Thursday, December 22, 2005

85: துளசி தளம்

துளசியைப் பற்றி நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும். நம் பக்தி இலக்கியங்களிலும் துழாய் மாலை, துழாய் அலங்கல் என்றப் பெயரில் துளசி மிகவும் பெருமையாகப் பாடப்பட்டிருக்கும். கீதையில் கண்ணன் சொல்லும் 'பத்ரம், புஷ்பம், பலம், தோயம்...', 'இலை, பூ, பழம், நீர் இதில் எதையெனக்குச் சமர்ப்பித்தாலும் அதனை அதன் பின் உள்ள பக்தியை முதற்கொண்டு நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கிறேன்' என்பதில் இலை இந்த துளசியைத் தான் குறிக்கிறது என்றும், துளசி கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை முதலில் சொன்னான் என்றும் படித்துள்ளேன். புனிதமான இந்தத் துளசி காலம் காலமாக நம் நாட்டில் ஒரு மூலிகையாகவும் பயன் படுத்தப் பட்டுள்ளது. ஜலதோசம் (இதற்குத் தமிழில் என்ன சொல்வது?) இருக்கும் போது சிறிது துளசியைப் பறித்து உண்டால் ஜலதோசம் குறையும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மூலிகையைப் பெருமாள் கோவில் போகும் எல்லாருக்கும் கிடைக்கும்படியும் நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு ஆங்கில மாத இதழில் துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றி மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பற்றிப் படித்தேன். இது நாள் வரை மேலை நாடுகளில் தக்காளி சூப்பில் மட்டும் பேசில் எனப்படும் துளசியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். இனிமேல் அதனை, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்காக தேனீருடனும் கலந்து சாப்பிடலாம் என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு கொடுக்கிறேன்.

இனிமேல் துளசி தக்காளி சூப்பிற்கு மட்டும் உரியதன்று. நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்க ஒரு கோப்பை துளசி கலந்தத் தேனீரைக் குடிக்கலாம். இதயத்தைக் காக்க அந்த மூலிகையை காய்கறிச் சாறுடன் கலந்துக் குடிக்கலாம். அல்லது உங்கள் மனம் சிறிது குழப்பமுறும்போது அதனை அமைதிப்படுத்தத் துளசிச் செடியை வீட்டில் வைத்திருந்தால் அதன் மணம் உதவலாம்.

இந்தியாவில் இந்த புனித பேசிலுக்குத் துளசி என்று பெயர். அதன் பொருள் 'இணையற்றது' என்பது. மிகப் புனிதமாகக் கருதப்படும் இந்தத் துளசி சமய சம்பந்தமாகப் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. எந்த வீட்டில் இந்தச் செடி உள்ளதோ அந்த வீடு துளசியால் பாதுகாக்கப் படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேத பாரம்பரியத்தில் துளசி, மனதையும் இதயத்தையும் ஆன்மீகப் பாதைக்கு ஏற்ப பண்படுத்துவதில் தலைசிறந்த மூலிகை என்றும், ஜலதோசத்தையும் காய்ச்சலையும் குறைக்கவல்லது என்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்து என்று சொல்லப்படுகிறது.

நவீன (மாடர்ன்) ஆராய்ச்சிகள் இரண்டு விஷயங்களை முன் வைக்கிறது . (1) இந்த மூலிகையில் மிகச் சக்தி வாய்ந்த 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ் antioxidants' - உடல் முதிர்ச்சி அடைவதற்குக் காரணமான ஆக்சிடன்ட்ஸ்களை குறைக்கும் சக்தி இருக்கிறது. அது இதயத்தையும் அது சார்ந்த மற்ற உறுப்புகளையும் பாதுகாக்கிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. (2) சுற்றுச் சூழலால் பாதிக்கப் பட்ட, பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட நுரையீரலை அந்தப் பாதிப்பில் இருந்து மீட்டு நன்கு ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.

ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் இன்னும் சில விஷயங்களைச் சொல்கின்றன. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க துளசியைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு துளசியைக் கொடுத்தால் அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதைக் கண்டிருக்கிறார்கள். அண்மையில் துளசிச் சாறு பூச்சிக்கடிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்றுவதற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்தவிதமான பின்விளைவுகளும் துளசியால் ஏற்பட்டதாக இந்த ஆராய்ச்சிகளில் தெரியவில்லை.

Natural Health (October 2005 issue) என்ற புத்தகத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்.

-----------------------------------------------------------------------------

இந்த வார நட்சத்திரம் துளசி அக்காவைப் பற்றியப் பதிவு இது என்று எண்ணி உள்ளே வந்திருந்தால் மன்னிக்கவும். இந்தக் கட்டுரையை இரண்டு மாதங்களுக்கு முன்பே படித்து இதை இங்கு எழுதவேண்டும் என்று எடுத்துவைத்திருந்தேன். அதனை இந்த வாரத்தில் எழுதியது தற்செயலானது இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். (அவர் மீது விழும் போகஸ் லைட் என்மீதும் சிறிது விழட்டுமே) :-)

18 comments:

ஞானவெட்டியான் said...

ஜலதோசம் - நீர்கோர்த்தல்

rv said...

