Monday, January 21, 2008

புல்லாகிப் பூண்டாகி - மாதவிப் பந்தலார் & கௌசிகர் விமர்சனங்கள்

குமரனைப் போட்டுத் தாக்குவோம்! - புல்லாகிப் பூண்டாகி கதை விமர்சனம்!

கண்ணபிரான் காலடி பெற்ற "அந்தக்" கல்லு பேசறேன் மக்களே! எல்லாரும் நலமா? பொங்"கல்" எப்படிப் போச்சுது? நம்ம குமரன் தன்னோட புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டிருந்தாரு! நான் தானே கதையின் ஹீரோ! என்னையே இப்படிக் கேட்டாருன்னா, நான் எங்க போவேன்?

என் போன்ற கல்லுக்கு என்ன தெரியும் பெருசா? எண்ணும் எழுத்தும் அறியாத மண்ணு தானே கெட்டிப்பட்டு கல்லாக் கெடந்தது கெளரவர் சபையில்? ஏதோ கண்ணபிரான் கால் பட்டதால், அவர் அங்கே இடறி விழுந்தாரோ இல்லையோ, நான் இடறி விழுந்தேன்! எதுல-ன்னு கேக்கறீங்களா? அதாங்க பிறவிச் சுழலில்!

போச்சுடா, கண்ணன் கால்பட்டா, பிறவிச் சுழலில் மாட்டிக்கனும் போல இருக்கே! :-)
வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை - எல்லாரும் என்னா சொல்றாங்க? இறைவன் திருவடிகளைப் பற்றினாத் தான் வீடுபேறு-ன்னு சொல்றாங்க!
இங்க என்னடான்னா, இறைவன் திருவடி பட்டதால் பிறவிச் சுழற்சி வந்துடிச்சி-ன்னு நம்ம குமரன் சொல்றாரு!
அப்ப வள்ளுவர் சொல்றது உண்மையா? இல்லை குமரன் சொல்றது உண்மையா? - என்னமோ போங்க! அவரையே கேளுங்க! :-)

சும்மா ஒரு மூலையில் சிவனே-ன்னு கிடந்த என்னை, இந்தக் குமரனும், கண்ணனும் இப்படிப் பிறவிச் சுழலுக்குள் மாட்டி வுட்டுட்டாங்களே! இது அடுக்குமா? இதைச் சும்மா விடப் போறதில்ல! அதான் மரபுப் படி விமர்சனமா இல்லாம, உங்க கிட்ட நேரடியாவே பேசிடலாம்-னு நினைச்சிட்டேன்!
கல்லு பேசுமான்னு கேக்கறீங்களா? நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமே! பழிக்குப் பழி! வாங்க விமர்சனத்துல குமரனைப் போட்டுத் தாக்கிருவோம்! :-)


--------------------------------------------------------------------------------

நினைத்தாலே முக்தி தரும்-னு சொல்லுவாய்ங்க! அந்தத் திருவண்ணாமலையில் தொடங்குது கதை!
இரண்டு நண்பர்கள், கல்லூரி கலாட்டா, பக்தி வேடங்கள், பிரிவு, மீண்டும் சந்திப்பு என்று இயல்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து தான் கதையை ஆரம்பிக்கிறார். நண்பர்களான கந்தன் (எ) மோகன், கேசவன் இருவரின் குணச் சித்திரங்களையும் இயல்பாகப் படைத்துள்ளார்.

//தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன்//
- இது போல பலவற்றைச் சொல்லலாம்! அன்றாட வாழ்விலும் நண்பர்களுக்கிடையே இது மாதிரி சீன் போடறது என்பது சுவையான ஒன்று! ஆனால் கதை ஏதோ நண்பர்களைச் சுற்றித் தான் போகப் போகுது-ன்னு நினைக்கும் போது, வச்சாருங்க பாருங்க ஆப்பு!

கதை திடீரென்று களம் மாறுது!
திருவண்ணாமலை ஆலயம், லிங்கோத்பவர், கிரிவலம், கம்பத்து இளையனார்-னு வரிசையா ஒரு நாலு தொடர் முழுவதும் ஆலய தரிசனம், தல புராணம்-னு கொண்டு போயிட்டாரு! கதையுடன் அந்தப் பகுதிகள் எல்லாம் இயல்பா ஒட்டுச்சா?
அதை வாசகர்கள் தான் சொல்லனும்! என்னைக் கேட்டா ஒட்டலை-ன்னு தான் சொல்வேன்!

