார்கள் அவதரித்த திருநாட்களை விட, உடையவர் அவதரித்த திருநாளை, இன்னும் போற்றுகிறார், மணவாள மாமுனிகள்.

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திரு வாதிரை!

எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் சீடர்களுக்கு எண்ணான்கு முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட ஈரடி மந்திரத்தை (த்வயம்) அதன் பொருளுடன் சொல்லி//

இந்த எழுபத்தி நான்கும், வீர நாராயணபுரம் ஏரியின் 74 மதகுகள் போல் அமைந்தவையாம்! நாதமுனிகள் பிறந்த ஊரையும் சிறப்பிக்க, இப்படிச் செய்யப்பட்டது!

நம்மாழ்வார் மட்டுமில்லாமல், ஒவ்வொரு முன்னாள் ஆசார்யரையும், பார்த்து பார்த்து, சிறப்புச் செய்த இராமானுசரின் உள்ளத்தைத் தான் என்னவென்பது! இதுவல்லவோ ஆசார்ய ஹ்ருதயம்!

ஆசார்ய ஹ்ருதயம் குளிர்வித்த இராமானுசன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்றும் வேதாந்தக் கடலின் ஆழமே இவர் தான் என்னும் படிக்கு உள்ள, வேதாந்த தேசிகர்,

வரிக்கு வரி, தன் அத்தனை நூல்களிலும், இராமானுசரைக் கண்களால் ஒத்திக் கொள்வார்!

என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு..
யான் அடைவேன் அவர் குருக்கள் நிரை வணங்கி
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்...
என்றே பாடுகிறார்!

ஓர் வாரணமாய் வாதக் கதலிகள் மாய்த்த பிரான் எங்கள் இராமானுசன் என்று உரிமை கொண்டாடிக் கொள்வார்!

இராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தை...
சிந்தியோம் இனி அல் வழக்கே!
அவன் அடியோம், படியோம் இனி அல் வழக்கே...

என்றெல்லாம் தேசிகன் கொண்டாடும் எங்கள் இராமானுச முனிவன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழில் மட்டுமல்லாது, வடமொழியிலும், உடையவர் வெகுவாகப் போற்றப் படுகிறார்!

யோ நித்யம் அச்சுத பதாம்புஜ யுக்மருக்ம என்று தொடங்கும் துதியில்..

அஸ்மத் குருர் பகவதோஸ்ய, தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே!

என்று "தயைக சிந்தோ"-கருணை வள்ளலான...இராமனுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தெலுங்கு மொழியிலும் இராமானுசன் பலவாறு போற்றப் படுகிறார்!
ஆந்திர மக்களின், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் இராமானுச அன்பு, இன்னிக்கும் அலாதியானது! ஒவ்வொரு மார்கழியிலும் ஆந்திராவில் காணலாம்!

தியாகராஜருக்கும் முந்தைய காலத்தவரான...
அன்னமாச்சார்யர், இராமானுசன் மேல் ஒரு தனிக் கீர்த்தனையே செய்துள்ளார்!

இதோ!

கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு
என்று துவங்கும் தெலுங்கு கீர்த்தனையில்...

மலசி ராமானுஜுலு
மாடலாடே தெய்வமு..

ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..

நயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா) நாக மெக்க வாகி தன்னு
தய சூசி தய சூசி ராமானுஜ தெய்வமு...

என்று சுந்தரத் தெலுங்கில் கொண்டாடப்படும்,
இராமனுஜ பாத பத்மாலு சரணம்!
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே//

வேதங்களைத் தனித் தனியாகப் படித்து விபரீத பொருள் கொள்ளாமல்...
அத்வைத - அபேத சுருதிகளையும்
துவைத - பேத சுருதிகளையும்
ஒன்று இணைத்து
கடக சுருதிகள் கொண்டு, வேதங்களின் ஒற்றுமைத் தன்மையைக் காட்டிக் கொடுத்த வள்ளல்...

வேதங்களை வரட்டு வேதாந்தமாகப் பேசாமல்...
பாமரர்க்கும் புரியுமாறு...
தமிழ்ப் பாசுரமான திருவாய்மொழியைக் கலந்து...
உரை நூல் (ஸ்ரீ பாஷ்யம்) செய்த பிரான்!

ஆதி சங்கரருக்குக் கூட கிட்டாத வாய்ப்பு!
மத்வருக்கு கூட கிட்டாத வாய்ப்பு!
இருவரும் வடமொழி கொண்டு மட்டுமே உரை நூல் (பாஷ்யம்) செய்ய...

இராமானுசனோ, அதோடு கூட, தமிழ் வேதமான மாறனின் திருவாய்மொழியையும் சேர்த்து, பொருத்திப் பார்த்து, உரை செய்தான்!

இப்படி, தமிழ் வேதம் என்று வாயளவில் மட்டும் முழங்காது...
செயல் என்று வரும் போது, அதிலும் தமிழ்ப் பொருளை முன்னுக்குத் தள்ளிய...

எங்கள் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே//

திருமங்கை மன்னன் துவங்கிய தமிழ் விழா எல்லாம் திருவரங்கத்தில் காலப் போக்கில் நின்று போக...

அதை இன்று வரை விடாது நடத்தும் படி வகை செய்து கொடுத்த உடையவர்...

அதனால் தான் திருமங்கையாழ்வார் தனியனில் கூட, இராமானுசனே போற்றப் படுகிறார்!

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா - பொங்கு புகழ்
"மங்கையர் கோன்" ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும்மனம் நீஎனக்குத் தா!

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே//

அன்புக்கும் காதலுக்கும் தோழி கோதையைப் பிடித்துக் கொண்டவர் இராமானுசன் என்றால்...

தத்துவ தமிழ் வேதத்துக்கு, மாறன் என்னும் நம்மாழ்வாரை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட இராமானுசன்!

ஊரெல்லாம் இறைவன் சடாரி நம்மாழ்வார் என்றால்
ஆழ்வார் திருநகரியில் மட்டும், நம்மாழ்வார் காலடிச் சடாரி..."இராமானுசம்"!

இப்படி மாறனை மனத்தால் துய்த்த பிரான்...
பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு "மாறன்"
"மாறன்" அடி பணிந்து உய்தனன்....

தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ..
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!

மாறன் திருவடி நிலையான இராமானுசன் திருவடி நிலையே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி//

"ஈராறு" கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்-ன்னு, என் முருகன் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது! :)

என்ன தான் குருவாக ஆகி விட்டாலும், சரணாகதி செய்து விட்டாலும்...
அனுட்டானங்களை விடாது...

தினமும் ஈராறு=பன்னிரண்டு திருமண் காப்பு, தனக்கு இட்டுக் கொள்ளும்
அனுட்டானத்தை வாயில் காட்டாது, வாழ்வில் காட்டிய...

இராமானுசப் பெருந்தகை திருவடிகளே சரணம்!

selvanambi said...

எம்பெருமானார் திருவடிகளே சரனம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே//

இது ஏதோ மற்ற "மாயாவாத" சமயங்களை எல்லாம் "அறுத்தான்" என்று விபரீத பொருள் கொண்டு விடக் கூடாது!

அதான் சமயம் அறுத்தான் என்று சொல்லாது, "அடி" அறுத்தான் என்று பாடுகிறது இந்தச் செய்யுள்!
நெல்லை "அடி அறுக்கும்" போது பார்த்து இருக்கீங்க தானே? களத்து மேட்டில் கதிர் அறுக்கும் போது, சீவிப் புடைப்பார்கள்! வைக்கோல் தங்கி, கதிர் மட்டும் உதிர்க்கப்படும்!

அது போல், வேத சாரங்கள் மட்டும் தங்கி, மற்ற "மாயை" என்னும் கருத்துக்களை அறுத்து, உலகம் மாயை அல்ல! உலகம் உண்மையே என்று காட்டிய ஆசான்!

ஆறு சமயம் என்பது அத்வைதமோ, ஷண்மதங்களோ அல்ல!
திருமூலரும் அறுசமயச் செடி அறுத்துப் பாடுகிறார்!

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்!
ஆறு சமயப் பொருளும் அவன் அலன்!
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனை புகலாமே!

என்று திருமூலரும், சைவ சித்தாந்த திருமந்திரத்தில் அறு சமயப் பொருள், இறைவன் அல்லன் என்றே பாடுகிறார்!

அறு சமயச் செடி என்பது = சாங்கியம், உலகாயதம், மீமாம்சை, நியாயாவாதம், யோகம், வைபாஷிகம்/மாத்யாமிகம்!
இவை கடவுள் இல்லை! அனைத்தும் தானாகத் தோன்றியவையே என்னும் புறச் சமயங்கள்!

இவற்றையே அறு சமயச் செடி அறுத்தலாக காட்டுகிறார்கள்! இவற்றுள் சாங்கியம், நியாயம் எல்லாம் வேதங்களிலேயே நடுநடுவில் வரும்!

இவற்றுள் உள்ள வைக்கோலை நீக்கி, கதிர் அறுத்து, இவ்வளவு தத்துவங்களும் மனித/ஆன்ம தத்துவங்கள் மட்டுமே! அதற்கும் மேலாகப் பரமான்ம தத்துவம் என்றும் உள்ளது!
கற்றதனால் ஆய பயன் என் கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்!

