Wednesday, October 12, 2005

சகலகலா வல்லி ஸரஸ்வதி - 2

நண்பர்களின் வேண்டிகோளின் படி, ஸரஸ்வதி பூஜையன்று எழுதிய சகலகலா வல்லி மாலையின் முதல் பாட்டிற்கு முறையான பொருள்:

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே!

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து) தண்டாமரைக்குத் தகாது கொலோ - தாயே! நீ வெண்தாமரை மலரில் உன் பாதம் வைத்து நின்றுள்ளாய். உன் அருள் இருந்தால் என் உள்ளம் கூட எந்த குறைகளும் இன்றி வெள்ளை உள்ளம் ஆகி குளிர்ந்த தாமரை மலர் போல் உன் பாதம் தாங்கும் தகுதி அடையும்.

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகும் காக்கும் இறைவனாம் திருமால் எல்லா உலகையும் உண்டு பாற்கடலில் உறங்க சென்று விட்டார்.

ஒழித்தான் பித்தாக - எல்லா உலகையும் அழிக்கும் சிவனாரோ 'பித்தன்' என்று பெயர் கொண்டு சுடலையில் நடனமாட சென்று விட்டார்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே! - உன் கணவரான பிரம்ம தேவர் மட்டும் உலகைப் படைக்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர் நாவில் நீ சுவை கொள் கரும்பாய் அமர்ந்திருப்பதுதான்.

ஸரஸ்வதி தேவியின் துணை இல்லாததால் தான் திருமால் உறக்கம் கொண்டார்; சிவனார் பித்தானார் என்ற பொருளில் குமரகுருபரர் இந்த பாடலை சகல கலா வல்லியாம் ஸரஸ்வதி தேவியின் புகழாகப் பாடியுள்ளார்.

இந்த பாட்டிற்கு கொஞ்சம் நக்கலாக எழுதப்பட்ட பொருளை யாராவது படிக்க விரும்பினால், இங்கே படிக்கலாம்.

No comments: