Friday, May 04, 2007

சுந்தரத்தோளனின் (கள்ளழகரின்) தசாவதாரக் காட்சிகள்

கள்ளழகரின் சித்திரத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சி இரவு முழுவதும் நிகழும் இந்த தசாவதாரக் காட்சிகள் தான். வைகைக்கரையில் இருக்கும் இராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் பத்து விதமான அவதார அலங்காரங்களில் பவனி வந்து காட்சி தருவார் கள்ளழகர். அதிகாலையில் மோகினி அவதாரம் கொண்டு குலுங்கிக்கொண்டு வரும் பவனியை மட்டுமே இதுவரைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறேன். மற்றத் திருக்கோலங்களையும் தினமலரின் தயவால் வருடாவருடம் கண்டு வருகிறேன். இதோ இந்த வருட தசாவதாரத் திருக்கோலங்களில் சில - தினமலரின் தயவால்.



Thursday, May 03, 2007

திருத்தமிழ் - தமிழில் வார்த்தை விளையாட்டு

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் இதெல்லாம் தெரியும். 'திருத்தமிழ்' தெரியுமா?

மொழி வளர்ச்சிக்காக ஆங்கிலத்தில் இருக்கும் விளையாட்டு 'scrable' எனப்படும் வார்த்தை விளையாட்டு. 26 ஆங்கில எழுத்துக்களையும் வைத்து விதவிதமான வார்த்தைகளை உருவாக்குவது தான் அந்த விளையாட்டு. செம்மொழியான தமிழ் மொழியில் இதுவரை இந்த விளையாட்டு உருவாக்கப்படவில்லை. காரணம் அதில் இருக்கும் 247 எழுத்துக்கள். அத்தனை எழுத்துக்களையும் அச்சிட்டு அதற்காக போர்டு ஒன்றை உருவாக்கி விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதாலேயே. தமிழில் வார்த்தை விளையாட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. நான்கு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, 'திருத்தமிழ்' என்கிற வார்த்தை விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ராஜ்குமார்.



'தமிழில் ஏன் இந்த விளையாட்டு இல்லைன்னு தேட ஆரம்பிச்சது தான் என்னோட இந்த முயற்சிக்கான பிள்ளையார் சுழி. தமிழ்மொழியின் பெரிய பலமே அதன் எழுத்துக்கள் தான். ஆனா வார்த்தை விளையாட்டை உருவாக்குவதில் அது தான் பலவீனமா இருந்தது. ஒற்றைக் கொம்பு, ரெட்டைக் கொம்பு, புள்ளி எனக் குறியீடுகளைப் பயன்படுத்தி வர்ற எழுத்துக்களைச் சுருக்கினா வார்த்தை விளையாட்டைத் தமிழ்ல கொண்டு வந்துடலாம்னு நம்பிக்கை வந்துது. குறியீடுகள் இல்லாம 196 எழுத்துக்களைத் தனியே பிளாஸ்டிக் வில்லைகளில் பிரின்ட் செய்தேன். 86 குறியீடுகளைத் தனி வில்லைகளாக உருவாக்கினேன்.

அப்புறம் ஒரு தமிழ் அகராதியில் இருந்து 80,000 வார்த்தைகளைப் படித்து, எந்தெந்த எழுத்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஒரு சர்வே செய்தேன். குறைவாகப் பயன்படும் எழுத்துக்கு அதிக மதிப்பெண்ணும், அதிகமாகப் பயன்படும் எழுத்துக்கு குறைந்த மதிப்பெண்ணும் கொடுத்தேன்.

இந்த 196 எழுத்துக்களும் தடை இல்லாம சீராகப் பரவணும்னா 440 கட்டங்கள் வேணும். அந்த போர்டையும் ரெடி பண்ணியாச்சு. இப்ப நாலு பேர் இந்த விளையாட்டை விளையாடலாம். 196 அடிப்படை எழுத்துக்களில் 14 எழுத்துக்களையும், குறியீடு எழுத்துக்களில் 7 எழுத்துக்களையும் ஒருவர் பயன்படுத்தணும். இந்த 21 எழுத்துக்களை வெச்சு விதவிதமா வார்த்தைகளை உருவாக்க வேண்டியது தான். இரண்டாவது ஆட்டக்காரர் முதல் ஆட்டக்காரர் உருவாக்கிய வார்த்தைகளில் இருந்தே புதுப்புது வார்த்தைகளை உருவாக்க வேண்டும். அதிகம் பயன்படாத எழுத்துக்கள், குறியீடுகளுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கப்படும். எல்லா எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்ட பிறகு, அதிக மதிப்பெண் வாங்கியவர் வெற்றி பெறுவார்.

இந்த விளையாட்டு மூலமா புதுப்புது தமிழ் வார்த்தைகளைச் சிரமம் இல்லாமல் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். இதைப் பரிசீலிக்கச் சொல்லி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கேன்' என்கிற ராஜ்குமார், 'முதல் உலகத் தமிழ் விளையாட்டுப் போட்டிகள்' என்ற பெயரில் இந்த வார்த்தை விளையாட்டுகளை நடத்தப் போகிறாராம். 'இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் www.thiruthamizh.com என்கிற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்' என்றார்.

