Friday, January 30, 2009

நான்மணிக்கடிகையில் நாரணன்

சங்க இலக்கியத்தில் ஒரு வகையான பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் 'நான்மணிக்கடிகை' என்றொரு நூல் இருக்கிறது. விளம்பிநாகனார் என்ற புலவர் எழுதியது. கடிகை என்றால் கல்வி கற்பிக்கப்படும் இடம்; பல்கலைக்கழகம். ஒரு கடிகையில் எப்படி பலவிதமான கல்விகள் கற்பிக்கப்படுகின்றனவோ அதே போல் இந்நூலில் பலவிதமான அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணிகள். அப்படிப்பட்ட மணியாக கருத்துகள் நான்கினை ஒவ்வொருப் பாடலிலும் சொல்லுவதால் இந்த நூலுக்கு 'நான்மணிக்கடிகை' என்று பெயர்.

இந்த நூலின் ஆசிரியர் மணிவண்ணனை வணங்குபவர் போலும். அதனால் தான் நூலுக்கும் 'நான்மணிக்கடிகை' என்று பெயர் வைத்து விட்டு முதல் இரண்டு பாடல்களால் மணிவண்ணன் மாயவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். கடவுள் வாழ்த்தாக மணிவண்ணனைப் பற்றிய நன்னான்கு கருத்துகளைச் சொல்லும் முதல் இரண்டு பாடல்களை இன்று பார்ப்போம்.

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும் நிறம்.

மாயோனுக்கு அடையாளமாக நான்கு செய்திகளைச் சொல்கிறார் புலவர். மாயவன் திருவுருவை மனத்திருத்தித் தியானிக்க நினைப்பவர்களுக்கு உதவும் பாடல். மாயோன் என்று தொல்காப்பியத்தால் சொல்லப்பட்டவனும் மாயவன் என்று பிற்கால சமய நூற்களால் சொல்லப்பட்டவனும் ஒரே தெய்வம் இல்லை என்று சொல்லித் திரிபவர்களுக்குப் பதில் சொல்வதைப் போல இந்த சங்க இலக்கிய நூலிலேயே 'மாயவன்' என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்.

அவன் இல்லாத இடமே இல்லை; அவன் இல்லாத காலமே இல்லை என்னும் படி எங்கும் எப்போதும் நிலையாக இருக்கும் (மன்னும்) மாயவனின் ஒளி பொருந்திய திருமுகத்தை வானத்தில் தெரியும் நிலா ஒத்திருக்கும் என்கிறார் முதல் வரியில்.

அடுத்து அவனது சுடர் விடும் சக்கரப்படையை போல் இருக்கின்றது வானத்தில் சுடர் விட்டுத் திகழும் ஞாயிறு என்கிறார்.

வெகுகாலமாக இருக்கும் நீர்நிலையில் இருக்கும் தாமரைத் தண்டுகளில் முளைத்து வரும் தாமரை மலர் அவனது திருக்கண்களை ஒத்திருக்கும் என்கிறார்.

காயாம்பூ என்னும் பூவைப்பு அன்றே அலர்ந்திருந்தால் அந்தப் புதிய பூ அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும் என்கிறார்.

நிலவைப் போன்ற திருமுகம், ஞாயிற்றைப் போன்ற திருச்சக்கரம், புதுமலர்த்தாமரையைப் போன்ற திருக்கண்கள், பூவைப்புதுமலர் போன்ற திருநிறம் என்றே மற்ற புலவர்கள் உவமைகளைக் கூற இவரோ அதனை மாற்றி நிலவு திருமுகத்தை ஒக்கும், ஞாயிறு சக்கரத்தை ஒக்கும், புதிய தாமரை திருக்கண்களை ஒக்கும், பூவைப்புதுமலர் நிறத்தை ஒக்கும் என்று 'மாறிய உவமை'களைக் காட்டுகிறார்.

மதி மாயவன் திருமுகத்தை ஒக்கும் என்பதைப் படிக்கும் போது 'கதிர்மதியம் போல் முகத்தான்' என்று வரும் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

இங்கே ஞாயிறு சக்கரத்தை ஒத்திருக்கும் என்று படிக்கும் போது சிலப்பதிகாரத்தில் 'ஞாயிறு போற்றுதும்' என்று சொல்லி நூலை இளங்கோவடிகள் தொடங்கும் போது அங்கும் 'திகிரி போல்' என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.

இந்தப் பாடல் சொல்வதைப் போலவே வடமொழி வேதங்களும் பல முறை இவனுடைய திருக்கண்கள் தாமரையைப் போன்று உள்ளன என்று சொல்வது நினைவிற்கு வருகின்றது. 'ஞாயிற்றின் கதிரால் விரியும் தாமரையைப் போன்ற திருக்கண்கள் உடையவன் இறைவன்' என்று சொல்லும் வரிகளுக்கு சொல்லப்பட்ட தவறான உரையைக் கேட்டுத் தானே இராமானுஜர் கண்ணீர் வடித்தார். அங்கே ஞாயிறும் தாமரையும் ஒரே வரியில் சொல்லப்பட்டதைப் போல் இங்கே ஒரே பாடலில் ஞாயிறும் தாமரையும் அடுத்து அடுத்து வருகின்றன.