இப்படி இறை இல்லாச் சமயங்களில் உள்ள முரணான கோட்பாடுகளை நீக்கி, இறைக் கோட்பாட்டை நெல் குவிப்பதே அறு சமயச் செடி அறுத்தல் என்று திருமூலராலும் பேசப்படுகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே//

தென் அரங்கன் பன்னாட்டு நிறுவன CEO... :)
அதன் செல்வம் முற்றும் திருத்தி வைத்த...Financial Management...:)

எங்கள் இராமானுசன் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள்//

சீமானா? :))

சீமான், ராசா, தவராசா என்றெல்லாம் நாட்டுப்புற மக்களும் போற்றிக் கொண்டாடிய...

எளியவன் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழி வாழி என்னும் வாழித் திருநாமம் ஆதலால்...

வாழி வாழி என்று நிறுத்த முடியவில்லை குமரன்!

வாழி வாழி என்று நிறுத்தி விடாது...

வாழி வாழி என்று ஊழி ஊழி தோறும் சொல்லத்

தலை அல்லால் கைம்மாறு இலனே!

காரேய்க் கருணை இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காரேய்க் கருணை இராமானுசா...இக்கடல் நிலத்தில்

யாரே அறிவர், நின் அருளாம் தன்மை? - அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற போது..

சீரே உயிர்க்கு உயிராம்...அடியேற்கு இன்று "தித்திக்கின்றதே"!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தனக்கு புகழ் சேர்த்துக் கொள்ளாது,

தன் சீடர்களில், தன்னை விட மூத்தோர்க்கும், இளையோர்க்கும் எல்லாம் புகழ் சேர்த்த பிரான்...

தனக்குத் தரப்பட்ட சிறப்புப் பெயர்களைத் தான் வைத்துக் கொள்ளாது, உடனே தன் சீடர்களுக்குக் கொடுக்கும் குணம்...(அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று யக்ஞமூர்த்திக்கும் எம்பெருமானார் என்று கொடுத்து விட்ட உள்ளம் தான் என்னே!)

கூரத்தாழ்வார்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அமுதனார்
போன்ற மூத்தவர்களையும்

முதலியாண்டான்
பிள்ளை உறங்கா வில்லி
எம்பார்
அனந்தாழ்வான்
வடுக நம்பி
கிடாம்பி ஆச்சான்
தொண்டனூர் நம்பி
போன்று இளையவர்களையும்...

பல்வேறு சாதிகளில்
பல்வேறு மதங்களில்
பல்வேறு கோட்பாடுகளில்
என்று பல தரப்பினரையும், தன் பால் ஒருங்கே அரவணைத்த...

உடையவர் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,

சமூகமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்து..

அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி...

என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்க கோஷ்டியில்!

பெண் குலம் தழைக்க வந்து பெரும்பூதூர் மாமுனிகள் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எப்போதோ என் தோழி ஆண்டாள் பாடிய பாட்டு - நூறு தடா வெண்ணைய்...

அந்த வேண்டுதல் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!

கோதை "பொய்" சொல்லி விட்டாள்! சும்மானா வேண்டிக் கொண்டாள்! நிறைவேற்றவில்லை என்ற பேர் வராது...காத்துக் கொடுத்தார்!

இத்தனைக்கும் நானூறு வருஷத்துக்கு முந்தைய பாட்டு...
அதை வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது...
அந்தக் கவிதையில் உள்ளத்தைக் கண்டு...
அதை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காச்சும் வந்ததா?

எங்கள் கோயில் அண்ணன் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இஸ்லாம் பெண்ணுக்கு, கோயில் கருவறையில் சிலை!

அதுவும், நம்மாழ்வார் இருப்பதாகக் கருதப்படும், இறைவன் காலடியில், துலக்கர் பெண்ணை பிரதிஷ்டை...

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா, அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அறிவியல் யுகமான இன்றைக்கே, பந்தலில், இஸ்லாம்-சரணாகதி பற்றி எழுதினாலே, பிடிக்க மாட்டேங்கிறது!
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே!
எந்த சாஸ்திரத்தில் உள்ளது? எந்த ஆகமத்தில் உள்ளது? எந்த ஆசார்ய விளக்கத்துக்கு மாறாக அமைந்தது?

துலக்கா நாச்சியாரைக் கொண்டாடிய எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல், இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குழந்தைகள் ஆடும் சொப்பு விளையாட்டுப் பெருமாளை...

ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட மெல்லிய உள்ளம் வேறு யாருக்கு வரும்?

இந்த உள்ளம், வேதத்துக்கு பாஷ்யமும் எழுதும் வேதாந்த உள்ளம்!
அன்பினால் கரைந்து அழுது வாழும் எளிய பக்தி உள்ளம்!

இரு உள்ளங்களும் ஒருங்கே உள்ள பரம ஆசார்யன், ஜகத் குரு...உலகாசான் உடையவர் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மேலக்கோட்டையில் அரிஜன ஆலயப் பிரவேசம்...

இன்றைக்குப் பெரிய விஷயமில்லை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கு முன்னால்?

இன்றைக்கும் கண்டதேவி ஊரில், தலித்துக்கள் தேர் இழுக்க முடியாமல், ஆயிரம் நாடகம் நடத்தப்படுகிறது! அரசே ஒன்று செய்யும் முடியாத நிலைமை!

ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்..
காந்தியடிகள் "அரிசனம்" என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்...
தந்தை பெரியார், வைக்கம் போராட்டம் செய்யும் முன்னால்...

மேலக்கோட்டையில் அனைவரையும், "திருக்குலத்தார்" என்று உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்...

சாதி இல்லா இறைமையை
சாதித்துக் காட்டிய...
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எங்கோ வயல் வேலை செய்யும் விவசாயி...

திருப்பதிக்கு சாலையில் எந்த வழிப்பா?-என்று கேட்டதற்கு..
அவனும் வழி சொன்னதுக்கு...

மோட்சத்துக்கு வழி காட்டி, காலைச் சுட்டிக் காட்டி நிற்கிறான் வேங்கடவன்!
அந்த வழிகாட்டிக்கே வழிகாட்டிய விவசாயி...என்று

வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய வள்ளலார்...
நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருக்கச்சி நம்பிகளின் "நாலாம் வருணம்" என்னும் சாதி பார்க்காது,

அவரை வீட்டுக்குள் உணவருந்தி வைத்து,

தன்னை அவர் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மை ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணி...

அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு...

எம்பெருமானின் "நாலாம் வர்ண" அடியவருக்காக,
குடும்ப வாழ்க்கையே தொலைத்து விட்டு நின்ற...

இந்த உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
எங்கள் இராமானுசன் உள்ளமே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சமயப் போரில் வாதிட்டுத் தோற்றவர்களை எல்லாம்...

அரசியல் பலத்தால், மன்னன் உதவியோடு...கழுவில் ஏற்றிய காலம் அக்காலம்...

ஆனால் வாதில் தோற்றவர்களையும், தன் மடங்களில் வைத்து அரவணைத்து, அப்போதும் விரும்பாதவர்களை, அவர் போக்கில் விட்டு விட்ட...பண்புக்குத் தலை வணங்காமல் வேறு என்ன செய்வது?

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மத வெறியால், சோழன் வெருட்ட...ஊரை விட்டே ஓடினாலும்...

சமய வெறிக்கு மக்கள் இரையாகி மாளக் கூடாது என்பதை மனதில் வைத்து...

தில்லையிலிருந்து தூக்கி வீசிய பெருமாள் சிலையை, மீண்டும் அங்கேயே தான் வைப்பேன் என்று அடம் பிடிக்காது...அரசியல் செய்யாது...

கீழ்த் திருப்பதியிலேயே வைத்துக் கொள்ளலாம்! இன்னொரு மதப் பூசல் வேண்டாம் என்று சொல்லும் உள்ளம், இன்றைக்கு ராம ஜென்ம பூமியருக்கும் வருமா???

சமயத்தை விடச் சமூகத்தைக் கணக்கில் கொண்ட
எங்கள் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்றைக்குத் தமிழ் அர்ச்சனைக்கு அரசே ஆணை போட்டாலும் நடப்பதில்லை! வாய் விட்டுக் கேட்டால் தான், ஏதோ பேருக்கு நடக்கிறது!

ஆனால் தமிழ் வேதம் முன் ஓதிச் செல்ல...
இறைவன் பின் தொடர...
வடமொழி வேதங்கள் பின் ஓதில் செல்ல..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடத்திக் காட்டி,
இன்றளவும் அதை பக்தர்களை வைத்து நடத்திக் காட்டியது...

எந்த அரசின் சட்டம்?
பாகவத கைங்கர்யம் என்னும் அடியார் தொண்டே அந்தச் சட்டம்!

அடியவர்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய வைத்து...
அவர்களே தமிழ்ப் பாசுரங்களை, ஆலயங்களில் விருப்பத் தெரிவாக விழைந்து கேட்க வைத்த சட்டம்!

நம் இராமானுசன் நல் இதயமே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இவ்வளவும் செய்து காட்ட, அந்த உள்ளம் கொடுத்த விலை...கொஞ்ச நஞ்சமல்ல!

