Saturday, June 03, 2006

200: எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே!


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.



ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.



பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிலும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே

மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.

பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.



ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே

நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.



மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்தன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.

மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.



பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.



உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.

56 comments:

குமரன் (Kumaran) said...

இருநூறாவது பதிவு ஒரு சிறப்புப் பதிவாய் இருக்க வேண்டும் என்று எண்ணி நண்பர்களிடம் எதனைப் பற்றி எழுதலாம் என்று கருத்துக்கள் கேட்டேன். சில நண்பர்கள் சொன்ன கருத்துக்கள் நன்றாய் இருந்தன. கருத்து சொன்னவர்களுக்கு நன்றி. அந்தக் கருத்துக்களை எல்லாம் இனி வரும் பதிவுகளில் பயன்படுத்திக் கொள்கிறேன். இருநூறாவது பதிவாய் சரணாகதி தத்துவத்தை நன்றாய் விளக்கும் குலசேகர ஆழ்வாரின் இந்தப் பாசுரங்களைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. படிக்கும் போது ஆழ்வார் மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் இந்த வேண்டுதலை வைத்துப் படித்தால் இந்தப் பாசுரங்களில் சுவை இன்னும் கூடும்.

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவுடன் எண்களை இட்டுப் பதிவுகள் போடும் பழக்கத்தை விட்டுவிடலாம் என்று எண்ணுகிறேன். இனி வரும் பதிவுகள் எண்கள் இன்றியே வரும்.

Anonymous said...

Vaazthukal Kumaran! I wanted to be the first one to wish for 200th...saw few comments b4...thank God it was from u :-)

Ungal pani sirakka vaazthukal..

Anbudan,
Natarajan

குமரன் (Kumaran) said...

நன்றிகள் நடராஜன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல ஆராய்ந்து எடுத்த முடிவு சரணாகதி பதிவு.திரளபதிக்கும்,கஜெந்திரனுக்கும் எளிமையாக கண்ணன் அருளி காத்தது.200பதிவும் முத்துக்கள் இதேகருத்தில் ஊத்துக்காடு வேங்கடகவியும்
புல்லாய் பிறவி தரவேணுமே கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதில் புல்லாய் பிறவிதரவேணுமே.புல்லாய் பிறந்தாலும் நெடுநாள் நில்லாது ஆதலினால் ஒரு கல்லாய் பிறவிதரவேணுமே கண்ணா,,,,,, தொடரட்டும் பணி. தி. ரா.ச

VSK said...

இருநூறு கண்டின்று இறுமாப்பு அடைந்ததனால்
இருநூறு பதிவுக்குப் பின் இனிமேல் இப்பதிவில்
இருநூற்றுஒன்றெனும் பதிவு வாராதெனச் சொல்லியதால்
இருநூற்று கரம் கூப்பி வாழ்த்துகிறோம் உமை!

Unknown said...

greetings for 200.

I dont know whether bakthi rasam can be said in a better way that this.Great work kumaran

Ram.K said...

சரணாகதித் தத்துவம் எனக்கு ஏற்புடைய ஒன்றல்ல என்றாலும், உங்கள் விளக்கம் பாடலுக்கு மிகவும் அருமையாக வந்துள்ளது.

வாழ்த்துக்கள் குமரன்.

ஞானசம்பந்தன் said...

அருமை. நல்ல தெளிவு.

ரங்கா - Ranga said...

குமரன்,

இருநூறாவது பதிவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளால் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்; அதற்காக என் நன்றிகள். மிக அருமையான (வழக்கம் போல்) தெளிவான விளக்கம். நீங்கள் மேன் மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்று வேண்டி வாழ்த்துகிறேன்.

ரங்கா.

குமரன் (Kumaran) said...

ஆமாம் தி.ரா.ச. திரௌபதியையும் கஜேந்திரனையும் காத்தது சரணாகதியே. நீங்கள் சொன்ன பாடலையும் கேட்டிருக்கிறேன். மிக அருமையான பாடல். விரைவில் அதனை 'கேட்டதில் பிடித்தது' வலைப்பூவில் இடுகிறேன். தங்கள் பாராட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

இருநூறு கண்டு இன்று இறுமாப்பு அடைந்ததனால்.... இதில் ஐயமே இல்லை எஸ்.கே. இருநூறு கண்டதனால் இன்று மட்டும் இறுமாப்பு என்று எண்ணவில்லை; ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன மாதிரி இந்த உணர்வு மேலெழுவதும் அமிழ்வதுமாய்த் தான் இருக்கிறது. :-)

இருநூறு பதிவிற்குப் பின் இனிமேல் இப்பதிவில் இருநூற்று ஒன்றெனும் பதிவு வாராதென... இறுமாப்பிற்கும் மட்டும் அன்று இந்த முடிவு. எண்களை இடுவதால் வேறேதும் பயன் இருப்பதாய் தெரியவில்லை. எண்களை இடுவதால் சிறப்புப் பதிவுகள் என்ற எண்ணமும் வருகிறது. அதனால் எண்களை இடுவதில்லை இனிமேல்.

சொல்லியதால் இருநூற்றுக் கரம் கூப்பி வாழ்த்துகிறோம் உமை - மிக்க நன்றி எஸ்.கே. அது சரி. கரம் கூப்பி வணங்கத் தானே முடியும்? நீங்கள் வாழ்த்துகிறீர்கள்? வணங்க வயதில்லை; வாழ்த்துகிறேன் என்கிறீர்களா? :-)

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வன். ஆமாம். இந்தப் பத்து (+1) பாசுரங்களும் பக்தி சுவையை அருமையாக வெளியிடும் பாசுரங்கள்.

குமரன் (Kumaran) said...

பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி இராம்பிரசாத் அண்ணா.

குமரன் (Kumaran) said...

நன்றி காழியூரன். தங்கள் ஆண்டாள் வலைப்பூவில் தாங்கள் எழுதியுள்ள பதிவுகள் மிக மிக அருமை.

குமரன் (Kumaran) said...

பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ரங்கா அண்ணா.

இலவசக்கொத்தனார் said...

200ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றிகள் கொத்தனார். பதிவைப் படிக்கலையா? நேரா பின்னூட்டத்திற்கு வந்துவிட்டீர்களா? :)

Unknown said...

குமரன்,
பதிவுக்கு முன் எண் இடுவதால் விளையும் ஒரு நன்மையை பாருங்கள்.

இது பதிவு எண் இட்ட சுட்டி.பிளாக்கர் அதற்கு எப்படி தலைப்பிடுகிறது என பாருங்கள்.தலைப்பை பார்த்தாலே எந்த எண் பதிவு,எந்த மாதம் இட்டது என்பது அழகாக தெரிந்துவிடுகிறது

http://holyox.blogspot.com/2006/06/96.html

இது பதிவு எண் இடாத சுட்டி.பிளாக்காரே அதற்கு randomaa ஒரு எண்ணை தந்துவிடுகிறது

http://holyox.blogspot.com/2006/04/blog-post_19.html

பதிவு எண் இட்டால் சுட்டியை வகைப்படுத்துவது எளிது.நினைவில் வைத்துக்கொள்வது எளிது.

பொன்ஸ்~~Poorna said...

200க்கு வாழ்த்துக்கள் :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன். பிரபந்தம் கையில் இருந்தாலும் படிக்க நேரம் இல்லை என்று(சில பேர்) சொல்லும் காலம் இது. இணையத்தில் வருவதால் எத்தனையோ வயதில் இளயவர்கள் படித்து பயன் பெற வழி கொடுக்கிறீர்கள். பதிகத்திற்காகக் காத்து இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறேன். ஆனாலும் அதனால் எனக்கு அவ்வளவாக நன்மை இல்லை. ஏற்கனவே வகைப்படுத்தலாக தனித்தனி வலைப்பூக்களே இருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

நன்றி பொன்ஸ்.

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லி அம்மா. இந்த வாரப் பதிகத்தை மறந்துவிடவில்லை. நாளை எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் ஒவ்வொரு திங்களும் அதனைப் படிப்பதால் இதோ எழுதிவிடுகிறேன்.

சிவமுருகன் said...

முதலில் 200வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள்.