அப்போது கதைக்கு வந்த பின்னூட்டங்கள் பலவற்றில், மக்கள் எல்லாரும், "என்ன சொல்ல வரீங்க, என்ன சொல்ல வரீங்க"-ன்னு குமரனைக் கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க!

கதையின் பெயர் "புல்லாகிப் பூண்டாகி".
பொதுவாகக் கதையின் பெயர், ஓரளவுக்குக் கதை ஓட்டத்தைக் கோடிட்டுக் காட்டி விடும்! ஆனால் இந்தக் கதையில், இடைப்பட்ட சில அத்தியாயங்கள் மக்கள் பலருக்குக் குழப்பம் விளைவித்தது என்னவோ உண்மை தான்!
இது வேண்டுமென்றே குமரன் செய்த உத்தியா, இல்லை தானா அமைந்து விட்டதா-ன்னு தெரியலை!
ஏன் சொல்றேன்னா, நல்லாக் குழப்பிய பின் வரும் விசாரனையும் தெளிவும் தான், ரொம்ப நாள் நிக்கும்! :-)

இது மாதிரி பல தேடல்கள் திருவண்ணாமலையில் நடந்தேறியுள்ளன. ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், சேஷாத்ரி சுவாமிகள், மறைந்த காஞ்சிப் பெரியவர்ன்னு பல மகான்களின் ஆன்ம வாழ்வு திருவண்ணாமலையைச் சுற்றித் தான் அமைந்தது! அதைக் கதாசிரியர் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்! பாராட்டுக்கள்!!

--------------------------------------------------------------------------------

சரி...ஒன்னுமே புரியாம, ஆலய தரிசனம் பண்ணிட்டு மலைக்கு மேல வந்தா... தாத்தாவின் அடுக்கடுக்கு கேள்விகள்! அதில் விறுவிறுப்பு கூடிப் போனது என்னவோ நிஜம்!
இங்கு தான் கதையின் ஓட்டம் எப்படி-ன்னு கொஞ்சம் பிடிபட ஆரம்பிச்சுது! அப்போது கூட சில பேர் "ஒன்னுமே புரியல உலகத்திலே"-ன்னு பாட்டு பாடிக்கிட்டுத் தான் இருந்தாங்க! :-)

ஆன்மீகத்தில் இக்காலத் தலைமுறையின் கேள்விகளை குமரன் நன்கு முன் வைத்துள்ளார், தாத்தாவின் கேள்விகள் மூலமாக! சாம்பிளுக்கு இதோ:
1. "அடியார்ன்னா யாரு?"
2. "பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"
3. "இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" - மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.
4. ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen.
The control is with you. You are the one who will decide the choice you want to make."

குமரன் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே, திடீர் திடீர்-னு பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாரு! :-)
இந்தக் கதையில் பல இடங்களில் திருவெம்பாவை, சிலப்பதிகாரம், அன்னமாச்சார்யர், ஜயதேவர் பாட்டை எல்லாம் இடையிடையே கொடுத்துள்ளாரு! தெலுங்குப் பாட்டுக்குப் பொருள் தெரியலைன்னாலும் பாட்டை அனுபவிச்சிக் கேட்டுக்கிட்டு இருந்தேனா?.....
திடீர்-னு பார்த்தா கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிட்டாரு! அதாங்க, ப்ளாஷ்பேக்!

அஸ்தினாபுரம் சபையில், கண்ணன் உள்ளே வரும் காட்சியை எழுதும் போது, கர்ணன் படம் பாத்துக்கிட்டே எழுதினாரான்னா தெரியாது! ஆனா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் புட்டு புட்டு வச்சிருக்காரு! இருக்காதா பின்னே...என் கதையை இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறாரு!

--------------------------------------------------------------------------------

அடுத்த பதிவுல கடம்ப மரம்! பழனி மலை! போகர் சித்தர்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல பருந்து! கருடன்! தஞ்சைக் கோவில்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல நரசிம்ம தாசன்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல ஜகன்மோகன் - அப்ப நான் எங்கே போனேன்?
என்னய்யா கல்லு தானே ஹீரோ? சம்பந்தா சம்பந்தமே இல்லாம கதையில கண்ட பேரும் வராங்களே! -ன்னு மக்கள் புலம்புகிறார்கள்! "புல்லாகிப் பூண்டாகி" -ன்னு கதையின் தலைப்பை மறந்து போனார்கள்!

