Sunday, June 08, 2008

உபயோகத்தை பயன்படுத்தலாமா ?

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை மொழிப் பெயர்க்கும் காலத்திலும் அது பரவலாக புழங்க ஆரம்பித்த போதும் நம்மவர்கள் வடமொழி சொற்களை முதன்மையாகவும் பிற மொழிச் சொற்களை தேவை (அவசியம்) இல்லாமலேயே பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர் என்ற பேருண்மையை 'தமிழினி மெல்லச் சாகும்' என்ற வசை எச்சரிக்கைகுப் பிறகு ஒருவாறு தெரிந்து கொண்டு எழமுயற்சித்து காலூன்றி விட்டோம்.

இனி நாம் நட(ன)மாடவே முடியும் என்ற நிலைக்கு உறுதி பெற்றுள்ளோம் என்றால் அது தனித் தமிழ் ஆர்வலர்கள் பரிதிமார் கலைஞர், மறைமலை அடிகளார், அண்மையில் (சமீபத்தில்) வாழ்ந்து கலைச் சொற்களுக்கும், வேர்சொல் ஆராய்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய தேவநேய பாவானர் போன்றோர்களால் தான். தற்பொழுது வலைப்பக்கம் வழியாக நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா இராம.கி அவர்கள் அத்தகைய சீரிய பணியை செவ்வனே செய்து வருகிறார்கள்.

இந்த களையெடுப்பை கொச்சைப்படுத்த பல்வேறு உத்திகளில் அவ்வப்போது ஏற்படும் எதிர்ப்புகளை தமிழர்கள் நேர்கொண்டும் (சந்தித்தும்) , பொறுத்துக் (சகித்துக்) கொண்டும் தமிழன்னைக்கு பணிவிடை செய்தே வந்திருக்கிறார்கள். தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சில வலைப்பதிவர்கள் தமிழார்வளர்களை குறி(வை)த்து தூற்றல், ஏச்சு, கிண்டல் என தொடர்ந்து ஒரு தொண்டாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்மழை வேண்டுமென வேண்டுபவர்கள் சிறு மழைத்துளிக்குக் கூட தவளைகளின் இரைச்சல் ஆரம்பமாகிவிடுமோ என்றெல்லாம் நினைப்பது இல்லை. எனவே தவளைகள் அவைகளின் இயல்பை வெளிப்படுத்துகின்றன என்று புறம்தள்ளி மழையால் பெரும் பயனை மட்டுமே நினைத்துப் பார்ப்போம்.

கொள்கைபிடிப்பு என்ற பெயரில் பழமை வாதம் பேசுபவர்கள் எப்போதும் மாறப் போவதில்லை. தமிழறிஞர்கள் எழுதுவது எல்லாம் மேற்படி பேசுபவர்களை மாற்றவேண்டும் என்பதற்கு அல்ல என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். எது உண்மை என்று அறியாமல் மயக்கத்தில் இருந்து கொண்டு இது சரியாக இருக்குமா ? என்று கூட ஆராயாமல் இருக்கும் மற்ற தமிழர்களுக்கு இவைகள் கண்ணில் படும் போது தமிழரிஞர்களின் கருத்துக்களும் கட்டுரைகளும் சென்றடைந்து நல்ல தாக்கத்தைத் தரும். சரி கட்டுரையின் தலைப்பைத் தொடவேண்டும்...

'பயன்படுத்துதல்' என்ற பதம் எங்கு புழக்கத்தில் மிகுந்து (அதிகம்) இருந்தால் சமூகத்துக்கு பெரிதும் நலம் என்று எடுத்துக் கொண்டால் அது 'மொழியை சரியாக பயன்படுத்துதல்' என்ற இடத்தில் பயன்படு(த்து)ம் போது பண்பாடும், பழமை வாதம் தவிர்த்து கலாச்சாரமும் மென்மேலும் வளரவும், கட்டிக் காக்கவும் பயன்படுகிறது.