இப்பதிவில் விஞ்சிநிற்பது அழகா, ஆழமா என்று ஒரு பட்டி மன்றம் நடத்தலாம்.

//வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும்//

இங்க ஒரு சின்ன சந்தேகம், வலப்பக்கம் வளைந்திருந்தால் அது வலம்புரி சங்கு,இடப்பக்கம் வளைந்திருந்தால் அது இடம்புரி சங்கு, ஆனால் பாஞ்சஜன்யம் என்ற திருமாலின் சங்கு எப்பக்கமும் வளையாமல் நேராக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன். திருமால் எப்பக்கமும் சாராதவர் என்பதால் அப்பேற்பட்ட சங்கினை கொண்டவர். வளைந்திருக்கும் சங்கல்ல திருமலையனின் சங்கு. கொஞ்ச விளக்கினால் நன்று.

rv said...

200 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் குமரன்!

இதில் இட தேர்ந்தெடுத்த பாடல்களும் அதன் விளக்கங்களும் மிக அருமை.

Anonymous said...

"எதுவாய் பிறந்து,அவன் திருவடையடைதல் என்பது கூட;அவனாய் அருளவேண்டுமென" குலசேகரர் அழகாகச் சொல்லியுள்ளார். விளக்கங்கள் மிக நன்று! இடையிடையே; போட்டபடங்களின் வெங்கடவன் ;அற்ப்புதமான "சாத்துப்படியில்"-கண்ணைக் கவருகிறார்.நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஒரு ஆங்கிலேய "ரொக்" பாடகர், தன் குழுவுக்கு,KULA SEGARA எனப் பெயர் வைத்துள்ளார்;தொலைக்காட்சி நேர்காணலில்; "ஏன்" இந்தப் பெயரெனக் கேட்ட போது, தான் திருப்பதி சென்றதாகவும்; குலசேகர ஆழ்வார் திவ்ய வரலாறைக் கேட்ட போது,பிடித்ததாகவும்;அதனால் ;அவர் பெயரைக் சூட்டிக் கொண்டதாகவும்;கூறினார். இவற்றைப் படித்த போது, நினைவு வந்தது.
யோகன் -பாரிஸ்

Anonymous said...

"எதுவாய் பிறந்து,அவன் திருவடையடைதல் என்பது கூட;அவனாய் அருளவேண்டுமென" குலசேகரர் அழகாகச் சொல்லியுள்ளார். விளக்கங்கள் மிக நன்று! இடையிடையே; போட்டபடங்களின் வெங்கடவன் ;அற்ப்புதமான "சாத்துப்படியில்"-கண்ணைக் கவருகிறார்.நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஒரு ஆங்கிலேய "ரொக்" பாடகர், தன் குழுவுக்கு,KULA SEGARA எனப் பெயர் வைத்துள்ளார்;தொலைக்காட்சி நேர்காணலில்; "ஏன்" இந்தப் பெயரெனக் கேட்ட போது, தான் திருப்பதி சென்றதாகவும்; குலசேகர ஆழ்வார் திவ்ய வரலாறைக் கேட்ட போது,பிடித்ததாகவும்;அதனால் ;அவர் பெயரைக் சூட்டிக் கொண்டதாகவும்;கூறினார். இவற்றைப் படித்த போது, நினைவு வந்தது.
யோகன் -பாரிஸ்

Anonymous said...

Dear Kumaran!
Kindly ,read the music group name as
"KULA SHAKER"
you can see in google.
Thanks
Johan- paris

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் குமரன்

ENNAR said...

//கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.//
நல்ல பதிவு குமரன்
இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,

'கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'

என்று பாடுவதால் அறியலாகும்.

இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும்.
சரி குமரன் கோனேரி என்றால் என்ன தெரிந்தால் சொல்லுங்கள்
http://ennar.blogspot.com/2006/04/9.html

VSK said...

////வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும்//

இங்க ஒரு சின்ன சந்தேகம், வலப்பக்கம் வளைந்திருந்தால் அது வலம்புரி சங்கு,இடப்பக்கம் வளைந்திருந்தால் அது இடம்புரி சங்கு, ஆனால் பாஞ்சஜன்யம் என்ற திருமாலின் சங்கு எப்பக்கமும் வளையாமல் நேராக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன். திருமால் எப்பக்கமும் சாராதவர் என்பதால் அப்பேற்பட்ட சங்கினை கொண்டவர். வளைந்திருக்கும் சங்கல்ல திருமலையனின் சங்கு. கொஞ்ச விளக்கினால் நன்று.//

ஊனேறு, == குறையில்லாத

ஆனேறு, == பசுவல்லாத மற்றொன்று [எருது]

இதெ வரிசையில் வைத்துப் பார்த்தால்,

கூனேறு, என்றால் "வளைவு இல்லாத" என்னும் 'சிவமுருகனின் கூற்றுதான் சரி எனப் படுகிறது.

Santhosh said...

வாழ்த்துக்கள் குமரன். இப்படியே ஆயிரம் பத்தாயிரம் என்று பதிவுகள் போடணும். நல்ல பணி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்திற்கு நன்றி சிவமுருகன்.

கூன் என்று இங்கே சொல்லியிருப்பதை வளைவு என்று பொருள் கொண்டிருக்கிறேன். ஆனால் எந்தச் சங்கும் வளைந்திருப்பதில்லை. சுழித்துத் தான் இருக்கின்றன. வலப்பக்கம் சுழித்திருந்தால் வலம்புரி; இடப்பக்கம் சுழித்திருந்தால் இடம்புரி. திருமாலின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் வலம்புரி சங்கு 'பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து' என்ற அடியைப் பாருங்கள்.

இங்கே சொல்லப்பட்டிருப்பது 'கூனேறு சங்கம் இடத்தான்' என்பது. அதற்குப் பொருள் 'சுழித்திருக்கும் சங்கினை இடக்கையில் தாங்கியவன்' என்பது; இந்த அடியினில் சங்கம் வலம்புரியா இடம்புரியா என்று சொல்லவில்லை; ஆனால் சங்கை இறைவன் இடக்கையில் தாங்கி இருக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. உங்கள் ஐயம் தீர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் நன்றி இராமநாதன்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி யோகன் ஐயா. நீங்கள் சொல்லியிருக்கும் ராக் பாடகரைப் பற்றி வலையில் தேடிப் பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி தேன் துளி.

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா. கோனேரி என்பது கோன் + ஏரி என்று பிரியும். திருமலை மேல் இருக்கும் ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தீர்த்தத்தின் பெயர் கோனேரி என்பதின் வடமொழி மொழிப்பெயர்ப்பே. கோன் - தலைவன்; ஸ்வாமி. ஏரி - குளம்; புஷ்கரிணி.

குமரன் (Kumaran) said...

எஸ். கே.

ஊனேறு, ஆனேறு, கூனேறு என்பவற்றிற்கு நீங்கள் சொல்லும் பொருள் விளக்கங்கள் சரியா என்று தெரியவில்லை. இந்தப் பதிவில் கொண்ட பொருள்: ஊனேறு - ஊன் + ஏறு; உடலை வலிமை செய்து திரண்ட புஜங்களும் தோள்களும் மார்புகளும் கொண்டு; ஆனேறு - ஆ + ஏறு; எருதிகளில் சிறந்த எருது ('மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை' என்று இன்னொரு இடத்தில் வருவதைப் பாருங்கள்); கூனேறு - கூன் + ஏறிய; வளைந்த; சுழித்த.

அதனால் கூனேறு என்றால் வளைந்த, சுழித்த என்ற பொருள் தான் வருகிறது; வளையாத, சுழிக்காத என்ற பொருள் வரவில்லை.

குமரன் (Kumaran) said...

நன்றி சந்தோஷ். அவன் அருளால் விரைவில் ஆயிரம் பதிவுகள் போட்டுவிடலாம் - நீங்கள் தான் தொடர்ந்து படிக்கவேண்டும். :-)

Anonymous said...

குமரன்,
வாழ்த்துக்கள். பட்டயக்கெளப்புறீங்க. நெம்பர் போட்டு பதிவு பண்ணா, எதயும் விட்டுடாம படிக்கலாமுல்ல. நெம்பர விடாம போடுங்க.