//இந்த வார நட்சத்திரம் துளசி அக்காவைப் பற்றியப் பதிவு இது என்று எண்ணி உள்ளே வந்திருந்தால் மன்னிக்கவும்//
குமரன் எதுக்கு அக்காவைப் பத்தி எழுதிருக்கார்னு பாக்கத்தான் நான் வந்தேன். என்னைய ஏமாத்திபுட்டீகளே! :)

பதிவுக்கு நன்றி (அந்த 'நன்றி'யல்ல)

குமரன் (Kumaran) said...

ஜலதோசத்திற்குத் தமிழ் சொன்னதற்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

//பதிவுக்கு நன்றி (அந்த 'நன்றி'யல்ல)
//

இராமநாதன். புரியவில்லையே. எந்த 'நன்றி'யைச் சொல்கிறீர்கள்?

துளசி கோபால் said...

குமரன் நல்ல பதிவு.

ஆமாம், நீங்க சொன்ன 'குண நலன்கள்' எல்லாம் துளசின்ற பேர் வச்சிருக்கறவங்களுக்கும் இருக்காமே:-))))

rv said...

//புரியவில்லையே. எந்த 'நன்றி'யைச் சொல்கிறீர்கள்?
//
குமரன்,அப்பாவியா இருக்கீங்களே...
'நன்றி' யெல்லாம் ஒரு காலம். :)))

இதுக்கு மேல சொன்னா எனக்குதான் பிரச்சனை!! :))))

அக்கா,
//துளசின்ற பேர் வச்சிருக்கறவங்களுக்கும் இருக்காமே//
சரி சரி!!!!!

சிங். செயகுமார். said...

ஆச காட்டி மோசம் பண்ணுற பிளாக்குகெல்லாம் இனி போறதிலன்னு முடிவு பண்ணிட்டேன்!.
இருந்தாலும் டாக்டர் குமரன் பயனுள்ள தகவல் தந்து இருக்கிராரு. உலகமே இப்போ ஹெர்பல் பக்கம் தான போகுது.நன்றி டாக்டர்

குமரன் (Kumaran) said...

//நீங்க சொன்ன 'குண நலன்கள்' எல்லாம் துளசின்ற பேர் வச்சிருக்கறவங்களுக்கும் இருக்காமே//

ஆமாம் அக்கா. அப்படிதான் கோபால் மாமாவும் சொன்னார்.

குமரன் (Kumaran) said...

சிங். டாக்டர் பட்டத்துக்கு ரொம்ப டாங்க்ஸ்.

ஒரே பதிவுல டாக்டர் பட்டம் வாங்குனவன் நானாத் தான் இருக்கமுடியும். இல்லையா இராமநாதன்?

தி. ரா. ச.(T.R.C.) said...

Jsrp jsKynr vd;w jpahf uh[upd; ghl;by; Jsrp jsj;ij mzpAk; uhkd; ,d;Kfkhf fhl;rp mspj;jhd; vq;fpwhu; Nfl;lJz;lh jp uh r

G.Ragavan said...

In the post on Kandar Alangaram, I have mentioned something similar.

http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_04.html

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதியாகிய விரிசடைக் கடவுளுக்கு வில்வம். வில்வம் குளிர்ச்சி பொருந்தியது. குளுமையான திருமாலுக்கு வெப்பம் மிகுந்த துளசி. ஆகையால்தான் வயிற்றுப் பிரச்சனை வரும் பொழுது வில்வம் மருந்தாகிறது. வயிறு வெப்பமான பகுதி. அங்கு பிரச்சனை வருவதும் வெப்பம் கூடும் பொழுது. அதனால் குளுமை மிகுந்த வில்வம் மருந்தாகிறது. குளிர்ச்சியான நீர்க்கோர்வை போன்ற நோய்களுக்கு வெப்பமேற்றும் துளசி மருந்தாகிறது.

குமரன் (Kumaran) said...

இராகவன். ஜலதோசத்திற்கு நீர்க்கோர்வை என்ற சொல்லை ஏற்கனவே பயன் படுத்தியிருக்கிறீர்களா? இந்தப் பதிவை நான் படித்திருக்கிறேன். நீர்க்கோர்வை என்று ஜலதோசத்தைத் தான் கூறுகிறீர்கள் என்று புரிந்தது. ஆனால் அந்தச் சொல் மனதில் தங்கவில்லை. அதனால் தான் இந்தப் பதிவு போடும்போது முன்னே வரவில்லை. இனி நினைவில் நிற்கும்.

Chandravathanaa said...

நல்ல பதிவு

குமரன் (Kumaran) said...

நன்றி சந்திரவதனா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Anonymous said...

Kumran,
Thanks for the useful information on Thulasi. I heard from someone, somewhere that, too much Thulasi might cause 'aanmai kuraivu' problem (I don't remember the exact English word for this). However, I cannot confirm this.

KT

குமரன் (Kumaran) said...

புதிய தகவல் குமரேஷ் (KT). ஆனால் உண்மையில்லை என்று நினைக்கிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஜலதோஷம் = தடிமன்

சிங். செயக்குமார் சொல்றதைத்தன் நானும் சொல்றன்.

குமரன் (Kumaran) said...

நன்றி 'மழை' ஷ்ரேயா. சிங்கு ரெண்டு விசயம் சொல்லியிருக்கார். நீங்களும் அவர் சொல்றதையே சொல்றீங்கன்னா எது அது? ஆசை காட்டி மோசம் பண்ற ப்ளாக்கா இல்லை பயனுள்ள தகவலா?