அடுத்த பாடல் 'மாயோன் எனப்பட்டவன் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணன் இல்லை' என்று மறுப்பவர்களுக்கான பதிலாக அமைகிறது.

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்கால் கடந்தான் முழுநிலம்; அக்காலத்து
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன்.

இங்கே வாமன திருவிக்கிரம அவதாரத்தினை ஒரு அடியில் சொல்லிவிட்டு மற்ற மூன்று அடிகளிலும் கோகுலத்துக் கண்ணனின் திருவிளையாடல்கள் சொல்லப்படுகின்றன.


மண்ணைத் தின்றான் என்று கேள்விப்பட்டு வாயைத் திறந்து காட்டச் சொன்ன அசோதைக்கு தன் திருவயிற்றில் எல்லா உலகங்களையும் அவன் காட்டினான் என்பதால் 'படியை (உலகத்தை) மடி அகத்து இட்டான்' என்று பாடுகிறார் புலவர்.

முதல் அடியினால் நடுவுலகத்தையும் இரண்டாம் அடியினால் மேல் உலகங்களையும் மூன்றாவது அடியினால் மாவலியை பாதாள உலகத்திற்கு அதிபதியாக்கி கீழ் உலகங்களையும் அளந்தவன் வாமன திரிவிக்கிரமன் என்பதால் 'அடியினால் முக்கால் கடந்தான் முழுநிலம்' என்கிறார் புலவர்.

தனக்கென இடப்படும் படையலைத் தடுத்து கண்ணனே அதனை மலையுருவில் உண்டான் என்று இந்திரன் வெகுண்டு பெருமழை பொழிவிக்க அப்பொழுது பசுக்களின் கூட்டத்தைக் காக்க கோவர்த்தனமென்னும் குன்றை எடுத்தான் கோவிந்தன் என்பதால் 'அப்பொழுது ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்' என்றார் புலவர்.

'குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்'

என்று தமிழ்வேதமாம் திருவாய்மொழியும் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இருமணிகளைச் சொல்வது நினைவிற்கு வருகிறது.

பாணாசுரனின் செல்வ மகள் உஷை கண்ணனின் பேரன் அநிருத்தனை விரும்பி தன் தோழியின் மூலமாகக் கவர்ந்து சென்ற போது அவனை மீட்டுக் கொண்டு வர பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துணித்து அவனது நெருப்புக் கோட்டையை அழித்தான் அச்சுதன் என்பதை 'சோவின் அருமை அழித்த மகன்' என்பதால் சொல்கிறார் புலவர். சோவின் அருமை என்றால் நெருப்பு போல் சுடர்விடும் பொன் கோட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

சிலப்பதிகாரமும் 'மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்' பாடுகிறது. அங்கே சொல்லப்படும் சோ அரண் தொல்லிலங்கையின் பொற்கோட்டை.

இப்படி மாயோன் சீர் தொன்மையான தொல்காப்பியத்திலிருந்து நிறைய சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது.

12 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நான்மணிக்கடிகை பற்றிய முன்னுரைக்கு நன்றி.

ஆதவா said...

ஆஹா... அழகான பதிவு... இலக்கியமும் இறைமையும் இயைந்து உண்டாக்கும் புதுமொழியிது.

கடிகைகளை பாடபுத்தகத்தில் படித்ததோடு சரி, அப்பொழுதெல்லாம் கடினமாக இருந்தது,,இப்பொழுதோ, விரும்பிப் படிக்கவேண்டுமென்ற மனம் துடிக்கிறது.

நல்ல பதிவு.. தொடர்ந்து எழுதுங்கள்.

sury siva said...

தங்கள் தமிழ்த்தொண்டும்
இறைத்தொண்டும்
மெய் சிலிர்க்கச் செய்கின்றன.

வளரட்டும் மேன்மேலும் !

சுப்பு ரத்தினம்.
(தற்சமயம் ஸ்டாம்ஃபோர்டு, ஸி.டி.)
http://vazhvuneri.blogspot.com

குமரன் (Kumaran) said...

இது நாலாவது பகுதி. முதல் மூன்று பகுதிகளையும் படிச்சீங்களா மௌலி? கவிக்காவும் நிறைய அம்மன் பாட்டுகளை எழுதிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. அந்தப் பாட்டுங்களையும் படிங்க.

குமரன் (Kumaran) said...