பயன் என்ற சொல்லின் இனிமை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதை திருக்குறளில் அந்த சொல்லை பல குறள்களில் திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதிலிருந்து நன்கு அறிய முடிகிறது.

பயன் என்ற சொல்லில் இருந்து பயனீட்டாளர், பயனாளர், பயன்படுத்துபவர், பயனளிப்பு போன்று பயன் தொடர்புடடைய மேலும் பல பெயர் சொற்களுடன் சேர்த்து 'பயன்' கலைச் சொற்கள் அமைக்க பெரிதும் பயன்படுகிறது. இவ்வளவு பெருமையும், பயனும், சொல்லினிமையும் உள்ள சொல்லை வைத்துக் கொண்டு 'உபயோகம்' என்ற சொல்லை பெருவாரியாக நாம் பயன்படுத்துகிறோம்.

பயன் என்ற தமிழ் சொல்லும் உபயோகம் என்ற வடசொல்லும் ஒரே பொருள்தான். உபயோகத்தின் பயன் தமிழுக்கு தேவையற்றது. எளிதான பயன் இருக்கையில் உபரியான உபயோகத்தை பயன்படுத்துவதை தவிர்கலாம். குறையொன்றுமில்லை. தமிழைப் பொறுத்தவரை பயனென்ற பைந்தமிழ் நற்பயன் சொல்லைப் பயன்படுத்துவதால் பெரும்பயனே !

Saturday, June 07, 2008

காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல...

ஆண்:

ரகசியமானது காதல் மிக மிக
ரகசியமானது காதல் (ரகசியமானது)

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரச்யமானது காதல் மிக மிக
சுவாரச்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தைப் போல
அது சுதந்திரம் ஆனதும் அல்ல
ஈரத்தை இருட்டினைப் போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல (ரகசியமானது)

பெண்:

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல (ரகசியமானது)

பாடியவர்கள்: ஹரிஷ் இராகவேந்த்ரா, ஹரிணி
படம்: கோடம்பாக்கம்
வெளிவந்த வருடம்: 2005
இசை: சிற்பி

***

இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிக ஆழமானதாக இருக்கின்றன. பாடலின் தொடக்கத்தில் இருந்து மிக நன்றாக எடுத்துக் கொண்டு சென்று ஆணும் பெண்ணும் அவரவர் பகுதியின் சரணத்தில் பாடலின் உச்சிக்குச் செல்வது போல் அமைத்திருக்கிறார் கவிஞர். இந்தப் பாடலில் என்ன என்ன பிடிக்கிறது என்று சொல்ல ஆசை தான். ஆனால் அபப்டி சொல்லி இந்தப் பாடல் கொடுக்கும் உணர்வுகளுக்கு வரையறை ஏற்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்வுகளை அவரவர் அனுபவிக்க வேண்டும். சரி தானே?!

பாடலை ஒலி வடிவத்தில் முதலில் கேட்டுப் பாருங்கள். பின்னர் ஒளிஒலி வடிவத்தைப் பார்க்கலாம்.


துணிவே துணை !

என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியம் (செயல்) செய்திருப்பாய் ? இதைச் செய்ய தைரியம் வேண்டும்... பொதுவாக பயன்பாட்டில் உள்ள சொல் ... வீரம் அல்லது துணிவு குறித்துச் சொல்ல பயன்படுத்தும் ஒரு சொல்.

முதன் முதலில் வீட்டுக்கு தெரியாமல் திரைப்படம் ... தைரியம் வந்து சென்றோமா ? ம் அந்த தைரியத்தில் பெற்றோர்களை ஏமாற்றும் துணிவும் கூடவே வந்திருக்கும். பின்பு தைரியமாக இரவு காட்சி பார்த்துவிட்டு ஒலியின்றி(சத்தமில்லாது) பூனைப் போல் படுத்து உறங்கி இருப்போம். இருட்டை குறித்த அச்சத்தை(பயம்) வென்ற துணிவு அது.

தன்னுடைய (சொந்த) வியாபாரம் தைரியாமாக ஆரம்பிப்பது, பெற்றோர்கள் உதவி இல்லாமல் தன் (சொந்த) காலில் நிற்கும் தைரியம் எல்லாமே ஒரு துணிவுதான்.

துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துணிந்தவனுக்கு துக்கமில்லை, துணிந்து நில் தொடர்ந்து சொல் என துணிவு என்பது அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தமிழ்ச் சொல். இருந்தாலும் துணிந்தோ, துணியாமலோ அன்றாடம் பேச்சுவழக்கிலும், எழுத்திலும் சரளமாக 'தைரியத்தை' தான் பயன்படுத்திக் (உபயோகம்) கொண்டு இருக்கிறோம்.

துணிவுடன் முடிவெடுத்து தைரியத்துக்கு பதில் அந்த இடங்களிலெல்லாம் துணிவின் துணை நாடலாம்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( குறள் 688 )


துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.


உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

Friday, June 06, 2008

பைய பைய

'என்ன சொல்ற குமரன்? பைய பையன்னா என்ன அருத்தம்?'

'அதுவா? மெதுவா மெதுவான்னு சொன்னேன்.'

'அப்படி சொல்லு. அப்படி சொல்லியிருந்தா தெளிவா புரியும்ல. உங்க ஊரு பேச்சுவழக்கா அது?'

'அப்பிடியும் சொல்லலாம். எங்க ஊருல மட்டும் இல்லை. தெக்கால எல்லா ஊருலயும் அப்படி சொல்லுவாய்ங்க.'

'இப்படி வட்டார மொழியில பேசுனா எனக்கெல்லாம் புரியறதில்லை.'

'இது வட்டார மொழின்னு சொல்ல முடியாது கண்ணா. உனக்குத் தெரியலைன்னு சொல்லு. இது சங்ககாலத்துல இருந்து இருக்கிறத் தமிழ்ச் சொல் தான்.'

'இதான கூடாது. நானும் பொறந்ததுல இருந்து தமிழ்நாட்டுல தான் இருக்கேன். தமிழ்ச் சொல்ன்னா நான் கேள்விபடாமலா இருப்பேன்? நீ வீட்டுலயே தமிழ் பேசறதில்லை. நீ எல்லாம் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வந்துட்ட.'

'யப்பா. அந்த விவகாரத்துக்கே போவேணாம். வீட்டுல வேற மொழி பேசினாலும் எனக்குத் தமிழ் தெரியுமா தெரியாதாங்கற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் செஞ்சுக்கலாம். 'பைய'ங்கற சொல் பழைய தமிழ்ச்சொல்ங்கறத மட்டும் சொல்லிக்கிறேன்.'

'சரி. சொல்லேன் கேட்டுக்கறேன்.'

'குறுந்தொகைன்னு ஒரு பழைய சங்ககால இலக்கியம் இருக்கு. இதுல ஒவ்வொரு திணையிலையும் ஒரு தொடர் பாடலா பாடியிருக்காங்க. அதுல பாலைத்திணையில பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோன்ங்கறவர் சொல்றதக் கேளு

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று...

நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே மெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாக அணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்...'

'ம்ம்ம். நல்லா தான் சொல்லியிருக்காரு. பைய முயங்கியன்னா மென்மையா அணைத்துன்னு பொருளா? அருமை. அருமை.'

'ஆமாம் கண்ணா. பையங்கற சொல் அருமையாத் தான் தென்படுது. சிறப்பான சொல். பார்ப்பதற்கும் அரிய சொல்.'

'ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொன்னா போதுமா? இன்னும் ரெண்டு மூனு எடுத்துவுடு.'

'சரி. ஒவ்வொன்னா சொல்றேன் கேளு.