* குடும்ப வாழ்க்கை போனது!
* சைவ/ஸ்மார்த்த குடும்பத்தில் பிறந்ததால்...ஸ்ரீரங்கத்தில் முதலில் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளவில்லை!
* பின்பு ஒரு வழியாக ஏற்றுக் கொண்டாலும்...கோயில் சீர்திருத்தத்தால் ஒட்டு மொத்த பகையைச் சம்பாதித்து கொண்டது
* பிட்சை உணவில், வைணவர்களே விஷம் வைத்துக் கலக்கும் அளவுக்குப் போனது...

இப்படி இத்தனையும் பார்த்த உள்ளம்,
அந்த இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்றைக்கும் மடாதிபதிகள் பல்லக்கில் செல்கிறார்கள்! பட்டினப் பிரவேசமாம்!

ஆனால் கால்நடையாகவே அலைந்து அலைந்து பணியாற்றிய கால்கள்!

* சோழன் துரத்த ஓடிய கால்கள்!
* மேலக்கோட்டை செல்வப் பிள்ளை விக்ரகம் பெற, வடநாடு ஓடிய கால்கள்
* திருப்பதியில் பெருமாளா? சிவனா? என் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்
* தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள்...
* அதைக் கோபுரத்தின் மேலேறி ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள்!

சொகுசான மடாதிபதியாய் இருக்காது...
அலைந்து அலைந்தே திரிந்த அந்தத் திருவடிகளே...
இராமானுசன் திருவடிகளே நமக்குத் தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எதற்கெடுத்தாலும், சாஸ்திரத்தை நீட்டிப் பேசும், பண்டிதர்களின் கெடுபிடிகளையும் மதித்து...

அந்த சாஸ்திரத்தில் அவர்களுக்கே தெரியாத விஷயங்களைச் சொல்லி...

வார்த்தை அளவில் சாஸ்திரம் பார்க்காமல்
வாழ்க்கை அளவில் சாத்திரம் பார்த்து நடந்ததை என்னென்று சொல்வது?

திருவரங்கம் கோயில் ஆகமத்தையே...
வைகானசத்தில் இருந்து...
கடுமையான கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத பாஞ்சராத்ர ஆகமத்துக்கு...மாற்றிக் காட்டி...

சாஸ்திரம் மீறாது, சாஸ்திரம் மாற்றிய...
அனைவர்க்கும் அன்பன், எங்கள் இராமானுசன் தாளிணைகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கருத்து அளவில் உரையாடி வாதம் செய்தாலும்,
அதை சொந்த அளவில் எடுத்துப் பேசும் இன்றைய அறிவியல் காலகட்டத்திலேயே...

ஆனால்...
தன் ஆசிரியர், ஆசார்யர்களிடத்திலேயே, கருத்தைக் கருத்தாக மட்டும் வாதம் செய்து...

அறியாக் காலத்தே அடிமைக் கண்
அறியா மா மாயத்து அடியேனை
அன்பு செய்வித்து வைத்தாயால்...

என்று பாடல் வரிகளை ஒழுங்காகப் பொருத்தி...
இப்படித் தான் நம்மாழ்வார் பாடினார்...என்று சொல்லி...

உன் விளக்கம், ஆசார்ய விளக்கத்துக்கு மாறானது என்று பேச்சு வந்தாலும்...
அதைப் பொருட்படுத்தாது...

பின்னாளில் அப்படிச் சொன்னவரையும் உணர வைத்த பெருந்தன்மை, அதே சமயம் கருத்தில் நேர்மை...

என்ற இந்த உள்ளம் எல்லாம் யாருக்கு வரும்?
நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமலையில்.....எம்பெருமான் திருவேங்கடமுடையான் மாயோனே என்று

புறநானூறு
கலித்தொகை
சிலப்பதிகாரம்
நக்கீரர்
என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகவும்

பவிஷ்யோத்திர புராணம்
ஸ்கந்த புராணம்
வராக புராணம்
மற்றும் இதர சம்ஹிதைகள் வாயிலாகவும்...

எடுத்துக் காட்டி நிலை நிறுத்தி, வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை...

அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல், நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதே சமயம்,

திருக்கண்ணங்குடியில் விபூதி பூசிக் கொள்ளும் பெருமாள் என்று தெரிந்து...

தன் மடாதிபதி அதிகாரத்தால் எல்லாம் அதை மாற்றாது...

அப்படியே இன்று வரை நடக்க விட்டு,
ஆலய வைணவ அர்ச்சகர்களையும், அந்த மூன்றரை நாழிகைக்கு, அவ்வண்ணமே திருநீறு பூசிக் கொண்டு வழிபாடு செய்யவும் வழி வகுத்த...

பேதங்களைக் கடந்த பேதையுள்ளம், அந்த இராமானுசன் உள்ளமே நம் தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அனைத்துச் சாதி அர்ச்சகத் திட்டம், இன்று தான் அரசு போட முடிந்தது!

ஆனால் அன்றைக்கே, விருப்பம் உடையோர்க்கெல்லாம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் ஐழொகு செய்வித்து...முறையாகப் பயிற்சி தந்து...

அவர்களையும் கோயில் அர்ச்சகர் ஆக்கிக் காட்டிய பெருமை...

இன்றும் திருக்கோயிலூர் மற்றும் திருவாலி, திருநகரி, திருமணங்கொல்லை போன்ற ஆலயங்களில் எல்லாம் அந்த அர்ச்சகர்களைக் காணலாம்!

அவர்கள் அபிஷேகம் செய்து வைக்கும் காட்சியெல்லாம் யூட்யூப் காணொளியில் காணக் கிடைக்கிறது!

இப்படி, ஆசை உடையோர்க்கு எல்லாம்,
கோயிலில், "இறை ஆசையை" மட்டுமே வைத்து, உள் சேர்த்துக் கொண்ட...

ஆசை இராமானுசன் திருவுள்ளமே நம் தஞ்சம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னும் அள்ள அள்ளக் குறையாத உள்ளம் நம் இராமானுசன்!

ஆன்மீகத்தில், உரைகளை விட, உள்ளமே முக்கியம் என்று ஈடுபடுத்திக் காட்டிய வள்ளல்!

* முன்னுள்ள ஆசார்யர்கள் - நாதமுனி, ஆளவந்தார்
* பின்னுள்ள ஆசார்யர்கள் - நம்பிள்ளை, வேதாந்த தேசிகன், பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள்...

என்று அத்தனை பேர்க்கும் நடு நாயகமாய் விளங்கும்...
குரு பரம்பரைக்கு நடு மணியாய் விளங்கும்...

சீரார் இராமானுசன், எங்கள் இளையாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தரிசனத்துக்காக கண் இழந்த கூரத்தாழ்வான்...ஆயிரமாவது ஆண்டில்...

இந்த வாழித் திருநாமப் பதிவிலே வந்தார்க்கும், நின்றார்க்கும், மனத்திலே யோசித்தார்க்கும், கொண்டார்க்கும்...

அடியாரும் கிடந்து இயங்கும் பதிவில்...
படியாய்க் கிடந்து பவள வாய் காண்பேனே!
எம்பெருமான் அவன் பொருளாய் ஏதேனும் ஆவேனே!

இராமானுச திவ்ய ஆக்ஞை
வர்த்தாம், அபி வர்த்ததாம்!
உடையவர் உள்ளக் கிடக்கை
செழிக்கவே! செழிக்கவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இறைவனைப் போல்...
இராமானுசனுக்கும் பன்னிரு திருநாமங்கள்!

1. பெரிய திருமலை நம்பி சூட்டிய = இளையாழ்வார் திருவடிகளே சரணம்!

2. பெற்றோர் சூட்டிய = இராமானுசன் திருவடிகளே சரணம்!

3. பெரிய திருமலை நம்பி சூட்டிய = பரதபுரீசன் திருவடிகளே சரணம்!

4. காஞ்சி வரதன் சூட்டிய = யதிராசன் திருவடிகளே சரணம்!

5. அரங்கத்தில் நம்பெருமாள் சூட்டிய = உடையவர் திருவடிகளே சரணம்!

6. வேங்கடவன் சூட்டிய = தேசிகேந்திரன் திருவடிகளே சரணம்!

7. அன்னை சாரதா தேவி, சரஸ்வதி சூட்டிய = ஸ்ரீபாஷ்யக் காரர் திருவடிகளே சரணம்!

8. பெரிய நம்பி கொண்டாடிய = திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்!

9. திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய = எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

10. திருமாலை ஆண்டான் சூட்டிய = சடகோபன் பொன்னடி திருவடிகளே சரணம்!

11. திருவரங்கப் பெருமாள் அரையர் சூட்டிய = இலட்சுமண முனி திருவடிகளே சரணம்!

12. என் தோழி கோதையின் கனவை நனவாக்கி வைத்த = நம் கோயில் "அண்ணன்" திருவடிகளே சரணம்!

பல்லாண்டு பல்லாண்டு
அடியார்கள் வாழ
அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ
மறை வாழ, மனம் வாழ,

இன்னும் பல நூற்றாண்டு இரும்!

Raghav said...

ரவிஅண்ணா.. கண்ணில் நீர் வந்து விட்டது எம் ராமானுசரின் பெருமைகளை காட்டருவியாக நீங்கள் பொழிந்த விதம் கண்டு.. வேறென்ன சொல்வது..