ஆனா அடுத்த பதிவுல தாத்தா வந்து அத்தனையும் கோர்த்து விட்டுட்டாரு! பல பேருக்கு அப்பத் தான் வெளங்குது! ஆகா அத்தனையும் முற்பிறவிகளா?
கதையில் கூட நம்மால ஒரு சாதாரண விஷயத்தைக் கோர்க்க முடியலையே!
நாம எப்படி நம்ம முற்பிறவிகளை எல்லாம் ஒன்னா கோர்க்கப் போகிறோம்?
- ஹிஹி! இந்தச் சிந்தனையைத் தான் கதை எனக்குத் தூண்டி விட்டது!

கதையை முடித்த விதமும் அருமை! முடிக்காமல் முடிப்பது-ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி!
இறந்து போன தாத்தாவை முதலில் அவன் பார்க்க, பின்னர் இவனும் பார்க்கிறான்! இது என்ன மாயையா? இல்லை வாசகர்களைப் பயமுறுத்த குமரன் கையாண்ட டெக்னிக்கா?
இதுக்கு விளக்கம் எல்லாம் ஒன்னுமே கொடுக்காம...கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கணக்கா கதை படீரென்று முடிந்ததே சிறப்பு!

--------------------------------------------------------------------------------

பூக்கள்:
1. கதையில் படங்களும் பாடல்களும் தேர்வு செய்த விதம் நன்று!
2. அதே போல் மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் - கல், மரம், பறவை, மனிதர் - இந்த நான்கு பிறவிகளை மட்டுமே தொட்டுச் சென்றதும் நல்லது தான்! பரிமாணத்துக்குப் பரிமாணமும் ஆச்சு! சுவை குன்றாமலும் ஆச்சு!

3. ஆங்காங்கே ஆன்மீகக் குறிப்புகள் - நிர்விகல்ப சமாதி, பஞ்சகோசம்-ன்னு சொல்லுவது, கொஞ்சம் அடிமட்ட வாசகனைப் பயமுறுத்துவது போல் தெரியும்! ஆனால் அதைத் தைரியமாகத் தான் தொட்டுச் சென்றுள்ளார் குமரன்!
4. புராணம் = புரா+நவம் = பழசு+புதுசு என்று சொல் ஆராய்ச்சிகளும் கதையில் நடுநடுவே சொல்லியது இன்னொரு சிறப்பு. அவர் வாசிப்பு அனுபவத்தை நமக்கும் கொட்டிக் கொடுத்துள்ளார்! நன்றி குமரன்!

கற்கள்: (அட, கல்லு விமர்சனம் செய்யுதுன்னா, கல்லும் வீசத் தானே செய்வாங்க! :-)
1. கதையில் இன்னும் உரையாடல்கள் வேண்டும் குமரன்! இல்லையென்றால் ஆன்மீகச் செய்திக்கோர்வை ஆகி விடும் அபாயம் உண்டு! தாத்தா-கந்தன் உரையாடல் தான் கதையின் முக்கிய கட்டம்! அங்கு உரையாடல்கள் இருந்தன! ஆனால் துவக்கத்தில் ஆலய தரிசனமாகப் போய்விட்ட படியால், உரையாடல்கள் குறைந்த துவக்கமாகத் தான் இருந்தது.

2. அதே போல் ஆங்காங்கு மகான்களைக் (சைதன்யர், இராமகிருஷ்ணர், கருவூரார்) காட்டிய நீங்கள், இவர்கள் நம்மிடம் பேசக் கூடிய வாய்ப்பை விட்டுட்டீங்க.

3. கதையின் இணைப்பைக் கொஞ்சம் முன்னரே பூடகமாகவாச்சும் சொல்லி இருக்கலாம்! இதனால் கதையின் ஓட்டம் பல பேருக்கு முதலிலேயே புரிந்திருக்கும்! தனித்தனிக் கதையா இருக்கேன்னு ஒன்னும் புரியாமல், (குமரனை அறியாத) சில வாசகர்கள், மீண்டும் வராமல் போகும் அபாயம் உண்டல்லவா? - ஒட்டு மொத்தத்தையும் பிளாஷ்பேக்காக கொடுத்ததால் தான் இப்படி ஆனது!

