Tuesday, November 15, 2005

55: நாளும் கோளும் குமரேசர் இரு தாளும்

கார்த்திகையில் கார்த்திகை நாளாம் இன்று கார்த்திகேயனின் புகழ்பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளே பௌர்ணமி திதியாகவும் கார்த்திகை நட்சத்திரமாகவும் அமைந்துள்ளது மிகச்சிறப்பு.

நண்பர் இராகவன் தன் 'இனியது கேட்கின்' வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். அந்த பாடலுக்கு மேலும் விளக்கம் கூறலாம் என்றவுடன் நீங்களே கூறுங்கள் என்று சொல்லிவிட்டார். கரும்பு தின்ன கூலியா? இதோ அவன் அருளை முன்னிட்டு அவன் புகழைப் பேசலாம் என்று கிளம்பிவிட்டேன்.

நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!


இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார நாட்களுக்கும், சந்திரனின் சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது தான்.

நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன் முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள் என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன் குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.

போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான் இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும் எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை நிறைவேற்றிவிடுவான்.

ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின் பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு திருமுகங்களும், திரண்ட பன்னிரு தோள்களும், அந்த தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள் என்னை என்ன செய்யும்? என்னுடைய நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.

அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும் தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும் கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன் வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.

அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும் தெரிகிறது.

சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.

சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை நாம் வணங்கினால் அது நடக்கும்.

சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள் வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார். நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என் செயும்.... என்கிறார்.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது? அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய முதற்படி.

21 comments:

rv said...

குமரன்,
காலையில் விழித்தவுடன் ஒரு நல்ல பதிவ பார்த்த திருப்தி..

//அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. //

இது ரொம்ப நல்லாருக்கு.

---
//எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் //
அப்படியே ஒரு டெலிபோன் கால் என் செயும்-னும் சேத்து பாடிருக்கலாமோ?? :P

வெளிகண்ட நாதர் said...

ஷண்முகா! ஞானபண்டிதா! குமரா! ஆறு படை வீடு கொண்ட முருகா, வயலூரனே! மருதமலை மாமுனியே! கார்த்திகை அதுவுமா எல்லாரையும் காப்பாத்துனும்டா என் சாமி. உம் புகழ் பாடற எங்குமரனையும் காப்பாத்து!!

குமரன் (Kumaran) said...

நன்றி இராமநாதன்.

//அப்படியே ஒரு டெலிபோன் கால் என் செயும்-னும் சேத்து பாடிருக்கலாமோ?? //

உங்களுக்கு ரொம்ப நக்கலா போச்சா??? உங்கப் பதிவுக்குப் போய் 'அப்டிபோடு'கிட்ட போட்டு குடுத்துடாதீங்க. அப்புறம் உங்களுக்கு காலையில எந்திருச்சவுடனே படிக்க இந்த மாதிரி நல்ல பதிவுகள் கிடைக்காது...சொல்லிட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி வெளிகண்ட நாதர். நாம பஜகோவிந்தம் பாடுனா நீங்க அங்க வந்து கோவிந்தா போடறீங்க. இப்ப கந்தா கடம்பான்னு இங்க வந்து நல்லா நாலு வார்த்தை சொல்றீங்க. உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதால தான் இங்க மழையே பெய்யுது.

G.Ragavan said...

குமரன் தாளைப் பற்றிக் குமரன் சொன்னதைப் படித்துப் படித்து மகிழ்ந்தேன். என்ன அழகான வருணனை. ஒரு நொடியில் எனக்குத் திருமறைக்காட்டில் அப்பருக்கு நேர்ந்தது நேர்ந்தது. ஆனால் நல்லவேளையாக நீடிக்கவில்லை. இன்னும் நிறைய தருவதாக குமரன் உறுதி கூறியிருக்கிறான்.

குமரன், இந்த ஒரு விளக்கத்திற்கே தமிழ் உள்ளளவும் உங்கள் எழுத்தின் புகழ் நிலைத்திருக்க வேண்டுகிறேன். எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி, தாவ வேண்டிய கிளைகளையெல்லாம் தாவி கனியைக் கொய்து வந்து கைகளில் போட்டிருக்கின்றேரே ஐயா! தமிழ் உமக்குச் சொந்தம். தமிழுக்கு நீங்கள் சொந்தம்.

பரஞ்சோதி said...

அருமையான பதிவு, நல்ல விளக்கங்கள்.

குமரன் நீங்களும் இராகவனும் ஆன்மீக பதிவுகள் கொடுத்து அசத்துறீங்க.

பாராட்டுகள்.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,

இந் நன்னாளில் முருகனை ஏன் படங்களிலும், பாடல்களிலும் சித்தரித்துள்ளனர் என்று கொஞ்சம்
சிந்தித்தல் அவசியமே :

கீழ்கண்ட அநுபவமுத்துக்கள், குன்றுதோறாடல், கந்தபுராணம் ஆகியவைகளில்
கூறப்பட்டவைகளிலிருந்தும், என் பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம்
அவ்வப்போது ஆங்காங்கே கூறியவைகளிலிருந்தும் புரிந்துகொண்டவை.


முகம் ஆறு -

ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக இருப்பதால்
முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறு முகமுண்டாயிற்றென்று விளம்பலுமுண்டு.

கால் இரண்டு -

தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு - என்ற இரண்டறிவாகிய விடய
உணர்வும், நிர்விடய உணர்வும் ஆகும்.

கை பன்னிரண்டு -

ஆறு ஆதாரங்களிலுமுள்ள பிரகாச, அப்பிரகாசமாகும்.

தசாயுதம் - வச்சிரம் - தீட்சண்ய உணர்வு

வேல் - சக்தி (இச்சா, கிரியா, ஞானா சக்திகள்) - Potential & kinetic energy.

அருள் - அறிவு

மணி - ஆன்ம விளக்கமாகிய நாதம்.

த்வஜம் - புகழாகிய கீர்த்தி

ஸரஸிஜம் - தயவு

குக்குடம் - மாச்சரியமில்லாத நிறைவு.

பராகம் - பாச நீக்கம்.

தண்டம் - வைராக்கிய அறிவு.

பாணம் - அன்பு(அம்பு).

அபயம் - சமாதான உணர்ச்சி

வரதம் - நிராபரமாகிய ஆதரவென்னும் சகிப்பு.

கடப்ப மாலை - சர்வ தத்துவ கண்டனம்.

மயில் -

விசித்திர வடிவுடையதாகியதும், பல வர்ணமுள்ளதும், மறதி முதலிய
குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர மாயைக்கு இருப்பிடமானதுமான
மூலப்பிரகிருதி, மாயை.

சூரன் -

அண்டத்திலும், பிண்டத்திலும், மூல அஞ்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய மகா
அகங்காரமென்னும் இராக்கத அம்சமாகியதுவே.

மாமரம் - மாயை

கோழி - மாச்சரியம்

யானை முகம் - மகாமதம்

சிங்க முகம் - ஆதி குரோதம்

தெய்வ யானை - தாந்தர தத்துவம்

வேடர்கள் - இந்திரியங்கள்

வள்ளி - மானசமாகிய மானின் வயிற்றிலுதித்த சுத்த மனம்

வடிவு - நினைப்புக்கும் மறதிக்கும் இடையில் - விவேக உருவு

பாத முதல் நாபி வரை - அக்கினி உருவு

நாபி முதல் கண்டம் வரை - தார நாடி உருவு

கண்ட முதல் புருவ மத்தி வரை - மணி உருவு (சுப்பிரமணியன்)

உச்சியில் - ஒளி உருவு

புத்தியில் - சுத்த அறிவு

அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும், கோணத்தில்
ஆறாயும்(ஆராயும்),மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே
சுப்பிரமணியம்.

படை வீடுகள் - 6 :

1.ஏரகம் - அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம்.

2.திருவாவினன்குடி - இலக்குமியாகிய மகிழ்ச்சியும், பசுவாகிய சீவனும்,
இனன்(சூரியன்) ஆகிய புத்தியும், ஒன்றுகூடி விளங்கும் ஆன்ம அறிவின்
சுத்தகாரிய இடம்.

3.பழமுதிர் சோலை - (இந்திரிய,ஆலரண,சீவ) அநுபவப் பழக்கங்களாகிய பிரயோசன
இன்பங்கள் நீங்கி குறைவற்ற அறிவாய் விளங்குமிடம்.

4.திருச்சீரலைவாய், திருச்செந்தில்,செயந்திபுரம் : சுத்த மனத்தில்
(விடயக்)கடலில், அவாவாகிய அலை அடித்துக்கொண்டிருக்கும் இடமாகிய
கரை,செந்துக்களின் இருதய(இரு+உதய) தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை வதைத்து
மகிழ்ச்சியைப் பெற்ற பதிமனத்தின் (பதி+மனம்) விளக்கம்.

5.திருப்பரங்குன்றம் - அசைதலில்லாத விளக்கத்தையுடைய விவேக உல்லாச இன்ப நிறைவு.

6.குன்றுதோறாடல் - மலையென்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமாயுள்ள
துரிய நன்னிலை. சீவதுரியம், பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம்,
சிவதுரியம்,சத்திதுரியம் ஆகிய துரிய மலைகளுக்கு உடலிலிடம், கோசத்தினடி,
தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக்
கீழ், மார்பு,நெஞ்சு ஆக ஆறு.

ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும், யோகிகள் இருதயத்தில்
கண்டு வணங்குவரென்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் கண்டு
வணங்குவரென்றும், பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும்
விதித்துள்ளது.

ஆகவே, அவரவர் நிலக்கு ஒத்தவாறு இறையை வணங்குவோமாக.

அன்பு,
ஞானவெட்டியான்

குமரன் (Kumaran) said...

// ஒரு நொடியில் எனக்குத் திருமறைக்காட்டில் அப்பருக்கு நேர்ந்தது நேர்ந்தது.// இராகவன். எனக்கு ஒவ்வொரு முறை உங்கள் பதிவுகளைப் படிக்கும் போதும் இது நிகழும். முக்கியமாக உங்கள் 'பொற்சிலையும் சொற்குவையும்' படிக்கும் போது நிகழ்ந்தது. நான் இட்ட பின்னூட்டங்களில் இது நன்றாய் தெரியும். இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

இப்படித் தோன்றுவது இருவருக்குமே நல்லது என்று தான் நினைக்கிறேன். அப்பரிடமும் சம்பந்தரிடமும் மாறி மாறி பாடல்கள் இறையனாருக்குக் கிடைத்ததல்லவா? அது போல் நம்மிடமும் குமரேசன் எதிர்பார்க்கிறார் போலும்.

யாரப்பா அங்கே 'சபாஷ். சரியான போட்டி'ன்னு போட்டுத் தள்றது.

//எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி, தாவ வேண்டிய கிளைகளையெல்லாம் தாவி கனியைக் கொய்து வந்து கைகளில் போட்டிருக்கின்றேரே// ஆஹா என்னைத் திரும்பவும் நம் முன்னோர் காலத்திற்கே அனுப்பிவிட்டீர்களே! இருக்கட்டும். அனுமானும் நானும் ஒரே இனம் என்றால் மகிழ்ச்சிதான். :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

Dear Kumaran,
Ooru pottyennu vanthuvetta neenga singam. jamachupiteenga. nalla nalil(muruganai partri ninaithathal) intha nalla vishayangalai sonnathrku nandri. athuvum gynakoothan bonus veru TRC

தி. ரா. ச.(T.R.C.) said...

sorry gyanavettiyan

தி. ரா. ச.(T.R.C.) said...

kumaran intha padalil oondru gavanitheergala. Arunagiryar muthalil kanpathu muruganin pathngale. piruku than tholum, shanmugamum etc.,nammil palar kovilukku chentral parpathu kadvulay thavera ellam. Appadiye parthalum nagaikalai,poo alagarathy etc. Parkavendiya pathatha parpathe yellai.parka parka thigattumo unthan pada dharisam endra padalay kettu irurkeergala.maruganin maman Krishnan aalilayel paduthukondu than pichu kalkalay vayel vaithu choovaythu kodu iruppathu en theriyuma. Ivalavu bhathargal vanthu en kalai patri vangugirarkale antha bhathy suvay eppadi yerukkum endru parpatharku MURUKA SARANAM TRC

சிவா said...

//**அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள் **// நல்ல காரியம் செய்யும் நேரமே நல்ல நேரம். அங்கே இறை பக்தியும் சேர்ந்து விட்டால் அதை விட நல்ல நேரம் என்ன?, பிறகு நல்ல நேரம்- கெட்ட நேரம் என்று ஒன்ற வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டுவந்தார்கள். இறைவன் அருளை மிஞ்சிய கெட்ட நேரமும் உண்டா?

பி.கு: வர வர உங்கள் எழுத்துக்களில் நல்ல நடை இருக்கிறது. பக்தியும் இருக்கிறது. தொடருங்கள்

குமரன் (Kumaran) said...

அன்பு நண்ப அனகன். பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. நீ இந்த வலைப்பதிவுகளைப் படிக்கிறாயா இல்லையா என்று தெரியாமல் இருந்தது. இப்படி பின்னூட்டம் இட்டதால் இப்போது நீ படிக்கிறாய் என்று தெரிந்து விட்டது. மிக்க நன்றி. உன் பெயரைத் தலைப்பில் இட்டு 'அனகனும் ஆண்டவனும்' என்னும் பதிவை 'மதுரையின் ஜோதி' வலைப்பக்கத்தில் இட்டுள்ளேன். படித்தாயா?

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி பரஞ்சோதி.

குமரன் (Kumaran) said...

ஞானவெட்டியான் ஐயா, தலைவணங்குவதை விட்டு நான் என்ன சொல்வது? ஒரு தனிப்பதிவாய் இடவேண்டிய விஷயங்களை இங்கு பின்னூட்டத்தில் இட்டுவிட்டீர்கள். இதைப் உங்கள் வலைப்பக்கத்தில் ஒரு பதிவாகவும் கொடுத்துவிடுங்கள். நான் இதில் நிறைய விளக்கம் கேட்கவேண்டும். அங்கு வந்து கேட்கிறேன்.