வாங்க ஆதவன். இந்த அறிவில்லாதவன் பதிவிற்கு அறிவில் ஆதவன் வந்ததற்கு மகிழ்ச்சி. :-)

படித்துப் பாராட்டியதற்கு நன்றி. இந்த இடுகை பிடித்ததென்றால் 'இலக்கியம்', 'இலக்கியத்தில் இறை' என்ற வகைகளைப் படித்துப் பாருங்கள் - பிடிக்கலாம். முடிந்த வரை எளிய தமிழில் எழுதியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி சுப்புரத்தினம் ஐயா. ஸ்டாம்ஃபோர்டு எப்படி இருக்கிறது? நிறைய குளிருதா? அங்கே தானே வேந்தன் அரசு ஐயாவும் இருக்கிறார். தெரியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கடிகையில் சேர விண்ணப்பம் போட்டுட்டேன்! மறுக்காமல் அடியேன் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, கடிகையில் சேர்த்துக் கொள்ளுங்கள் குமரன்!

//காயாம்பூ என்னும் பூவைப்பு//

கொன்றை மலர் பதிவுகள் போல், என்றேனும் ஒரு நாள் பூவைப் பூவண்ணா பூவைப் பற்றியும் பதிவிடுங்கள் அண்ணா!

//சோவின்
அருமை அழித்த மகன்//

சோ=கோட்டை? (இந்தக் காலத்து சோ இல்லையே! அவரும் கோட்டை பற்றிப் பேசுவாரே!:))

//ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்//

ஆன்+நிரையா?
ஆ+நிரையா??

குமரன் (Kumaran) said...

கடிகையின் தலைவரே நீங்கள் தான் இரவி. தலைவர் தான் மற்றவர்களுக்கு அனுமதி தர வேண்டும். :-)

கொன்றை மலர்ப்பதிவுகளும் இன்னும் இடவில்லை; பூவைப்பூப் பதிவுகளும் இன்னும் இடவில்லை. கடம்ப மலர்ப் பதிவுகள் தான் இட்ட நினைவு. அதனைத் தானே சொல்கிறீர்கள்? கொன்றை, பூவைப்பூ இரண்டையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். யாருக்கு இதனை எழுத முதலில் வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் எழுதலாம்.

சோ என்றால் நெருப்பு, பொன் என்ற பொருட்களைத் தந்திருக்கிறார்கள் இரவி. அருமை, அரண் என்றால் தான் கோட்டை.

ஆவின் நிரை = ஆன் நிரை = ஆநிரை = பசுக்களின் கூட்டம் = பசுக்கூட்டம்.

Kavinaya said...

ரொம்ப அழகான பதிவு. படிக்கப் படிக்கச் சுவை. மிக்க நன்றி குமரா.

(நான்மணிக்கடிகை பத்தி சன் டி.வி.ல சாலமன் பாப்பையா அவர்கள் சொன்னதை அப்பப்ப கேட்டிருக்கேன்)

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா. பாப்பையா ஐயா பேசுவதை வார இறுதியில் எப்போதாவது தப்பித் தவறி காலையிலேயே எழுந்திருக்கும் போது கேட்டிருக்கிறேன். :-)

Unknown said...

அடியேன்,


"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர்' பாடுகிறது. அங்கே சொல்லப்படும் சோ அரண் தொல்லிலங்கையின் பொற்கோட்டை."


"சோ அரண்" என்கின்றவிடத்தில் பொற்கோட்டை என்று கொண்டால் "போர் மடிய" என்பது பொருள் தரா! பொற்கோட்டை போர் மடியாது. இங்கு "சோ அரன்" என்பதே பாடம். சோ அரன் என்பது அசுரன்(அரன்) தலைவன்(சோ) அதாவது இராவணனையே குறிக்கும்.


"ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன்"

இவ்விடத்தில் சோ என்பது ஆயர்களின் தலைவனான இந்திரனைக் குறிக்கும். குன்று எடுத்தான் - எதற்காக, இந்திரனின் கர்வம் அடங்க, அதாவது சோவின் அருமை அழிக்க...


தவறேதும் இருப்பின், மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

ஐயா,

கோ என்றால் தலைவன் என்று பொருள். சோ என்றால் தலைவன் என்ற பொருளை இது வரை படித்ததில்லை. தேடியும் பார்த்தேன். கிடைக்கவில்லை.

சோ + அரன் என்று பிரித்துப் பார்த்தாலும் அரன் என்பதற்கு சிவன் என்ற பொருள் தான் சொல்லியிருக்கிறதே ஒழிய அசுரன் என்ற பொருளைப் படித்ததே இல்லை. அது மட்டும் இல்லாமல் சோவரண் என்றே எல்லா இடத்திலும் இருக்கிறது; சோவரன் என்று பாடவேறுபாட்டாகவோ எழுத்துப்பிழையாகவோ கூட காணக் கிடைக்கவில்லை.

சோவின் அருமை என்னும் இடத்திலும் சோ = தலைவ = இந்திரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை.