Sunday, October 04, 2009

புல்லாகிப் பூண்டாகி - இராதாமோகன் விமரிசனம்

சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துவிட்டு நண்பர் இராதாமோகன் எழுதியிருக்கும் விமரிசனம் இங்கே:

***

குமரன்,

கதையைப் படிச்சோமா, ரசிச்சோமா, அடுத்தக் கதைக்கு போனோமான்னு இருக்கற
பேர்விழியிடம் விமர்சனம் எழுதச் சொன்னால்...நான் என்ன எழுதுவது என்று
புரிபடாமல் முன்பே பிறர் கொடுத்துள்ள விமர்சனங்களை படித்துப் பார்த்தேன்.
புதிதாக சொல்ல இனி என்ன இருக்க போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும்
என் கிரிதாரியின் துணையுடன் முயற்சி செய்கிறேன். :)

முதலாவதாக, கதைக் கரு, பின்னர் எழுத்து நடை, பின்னர் கதையில்
ஆங்காங்கே தென்படும் தத்துவங்கள் என்ற வரிசையில் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.

**********

கதைக் கருவைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், "கண்ணன் காலடி பட்டு கல் உயிர்
பெற்றது; பிறவிச் சுழலில் அகப்பட்டது" என்பது ஒரு சுவாரஸ்யமான கற்பனை.
பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... இறைவனின் லீலா
வினோதங்களில் எது தான் சாத்தியமில்லை என்ற நோக்கில் இந்தப் புதிய
சிந்தனை ரசிக்கும்படி உள்ளது. புதிது என்றாலும் யாரையும் புண்படுத்தும்
அபாயம் இல்லாத சிந்தனை என்றே நினைக்கிறேன். தொடரின் முடிவில் எனக்கு
புதுமைப் பித்தனின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. "சாப விமோசனம்" என்ற
அந்தக் கதையில், இலங்கை யுத்தம் எல்லாம் முடிந்து சீதா-ராமர் அயோத்தி
நகர் திரும்பும் வழியில், கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிவர்.
அங்கே அகலிகை சீதையுடன் உரையாடுவதாக ஒரு காட்சி வரும்.
சீதையை ராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான் என்பதை அகலிகையால்
தாங்கவே முடியாது. மன அதிர்ச்சியில் அகலிகை மீண்டும் கல்லாகச் சமைந்தாள்
என்று வரும். இக்கதை அந்த நாட்களில் நிறைய சர்ச்சையை எழுப்பியதாக
சொல்வர்.

(அந்தக் கல் தான் மீண்டும் இங்கு கண்ணன் காலடிப்பட்டு புனர்ஜென்மம்
எடுத்ததோ என்னவோ. :))

கதையின் ஆரம்பத்தில் எல்லா சராசரி மனிதர்களையும் போல அற்ப விஷயங்களுக்கு
பொறாமைப் படுதல், டம்பம் அடித்துக் கொள்ள விரும்புதல் போன்ற நல்ல
குணங்களுடன் கதாநாயகன் கந்தன் அறிமுகமாகிறான். அதே கந்தன் முந்தைய
பிறவிகளில் இறைவன் ஒருவனையே நினைத்துக் கொண்டிருக்கும் நரசிம்மதாசனாக
இருந்தான் என்று பின்னர் தெரிய வருகிறது. இதைப் படிக்கும் பொழுது, இன்றைய
சராசரிகள் அனைவரும் நமது தெய்வீகத் தன்மையை மறந்து விட்ட கந்தனை போலத்
தான் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. "நீ தெய்வீகமானவன் !" என்ற
விவேகானந்தரின் கூற்றை உங்கள் கதை நினைவூட்டுகிறது.

(நீங்க உடனே உங்களை விவேகானந்தராகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். :))

**********

அடுத்ததாக எழுத்து நடை பற்றி...சம்பாஷணை மூலம் கருத்துகளைத் தெரிவித்தல்,
மூன்றாம் நபராக இருந்து பாத்திரங்களை அறிமுகம் செய்வது, பாத்திரங்களின்
நினைவுகள் வாயிலாக பாத்திரத்தினுள் வாசகனை நுழைப்பது போன்ற கதை எழுதும்
யுக்திகள் எல்லாம் சிறப்பாகவே தென்படுவதால் இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக உள்ளது.

எல்லா பின்னூட்டங்களையும் படித்துப் பார்த்த பொழுது, தொடரின் ஆரம்பம்
மட்டும் சிலருக்கு ஒரு தொய்வினை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
உங்களுக்கு உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை
நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்
என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை சம்பந்தமாக நிறைய உழைப்புடன், நிறையவே
பொறுமையுடன் நீங்கள் சொல்லிய கதைப் பாங்கில் ஆங்காங்கே வசனங்கள்
இருந்தாலும், அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு
கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்.

அன்னமாசார்யர் கீர்த்தனை, முகுந்தமாலா ஸ்லோகம், திருவெம்பாவை
பாடல்கள்...என்று ஆங்காங்கே மஹான்களின் பனுவல்களை தூவியிருந்தது அருமை.
ஒரு குறுந்தொடர் கதையில் இது போல படித்தது இதுவே முதல் முறை.
இந்த நடை கல்கியின் நடையை நினைவூட்டியது. (பொன்னியின் செல்வனில்,
பதிகங்களையும் பாசுரங்களையும் கதாப் பாத்திரங்கள் வாயிலாக கதையினூடே
அழகாக கோர்த்திருப்பார்.)

பின்னூட்டங்களைப் படித்தபோது, "பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன
நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது." என்று முடித்தப்
பின்னர், அடுத்த அத்தியாயத்தில் பாண்டவ தூது ஒரு கனவு என்பதை வாசகர்கள்
யூகிக்க முடியாமல் போனது அதிசயமாக உள்ளது.

(இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்
ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி
வைத்திருக்கிறீர்களா?! :)) "இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை.
இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்." என்று அடுத்த
அத்தியாயத்தில் முடித்து, அதற்குப் பின்னர் மரமாகப் பிறவி எடுத்தத்
தொடர்ச்சியை, புத்தக வடிவில் இருந்தால் எளிதாக யூகித்திருப்பார்கள் என
நினைக்கிறேன்.

என்றாலும் உங்கள் எழுத்து நடை ஆங்காங்கே சில குழப்பங்களையும்
ஏற்படுத்தியது என்பதையும் சொல்லிவிடுகிறேன். உதாரணமாக, நரசிம்மதாசனின்
அறிமுகம் முடிந்து, அடுத்தப் பத்தியில், "இவன் பிறந்து ஐந்து
வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது."
என்று படித்தபோது, இன்னமும் நரசிம்மதாசனைப் பற்றியே சொல்கிறீர்கள் என்று
தான் நினைத்திருந்தேன். இடையில் வந்தப் படம் "இது தான் நரசிம்மதாசனின்
படம் போல" என்று என்னை நினைக்கத் தூண்டியது. அடுத்த வரியைப் படித்தபோது
சுதாரித்துக் கொண்டேன். :)

படங்களைப் பற்றி எல்லோரும் சொல்லி விட்டனர். கண்ணன் துரியோதனன்
மாளிகைக்குச் செல்ல மறுத்து, விதுரர் வீட்டிற்குச் சென்றான் என்ற
இடத்தில், பக்தியை உயர்த்தும் தராசு படம், மாதுர்ய பக்தியே இருக்கும்
எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொல்லுமிடத்து
ராதா-கிருஷ்ணன் ஊஞ்சலாடும் படம், ஒன்பது கலவைகளுடன் போகர் படம் என்று
நிறைய இடங்களில் படங்களின் தேர்வுகள் அருமை.

