Thursday, December 20, 2012

அரி என்ற பேரரவம்!



புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?!
பிள்ளாய்! எழுந்திராய்! பேய் முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

அதிகாலை ஆனதால் பறவைகளும் எழுந்து சிலம்பத் தொடங்கிவிட்டதைப் பார்! பறவையான கருடனுக்கு அரசனான திருமாலின் திருக்கோயிலில் வெண்மையான சங்கின் பேரரவம் ஒலிக்கிறதே! கேட்கவில்லையா? ஏ பிள்ளை! எழுந்திருப்பாய்!

பேயான பூதனையிடம் நச்சுப் பாலை உண்டு அதனுடன் அவள் உயிரையும் உண்டு, வண்டிச்சக்கரமாக கள்ளமாக வந்த சகடாசுரன் நொறுங்கிப் போகும்படி உதைத்து, பாற்கடல் வெள்ளத்தில் பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட - உலகங்களுக்கு எல்லாம் விதையானவனை - உள்ளத்தே கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பெரும் ஒலி நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது!

Wednesday, December 19, 2012

தீயினில் தூசு ஆகும்!


மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை,

தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும்! செப்பேலோர் எம்பாவாய்!

மாயங்களில் வல்லவனை, எக்காலத்திலும் நிலைத்த வடமதுரை நகரின் செல்வனை, தூய்மையான புனிதமான நீரை உடைய யமுனை நதிக் கரையில் வாழ்பவனை, ஆயர் குலம் பெயர் பெற்று விளங்கும் படி தோன்றிய அழகிய திருவிளக்கு போன்றவனை, பெற்ற தாயின் வயிறு பெருமை கொள்ளும்படி செய்த தாமோதரனை -

நாம் தூய்மையுடையவர்களாக வந்து தூய்மையான மலர்களைத் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால் -

முன்னர் செய்த வினைகளும் இனி மேல் செய்யப் போகும் வினைகளும் அவற்றின் பயன்களும் தீயினில் விழுந்த தூசு போல் அழிந்து போகும்!

ஆதலால் அவன் திருநாமங்களைச் செப்புவாய்!

Tuesday, December 18, 2012

ஆழி மழைக்கண்ணா!



ஆழி மழைக்கண்ணா! ஒன்றும் நீ கை கரவேல்!
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

மழை மேகங்களுக்குத் தலைவனே! எதையும் நீ மறைக்காதே! கடலுக்குள் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு மிகுந்த ஒலியுடன் வானத்தில் ஏறி ஊழிக்காலத்தில் அனைவரையும் அனைத்தையும் படைத்த முதல்வனான இறைவனின் திருமேனியைப் போல் உன் உடல் கறுத்து, வலிமையும் அழகும் உடைய பத்மநாபனின் கையில் இருக்கும் திருச்சக்கரத்தைப் போல் மின்னி அவனது மற்ற கையில் இருக்கும் வலம்புரி சங்கைப் போல் எப்போது நின்று ஒலித்து, தயக்கமே இல்லாமல் அவன் கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு மழையைப் போல் நாங்கள் வாழ மழையாகப் பெய்திடாய்! நாங்களும் மகிழ்ச்சியாக மார்கழி நீராடுவோம்!

Monday, December 17, 2012

நீங்காத செல்வம்!



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!  

தனக்கு உரிமையான உலகங்களைத் தானே தானமாகக் கேட்க வேண்டியிருக்கிறதே என்று குறுகி குறள் உருவாக வாமனனாக வந்து, மாவலியிடம் மூவடி மண் தானமாகப் பெற்ற பின், தனது அடியார்களுக்காகத் தான் விரும்பி வந்த காரியம் நிறைவேறுகிறதே என்று மகிழ்ந்து ஓங்கி வளர்ந்து உலகங்களை அளந்த அந்த உத்தமனின் திருப்பெயர்களைப் பாடி, நாங்கள் நம் பாவை நோன்பில் செய்ய வேண்டியவற்றைச் சாற்றி நீராடினால், எல்லா வளங்களும் பெருகும்!

எல்லா தீங்குகளும் போய் நன்மைகள் விளையும் படி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்யும்! செந்நெல் கதிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வயல்வெளிகளில் தேங்கியிருக்கும் நீரில் கயல்மீன்கள் திரியும்! அங்கு வளர்ந்திருக்கும் குவளைப்பூக்களில் புள்ளிகளை உடைய வண்டுகள் தேனை உண்டு அந்த மயக்கத்தில் கண் வளரும்! அருகில் அமர்ந்து பாலால் நிறைந்து பெருகி இருக்கும் மடுக்களைப் பற்றி வாங்கும் போது குடங்கள் நிறைய வள்ளல் பெரும்பசுக்கள் பாலை பொழிந்து நிறைக்கும்! நீங்காத செல்வம் எங்கும் நிறைந்து விளங்கும்!      