ராமானுஜ தயா பாத்ரராகிய ஸ்வாமி தேசிகர், தான் அடியார்களின் தயைக்கு பாத்ரமானவானக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்.. அதே போல் நான் உங்கள் தாஸனாக இருக்க விரும்புகிறேன்..ஒரு நிபந்தனை.. ராமானுஜரை நீங்கள் பற்றியிருக்கும் காலம் வரை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாழித்திருநாமத்தை தெரிந்து கொண்டேன். தொடருங்கள் குமரன்....கூரத்தாழ்வாருக்குப் பிறகு வரும் ஆசார்யர்களையும் சொல்வீர்கள் தானே?

Radha said...

I think I am coming a bit late...after the rains have stopped. :)

Personally, I have one complaint against him. He could have provided Bhagavat Gita Bhashyam and Sri Bhashyam in Tamizh too.

Glory to the most favoured devotee of Arangan !!

S.Muruganandam said...

அற்புதம் குமரன் ஐயா. எதிராசரின் இத்தனை படங்கள் ஒரே பதிவில். அதுவும் ஸ்ரீபெரும்புதூரில் அவரது ஆலயத்தின் படங்கள் அருமை அருமை.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்//

மங்கயராளி = ஆளியா? ஆலியா?
மங்கையர் ஆலி-ன்னு வரும்-ன்னு நினைக்கிறேன்!
ஆலி நாடன் அல்லவா திருமங்கை? எனவே மங்கையராலி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதே போல் நான் உங்கள் தாஸனாக இருக்க விரும்புகிறேன்..//

:))
இராமானுச தாசனாகவே எப்பவும் பற்றி இரு ராகவ்!

//ஒரு நிபந்தனை.. ராமானுஜரை நீங்கள் பற்றியிருக்கும் காலம் வரை//

ஹிஹி!
அப்படின்னா என் உயிர் போகும் வரையா? :)

அதுக்கு அப்பறமும் கூட, உடையவர் திருவடிகளே தஞ்சம் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இடுப்பில் ஆடை இல்லாமல் ராமானுச விக்ரஹம் எந்த ஊரில் குமரன்??//

இராமானுசருக்கு நீளமான தலைப்பாகை கட்டிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது!
ஆனால் பருத்திக் கொல்லை நாச்சியார் மாற்றுடை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர சங்கடப் பட்ட போது, தன் தலைப்பாகையை அந்தப் பெண்ணுக்கு உள்ளே வீசினார்!

அன்றிலிருந்து தலைப்பாகை கட்டிக் கொள்ளும் வழக்கத்தையும் விட்டு விட்டார்!

காந்தியடிகள், இப்படித் தான், தமிழகத்துப் பெண்களையோ யாரையோ பார்த்து, தன் ஆடையைக் குறைத்துக் கொண்டதாகச் சொல்வார்கள், இல்லையா?

குமரன் (Kumaran) said...

ஜெயசிம்மம் ஸ்ரீராமானுஜம்
ஜெயசிம்மம் ஸ்ரீராமானுஜம் !!

புதுசா இருக்கே இராகவ். இது வரை கேட்டதே இல்லை இதனை. :-)

ஸ்ரீபாஷ்யம் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. எப்போது தொடங்கினாலும் சில பக்கங்களுக்கு மேல் செல்ல முடிவதில்லை. முறையாக ஒரு ஆசாரியரிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும் போல.

மற்ற ஆசாரியர்களின் சரிதங்களை விட உடையவர் சரிதத்தை மீண்டும் மீண்டும் படிப்பதால் அவர் வாழித் திருநாமம் எளிதாகப் புரிகிறது போலும். எனக்கும் அப்படித் தான். :-)

இணையத்தில் கிடைத்த படங்கள் இவை இராகவ். அதனால் நீங்கள் சொல்லும் திருமேனி எந்த ஊரில் இருக்கிறது என்று தெரியவில்லை. நம்மிராமானுசனைப் போல் எளிமையாக இருந்ததால் அதனை இட்டேன். எம்பெருமானாரை நினைத்துக் கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஒருவருக்கு புதுத் துணிகளை வாங்கிக் கொடுத்தாலே போதும்; எம்பெருமானார் திருவுளம் நிறைந்துவிடும்.

அடியேன் இராமானுச தாசன்னு முதன்முறையா சொல்றேனா? இருக்கலாம். பதிவுல இதுவே முதன்முறையா இருக்கலாம். ஆனால் அந்த சொற்களைச் சொல்லாமலேயே எழுதும் மற்றதிலிருந்து அது நன்றாகத் தெரியுமே. :-)

குமரன் (Kumaran) said...

தங்க பஸ்பம் போல் திகழும் மென்மையான திருப்பாதங்களும், தளிர் (பல்லவம்) போன்ற மென்மையான உன் திருவிரல்களும், தூய்மையான உன் மென்மையான காவியுடையும், அதனை அணிந்திருக்கும் இடையின் திருவழகும், முப்புரி நூலும், முன்கையில் ஏந்திய திரிதண்டமாகிய முக்கோலின் திருவழகும், முன்னவர்கள் சொன்ன தமிழ்மொழி வடமொழி வேதங்களின் ஆழ்ந்த பொருள்கள் எப்போதும் நிறைந்திருக்கும் நிலவைப் போன்ற திருமுறுவலின் அழகும், வேண்டியதை எல்லாம் தரும் கற்பகத்தை விட கருணையுடன் வேண்டியதற்கும் மேலாகத் தரும் கருணை நிறைந்த தாமரைப் போன்ற திருக்கண்களின் அழகும், காரியின் திருமகனான காரி மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் திருவடிகளைச் சூடிய உன் திருமுடியும், அந்த திருமுடியில் இருக்கும் திருச்சிகைமுடிகளும், என்று இப்படி ஒவ்வொரு அங்கமாக, எதிராசரே, உமது திருவடிவழகு என் இதயத்தில் நிலைகொண்டுளதால் எனக்கு நிகர் யாரும் இல்லை; எனக்கு நிகர் யாரும் இல்லை; எனக்கு நிகர் யாருமே இல்லை!

இரவி - இந்தப் பாட்டைப் பாடியவர் யார்? நீங்கள் பாட்டை எழுதினீர்கள். அடியேன் பொருளை எழுதியிருக்கிறேன், பின்னூட்ட விதிக்கேற்ப. :-)

குமரன் (Kumaran) said...

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

நன்றி செல்வநம்பி ஐயா.

குமரன் (Kumaran) said...

மகிழம் பூ எப்படி நம்மாழ்வாருக்கு உரிய மலர் ஆனது என்று தெரியவில்லை இரவி. பெரியோர்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

அன்னமாச்சாரியரின் தெலுங்கு கீர்த்தனைக்குப் பொருள் சொல்லுங்கள் இரவி.

அறு சமயச் செடி அறுத்தலின் பொருளினைச் சொன்னதற்கு நன்றி இரவி. இதனையும் உங்களிடம் கேட்டு இட்டிருக்க வேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்று இருந்துவிட்டேன். :-(

குமரன் (Kumaran) said...

காரேய்க் கருணை இராமானுசா இக்கடல் நிலத்தில்
யாரே அறிவார் நின் அருளாம் தன்மை? - அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற போது
சீரே உயிர்க்கு உயிராம் அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

இந்தப் பாடலைப் படித்தால்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே

என்ற திருவாய்மொழி பாசுரம் நினைவிற்கு வருகிறது இரவி! அடிக்கடி அடியேன் அனுசந்தானம் பண்ணும் பாசுரம் இது!

குமரன் (Kumaran) said...

அத்துழாய் (பெரிய நம்பி திருமகள்), ஆண்டாள் (கூரத்தாழ்வார் திருத்தேவியார்), பொன்னாச்சி (பிள்ளை உறங்காவில்லி தாசரின் திருத்தேவியார்) - இம்மூவரைப் பற்றியும் படித்திருக்கிறேன். எம்பெருமானார் திருக்கோட்டியுள் இருந்த மற்ற பெண்மக்களைப் பற்றி அறியவேண்டும். எங்கே படிக்கலாம் இரவி?

குமரன் (Kumaran) said...

இல்லை மௌலி. கூரத்தாழ்வாரின் வாழித் திருநாமத்தோடு இந்த தொடர் நிறைவு பெறும்.

குமரன் (Kumaran) said...

Radha,

He directed his disciples to write a lot of books in Tamil and the details from both Gita bhasyam and Sri bhasyam are included in those Tamil treatises. As both are in Sanskrit, and from the need of the hour, probably he wrote the bhasyams for Gita and Brahmasutra only in Sanskrit.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா. ஆனால் உங்களைப் போல் நேரில் சென்று இப்படங்களை எடுத்து இடவில்லை. இணையத்தில் ஏற்கனவே ஏற்றி வைத்திருந்தார்கள். அவர்களுக்குத் தான் நன்றி.

குமரன் (Kumaran) said...

மங்கையராளி = மங்கையர் கோன். ஆளி = ஆள்பவன் = தலைவன் = கோன். சரி தான் இரவி. ஆலிநாடனை இங்கே சொல்லவில்லை.

குமரன் (Kumaran) said...

காந்தியடிகள் மதுரை வந்த போது அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகளைக் கண்டு தன் ஆடையைக் குறைத்துக் கொண்டதாக சொல்வார்கள்.

இராமானுசர் நீளமான தலைப்பாகை கட்டிக் கொள்வாரா? எங்கேயும் பார்த்ததில்லையே. ஏதேனும் படம் இருக்கிறதா இரவி?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவி - இந்தப் பாட்டைப் பாடியவர் யார்? நீங்கள் பாட்டை எழுதினீர்கள். அடியேன் பொருளை எழுதியிருக்கிறேன், பின்னூட்ட விதிக்கேற்ப. :-)//

ஓ...ஆமாம்-ல்ல?
குமரன் பின்னூட்ட விதி அந்தக் காலத்தில் எவ்ளோ Famous? :)

பொருள் சொன்னமைக்கு நன்றி குமரன் அண்ணா!

அது சரி...முக்கியமான கேள்வி:
தங்க பஸ்பம் ஏதாச்சும் சாப்பிடறீங்களா என்ன? :)

பற்பம் என்பது தங்க பஸ்பம் அல்ல! :)
பற்ப+நாபன் = தாமரை+நாபி

பற்பம் எனத் திகழ் பைங்கழல் = தாமரை போல் சிவந்த திருவடிகள்

பத்மம் என்ற வடமொழிச் சொல்லைத் தமிழில் பற்பம் என்று பலுக்குகின்றனர்! அவ்வளவே!

இந்த அழகான பாட்டை எழுதியது எம்பார், குமரன் அண்ணா!
இதைப் பெரும்பூதூரில் ஷைலஜாக்கா, ராதா, ராகவ்-க்கு பாடிக் காட்டினேன் ஒரு முறை! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்தப் பாடலைப் படித்தால்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு//

சூப்பர்! இதுக்குத் தான் குமரன் வேணுங்கிறது!
மிகவும் சரியான பொருத்தம் இரண்டு பாட்டுக்கும்!

//மங்கையராளி = மங்கையர் கோன். ஆளி = ஆள்பவன் = தலைவன் = கோன்//

இதுவும் பொருத்தமாகத் தான் இருக்கு குமரன்!
சீராளி, போராளி போல் மங்கையராளி!
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்!!!

குமரன் (Kumaran) said...

கோவிந்தப் பெருமாள் எழுதிய பாடல் தானா?! காசி யாத்திரையின் போது அவர் காப்பாற்றிய திருமேனியை அவரால் மறக்க முடியுமா? அவருக்கு நிகர் அவரே.

பற்பம் = பத்மம்?! எப்படி மறந்தேன்? :-) திருத்தியதற்கு நன்றி இரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராமானுசர் நீளமான தலைப்பாகை கட்டிக் கொள்வாரா? எங்கேயும் பார்த்ததில்லையே. ஏதேனும் படம் இருக்கிறதா இரவி?//

முதலில் கட்டி இருந்தார்! அந்தப் பெண்மணிக்கு கொடுத்த நாளில் இருந்து அதையும் துறந்து விட்டார்!

மேலக்கோட்டையில் வெள்ளை சார்த்தும் உற்சவம் போல், சில உற்சவங்களின் போது தலைப்பாகை கட்டி வைக்கிறார்கள்!

இதோ படம்!

பின்னாளில் வந்த மணவாள மாமுனிகள் பெரும்பாலும் தலைப்பாகை கட்டியே இருப்பார்!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி. செல்வப்பிள்ளையுடன் இருக்கும் படத்தில் தலைப்பாகை பார்த்திருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்பெருமானார் திருக்கோட்டியுள் இருந்த மற்ற பெண்மக்களைப் பற்றி அறியவேண்டும். எங்கே படிக்கலாம் இரவி?//

இராமானுசர் குழாத்திலே பலப்பல பெண்கள்! ஒவ்வொருவருக்கும் பல்ப்பல பொறுப்புகள்!

இந்தப் பெண்களைப் பற்றி ஆறாயிரப்படி குருபரம்பரா பிரபாவத்தில் கொஞ்சம் அறியலாம்!
வியாக்யானங்களில் அங்கங்கே "நிர்வாகம்"-ன்னு வரும்! அங்கேயும் படிக்கலாம்!

முழுக்கப் படிக்கணும்னா... இராமானுசர் கூடவே இருந்து எழுதியவர்கள்...
1. வடுக நம்பி எழுதிய யதிராஜ வைபவம்
2. அனந்தாழ்வான் எழுதிய வேங்கடாசல இதிகாச மாலா
பின்னாளில்...
3. வடிவழகிய நம்பி தாசன் எழுதிய இராமானுச வைபவம்
4. வார்த்தாமாலை

இந்தக் காலத்துக்கு ஏற்றாற் போல வேகமான வாசிப்புக்கு...
பி.ஸ்ரீ எழுதிய இராமானுஜர் - I guess you can find this in scribd.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறு சமயச் செடி அறுத்தலின் பொருளினைச் சொன்னதற்கு நன்றி இரவி. இதனையும் உங்களிடம் கேட்டு இட்டிருக்க வேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்று இருந்துவிட்டேன். :-(//

அடடா...நீங்க வேற...நான் புதுசா என்ன சொல்லிடப் போறேன்!

ஏதோ இராமானுசர் வழி வந்தவர்களுக்குச் சமயப் பொறையே இருக்காது...தீவிரம் ஜாஸ்தி...அறு சமயச் செடி அறுத்தல்-ன்னு எல்லாம் அத்வைதத்தைத் தாக்குறாங்க-ன்னு விபரீதப் பொருள் எடுத்துக்க கூடாது இல்லையா?

"அறு சமயச் செடி அறுத்தல்" பற்றித் திருமூலர் முதலான சைவ சித்தாந்தப் பெருமக்களும் நிறையச் சொல்லி உள்ளார்கள்!
அதைத் தான் காட்ட விழைந்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
Personally, I have one complaint against him. He could have provided Bhagavat Gita Bhashyam and Sri Bhashyam in Tamizh too//

:)
நம்ம ராதாவுக்கு அப்பவே பதில் சொல்லணும்-ன்னு நினைச்சேன்! குமரன் அண்ணாவே நல்ல பதிலாச் சொல்லி இருக்காரு!

தமிழ்ப் பாசுரங்கள் எல்லாம் இன்னிக்கி இப்படி கோலோச்சுது-ன்னா அது உடையவர் செய்த மேலாண்மை/அருளாண்மை தான்!

தன் ஒவ்வொரு சீடர் கிட்டயும், யாரு வந்து, என்ன இறைத்தொண்டு பண்ணனும்? -ன்னு நின்னாலும்...
அவங்ககிட்ட அவர் சொல்றது..."பாசுரங்களுக்கு வியாக்யானங்கள், தனியன்கள், எழுதுங்கள்! பாசுரங்களின் இனிமையைப் பரவச் செய்யுங்கள்" என்பது தான்!

திருவாய்மொழி வேதத்துக்குச் சமானம் ஆகையாலே..
கருவறையில் மட்டுமில்லாது, வீதிப் புறப்பாடு சமயங்களில் கூட,
ஊரே பார்க்கும் படி, தமிழ் வேதத்தை இறைவன் முன்னாலும், மூலமான வடமொழி வேதத்தைப் பின்னாலும் ஓதச் செய்தார்! - திருவரங்கத்தில் மட்டுமல்ல! ஒவ்வொரு ஆலயத்திலும்!

தமிழ்நாட்டில் நுட்பமாகிப் போயிருந்த திருவாய்மொழியை...
இப்படி உயிர்ப்பித்து பரவச் செய்த பெருமை...இராமானுசர் ஒருவரையே சேரும்!

என்ன தான் நம்மாழ்வார் தமிழ் வேதத்தைப் பெற்றாலும் (தேவகி = பெற்ற தாய்)
அதை வளர்த்தது என்னவோ உதையவர் தான்! (யசோதை = வளர்த்த தாய்)

அதனால் தான்...

வான்புகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல் தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா

எனக்கும்...
இராமானுசர் இவ்ளோ பண்ணவரு, ஆனா அவராத் தமிழில் ஒன்னுமே எழுதி வைக்கலையே-ன்னு ஒரு வருத்தம் இருந்துச்சி!
ஆனா அப்பறம் தான் தெரிஞ்சிச்சி!

பலரும் நினைப்பது போல்...இராமானுசர் தமிழில் எழுதாமல் எல்லாம் இல்லை!
அவர் தமிழில் எழுதி வச்சிருக்கார்! தெரியுமா? :)

மொத்தம் மூன்று ஆழ்வார்களுக்கு, தனியன் எழுதி வச்சிருக்காரு உடையவர்!

குலசேகராழ்வாருக்குத் தமிழ்த் தனியன் எழுதியது உடையவர் தான்!

அதில் உள்ள சொற் சுவையும், பொருள் அழகும்,
உடையவரின் தமிழாற்றல் என்ன என்பதைக் காட்டி விடும்!

இதோ இராமானுசர் எழுதிய வெண்பா:

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே!
தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள் - பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடுத்து இராமானுசர் இனிய தமிழில் எழுதியது, திருமங்கை மன்னனுக்கு...
அது இன்னும் சூப்பர்! வேல் வேல்-ன்னு முடியும்! :)

வாழி பரகாலன்! வாழி கலிகன்றி!
வாழி குறையலூர் வாழ் வேந்தன்! - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரம்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்!