அப்புறம், உங்க வேற சில பதிவுகள்ள இன்னும் பளய படமே இருக்கு அதுகள தமிழன்னைக்கு மாத்துங்க.

வரட்டா.

நாமக்கல் சிபி said...

இருநூறாவது பதிவு ஒரு மிகச் சிறந்த பதிவாய்த்தான் இருக்கிறது.

குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களும், தங்கள் விளக்கமும் மிக அருமை.

படிப்பதால் எங்களுக்கும், பதிப்பித்தத்தால் உங்களுக்கும் பெரும் புண்ணியம் உண்டு!

முத்துகுமரன் said...

200வது பதிவிற்கு வாழ்த்துகள் குமரன். இந்தப் பதிவு உங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்திருக்கும் என்பதை வாசிக்கையில் உணரமுடிகிறது.

இன்னும் பல ஆயிரங்கள் பாவாயிரங்கள்
படைத்திட வேண்டும்...

குமரன் (Kumaran) said...

பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. எதையும் விட்டுவிடாமல் படிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் எனக்கு ஒரு தனிமடல் அனுப்புங்கள். ஒவ்வொரு பதிவு போடும் போதும் உங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன். அதைத் தான் இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்காகச் செய்து கொண்டிருக்கிறேன்.

பழைய பதிவுகளில் இருக்கும் என் பழைய படத்தை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. அதனால் அதனை அப்படியே விட்டுவைத்திருக்கிறேன்.

அடிக்கடி வாங்க. முடிஞ்சா பேரும் சொல்லுங்க. :-)

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி சிபி.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி முத்துகுமரன். ஆமாம். இந்தப் பதிவு மிகுந்த நிறைவைத் தந்தது.

G.Ragavan said...

இரு நூறு பதிவுகள் தருகிறேன் என்று சொல்லி முடிக்கும் முன்னமே இருநூறு பதிவுகள் ஆனதைப் பாராட்டுகிறேன். அரும் நூறாகி வந்தவைகள் அறுநூறாக வாழ்த்துகள். அந்த அறுநூறுகளும் கிடக்கும் நூறுகளாக இராமல் எழுநூறாக மாற வேண்டும். என் நூறு பார் என்று நீங்கள் சொல்லி மகிழ எண்ணூறும் ஆகாதோ!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி இராகவன்.

ஒரு நூறு பதிவுகள் எழுதினேன் எனச் சொல்ல
இருநூறு ஆனதா அதற்குள்ளே என்று
முன்னூறி வரும் அன்பால் வியந்து வாழ்த்தும்
நானூறு உடைய இராகவ நண்பா!
ஐநூறு நான் கொண்டேன் அத்தனையும் நீ
அறுநூறாய் ஆக்கிடுவாய் அன்பு நண்பா!
எழுநூறா எண்ணூறா என்று கேட்டு
எங்கோ மனம் பறக்கச் செய்தாய் நீயே!

இராகவன். மேலே எழுதியுள்ளதற்குப் பொருள் விளக்கம் தேவை. பின்னூட்டமாகவும் இடலாம்; பதிவாகவும் இடலாம். :-) மயிலாரைக் கலந்தாலோசியுங்கள்.

Anonymous said...

200வது பதிவிற்கு வாழ்த்துகள் குமரன்.
இந்தப் பதிவு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகுந்த நலமும் வளமும் தர வாழ்துக்கள்.
தங்களின் இறையன்பு குறித்த எண்ணக் கிடக்கைகள், இனிதே ஈடேற, திருவேங்கடமுடையான் அருள் புரியட்டும்.

பதிவில் படங்களும் அருமை. சேஷ வாகன கிருஷ்ணனாய், மோகினி திருக்கோல வண்ணனாய், பார்த்தாலே பரவசம்!
திருமலையை விட்டு வர மனமே வராது, இன்னும் ஒரு தரிசனம் பார்த்து விட்டு போகலாம், என்று நம்மில் பல பேர் எத்தனை முறை ஏங்கி இருப்போம்?
ஆழ்வார் அந்த ஏக்கத்துக்கு, ஒரு வழியைக் கண்டுபிடித்து பாடுகிறார்!