**********

அடுத்ததாக தத்துவங்கள்..."மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி
முறைகளிலும் மிக மிகச் சிறந்தது" என்பதை படித்தபோது இவ்விடத்தில் இங்கு
சைதன்யருக்கு பதிலாக ஒரு பெரியாழ்வார் அல்லது ஒரு அப்பர் பெருமான்
இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. :)

பின்னர், அடுத்த அத்தியாயத்தில், ஜகன்மோகனுக்கு பஞ்ச கோசங்கள் பற்றிய
உணர்வு ஏற்பட்டது என்று மட்டுமே சொல்லி, அதற்கு அப்பால் உள்ளப் பொருளைப்
பற்றிய உணர்வு ஏற்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
என்று எண்ணினேன். பின்னர் ஜகன்மோகன்,"இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த
பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன்." என்று படித்தபோது அதன்
காரணம் புரிந்தது. (இவ்விடத்தில், நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றவரும்
கூட அதனை நழுவ விடாமல் சஹஜ சமாதியில் நிலைக்க முயற்சிக்க வேண்டும் என்ற
ரமணர் வாக்கு நினைவிற்கு வந்தது. அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்
கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)

"அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை
முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும்
ஆவலும் நீங்கும்." என்பதை படித்தபோது, "ஆசை அனுபவித்தெல்லாம் தீருமா?"
என்ற எண்ணம் எழுந்ததையும், அதனைத் தொடர்ந்து, பாகவதத்தில் யயாதியின்
சரித்திரம், கீதை வாக்கியங்கள் என்று நிறைய எண்ணங்கள் எழுந்ததையும்
தவிர்க்க முடியவில்லை. "ஆசையை அனுபவித்து ஆவல் நீங்குவது என்பது எரிகிற
அக்னியை அணைக்க அதில் நெய்யை விடுவது போல" என்றபடியெல்லாம் எங்கோ படித்த
நினைவு....

அந்த வரியைத் தொடர்ந்து, "மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள்
நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து
பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும்."
என்பதையும் படித்தப் பொழுது மேலும் பல எண்ணங்கள் எழுந்தன...

நன்றாகக் கனிந்த பழம் தானே விடுபட்டு கீழே விழும் என்று பெரியோர்
சொல்கிறார்கள். இரண்டு வழிகளுமே "விட்டுவிடுதல்" என்ற ஒரு வழியில்
சேர்வது போன்ற ப்ரமை ஏற்படுகிறது. :)

"கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம்
குதூகலிக்கிறது." , "அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."
போன்ற வசனங்கள் அருமை.
இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has
attained spiritual knowledge. First, he has no pride; second, he
develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி
நினைவிற்கு வந்தது.

இது போன்ற நிறைய வசனங்கள்; கந்தன் மூலமாக நாத்திக வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன.

**********

கடைசியாக ஒரு (அடாவடித்தனமான) இலவச விமர்சனம்:
முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)
முதலில் கேசவனாக கண்ணன் உள்ளே நுழைகிறான். நான் சொல்லலை குமரன்.
"கேசவன் மட்டும் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"னு தாத்தா
சொல்கிற இடத்தில் ஒரு படம் போட்டு உள்ளீர்களே...அது சொல்கிறது. :)
கடைசியில் கல்யாணப் பத்திரிக்கையில் கண்ணன். :)
எடுக்கின்ற பிறவிகள் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு
பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்
குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)
பறவை என்றால் ஒரு குயில், முருகனின் ஒரு மயில், இல்லை மீனாக்ஷி கையில்
உள்ள ஒரு பச்சைக் கிளி என்றெல்லாம் இல்லாமல், அது எப்படி கருடனாக ஒரு
பிறவி? (ஒ ! கண்ணன் பாரிஜாத மரத்தை துவாரகாவிற்கு கொண்டு வர கருடன்
மீதேறி தானே இந்தரலோகம் சென்றான் !! :))

அட! இதெல்லாம் போகட்டும். ஒன்பது வகை பக்தி பற்றி பாகவதம் சொல்கிறது
என்று சொல்லி, அடைப்புக் குறிக்குள் கண்ணனை அழகாக நுழைத்து விட்டீர்கள்.
:) பொதுவாக இறைவன், பகவான், பரம்பொருள் என்று சொல்லாமல்...எப்படி கண்ணன்
அங்கே வந்தான் என்றால்...சட்டியிலே இருக்கறது தானே அகப்பையில் வரும். :))

**********

விமர்சனம் முற்றும். ராதே கிருஷ்ணா !!
~
ராதா

21 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புல்லாகிப் பூண்டாகியா?
எங்கோ படிச்சாப் போல இருக்கே! பல பேரு விமர்சனம் பண்ணாங்களே! ஏன் இந்த ராதா மட்டும் இம்புட்டு லேட்டு? நீங்க எப்பமே லேட்டா ராதா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... //

இந்தக் கருத்து பற்றி அப்போ செம சூடான விவாதங்கள் பறந்தது!

நித்ய முக்தர்களாக மோட்சத்தில் இருக்கும் ஜயவிஜயர்கள் கூட, உலகத்தின் நன்மை பொருட்டு, பிறவி எடுக்க வேண்டும் என்று பெருமான் விரும்பினால்...

அவன் உள்ள உகப்பே உகப்பு என்று பிறவிச் சுழலுக்குள் வரவேண்டும் அல்லவா? அதே தான் காலடி பட்ட கல்லும், சுழலில் சுழன்றது! :)

எற்றைக்கும் ஏழேழ் "பிறவிக்கும்" உன் தன்னோடு என்று மோட்சத்தை விட அவனோடு கூடிய பிறவியே இனிது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை
நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்
என்று நினைக்கிறேன்//

//அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு
கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்//

ஹிஹி! ராதா எப்பமே நம்ம கட்சி தான்! நன்றி ராதா! :)

//இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்
ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி
வைத்திருக்கிறீர்களா?! //

அதானே!!!!!! :)

//அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."
போன்ற வசனங்கள் அருமை.
இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has
attained spiritual knowledge. First, he has no pride; second, he
develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி
நினைவிற்கு வந்தது//

ஒப்பு நோக்கு அருமை ராதா!
அடியார்களின் சத்சங்கமே இதற்குத் தான்!
தனிமையான தவத்தில் ஒத்தை ஆளு தானே! எங்கே மமகாரம் அறுத்தல்?
கூடியிருக்கும் போது தானே மமகாரம் வெளிப்படும்! வெளிப்பட்டு, உளிபட்டு, உடையவும் உடையும்!

அடியார்கள் குழாத்தில், குணானுபவத்தில் என்றும் இருக்க வேணும் என்பதை இதற்குத் தான் காட்டிச் சென்றார்கள் போலும்!
அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ...
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)//

ராதாஆஆஆஆஆஆ
காலைக் காட்டுங்க!
டகால்ட்டி ராதா திருவடிகளே சரணம்! :))

//குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு
பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்
குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)//

கந்தா கடம்பா கதிர்வேலா காளிங்க மடு குதித்தா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக உள்ளது//

இது
இது
இது உங்களது முதல் விமர்சனம்
என்பதை நம்பக் கடினமாக உள்ளது!

நல்ல விமர்சனம்! வாழ்த்துக்கள் ராதா!
மீண்டும் வாழ்த்துக்கள் குமரன்! :)

பி.கு:
குமரன்,
இதே போல், மற்ற அடியார்களுக்கும், விமர்சனத்தை நீங்களும் எழுதித் தரணும் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோங்க! :))

மெளலி (மதுரையம்பதி) said...

இந்த விமர்சனத்தை படிச்சபிறகு, கதையை இன்னொருமுறை படிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. :)

//அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்
கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)//

இதுதான் ராதாவின் டச் என்பதோ? :)

Kavinaya said...

ராதா, முதல் முறைன்னு சொன்னது ச்சும்மானாச்சிக்கும் தானே? :)

//இந்த விமர்சனத்தை படிச்சபிறகு, கதையை இன்னொருமுறை படிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. :)//

எனக்கும்! :)

Radha said...

கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா,
எல்லோருக்கும் நன்றி.
நம்புங்கள் ! இது எனது முதல் விமர்சனம் தான். கிரிதாரியை துணைக்கு அழைத்தபின், முடிவுறும் வேலை யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் தான் அதிசயம். :-)
குமரன்,
உங்கள் கதையை எல்லோரும் திரும்பி படிக்க வேண்டும் என்று இப்படி ஒரு சதியா ? :-)
~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா//

ராதா, யாரு இந்த கண்ணா? யாராச்சும் புதிய பதிவரா? :)

அடுத்த விமர்சனம் உங்களுக்கு ஒன்னு இருக்கு! மின்னஞ்சல் அனுப்பறேன்!

குமரன் (Kumaran) said...

கேட்டதுக்கு மரியாதை கொடுத்து விமர்சனம் எழுதிக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி இராதா. விமர்சனம் எழுதுற அளவுக்கு கதையில ஒன்னுமே இல்லைன்னு ஒத்தை வரியில சொல்லாம விட்டீங்களே - அதுக்கே நிறைய நன்றி சொல்லலாம். :-)

எனக்கு என்னவோ திருவடி பட்டு பிறவிச் சுழல் தொடங்கியதுங்கறது புதுமையான கற்பனையாகத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அது கற்பனையும் இல்லை; புதுமையும் இல்லை. :-)

நீங்க சொல்ற புதுமைப்பித்தன் எழுதுன அகலிகைக் கதையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் படிச்சேன். இன்னும் நிறைய புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கணும்.

இது முழுக்க முழுக்க முதல் படைப்புன்னு சொல்ல முடியாது இராதா. முதல் 'தொடர் கதை முயற்சி'ன்னு வேணும்னா சொல்லலாம். அப்பப்ப கதை எழுத முயற்சி செஞ்சுக்கிட்டுத் தானே இருக்கேன். :-)

'வெக்கை தணிய வீசு' வெறும் உரையாடல்கள் மட்டும் தான். அதைப் படிச்சீங்களா? உரையாடல் மூலமா கதை சொன்னா புரியுதா?

கந்தன் பேசுன நாத்திக வசனங்களை ஒரு தடவை படிக்கணும்ன்னு தோணுது இப்ப இராதா. :-)

குமரன் (Kumaran) said...

இலவச விமர்சனத்துக்கு நன்றி இராதா!

பரவாயில்லை. நல்லாவே கவனிச்சிருக்கீங்க. கேசவனைப் பத்தி சொல்றப்ப அந்தப் படத்தைப் போட்டது எதுக்குன்னு உங்களுக்கு மட்டும் தான் புரிஞ்சது போல. :-) ஆனா இந்தக் கேசவன் அந்தப் படத்துல இருக்குற கேசவன் இல்லை; இந்தக் கேசவன் நிஜமாவே கந்தனோட ஒவ்வொரு பிறவியிலயும் கூடவே வந்துக்கிட்டு இருக்கான்னு தாத்தா சொன்னார்; இந்தக் கேசவன் ரொம்ப நாள் கந்தனை மாதிரி அமெரிக்காவுல வாழ்ந்துட்டு இப்ப ஒரு ஆறுமாசமா கோயம்புத்தூர்ல CTSல வேலை பாத்துக்கிட்டு இருக்கான். :-)

மத்த தொடர்பெல்லாம் தற்செயல்! அதுல கண்ணனோட தொடர்பு இருக்குன்னு நினைக்கிறது அடாவடியே தான்! :-)

கல்யாண பத்திரிக்கையில கண்ணன் இருந்தது தற்செயல்! புள்ளையாரும் இருக்காருங்கறதை மறந்துற வேணாம்; பத்திரிக்கை படம் தேடுனப்ப அது தான் சிக்கிச்சுன்னு சொன்னா நம்பணும். :-)

கடம்ப மரம்ன்னா எனக்கு இது வரைக்கும் கடம்பனான முருகனும் கடம்பவனவாசினியான அம்பிகையும் கடம்பவனமான மதுரையும் தான் நினைவுக்கு வரும்; இப்ப உங்க விமர்சனம் படிச்சதால கண்ணன் ஏறிய கடம்பமரமும் நினைவுக்கு வரும்! :-)

என்ன பண்றது சொல்லுங்க? குயிலோ மயிலோ பச்சைக்கிளியோ குடமுழுக்கு நேரத்துல வந்து சுத்தும்ன்னு பெரியவங்க சொல்லலையே! அதனால தான் கருடன் வந்தார். அதையும் என் குத்தமா சொன்னா எப்படி?

சட்டியில இருக்குறது தான் அகப்பையில வரும்னு சொல்ற மாதிரி நெஞ்சுல இருக்குறது தான் உங்க நோக்கத்துலயும் வந்துருக்குன்னு உங்க இலவச விமர்சனம் சொல்லுது!

(ஆச்சரியக் குறிகள் போதுமா இன்னும் வேணுமா? நீங்க போட்ட அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சமாவது கூடக் குறைய போட்டிருக்கேன்! )

குமரன் (Kumaran) said...

இரவி,

மத்த அடியார்கள் யாராவது விமர்சனம் கேட்டிருந்தா கட்டாயம் எழுதித் தர்றேன். அடியாட்களுக்கும் ஆட்டோ அனுப்புவேன்னு சொல்றவங்களுக்கும் கிடையாது! :-)

குமரன் (Kumaran) said...

//குமரன்,
உங்கள் கதையை எல்லோரும் திரும்பி படிக்க வேண்டும் என்று இப்படி ஒரு சதியா ? :-)
//

அடடா! உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா இது என் சொந்தக் கதை சோகக் கதை தான்னு. :-)

குமரன் (Kumaran) said...

ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? சூப்பர். அப்ப எனக்கு அந்த வேலை இல்லை. வேலை வணங்குவதே வேலைன்னு இருந்துக்கறேன். :-)

Radha said...

//'வெக்கை தணிய வீசு' வெறும் உரையாடல்கள் மட்டும் தான். அதைப் படிச்சீங்களா? உரையாடல் மூலமா கதை சொன்னா புரியுதா? //
படிச்சேன். ரொம்ப நல்லாவே புரியுது.

அப்பறம்,அந்த இலவச விமர்சனம் கோ.வி.கண்ணனை நீங்க மெலிதாக கிண்டல் செய்ததை பொறுக்க முடியாமல் எழுதினது. :) எழுதும்போதே தெரியும் அடாவடி தான் என்று. :)

Radha said...

//நீங்க சொல்ற புதுமைப்பித்தன் எழுதுன அகலிகைக் கதையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் படிச்சேன். இன்னும் நிறைய புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கணும். //
Very interesting writer...நிறைய கதைகள் முதல் வாசிப்பில் எனக்கு புரியாமல் சில மாதங்கள், வருடங்கள் கழித்து படித்த பொழுது புரிந்து கொண்டதுண்டு.

Radha said...

//ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? //
நான் சொல்லவே இல்ல குமரன். இதுவே முதலும் கடைசியும். :)

Radha said...

//விமர்சனம் எழுதுற அளவுக்கு கதையில ஒன்னுமே இல்லைன்னு ஒத்தை வரியில சொல்லாம விட்டீங்களே - அதுக்கே நிறைய நன்றி சொல்லலாம். :-) //
இதெல்லாம் ரொம்பவே ஓவர். எல்லோருமே சொல்லிட்டாங்களேன்னு சொல்லலை. Should I mention explicitly that the entire story was a fantastic read for me?

Radha said...

//கந்தன் பேசுன நாத்திக வசனங்களை ஒரு தடவை படிக்கணும்ன்னு தோணுது இப்ப இராதா. :-) //
கந்தன் தாத்தாவை மடக்கியதாக நினைத்து கேட்ட கேள்விகளை, கிண்டலாக எழுப்பிய வினாக்களை தான் அப்படி குறிப்பிட்டேன். பெரிதாக நாத்திகம் என்று சொல்லிவிட முடியாது.

குமரன் (Kumaran) said...

//Should I mention explicitly that the entire story was a fantastic read for me?//

தேவையில்லை. விமர்சனம் எழுதியதே அதைச் சொல்லிவிட்டது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடியாட்களுக்கும் ஆட்டோ அனுப்புவேன்னு சொல்றவங்களுக்கும் கிடையாது! :-)//

அடியாட்களுக்கு ஆட்டோ அனுப்புவேன்னு சொல்ற அடியார்களுக்கு? ?:))))