குமரன் (Kumaran) said...

TRC சார். பாராட்டுகளுக்கு நன்றி. இறைவனின் பாதங்களின் சுவையைப் பற்றி பேசுவதென்றால் அதற்கு தனிப்பதிவுகளே இடலாமே. சுருக்கமாக ஆலிலைக்கண்ணனின் அழகை வர்ணித்ததற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

சிவா. நீங்கள் சொன்ன மாதிரி நல்ல காரியம் செய்ய இறைவனின் அருளை மட்டுமே முன்னிட்டுச் செய்துவிடலாம். நேரம் பார்க்கத் தேவையில்லை. நம் முன்னோர்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பிரித்துவைத்தது காமியமாக நாம் காரியம் ஆற்றும் போது நற்பலன்களைப் பெறுவதற்காக.

//வர வர உங்கள் எழுத்துக்களில் நல்ல நடை இருக்கிறது. பக்தியும் இருக்கிறது// என்ன சொல்ல வருகிறீர்கள்? இதுவரை நல்ல நடை இருந்ததில்லை என்கிறீர்களா இல்லை பக்தி இருந்ததில்லை என்கிறீர்களா? நல்ல நடை இருந்தால் பக்தி இருந்ததில்லை; பக்தியிருந்தால் நல்ல நடை இருந்ததில்லை; இதில் இரண்டும் இருக்கிறது என்கிறீர்களா? :-)

சிவா said...

//**காமியமாக நாம் காரியம் ஆற்றும் போது**.// புரியலையே..காமியமாகன்னா என்னா?. காரியமாகவா?. கொஞ்சம் விளக்குங்கள். சுய காரியமே என்றால் நல்ல நேரம் பாக்கணும்னு சொல்லறீங்களா. தெளிவா சொல்லலாம்ல...இப்படி பின்னூட்டம் அனுமார் வாலு மாதிரி நீண்டுக்கிட்டே போகுதுல்ல..(ராமநாதன் கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்டீங்க).

//வர வர உங்கள் எழுத்துக்களில் நல்ல நடை இருக்கிறது. பக்தியும் இருக்கிறது// இல்ல..இப்போவெல்லாம் வெறும் பாட்டுக்கு விளக்கம் மட்டும் கொடுக்காமல், கொஞ்சம் உங்க கதையும் சொல்லறீங்கல்ல...அதை தான் அப்படி சொன்னேன்.

குமரன் (Kumaran) said...

நீங்க புரிஞ்சுகிட்டது சரிதான் சிவா. காமியம் என்றால் சொந்த நலனுக்காகச் செய்வது. நல்ல காரியங்கள் இரண்டு விதமாய் உண்டல்லவா? பிறர்க்கு நன்மை செய்வது, தனக்கு நன்மை செய்வது. அந்த இரண்டாம் வகைதான் காமியச் செயல்கள்.

//இப்படி பின்னூட்டம் அனுமார் வாலு மாதிரி நீண்டுக்கிட்டே போகுதுல்ல// ஆஹா...அனுமார் இந்த பதிவுல ரெண்டு பின்னோட்டத்துல வந்துட்டாரே. அவர் இராமர் இருக்கிற இடத்துக்குத் தானே வருவார்...ஓ...இங்க இராகவன் இருக்காரோ?

// கொஞ்சம் உங்க கதையும் சொல்லறீங்கல்ல // என் கதையை சொல்றேனா? என்ன சொல்றீங்க? எங்கேங்க என் சொந்தக் கதையைச் சொல்லியிருக்கேன்?

//ராமநாதன் கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்டீங்க// நட்சத்திரமே. பாத்தீங்களா உங்களுக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கேன்.

G.Ragavan said...

// ஆஹா...அனுமார் இந்த பதிவுல ரெண்டு பின்னோட்டத்துல வந்துட்டாரே. அவர் இராமர் இருக்கிற இடத்துக்குத் தானே வருவார்...ஓ...இங்க இராகவன் இருக்காரோ? //

ஐயோ குமரன்...நீங்க என்னை இராமனோடா ஒப்பிடனும்....ம்ம்ம்ம்...என்னை எல்லாரும் அலுவலகத்தில் ராவண் என்பார்கள். காரணம் நானும் என் தோழியும் சேர்ந்து உருவாக்கிய (அல்லது அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்த) இராமாயணம் ரொம்ப பிரசித்தம். அதை இங்கே கொடுக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. அது பலருடைய மனதைப் புண்படுத்தும் என்ற ஒரே காரணத்தால்.

குமரன் (Kumaran) said...

இராகவன். அந்த விவகாரமான இராமாயணத்தைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.