"நெடியோனே வேங்கடவா உன் கோயிலின் வாசல்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே"
மேற்சொன்ன பாசுரத்தின் பயனாகவே, இன்றும் திருமலை மேல்,
எம்பெருமான் சந்நிதியில், மூலவரின் முன்னுள்ள வாசற்படிக்கு, குலசேகரன் படி என்று தான் பெயர்.
இந்த வாசல்படி வரை தான், அனைவருக்கும் அனுமதி.
இந்த வாசல் படிக்கும் தீப ஆரத்தி உண்டு!

"சும்மா இரு சொல்லற என்று" வாசல் படியாய்க் கிடந்து, பெருமாள் திருமுகத்தைக் கண்கொட்டாது காண விரும்பும் ஆழ்வாருக்குத் தான்,
பெருமாள் மேல் எத்தனை காதல், பாசம்!
பூமியில் நம் காதலில் எல்லாம், கொஞ்ச நேரம் காத்திருந்தாலே, கோபம் வருகிறது;
பார்த்துக் கொண்டே இருந்தால், "உன்னைத் தவிர எனக்கு வேறு வேலையே இல்லையா?" என்றெல்லாம் சத்தம் போடுகிறோம்
ஆனால் ஆழ்வாரின் காதல், கனிவு தான் என்னே! படிக்கும் போதே உருகி விடுகிறோம் இல்லையா?

இப்படித் தான், ஆழ்வார்களும், பல ஆசாரியர்களும், திருமலையில் இன்றும் அரூபமாக உறைகின்றனர்.
இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன.
அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை. மலையப்பனின் திருவுள்ளம் என்றோ?

குமரன் (Kumaran) said...

'ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே' என்று நம்மாழ்வார் சூளுரைத்ததைத் தான் இங்கே சொல்லவேண்டும் போல் இருக்கிறது ரவிசங்கர் கண்ணபிரான் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தப் பிறகு. இந்தப் பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டவர்கள் பலவிதமான கருத்துகள் சொன்னார்கள். எல்லோரும் பாராட்டினர். ஒரு நண்பர் இருநூறு பதிவுகள் என்று இறுமாப்பா என்றும் தொட்டுச் சென்றார். இன்னொரு நண்பர் தமிழில் கொஞ்சம் விளையாடினார்; இறுமாப்பும் தமிழ் விளையாட்டும் இந்தப் பதிவை எழுதும் போது இருந்த (இறுமாப்பு எழுதுவதற்கு முன்பாக இருந்த) உணர்வுகள் தான். யோகன் ஐயா இந்தப் பதிவில் இருக்கும் பாசுரங்கள் சொல்ல விழையும் கருத்தினை எடுத்துச் சொல்லியிருந்தார். ஆனால் நீங்கள் தான் இந்தப் பதிவை எழுதும் போது அடியேனுக்கு எந்த உணர்வுகள் ஓங்கியிருந்தனவோ அவற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ரவிசங்கர் கண்ணபிரான்.

//தங்களின் இறையன்பு குறித்த எண்ணக் கிடக்கைகள், இனிதே ஈடேற, திருவேங்கடமுடையான் அருள் புரியட்டும்.
//

இது தான் இந்தப் பதிவு எழுதும் போது ஓங்கி நின்ற உணர்வு. அதனால் தான் குலசேகர ஆழ்வாரைப் பற்றியும் அவருடைய இந்தப் பாசுரங்கள் பற்றியும் பதிவில் ஒன்றுமே சொல்லாமல் அதனைப் பின்னூட்டத்தில் சொன்னேன். பாசுரங்கள் ஆழ்வார் பாடியதாக இருந்தாலும் இந்தப் பதிவில் பதித்த உணர்வுகள் எனக்கும் இருப்பவை என்றுச் சொல்லத்தான் அப்படிச் செய்தேன். அதனை உணர்ந்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

//திருமலையை விட்டு வர மனமே வராது, இன்னும் ஒரு தரிசனம் பார்த்து விட்டு போகலாம், என்று நம்மில் பல பேர் எத்தனை முறை ஏங்கி இருப்போம்?
//

உண்மை உண்மை முழுக்க முழுக்க உண்மை.

