Wednesday, April 26, 2006

175: மதுரை - 3

சரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.

புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.

மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.

அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.

அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.

அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.

மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.



இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.

அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.

அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.

அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)

இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!

81 comments:

இலவசக்கொத்தனார் said...

//இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். //

நெல்லையப்பர் கோவிலிலும், நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கோவிலிலும் கூட இசைத்தூண்கள் உண்டே ஐயா.

குமரன் (Kumaran) said...

நான் இல்லை என்று சொன்னேனா ஐயா? நான் பார்த்த இடங்களை மட்டுமே பட்டியல் இட்டேன். நான் நெல்லையப்பர் கோவிலுக்கும் சென்றதில்லை. கிருஷ்ணாபுரம் கோவிலுக்கும் சென்றதில்லை. :-)

கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்களைப் பற்றி படித்திருக்கிறேன். அந்த சிற்பங்களைப் பார்ப்பதற்காகவாவது அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

யய்யா,

மருதயில இருந்துகிட்டு தின்னேலி போவாமையேவா காலத்த ஓட்டி இருக்கீரு? நல்லாத்தான் இருக்கு கத. அடுத்த வருசம் ஊருக்கு போவம்போது ஒரு பிளஷர் எடுத்துகிட்டு தின்னவேலி, கிருஷ்ணாபுரம், திருச்செந்தூர்ன்னு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்து பதிவ போடுங்க. என்னா?

ரவி said...

அருமையான பதிவு...எங்க ஊர் திருக்கோவிலூர் பத்தியும் திருவண்ணாமலை பத்தியும் எழுதுங்களேன்..

துளசி கோபால் said...

குமரன்,

'மதுரை' நல்லா இருக்கு.

வந்துட்டு ஒண்ணும் சொல்லாமப் போறேன்னு எழுதுனீங்கல்லே?

நீங்கெல்லாம் இந்தச் சின்னவயசுலேயே ஆன்மீகமா இருக்கறதைப் பார்த்து எனக்குள்ளேயே
தன்னிரக்கம் வந்துருது.

நானோ அன்னாடங்காய்ச்சியா எதையோ எழுதிக்கிட்டு வரேன். அதான்.... படிச்சுட்டு என்ன எழுதறதுன்னு
தெரியாம வந்தேன் போனேன்னு இருக்கேன். அதாலே இதையெல்லாம் கண்டுக்காதீங்க.

Anonymous said...

Dear Kumaran

That photo and your narrations are good. You can read my comments on Madurai Temple along with photos at http://blog.360.yahoo.com/blog-r7rBHjAib7TfthJ7_AAQOg1.?p=49

Thanks
Rajan

சிவமுருகன் said...

குமரனண்ணா,

//எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்//

இல்லையே, சித்திரையில் மாசி வீதியிலும், ஆவணியில் சித்திரை வீதியிலும், மார்கழியில் வெளி வீதியிலும், அம்மையும்-அப்பனும் வலம் வருவர்.

அதே போல் ஆவணி மூலத்தில் மட்டும் ஆவணி மூலவீதியில் வலம் வருவர்.

திருமலை மன்னர் காலத்தில் தை திருவிழா- சித்திரை திருவிழாவாக, சைவம், வைணவம் இணையும் விழாவாக, சமத்துவ விழாவாக மாறியதாக கேள்வி பட்டுள்ளேன். அதே போல் சில விழாக்கள் மாறி இருக்க வாய்ப்புள்ளது. (உ.ம்.: திருக்கல்யாண மண்டபத்தில் நடக்கும் திருக்கல்யாணம், ஆடிவீதியில் நடப்பது)

சிவமுருகன் said...

எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது அன்னையின் வரலாறு.

அதுவும் உங்கள் எழுத்தில். அருமை.

Anonymous said...

குமரன்,மதுரையா இவ்வளவு சுத்தமாக இருக்கு?னல்ல படம்.னல்ல பதிவு. தமிழ்எழுத்துப்பிழை மன்னிக்கவும். கே.பி.டிராவல்ஸ் ஏறி பொகவெண்டும் என்று தோண்றுகிறது.வல்லி.

டிபிஆர்.ஜோசப் said...

மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. //

உண்மைதான் குமரன். நான் பிறந்த ஊர் என்றாலும் மதுரையுடனான என் உறவு நான் அங்கு மேலாளராய் பணிபுரிந்த ஒன்றரை ஆண்டுகள்தான்.

நான் பணிபுரிந்த ஊர்களில் மிகவும் பிடித்த ஊர்களில் மதுரையும் ஒன்று. மதுரையைச் சுற்றிய கழுதையும் ஊரை விட்டுப் போகாது என்று கூற கேட்டிருக்கிறேன். அது உண்மைதான் என்பதை நான் அங்கிருந்தபோதுதான் உணர்ந்தேன்.

இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன.//

அப்படியா? பாராட்டுகள்.

ENNAR said...

மதுரைக் காரரே தாங்கள் சங்க காலம் முதல் ஆங்கிலேயருக்கு சங்கூதிய காலம் வரை மன்னர்கள் வராலாற்றை தொகுங்கள் நான் சோழரை தொகுத்துக்கொண்டிருக்கிறேன்

rnatesan said...

நன்று குமரன்,
நான் மதுரை சென்றுள்ளேன்!!ஆனால் அந்தக் கூட்டத்தில் எதையும் சரிவரப் பார்த்ததில்லை!!மீண்டும் மே மாதத்தில் பரிட்சை எழுத செல்கிறேன்!!அப்போது சரியான ஒருவர் உதவி மூலம் அனைத்தையும் சரியாகப் பார்க்கவேண்டும்!!

Ram.K said...

ஆம் இந்தப் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது.

உங்கள் பதிவும் உரையாடுவது போல வந்துள்ளது.

நன்றி.

Karthik Jayanth said...

குமரன்,

மதுரை... இந்த வார்த்தையை கேட்டதும் மனம் பல நினைவுகளுக்கு சென்று விடுகிறது.. எதேதோ எழுத நினைத்தாலும்.. நல்ல பதிவு..

மதுரைல இருக்குற கோவில்களில் சாமி கும்பிடவே பல ஜென்மம் வேணும் :-)

கால்கரி சிவா said...

குமரா,

மதுரை வடக்காடி வீதியில், நவராத்திரியில் ஓவ்வொரு இரவிலும் புகழ்ப் பெற்ற இசைக் கலைஞர்கள் படைத்த இசைவிருந்து இப்போதும் என் காதில் ஒலிக்கின்றன.

அந்த நாளும் வந்திடாதோ.....

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். தின்னவேலியைப் பத்தி சொல்ல வந்துட்டீங்களே. நான் மதுரையையே சரியா சுத்திப்பாக்காதவன். ஒரு தடவை இராகவனோட பேசிக்கிட்டு இருக்கிறப்ப அவர் மதுரையில் வாழ்ந்த போது இருந்த இடத்தைப் பற்றிச் சொன்னார். எனக்கு அது எங்கே இருக்கிறது என்று கூட தெரியலே. பாவம் ரொம்ப நொந்துப் போயிட்டார்.

கல்யாணம் ஆன புதுசுல மாமனார் வீட்டுக்கு தூத்துக்குடிக்கு வந்தப்ப சுருக்கா திருச்செந்தூர் போயிட்டு அப்படியே பாளையங்கோட்டையில இருக்கிற ஒரு நண்பரோட வீட்டுக்கும் போயிட்டு வந்தோம். அப்பவும் நெல்லையப்பரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலை. திருச்செந்தூருக்கு அடிக்கடி போயிருக்கேன். நீங்கள் சொல்ற மாதிரி அடுத்தத் தடவை போறப்ப ஒரு பிளசர் காரை எடுத்துக்கிட்டு எல்லா ஊருக்கும் போயிட்டு வரணும்.

குமரன் (Kumaran) said...

ரவி. மிக்க நன்றி. திருவண்ணாமலையைப் பற்றி எழுதலாம். ஆனா எனக்கு திருக்கோவிலூர் பற்றித் தெரியாதே. ஆனா கேள்விப்பட்டப் பேரா இருக்கே. ஆமாம். நினைவிற்கு வந்துவிட்டது. நம்மாழ்வார் உங்க ஊர் உலகளந்த பெருமாளைப் பத்தி நிறைய பாடியிருக்கார். நம்மாழ்வார் பாசுரங்களைப் பத்தி வருங்காலத்தில் எழுதலாம்ன்னு இருக்கேன். அப்போ திருக்கோவிலூர் பத்தி எழுதுறேன்.