எல்லாத்தை விட முக்கியமா இராமானுசர் தமிழில் எழுதியது...குல முதல்வன் மாறன் நம்மாழ்வாருக்கு!
இதுல முருகு-ன்னு கூட வரும்! எனக்கு ரொம்ப பிடிக்கும்! :)

முந்துற்ற நெஞ்சே, முயற்றித் தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே - சந்தம்
முருகூரும் சோலைசுழ் மொய்ம்பூ பொருநல்
குருகூரான் மாறன் பேர் கூறு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்படித் தமிழில் எழுதிய இராமானுசர்,

ஏன் ஆழ்வார் பாசுரங்களுக்கு மட்டும் தான் உரை எழுதாமல்,
தன் சீடர்களை விட்டு, ஒவ்வொன்னா எழுதச் சொன்னார்?

வடமொழி வேதங்களுக்கு - பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதியவர்...
தமிழ் வேதங்களுக்கு உரை எழுதாமல் போனது ஏனோ?

தமிழ் வேதங்களை இறைவனுக்கும் முன்னால் ஓதி வரணும் என்று இன்று வரை ஆலயங்களில் வழிவகை செய்தவர்,
அதற்கு உரை எழுதணும்-ன்னு மட்டும் ஆசைப்பட்டிருக்க மாட்டாரா என்ன?

என்ன தான் நடந்தது? இராமானுசரே சொல்கிறார் கேளுங்கள்!

அருளிச் செயல்களுக்கு நான் வியாக்கியானம் பண்ணினால்,
1. மந்த மதிகட்கு, இவ்வளவே இதற்கு அர்த்தம் உள்ளது! என்று
தோற்றுமாகில்...அது தவறாகி விடும்!
2. ஆழ்வார்கள் பாசுரங்களுக்குப் பொருளானது அவரவருடைய புத்திக்கு ஈடாகப் பலப்பலவாறு பல காலங்களிலும் சுரக்கும்.
3. ஆகையாலே நாம், அருளிச் செயல்களுக்கு உரை செய்தால், இனி சுரக்கப் போகும் உணர்ச்சிப் பொருள்கட்கெல்லாம், நானே வரம்பு
கட்டினாற் போலே ஆகி விடு்ம்!

ஆகையாலே, இதற்கு நான் உரை செய்யப் போகாது ஒழிந்தோம்! எனவே, பிள்ளான்...நீர் போய் ஒருபடி திருவாய்மொழிக்கு வியாக்கியானம் பண்ணும்!

- இது தாங்க இராமானுசர் உள்ளம்!

இன்னிக்கி வேத-வேதாந்தத்துக்கு, அவர் செய்த ஸ்ரீ பாஷ்ய உரையை மீறி வைணவத்தில் யாரும் பேசி விட முடியாது! ஆசார்ய வெளக்கத்துக்கு மாறாகப் பேசற-ன்னு ஒழிச்சிக் கட்டிருவாய்ங்க! :)

அதே போல ஒரு நிலைமை திருவாய்மொழிக்கு வர, அவர் மனசு இடம் கொடுக்கலை!
அதை அவரே சொல்லி, அதுக்குத் தான் உரை எழுதாமல் ஒழிந்தேன் என்று ஈரம் மல்க கூறுகிறார்!

ஆச்சார்ய விளக்கத்துக்கு மாறாத் திருப்பாவை விளக்கம் சொல்றியே-ன்னு, கேஆரெஸ்-ஐப் பதிவில் கோச்சிக்கப் போறாங்க-ன்னு, அவருக்கு முன்னமே தெரியும் போல! :))))

அதான் அவரவருடைய உள்ளத்து உணர்ச்சிக்கு ஈடாகப் பலப்பலவாறு பல காலங்களிலும் சுரக்கும், அதற்கு நாமே வரம்பு கட்ட மாட்டோம்-ன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்!

ஆகா! இதுவல்லவோ உண்மையான ஆசார்ய ஹிருதயம்!!!
சும்மாப் பேருக்கு, தன் விருப்பங்களுக்கு எழுதித் தள்ளும் ஆச்சார்ய ஹிருதயம் இல்லை!
நிஜமாலுமே ஆசார்ய "ஹிருதயம்"!

யாருக்கு வரும் இந்தக் கருணை?
அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை! நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

கோவி.கண்ணன் said...

//அறு சமயச் செடி என்பது = சாங்கியம், உலகாயதம், மீமாம்சை, நியாயாவாதம், யோகம், வைபாஷிகம்/மாத்யாமிகம்!
இவை கடவுள் இல்லை! அனைத்தும் தானாகத் தோன்றியவையே என்னும் புறச் சமயங்கள்!
//
:)

இதை கோவியார் எழுதினால் காழ்புணர்வாக இருக்குமா கேஆர்எஸ்
அறுசமயம் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கீறீர்கள் ஆதிசங்கரரின் (பிரசன்ன மாயாவாதியின், பிரசன்ன பெளத்தர் அப்படித்தான் இராமானுஜர் சொன்னாராம்) அறுசமயம் என்று சொல்லவில்லையே !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதை கோவியார் எழுதினால் காழ்புணர்வாக இருக்குமா//

சேச்சே!
என்ன இப்படிச் சொல்லீட்டீங்கண்ணா?
நீங்க எப்போ ஆழ்வார்களைப் பற்றி எழுதப் போறீங்க-ன்னு ஆழ்வார்களே காத்துக்கிட்டு இருக்காங்க! நானும் காத்துக்கிட்டு இருக்கேன்! :))

//கேஆர்எஸ்
அறுசமயம் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கீறீர்கள்//

அட, குமரன் இட்ட பாட்டுல அறுசமயம் வருது! அதான் அது பற்றி மட்டும் சொன்னேன்!
தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் தந்தையான திருமூலரும் சொல்லி இருக்காரே!

//ஆதிசங்கரரின் (பிரசன்ன மாயாவாதியின், பிரசன்ன பெளத்தர் அப்படித்தான் இராமானுஜர் சொன்னாராம்)//

ஆதி சங்கரர், இராமானுசருக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர்! அவரைப் போய் "ஏய் பிரசன்ன மாயாவதி"-ன்னு எல்லாம் இராமானுசர் எங்கும் பேசியதில்லை! :)))

சொல்லப் போனால் சங்கரரை விநயமாகவே பல இடங்களில் குறிப்பிடுகிறார்!
* அவர் ஆட்களை எடுத்துக் கொள்வதே இல்லை!
* கருத்தை மட்டுமே எடுத்து, அதன் சாதக பாதகங்களை அலசுகிறார்!

உலகம் மாயை அல்ல! உண்மை - என்ற தன் கருத்தைச் சொல்லும் போது, மாயாவாதம் என்பதை மறுத்துப் பேசுகிறார்! அவ்வளவே!

சரி...
பிரசன்ன பெளத்தமா? அப்படீன்னா பெளத்தம் "உலகம் மாயை"-ன்னா சொல்லுது? ஆகா!

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன், உங்களுக்காக ஒரு தொகுப்பு. இதன் பின்னரும் புரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது.

நான் பதிவில் சொன்னது: அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே - மாயாவாதம் என்னும் அறுசமயச் செடியை அதன் அடியோடு மறுத்தவன் வாழ்க. (இங்கே அறுசமயம் என்றவுடன் அது ஷண்மதம் என்று நினைத்துவிட்டேன். ஆதிசங்கரரின் மாயாவாதத்திற்கும் ஷண்மதத்திற்கும் உள்ள ஒரே தொடர்பு ஆதி சங்கரர் மட்டுமே; மற்றபடி தத்துவத்தில் இரண்டும் வெவ்வேறு வகை. மாயாவாதம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்; தெரியும். ஷண்மதம் என்பது அப்போது இருந்த பலவகை வழிபாடுகளை ஆறு வகையாகத் தொகுத்து முறைப்படுத்தியதால் வந்த பெயர்; அப்படி முறைப்படுத்தியதால் ஆதி சங்கரர்க்கு ஷண்மத ஸ்தாபகாசாரியர் என்று சிறப்புப் பெயர். ஆனால் மாயாவாதத்திற்கும் ஷண்மதத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. எனது தவறான புரிதலால் இங்கே மாயாவாதம் குறிக்கப்படுகிறது என்று சொன்னேன்).