அசையியற்கு உண்டு ஆண்டோர் எ ஏர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யாரு இவ்வளவு அழகா பாடியிருப்பாரு சொல்லு? நம்ம ஐயன் தான். இன்பத்துப்பால்ல குறிப்பறிதல் அதிகாரத்துல வரும். பொருளை நம்ம திருக்குறள் வாத்தியார் மயிலை மன்னாருக்கிட்ட கேட்டுக்கிட்டு எஸ்.கே. வந்து சொல்றேன்னு சொல்லியிருக்காரு.'

'மயிலை மன்னாரா? படா குஜாலான பேர்வழியாச்சே அவரு.'

'கண்ணா. இப்ப நீ பேசின பாரு. அது தான் வட்டார வழக்கு. நான் சொன்னதை வட்டார வழக்குன்னு சொல்லிட்டு நீயே வட்டார மொழியில பேசறியே?'

'ஹிஹி. மயிலை மன்னாருன்னவுடனே அந்த பாசை தானா வந்துருதுப்பா. என்ன பண்றது?'.

'சரி. சரி. அடுத்த எடுத்துக்காட்டுக்கு போவோம். எனக்கு நேரமாவுது.

நாம படிச்சோமே கிருஷ்ணன்கோவில்; அது பக்கத்துல இருக்கிற வில்லிபுத்தூருல பொறந்த நம்ம அக்கா கோதை சொன்னது தான் உனக்கும் தெரியுமே.

பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி

இதுக்குப் பொருளை இராகவன் பதிவுல போயி பாத்துக்க வேண்டியது தான்.

அடுத்து நம்ம பேயாழ்வார் சொல்லுறதைக் கேளு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.

வெண்பா தான். பதம் பிரிச்சுப் போட்டதால இலக்கணம் சரியில்லாதது போல நம்ம கொத்தனாருக்குத் தோணலாம்.'

'நீ பதம் பிரிச்சுச் சொன்னதுனால பாதி புரிஞ்சிப் போச்சு. இன்னொரு தடவை நிறுத்தி நிதானமா சொன்னேன்னு வையி. முழுசாப் புரிஞ்சிரும்'.

'சரி. இன்னொரு தடவை சொல்றேன். பொருள் என்னன்னு சொல்லு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.'

'பொருள் சொல்றேன் கேட்டுக்க.

சின்னப் பையனைப் போல ஆலமரத்து இலையில மெதுவா, இளைப்பாறுதலா, தூங்கிக்கிட்டே உலகமெல்லாம் அன்னைக்கி ஒரு நாள் உண்டவனே! உண்மையானவனே! மகாலக்ஷ்மியோட புருஷனே! மந்தர மலையை மத்தா வச்சுக்கிட்டு பாற்கடலைக் கடைஞ்சு வான் அமுதத்தை தேவர்களுக்கு அன்று நீ தந்தாய். பொருள் சரியா இருக்கா?'

'கண்ணபிரான் சொன்னா சரியா இல்லாம எப்படி? பாலன்னா சின்ன பையன் தான். ஆனா இங்கே குழந்தைன்னு சொன்னா பொருந்தி வரும். மத்தபடி கலக்கலா பொருள் சொல்லிட்ட'

'சரி. அடுத்த எடுத்துக்காட்டு எங்கே?'

'இதோ இன்னொரு பாசுரம். இது நம்ம திருட்டுப்பயலே ஆழ்வார் பாடுனது'.

'திருட்டுப் பயலே ஆழ்வாரா? யாருப்பா அது?'

'நம்மை திருமங்கையாழ்வார் தான்'.

'ஓ. அவரா? அவர் திருட்டுப்பயலே தான். பாசுரத்தைச் சொல்லு'

'கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே'.

'நில்லு நில்லு நில்லு. இந்தப் பாசுரத்தையும் பதம் பிரிச்சுத் தானே சொன்ன?'

'ஆமாம்'.

'ஆனா எனக்குப் புரியலையே'.

'எப்படி புரியும்? புரியாதுல்ல. நாம எப்பவும் பேசிக்கிட்டு இருப்போமே அதைப் பத்தி தான் ஆழ்வாரும் சொல்றார். நான் சொல்றதுக்கு சாதகமா அவர் சொல்றதால உனக்குப் புரிய மாட்டேங்குது.'

'அப்படியா? அப்படி என்ன சொல்றாரு ஆழ்வார்?'

'சாமியைச் சின்ன வயசுல இருந்தே கும்புட்டுக்கோங்க. வயசான பின்னாடி உடல் உபத்திரவம் தாங்க முடியாம சாமி கும்புட முடியாதுன்னு சொல்றாரு'.
'அதானா? கடைசி காலத்துல சாமியைக் கும்புட்டுக்கலாம். இப்ப எதுக்குன்னு நான் கேட்டுக்கிட்டு இருப்பேனே. அதைச் சொல்றியா?'

'ஆமாம். ஆழ்வார் என்ன சொல்றார் பாத்தியா?

கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.

'நல்ல பாட்டு தான்பூ. இன்னிக்கே நானும் கோவிலுக்குப் போவேன் போலிருக்கே.'

'கோவிலுக்குத் தான் போகணும்ன்னு இல்லை கண்ணன். இங்கன இருந்தே சாமி கும்புடலாம்'.

'ஆமாமா.'

'அம்புட்டுத் தான் எடுத்துக்காட்டுகள் எல்லாம்'.

'நல்ல எடுத்துக்காட்டுகள்.

அப்புறம்... தொடக்கத்துல திணைன்னு ஒன்னு சொன்னீயே. அப்படின்னா என்ன?'

'அதுவா? அது வந்து... எனக்கு ஓரளவு தெரியும். ஆனா தெளிவா தெரியாது. கொஞ்சம் இரு. இராம.கி ஐயாகிட்ட போயி கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்'.

'அப்படி சொல்லு. என்னமோ பெரிய தமிழ் அறிவாளி மாதிரி பேசுன? அப்பப்ப இப்படி தட்டி வச்சாத் தான் சரிப்படும்'.

'ஹிஹி'.

Thursday, June 05, 2008

ப்ரத்யேகம், ப்ரதானம், நிதானம், நிதர்சனம்

சன் செய்திகளில் மிகுந்து அடிபடும் சொற்களில் இந்த ப்ரத்யேகம் 'தனித்தன்மை'க்காக செய்திகளில் அடிக்கடி வாசித்தலின் போது வருகிறது. இந்த சொல்லுக்கு மாற்றுச் சொல்லே இல்லையா ? என்று சிந்தனை செய்து பார்த்தேன். ப்ரத்யேக ஆடை, ப்ரத்யேக தயாரிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய ஆடைகள், தயாரிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாம்.

சிறப்பு என்ற சொல்லிற்கு பதில் ப்ரத்யேகம் என்ற சொல் வழங்கப்படுகிறது. சிறப்பில் 'சிறப்பு' இல்லை என்று சன் செய்தியாளர்களுக்கு மட்டும் தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். சிறப்பை சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனிச்சிறப்பு என்று மிகச்சிறப்பாக சொல்லலாம். ஒற்றைச் சொல்லாக (vocabulary) செல்லவேண்டுமென்றால் 'தனிப்பட்ட' அல்லது 'தனித்துவ' என்றும் ப்ரத்தியோகத்திற்கு மாற்றாக சொல்லமுடியும்.

சிங்கையில் ப்ரதானவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் சென்டரலில் நடத்துகிறார்கள். முதன்மைக்கு முதன்மைத்துவம் கொடுக்காமல் போனது முதன்மையின் பொருள் புரியாததாலா என்று மிகவும் வியப்பாக இருந்தது. முதன்மையென்றால் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானது என்ற பொருளில் தான் செங்கிருதச் சொல்லான ப்ரதானமும் வழங்கப்படுகிறது. ப்ரதானம் என்று தமிழில் ஒற்றெழுத்துக்களை (மெய்யெழுத்து) முன் வைத்து எழுதுவதில்லை 'பிரதானம்' பிரத்தியேகம் என்று தான் எழுதுகிறோம். பயன்படுத்த பொருள் பொதிந்த சொற்கள் தமிழ் குவியலில் இருக்கிறது. அதுவும் கண்ணில் அகப்படும் வகையில் இருக்கிறது. ஒப்புமைத்துப் பார்த்து சரியான சொல்லை பயன்படுத்துவதில் சற்று சோம்பலாக ... பிறமொழிச் சொற்களை தமிழ்'படுத்தி' அந்த இடத்தில் பொருத்தி வருகிறோம்.

'நிதானமே ப்ரதானம்' என்று தெலுங்கில் பழமொழி சொல்லுவார்கள். இதற்கு பொருள் தமிழர்களுக்கும் நன்கு தெரியும். 'நிதானம்' இழக்கக் கூடாது என்று நினைத்து பொறுமை குறித்து சொல்லும் போது 'பொறுமை' இல்லாது, 'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்று அதை எதோ ஒரு எல்லைக்குள் எங்கேயோ நிறுத்திவிட்டு அறிவுரை சொல்லும் போது எல்லையற்று நிதானமே ப்ரதானமாக வருகிறது.

பொறுமையின் சிகரம் என அடைமொழிச் சொற்களும், பொறுமையுடையோர் பெருமை அடைவர் என்ற பழமொழி பத்தி (வாக்கியம்) பொறுமைக்கு பெருமை சேர்க்கின்றன. பொறுமைக்கு முதன்மைதரலாம் பொருளில் தொய்வு இல்லை, சுவையிலும் குறைவில்லை.

'நிதர்சனமான உண்மை' என்று உண்மையை அறுதியிட்டுச் சொல்ல அவ்வப்போது 'நிதர்சனம்' 'அப்பட்டமி'ன்றி அப்பட்டமாக பயன்படுகிறது. நிதர்சனமும் அப்பட்டமும் ஒரே பொருள் என்பது அப்பட்டமான உண்மை.

அருணாக்கொடி

மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்.

"டேய் நாதஸ். எங்கடா வேகாத வெயில்ல வெந்த வெந்தயமா ஓடுற? இங்க வந்து நான் நலந்தானா வாசிக்கிறதக் கேளுடா...."

படக்கென நின்று மூச்சு விட்டபடியே பேசுகிறார் செந்தில். "அண்ணே, முக்கியமான வேலையாப் போறேன். தடுக்காதீங்கண்ணே!"

"(சத்தமாக) ஆமா.....இவரு புருனே சுல்தானு. தங்கத்தக் கொட்டி வெக்க எடமில்லாம தேனிக்குப் பக்கத்துல இருவது ஏக்கரா நெலம் வாங்கப் போறாரு. நில்றா....கிட்டக்க வா மகனே மொதல்ல."

பக்கத்தில் போகிறார். "வந்துட்ட்ட்டெண்ணே"

"(மெதுவாக) ஆமா..இவரு பெரிய அப்துல் கலாம். வந்ததும் வரவேற்கனுமாக்கும். (சாதாரணமாக) இப்பிடி வேர்க்க விறுவிறுக்க எங்க ஓடுற?"

தபதபவென இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டே..."அது வந்துண்ணே...அருணா....கொடி..."

"என்னதுதுதுதுதுது! அருணாவா? யாரு வெள்ளாவிக்குத் துணியெடுக்க வருவாளே அந்தக் கொடியிடை அருணாவா?" கவுண்டரின் பேச்சிலும் முகத்திலும் மலர்ச்சி தெரிகிறது.

"ஐயோ...ஏந்தா இப்பிடி இருக்கீங்களோ" தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "அருணாக்கொடிண்ணே அருணாக்கொடி. இடுப்புல கட்டுற கருப்புக் கயிறுண்ணே."

கவுண்டரின் மூஞ்சி மாறுகிறது. நா தழதழத்துக் கொண்டே "ஏண்டா! இடுப்புல கட்டுற கயித்துக்குப் பேரு அருணாக்கொடியாடா? போன வாரம் இப்பிடித்தான் அந்த நோஞ்சா மூஞ்சி முருகேசு வந்து அண்ணாக் கயிறு வாங்கப் போறேன்னு சொன்னான். கட்சியில எதுவும் சேந்துட்டியா கண்ணான்னு கேட்டா ஒரு மாதிரி பாத்துட்டுப் போறான். வேண்டாம்டா...விட்டுருங்கடா!"

மிடுக்காக விரலை உயர்த்திச் சொல்கிறார் செந்தில். "அண்ணே நீங்க ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கனும். அருணாக்கொடியும் அண்ணாக்கயிறும் ஒன்னுதாண்ணே. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையேண்ணே. எப்படிப் பொழைக்கப் போறீங்களோ?"

"என்னது அடிப்படையா? அதெல்லாம் ஒனக்குத்தானடா பூந்தி வாயா! எனக்கேதுடா அடிப்படையும் சொறிப்படையும்! ஏதோ இந்த மேளம் இருக்கக்கண்டு பொழச்சுக்கிறேன்."

"சரிண்ணே...நீங்க இதையே டொக்கு டொக்குன்னு தட்டுங்க. நான் போய் அருணாக்கொடி வாங்கீயாரேன்."

சற்று ஆத்திரத்தோடு. "டேய் நில்லு. திரும்ப இன்னொருவாட்டி அருணாக்கொடி அண்ணாக்கயிறுன்னு ஒளறுன நாக்க அறுத்து எலிக்குப் போட்டுருவேன். அது அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிறு. புரிஞ்சதா?"

"அண்ணே. அதை அருணாக்கொடின்னும் சொல்லலாம். அண்ணாக்கயிறுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே." சொல்லி விட்டுக் கெக்கே பெக்கே எனச் சிரிக்கிறார் செந்தில். கவுண்டர் கடுகடுப்பாகிறார். செந்தில் தோளில் கை வைத்து உட்கார வைக்கிறார்.

"நாதஸ். இந்த அண்ணாக் கயிறு, தங்கச்சிக் கயிறு, தம்பிக் கயிறு எல்லாத்தையும் விட்டுரு. நான் நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. அரைனா இடுப்பு. எங்க சொல்லு."

"ஐயோ அண்ணே. அரைன்னா இடுப்பா..ஹெக்ஹெக்ஹெக். அரைன்னா அரையறுதுன்னே. அதுல நீங்க எஸ்பேட்டாச்சே. அரைன்னா அரையறுது. அறையின்னா ரூம்புன்னே."

"அடேஏஏஏஏஏஏய். வாய மூடு. இதுக்கு மேல ஏதாவது பேசுன.......(கோவத்தைக் கட்டுப்படுத்துகிறார்.) இங்க பாருப்பா. சுந்தரரு என்ன சொல்லீருக்காரு?"

"என்ன சொல்லீருக்காரு?"

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்துன்னு சிவபெருமானைப் பத்திப் பாடியிருக்காரு."

"அண்ணே ஒரு சந்தேகம்னே. சிவபெருமான் புலித்தொலியக் கொண்டு யாரண்ணே அரஞ்சாரு?"

"இப்ப நாந்தான் ஒன்ன அரையப் போறேன். முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா. பொன்னார் மேனியன்னா....தங்கம் போல பளபளன்னு இருந்தாராம் சிவன். புலித்தோலை அரைக்கிசைத்துன்னா...இடுப்புல புலித்தோலைக் கட்டியிருந்தாராம். இசைத்துன்னா கட்டிக்கிறதுன்னும் சொல்லலாம். அதுல வர்ர அரைக்கு இடுப்புன்னு பொருள். அப்படி இருப்புல கட்டுற கயித்துக்குத்தான் அரைஞாண்னு பேரு. பின்னூட்டங்கள மொதல்ல படி. அதுல ஜெயஸ்ரீ ஞாண்னா கயிறுன்னு அழகா எடுத்துச் சொல்லீருக்காங்க பாரு. இடுப்புக்கான கயிறு அரைஞாண். புரிஞ்சதா?"