நன்றி: ஆனந்த விகடன், 02 மே 2007 இதழ்

***

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு இதில் குறிப்பிட்டிருக்கும் வலைப்பக்கத்திற்குச் சென்றேன். பலவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுப்பெட்டியைப் பெற விரும்புபவர்களுக்கு மேலதிகத் தகவல்கள் இந்தப் பக்கத்தில் இருக்கிறது.

Wednesday, May 02, 2007

கை வை தான் வைகையா?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு இருக்கும் இன்னொரு பெருமை வைகை நதி. கூடல் மாநகரின் பெயர் இலக்கியங்களில் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை முறை வைகை நதியின் பெயரும் வந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமில்லாமல் தற்காலத் திரைப்படப் பாடல்களிலும் வைகையைப் பாடும் பாடல்கள் எத்தனை எத்தனை?!

வைகை நதிக்கு பெயர் வந்ததற்குத் திருவிளையாடல் புராணம் சொல்லும் காரணம் பலருக்குத் தெரிந்திருக்கும். அன்னை மீனாட்சி சிவபெருமானின் பூத கணங்களில் ஒருவரான குண்டோதரனுக்கு (பானை வயிறனுக்கு) விருந்து படைத்த போது அவரது தாகம் தீர்க்க சிவபெருமானின் திருவருளால் உண்டான ஆறே வைகை ஆறு என்று புராணம் சொல்லும். 'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற பெருமானின் ஆணைப்படி குண்டோதரன் கை வைத்த இடத்திலிருந்து பெருகிய ஆறு என்பதால் 'வைகை' என்று பெயர் பெற்றது என்று சொல்வார்கள்.

இராம நாமத்தின் பெருமையைச் சொல்லும் போது நாராயண நாமத்தின் முக்கிய எழுத்தான 'ரா'வும் நமசிவாய நாமத்தின் முக்கிய எழுத்தான 'ம'வும் சேர்ந்தது தான் இராம நாமம் என்று சொல்வார்கள். அதனால் சைவ வைணவ மந்திரங்களின் மொத்த உருவம் இந்தத் தாரக மந்திரமான இராம நாமம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு.

அதே போன்ற பெருமை வைகை ஆற்றிற்கும் உண்டு. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது.

இந்த வைகை நதி சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்தக் காலத்திலும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வதைச் சித்திரைத் திருவிழாவின் போது பார்க்கலாம். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பெருவிழாவைக் கண்டு தரிசித்து மறு நாள் பெருந்தேர் பவனியைக் கண்டு களித்து அப்படியே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருவிழாவையும் கண்டு மக்கள் சைவ வைணவ பேதமின்றி இந்த வைகைக்கரையில் பவனி வருகிறார்கள். திருமண் இட்ட அடியவர்கள் பெரும் விசிறி கொண்டு மீனாட்சித் திருக்கல்யாணத்திலும் பெருந்தேர் விழாவிலும் விசிறுவதையும் திருநீறு அணிந்த அடியவர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து எதிர்சேவை காண்பதையும் இந்த வைகைக்கரையிலே கண்டு மகிழலாம்.

அன்பும் அருளும் மக்கள் நடுவில் பெருகும் வகையில் தான் சுருங்கி தன் மக்கள் தன்னுள் இறங்கித் திருவிழா காணும் படி செய்யும் வைகைத் தாயே உனக்கு ஆயிரம் கோடி வணக்கம்.

Saturday, April 28, 2007

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) - பகுதி 1

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்து மிகவும் பிடித்தது.

நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)
ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)
ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)
ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)

1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:

இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக் குறிக்கோளை அடைய முடியும்?

சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான் வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப் பேசலாம்.

குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள் தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர் சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான் வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக் குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது. அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?

ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக் குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா, அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால் எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும் தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை முடித்துவிடுவார்கள்.

அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக இடுகிறேன்.

இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும் மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, April 22, 2007

சித்திரை திருவாதிரை

திருவாதிரைத் திருநாள் என்று மார்கழியில் வரும் திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். அன்று தான் ஆடல் வல்லானின் அருந்தரிசனம் தில்லைமாநகரில் கிடைக்கிறது. சித்திரையில் வரும் திருவாதிரை நாளும் சிறந்த நாள். இந்து மதத்தின் முப்பெரும் ஆசாரியர்களில் முதல் இருவரும் அவதரித்தத் திருநாள் இது. முதல் ஆசாரியரும் அத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும் இரண்டாவது ஆசாரியரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீ இராமானுஜரும் தோன்றிய புனித நாள் இது.



