Sunday, May 03, 2009

மாதமிழில் சொல்லேதும் இல்லை!

ஏக்கம் கொண்டேனடி உன் மேல்!
இணைந்திருப்பது நாம் எக்காலம்?
தூக்கம் இல்லாமல் உழல்கின்றேன்!
தாங்கமுடியவில்லை என் மோகம்!

பார்த்ததுண்டு எத்தனையோ பெண்கள்!
பார்த்ததில்லை உன் போலே எங்கும்!
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கண்கள்
பெற்ற உன்னைப் பார்க்கிறேனே எங்கும்!

உயர்வான தமிழ்ச்சொல்லைக் கொண்டு
உன்னழகைப் போற்றிடவே எண்ணம்!
மயர்வுற்று நிற்கின்றேன் இன்று
மாதமிழில் சொல்லேதும் இல்லை!

கண் கொண்ட பயன் அன்று பெற்றேன்
கண்டு கொண்டேன் கன்னி உனை அன்று!
பெண் கொண்ட பேரழகை எல்லாம்
பருகி உளம் நிறைவு பெறல் என்று?

கொண்டேனோ நான் உன் மேல் காதல்
கொதிக்கிறதே தினமும் என் தேகம்!
பெண் உந்தன் மேனி தனைக் கண்டால்
பெற்றிடுவேன் நான் ராசபோகம்!


***

மாமாவும் அத்தையும் நாளை இங்கே வருகிறார்கள். ஆறு மாத காலம் இங்கே தங்குவார்கள். அவர்களுக்காக ஒரு அறையை ஒழித்துக் கொடுப்பதற்காக அந்த அறையில் இருந்ததை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது 28 மே 1998ல் எழுதிய இந்தக் கவிதை கண்ணில் பட்டது. அட நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டு இங்கே பதிந்து வைக்கிறேன். :-)

8 comments:

பழமைபேசி said...

//அட நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டு இங்கே பதிந்து வைக்கிறேன். :-) //

மாமா அத்தை கண்ணில்படத்தானே? ச்சும்மா, சொல்லுங்க!!!

குமரன் (Kumaran) said...

என்னோட பதிவுகளை எல்லாம் எங்க குடும்பத்துல யாருமே படிக்க மாட்டாங்க பழமைபேசியாரே. அங்கே செல்லுபடியாகாததைத் தானே இங்கே எழுதி மனதை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆன்மிகத்திலிருந்து எல்லாமும். :-)

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்மிளிர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பழமைபேசி said...
மாமா அத்தை கண்ணில்படத்தானே? ச்சும்மா, சொல்லுங்க!!!//

அட, நீங்க வேற பழமைபேசி!
மாமா அத்தை கண்ணில் படக்கூடாதே-ன்னு தான் அந்த அறையில் கிடந்ததை அவசரம் அவசரமா அப்புறப்படுத்தறாரு குமரன்! :)

//கொதிக்கிறதே தினமும் என் தேகம்!
பெற்றிடுவேன் நான் ராசபோகம்//

:)))
ஜிரா, எங்கே இருந்தாலும் உடனே கூடல் மேடைக்கு வாங்க!

குமரன் (Kumaran) said...

அத்தையும் மாமாவும் வந்தாச்சு இரவி. ஆனா இராகவன் தான் இந்தப் பக்கம் வர்றமாதிரி தெரியலை. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அத்தையும் மாமாவும் வந்தாச்சு இரவி.//

நல்வரவு! :)

//ஆனா இராகவன் தான் இந்தப் பக்கம் வர்றமாதிரி தெரியலை. :-)//

இல்லையே! பந்தல் பக்கம் வராறே! நீங்க முருகப்பெருமான் அல்லது சில்க் மேல புதிரா புனிதமா போடுங்க! ஓடியாறாரு பாருங்க! :)

Kavinaya said...

என்ன எழிலான கவிதை!