தலையை ஆட்டுகிறார் செந்தில். "புரிஞ்சிருச்சின்னே. நீங்க தெய்வம்னே. இந்தத் தமிழு எங்கிருந்துண்ணே வந்துச்சு."

கவுண்டரின் முகம் பெருமிதப்படுகிறது. "டேய். அதெல்லாம் மதுரைல இருந்து நேரா டாக்சி வச்சிக்கிட்டு வர்ரது. நான் என்ன மெயில்ல ஜிரா சொல்றதக் கேட்டா தெரிஞ்சிக்கிறேன். தானா வர்ரது. போறது. ஹெ ஹெ ஹெஹ்ஹஹே."

"சரின்னே நான் கடைக்குப் போயி அரைஞாண் வாங்கியாந்துர்ரெண்ணே." கையசைத்து விடை கொடுக்கிறார் கவுண்டமணி.

சிறிது நேரம் கழித்து செந்திலை ஒரு கூட்டமே துரத்திக் கொண்டு வருகிறது. தலை தெறிக்க ஓடுகிறார் செந்தில். துரத்தியோடும் ஒருவனை நிறுத்திக் கேட்கிறார். "ஏம்ப்பா இப்பிடி அவனத் தொரத்துறீங்க?"

"அந்தக் கொடுமைய....இவன் கடைக்குப் போயி அரைஞாண்னு என்னவோ ஒரு கயிறக் கேட்டிருக்கான். கடையில இருந்த பெருசு...இவன் ஏதோ சூனியம் வெக்க கயிறு கேக்குறான்னு ஊரக் கூட்டீட்டாரு. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கேட்டது அருணாக்கொடின்னு. அத ஏன்டா அரைஞான் கயிறுன்னு சொல்றன்னு கேட்டா.....தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான். அதான்ன தொரத்துறோம்." சொல்லி விட்டு ஓடுகிறார் துரத்துகிறார். கவுண்டமணி முகத்தை ஒரு பக்கமாக இழுத்தாற்போல வைத்துக் கொள்கிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, June 04, 2008

நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே

கோலிகுண்டு கண்ணு கோவைப்பழ உதடு
பாலைப்போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளைத்தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்டைக் காலு சொக்கவைக்கும் வாயி
தேளு தொட்ட ஒன்னை தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிர வாங்குற
ஜே...நீ எதுக்கு வளந்தியோ என் வயச தாங்குற

ஏய்... நா உனக்குப் பொறந்தவ ஏன் பாஞ்சி பதுங்குற
வா... நா உனக்கு வளந்தவ ஏன் காஞ்சி வெதும்பற

(கோலிகுண்டு)

வேப்பிலை கூட இப்ப தித்திக்குது தேனா
பால்பனி பாதி கொடுத்தா
கேக்கலை சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா
உன் பேச்சை யாரு எடுத்தா?
அருகம் புல்லுன்னா ஆடாக வேணுமா?
இலவம் பஞ்சுன்னா இடிபாடு ஆகுமா?
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே

(ஏய்...கோலிகுண்டு...)



பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளக்குது வம்பு வளக்குது அந்த சிரிப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெருப்பு
கண்ணுக்குள்ள கொட்டிக்கிட்ட சீயக்காய போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணீல சிந்திவிட்ட சீமை எண்ணெய் போல
என்னை நீ ஒதுக்குறியே
ஏடி நீ சகடையா எதுக்கென்னை உருட்டுற
மாசக்கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசதியா வறுமையா அங்க குறையுது இங்க நிறையுது ஏன்

(ஏய்...கோலிகுண்டு)

திரைப்படம்: எம் மகன்
பாடியவர்கள்: கல்யாணி, கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
இயற்றியவர்: ??

எதுகை மோனைகள் மட்டுமின்றி மிகப் பொருத்தமான உவமைகளுடன் மிகுந்த அணி நயத்துடன் வந்த அண்மைக்காலப் பாடல் (2006) இது.