குமரன் (Kumaran) said...

துளசியக்கா, இந்தத் தடவையாவது வந்தேன் போனேன்னு இருக்காம பின்னூட்டம் போட்டீங்களே. நன்றி. :-)

சரி. ஆன்மிகப் பதிவுக்குப் பின்னூட்டம் போடாதீங்க. உங்கள மாதிரி ஊர்க்கதைப் பேசி சில பதிவு போடறோமே அதுக்காவது பின்னூட்டம் போடலாமில்லையா? :-)

கண்டுக்காம இருக்கணும்ன்னு தான் பாக்குறேன். ஆனா முடியலையே.

குமரன் (Kumaran) said...

அன்பு இராசன், சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. சிவமுருகன் ஏற்கனவே உங்கள் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்த சுட்டியில் இருந்து மரத்தடியிலோ திண்ணையிலோ உங்கள் கட்டுரையின் தொடக்கப் பகுதிகளைப் படித்திருக்கிறேன்.

எனக்கு ஒரு உதவி தேவை. எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா?

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கப்போகிறீர்கள் என்று தெரியும். பதிலோடு தயாராக இருந்தேன். நீங்களே திருமலை மன்னரின் காலத்தில் இந்த மாற்றம் நடந்தது என்று குறிப்பிட்டு விட்டீர்கள்.

திருமலை நாயக்கர் பிறப்பால் வைணவராய் இருந்தாலும் மதுரை மன்னராய் இருந்ததால் சைவத்திலும் ஈடுபாடு கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார். அவர் மட்டுமின்றி எல்லா நாயக்க மன்னர்களும் அப்படித் தான் இருந்திருக்கின்றனர்.

இன்று சித்திரைத் திருவிழாவாக நடைபெறும் அங்கயற்கண் அம்மையின் கோவில் திருவிழா அவர் காலத்தில் மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனால் அம்மையும் ஐயனும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். பொதுவாக ப்ரம்மோற்சவம் எனப்படும் வருடாந்தர திருவிழா நடக்கும் போது அந்தக் கோவிலின் மூர்த்திகள் திருவிழாவின் இறுதி நாட்களில் ஒரு தெப்பக்குளத்திற்கோ இல்லை ஒரு ஆற்றிற்கோ செல்வது வழக்கம். மாசி மாதத்தில் நடந்த திருவிழாவின் இறுதியில் வந்த தீர்த்தவாரியின் மிச்சம் தான் இன்று நடக்கும் தெப்பத் திருவிழா. அந்த மாற்றம் திருமலை மன்னரால் செய்யப்பட்டது.

முதலில் அன்னையின் தெப்பத்திருவிழாவிற்காக வண்டியூர் தெப்பக்குளத்தை அமைத்து பொற்றாமரைக் குளத்தில் நடந்து வந்த தீர்த்தவாரியை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு மாற்றினார்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சித்திரை மாதத்தில் திருவிழா கண்டு தீர்த்தவாரிக்காக வைகைக்கு சித்திரா பௌர்ணமி அன்று எழுந்தருளிக் கொண்டிருந்தார். அவர் ஆற்றில் இறங்குவதைப் பார்ப்பதற்கு பெருந்திரளாக மக்கள் மதுரையின் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து கொண்டிருந்தனர். அழகர் ஆற்றில் இறங்கும் விழா அப்படி மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் மதுரைக் கோவிலில் மாதா மாதம் வாரா வாரம் திருவிழா நடந்து வந்ததால் மாசித் திருவிழாவிற்கு எப்போதும் போல் கூட்டம் வந்ததே ஒழிய பெருந்திரளாக கூட்டம் வரவில்லை; அதனால் திருவிழாத் தேரை இழுக்க போதுமான கூட்டம் சில நேரங்களில் சேர்வதில்லை. இதனைப் பார்த்த திருமலை மன்னர் அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வரும் மக்கள் கூட்டம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரையும் இழுக்கும் படி மாசித் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அதே நேரத்தில் தெப்பத் திருவிழாவை மட்டும் மாற்றாமல் மாசி மகத்தன்று (தன்னுடைய பிறந்த நாளன்று) அமையுமாறு செய்தார். அந்த மாற்றம் தான் இன்றும் நடக்கிறது.

அழகர் மீனாட்சி திருமணத்திற்காக மதுரைக்கு வருகிறார் என்பதும் அவர் வந்து சேருவதற்குள் திருமணம் நடந்து விடுவதால் கோபித்துக் கொண்டு ஆற்றோடு திரும்பிப் போய்விடுகிறார் என்பதும் பின்னர் நம் மக்களின் கற்பனையில் தோன்றிய அழகிய கதை. :-)

அழகர் அவர் பாட்டுக்கு வழக்கம் போல் வைகைக்கு வந்து மண்டுக மகரிஷிக்கு முக்தி கொடுத்துவிட்டுப் போகிறார். அம்மன் கோவில் திருவிழா அது பாட்டுக்கு நடக்கிறது. ஒரே நேரத்தில் நடப்பதால் அம்மன் கோவில் திருவிழாவிற்கு மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வந்து அழகர் திருவிழாவையும் முடித்துக் கொண்டு செல்ல வசதியாக இருக்கிறது. :-)

supersubra said...

என் கல்லூரிப்பருவம் வரை நான் வாழ்ந்தது மதுரையில். பயின்றது செளராஷ்ட்ர கல்லூரியில் வணிகவியல். மதுரையில் உள்ள எனக்குத்தெரிந்த கோவில்களை பட்டியலிட்டிருக்கிறேன்.
1.மீனாக்ஷி கோவில்
2.கூடலழகர் பெருமாள் கோவில்
3.இம்மையில் நன்மை தருவார் கோவில்
4.மதன கோபால சுவாமி கோவில்.
5.திருப்பரங்குன்றம்
6.அழகர் கோவில்
7.பச்சை மாகாளியம்மன் கோவில்
8.பழைய சொக்கநாதர் கோவில்

supersubra said...

என் கல்லூரிப்பருவம் வரை நான் வாழ்ந்தது மதுரையில். பயின்றது செளராஷ்ட்ர கல்லூரியில் வணிகவியல். மதுரையில் உள்ள எனக்குத்தெரிந்த கோவில்களை பட்டியலிட்டிருக்கிறேன்.
1.மீனாக்ஷி கோவில்
2.கூடலழகர் பெருமாள் கோவில்
3.இம்மையில் நன்மை தருவார் கோவில்
4.மதன கோபால சுவாமி கோவில்.
5.திருப்பரங்குன்றம்
6.அழகர் கோவில்
7.பச்சை மாகாளியம்மன் கோவில்
8.பழைய சொக்கநாதர் கோவில்

குமரன் இந்தக்கோவில்கள் பற்றியும் எழுதுங்களேன்

கால்கரி சிவா said...

சுப்பர்சுப்ரா, நீங்கள் குறிபிட்ட 8 கோயில்களில் 7 தெரியும். பச்சை மாகாளியம்மன் கோயில் எங்குள்ளது?

சௌராஷ்ட்ரா கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள். நான் 1977/78 ல் பியுசி படித்தேன். காலஞ்சென்ற வணிகவியல் பேராசிரியர் சேதுராமன் எனது உறவினர்

Karthik Jayanth said...

அய்யா சூப்பரு,

இந்த திருமோகூர், யானை மலை கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில் எல்லாம் சொல்லவில்லை ?.

G.Ragavan said...

மதுரை பற்றிய அழகான பதிவு........அருமையான புகைப்படம்.

நெல்லையப்பர் கோயில் தூண்களும் இசைத்தூண்களே. கொஞ்ச நாள் முன் நான் சென்ற சுற்றுலாவில் நெல்லையப்பர் கோயிலையும் கண்டேன். கண்களாலும் நெஞ்சாலும் உண்டேன்.

அன்னையின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அதுவும் நன்று.

துளசி கோபால் said...

மீனாட்சி கல்யாணத்துலே பொண்ணைத் தாரைவார்த்துக் கொடுத்தது அண்ணந்தானே? அப்படி இருக்க அழகர் எப்படிக்
கல்யாணத்துக்கு வராம கோச்சுண்டு போனார்?

குமரா, கொஞ்சம் சொல்லப்பா.

சிவமுருகன் said...

//அதே நேரத்தில் தெப்பத் திருவிழாவை மட்டும் மாற்றாமல் மாசி மகத்தன்று (தன்னுடைய பிறந்த நாளன்று) அமையுமாறு செய்தார். அந்த மாற்றம் தான் இன்றும் நடக்கிறது.//

மாசி மகம் - அம்மையின் பிறந்த நாள்.

தை பூசம் - திருமலை மன்னரின் பிறந்த நாள்.

தைபூசத்தில் தானே தெப்ப திருவிழா நடக்கிறது, (ஜனவரியோ-பிப்ரவரியோ).

ENNAR said...

குமரன்
வாரியார் சொல்லிஇந்த கதையைக் கேள்விப்பட்டேன் சினிமாவிலும் வந்தது என நினைக்கிறேன். ராணி மீனாட்சி என்பரவர் பிற்காலத்தில் ஆண்டதாக கேள்விப்பட்டேன் சரியா மதுரையை ஆண்டவர்கள் பட்டியலை தயார் செய்யுங்கள் பயன் படும்
கூடிய விரைவில் மதுரையை மீண்டும் பார்ப்போம்

குமரன் (Kumaran) said...

சூப்பர் சுப்ரா,

நீங்கள் சொன்ன கோவில்களைப் பற்றி வருங்காலத்தில் எழுத முயல்கிறேன். பட்டியலில் பச்சை மாகாளியம்மன் கோவில் மட்டும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள். சிவமுருகன், உங்களுக்குத் தெரியுமா?

குமரன் (Kumaran) said...

கார்த்திக், நீங்கள் பட்டியலில் சேர்த்துள்ள கோவில்களைப் பற்றியும் எதிர்காலத்தில் பார்க்கலாம். ஏற்கனவே எடுத்துக் கொண்ட தலைப்புகள் நிறைய இருப்பதால் அவற்றையெல்லாம் முடித்துவிட்டு எப்போது முடியுமோ அப்போது இந்தக் கோவில்களைப் பற்றியும் பார்க்கலாம்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவன்.

குமரன் (Kumaran) said...

துளசி அக்கா. மீனாட்சி திருக்கல்யாணத்துல மணப்பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்தது அண்ணன் தான். அந்த அண்ணன் திருப்பரங்குன்றத்தில் இருந்து வருகிறார். அவர் பெயர் 'பவளக் கனிவாய் பெருமாள்'. அவர் ஒவ்வொரு வருடமும் கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு, தன் மகள் தெய்வயானையும் மருமகன் முருகனும் மயில் வாகனத்தில் கூட வர, மதுரைக்கு வந்து நலமே மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்திக் கொடுத்துவிட்டுப் போவார்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், நான் சொன்னவை எல்லாம் சரி தான். மாதத்தை மட்டும் மாற்றிவிட்டேன் போலிருக்கிறது. தெப்பத்திருவிழா நடப்பது திருமலை மன்னரின் பிறந்த நாள் என்று தான் நினைவு. அது மாசி மகம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அது தைப்பூசம் என்றால் சரி.

அன்னையின் பிறந்த நாள் மாசி மகமா? எனக்கு இது வரை தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன்.

குமரன் (Kumaran) said...

மனு, அந்த எழுத்துப்பிழை இல்லாமல் எழுத n எழுதும்போது -n என்று எழுதினால் அது ந என்று சரியாக வரும்.

பாராட்டிற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஜோசஃப் ஐயா. (சார் என்று இனிமேல் யாரையும் விளிக்கக் கூடாது என்று நண்பர்கள் கட்டளை). நீங்க நம்ம ஊரில பிறந்தவரா? அப்ப நம்ம ஊர்க்காரர் நீங்க. ரொம்ப மகிழ்ச்சி. :-)

நீங்க சொல்றதென்னவோ உண்மை தான். என் நண்பர்கள் பலர் மதுரையை விட்டு நகலவே மாட்டேன் என்கிறார்கள், எத்தனையோ நல்ல வாய்ப்புகள் வந்தாலும் மதுரையில வந்தா எடுத்துக்கிறேன்; இல்லாட்டி வேணாம்னு சொல்றாங்க. நானெல்லாம் மதுரையை விட்டு இவ்வளவு தூரம் வந்ததைப் பார்த்து அவர்களுக்கு எல்லாம் வியப்போ வியப்பு. நேற்று கூட ஒரு நண்பன் கேட்டான் - எப்படிடா மதுரையை விட்டுட்டு அமெரிக்காவுல இவ்வளவு நாள் இருக்கேன்னு. :-)

//அப்படியா? பாராட்டுகள்.
//

ஆமாம் ஐயா. முடிந்தால் எனது 100வது பதிவை இதே வலைப்பூவில் பாருங்கள். தலைப்பின் 100 என்று இருக்கும். அந்தப் பதிவில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னும் சொல்லியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா, மதுரையை ஆண்டவர்களின் வரலாற்றைத் தொகுக்கலாம் தான். நல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அதற்கு இப்போது ஆர்வமும் நேரமும் இல்லை. அதனால் எதிர்காலத்தில் முடிந்தால் செய்கிறேன்.

சோழர் வரலாற்றை எப்போது பதிக்கப் போகிறீர்கள்? இல்லை ஏற்கனவே பதித்தாயிற்றா? நான் தான் பார்க்கவில்லையா? ஏற்கனவே நான் உங்கள் பதிவில் சொன்ன மாதிரி எனக்கு வரலாற்றைப் படிக்க ஆர்வம் உண்டு.

குமரன் (Kumaran) said...

ஆமாம் நடேசன் ஐயா. கோவிலில் எப்போதும் கூட்டம் இருப்பதால் சில நேரம் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தால் போதுமென்று தோன்றும். அதிகாலை வேளையில் கோவிலுக்குச் செல்லுங்கள். அவ்வளவு கூட்டம் இருக்காது. நிம்மதியான தரிசனமும் கிடைக்கும். எல்லாவற்றையும் ஆற அமரப் பார்க்கலாம்.

நானும் எத்தனையோ முறை அம்மன் கோவிலுக்குப் போயிருக்கிறேன் (மதுரைக்காரர்களுக்கு அம்மன் கோவில் என்றால் அது மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் தான்). ஆனால் சிவமுருகன் பதிவுகளைப் படிக்கும் போது நிறைய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன். அதனை எல்லாம் அடுத்த முறை போகும் போது கவனிக்கவேண்டும் என்று குறித்துக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி இராம்பிரசாத் அண்ணா.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கார்த்திக். கோவில் மாநகரம் என்று சும்மாவா சொன்னார்கள். குடந்தை (கும்பகோணம்) போல் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் உண்டே மதுரையிலும்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவா அண்ணா. டி.எம்.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி, ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பலரின் கச்சேரியை நான் முதன் முதலாய் கேட்டது நவராத்திரியில் வடக்காடி வீதியில் நடக்கும் இசை விழாவில் தான். டி.எம்.எஸ். அவர்களின் கச்சேரியை பின்னர் பல முறை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் சிவராத்திரித் திருவிழாவில் கேட்டிருக்கிறேன். இப்போது அரசமரம் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பை நீக்குவதாய் சொல்லி இடித்துவிட்டார்களாமே?

குமரன் (Kumaran) said...

ஆமாம் என்னார் ஐயா. வாரியார் அங்கயற்கண் அம்மையின் வரலாற்றை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

விஜய்காந்த் நடித்து அண்மையில் திரைப்படமாகவும் வந்தது.

மீனாட்சி அரசி (இராணி மங்கம்மாவின் மருமகள்?) மதுரையில் இருந்து ஆட்சி செய்யவில்லை என்று எண்ணுகிறேன். அவர் திருச்சியில் ஆண்டவர்; ஆனால் அது அதே நாயக்கரின் அரசு தான். சந்தா சாயபுவால் ஏமாற்றப்பட்டு சிறையில் இறந்தவர். சந்தா சாயபு திருக்குரானின் மேல் சத்தியம் செய்வதாய்ச் சொல்லி வேறு ஏதோ நூலை துணிக்குள் சுருட்டி வைத்து அதன் மேல் சத்தியம் செய்து பின்னர் அதனை மீறி மீனாட்சி அரசியை சிறைக்குள் அடைத்து திருச்சியைக் கைப்பற்றினார் என்று படித்திருக்கிறேன்.

Anonymous said...

super pathivu, Maduraikaranu summava, Appu appadiya antha mesaiya muruki vittukapu

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி அனானிமஸாய் வந்து வாழ்த்திய அண்ணா/அக்கா. மீசையை முறுக்கிவிடத் தான் முயல்கிறேன். ஆனால் அது சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறது. ஞானவெட்டியான் ஐயாவின் மீசையைப் பார்த்ததும் வெட்கித் தலைகுனிகிறது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்? :-)

Maraboor J Chandrasekaran said...

பழசெல்லாம் கிண்டி இப்படி பெருமூச்சு விட வெச்சுட்டீங்களே? ஸ்கூல் படிக்கிறச்ச நவரத்திரிக்கு ஸ்கவுட் (சாரணர் இயக்கம்) பசங்கள, வரிசைய கன்ட்ரோல் பண்ணக் கூப்பிடுவாங்க. அப்ப, சன்னதி முன்ன கூட்டம் அதிகமிருக்கும் பக்கம் ட்யூடி போட்டா சட்டினிடாயிருவோமுனு ஒரு பயலும் உள்ள போமாட்டான். நமக்கு அடிச்சுறும் லக்கி ப்ரைஸ்! அம்மனை ரொம்ப நேரம் பாக்கலாமில்ல? உடனே ஒத்துக்குவேன்! நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

ஓ. சாரணராய் போயிருக்கிறீர்களா ஜெய. சந்திரசேகரன். உங்களை அங்கு தான் நான் பார்த்திருப்பேனோ? :-)

கோவிலில் எந்த இடத்தில் நிறுத்தினாலும் அது லக்கி ப்ரைஸ் தான். ஆனால் அம்மனின் முன்னால் என்றால் அது இரட்டை லக்கி ப்ரைஸ் தான். :-)

Neelakandan said...

Really very nice.Please continue your nice job.

Neelakandan

Muthu said...

இதைத்தான்யா தேடிகிட்டு இருந்தேன்...


அந்த போட்டோவில் இருக்கற என்ட்ரஸ்ல வந்து மண்டபத்தில் முறுக்கு வாங்கிட்டு பூ வாங்கி குடுத்து நம்ப ஃபிகரை கரெக்ட் செய்துட்டுத்தான் உள்ளே போவேன்...

அந்த இசைதூண் நான் பார்க்காதது..

இலவசக்கொத்தனார் said...

//அந்த போட்டோவில் இருக்கற என்ட்ரஸ்ல வந்து மண்டபத்தில் முறுக்கு வாங்கிட்டு பூ வாங்கி குடுத்து நம்ப ஃபிகரை கரெக்ட் செய்துட்டுத்தான் உள்ளே போவேன்...//

அப்புறம் எப்படி இசைத்தூண்கள் எல்லாம் கண்ணுல படும்? நான் சொல்லறது சரிதானே?

இலவசக்கொத்தனார் said...

//(மதுரைக்காரர்களுக்கு அம்மன் கோவில் என்றால் அது மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் தான்).//

சரிதான். எங்க மாவட்டத்துல காந்திமதி (நெல்லை) மற்றும் கோமதி (சங்கரன்கோயில்) என்ற பெயர்களைத்தான் அதிகம் பெண் குழந்தைகளுக்கு சூட்டுவார்கள். (இப்போ எல்லாம் வாயில் நுழையத் திணரும் பெயர்கள்தான்) அந்த மாதிரி மீனாட்சி என்னும் பெயர் சூட்டுதல் மதுரையில் அதிகமா?

இலவசக்கொத்தனார் said...

//(சார் என்று இனிமேல் யாரையும் விளிக்கக் கூடாது என்று நண்பர்கள் கட்டளை)//

இந்த கட்டளை எல்லாம் நீங்கதான் போடுவீங்கன்னு கௌசிகன் சொல்லறாரு. உங்களுக்கே கட்டளையா? அது யாரு போட்டது?

சரி. 50 ஆச்சா?

Muthu said...

//அப்புறம் எப்படி இசைத்தூண்கள் எல்லாம் கண்ணுல படும்? நான் சொல்லறது சரிதானே?//

சைசா அடிக்கிறாருய்யா...சரிதான்..

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி திரு.நீலகண்டன்.

குமரன் (Kumaran) said...

அடுத்த தடவை மதுரை போகும் போது கோவிலுக்குப் போனா தவறாம இசைத் தூண்கள் எங்க இருக்குன்னு கேட்டுப் பாத்துட்டு வாங்க முத்து.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ், மீனாட்சி என்று பெயர் சூட்டுவது காந்திமதி, கோமதி என்று பெயர் சூட்டும் அளவிற்கு இல்லை என்று தான் நினைக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். எனக்குள் ஒருவன்னு ஒரு திரைப்படம் வந்தது தெரியுமா. அந்த அந்நியன் போட்ட கட்டளை தான்னு நான் சொன்னா நம்பவா போறீங்க?

சரி. சரி. யார் கட்டளைன்னு சொல்லிடறேன். குறும்பன்னு ஒருத்தர் வந்திருக்கார். அவர் போட்ட கட்டளை.

ஆமாம். 50 ஆச்சு. நன்றி. :)

குமரன் (Kumaran) said...

முத்து. இசைத் தூண்கள் தெரியலை. சரி. நிறைய பேருக்கு அது தெரியாதுன்னு தான் நானும் பதிவுல சொல்லியிருக்கேன். சாமியாவது தெரிஞ்சதா? :)

Geetha Sambasivam said...

ஒரு வாரம் கழித்து உங்கள் பதிவை இன்றுதான் பார்க்க முடிந்தது. லிங்க் கிடைக்காமல் ஒன்றுமே பார்க்கமுடியவில்லை.
மிக நல்ல பதிவு.. மதுரைக்காரர்களுக்கு மதுரையைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் திகட்டாது.மேல கோபுர வாசலிலே நுழையும்போதே வரும் அற்புதமான காற்று ஒரு இரண்டு நிமிடம் அங்கேயே கட்டிப் போடும். எங்கள் வீட்டு மாடியில் இருந்து கொண்டே ஒரு பக்கம் மதுரை சோமுவின் இசைப்பயிற்சியும் மற்றொரு பக்கம் தெருமுனையில் லிருந்து வரும் மதுரை ஜி.எஸ்.மணியின் இசைப் பயிற்சியும் இன்னும் மறக்க முடியவில்லை.இன்னும் செல்லத்தம்மன் கோயில், பேச்சியம்மன் படித்துறைக்கோயில், வடக்குக் கிருஷ்ணன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், பழைய சொக்கநாதர் கோயில், மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி கூடும் இடத்தில் உள்ள(இன்னும் இருக்கிறதா) நேரு பிள்ளையார் கோயில் எத்தனையோ உள்ளன.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் கீதா அம்மா. மதுரைக் காரர்களுக்கு மதுரையைப் பற்றி எழுதுவதும் படிப்பதும் திகட்டவே திகட்டாது. வடக்கு மாசி வீதி மேல மாசி வீதி முக்கில் இருக்கும் நேரு விநாயகர் கோவில் இன்னும் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அந்த சந்திப்பில் தான் முதன் முதலில் கலைஞர் பேசியதையும் அம்மையார் பேசியதையும் ஏதோ ஒரு தேர்தல் காலத்தில் கேட்டேன். அந்த விநாயகருக்கு நேரு விநாயகர் என்று பெயர் வந்ததற்கும் நேருவின் பொதுக்கூட்டப் பேச்சிற்கும் தொடர்பு இருப்பதாய்ப் படித்திருக்கிறேன். நேரு அந்த சந்திப்பில் பேசியிருக்கிறாரா?

குமரன் (Kumaran) said...

நன்றி தமிழ்க்குழந்தை

supersubra said...

குமரன் மற்றொரு விஷயம் கவனிதீர்களா. பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் வாசலிருந்து கோவிலுக்குள் செல்ல செல்ல உயரம் அதிகமாகும். ஆனால் மதுரையில் மீனாட்சி கோவிலில் தெற்கு கோபுரம் வழியாக நுழையும் பொழுது கீழே இறங்கிச் செல்லவேண்டும். அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் அம்மன் சன்னதி உட்பிரகாரத்தில் இடது புறம் ஒரு பூட்டிய அறை இருக்கும். அது திருமலை நாயக்கர் காலத்தில் அரண்மனையிலிருந்து கோவிலுக்கு வரும் ஒரு பாதாள சுரங்கத்தின் வாயில் என்று சொல்வார்கள். எல்லா ஊர்களிலும் சாமிக்கு பிறகுதான் அம்மன். ஆனால் மதுரையில் முதலில் மீனாக்ஷி அப்புறம்தான் சிவன். சிவன் சன்னதியை சுற்றி வரும்பொழுது ஒரு சித்தர் சிலை (துர்க்கை சன்னதி அருகில்) வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக அழகாக இருக்கும்.

துளசி கோபால் said...

குமரன்,

இந்த 'பேர்' வைக்கிற விஷயத்துலே மட்டும் முந்தி ஒரு காலத்துலே அவுங்கவங்க
ஊர்லே இருக்க்ற கோயில் தெய்வங்களோட பேர்தான் அநேகமா இருக்கும். அதாலேதான்
காஞ்சீபுரம் காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, திருநெல்வேலி காந்திமதி, சங்கரன்கோயில்
கோமதினு இருந்துச்சு. இப்ப அதெல்லாம் ஃபேஷனா இல்லேன்னு மீனா, காந்தான்னு
ஆயிருக்கும்.

நம்ம அக்கா ஒருத்தர் அவுங்க குலதெய்வம் பேர் அங்காளம்மன் பேரைக் குழந்தைக்கு
வைக்கணுமுன்னு 'ஆஷா'ன்னு பேர் வச்சிருக்காங்க. ஏன்னா 'A' லே ஸ்டார்ட் ஆகுதாம்.
இது எப்படி இருக்கு:-)))))

Geetha Sambasivam said...

சூப்பர் சுப்ரா,
மதுரையில் மீனாக்ஷி கல்யாணக்கோலத்திலேயே இருப்பதாலும், அவள் சொந்த ஊர் என்பதாலும் அவளுக்குத்தான் முதல் மரியாதை. சுந்தரேஸ்வரரின் வலது பக்கம் அம்மை குடிகொண்டிருப்பதைக்கவனியுங்கள். குறிப்பிட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் அம்மாதிரி அம்மன் சந்நிதி வலது பக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். அந்தக்கோவில்களில் மதுரையும் ஒன்று. மேலும் எனக்குத் தெரிந்தவரை இது சக்தி பீடங்களில் ஒன்று என்றும் நினைக்கிறேன். சக்தி பீடங்களில் அம்மன் தான் முதலில்.
குமரன்,
நேரு அங்கு சொற்பொழிவு செய்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்த சமயம் நேரு மதுரை வந்த போது அந்தக் கோவிலில் மரியாதை செய்ததாகக் கேள்விப்பட்டேன். நிச்சயமாகத் தெரியாது.எங்களைப் பொறுத்தவரை அந்தப் பிள்ளையார்மிகச் சிறந்த நண்பராக இருந்து வந்தார்.

குமரன் (Kumaran) said...

திரு. சுப்பிரமணியன் (சூப்பர் சுப்ரா), மதுரையில் கோவில் கட்டும் போது அதுவும் நகரின் தெருமட்டத்திலேயே இருந்தது என்றும் காலம் செல்ல செல்ல சாலைகளை செப்பனிடும் போது சாலைகள் கோவிலை விட உயர்ந்துவிட்டன என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற கோவில்கள் எல்லாம் ஊரைவிட உயர்ந்த இடத்தில் கட்டியிருப்பார்கள் போலும். அரண்மனையும் கோவிலும் உயர்ந்த மேடான இடத்தில் கட்டவேண்டும் என்று படித்ததாக நினைவு. அப்படிக் கட்டப்படவில்லை போலும் மதுரை ஆலயம். அதனால் காலம் செல்லச் செல்ல கீழே இறங்கிச் செல்லும் படி ஆகிவிட்டது.

நீங்கள் சொல்லும் அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் இருக்கும் பூட்டிய அறை பள்ளியறை என்று எண்ணுகிறேன். அது தவிர எனக்குத் தெரிந்து அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் வேறு அறையோ பூட்டிய கதவோ இல்லை. பள்ளியறையும் தினமும் இரவு பள்ளியறை வழிபாட்டின் போது திறக்கப் படுகிறது.

அம்மன் கோவிலுக்கு திருமலை நாயக்கர் மகாலிலிருந்து சுரங்க வழி இருந்ததாய் நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தற்போது யாருக்கும் தெரியவில்லை.

மதுரையில் மீனாட்சிக்கு ஏன் முதல் மரியாதை என்று மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால் நானும் அதனை விரிக்கவில்லை.

துர்க்கை சன்னிதி அருகில் இருக்கும் சித்தரைப் பற்றி சிவமுருகன் தன் பதிவில் எழுதியிருக்கிறார். முடிந்தால் பாருங்கள். ஆமாம். நீங்கள் சொன்னது போல் சித்தரின் திருவுருவம் மிக நேர்த்தியாக அழகாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

துளசி அக்கா. நீங்கள் சொல்வது சரி. காலம் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

கீதா அம்மா. மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று எண்ணுகிறேன். மதுரைக்கு மனோன்மணி பீடம் என்று பெயர் என்று எண்ணுகிறேன். ஆனால் எல்லா சக்தி பீடங்களிலும் (மொத்தம் ஐம்பத்தி ஆறு சக்தி பீடங்கள் பாரதமெங்கும் இருக்கின்றன) அம்மனுக்குத் தான் முதல் மரியாதையா என்று தெரியவில்லை. ஆனால் மதுரையில் அம்மன் ஆட்சி தான். :-) அவருக்குத் தான் முதல் மரியாதை. அவள் தான் மதுரைக்கு உரிமையுள்ள அரசி. அவளை மணந்ததால் ஐயன் சுந்தர பாண்டியனாய் முடி சூடி அரசனானான். அதனால் வீட்டோடு மாப்பிள்ளை மரியாதை தான் மதுரையில் ஐயனுக்கு. :-)

சிவமுருகன் said...

//மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று எண்ணுகிறேன்.மதுரைக்கு மனோன்மணி பீடம் என்று பெயர் என்று எண்ணுகிறேன்.ஆனால் எல்லா சக்தி பீடங்களிலும் ... அம்மனுக்குத் தான் முதல் மரியாதையா என்று தெரியவில்லை.//

54சக்தி பீடத்தில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் பீடம்.

இது தவிர தமிழக-கேரள பகுதியில் மொத்தம் 352 ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் கொண்டுள்ளால். அவ்வனைத்து ஸ்தலங்களில் முதன்மையாக கருதப்படுவது மதுரையின் மனோன்மணி பீடம்.

Anonymous said...

குமரன், மதுரையில் கோவிலைச் சுற்றியே வீதிகள் அமைந்துள்ளன. அந்த வீதிகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?. வெளி வீதி, ஆவணி வீதி,மாசி வீதிகள் என்று. அவைகள் எந்த வரிசையில் அமைந்துள்ளன?

கருப்பு said...

படித்து மகிழ்ந்துவிட்டு அழிச்சிடுங்க சார்!

//இதுவரை நீங்கள் எழுதியது எதுவுமே திருக்குறளிலிருந்தோ, கம்ப இராமாயணத்தில் இருந்தோ, சிலப்பதிகாரத்தில் இருந்தோ எழுதப்பட்டதில்லை. கீதையிலிருந்தும் நீங்கள் எழுதியதாக நினைவில்லை. அவற்றிலிருந்து இனிமேல் எழுதப்போகிறீர்கள் போலும்.//

ஆக உங்களுக்கு மேற்சொன்ன இவை நான்கும்தான் வேதம்!:)) மற்றவை எல்லாம் வேதமல்ல... ஹிஹி

//அப்படி நீங்கள் எழுதி அந்த விளக்கம் தவறாக இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்வது பழந்தமிழ் இலக்கியத்திலும் இருக்கின்றன என்று ஒத்துக் கொள்கிறேன்.//

அட இதப் பார்றா... சரி சொல்லுங்க.

//இங்கேயே பிறந்த மண்ணின் மைந்தர்கள் ஆரியர்கள், திராவிடர்கள் எல்லோருடனும் கலந்து போய்விட்டார்களோ என்னவோ? நான் திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று அறுதியிட்டுக் கூறவில்லை. அப்படி நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்னும் அந்த ஆராய்ச்சியாளர்களால் வைக்கப்படவில்லை.//

திராவிடர்கள் வெளியில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதில்மட்டும் ரகசியமானச் சொன்னதாக நீங்கள்தான் கூறினீர்கள்.

//ஆனால் அப்படியும் ஆராய்ச்சிகள் உள்ளன என்பதாவது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். நீங்கள் பதில் சொன்ன முறையைப் பார்த்தால் அப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என்று தெரிகிறது. மகிழ்ச்சி.//

அப்படிப்பட்ட ஆராய்ச்சி குறித்த உண்மைத் தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும். அல்லது அந்த தகவல்கள் தாங்கிய சுட்டியை எனக்கு அனுப்பி வைத்தால் ரொம்பவும் மகிழ்ச்சி அடைவேன்.

//ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே மீண்டும் மீண்டும் சொல்லியோ இல்லை தகுந்த ஆதாரங்களுடனோ நிறுவப்பட்ட ஆரியப் படையெடுப்புக் கொள்கைக்கு எதிரான ஆதாரங்கள் அந்தக் கொள்கையை ஆட்டிப்பார்க்கும் அளவிற்காவது (இன்னும் அதனைப் - ஆரியப் படையெடுப்புக் கொள்கை - பொய் என நிறுவும் அளவிற்கு இல்லை) வெளிப்பட்டுவிட்டன என்பதையும் நேர்மையான ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்ளுவர்.//

அப்படி ஒப்புக் கொள்பவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மட்டுமே!

//நான் பார்ப்பனியத்திற்காகத் தொண்டை கிழிய கத்தவில்லை தோழரே.//

பார்ப்பனர் என்றதும்தான் உங்களின் வாய்களில் என்னவெல்லாமோ வருகிறது. விட்டுது சிகப்பு(சிவப்பு என்றே எழுத தெரியவில்லை... இந்த லெட்சணத்தில் இதெல்லாம் வந்து கருத்து எழுதி... அய்யோ அய்யோ!) பதிவில் சென்று அப்பன் ஆத்தாளைத் தாக்கி எழுதுவதாக பொய் சொன்னீர்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். சத்தியம் செய்து கூறுங்கள், நான் எங்கே எப்போது அப்படி உங்களை எழுதினேன்?

//உங்கள் பதிவுகளில் எங்கெல்லாம் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன் என்று பாருங்கள். தவறு இருக்கும் இடங்களில் தான் கேள்விகள் வைத்திருக்கிறேன்.//

நன்கு அலசிப் பார்த்து விட்டேன். பார்ப்பான்களுக்கு ஆதரவாகத்தான் உங்களின் எல்லா மறுமொழிகளும் வந்துள்ளன.

//ஒரு இடத்தில் 'நல்ல பதிவுகள் வரும் உங்கள் வலைப்பூவில் தவறான கருத்துகளும் வருகின்றன. அவற்றைத் தான் கேள்வி கேட்கிறேன்' என்று சொல்லுகிறேன்.//

எது தவறான தகவல்? பார்ப்பான் படையெடுத்ததா? உழைக்காமல் சுரண்டித் தின்றதா?

//பார்ப்பனியத்திற்கோ தற்கால உயர்த்தப்பட்ட சாதிகள் (பார்ப்பனர் உட்பட) தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இழைக்கும் தீங்குகளுக்கோ ஆதரவாய் எங்கும் பேசவில்லை.//

உங்கள் பேச்சு அப்படித்தான் உள்ளது!

//தவறாய் பார்ப்பனர் பற்றி சொல்லப்பட்ட செய்திகளைக் கேள்வி கேட்பது அவர்களை ஆதரிப்பதாய் நீங்கள் எடுத்துக் கொண்டால் அது தவறு.//

உங்களின் எல்லாக் கூற்றும் பார்ப்பன ஆதரிப்பை மட்டுமே காட்டுகிறது. அவற்றில் உண்மை கொஞ்சம்கூட இல்லை.

//பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மட்டுமே தங்கள் ஜாதியில் இருந்து ஒரு போதும் பின்வாங்க தயாராக இல்லை என்று சொல்கிறீர்களே. நம் நாட்டில் நிலைமை அப்படியா இருக்கிறது?//

காதல் திருமணங்கள்மூலம் நல்ல நிலை உருவாகி வருகிறது. கொஞ்சம் நஞ்சம் மாற நினைக்கும் மக்களையும் உம்போன்ற அறிவுஜீவிகள் கெடுத்து விடுகிறீர்கள்!

//எல்லா சாதியினரும் தங்கள் சாதியிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லையே? அதனால் தானே சாதிக் கட்சிகள் பல்கிப் பெருகி நிற்கின்றன.//

அதற்கு மூல காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தான் ஜாதியைக் கண்டு பிடித்தவர்கள்!

//நான் திருந்திவிட்டேன் என்கிறீர்கள். தவறு செய்திருந்தால் தானே திருந்துவதற்கு.//

யோக்கியர் வருகிறார், செம்பை எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.

//நீங்கள் மற்ற சாதியினரைப் பற்றி பதிவு போடுங்கள்; அதில் தவறு இருந்தால் நான் அங்கே வந்தும் கேள்விகள் கேட்கிறேன் என்கிறேன்;//

ஆகட்டும் பார்க்கலாம்.

//நீங்கள் இதுவரை போட்டதெல்லாம் பார்ப்பனரைப் பற்றிய பதிவுகள்; அதில் நான் படித்தவரை தவறு இருக்கும் எல்லாப் பதிவுகளிலும் கேள்விகள் கேட்டுவிட்டேன்.//

பார்ப்பனரைப் பற்றிச் சொன்னால் தவறூ, மற்றவர்களைப் பற்றிச் சொன்னால் சரி. ரொம்ப புல்லரிக்குது சார் உங்க தத்துவம்!

//சம்பந்தர் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் சரி, தவறு என்று கூட சொல்லவில்லை என்றும் பல முறை சொல்லிவிட்டேன். இப்போது வந்து எங்கே பொய்த்தகவல் சொன்னேன் என்று பட்டியல் இடுங்கள் என்கிறீர்கள்.//

நானும் பலமுறை விளக்கி விட்டேன். சென்று படித்துப் பாருங்கள். அப்படியும் கேள்வி இருப்பின் தயங்காது karuppupaiyan at gmail.com எனும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

//இதுவரை நான் பின்னூட்டம் இட்டதெல்லாம் நீங்கள் பொய்த்தகவல் சொன்ன இடங்களில் தான்.//

பார்ப்பனர்கள் உழைக்காமல் உண்டு கொழுத்தது எல்லாமே உங்களுக்கு பொய்த்தகவலாகத்தான் சார் இருக்கும்!

//நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் சொன்னால் நான் உங்களுக்கு கூஜா தூக்குகிறேன் என்கிறீர்கள்.//

அப்படி இதுவரை நான் சொல்லவில்லை. உங்களின் கூஜா பார்ப்பனர்களுக்கு மட்டுமே!

//உங்களை எதிர்த்து உங்களின் தவறான தகவல்களைப் பற்றி கேள்விகள் கேட்ட ஒரே காரணத்தால் நான் மடப்பார்ப்பன விசுவாசி என்றால் இருந்துவிட்டுப் போகிறேன்.//

உண்மையை ஒத்துக்கொள்ள ரொம்ப தைரியம் வேணும் சார். பாராட்டுகிறேன்.

//ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் நான் மட-மற்றை சாதி - விசுவாசியாகவும் தென்படுவேன் - நீங்கள் அவர்களைப் பற்றியும் பதிவுகள் எழுதி, அதுவும் தாக்கி, அவர்கள் செய்யும் தீமைகளைப் பற்றி, அதில் தவறிருந்தால் அதையும் கேள்வி கேட்பேன். அப்போது என்னை மட-மற்றைச்சாதி-விசுவாசியாகப் பார்க்கலாம்.//

பாக்கதானே போறேன்.