குலசேகரன் படியைப் பற்றி யாராவது பின்னூட்டத்தில் சொல்லுவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி. அடுத்தப் பதிவில் இந்தப் பாசுரங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதத் தத்துவ நோக்கில் அலசி எழுதலாம் என்று இருக்கிறேன். அப்போது குலசேகரன் படியைப் பற்றியும் எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி.

//இப்படித் தான், ஆழ்வார்களும், பல ஆசாரியர்களும், திருமலையில் இன்றும் அரூபமாக உறைகின்றனர்.
இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன.
அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை. மலையப்பனின் திருவுள்ளம் என்றோ?
//

விரைவில் எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கின்றேன். மலையப்பனின் திருவுள்ளம் நிச்சயம் அருளும்.

G.Ragavan said...

// வாழ்த்துகளுக்கு நன்றி இராகவன்.

ஒரு நூறு பதிவுகள் எழுதினேன் எனச் சொல்ல
இருநூறு ஆனதா அதற்குள்ளே என்று
முன்னூறி வரும் அன்பால் வியந்து வாழ்த்தும்
நானூறு உடைய இராகவ நண்பா!
ஐநூறு நான் கொண்டேன் அத்தனையும் நீ
அறுநூறாய் ஆக்கிடுவாய் அன்பு நண்பா!
எழுநூறா எண்ணூறா என்று கேட்டு
எங்கோ மனம் பறக்கச் செய்தாய் நீயே!

இராகவன். மேலே எழுதியுள்ளதற்குப் பொருள் விளக்கம் தேவை. பின்னூட்டமாகவும் இடலாம்; பதிவாகவும் இடலாம். :-) மயிலாரைக் கலந்தாலோசியுங்கள். //

விளக்கமா! நானா! இல்லை. இந்த முறை கொத்ஸ் செய்யட்டும் என விரும்புகிறேன். மயிலாரின் விருப்பமும் அதுதான். அப்பொழுதுதான் அவரை(அவர்+ஐ) அறிவார் என்கிறார் மயிலார். கொத்சே வருக. விளக்கம் தருக.

இலவசக்கொத்தனார் said...

ஜிரா என்னை உங்கள் கவிதைக்குப் பொருள் கூறும் பெரும்பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளார். அதுவும் சும்மா சொன்னால் போதாது, நடைமுறை விளக்கமும், அதனைத் தொடர்ந்து பின்நவீனத்துவ விளக்கமும் கொடுக்குமாறு பணித்துள்ளார். அவரது ஆணையை சிரமேற்கொண்டு, இதோ என் விளக்கங்கள்.

நடைமுறை விளக்கம்
நூறு பதிவுகள் எழுதி முடித்தமைக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து முடிக்கும் முன் இருநூறாவது பதிவையும் போட்டுவிட்டீர்களே என என்பால் மிகுந்த அன்போடு (முன் ஊறும் அன்பால்) வாழ்த்திய இரகவனாகிய என் நண்பா என் போன்ற ஒரு நா இருக்கும் சாமானியர்கள் இவ்வளவு பேச முடிகிறது என்றால் நீ பேசும் தமிழுக்கு உனக்கு நூறு நாக்குகள் (நா நூறு) இருக்கிறதோ?

எனக்கு ஐயனாக கடவுளின் பல நூறு (ஐ நூறு) அவதாரங்களைக் கொண்டேன். நீ அவர்களைப் பற்றி அருமையாக பல நூறு (அரு நூறு) பதிவுகள் செய்வாயாக. நான் போடும் பல நூறு பதிவுகள் எல்லாம் வீறு கொண்டு எழச் செய்யும் (எழு நூறு) பதிவுகளாகவும், எண்ணங்களை (எண் நூறு) தூண்டிடும் பதிவாக இருக்கவும் வாழ்த்தினாயே. அதனால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியுற்றது நண்பா.

பின்நவீனத்துவ விளக்கம்

நம் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சாமானிய தலைநகரத்தமிழனின் பார்வையிலேயே நம் கருத்துகளை எடுத்துரைக்கிறோம்.

இன்னா நீ நூறு பதிவா எளுதியிருக்கன்னு சொல்ல வந்தா அதுங்காட்டியும் எரநூறு போட்டுடியா? என்னாப்பா எளுதினுக்கீற? எதனா யோசன பண்ணித்தான் எளுதறியா இல்லா சும்மா வாய்க்கு வந்தது அல்லாத்தியும் எளுதுவயா? இந்தா மாதிரி பதிவு பதிவுன்னே காலத்த ஓட்டிக்கினு இருந்தியானா அப்பால புள்ளகுட்டிங்கள எல்லாம் யாரு பாத்துக்குவாங்கோ? கொஞ்சமாது ரோசன பண்ணிதான் பாத்தியா? போ நைனா போயி உருப்படியா எதனாச்சும் பண்ணு.சரி எளுதத்தான் எளுதற. அப்படியாச்சும் எதனா புத்சா எளுதறியான்னு பாத்தாக்க அதும் இல்ல. சும்மா பளய சுண்டகஞ்சி கணக்கா முன்னம் ஊறப் போட்ட சரக்கயே ரிப்பீட் விட்டுனுக்கீற. இன்னாதான் பளிய சரக்கு கிக்காயிருந்தா காட்டியும் இப்போல்லாம் திரிசாவுக்குத்தாம்பா மார்கெட்டு. யாரு சரோசாதேவியெல்லாம் பாத்துகினுகீறாங்கோ.

இத்ததானே சொல்ல வர ராகவா, இன்னா தெகிரியம் உனுக்கு. அவனவன் கொஞ்சம் ராங்கா பேசினாலே ரெட்டை நாக்குடா உனுக்குன்னு சவுண்டு விடுவோம். இம்மா உள்குத்து வச்சு பேசிகினு கீறியே, உனக்கு ரெட்ட நாக்கெல்லாம் போதாதுபா. உனக்கு நூறு நாக்குன்னாதான் சரிப்படும். நான் எளுதற பதிவெல்லாம் ஒரு ஐநூறு விட்டுகினு எளுதறா மாரி இருக்குன்னா சொல்லற. என்னா தெகிரியம் உனக்கு? நார்மலா இருந்தாங்காட்டி சொல்லுவியா? கட்டிங் நூறு விட்டுக்கினு வந்திருக்கேன்னுதானே தமிளுல அறுநூறுன்னு கூவின்னு கீற. அத்தை தட்டிக் கேக்க வந்தா எங்காளுங்க ஒரு நூறு பேரு எழுந்து வருவாங்கன்னு வேற சொல்லற. அப்பாலிகா நான் எந்த ஏரியா? எண்ணூரு பக்கமா? அங்க பங்க் கொமாரே நம்ம ஆளுதான். நான் நெனச்சா மவனே பீஸ் பீஸாக்கிடுவேன்னு சொன்னியா? பயத்துல நம்ம மனசு, அதுக்குள்ளாற இருந்த தெகிரியம் எல்லாமே காணாத பூடிச்சி வாத்தியாரே.

வர்ட்டா?

G.Ragavan said...

ஆகா...ஆகா....மிகவும் அருமையான விளக்கம் கொத்ஸ். தமிழும், தமிழின் சுவையும், அந்தச் சுவையின் பலனும், பலனை அடைந்ததின் பெருமையும், பெருமையால் வரும் புகழும், புகழை மறைக்காத அடக்கமும் நிறைந்த விளக்கம் நீர் தந்திருப்பது. ரொம்பச் சரி. ரொம்பச் சரி.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். உங்கள் நடைமுறை விளக்கத்திற்கும் பின்நவீனத்துவ விளக்கத்திற்கும் நன்றி. மாற்றி மாற்றி முதுகு சொறிந்து கொள்கிறார்கள் என்று யாராவது சொல்லுவதற்கும் நம் வார்த்தை விளையாட்டுகளை நிறுத்திக் கொள்வோம். :-)

Unknown said...

நீண்ட நாட்களாக என் குருநாதர் உரைக்க கேட்டுக் கொண்டிருந்தேன் இப்போது தங்களால் அப்பாடல் என்க்கு கிடைத்ததில் அளவற்ற மகிழ்வு கொண்டேன்.
நன்றி

Unknown said...

1st b. Com ca 2nd semester tamil full material send me sir pdf