இரவி பின்னூட்டத்தில் சொன்ன விளக்கத்தின் சுருக்கம்: நான் கொண்ட புரிதல் விபரீதம் என்று இரவி சொன்னார். ஆறு சமயம் என்பது அத்வைதமோ ஷண்மதங்களோ அல்ல என்று சொல்லிவிட்டு அறுசமயம் என்று வரும் திருமூலரின் பாடலையும் காட்டினார். பின்னர் அறுசமயம் என்பதற்கு விளக்கமாக கடவுள் இல்லை என்று நேரடியாகச் சொல்லும்/கடவுளைப் பற்றியே பேசாத இந்தியத் தத்துவங்களான சாங்கியம் (உள் பொருட்கள் என்று உயிர், உலகம், ... என்று வகைப்படுத்தும் அறிவியல் தத்துவம் - இக்கால விஞ்ஞானத்தைச் சாங்கியம் என்று சொல்லவில்லை), உலகாயதம் (புலன்களுக்கு நேரடியாகத் தெரிவதும் உய்த்துணர்வதும் மட்டுமே உண்மை என்று சொல்லும் தத்துவம்), மீமாம்சை (செய்யும் செயல்களே நேரடியாகப் பலன் தரும்; கடவுள் என்று ஒரு பொருள் தேவையில்லை என்னும் தத்துவம்; கரும மீமாம்சை என்றும் சொல்வார்கள்), நியாயவாதம் (ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் உள்ள தொடர்புகளைக் கருத்துகளால் விளக்கும் தத்துவம்; கருத்து முதல் வாதம் என்றும் சொல்லலாம்), யோகம் (அஷ்டாங்க யோகம்), வைஷேசிகம் (உலகப் பொருட்கள் யாவும் அணுத்திரள்களால் ஆனவை என்று விளக்கும் தத்துவம்) போன்றவை என்று பட்டியல் இட்டார். இவை முழுவதுமாக அழிக்கப்படவில்லை; அவற்றில் இருக்கும் தவறான கோட்பாடுகளை நீக்குதல் தான் அடி அறுத்தல் என்று விளக்கினார்.

அதைப் படித்துவிட்டு நான் சொன்னது: அறு சமயச் செடி அறுத்தலின் பொருளினைச் சொன்னதற்கு நன்றி இரவி. இதனையும் உங்களிடம் கேட்டு இட்டிருக்க வேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்று இருந்துவிட்டேன். :-(

நீங்கள் இதனை எல்லாம் முழுக்கப் படித்தீர்களா தெரியவில்லை. நீங்கள் வந்து கேட்டது: இதை கோவியார் எழுதினால் காழ்புணர்வாக இருக்குமா கேஆர்எஸ்
அறுசமயம் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கீறீர்கள் ஆதிசங்கரரின் (பிரசன்ன மாயாவாதியின், பிரசன்ன பெளத்தர் அப்படித்தான் இராமானுஜர் சொன்னாராம்) அறுசமயம் என்று சொல்லவில்லையே !

அதான் தெளிவாக அறுசமயம் என்பது ஆதிசங்கரரின் மாயாவாதம் இல்லை என்று விளக்கம் சொல்லியிருக்கிறாரே. அதனையே கட்டம் கட்டிவிட்டுப் பின்னர் ஏன் அறுசமயம் என்றால் ஆதிசங்கரரின் அறுசமயம் என்று சொல்லவில்லை என்று கேட்டால் எப்படி? அதில் வேறு நான் சொன்னால் காழ்ப்புணர்வு; நீங்கள் சொன்னால்? என்ற கேள்வி வேறு! :-) உங்களுக்குக் காழ்ப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ உங்களின் முன் முடிவுகள் உங்கள் கருத்தினை குழப்புவது என்னவோ தெளிவாகத் தெரிகிறது. :-)

பயனில்லை என்று தெரிந்தும் இவ்வளவு விளக்கமாக நேரம் செலவழிக்கணுமா என்று இரண்டு மூன்று பேர் கேட்கத் தான் போகிறார்கள். அவர்களிடம் நான் சொல்லப் போவது: கோவி.கண்ணனுக்கு இந்த நீண்ட விளக்கத்தைப் படிக்கும் போது அவருடைய முன் முடிவுகள் வந்து இன்னும் குழப்பிவிடத்தான் செய்யும்; புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த இடுகையையும் இந்தப் பின்னூட்டங்களையும் வருங்காலத்தில் யாராவது படித்தால் அவர்களுக்குப் புரியலாம் இல்லையா? அதற்காகத் தான்! :-)

குமரன் (Kumaran) said...

இன்னமுதம் ஊட்டுகேன் பாடலையும் வாழி பரகாலன் பாடலையும் கேட்டிருக்கிறேன் இரவி. முந்துற்ற நெஞ்சே இது தான் முதன்முறை படிக்கிறேன் என்று நினைக்கிறேன். மூன்றும் எளிமையான அழகான பாடல்கள்.

இன்னமுதம் ஊட்டுகேன் பாடலில் 'வேள்' என்று ஒரு சொல் வருகிறது. அதைத் தப்பித் தவறி கோவி.கண்ணன் படித்தால் 'வேல்' என்று புரிந்து கொள்ளப் போகிறார். பாவம். அப்புறம் செவ்வேளைப் பற்றி பேசினால் அவர் செவ்வேலுக்கு விளக்கம் சொல்வார். :-)

குமரன் (Kumaran) said...

நல்ல வேளை, நீங்கள் இராமானுசரின் வாய்மொழியை நேரடியாக எழுதினீர்கள். இல்லாவிட்டால் 'தமிழ் தீட்டு' என்று தான் இராமானுசர் தமிழில் எழுதவே இல்லை என்று முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கத் தொடங்குவார்கள் சில மூன்றாம் பார்வையாளர்கள். :-) என்ன செய்வது, எல்லாவற்றிலும் ஒரு அவசரம், சரியான புரிதல்கள் தானா என்று அறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் இல்லை. அப்படி அறுதிப்படுத்திக் கொண்டு எழுதினால் நல்ல ஆய்வுக்கட்டுரைகள் நிறைய எழுதலாம் மூன்றாம் பார்வை கொண்டு. அது நடக்கவில்லையே என்று வருத்தம் தான்.

கோவி.கண்ணன் said...

//அதான் தெளிவாக அறுசமயம் என்பது ஆதிசங்கரரின் மாயாவாதம் இல்லை என்று விளக்கம் சொல்லியிருக்கிறாரே. அதனையே கட்டம் கட்டிவிட்டுப் பின்னர் ஏன் அறுசமயம் என்றால் ஆதிசங்கரரின் அறுசமயம் என்று சொல்லவில்லை என்று கேட்டால் எப்படி? அதில் வேறு நான் சொன்னால் காழ்ப்புணர்வு; நீங்கள் சொன்னால்? என்ற கேள்வி வேறு! :-) உங்களுக்குக் காழ்ப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ உங்களின் முன் முடிவுகள் உங்கள் கருத்தினை குழப்புவது என்னவோ தெளிவாகத் தெரிகிறது. :-)//

எனக்கு ஒண்ணும் குழப்பம் இல்லை, குழப்பமெல்லாம் பின்பற்றுபவர்களுக்கே.

அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் - இதற்கு எல்லா பூசனிக்காயையும் இன்னும் சிறப்பாகவே மறைத்து விளக்கம் சொல்ல முடியும், அதாவது சமயம் எனச் சொல்லப்படும் மதவேறுபாடுகளைக் களைந்தவன். இதுல ஆதி சங்கரரும் வரமாட்டார், லோகாயத மதங்களும் வரமாட்டா.

இராமனுஜர் அத்வைதிகளை மறுக்க வில்லை, தோளோடு தோள் சேர்த்துக் கொண்டிருந்தார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
எனக்கு ஒண்ணும் குழப்பம் இல்லை, குழப்பமெல்லாம் பின்பற்றுபவர்களுக்கே//்

அடாடாடா...என்ன இது, இப்படி ஒரு கார சாரம்? :)

//இராமனுஜர் அத்வைதிகளை மறுக்க வில்லை, தோளோடு தோள் சேர்த்துக் கொண்டிருந்தார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்//

அட, என்னங்க கோவி அண்ணா நீங்க?
அதான் அத்வைதத்தை மறுத்து, உரை எழுதினார்-ன்னு நானே சொல்லி இருக்கேனே!

நீங்க கேட்டது என்னான்னா - //ஆதிசங்கரரின் (பிரசன்ன மாயாவாதியின், பிரசன்ன பெளத்தர்//

சங்கரரைப் பிரசன்ன மாயாவாதீ-ன்னு எல்லாம் ஒருமையில் இராமானுசர் அழைக்கவில்லை என்று மட்டுமே சொல்ல வந்தேன்! மத்தபடி, சங்கரர் கொள்கைகளை, "கருத்து அளவில்", துணிவுடன் மறுத்துப் பேசினார்! இதான் எல்லாருக்கும் தெரியுமே!

வேதாந்த தேசிகர் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு பழுத்த அத்வைதியான அப்பைய்ய தீட்சிதர், நல்ல நண்பர்! ரெண்டு பேரும் கருத்தில் எதிர் எதிர் துருவம்! ஆனால் உரையாடிக் கொள்ளும் போது, கருத்தை மறுத்துப் பேசினாலும், அதில் தோழமைத் தொனி மிகவும் இருக்கும்!

அறிவியல் இல்லாக் காலத்திலேயே இப்படியெல்லாம் இருந்திருக்காங்க!
இன்னிக்கி நாம தான், அறிவியல் காலத்தில் கூட, கருத்தைக் கருத்தாப் பார்க்காம, பொசுக் பொசுக்-ன்னு கோவப் பட்டுக்கறோம்! :))

ஹைய்யோ! ஹைய்யோ!

அறு சமயம் அறுத்தல்-ன்னு திருமூலரே பாடுறாரு!
பொதுவா திருமூலர், மற்ற குரவர்களைப் போல, சமண/பெளத்தர்களைப் பழிச்சிப் பாட மாட்டாரு! அவர் சித்தர்! தமிழ்ச் சைவ சித்தாந்தத்துக்கு வழி கோலியவர்! அவரே அறு சமயம் அறுத்தல்-ன்னு பாடுறாரு-ன்னா, அவர் பூசிணிக்காயைச் சோற்றில் மறைக்கறாரு-ன்னா பொருள்? :)

எதுக்கும் இன்னொரு முறை திருமூலர் பாட்டை வாசிச்சிப் பாருங்களேன்! படக் படக்-ன்னு கோச்சிக்காதீங்க! :))

கோவி.கண்ணன் said...

//அறு சமயம் அறுத்தல்-ன்னு திருமூலரே பாடுறாரு!
பொதுவா திருமூலர், மற்ற குரவர்களைப் போல, சமண/பெளத்தர்களைப் பழிச்சிப் பாட மாட்டாரு! அவர் சித்தர்! தமிழ்ச் சைவ சித்தாந்தத்துக்கு வழி கோலியவர்! அவரே அறு சமயம் அறுத்தல்-ன்னு பாடுறாரு-ன்னா, அவர் பூசிணிக்காயைச் சோற்றில் மறைக்கறாரு-ன்னா பொருள்? :)

எதுக்கும் இன்னொரு முறை திருமூலர் பாட்டை வாசிச்சிப் பாருங்களேன்! படக் படக்-ன்னு கோச்சிக்காதீங்க! :))//

திருமூலர் காலத்திற்கும் (ஞான சம்பந்தன் உட்பட) பக்தி இயக்கத்தினர் காலத்திற்கும் தொடர்பு இல்லை என்று தான் படித்துள்ளே.

அறுசமயம் நான் கேள்விப்பட்ட வரையில் ஆதிசங்கரரின் அறுசமயம் தான். உங்கள் பதிவு ஒன்றில் சைலஜாவும் அறுசமயம் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

திருமூலர் பூசனிக்காயை மறைக்கிறார் என்று நான் சொல்லவில்லை.


//சங்கரரைப் பிரசன்ன மாயாவாதீ-ன்னு எல்லாம் ஒருமையில் இராமானுசர் அழைக்கவில்லை என்று மட்டுமே சொல்ல வந்தேன்! மத்தபடி, சங்கரர் கொள்கைகளை, "கருத்து அளவில்", துணிவுடன் மறுத்துப் பேசினார்! இதான் எல்லாருக்கும் தெரியுமே!//

கருத்து அளவில் மறுத்துப் பேசிய இராமனுஜரைத்தான் கங்கையில் தள்ளிக் கொல்ல முடிவு செய்யப்பட்டதோ, இது என் கற்பனை இல்லை இந்திரா பார்த்தசாரதி எழுதி இருக்கிறார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறுசமயம் நான் கேள்விப்பட்ட வரையில் ஆதிசங்கரரின் அறுசமயம் தான்//

அப்படீன்னா, திருமூலர் பாடுற அறு சமயம் என்ன? அதைச் சொல்லுங்க!

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்!
ஆறு சமயப் பொருளும் அவன் அலன்!
- இதுக்கு என்னா அர்த்தம்?
திருமூலர், நீங்க சொல்லுறாப் போல ஆதிசங்கரரின் அறுசமயத்தைத் தான் பிடிச்சி வாங்குறாரா? - இதுக்குப் பதில் சொல்லாம எஸ்கேப் ஆனீங்க...சிங்கை வந்து ஒங்கள ஒதைப்பேன்! சொல்லிப்புட்டேன்!

//உங்கள் பதிவு ஒன்றில் சைலஜாவும் அறுசமயம் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்//

:)
ஷைலஜா சொன்னா வரலாற்றுக் குறிப்பு ஆயிருமா?
அவங்க சொன்னது வேற context-ல! இந்து மதத்துக்குள் ஒருங்கிணைச்சதை சொல்ல வந்த போது சொன்னாங்க!

//கருத்து அளவில் மறுத்துப் பேசிய இராமனுஜரைத்தான் கங்கையில் தள்ளிக் கொல்ல முடிவு செய்யப்பட்டதோ, இது என் கற்பனை இல்லை இந்திரா பார்த்தசாரதி எழுதி இருக்கிறார்//

அறிவோட தான் பேசறீங்களா? :)
நான் என்ன சொன்னேன்? நீங்க என்னா சொல்றீஙக?

இராமானுசர் கண்டிப்பா அத்வைத மறுப்பு விவாதங்களில் கலந்து கொண்டு இருக்கார்! ஆனால் அது கருத்து விவாதம் மட்டுமே!
சங்கரரை ஒருமையில் பிரசன்னா மாயவாதியே-ன்னு எல்லாம் சொன்னதில்லை-ன்னு தானே சொன்னேன்?

இராமானுசரைக் கங்கையில் தள்ளி வுட்டது, யாதவப் பிரகாசர்-ன்னு ஒருத்தரு!
விட்டா, சங்கரர் தான் கங்கையில் தள்ளி வுட்டாரு-ன்னு சொல்வீங்க போல இருக்கே! :)

கங்கையில் தள்ளி விட எண்ணியது ஒரு தனிப்பட்ட மனுசன் செயல்!
ஏன்னா அந்த ஆளுக்கு கருத்து அளவில் விவாதம் செய்யத் தெரியலை! அதுக்காக அத்வைதம் தான் தள்ளி விட்டுச்சி-ன்னா சொல்ல முடியும்? :))

கோவி.கண்ணன் said...

//கங்கையில் தள்ளி விட எண்ணியது ஒரு தனிப்பட்ட மனுசன் செயல்!
ஏன்னா அந்த ஆளுக்கு கருத்து அளவில் விவாதம் செய்யத் தெரியலை! அதுக்காக அத்வைதம் தான் தள்ளி விட்டுச்சி-ன்னா சொல்ல முடியும்? :))//

தீவிரவாதிகளும் மதத்தின் பெயரால் தான் இயங்குகிறார்கள், அவர்களின் செயலும் மதத்தைத் தாங்கிப் பிடிப்பதில் தான் உள்ளது. பின்பற்றுபவன் சரி இல்லை என்றால் கொள்கைகள் வெறும் காகித எழுத்து தானே கே.ஆர்.எஸ், அவர்கள் மட்டும் என்ன சொந்த பகையைத் தீர்த்துக் கொள்ளவா இத்தகைய செயல்களை செய்கிறார்கள் ? வாய்க்கால் தகராறா ?

யாதவப் பிரகாசர் தன் மாணாக்கர் மூலமாக அந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத்தான் படித்தேன். அவரே இராமனுஜரின் முதல் குரு, வெகுகாலத்திற்கு பிறகு அவரும் இராமனுசரிடம் தஞ்சம் அடைந்தார்.

//ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்!
ஆறு சமயப் பொருளும் அவன் அலன்!
- இதுக்கு என்னா அர்த்தம்?//

உங்க பொருள்படிக் கொண்டாலும் கூட புறசமயங்கள் வைதிகத்தை மறுக்கக் கூடியவை, அவர்கள் சிவத்தை கண்டிருப்பதாக குறிப்பிட்டது இல்லை. அதை திருமூலர் திரும்ப சொல்லவும் தேவை இருப்பது போல் தெரியவில்லை. புறச் சமயம் சிவனைப் பற்றிப் பேசவில்லை, அவர்களின் பொருளும் அது இல்லை இதுவும் தெரிந்ததே, அதையே ஏன் இவர் திரும்பச் சொல்லப் போகிறார்.

'கடவுள் மறுப்பவன் கடவுளை கண்டதில்லை' என்று யாராவது பாடினால் அதில் பொருள் வருமா ? அவன் தான் 'நான் கண்டதில்லை' என்று ஒப்புக் கொள்பவன் ஆகிறே.

முக்கண், நெற்றிக் கண் மற்றும் 'இடம்' பொருள் கருதி என் கருத்துகளை முடித்துக் கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'கடவுள் மறுப்பவன் கடவுளை கண்டதில்லை' என்று யாராவது பாடினால் அதில் பொருள் வருமா ?//

அதானே! வருமா? :)

கடவுள் மறுப்பவன் 'கடவுளை கண்டதில்லை' என்று யாராவது பாடினால் அதில் பொருள் வருமா? அப்போ ஏன் திருமூலர் அப்படிப் பாடினாரு? அதைச் சொல்லுங்க!

இன்னும் திருமூலர் சொன்ன "அறுசமயம்" என்னா-ன்னு நீங்க ஒத்துக்கவே இல்லை! தாவு தாவு-ன்னு தாவறீங்க! கட்சித் தாவல் தடைச் சட்டம் :)

* திருமூலர் சொன்ன அறுசமயம், சங்கரரின் ஷண்மதங்களா?
* திருமூலர் சொன்ன அறுசமயம், வேற ஏதாச்சுமா?

Straight to the point, Answer this, before anything else.
Kumaran, Intha answer vara varaikkum, dont publish any other Govi Comments :))

இராஜராஜேஸ்வரி said...

பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே - எதிர்த்து வந்தவர்களுக்கு எல்லாம் காலனைப் போன்ற திருமங்கையாழ்வாரின் திருவடிகள் இரண்டினையும் போற்றும் இராமானுசன் வாழ்க.

காரேய் கருணை இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி. நீங்கள் இட்ட பின்னூட்டத்தால் இந்த இடுகையையும் பின்னூட்டங்களில் இரவிசங்கர் எழுதிய இராமானுசரின் பெருமைகளையும் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.