//மடம் என்ற சொல் இழிசொல்லா என்ற கேள்விக்கு உங்களுக்கு வடமொழியும் தெரியவில்லை; தமிழும் தெரியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது;//

எங்கள் பக்கம் பார்ப்பனர்கள் மட்டுமே வடமொழி பயில்வார்கள். நீங்கள் வடமொழி பயின்று இருக்கிறீர்கள். பார்ப்பானும் இல்லை என்கிறீர். என்ன கருமாந்திரமோ போங்க.

எனக்கு தமிழ் தெரியும். வடமொழி புரியாது. நன்றி மடத்தலைவரே என்ற சிரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தமிழின்மேல் தீராக் காதல் கொண்டவன். மடம் என்ற சொல்லிற்கான அனைத்து விளக்கங்களும் அறிவோம்.

//காஞ்சி மடம் என்று இருப்பதில் இருக்கும் மடம் - கூடும் இடம் - என்று பொருள் படும். தமிழில் உள்ள மடம் - மடமை- என்று பொருள் படும். இரண்டையும் குழப்பவேண்டாம்.//

காஞ்சி மடமும் தமிழ் மடம்தான். என்ன சார் ரொம்ப குழபியது மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் குழப்பப் பார்க்கிறீர்கள்? இரண்டுமே மடம்தான்! அது இங்கிலீஷ் மடம் இது தமிழ் மடம் என்று யார் உமக்கு கற்றுத்தந்தது?

//கறுப்பு அண்ணாவே என்னைக் கோவிச்சுக்கிறார். காஞ்சிப் பெரியவா கோச்சுண்டா என்ன?//

கறுப்பு உங்களவா எதிரி. ஆனா காஞ்சி பெரியவா அப்படியா???

//உங்கள் பதிவில் நீங்கள் சொன்னதை நீங்களே கண்டிக்கிறீர்களா? ரொம்ப நல்லதாப் போச்சு. இனி நான் தேவையில்லை கண்டிக்க.//

பார்ப்பனர்களின் வேத நூல் என்றல்லவா சொன்னேன். ஹிந்துக்களின் வேதநூல் என்று நீங்கள் அல்லவா தடம் புரண்டு பொய் சொல்கிறீர்கள்.

//பகவத் கீதை இன்னும் எழுதத் தொடங்கவில்லை நான். ஆன்மிகக் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அவை என் சொந்த எழுத்துகளில். வெட்டி ஒட்டவில்லை.//

ஏற்கெனவே இருக்கும் பகவத் கீதையில் ஒரு இடத்தை எடுத்து நீங்கள் உங்கள் வலைப்பதிவில் எழுதுனால் அது எப்படி சார் நீங்கள் எழுதியதாகும்? உங்கள் விளக்கம் புல்லரிக்குது சார்!

//அதனால் அதனைப் பற்றி கேள்விகள் வந்தால் நேரடியாகப் பதில் சொல்ல முடியும். சொன்னதை சொல்லவில்லை என்று மாற்றிவிட்டு பின்னர் அதனை நானே கண்டிக்க வேண்டிய தேவை எனக்கு எழாது.//

அப்படியா சார். பார்க்கத்தானே போகிறோம்.

//அப்படியே பகவத்கீதைக்கு உரை எழுதினாலும் அது என் சொந்த எழுத்தாகத் தான் இருக்குமே ஒழிய இரவல் எழுத்துக்களாக இருக்காது.//

பார்க்க இருக்கிறோம் ஆன்மீகப் பெரியவரே.

//மற்றவர் கருத்தினைக் கூறும் போது தெளிவாக அது மற்றவர் கருத்து என்பதனையும் சொல்லிவிடுவேன். அடுத்தவர் எழுதியதை வெட்டி ஒட்டி அது என்னுடையது என்று சொல்லிக் கொள்வதில்லை.//

அப்படியா சார். நீங்க சொன்னீங்னா ரொம்ப சரிதானுங்க.

//நீங்கள் என் பதிவிற்கு வந்து பயன்பெற்று (!!) கேள்விகள் கேட்க உங்களை வரவேற்கிறேன்.//

அப்படியா ரொம்ப சந்தோஷம் சார்.

//ஆன்மிக ஸ்குரு என்ற புதிய பட்டத்திற்கு நன்றிகள்.//

ஹிஹிஹி ரொம்ப புகழ்றீங்க.

//தங்கள் பதிவுகளில் உள்ள தவறுகளைக் கேள்விக் கேட்கத் தொடங்கி அதற்கு நேரடியாக பதில்கள் வராததால் அதனை நான் கேள்வி கேட்கப் போய் நீங்கள் என்னைத் தாக்க, நான் உங்களைத் தாக்க என்று நம் வாதங்கள் தரம் தாழ்ந்து கொண்டு போகின்றன.//

நான் உங்களை ஆத்தா அம்மா என்று தாக்கினேன் என்று நாக்கு மேல்(பழமொழிங்க) பல் போட்டு பொய்த் தகவலாக விட்டுது கறுப்பு பதிவில் சொன்னது நீங்கள். அப்படி ஒரு இட்த்தினிக் காட்டுங்களேன். ஏன் உங்களுக்கு இந்த திருகுதாளம் எல்லாம். டோண்டுபோல அனுதாபம் பெறும் முயற்சியா?

//உங்கள் தன்னிலை விளக்கமும் என் தன்னிலை விளக்கமுமாக அது போய்விட்டது. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.//

விளக்கம் என்பது சரி. ஆனால் தனி மனிதத் தாக்குதல் என்று எப்படி சொன்னீர்கள்?

//அதனால் உங்கள் பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்திக் கொண்டு பின்னூட்டம் இடாமல் இருந்து விடலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார். உங்களின் அறிவு(!) பூர்வமான கேள்விகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

//யாருக்கும் பயனில்லாததை எதற்கு நேரம் வீணடித்துச் செய்யவேண்டும்? உங்கள் பதிவுகளைப் படிப்பதே நேரத்தை வீணடிப்பது என்று இன்னும் தோன்றவில்லை. இனிமேல் எப்படியோ?//

உங்கள் கேள்விகள் பலருக்கும் பயனளிக்கின்றன. எனவே நிறைய யோசித்து கேள்விகள் தயார் செய்து வைக்கவும்.

உங்களின் மறுமொழிக்கு நன்றி சார்.

குமரன் (Kumaran) said...

கறுப்பு ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் பொய் சொல்கிறேனா இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்று உங்கள் வலைப்பூவில் இருக்கும் பதிவுகளிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் விரைவில் விளக்கமாகச் சொல்கிறேன். வந்து பார்த்துக் கொண்டிருங்கள்.

சிவமுருகன் said...

//அதிகாலை வேளையில் கோவிலுக்குச் செல்லுங்கள். அவ்வளவு கூட்டம் இருக்காது//

அந்த காலம் மலையேறி விட்டது. அதிகாலையிலிருந்தே கூட்டம் அதிகமாயுள்ளது. இரவில் பள்ளியறை பூஜையிலும் கூட்டம் காணப்படுகிறது.

கடந்த முறை பிப்ரவரியில் சென்றபோது நடை திறக்கும் காட்சியை காண மிகுந்த சிரமத்துடன் நிற்கவேண்டியாயிற்று. அதிலும் ஒரு சுகம் தானே. அக்கூட்டத்தில் சில நல்லவர்கள் இருந்திருபார்கள், அவர்களின் காற்று நம் மீது படும் போது நாமும் புனிதமடைவோம் என்று எப்போதும் செல்வதுண்டு.

//இப்போது அரசமரம் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பை நீக்குவதாய் சொல்லி இடித்துவிட்டார்களாமே?
//

அந்த கோவில் மட்டும் தான் எஞ்சியுள்ளது. அக்கோவில் அரசின் அறநிலைய துறையின் கீழிருப்பதால் அதனை இடிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.

//நீங்கள் சொல்லும் அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் இருக்கும் பூட்டிய அறை பள்ளியறை என்று எண்ணுகிறேன்... வேறு அறையோ பூட்டிய கதவோ இல்லை. //

ஆம் அது பள்ளியறையே. மணற்கேணி பதிவில் அந்த பல்லக்கு காட்சியை இடுகிறேன்.

ஆம் இது தவிற எந்த பூட்டிய கதவும் இல்லை.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், மொத்தம் 56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீடங்களா? 56 என்று படித்ததாக எனக்கு நினைவு.

தமிழகத்திலும் கேரளத்திலும் மொத்தம் 352 தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில்கள் இருக்கின்றனவா? இவ்வளவு நாள் தெரியாதே. மதுரையிலேயே எனக்கு நினைவில் வருவது 3 கோயில்கள் தான் - பழைய சொக்கநாதர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் (முக்கிய கோயில்) & தெற்கு மாசி வீதியில் இருக்கும் தென் திருவாலவாய்நாதர் கோவில். ஒரு வேளை மொத்தம் 352 தலங்களில் அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறீர்களோ?

குமரன் (Kumaran) said...

அனானிமஸ் நண்பரே. எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். முதலில் கோயிலுக்குள்ளேயே இருப்பது நான்கு திசைகளிலும் நான்கு ஆடிவீதிகள். கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகள். அவற்றைச் சுற்றி ஆவணி மூல வீதிகள். அவற்றைச் சுற்றி மாசி வீதிகள். அவற்றைச் சுற்றி மாரட்டு வீதிகள். அவற்றைச் சுற்றி வெளி வீதிகள். அத்துடன் மதுரையில் எல்லை முடிந்துவிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் மதுரை நகர் அதனை விடப் பெரியது தற்போது.

ஏதாவது தவறாக இருந்தால் மதுரைக்காரர்கள் யாராவது வந்து சொல்லுவார்கள் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

அரசமரம் கோயிலை இடிக்கவில்லை என்ற நற்செய்தியைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

//56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீடங்களா//

தாட்சாயினியின் 54 உடல் கூறுகள் பாரதத்தில் 54 இடங்களில் விழுந்தது அதுவே சக்தி பீடமாக மாறியது. இது 108 பீடங்கள் இருப்பதாகவும் ஒரு கருத்துள்ளது. அதில் முதன்மை பீடமாக கருதப்படுவது ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலும், இரண்டாவதாக சொல்ல படுவது தில்லியில் உள்ள சத்தர்பூர் கோவில். மற்றும் பல இடங்களும் சொல்லப்படுகின்றன. அதில் மதுரையும் ஒன்றாகும்.

//ஒரு வேளை மொத்தம் 352 தலங்களில் அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள் என்று//

352 என்பது தவறு.

366 கோவில்களில் அம்மையும், ஈசனும் - மீனாக்ஷி சுந்தரேஸ்வராக கோவில் கொண்டுள்ளானர் என்று சொல்ல வந்தேன். தினமலரில் அப்படி ஒரு செய்தி வந்திருந்தது. அதை தான் இங்கே பதித்தேன். அச்செய்தியை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன். மின்னஞ்சலும் வந்தது.

Anonymous said...

2004 ல்;சென்ற பொழுது; இவ்வீதியில் நின்றுள்ளேன்(என் எண்ணம் சரி என நினைக்கிறேன்); அதிலுள்ள சிறு மரத்தில் பிள்ளைவரம் வேண்டி தொட்டில்கள் கட்டப் பட்டிருந்தன. சுமார் 60 வருடங்களுக்கு முன் என் பேத்தியார் இக் கோவில் வந்த பொழுது; தொட்டில் கட்டிய தாகவும்; அதன் பின் தானும்; எங்கள் மைத்துணி ஒருவரும்; பிறந்த தாக, என்னுடன் வந்த என் அக்கா கூறினார்.என் அக்காவும் தன் பேத்திமார் இருவருடன் வந்தே தரிசனம் செய்தார்.நீங்கள் குறிப்பிட்டது போல் மேகம் படத்துக்கு மெருகூட்டியுள்ளது.
யோகன்
பாரிஸ்

குமரன் (Kumaran) said...

மதுரைக்கு அண்மையில் போயிருக்கிறீர்களா யோகன் ஐயா. நல்லது. மதுரைக் கோவிலில் எந்த கோபுர வாசலைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும். ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று வேறு வாசல் வழியாக வெளியே வந்தவர்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் சொல்வது இந்த வாசல் தானா என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

மதுரையில் தற்போது வெயில் அதிகமாக இருக்கிறது என்று பின்னூட்டம் போட்ட அனானிமஸ் நண்பரே. அந்தப் பின்னூட்டத்தில் மனிதனின் பின்பாகத்தைக் குறிக்கும் சொல்லை நீங்கள் சொல்லியிருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்.

Anonymous said...

அன்புக் குமரனுக்கு!
2004 ல்; தான் சென்றேன்; நீங்கள் குறிப்பிடும்; சம்பவங்கள் நடக்க மிக வாய்ப்புண்டு. நாங்கள் கூட நுளைந்த கோபுரவாசலாலேயே; வெளியேறினோம் ;எங்கள் வண்டி அந்த வாசலில் நின்றதும்;உடன் வந்த சுற்றத்தார் 20 பேர்; தேடும் படலம் இருக்கக் கூடாதென்பதே நோக்கம். ஆனால் வெளியேறும் போது இப்படத்தைப் பிடிப்பவர் நிற்குமிடம் தாண்டிச் செல்லும் போதே! அந்தத் தொட்டில் கட்டியுள்ள மரத்தைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டே கடந்தோம். இக் கோவிலில் இப்படிப் பட்ட மரங்கள் பல உண்டா? அப்படி இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் நான் குறிப்பிடுவது; இக் கோபுரங்களே!
யோகன்
பாரிஸ்

Anonymous said...

குமரன் ஐயா,
"பின் பாக"த்தைக் குறிக்கும் சொல்லைப் போட்டு விட்டு பயந்து கொண்டிருந்தேன். நீங்கள் என்னை "போலி டோண்டு" லிஸ்டில் சேர்த்துவிடுவீர்களோ என்று. நல்ல வேளைத் தப்பித்தேன்.

ஆனால் மதுரைக்காரர் அந்த வார்த்தைக்கு பயப்படலாமா ? தங்கள் ஊர் வைகைப் புயல் வடிவேலு பல சொற்களைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்துகிராறே ? உ.தா. "டுபுக்கு", "வெண்ணை".

மதுரை என்றாலே கொஞ்சம் கலக்கம் தான். சில பல அனுபவத்தினால்.,
1. முதல் முறை ஆட்டோக்காரர் பெரியார் பஸ்டாண்டுக்கு எதிரில் இருந்த "Route bus stand"க்கு (முன்பு இருந்தது) ஊரைச் சுத்திக் காண்பித்து 50 ரூபாய் வாங்கினார்.
2. தெரியாத்தனமாக ஒரு தடவை நைட் பதினோரு மணிக்கு "route bus stand" போவதற்கு பதில் பெரியாருக்குப் போக, "லாட்ஜுக்குப் போகலாம்" என்று ஒரு பெண் பின் தொடர. மாட்னோம்டா சாமின்னு ஓடினேன்.
3. ஒரு தடவை பிக் பாக்கெட்காரன் சுத்தமாக பாக்கெட்டைக் காலி செய்ய, ஊருப் போய்ச் சேர பட்ட பாட்டை சொல்ல முடியாது.

அதனால் மதுரைனாலே ஒரு பயம் தான். ஆனால் கல்யாணம் ஆன பிறகு மனைவியின் "உத்தரவால்" போவதுண்டு. கட்டாயம் "ஜிகிர்தண்டா" எனக்கு உண்டு.

பி.கு : இதைப் பின்னூட்டத்தில் எற்ற வேண்டிய அவசியம் இல்லை. படித்துவிட்டு அழித்துவிடவும்.

குமரன் (Kumaran) said...

படித்துவிட்டு அழித்துவிட என்றால் எதற்கு பின்னூட்டம் அனானிமஸ் ஐயா. எனக்கு தனிமடல் அனுப்பியிருக்கலாமே? :-)

நீங்கள் சொல்லியிருப்பது இப்போது ஊரூருக்கு நடக்கின்றதாம். என்னவோ மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்கு உங்கள் அனுபவங்கள் எல்லாம் கிட்டியதில்லை. ஒரு வேளை வெளியூர்காரர்களிடம் மட்டும் தான் இந்த மாதிரி கைவரிசைகளைக் காட்டுவார்களோ என்னவோ? எனக்கும் சென்னையில் முதல் அனுபவம் உண்டு. ஆனால் அந்த அனுபவம் சென்னைக் காரர்களுக்கு ஏற்படாது என்று எண்ணுகிறேன். வெளியூர்காரர்களுக்கு மட்டும் தான். :-)