4. ஆலய வர்ணனைகள், பிரகார விளக்கங்கள் என்று கதையின் ஆழத்தை நீர்த்துப் போகச் செய்திருக்க வேண்டாம்! நாவல், புதினம் என்றால் ஓக்கே! ஆனால் இது சிறிய தொடர் அல்லவா?

5. காலடிபட்டதால் பிறவிச் சுழற்சி என்பது மிகவும் சிக்கலான உதாரணமாகப் போய்விட்டது! இறைவன் காலடி பட்டுச் சாபம் நீங்கியவர்கள் பல பேர் உள்ளார்கள். அதற்கு எதிர் தோற்றம் போல் உருவாகி விட்டது! - இதை வேறு மாதிரி கையாண்டு (காலாண்டு) இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து!
--------------------------------------------------------------------------------

பொதுவா ஆன்மீகத் தேடல்கள் பற்றிய விஷயங்களில் ஆத்திகர், நாத்திகர் ரெண்டு பேருக்குமே ஆர்வம் மிகுதியா இருக்கும்!
முன்னவருக்குத் தேடல் எப்படி அமையுமோன்னு ஒரு ஏக்கம்!
பின்னவருக்குச் சாடல் எப்படி அமைக்கலாம்னு ஒரு ஆர்வம்! :-)

இதைக் கதாசிரியர் (அட, நீங்க தான் குமரன்!) நன்கு புரிந்து கொண்டு தான் கதையை நகர்த்தி உள்ளார்! இரு சாராருக்கும் இந்தக் கதை தீனி போடுகிறது!

ஆழ்மனம் இல்லறத்தை விரும்பியதால், இன்னொரு பிறவி என்று சொல்லி இருந்தீர்கள்! It is your choice என்பது தான் சாரம் என்றால்...
கற்கள் தங்கள் Choiceகளைத் தாமே செய்து கொள்ள முடியுமா?
மனிதப் பிறவி தவிர மற்ற எல்லாப் பிறவிக்கும் இறைவன் தான் Choice செய்கிறானா? - என்பது மிகப் பெரும் கேள்வி! ஆனால் அதற்கு விடையைக் கதையில் தேட முடியாது! தேடவும் கூடாது!

ஆன்மீகப் பாதையைத் தேடுதல் பற்றிச் சொல்ல வந்த ஒரு கதை, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்ய முடியாது தான்! அவரவர் நிலைகளில் இருந்து பார்வை மாறுபடும்!
ஆனாலும் இயன்ற வரை அனைத்து தரப்பினரையும், குமரன் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன்!

பரந்து விரிந்த தத்துவங்களுக்குக் கதை மூலமாக நகாசு பூசுவது என்பது கொஞ்சம் கடினமான செயல் தான்!
அதைக் குமரன் முயன்று பார்த்துள்ளார்!
முயற்சி திருவினை ஆக்கும்! வாழ்த்துக்கள் குமரன்!
அடுத்த கதையில் புதிய நகாசு, புதுப் பொலிவுடன் மீண்டும் சந்திப்போம்!

இதோ "கல்"லாதான் சொல்லும் கவி!
புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழ்வாரே!

கல்லே, விமர்சனம் பண்ணிட்டு எங்க ஓடுற நீயி? அடுத்து நீ மரமாக வேண்டாமா?

வேண்டாம்! வேண்டாம்!!
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்!
கல்லானாலும் - வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே! வர்ட்டா? :-)

***

என்னை பிளாக் உலகிற்கு அறிமுகபடுத்தியவரும், அதன்பின் எழுத ஆரம்பித்தபிறகு என்னை எழுத்தை நெறிமுகப் படுத்தியவரும் என்னால் குருஸ்தானத்தில் வைக்கப்பட்டவரும் என்னால் ஷண்மதச்செலவன் பட்டம் பெற்றவரும் திரு.குமரான்தான்



இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதிபதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்து ஒரு பின்னூட்டம்இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி' கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதைஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்துவந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.(நன்றிமௌளி) இதையே என் முன்னுரையாக வைத்து இதோ என் விளக்கம்.



புல்லாய் பிறவிதர வேனுமே கண்ணா புனிதாமான பல கோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதில் புல்லாய் பிறவிதர வேனுமே என்று பாடினார் ஊத்துக்காடு வேங்கடகவி.அந்தப் புல்லையே தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து கதையை 14 அத்தியாயங்களாய் பிரித்து அருமையாக ஒரு ஷேத்திராடனமாக நம் அனைவரையும் கூட்டிக்கொண்டு போகும் கதையாக எழுதினார்."ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்இதைப்படித்தவுடன் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும் வரிகள் ஞாபகம் வந்தது



முதல் அத்தியாயத்தில் கந்தானாக தன்னையே பாவித்து எழுதியதாக எனக்குப்பட்டது. க்ளு இங்கேதான்" வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்"

முதல் அத்தியாயம் தொடங்கி ஏழு அத்தியாயங்கள் வரை திருவண்ணமலை மகிமை கதையின் ஓட்டத்துடன் இணைந்து செல்கிறது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் என்னெவெல்லாம் பார்க்கமுடியுமோ பார்க்கவேண்டுமோ

அத்தனையும் வரிசையாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஏழு அத்தியாயங்கள் சிவனுக்காக ஒதுக்கியிருக்கிறார் திருவண்ணாமலைக்கு செல்லும் எண்ணத்தை வெளிக்கொணர்ந்த பதிவு. நானும் ரமண மகரிஷியை குறிப்பிட்டு பின்னுட்டமும் இட்டிருந்தேன் அம்போஜ சம்பவனும்ம்(பிரும்மாவும்) அன்பான மாயவனும் அடிமுடி காணா அண்ணாமலைவாசன் அருமையாண பதிவு.



அடுத்த எட்டாவது அத்தியாயம் வைகுந்தவாசனை போற்றி எழுதியது. சுகரும் வருகிறார். சுக பிரும்மம்யார் தெரியுமா? வேதவியாசரின்

மகன் பராசரர் அவரின் மகன்தான் சுகபிரும்மம். அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனகமகாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். வரும் சுகர் அரன்மனைக்கு வெள்ளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில்இருக்கும் யாணையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம்

வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனகமகா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார். சுகர் சொன்னார்.

வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யாணை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்ன்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமகா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார். அப்பேற்பட்ட சுகரை கதையில் கொண்டுவந்தார். பின்னர் அடுத்த அத்தியாயத்தில் மால் மருகனை
பிறகு 9 10 வதில் பழனி முருகனையும் போகரின் வைபவத்தையும்,பருந்துகளின்
தன்மையையும் தஞ்சை கோவிலையும் விளக்கினார்.

11ஆம் 12ஆம் பகுதியில் நரசிம்ஹதாசனையும் ராமகிருஷ்ணபரம்ஹம்ஸரையும் காளி கோயிலையும்
நேராகவே பார்க்கும் வண்ணம் அளித்தார் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து எல்லா முடிச்சையும் அவிழ்த்து கதையை பூர்ணம் செய்தார்
போட்ட படங்களும் அருமை. நல்ல கதையையும் கருத்தையும் அளித்த கந்தன் சாரி குமரன் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

1 comment:

Geetha Sambasivam said...

//."ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்இதைப்படித்தவுடன் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும் வரிகள் ஞாபகம் வந்தது//

உண்மை, இந்த வாழ்க்கை என்னும் மகா சமுத்திரத்திலே கண்ணன் பேரை எத்தனை பிறவி எடுத்தாலும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டுமென்றால் அவர் தான் மிகச் சிறந்த ஞானி! இதை விட மிகச் சிறந்த வரமும் உண்டா? எனக்குத் தெரிந்த ஒரு பெண் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப் பட்டவள், எப்போதும் முக மலர்ச்சியுடனேயே இருப்பாள். அவளிடம் உனக்குக் கடவுளிடம் வருத்தம் இல்லையா என்று கேட்டால் "கடவுளுக்கு நான் மிகவும் பிடித்தமானவள் என்பதாலேயே இந்தச் சோதனையில் நான் தேறுவேனா என்று பார்க்கிறார். அவர் நம்பிக்கையை நான் பொய்யாக்க மாட்டேன்!" என்று உற்சாகமாய்ப் பதில் வரும்!