விதிதாகில சாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 1)

அனைத்து சாஸ்திரங்களின் நுண்பொருட்கள் என்னும் பெருங்கடலை நன்கு அறிந்தவரே! மிகப்பெரும் உபநிஷதங்கள் என்னும் பெரும்நிதியை வெளிப்படுத்தியவரே! என்னுடைய இதயத்தில் குற்றமற்ற உங்கள் திருவடிகளை என்றும் நினைத்திருக்கிறேன். ஆதி சங்கர குருவே. நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

கருணாவருணாலய பாலயமாம்
பவ சாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 2)

கருணைக்கடலே! என்னைக் காப்பாற்றுங்கள்! சம்சாரக்கடலின் வெப்பத்தால் என் இதயம் துவண்டு போய் உள்ளது. அனைத்துத் தத்துவங்களையும் அறிந்து கொள்ளும் படி செய்யுங்கள்! ஆதி சங்கர குருவே! நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

இந்த தோடகாஷ்டகம் முழுப்பாடலையும் திருமதி. எம்.எஸ். அவர்களின் குரலில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

***



யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ்ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
(தனியன்)

அச்சுதனின் திருவடித் தாமரைகளை என்றும் தம் திருமனத்தில் நிலையாகக் கொண்டிருப்பவரும் அந்தத் திருவடித் தாமரைகளைத் தவிர்த்து மற்றிருக்கும் எல்லாவற்றையும் புல்லாக மதிப்பவரும் அடியேனின் ஆசாரியனும் அனைத்து நற்குணங்கள் நிரம்பியவரும் கருணைக்கடலும் ஆன இராமானுஜரின் திருவடிகளுக்கே அடைக்கலமாக என்னை அளிக்கிறேன்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (இராமானுஜ நூற்றந்தாதி 1)


தாமரைப்பூவில் வாழும் திருமகள் என்றும் நிலையாகப் பொருந்திய மார்பினை உடைய திருமாலவனின் புகழ்களை பல்லாயிரம் பாக்களால் பாடிய மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் - பல கலைகளும் வல்லவர்கள் என்றும் மண்ணில் நிலைத்திருக்கும் வண்ணம் தோன்றிய இராமானுஜரின் திருவடித் தாமரைகளில் நாம் என்றும் நிலையாக இருந்து நல்வாழ்வு பெற நெஞ்சமே நீயும் நானுமாக அவர் திருநாமங்களைச் சொல்லுவோம்.

Wednesday, April 11, 2007

முருகும் குழகும் அழகு

அழகினைப் பற்றி எழுத தம்பி இராமச்சந்திரமூர்த்தியும் அண்ணன் கோவி.கண்ணனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பாருங்கள் பொருத்தத்தை. அழகு என்றாலே நினைவிற்கு வருபவர்கள் முருகனும், கண்ணனும், இராமனும். முருகு என்றாலே அழகு என்று பொருள். குழைவான அழகிற்கு கண்ணன். கம்பீரமான அழகிற்கு இராமன். அழகன் முருகன் பெயர் கொண்ட அடியவனை கம்பீர அழகன் இராமனும் குழகன் கண்ணனும் அழைத்திருக்கிறார்கள். நான் இராகவனையும் இரவிசங்கரையும் சங்கரகுமாரையும் அழைக்கிறேன்.

அழகில்லாத இடமும் உண்டோ? கடினமான சூழலிலும் எங்கோ மறைந்திருக்கும் ஆனால் நம் கண்ணெதிரிலேயே இருக்கும் அழகினைக் கண்டு கொண்டால் அந்தக் கடினச் சூழலைத் தாண்டுவது எளிதாகுமே.

மேகமில்லா வானம் அழகு. வெண் முகில்களுடன் கூடிய வானமும் அழகு. கார் மேகங்களைக் கண்டால் மயிலாருக்கு கோலாகலம்.

கொளுத்தும் வெயிலில் சோலை அழகு.

மழை பொழிந்த பின் மாலை வெயிலில் பச்சை இலைகளுடன் கூடிய மரங்கள் அழகு.

உடலை முழுதும் மூடிய பின்னும் தங்கள் அழகு நன்கு தெரியும் வண்ணம் கண்ணைக் கவரும் (கவர்ச்சிகரமான இல்லை) ஆடை அணியும் இளம் பெண்கள் அழகு.

நேர்த்தியான ஆடை அணிந்த ஆடவர் அழகு.

நிறைய கேள்விகள் கேட்டு அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட குழந்தைகள் அழகு.

அவர்களிடம் நாம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்ல அவர்கள் அறிந்தவரை விடை சொல்லிக் கொண்டே வரும் குழந்தைகள் அழகு.

கூட்டமாகப் பறந்து செல்லும் பறவைகள் அழகு.

மலர்ந்து மணம் வீசும் வண்ண மலர்கள் ஒவ்வொன்றும் அழகு.

சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.

மழலை அழகு.

மழலை மாறிய பின் மழலையை நினைவில் வைத்திருந்து 'நான் முன்பு அப்படிச் சொல்வேன். இப்போது சரியாகச் சொல்கிறேன்' என்று குழந்தைகள் சொல்லும் போது அழகு.

அன்பும் பண்பும் நிறைந்தவர் அனைவரும் அழகு.

Saturday, March 31, 2007

பங்குனி உத்திரத் திருநாள்

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.


(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***


தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.