Sunday, December 16, 2012

வையத்து வாழ்வீர்காள்!




வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ?! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம்! பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்!
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!


உலகத்தில் வாழ்பவர்களே! நாங்கள் எங்கள் பாவை நோன்பிற்காகச் செய்யப் போகும் செயல்களைக் கேளுங்கள்!

பாற்கடலுள் ஓய்வாகப் படுத்திருக்கும் பரமனின் திருவடிகளைப் பாடுவோம்! நெய் உண்ண மாட்டோம்! பால் உண்ண மாட்டோம்! அதிகாலையில் நீராடுவோம்! கண்களுக்கு மை இட்டு அழகு செய்ய மாட்டோம்! மலர்களைக் கூந்தலில் சூடி முடிய மாட்டோம்! முன்னோர்கள் செய்யாதனவற்றைச் செய்ய மாட்டோம்! தீமை தரும் கோள் சொல்லை சொல்ல மாட்டோம்! (குறளை - கோள் சொல்லுதல்) மாணவர்களுக்கும் (பிரம்மசாரிகளுக்கும்), துறவிகளுக்கும் அவர்கள் வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதார கையால் காட்டித் தருவோம்! நாம் உய்வதற்கு உரிய வழியான திருமால் திருவடிகளை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்போம்!

கேட்க

Saturday, December 15, 2012

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!

நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்?!
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்!
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்!
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்!
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

மார்கழி மாதம் முழுநிலவு நாள் இன்று! நீராட வாருங்கள்! வாருங்களேன் சிறந்த நகைகளை அணிந்தவர்களே! செல்வச் சீர் மல்கும் திருவாய்ப்பாடியின் செல்லச் சிறுமியர்களே! கூரிய வேலைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் நந்தகோபனின் திருக்குமரன், நீண்ட அழகிய கண்களை உடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய திருமேனியும் சிவந்த கண்களும் கொண்டு, சூரியனையும் சந்திரனையும் ஒத்த திருமுகத்தான், நாராயணனே நமக்கே வேண்டியதெல்லாம் தருவான்! உலகத்தவர் புகழ நீராடுவோம்!
http://etemples.net/thiruppavai/tiru01.htm

Sunday, July 22, 2012

ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையள்!



இன்றோ திருவாடிப்பூரம்! எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்! - குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்!

இன்று தானே திருவாடிப்பூரம்?! குறையொன்றும் இல்லாத வாழ்வான வைகுந்த வான்போகத்தை விட இந்த உலகத்தில் தோன்றி எம்மை போன்ற எளியோரை உய்விப்பதே பெருமை என்று தானே அந்த வான்போகத்தை இகழ்ந்து இந்த நன்னாளில் பெரியாழ்வார் திருமகளாராய் எமக்காக ஆண்டாள் இங்கு அவதரித்தாள்?!

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ? மனமே உணர்ந்துப் பார்! ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு!

பெரியாழ்வாரின் பெண்ணாக ஆண்டாள் பிறந்த இந்த திருவாடிப்பூரத்தின் பெருமை வேறு எந்த நாளுக்கு உண்டு? மனமே உணர்ந்து பார்! ஆண்டாளுக்கு ஒப்பாவார் வேறு யாராகிலும் இருந்தால் இந்த நாளுக்கும் ஒப்பு உண்டு!

அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து!

என்றும் எந்த நிலையிலும் இறைவனைச் சார்ந்தே இருப்பது தான் உயிரின் இயல்பு என்று அவனருளாலே உணர்ந்து அவனுக்கே என்று அடியவராய் விளங்கும் ஆழ்வார்களின் குடிக்கு ஒரு குலமகளாக உதித்த, அந்த ஆழ்வார்களின் செயல்களை எல்லாம் விஞ்சி நிற்கும் தன்மை கொண்டவளான, இளமைக்காலத்திலேயே ஞானம், பக்தி போன்றவற்றில் தலைசிறந்து நின்றவளும் ஆன ஆண்டாளைப் பக்தியுடன் தினமும் மகிழ்ந்து வணங்குவாய் மனமே!